Loading

தெம்மாங்கு 7

 

அடித்த பெயிண்ட் சாயம் வெளுத்திருக்க, சுவர் பல ஆண்டுகள் உழைத்து பலவீனமடைந்திருந்தது. ஆங்காங்கே பெயருக்கு என்று சின்ன செடிகள். வெளியில் கூரையிட்ட சின்ன குடிசை அடுப்பங்கரை. அதற்குப் பக்கத்தில் தண்ணீர் குழாய்கள். நிரப்பி வைக்க பழுதடைந்த வாளி நான்கு. நல்ல நிலைமையில் உள்ள குடங்கள் மூன்று. அன்புக்கரசன் பெரிய சொத்தாக நினைக்கும் இருசக்கர வாகனம் உயிர்ப்போடு நின்று கொண்டிருக்க, மேல் தளம் போட்டு வீட்டை பாதுகாத்திருந்தனர். 

 

அந்த பழைய வீட்டில்  வாழ வந்த பெண் அலங்கோலமான நிலையில் அமர்ந்திருந்தாள். நேற்றைய இரவில் இருந்து அவள் வாங்காத அடி இல்லை கேட்காத பேச்சுக்கள் இல்லை. அவளைப் பார்த்தபடி எதிர் சுவற்றில் சாய்ந்து அமர்ந்திருந்த அன்புக்கரசன் தாத்தானை பார்ப்பதை தவிர்த்தான்.

 

இந்த திருமணத்தில் அதிக அளவு நொந்து போனது மாணிக்கம் மட்டும்தான். பேரன் இடமிருந்து இப்படியான ஒரு செயலை சற்றும் எதிர்பார்த்து இருக்க மாட்டார். கடந்த சில நாள்களாக நோய்வாய்ப்பட்டு பேரனை தவிக்க விட்டு சென்று விடுவோமோ என்ற பயத்தில் அலைபாய்ந்து கொண்டிருந்தவர் மொத்தமாக மனம் தளர்ந்து விட்டார். 

 

காதலிக்கும் செய்தி கேட்டதிலிருந்து அவருக்குள் ஒரு நெருடல். தங்கள் நிலையும் ஆசை கொண்ட பெண்ணின் நிலையும் அதற்கு ஒரு முக்கிய காரணம். அதிலும் பொன்ராசுவின் குணம் அறிந்தவர் என்ன செய்வார் என்று அஞ்சினாரோ அதைத்தான் இன்று செய்திருந்தார் அவர். ஈவு இரக்கமற்றவர்களின் பெண்ணை காதலிக்கும் தன் பேரனை எப்படி காப்பாற்ற போகிறோம் என்ற பயத்தில் உலாவிக் கொண்டிருந்தவர் அதை அனுபவித்து வெளிவந்து விட்டார். 

 

வெளித் திண்ணையில் அமர்ந்திருந்தான் குமரவேலன். நேற்று இரவு உடுத்தி இருந்த மேல் உடை கிழிந்திருந்தது. கட்டியிருந்த வெள்ளை வேட்டியில் சின்ன ரத்த துளிகள். அது அவன் நண்பனுடைய ரத்தம். இவனுக்கும் சில அடிகள் என்றாலும் ரத்தம் பாதுகாப்பாக இருந்தது. உள்ளே இருந்த மூவருக்கும் அடுத்து என்ன என்ற கேள்வி இருந்தாலும் நடந்ததிலிருந்து வெளிவரவில்லை.

 

அதை நடத்தி வைத்த இவன் மட்டும் வெளிவந்து விட்டான். இப்போது குமரனுக்கு இருக்கும் கவலை எல்லாம் நண்பனை எப்படி வாழ வைப்பது என்று மட்டும் தான். சாமர்த்தியமாக திருமணம் செய்து வைத்தவன் கொடூரக்காரர்கள் கையில் இருந்தும் காப்பாற்றி விட்டான். அதை அவன் நடத்தி முடிப்பதற்குள் பட்ட கஷ்டங்கள் ஏராளம். எதை வெளிக்காட்டாமல் காவல் நிலையத்தில் வைத்து அனைத்தையும் முடித்து விட்டான். 

