Loading

அத்தியாயம் 6

 

அந்த சம்பவம் நடந்து ஒரு மாதம் கடந்திருந்தது. அன்று கோபிநாத் கூறியதைப் போல துவாரகா அதற்கு பின்னர் மயூரனின் கண்களில் படவில்லை.

 

காரணம் தெரியாத மற்றவர்களோ, “எப்பவும் சந்தோஷமா சுத்திட்டு இருந்த பொண்ணு… யாரு கண்ணு பட்டுச்சோ… வீட்டை விட்டே வெளிய வர மாட்டிங்குதாம்.” என்று புலம்ப, அதைக் கேட்டவனின் மனம் தான் குற்றவுணர்வில் தவிக்கும்.

 

என்னதான் கோபிநாத்திடம் மன்னிப்பு கேட்டு விட்டாலும், அவளை நேரில் பார்த்து மன்னிப்பு கேட்டால் தான் அவனின் குற்றவுணர்வு சிறிதாவது மட்டுப்படும் என்று எண்ணினான் மயூரன்.

 

ஆனால், அதற்கான சந்தர்ப்பம் தான் அவனுக்கு கிட்டவே இல்லை.

 

இதோ, இன்னும் இரண்டு நாட்களில் துவாரகா மேற்படிப்பிற்காக அமெரிக்கா செல்லப் போகிறாள் என்ற தகவல் அவனை வந்தடைந்தது.

 

அதுவும், அசோகன் சொல்லியது தான். கோபிநாத்திடம் வேலையை பற்றிய பேச்சு மட்டுமே இப்போது மயூரனுக்கு. அவரும் அந்த எல்லையை கடக்கவில்லை, அவனும் கடக்க முயற்சிக்கவில்லை.

 

‘அவங்க அமெரிக்கா போயிட்டா, நான் எப்படி மன்னிப்பு கேட்க?’ என்று அவன் தன்னைத்தானே கேட்டுக் கொண்டாலும், ‘இங்க இருந்து வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்குறதுக்கு பதிலா, அங்கயாவது சந்தோஷமா இருக்கட்டும். இனி, அவங்களை டிஸ்டர்ப் செய்ய வேண்டாம். அவங்க வாழ்க்கைக்குள்ள போக வேண்டாம்.’ என்று மனதாற எண்ணிக் கொண்டான்.

 

அவன் மனது வைத்தால் போதுமா என்ன?

 

*****

 

வீட்டில் பாஸ்கர் தான் மயூரனின் மீது கோபமாக இருந்தான். இத்தனைக்கும், அவனுக்கு நடந்தவை முழுவதுமாக தெரியாது.

 

மயூரன் ஏதோ திட்ட, அதனால் உண்டான அதிர்ச்சியில் துவாரகாவின் உடல்நிலை கெட்டு விட்டது என்று தான் அவன் யூகித்திருந்தான்.

 

அதற்கே மயூரனிடம், “என்னடா பண்ணி வச்சுருக்க? அந்த பொண்ணோட ஹெல்த் ஸ்பாயிலாகுற அளவுக்கா திட்டுவ? அந்த பொண்ணுக்கு என்னடா குறைச்சல்? உன்மேல எவ்ளோ அன்பு வச்சு, உன்னையே சுத்தி வந்துச்சு? நானும் கூட, உனக்கு ஒரு நல்ல லைஃப் அமையப் போகுதுன்னு சந்தோஷமா இருந்தேன்.” என்று பாஸ்கர் கத்தி விட்டான்.

 

மயூரனோ அமைதியாக, “இதுக்கு பேரு காதலா பாஸ்கி?” என்று வினவ, “சின்ன பொண்ணுடா. எப்படி காதலை எக்ஸ்பிரஸ் பண்றதுன்னு தெரியாம, பண்ணிட்டா.” என்று அப்போதும் துவாரகாவிற்கு தான் ஆதரவாக இருந்தான் பாஸ்கர்.

 

“அதே தான் பாஸ்கி. சின்ன பொண்ணு அவ. அவளுக்கு என்னோட வாழ்றது எவ்ளோ கஷ்டம்னு உனக்குமா புரியல? அவ மட்டும் இல்ல, என் லைஃபுக்குள்ள யாரு வந்தாலும் கஷ்டம் தான்!” என்று பெருமூச்சு விட்டான் மயூரன்.

 

“பெரிய அலிபாபா குகை பாரு உன் வாழ்க்கை! அதை தான் தூக்கி போட்டுட்டு வந்துட்டியே, அப்பறம் என்ன?” என்று பாஸ்கர் தாள மாட்டாமல் வினவ, “நான் உதறிட்டு வந்தாலும், என்னை இன்னும் அவங்க பார்வை வட்டத்துல இருந்து விலக்கலையே பாஸ்கி. இதோ, இந்த வேலை கிடைக்கவே எத்தனை திண்டாட்டம்னு நீயே பார்த்த தான? இதுல, எந்த நம்பிக்கையை வச்சு, நான் அடுத்த அடி எடுத்து வைக்க பாஸ்கி? எனக்கு என்னவோ, என் லைஃபுல எதுவுமே நிரந்தரம் இல்லன்னு தோணுது. இதுல, லவ் எல்லாம் எங்க வரது!” என்று விரக்தியாக கூறிய மயூரன் அவன் அறைக்குள் சென்று அடைந்து கொண்டான்.

 

பாஸ்கரோ மூடிய நண்பனின் அறையை சோகமாக பார்த்து, ‘உனக்கு எப்போ தான்டா நல்லது நடக்கும்?’ என்று நல்ல நண்பனாக மனதிற்குள் புலம்பினான். அவனால் அப்போதைக்கு அது மட்டும் தான் செய்ய முடிந்தது.

 

அறைக்குள் வந்த மயூரனின் பார்வையில், துவாரகா வலுக்கட்டாயமாக கொடுத்து விட்ட பரிசு பொருட்கள் பட, அவற்றை சில நொடிகள் வெறித்தவன், ஒரு பையில் அவை அனைத்தையும் போட்டு அலமாரியின் மேலடுக்கில் வைத்து விட்டான்.

 

அவன் நினைத்தால், அவற்றை தூக்கி எரிந்திருக்க இயலும். ஆனால் நினைத்தானா?

 

அப்போது அவன் அலைபேசி ஒலிக்க, அதில் தெரிந்த பெயரை பார்த்ததும், புருவம் சுருக்கி யோசித்தவன், அதை ஏற்காமல் இருக்க, அவன் ஏற்று பேசும் வரை விடப்போவதில்லை என்பது போல தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தது.

 

ஒருவித எரிச்சலும் சலிப்பும் அவனை ஆட்கொள்ள, அதே உணர்வில் அழைப்பை ஏற்றவன், “அட்டெண்ட்  பண்ணலன்னா, விட மாட்டீங்களா? சும்மா சும்மா கூப்பிட்டுட்டே இருக்கீங்க! எதுக்கு இந்த ஃபோன் கால்? அடுத்து என்ன டிராமா பண்ண இருக்கீங்க?” என்று அழைப்பை ஏற்றதும் கத்தினான்.

 

மறுமுனையில் என்ன கூறினார்களோ, யார் பேசினார்களோ, அவன் குரலில் இருந்த உணர்வுகள் அப்படியே வடிந்து விட, மௌனம் சாதித்தான்.

 

பின்னர், சில நிமிடங்கள் கழித்து, “என்னை இப்படியே விட்டுடுங்க. அங்க இருந்தப்போ தான் நிம்மதின்னா என்னன்னு தெரியாம இருந்துட்டேன். இந்த பிரச்சனையை சாக்கா வச்சு தான், அங்க இருந்து தப்பிச்சு வந்துருக்கேன். அது தான் உண்மை! திரும்ப அந்த இடத்துக்கு எனக்கு வர பிடிக்கல. நான் இல்லன்னா, அந்த இடத்துக்கு வரதுக்கு தான் அத்தனை பேரு இருக்காங்களே! சோ பிளீஸ், என்னை விட்டுடுங்க. முடிஞ்சா, இதை அவரு கிட்டயும் சொல்லி புரிய வைங்க!” என்றவன் அழைப்பை துண்டித்து விட்டான்.

 

*****

 

அன்று தான் துவாரகா அமெரிக்கா செல்லும் நாள்…

 

அன்று காலையிலிருந்தே மயூரனுக்கு உள்ளம் குறுகுறுத்தது. துவாரகாவிடம் நேரடியாக மன்னிப்பு கேட்கவில்லையே என்பதால் தான் இந்த உணர்வு என்று அதை அலட்சியமாக கடந்து சென்றான்.