 

ஆனாலும் பொன்ராசுவை பற்றி அறிந்தவன் உடன் இருக்கும் தன் தந்தையின் குணத்தையும் புரிந்தவன் அவர்கள் பக்கம் இருந்து வரும் தொந்தரவை எப்படி சமாளிப்பது என்று தான் யோசித்துக் கொண்டிருக்கிறான். அந்த இருவரையும் விட கருப்பனின் பார்வை கொடூரமாக இருந்தது. கௌரவ நண்பர்களாவது எந்த தீய பழக்கமும் இல்லாமல் கௌரவத்திற்கு வாழ்பவர்கள். கருப்பனோ அனைத்து தீய பழக்கங்களுக்கும் சொந்தக்காரன். 

 

நண்பனுக்கு அரசு வேலை கிடைத்து விட்டால் இந்தப் பிரச்சனை ஓரளவு குறைந்து விடும். அதுவரை தேனிசை தேவியின் வீட்டு ஆள்களை சமாளிக்க வேண்டும். வேப்ப மரத்தில் இருந்து விழுந்த குச்சியை தூசு தட்டி பல் இடுக்கில் வைத்து கடித்துக் கொண்டிருந்தவன் உள்ளே எட்டி பார்க்க, மாணிக்கம் எந்த நிலையில் அமர்ந்திருந்தாரோ அதே நிலையில் இருந்தார்.

 

பல் இடுக்கில் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்த குச்சியை வீசி அடித்து விடுதலை கொடுத்தவன், “தாத்தா” என்றழைத்தான்.

 

அவனைப் பார்க்காமல் பிரம்மைப் பிடித்தவர் போல் அமர்ந்திருந்தார். எழுந்து நின்று கசங்கிய வேட்டியை குலுக்கி சரி செய்து இடுப்பில் கட்டியவன், “இன்னும் என் மேல இருக்க கோபம் போகலையா?” கேட்டவாறு உள்ளே நுழைந்தான். 

 

அப்போதும் அவர் நிலையில் மாற்றமில்லாமல் இருந்தது. நடந்ததை எல்லாம் நினைத்துக் கொண்டிருந்த அன்புக்கரசன் கவனம் திரும்பி தாத்தாவை ஏறிட, கண்களை கைது செய்திருந்த கண்ணீரை விரட்டி அடித்து மாணிக்கத்தை பார்த்தாள். 

 

தாத்தாவை உரசியவாறு அமர்ந்தவன் அவர் கன்னத்தை திருப்பி, “அன்பு மேல எந்த தப்பும் இல்லை தாத்தா. இவன் வேணாம்னு சொன்னதையும் மீறி நான் தான் கல்யாணம் பண்ணி வச்சேன். இதை விட்டா வேற சந்தர்ப்பம் கிடைக்காது. அன்பு ஆசைப்பட்ட பொண்ணோட சந்தோஷமா வாழணும்னு தான் உங்க கிட்ட கூட சொல்லாம இப்படி ஒரு வேலையை செஞ்சுட்டேன். உங்க பேரன் மேல கோபம் இருந்தா நாலு அடி கூட அடிச்சுக்கோங்க. பேசாம மட்டும் இருக்காதீங்க தாத்தா. நீங்க இப்படி உட்கார்ந்து இருக்குறதை பார்க்க முடியல.” என்றவன் மடி சாய்ந்தான். 

 

சாய்ந்தவன் கண்ணுக்குள் மாணிக்கத்தின் கண்ணீர் விழுந்து இமைகள் மூடிக்கொண்டது. தன் கண்ணை துடைத்து பதறி எழுந்தவன் என்னவென்று கேட்பதற்குள் தாத்தாவின் காலை பிடித்து, 

 

“மன்னிச்சிடுங்க தாத்தா. உங்களுக்கு பண்ணக்கூடாத பெரிய துரோகத்தை பண்ணிட்டேன். என்னால இசை இல்லாம வாழ முடியாது. இந்த சம்பவத்துக்கு அப்புறம் கண்டிப்பா எங்களை மொத்தமா பிரிச்சி இருப்பாங்க. முதல் தடவையா என்னை நம்பி எனக்காக வாழ்ந்துட்டு இருக்க பொண்ண ஏமாத்த மனசு வரல. உங்க சம்மதம் இல்லாம கல்யாணம் பண்ணது பெரிய தப்பு தான். குமரனை அடிக்கிறதுக்கு பதிலா என்னை அடிங்க தாத்தா. 

 

இது நீங்க பிச்சை போட்டு வளர்த்த உடம்பு. இந்த உடம்பு உங்களுக்கு நன்றி விசுவாசத்தை காட்டல. அதுக்கு தண்டனையா நீங்க என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்கிறேன். என் முன்னாடி இப்படி கண்ணீரை மட்டும் சிந்தாதீங்க. அப்பன் ஆத்தா விட்டுட்டு போனதுக்கு அப்புறம் சோறு போட்டு பிறந்த குஞ்சிய கோழி அடை காக்குற மாதிரி இத்தனை வருஷம் என்னை அட காத்திருக்கீங்க. உங்க கண்ணீருக்கு காரணமாயிட்டா நான் நல்லா வாழ மாட்டேன். என்னை பாவி ஆக்கிடாதீங்க தாத்தா.” உடல் குலுங்க கதறி அழுதான். 

 

அவனின் ஒவ்வொரு கண்ணீர் துளியும் மாணிக்கத்தின் கால் விரலில் பட்டு தரையில் பதிந்தது. அன்புக்கரசன் அழுகையில் வாய் பொத்தி அழுக ஆரம்பித்தாள் தேனிசை தேவி. தன்னால் தான் இந்த முதியவருக்கு இவ்வளவு வேதனை என்று தன்னையே குற்றம் சாட்டிக் கொண்டவள் மன்னிப்பு கேட்க கூட தகுதி இல்லாமல் ஒதுங்கி இருக்கிறாள். 

 

“எந்திரி ராசா.”

 

“மன்னிச்சிட்டேன்னு சொல்லுங்க தாத்தா.”

 

“நீ என்ன ராசா தப்பு பண்ண, மன்னிக்க.”

 

“உங்க அனுமதி இல்லாம கல்யாணம் பண்ணது தப்பு தான.”

 

“கல்யாணம் பண்ணதுல எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நீ நல்லா வாழணும்னு தான் இந்த கிழவன் ஆசைப்படுவேன் ராசா. நடந்த சம்பவத்துல இருந்து என்னால வெளிய வர முடியல. அதான் கொஞ்சம் பாரம் தாங்காம அழுத்தமா உட்கார்ந்துட்டேன். நீ மனம் கலங்கி அழுவாத ராசா.” 

 

காலில் விழுந்து இருந்த பேரனை தூக்கியவர் கண்களை துடைத்து விட அவர் கண்களில் நிறுத்தாமல் வழிந்து கொண்டிருந்தது நீர். அதை துடைத்து விட்ட அன்புக்கரசன் அவர் கைகளைப் பற்றி தன் நெஞ்சில் சாத்திக்கொண்டு, 

 

“உங்களை அடிச்சாங்களா தாத்தா.” கேட்கும்போது உதடுகள் வெதும்பி துடிக்க ஆரம்பித்தது.

 

இந்த செய்தி குமரவேலனுக்கு புதிது என்பதால், “அடிச்சாங்களா?” என எகிற, அவன் தோளை அழுத்தி அமர வைத்த மாணிக்கம்,

 

“அதெல்லாம் ஒன்னும் இல்ல ராசா. அப்படியே அவங்க என்னை அடிச்சி இருந்தாலும் அது தப்பு இல்ல. பொண்ண பெத்தவங்களுக்கு கோபம் இருக்கத்தான் செய்யும்.” என்றார்.

 

“உங்க மேல கைய வச்சது யாரு?”

 

“விடுன்னு சொல்றேன்ல ராசா… நடந்தது நடந்ததாவே இருக்கட்டும். இனி அதை பத்தி பேசி எதுவும் ஆகப் போறது இல்ல. நடக்கப் போறதை மட்டும் பேசுவோம்.”

 

மாணிக்கத்தின் மீது கை வைத்தவர்களை கண்டுப்பிடித்து துவைக்க முடிவெடுத்தவன் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் மௌனமாக அமர, “இங்க வாம்மா” என்று அழைத்தார் தேனிசை தேவியை. 

 

தயக்கத்தில் எழாமல் இருந்தவளை மீண்டும் அழைக்க, “வா இசை” என தாலி கட்டியவனும் அழைத்தான்.