 

அலுவலகத்திலும் ஏதோ சிந்தனையிலேயே சுற்றி வந்தவன், எப்போதும் கிளம்பும் நேரம் தாண்டியும் கிளம்பாமல் இருக்க, அசோகன் வந்து தான் அதை நினைவு படுத்தினார்.

 

வேறு உலகத்தில் இருந்து வந்தது போல விழித்தவன், அசோகனின் பார்வையில் தெளிந்து, ‘இது வேலைக்காகாது. போய் சாரி கேட்டுட்டே வந்துடுவோம்.’ என்று எண்ணியவனாக, அசோகனிடமே துவாரகாவின் விமான நேரத்தை கேட்டறிந்தான்.

 

அவர் அவனை ஒரு மாதிரி பார்த்தாலும், “எட்டு மணி ஃபிளைட் பா.” என்றார். 

 

மணியை பார்த்தவன், இன்னும் நேரமிருப்பதைக் கண்டு பெருமூச்சு விட்டவனாக, அசோகனுக்கு நன்றி கூறி வெளியேறி விட்டான்.

 

மயூரனின் இந்த போக்கு மும்பைக்கு அவசர வேலையாக சென்றிருந்த கோபிநாத்திற்கும் தகவலாக சென்றது.

 

“ஓகே அசோகன், துவாவை சேஃபா ஃபிளைட் ஏத்தி விட்டுடுங்க. நானே இருந்து அவளை சென்ட் ஆஃப் பண்ணி இருக்கணும். ஆனா, இந்த திடீர் பிசினஸ் மீட் வந்ததால, முடியாம போயிடுச்சு. உங்களுக்கும் சிரமம் குடுக்க வேண்டியதாகிடுச்சு!” என்று கோபிநாத் கூற, “அட, இதுல என்ன சார் இருக்கு? நானே பாப்பாவை பத்திரமா அனுப்பி வைக்குறேன் சார். நீங்க கவலைப்படாதீங்க. நீங்க நாளைக்கு ஆஃபிஸ் வந்துடுவீங்களா சார்?” என்றார் அசோகன்.

 

“ஆமா அசோகன், இன்னும் த்ரீ ஹார்ஸ்ல ஃபிளைட் ஏறிடுவேன். நாளைக்கு ஆஃபிஸ்ல பார்ப்போம்.” என்று அழைப்பை துண்டித்த கோபிநாத்திற்கு, மயூரன் எதற்கு துவாரகாவை சந்திக்க செல்கிறான் என்று புரிந்து தான் இருந்தது.

 

அது சரி வருமா, மகள் அதை எவ்வாறு எதிர்கொள்வாள் என்று யோசித்தபடி இருந்தார்.

 

அவர் நினைத்தால், மயூரனுக்கு அழைத்து, அவன் துவாரகாவை பார்க்க விடாமல் தடுக்க செய்யலாம். ஆனால், ஏனோ அவர் அதை செய்ய முனையவில்லை.

 

*****

 

துவாரகாவின் வீடு… எப்போதும் உற்சாகம் பொங்கும் முகத்துடன் வளைய வருபவள், சில நாட்களாகவே பழகி விட்ட மௌனத்துடனும் வெறுமையான முகபாவத்துடனும் காட்சியளித்தாள்.

 

இதுவே, கோபிநாத் பல மணி நேரமாக கெஞ்சி, கொஞ்சி கேட்டதனால் தான். இல்லை என்றால், இன்னும் மோசமாக இருந்திருப்பாள்.

 

அவளின் அமெரிக்க மேற்படிப்பு கூட கோபிநாத்தின் பலகட்ட பேச்சுவார்த்தைகளின் விளைவு தான்.

 

அதற்கும் முதலில், “நான் உங்களுக்கும் பாரமா இருக்கேனாப்பா? மயூரன் சொன்னது உண்மை தானாப்பா?” என்று துவாரகா கேட்க, “என்ன பேச்சு துவாம்மா இது? எப்போயாவது அப்பா உன்னை பாரம்னு சொல்லியிருப்பேனா? அப்பாக்கு நீ வரம்டா துவா. உன் அம்மா போனதுக்கு அப்பறம், நீதானடா அப்பாக்கு எல்லாமே! யாரோ என்னவோ சொன்னா, அதை நம்பி அப்பாவையும் அம்மாவையும் தப்பா நினைப்பியாடா?” என்று அவளை அணைத்துக் கொண்டு கண்ணீர் மல்க கேட்டார் கோபிநாத்.