 

முதியவர் அருகில் அமர்ந்த தேனிசை தேவியை முழுதாக பார்த்தார். ஏதாவது ஊர் திருவிழா பொது விழா என்று வரும்பொழுது பார்த்திருக்கிறார். இவள் தன்னுடைய வீட்டிற்கு மருமகளாக வருவாள் என்று கனவிலும் எதிர்பார்க்காதவர் இறைவன் செயலை ஏற்றுக் கொண்டார். அவள் தலை மீது கை வைத்து ஆசீர்வதித்தவர்,

 

“உங்க அப்பா மாதிரி காசு பணத்தை பார்க்காம என் பேரன் மனச பார்த்த உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. என்னைக்கும் அதை மட்டும் பாரு. தனியா இருந்தாலும் நானாது பொண்டாட்டி பிள்ளை பேரன்னு பாசத்தை பார்த்து இருக்கேன். இவனை தவிர உன் புருஷன் எதையும் பார்க்கல.” என்று குமரவேலனை கை காட்டினார்.

 

பின், “நீ தான் அவனுக்கு இனிமே எல்லாம். எந்த சூழ்நிலை வந்தாலும் என் பேரனை விட்டுக் கொடுக்காத. வாழ்க்கையில நீங்க நல்ல இடத்துக்கு போவீங்க.” என்றவர் அன்புக்கரசனை பார்த்து, 

 

“உன்ன நம்பி வந்த மகராசி இவ. இனிமே ரொம்ப பொறுப்பா நடந்துக்கணும். இந்த பொண்ணு வீட்ல இருக்குறவங்க மூக்கு மேல விரல் வைக்கிற அளவுக்கு வாழ்ந்து காட்டணும்.” அறிவுரை கூறினார்.

 

“அப்புறம் என்ன… கல்யாண சாப்பாடு சாப்பிடலாமா…” 

 

“உன்ன தான் ராசா பாராட்டணும்.” என சிரித்துக் கொண்டிருக்கும் குமரவேலனின் முகம் பற்றியவர் நெற்றியில் முத்தமிட்டு, 

 

“நண்பனுக்காக எவ்ளோ பகையை சம்பாதிச்சு இருக்க. உன் வாழ்க்கை என்னாகும்னு கொஞ்சம் கூட கவலைப்படாம இவன் வாழ்க்கைக்கு போராடுற நீ தான் இவனுக்கு கிடைச்ச பெரிய சொத்து. நீயும் பொண்டாட்டி பிள்ளைன்னு சந்தோஷமா வாழ்வ.” ஆசிர்வாதம் வழங்க, 

 

“நாங்க ரெண்டு பேரும் குடும்பமா வாழ்றதை பார்த்து நீங்க சந்தோஷப்படுவீங்க தாத்தா.” என்றவனுக்கு இன்னும் எதிர்காலம் புரியவில்லை. 

 

நான்கு பேரும் ஓரளவிற்கு சகஜ நிலைமைக்கு திரும்பி விட, “ரொம்ப பசிக்குது தாத்தா” என மழலையாக மாறினான் குமரன். 

 

அவன் சொன்ன பின்பு தான் அன்புவிற்கும் பசி எடுத்தது. மூவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே தேனிசை தேவி சமைக்க எழ, “உட்காருமா” என்று எழுந்தார் மாணிக்கம். 

 

 

“இல்ல தாத்தா… நீங்க பேசிட்டு இருங்க. நான் சமைக்கிறேன்.” 

 

“என் வீட்டுக்கு வந்த மகாலட்சுமியை வேலை வாங்குறதா. அதுவும் அந்த அடுப்பங்கரையில ஒண்ணுமே இருக்காது. உன் புருஷனோட பேசிட்டு இரு செத்த நேரத்துல வந்துடுறேன்.” என்றவர் எழுந்து வெளியே செல்ல போக, 

 

“வாழ்த்துக்கள்டா அன்பே…” என நண்பன் மீது பாய்ந்தான் குமரவேலன்.

 

அன்புக்கரசனும் அவனை கட்டி அணைத்து, “நன்றி குமரா” என பாச மழையை பொழிய, ஒரு மாதிரியாக பார்த்துக் கொண்டிருந்தாள் தேனிசை தேவி.

 

 

அதைப் பற்றி கவலை கொள்ளாதவர்கள் சிரித்துப் பேசி கூத்தடித்துக் கொண்டிருக்க, சமைத்துக் கொண்டே இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தவர் உள்ளே எழுந்து வந்து குமரவேலனை இழுத்து வந்தார். 

 

“என்ன தாத்தா”

 

“ஏன் ராசா கல்யாணமானவங்களுக்கு மத்தியில இருக்குறது தப்புல…” 

 

“ஆத்தாடி! கட்டிக்கிட்டு வந்தவளுக்காக என்னை வெட்டி விட பார்க்குறீங்களா.” என்றாலும் தாத்தனோடு அடுப்பங்கரையில் அமர்ந்துக் கொண்டான். 

 

 

 

“எனக்கு ரத்தம் கொதிக்குது. இதுக்கெல்லாம் காரணமான அந்த குமரவேலன சும்மா விடமாட்டேன்.” 

 

“போலீஸ் ஸ்டேஷன்ல சரின்னு விட்டுட்டு வந்திருக்க கூடாதுப்பா. என்ன நடந்தாலும் பரவாயில்லன்னு அந்த இடத்துலயே அந்த சிறுக்கிய வெட்டி போட்டு இருக்கணும்.”

 

“அவளை வெட்டி என்ன கிடைக்கப் போகுது நமக்கு. போன மானம் திரும்பி வந்துடுமா? எனக்கு என் மானம் கௌரவம் திரும்ப கிடைக்கனும். அதுக்கான வழியைத்தான் இனிமே பார்க்கணும்.”

 

“அப்போ உங்க பொண்ண விடலாம்னு சொல்றீங்களா”

 

“என் பொண்ணா!” என்ற பொன்ராசு மகனை குத்தி கிழிக்கும் பார்வையில் உற்று நோக்கி, “இனிமே எனக்கு ஒரே ஒரு மகன் மட்டும் தான். அது நீதான். இப்போ நான் ஆத்திரப்படுறதுக்கு காரணம் சிதைந்து போன என் கௌரவத்துக்காக மட்டும் தான். அது என்னைக்கு கிடைக்குதோ அன்னைக்கு தான் இந்த ஊருக்குள்ள தலை நிமிர்ந்து நடக்க முடியும்.” என்றார். 

 

“தாலி கட்டுனவன் கையை வெட்டவா?” 

 

“ம்ஹூம்…” என்ற பொன்ராசு அங்கிருக்கும் தூணில் கையை அழுத்தி, “என்னை ஊருக்கு மத்தியில ஏமாத்தி நிக்க வச்சவன் அய்யோ அம்மான்னு கதறனும். அவன் துடிக்கிறதை நான் பார்க்கணும். அதுக்கு என்ன செய்யணுமோ அதை செய்.” என்றார்.

 

“பேச்சியப்பன் மாமாக்கு தெரிஞ்சா…” 

 

“அவன் எதுவும் சொல்ல மாட்டான். சொன்னாலும் எனக்கு அதை பத்தி கவலை இல்லை. மகன அடக்கி வச்சிருந்தா எனக்கு இந்த நிலைமை வந்திருக்காது. இதுக்கு ஒரு வகைல அவனும் காரணம்.” 

 

“என்ன பண்ணனும்னு சொல்லுங்க அப்பா.” 

 

“தெரியல கருப்பா. அவன் உசுரோட இருக்கணும். அவன் நண்பனும் உசுரோட இழுத்துட்டு போய் தாலி கட்டியவளோடா வாழனும். ஆனா, ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்க கூடாது. எதுக்காக இப்படி ஒரு வேலையை செஞ்சோம்னு நொடிக்கு நொடி துடிக்கணும். உன்னால தான் என் வாழ்க்கை போச்சுன்னு நடுரோட்ல நின்னு அடிச்சுக்கணும்.” 

 

“எம்புட்டு பெரிய வேலையை செஞ்சிருக்காங்க இவ்ளோ சின்ன தண்டனையை கொடுக்க சொல்றீங்க.” 

 

“இது கேட்க வேணா சின்ன தண்டனையா இருக்கலாம் கருப்பா. இதுதான் அவங்களுக்கு கிடைக்கப் போற மிகப்பெரிய தண்டனை. எந்த நட்புக்காக என்ன அவமானப்படுத்தினானோ அந்த நட்பு கையை விட்டு போய் தனி மரமா குமரவேலன் நிக்கணும். கூட ஒருத்தன் இருக்குற தைரியத்துல இந்த வீட்டு பொண்ண கல்யாணம் பண்ணவன் நாதியத்து பிச்சை எடுக்கணும். பரம்பரை மானத்தை மண்ண கவ்வ விட்டுட்டு போனவ வாழ முடியாம தன்னைத்தான சிதைச்சிக்கணும். இதுதான் எனக்கு தேவை.” 

 

இவர்கள் பேசிக் கொண்டிருந்த முழுவதையும் கேட்காமல் உள்ளே நுழைந்த பேச்சியப்பன், “அந்தக் கேடு கெட்டவனை விட்டு என் மகன் தனியா வருவான்னு உறுதியா சொல்லு என்ன உதவி செய்யவும் நான் தயாரா இருக்கேன்.” என தனக்குத் தெரியாமல் தன் மகனுக்கு குழி பறித்தார். 

 

அந்தக் குழியில் விழுந்தவனை எண்ணி அனுதினமும் கூனிக்குறுகி போவதை அறியாது துரோகிகளோடு கைகோர்த்தார். கௌரவ நண்பர்கள் இருவரும் என்ன செய்வதென்று திட்டம் போட்டுக் கொண்டிருக்க, பேச்சியப்பனை பார்க்க பற்றிக் கொண்டு வந்தது கருப்பனுக்கு. இவரை பார்க்கும் பொழுதெல்லாம் குமரவேலன் தான் நினைவிற்கு வருகிறான். 

 

நேற்று இரவு தன்னை சுழற்றி அடித்ததும், நாக்கை மடித்து கடித்ததும் தான் குமரவேலனின் முகமாக பதிந்தது. அந்த கர்வமும் வீரமும் ஒன்றும் இல்லாத சதையாக பார்க்க ஆசைப்பட்டான். கருப்பனின் ஆசையை நிச்சயம் வாழ்க்கை நிறைவேற்றப் போவதை அறியாது எரிந்து கொண்டிருந்த நெருப்பை அணைக்க முடியாமல் அங்கிருந்து சென்று விட்டான். 

***

 

வீட்டில் இருப்பதை வைத்து சமைத்து முடித்தவர் மூவருக்கும் உணவு பரிமாறினார். அன்புக்கரசன் தாத்தாவையும் அமர வைத்து ஊட்டி விட, “உனக்கு தான் பொண்டாட்டி வந்துடுச்சுல. அங்க போய் ஊட்டி விடுடா அன்பே” என்றவன் உள்ளங்கையில் சுழற்றி வைத்திருந்த சோற்று உருண்டையை மாணிக்கத்தின் வாயில் திணித்தான்.

 

சின்ன புன்னகையோடு அன்புக்கரசன் விழி உயர்த்தி தேனிசை தேவியை கேட்க, மற்ற இருவரையும் பார்த்து பதறியவள் தயக்கமாக தலையை தாழ்த்திக் கொண்டாள். வந்த மருமகளுக்கு அதிக உணவை பரிமாறி அன்பைப் பொழிந்த மாணிக்கம் பேரன்கள் இருவரையும் அழைத்து, 

 

“வசதியான வீட்டுப் பிள்ளை. அதுக்கு தேவையானதை வாங்கி போடணும்.” என்றவருக்கு அதற்கான வழியைத்தான் காட்ட முடியவில்லை. 

 

தாத்தாவின் பேச்சைக் கேட்டதும் அன்புக்கரசன் தலை கவிழ்ந்துக் கொள்ள, “செய்யணும்னு மனசு இருந்தா போதும் அன்பே. காசு இன்னைக்கு வரும் நாளைக்கு போகும். எப்பவும் என் முன்னாடி இப்படி தலையை தொங்கப் போடாத.” தலையை உயர்த்தி விட்டவன் தான் செய்வதாக கூறினான்.

 

“அவளுக்கு என் காசுல வாங்கி தரது தான் நியாயம் குமரா.”

 

“நான் வாங்கி கொடுத்தா அநியாயமா?” என நண்பர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது இடைப் புகுந்த தேனிசை தேவி, 

 

“அன்பு சொல்ற மாதிரி அவர் சம்பாத்தியத்துல வரதை முழு மனசோட ஏத்துகிறேன். இதுவரைக்கும் நீங்க எங்களுக்கு பண்ண உதவியே போதும். வசதிக்கு ஆசைப்பட்டா என் அன்பு மேல நான் வச்சிருந்த காதல் பொய்யாகிடும்.” என்றிட, 

 

“எனக்கு போட்டியா வீட்டுக்குள்ள ஒரு உருவம் நடமாடுது போலயே.” ஜாடை மாடையாக வயிறு எரிந்ததை வெளிக்காட்டினான் குமரவேலன்.

 

“இனிமே போட்டியே இல்ல அந்த இடம் எனக்கு சொந்தமாகிடுச்சு.” 

 

“இந்தாம்மா… இந்த வேலையெல்லாம் இங்க ஆகாது. இந்தக் குமரனுக்கு அன்பு தான் எல்லாம் இந்த அன்புக்கு குமரன் தான் எல்லாம். நீயும் என்னை கட்டிக்க போறவளும் துணைக்கு நிக்க போற ஒரு ஆளுங்க அவ்ளோதான்.”  

 

 

வெளியில் அவளோடு போட்டிக்கு போட்டி பேசினாலும் உள்ளம் கனிந்தது குமரவேலனுக்கு. அவனை விட அவன் பக்கத்தில் நின்றிருந்தவனுக்கும் இனித்தது. இது போன்ற ஒரு அன்பை தனதாக்கிக் கொள்ளத்தான் இவ்வளவு போராட்டம். இதை நிறைவேற்றிக் கொடுத்த நண்பனை மனம் கனிந்து பார்த்தவன் காவல் நிலையத்தில் நடந்ததை நினைத்தான். 

 

காவல் நிலையத்தில் வைத்து இந்த திருமணத்தை தவிடு பொடியாக்கும் முடிவில் தான் காவல்துறையும் கௌரவ நண்பர்களும் சென்றிருந்தார்கள். சிறு வயதிலிருந்தே இந்த கௌரவ நண்பர்களை பார்த்தவன் அவர்கள் எண்ணத்தை அறியாமலா போவான். 

 

“என் பொண்ணு இவன காதலிக்கவே இல்ல. இவனா மிரட்டி கல்யாணம் பண்ணி இருக்கான்.” என்ற பொய் குற்றச்சாட்டை அன்புக்கரசன் மீது வைக்க, 

 

“நானும் காதலிச்சு, முழு சம்மதத்தோட தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். என் வீட்டு ஆளுங்க சொல்ற எதுவும் உண்மை இல்லை.” உண்மையைக் கூறினாள் தேனிசை. 

 

“என் பொண்ண மிரட்டி இப்படி சொல்ல வச்சிருக்கானுங்க. இந்த கல்யாணத்தை முடிச்சு விட்டு என் பொண்ண என் வீட்டுக்கு அனுப்பி வைங்க. இதுக்கு காரணமான இவனையும் நடத்தி வச்ச இவனையும் ஜெயில்ல தூக்கி போடுங்க.” 

 

“என்னத்துக்கு நாங்க ஜெயிலுக்கு போகணும்” என்ற குமரவேலனை அதட்டிய அங்கு இருக்கும் அதிகாரி, 

 

“என் முன்னாடியே மிரட்டுற.” என்றிட, என்ன இருப்பினும் தன் மகனை தனக்கு முன்னால் ஒருவர் மிரட்டுவதை பார்க்க முடியவில்லை பேச்சியப்பனால். தலை திருப்பிக் கொண்டவர், “இவன விட்டுட்டு அவன மட்டும் உள்ள போடுங்க.” என்றார். 

 

 

தேனிசை தேவிக்கு இதில் விருப்பம் இல்லை என்று சொல்லி விட்டால் அன்புக்கரசனை விட்டு விடுவதாக மிரட்டினார்கள். தன் முடிவில் இருந்து மாறாமல் தெளிவாக பேசிய தேனிசை தேவியை விட்டவர்கள், 

 

“காலம் முழுக்க ஜெயில்ல கலி திங்கணும். இந்த பொண்ண வேணாம்னு சொன்னினா நல்லா வாழலாம். இல்லனா ஆள் கிடைக்காம இருக்க கேஸ உன் மேல போட்டுடுவேன்.” பகிரங்கமாக மிரட்ட ஆரம்பித்தார்கள்.

 

இந்த சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கும் பொழுதே குமரவேலனுக்கு தெரிந்த வழக்கறிஞர் உள்ளே நுழைந்தார். அனைவரும் அவரை யார் என்று பார்க்க, “நல்ல நேரத்துக்கு வந்தீங்க சார். இவங்க ரெண்டு பேரும் விருப்பப்பட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. அதுக்கு எதிரா இருக்குற அவங்க மேல ஆக்சன் எடுக்க சொன்னா இவங்க ரெண்டு பேரையும் பிரிச்சி விட பார்க்குறாங்க இந்த போலீஸ்காரங்க.” போட்டுக் கொடுத்தான். 

 

வழக்கறிஞருக்கும் காவல் அதிகாரிகளுக்கும் பேச்சு வார்த்தை நடந்தது. வழக்கறிஞரோடு வந்த உதவியாளர்கள் அங்கு நடப்பதை பதிவு செய்து கொண்டிருக்க, கௌரவ நண்பர்கள் பக்கம் இருந்த அதிகாரிகளுக்கு சற்று சிக்கல் எழுந்தது. அந்த வழக்கறிஞரை தங்கள் பக்கம் இழுக்குமாறு கௌரவ நண்பர்களுக்கு தூது அனுப்பினர். 

 

 

அவர்களும் பேசிப் பார்க்க முயன்றனர். இது போன்ற மனிதர்களுக்கு மத்தியிலும் சில நல்ல மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு. அப்படி ஒருவராக அங்கு வந்து சேர்ந்த அந்த நபர், 

 

“பொண்ணு மேஜர். ரெண்டு பேரும் விருப்பப்பட்டு கல்யாணம் பண்ணி இருக்காங்க. இப்ப இவங்கள பிரிக்கணும்னு நினைக்கிறது சட்டப்படி குற்றம். இதுக்கு உடந்தையா இருக்க உங்க மேலயும் ஆக்சன் எடுக்க வேண்டியது வரும். இப்ப எல்லாம் ஆணவ படுகொலை அது இதுன்னு கிழிச்சு தொங்க விட்டுட்டு இருக்காங்க. அதுல சிக்கி உங்களுக்கு நீங்களே பிரச்சனையை ஏற்படுத்திக்காம இவங்களை நல்லபடியா வாழ விடுங்க.” என்று விட்டார் முடிவாக.

 

கௌரவ நண்பர்களை ஓரமாக அழைத்து வந்து அதிகாரி, “சட்டப்படி இவங்களை எதுவும் பண்ண முடியாது சார். சூட்டோட சுட்டா பண்ணா விஷயம் பூதாகரமா வெடிக்கும். கொஞ்ச நாள் விட்டு உங்களுக்கு என்ன செய்யணும்னு தோணுதோ அதை செய்யுங்க. அதுக்குள்ள என்னென்ன பண்ணனுமோ அது எல்லாத்தையும் நான் பண்ணி வைக்கிறேன். இப்போதைக்கு இந்த பிரச்சனையை விட்டு விலகி நிற்கிறது தான் நம்ம எல்லாருக்கும் நல்லது.” அறிவுறுத்த, துளி கூட மனமில்லை என்றாலும் தங்களின் செயல் தரமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக தோல்வியோடு திரும்பி வந்தனர். 

 

அடிப்பட்ட சிங்கத்திற்கு கர்ஜனை அதிகமாக இருக்கும். கௌரவர்களுக்கு இவை தேவை இல்லாதது என்றாலும் வலித்த உணர்வு வெறியை கூட்டும். அந்த வெறிக்கு பின்னால் குமரவேலன் பலியாக போவதை அறியாமல் முழு பகையையும் வளர்த்துக் கொண்டவர்கள் நாள் பார்த்து கொண்டிருக்கின்றனர்.

 

ஒட்டுமொத்த கோபமும் இவை அனைத்தையும் நடத்தி வைத்த குமரவேலன் மீது தான் இருக்கிறது. திருமணம் செய்து கொண்டவர்களை விட இவனை வதைத்து சுக்குநூறாக்குவதே முதல் கடமையாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் கடமை காலத்தை சுழற்ற போகிறது என்பது தெரிந்திருந்தால் துணிந்திருக்க மாட்டார்கள். 

 

தனக்காக இவ்வளவு பகையை வளர்த்துக் கொண்ட குமரனுக்கு அன்புக்கரசன் என்ன செய்யப் போகிறான்? தன் நட்பிற்கு அவன் கொடுத்த மகுடத்தை மனதார ஏற்றுக் கொண்டவன் மகுடம் இழந்து நிற்கும் குமரனுக்கு எப்படி காவலுக்கு நிற்கப் போகிறான் என்பதை காணவே இன்றைய இரவு கழிந்தது. 

 

 

தெம்மாங்கு ஒலிக்கும்…

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
19
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்