 

மகளும் கண்ணீர் உகுத்துக் கொண்டே, “அப்பறம் ஏன்பா என்னை அமெரிக்கா போக சொல்றீங்க?” என்று கேட்க, “நீ சின்ன பொண்ணா இருக்கடா. இந்த உலகத்துல நீ இன்னும் நிறைய பார்த்து கத்துக்கணும். உன்னை கைக்குள்ளேயே வச்சு அப்பா தான் தப்பு பண்ணிட்டேன். அந்த தப்பை சரி பண்ண நினைக்குறேன்டா துவா. அதுக்கு அப்பாக்கு ஒரு சான்ஸ் குடுப்பியா?” என்று வினவினார் கோபிநாத், கண்களில் மன்றாடலுடன்.

 

தந்தையின் தவிப்பை பார்த்தவளுக்கு அதற்கு மேலும் மறுக்க முடியவில்லை. எனினும், புது இடம், புது மக்கள் என்ற பயம் இருக்கவே செய்தது.

 

அதை அறிந்து கொண்ட போபிநாத்தோ, “எந்த பயமும் வேண்டாம்டா. அப்பாவோட ஃபிரெண்ட் சதாசிவம் தெரியும்ல… அவரோட பொண்ணும் அங்க நீ படிக்கப் போற காலேஜ்ல தான் படிக்கிறா. உன்னை அவ பார்த்துக்குறதா சொல்லிட்டா. அதோட, அப்பாவும் இருக்கேன். அங்க உனக்கு ஏதாவது அன்கம்ஃபர்டபிளா இருந்தா, அப்பா பார்த்துக்குறேன்.” என்று பயத்தில் இருக்கும் மகளை அரவணைத்து ஆறுதல் கூறினார்.

 

இதோ, கோபிநாத்தின் தளராத முயற்சியால் அமெரிக்க பயணத்திற்கு தயாராகி அமர்ந்திருந்தாள் துவாரகா.

 

அவள் மனதிற்குள்ளோ, கடந்த ஒரு மாதத்தில், அவள் வாழ்வு எந்தளவு மாறி இருக்கிறது என்ற எண்ணமே வட்டமிட்டுக் கொண்டிருந்தது.

 

மீண்டும் மீண்டும் மயூரனின் பேச்சு மனதிற்குள் ஓடி, அவளின் தளம்பலான மனநிலையை தாக்க, அதில் மூழ்கவிருந்த இறுதி தருணத்தில், அசோகன் அவளை அழைத்து காப்பாற்றி இருந்தார்.

 

ஒரு பெருமூச்சுடன் அலைபேசியை உயிர்ப்பித்தவள், “அங்கிள் நானே கால் பண்ணனும்னு நினைச்சேன். நீங்க வீட்டுக்கு வந்து, திரும்ப ஏர்-போர்ட் வரது சுத்து தான? நீங்க டைரெக்ட்டா ஏர்-போர்டுக்கு வந்துடுங்க அங்கிள். நானும் இதோ கிளம்பிட்டேன்.” என்றாள்.

 

“பாப்பா… ஆனா, அப்பா உன்னை கூட்டிட்டு போய் விட சொன்னாரே மா?” என்று அசோகன் தயங்க, “அட, இதுல என்ன இருக்கு அங்கிள்? நம்ம கார்ல ஏர்-போர்ட் வரப் போறேன். அங்க நீங்க இருக்கப் போறீங்க. அதெல்லாம் அப்பா எதுவும் சொல்ல மாட்டாரு அங்கிள்.” என்று  பேசி அசோகனை அரைமனதாக சம்மதிக்க வைத்தவளுக்கு தெரியவில்லை, அவள் வாழ்க்கை ஒட்டுமொத்தமாக மாறப் போவது, அவளின் இந்த முடிவால் தான் என்பது!

 

*****

 

அசோகனுக்கு முன்னரே கிளம்பிய மயூரன் விமான நிலையத்தை அடைந்ததும், ஒருவித பதற்றத்தை உணர்ந்தான். அவன் இதயம் வேகமாக துடித்தது.

 

இதற்கு முன்னர், இப்படியான சமயங்களை நினைவு கூர்ந்தவனுக்கு இப்போது நிச்சயமானது ஏதோ தவறாக நடக்கப்போகிறது என்று!

 

படபடக்கும் மனதை கட்டுப்படுத்தியபடி துவாரகாவை தேடினான்.

 

“ப்ச், அசோகன் சாரோட சேர்ந்தே வந்துருக்கலாம். இப்போ இவ்ளோ பெரிய ஏர்-போர்ட்ல அவங்களை எங்கன்னு தேடுறது?” என்று சலித்துக் கொண்டவனின் மனதிலோ, ‘சீக்கிரம் மன்னிப்பு கேட்டுட்டு போயிடனும்.’ என்பதே ஓடிக் கொண்டிருந்தது.

 

அவனை அதிகம் அலைய வைக்காமல், சற்று தூரத்தில் பயணப்பொதிகளை டிராலியில் தள்ளிக் கொண்டே, சுற்றிலும் பார்த்துக் கொண்டே சென்றாள் துவாரகா.

 

‘இவங்க எதுக்கு தனியா போறாங்க? அசோகன் சார் எங்க?’ என்று யோசித்தபடி முன்னேறியவனை, பின்னிருந்து யாரோ தாக்கி அவனை மூர்ச்சையாக்கி இருந்தனர்.

 

கண்களை மூடும் இறுதி வேளையில், அவன் கண்டது அவளை தான்!

 

அவனை தொடர்ந்து அவளையும் சிலர் வழிமறித்து வாகனத்தில் வலுக்கட்டாயமாக ஏற்றுவதையும் அவன் கண்டிருக்கலாம்!

 

*****

 

அடுத்து மயூரன் கண்விழித்தது மறுநாள் காலையில் தான்!

 

அதுவும் வெண்ணிற திரைச்சீலையின் வழியே சுள்ளென்று அடித்த வெயில் முகத்தில் விழவும் தான் முழிப்பு வந்தது அவனுக்கு.

 

கண்விழித்ததும் தெரிந்த இடம், இது அவனின் வீடல்ல என்பதை புத்திக்கு உணர்த்த, முதல் நாள் நடந்த நிகழ்வுகளை ஒவ்வொன்றாக அவனின் மூளை எடுத்துரைத்தது.

 

ஏதோ தவறாக நடந்திருக்கிறது என்பதை புரிந்து கொண்டவன், “ஷிட்!” என்று எழ, அவனின் மேலாடையில்லாத மேனி, தவறின் வீரியத்தை எடுத்துரைத்தது.

 

மீண்டும் இதயம் படபடவென்று அடித்துக் கொள்ள, அப்போது தான் அந்த மெத்தையில் அவன் மட்டும் இல்லை என்பது புரிந்தது.

 

நடந்தவற்றின் அதிர்ச்சியிலிருந்தே மீளாதவனுக்கு, அடுத்த அதிர்ச்சியாக இருந்தது, அரைகுறை ஆடையுடன் இருந்த ஒருத்தி அதே மெத்தையில், அவனுக்கு முதுகு புறம் காட்டி படுத்திருக்கும் காட்சி.

 

கண்கள் விரிய பார்த்தவனின் கரங்கள் உடனே போர்வையை இழுத்து அந்த பெண்ணின் உடலை மறைத்தன.

 

என்ன நடந்திருக்கும் என்று மூளையை கசக்கிப் பார்த்தும் எதுவும் புரியவில்லை. அவனின் நினைவுகள் எல்லாம் துவாரகாவை பார்த்த நிமிடத்திலேயே உறைந்து போயிருந்தன.

 

‘எதுக்காக என்னை தூக்குனாங்க? யார் பார்த்த வேலை இது?’ என்று அவனின் மூளை வேலை செய்ய ஆரம்பிக்க, முதலில் அவனோடு இருக்கும் அந்த பெண் யார் என்று பார்க்க பணித்தது அவனின் மூளை.

 

அதன்படி மெல்ல அந்த பெண்ணின் முகம் தெரியுமாறு திருப்பியவனை தாக்கியது அடுத்த அதிர்ச்சி!

 

அங்கு, மயக்கமா உறக்கமா என்று பிரித்தறிய முடியாத நிலையில் இருந்தது, சாட்ஷாத் துவாரகாவே தான்!

 

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
14
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments