Loading

தெம்மாங்கு 6

தன் முன்னால் நிற்பவனை கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டவள் அன்புவை தேடி கண்களை மேய விட, “வா!” என அவளை அழைத்துக் கொண்டு வீர நடைபோட்டான்.

“எங்க கூட்டிட்டு போறீங்க?”

“அன்பு கூட கல்யாணம் பண்ணி வைக்க.”

“என்ன!” என அதிர்வில் அவனோடு நடக்காமல் நின்றவள் கையை மீண்டும் பிடித்தவன், “டைம் இல்ல வேகமாக நட” இழுத்தான்.

“என்ன திடுதிப்புன்னு வந்து கல்யாணம்னு சொல்றீங்க. முதல்ல அன்பு எங்க இருக்கான்னு சொல்லுங்க”

“நீதான என்னை இங்க இருந்து கூட்டிட்டு போயிடுன்னு அன்பு கிட்ட சொன்ன. அவன் தான் உன்ன கூட்டிட்டு வர சொன்னான். இதுக்கு மேல எதுவும் கேட்காத.”

“கூட்டிட்டு போறதை யாராது பார்த்தாங்கன்னா பெரிய பிரச்சனை ஆயிடும்.”

“அதை நான் பார்த்துக்கிறேன்”

“இல்ல… எனக்கு பயமா இருக்கு.”

“காதலிக்கும் போது பயம் தெரியலையா.”

“அய்யோ! நீங்களும் எல்லாரும் மாதிரியும் பேசாதீங்க. என்ன நடக்கப் போகுதுன்னு தெளிவா சொல்லுங்க.” என்றவளை முறைத்தவன்,

“அன்பு கூட கல்யாணம் நடக்கணுமா வேணாமா?” என முடிவை அவளிடம் கொடுத்தான்.

பதில் சொல்லாமல் தலையாட்டிய அவளின் கையைப் பிடித்து, “கல்யாணம் நடக்கிற வரைக்கும் பேசாம இருக்கணும்.” என்றிட, அவனது கை பொம்மையாக பின் தொடர்ந்தாள்.

அன்புவை பிடிப்பது தான் கௌரவ நண்பர்களின் முழு கவனமாக இருப்பதால் வீட்டிற்குள் ஆள்கள் இல்லை. தேனிசை தேவியின் வீடு தோட்டம் பக்கம் ஒதுங்கி இருக்கும். அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தியவன் பின் வழியாக தோட்டத்திற்குள் நுழைந்து ஊரை விட்டு வெளியேறினான். பாதி வழி வந்ததும் நண்பனை தொடர்பு கொண்டவன்,

“கோவிலுக்கு வந்துடு” உத்தரவிட, பதைப்பதைப்பான மனநிலையில் மலை மீது உள்ள முருகனைப் பார்க்க ஓடினான் அன்புக்கரசன்.

நேரம் குறைவு என்பதால் குமரவேலன் ஓட்டம் பிடிக்க, பின்னால் வந்தவளால் சற்றும் முடியவில்லை. அதை உணர்ந்தாலும் கருணை பார்க்காமல் கையை இழுத்து வதைக்க, மூச்சு வாங்க… நின்று விட்டாள் முடியாமல்.

“என்ன?”

“சுத்தமா ஓட முடியல”

“தேர் வைக்கவா”

பெரிய பெரிய மூச்சுக்கள் நாசியை விட்டு வெளியேறும் வேளையிலும் அவனை முறைத்தவள், “அன்பு சொல்ற மாதிரி நீங்க ரொம்ப துடுக்கு.” என்றாள்.

“ஓஹோ! காதலிக்க சொன்னா என்னை பத்தி தான் ரெண்டு பேரும் பேசிட்டு இருப்பீங்களா?”

“உங்க அன்பு எப்ப பாரு உங்களை பத்தி மட்டும் தான் பேசுவாரு.”

“கல்யாணத்துக்கு அப்புறம் பேச கூடாதுன்னு சட்டம் போடக்கூடாது.”

“கேட்ருவீங்களா ரெண்டு பேரும்”

“வாய்ப்பே கிடையாது” என தோளை உயர்த்தியவன், “என் அன்புக்கு என்னை தாண்டி ஒரு குடும்பம் தேவைப்படுறதால தான் இவ்ளோ பெரிய ரிஸ்க் எடுத்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன். அவனை கண்ணும் கருத்துமா பார்த்துக்கணும். உன்னால அவனுக்கு ஏதாச்சும் கஷ்டம் வந்துச்சு…” என கண்ணை மேலும் கீழும் சுழற்றினான்.

“வந்துச்சு…”

“ஹான்! கட்டி வைக்க இழுத்துட்டு போறவன்… வெட்டி விட அருவாளை எடுத்துடுவேன்.”

“கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு கூட்டிட்டு வந்து மிரட்டிட்டு இருக்கீங்க.”

“அப்படியே பயந்துட்டியாக்கும்”

“கொஞ்சம்”

“நல்லது. மீதியை கல்யாணம் முடிச்சுட்டு பேசிக்கலாம், நட.”

இருவரும் கோவிலுக்கு வருவதற்குள் அன்புக்கரசன் வந்து விட்டான். வேலனுக்கு அழைப்பு விடுத்திட, “வந்துட்டோம்.” அவனுக்கு பின்னால் நின்று குரல் கொடுத்தான்.

கேட்ட குரலில் திகைத்தவன் நண்பன் என்று அறிந்ததும் நிம்மதி பெருமூச்சு விட, “ஹா! ஹா!” நகைத்தான் அவன் நண்பன்.

“என்ன குமரா நீ… பயந்தே போயிட்டேன்.”

“ஊருக்குள்ள இருக்க பெரிய தல பொண்ண காதலிச்சா மட்டும் பத்தாது அன்பே… கொஞ்சமாது தைரியம் இருக்கணும்.”

“என் இடத்துல இருந்து பாரு தெரியும்.”

“என்ன ரெண்டு பேரும் சாதாரணமா பேசிட்டு இருக்கீங்க.” என்று பதறியவளை சாவகாசமாக பார்த்தவன், “வேற என்ன பண்ணனும்? படுத்து தூங்கலாமா.” நக்கலடிக்க, அன்புவை பார்த்தாள்‌.

அப்போதுதான் அவள் முகத்தை கவனித்தான் அன்புக்கரசன். அடித்த தழும்பு விரலாக கன்னத்தில் இருக்க, சிவந்த கண்கள் சொல்லியது அவள் பட்ட அவஸ்தையை. ஓயாமல் துடிக்கும் இமை முடிகள் அவள் பயத்தை பறைசாற்றிட, தேனிசை தேவியின் கைப்பிடித்தவன் ஆறுதலாக அழுத்தம் கொடுத்தான்.

அதுவரை பேசிக் கொண்டிருந்தவன் சற்று தள்ளி நின்றுக் கொள்ள, “கல்யாணத்துக்கு அப்புறம் என்ன நடக்கும்னு நினைச்சாவே ரொம்ப பயமா இருக்கு.” என்றவளுக்கு என்ன சமாதானம் உரைப்பது என்று தெரியாமல் அவளை விட அதிக பயத்தோடு நின்றிருந்தான்.

“இவ்ளோ தூரம் வந்துட்டோம். இனியும் என்ன ஆகுதோ பார்த்திடலாம்.” என்றவர்களை மலைக்கு மேல் அழைத்துச் சென்றான்.

“சாமியாரே… கல்யாணம் பண்ணி வைங்க” என்றவனின் அழைப்பில் பிடித்தம் இல்லாத பூசாரி ஒரு மாதிரியாக பார்க்க, “என்ன பார்க்குறீங்க தாலி எடுத்து கொடுங்க.” என்றான்.

“டேய்… நம்ம தான்டா எல்லாம் வாங்கிட்டு வரணும்.”

“ப்ச்! அதுக்கெல்லாம் டைம் இல்ல அன்பே. எப்படியும் கோவில்ல பூ தாலி எல்லாம் இருக்கும் தான. அதுவும் இவரு ரெண்டு கல்யாணம் பண்ணவரு. கைவசம் வச்சிருக்க மாட்டாரா.”

“எல்லாத்துலயும் விளையாட்டு தான் குமரா உனக்கு. நம்ம வாங்கிட்டு வந்தா தான் சாமி கிட்ட வச்சு எடுத்து கொடுப்பாங்க.”

திருமணத்திற்கு தேவையான எதுவும் அவர்களிடம் இல்லை. காதலர்களுக்கு இருந்த பதட்டத்தில் அதையெல்லாம் யோசிக்க முடியவில்லை. திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தவன் அனைத்தையும் செய்திருப்பான் என்று அவர்கள் வர, அதைப் பற்றிய கவனம் சிறிதும் இல்லாமல் இங்கு வரை அழைத்து வந்து விட்டான்.

“பூசாரி, உங்களால எதுவும் ஏற்பாடு பண்ண முடியாதா?”

“இன்னும் அரை மணி நேரத்துல நடை சாத்திடுவேன். அதுக்குள்ள ஏற்பாடு பண்ணுவீங்கனா வெயிட் பண்றேன்.”

ஊருக்குள் செல்லவும், டவுன் பக்கம் செல்லவும் குறைந்தது நாற்பது நிமிடங்கள் ஆவது ஆகும். காதலர்கள் உச்சகட்ட அச்சத்தில் நின்றுக் கொண்டிருக்க, இப்போதுதான் பயம் மெல்ல ஆட்கொண்டது குமரவேலனை. இந்த சந்தர்ப்பத்தை விட்டால் வேறு சந்தர்ப்பமும் கிடைக்காது. இந்த நிலையில் இருவரையும் ஊருக்குள் அழைத்துச் செல்லவும் முடியாது.

இப்படி எடக்குமடக்காக சிக்கிக்கொண்ட சூழ்நிலையில் இருந்து தப்பிக்க வழி தெரியாது தலையில் அடித்துக் கொண்டவன்  பல்லை கடித்துக் கொண்டு திரும்ப, அங்கிருக்கும் வேப்பமரம் கண்ணில் பட்டது. அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்த கருவழிகள் அந்த வேப்ப மரத்தில் நிலை கொண்டது. ஏகப்பட்ட மஞ்சள் கயிறு வா குமரா! என்று அழைத்தது.

கடவுள் காட்டிய வழி என்று நம்பியவன் நூற்றுக்கணக்கில் சுற்றி இருந்த மஞ்சள் கயிற்றில் ஒற்றை கயிற்றை உருவி எடுக்க, இரு மஞ்சள் கயிறு கையோடு வந்தது. இரண்டில் எதை எடுப்பது என்று தெரியாமல் நேராக தேனிசை தேவி முன்பு நின்றவன்,

“இதுல ஒன்னு எடு” நீட்டினான்.

நல்ல நாள் பார்த்து ஊர் கூடி குடும்பங்கள் ஆசீர்வதிக்க, ஏராளமான மஞ்சள்களை பூசி பூவோடு முடிச்சிட்ட ஒற்றை தாலியை மனம் கவர்ந்தவன் பக்கத்தில் அமர்ந்து சூடிக் கொள்ள வேண்டியவள் இரு மஞ்சள் கயிற்றையும் மாறி மாறி பார்த்தாள்.

எவ்வளவு நேரம் பார்த்தும் இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்க முடியவில்லை அவளால். முடியவில்லை என்பதை தாண்டி இப்படியான நிலையில் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள். அவளை நண்பர்கள் இருவரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பூசாரி நேரமாவதை அறிவுறுத்த, அன்பும் குமரவேலனும் ஆளுக்கொரு தாலியை கையில் எடுத்தார்கள்.

குமரவேலன் அன்புக்கரசன் எடுத்த தாலியை பார்க்க, நண்பன் எடுத்த தாலியைப் பார்த்தான் அவன். தேனிசை தேவி முன்பாக இரு மஞ்சள் கயிறுகள். அன்பு, நண்பன் எடுத்த தாலியை வாங்க தன்னுடைய கையை இறக்க, தன் கையில் இருந்த தாலியை சுழற்றி உள்ளங்கையில் மறைத்து வைத்தவன்,

“வாங்க” என முருகன் முன்பு நிற்க வைத்தான்.

நேற்று இரவு உடுத்தி இருந்த கசங்கிய உடை வேர்வைகளுக்கு மத்தியில் திருமண ஆடையாக நிற்க, கலைந்த கேசங்கள் தான் மிச்சம்.
கெட்டி மேளம் சத்தம் கேட்காமல், பட்டுப் புடவை உடுத்தி நகைகள் சூழாமல் நறுமணம் வீசும் மலர்களின் அர்ச்சதை இல்லாமல் தனி மரமாக நின்றிருந்தாள் தேனிசை தேவி. தன்னுடைய ஆணிவேரான ஒற்றை சொந்தம் மாணிக்கம் இல்லாமல் தனித்து நின்றான் குமரனின் உயிரான அன்பு.

அங்கு குமரவேலனையும் அன்புக்கரசனையும் எதிர்பார்த்து கௌரவ நண்பர்கள் காத்திருந்தார்கள். இதோ வருவதாக சென்றவன் இன்னும் வராததால் பஞ்சாயத்தை ஏற்பாடு செய்தவர் அழைப்பு விடுத்தார். கோவிலுக்குள் கால் வைத்ததுமே கைபேசியை அணைத்து வைத்து விட்டான் வரும் என்று தெரிந்து.

தெய்வானை மாமன் மகனை எதிர்பார்த்து நகத்தை கடித்த படி நின்றிருக்க, என்ன ஆகுமோ என்ற பயத்தில் முத்துமாரியும் இந்திராவும் நின்றிருந்தார்கள். இவர்களுக்கு நேராக கண் கலங்கி நின்றிருந்தார் மாணிக்கம். மாத்திரை உண்டு படுத்தவர் இப்படி ஒன்றை சற்றும் எதிர் பார்க்கவில்லை.

நள்ளிரவைத் தாண்டி அவர் கதவை அடித்து உதைத்தவர்கள் பேரனை வர வைக்க தாத்தாவை தாக்கினார்கள். பொன்ராசுவின் ஆள்கள் என்பதால் எழுந்து வந்த ஒரு சிலர் பார்ப்பதோடு நின்றுவிட, சத்தம் கேட்டு எழுந்து வந்த சந்தானம் தான் பாதுகாத்தார்.

இப்போது மாணிக்கத்திற்கு இருக்கும் பயம் எல்லாம் தன் பேரன் நலன் குறித்து தான். அன்புக்கரசனின் தாய் பிறந்த பத்தாவது நாளில் மாணிக்கத்தின் மனைவி இறந்து விட்டார். ஒரே மகளுக்காக வாழ ஆரம்பித்தவர் திருமணம் செய்து முடித்து பேரனையும் பார்த்தார். இத்தோடு தன் வாழ்வில் உண்டான கருமை நீங்கி விட்டதாக பெருமூச்சு விட்டவருக்கு பேரிடியாக விழுந்தது இவனின் தந்தை மறைந்த செய்தி.

கணவனை இழந்த மகளுக்காகவும் பேரனுக்காகவும் வாழ ஆரம்பித்தார். அந்த நிலையும் படு மோசமாகி போனது தனியாக நின்ற பேரனால். பெற்ற மகளுக்கு செய்ய வேண்டிய அனைத்து இறுதி சடங்கையும் செய்து முடித்த கையோடு பேரன் கையைப் பிடித்தவர் தான் இன்றுவரை ஓய்வெடுக்கவில்லை.

கடவுள் ஒரு சிலரை மட்டும் இப்படித்தான் வாழ்வின் எல்லை வரை ஓட வைப்பார். காரணத்தை கர்மாவிற்கு பின்னால் ஒளித்து வைத்த இந்த வாழ்க்கை நல்ல வழியை மட்டும் மாணிக்கத்திற்கு காட்டப் போவதில்லை.

தாத்தாவை நினைத்தபடி அன்புக்கரசன் நின்றிருந்தான். அவன் தேர்ந்தெடுத்த தாலியை கடவுளிடம் வைத்து மனதார பிரார்த்தித்த பூசாரி பூவை தேனிசை கையில் கொடுத்தார். ஒற்றை மலராக இருந்தாலும் மணப்பெண்ணுக்கு கிடைத்த ஆசிர்வாதத்தை மறுக்காமல் தலையில் வைத்தாள்.

நெஞ்சில் கை வைத்து வேண்டிய பூசாரி கடவுளுக்கு முன்பாக அந்த தாலியை தூக்கி காட்டி விட்டு, “கட்டு” எனக் குமரவேலன் கையில் கொடுக்க, அந்த மலைக்கோவில் சுக்கு நூறாக உடைந்தது.

குமரவேலனுக்கு பேச்சு வரவில்லை. தனக்கு முன் தொங்கிக் கொண்டிருந்த தாலியை திகைக்க பார்க்க, அன்புக்கரசனின் நிலை சொல்லி புரிவதற்கு இல்லை. சம்பந்தப்பட்டவள் காதலனை பார்க்க,

“ஏற்கனவே நல்ல நேரம் முடிஞ்சு போச்சு. சீக்கிரம் அந்த பொண்ணு கழுத்துல தாலி கட்டு.” என்றார் பூசாரி.

“நா…நா…” பேச்சுத் திக்கிட, ஒரு நிமிடம் என்றாலும் நல்ல பயம் ஆட்கொண்டது அவனை.

“யோவ்! மாப்ள நான் இல்ல… இவன்.”

“நீ இல்லயா? அப்புறம் எதுக்கு வந்ததும் கல்யாணம் பண்ணி வைங்கன்னு சொன்ன.”

“கல்யாணம் பண்ணி வைங்கன்னு சொன்னேன். எனக்குன்னு சொன்னனா?”

“நீ மொட்டையா சொன்னா எனக்கு என்ன தெரியும்? கூட வந்தவன் எதுக்கு ஒட்டி நின்னுகிட்டு… ஓரமா போ.” என்ற பூசாரி அன்புவை மேலும் கீழும் பார்த்து,

“நீ வாயவே தொறக்க மாட்டியா?” கேட்க, என்ன நடக்கிறது என்று புரியாமல் நின்றிருந்தவன் அப்போதுதான் புத்தி தெளிந்தான்.

“பூசாரி‌… திரும்ப தாலிய சாமி கிட்ட வச்சு எடுத்துட்டு வாங்க.”

“ஏன்’ம்மா?”

“ஏற்கனவே நாங்க அவசரத்துல கல்யாணம் பண்றோம். இதுல தாலிய அவர் முன்னாடி நீட்டிட்டிங்க. எனக்கு ரொம்ப சங்கடமா இருக்கு. தயவுசெஞ்சு திரும்ப சாமி கிட்ட வச்சு எடுத்துட்டு வாங்க.”

“அவரு ஏதோ புரியாம சொல்லிட்டாரு இசை.”

“ப்ளீஸ் அன்பு”

“நீங்க வச்சு எடுத்துட்டு வாங்க பூசாரி” என்றவன் அவளை பார்க்க, சொல்லி புரிய வைக்க முடியாத ஆயிரம் உணர்வு பெருக்கு அவள் விழியில்.

விழி மூடி அவளுக்கான தைரியத்தை சொன்னவன் மனதார கடவுளை பிரார்த்தித்து விட்டு மாங்கல்யத்தை கையில் எடுத்தான். அதுவரை அழுது கொண்டிருந்தவள் இமைகள் இரண்டையும் ஒன்று சேர்த்து,

“கடவுளே… இந்த கல்யாணத்தோட எல்லா பிரச்சனையும் முடிஞ்சிடனும். நானும் அன்புவும் சந்தோஷமா வாழனும். நீங்க தான் எனக்கு துணையா இருக்கணும்.” வேண்டுதல் வைத்து விழி திறந்தாள்.

அவள் முகத்தைப் பார்த்தபடி அவள் பக்கம் திரும்பியவன் தேர்ந்தெடுத்த மாங்கல்யத்தை நெஞ்சில் சேர்த்து பின் பக்கம் மூன்று முடிச்சு போட, திருமணம் இனிதே முடிந்தது!

தாலி ஏறியதும் அன்பின் மார்பில் முகம் புதைத்து சத்தமிட்டு அழுதாள். அவளை அங்கிருந்த யாரும் தொந்தரவு செய்யவில்லை. அவளாகவே அழுது ஓயும் வரை காத்திருந்தவன் குங்குமத்தை நெற்றியில் வைத்து தன்னுடைய மனைவியாக்கிக் கொண்டான்.
***

“யோவ்! என்னங்கையா பஞ்சாயத்தை கூட்டிட்டு மசமசன்னு உட்கார்ந்து இருக்கீங்க. வரன்னு சொன்னவன இன்னும் காணோம். எங்களை பார்த்தா கிறுக்கன் மாதிரி தெரியுதா?”

“என்ன பொன்ராசு இப்படி பேசுற”

“வேற எப்படி பேச சொல்ற? என் பொண்ண நடுராத்திரில ஒருத்தன் பார்க்க வந்திருக்கான். அவன தூக்கி போட்டு மிதிக்க வக்கில்லாம பஞ்சாயத்து வச்சிருக்கீங்க. இதே மாதிரி உங்க வீட்டுல நடந்தா சும்மா இருப்பீங்களா.”

“அதை பத்தி பேசத்தான பஞ்சாயத்து கூடி இருக்கு.”

“இப்படி உங்க மூஞ்ச நானும் என் மூஞ்ச நீங்களும் பார்க்குறதுக்கு பேரு பஞ்சாயத்தா? மரியாதையா பஞ்சாயத்தை கூட்டுனவனும் இந்த கலவரத்துக்கு காரணமானவனும் அஞ்சு நிமிஷத்துல இங்க நிக்கணும்.”

“உன் பேரன் பத்தி ஏதாவது தகவல் வந்துச்சா?”

அந்த வயதான முதியவர் உடல் நடுக்கத்தோடு தெரியவில்லை என்று தலையாட்ட, “உனக்கு தெரியாம இருக்குமா. பஞ்ச பரதேசிக்கு பெரிய வீட்டு பொண்ணு கேக்குதோ. நீதான் உன் பேரனை என் வீட்டுக்கு அனுப்பி வச்சிருப்ப. உன் பேரன் உனக்கு உயிரோட வேணும்னா உண்மையை சொல்லிடு.” என்றார்.

“நான் வணங்குற கடவுள் சாச்சா நீங்க சொன்ன எதுவும் உண்மை இல்லை. என் பேரன் காதலிக்கிற விஷயம் கூட இப்பதான் கொஞ்ச நாளுக்கு முன்னாடி தெரியும்.”

மாணிக்கம் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே, “த்தூ! யாரு யாரடா காதலிக்கிறா? என் பொண்ணு வக்கில்லாத ஒருத்தன காதலிக்கிற அளவுக்கு மடைச்சி இல்ல.” என்றார்.

ஊருக்கு முன்னால் ஒருவர் தன்னை பார்த்து காரி துப்பியதை சகித்துக் கொள்ள முடியாமல் மாணிக்கம் தலை குனிந்து கண்ணீர் வடிக்க, “உன்ன விட வயசுல பெரியவர் கொஞ்சம் பார்த்து பேசு.” கரகரத்த குரலில் பேசினார் சந்தானம்.

“கிழட்டு மூதேவிக்கு மரியாதை ஒரு கேடு. த்தூதூ…”

இந்த முறை வேண்டுமென்றே மாணிக்கத்தை பார்த்து துப்பியவர், “என் பொண்ணுக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவன் தான் தேவை இல்லாம என் வீட்டுக்கு வந்திருக்கான். பஞ்சாயத்து வைக்கிறேன் அது இதுன்னு என் கோபத்தை கிளறாம அவனை என்கிட்ட கொடுத்துடுங்க.” என்றவரை அடக்க முடியாமல் சிரமப்பட்டவர்கள் பேச்சியப்பனை உதவிக்கு அழைக்க,

“இவனாவது வாய்விட்டு தன் கோபத்தை சொல்லிக்கிட்டு இருக்கான். நான் எப்போ அவன் வருவான்னு காத்துட்டு இருக்கேன். சமாதானப்படுத்த முன்னுக்கு வந்து மூக்கு உடைஞ்சு போகாதீங்க. எப்பவோ அவன் கதையை முடிச்சு இருக்கணும். இன்னைக்கு அதை முடிச்சு எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டுறோம்.” என்றார்.

***

தாலி கட்டிக் கொண்ட புதுமண தம்பதிகள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் மலையை விட்டு கீழ் இறங்கி நிற்க, “என்ன நடந்தாலும் நீ அன்பு பக்கத்துல நிக்கணும். அப்பா அம்மானு ஏதாச்சும் தடுமாறின… மனுசனா இருக்க மாட்டேன்.” என்றதும் அன்புவை திரும்பி பார்த்தாள் தேனிசை.

“எப்படிடா அவங்க பக்கம் போவா.”

“பொண்டாட்டியானதும் சப்போர்ட் பலமா இருக்கு.”

“இது நான் ஆசைப்பட்ட வாழ்க்கை. இந்த வாழ்க்கையை காப்பாத்திக்கனும்னு தான் துணிஞ்சி கல்யாணம் பண்ணி இருக்கேன். யார் என்ன சொன்னாலும் இனி அன்பு கூட தான் என் வாழ்க்கை.”

அவர்களை ஊருக்குள் அழைத்து வந்ததும் விஷயம் பரவியது. தேனிசை தேவியின் மார்பில் ஆடும் மஞ்சள் கயிறை பார்த்த பொன்ராசு துடித்து போனார். தந்தையின் பார்வைக்கு அஞ்சியவள் அன்புவின் கைப்பிடித்துக் கொள்ள, அவன் பார்வை மாணிக்கத்தின் மீது இருந்தது.

தன் தாத்தாவின் நிலையை கண்டதும் மனம் வெதும்பி போனவனின் சட்டையை பிடிக்க சுற்றியும் ஆள்கள் வர, அவர்களை எல்லாம் ஓரம் கட்டிய தேனிசை தேவியின் தந்தை தாறுமாறாக தாக்க ஆரம்பித்தார். தடுக்க வந்த குமரவேலனை பேச்சியப்பன் சிறை பிடிக்க, பேரனுக்காக அந்த தள்ளாத வயதுடைய முதியவர் தான் பொன்ராசுவின் காலில் விழுந்தார்.

தன்னை இறுக்கிப் பிடித்து இருந்த தந்தையின் கைகளை வெடுக்கென்று பின்னுக்கு தள்ளியவன் மாணிக்கத்தை எழ வைத்து தனக்கு பின்னால் வைத்துக் கொண்டான். அடித்துக் கொண்டிருந்த பொன்ராசுவின் சட்டையை பிடித்து தள்ளி விட்டு,

“எவன் வந்தாலும் கூட்டுன பஞ்சாயத்து சிதறிடும். ரெண்டு பேருக்கும் பிடிச்சிருக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. தாலி கட்டி முடிச்சதுக்கு அப்புறம் யாராலயும் ஒன்னும் பண்ண முடியாது.” என்றான் குமரவேலன்.

“இந்தப் பொன்ராசுவோட இன்னொரு முகத்த நீ பார்த்ததில்லை. அவனோட சேர்ந்து நீயும் செத்துடாத ஒதுங்கி நில்லு.”

“உங்க கோபம் புரியுது. ஆனா, ஆசைப்பட்டவங்க கல்யாணம் பண்றது தான் நியாயம். அன்பு ஒன்னும் சும்மா இல்ல. இன்னும் கொஞ்ச நாள்ல கவர்மெண்ட் வேலை வாங்கிடுவான். தங்கமான புள்ள உங்க பொண்ண கடைசி வரைக்கும் நல்லா வச்சு பார்த்துப்பான்.” என்ற குமரனின் கன்னத்தை பதம் பார்த்தது பேச்சியப்பனின் கைகள்.

எதிர்பாராமல் வாங்கிய அடியில் வலது கன்னம் பற்றி எரிய, தெய்வானை ஓடி வந்து மாமன் கையை தடுத்தாள். இந்திரா மகனை தாங்க, பஞ்சாயத்து அளவு மீறி சென்றது. பொன்ராசுவை அங்கிருக்கும் எவராலும் அடக்க முடியவில்லை. மகள் கழுத்தில் இருக்கும் தாலியை பறிப்பதில் குறியாக இருந்தார். பஞ்சாயத்தை கூட்டியவரோ குமரன் செய்த பித்தலாட்டத்தில் சமரசம் பேச முன்வரவில்லை.

தேனிசையை சுற்றி வளைத்து கழுத்தில் இருக்கும் தாலியில் கை வைக்க, இறுக்கமாக அன்புவின் கை பிடித்து காப்பாற்ற கதறினாள்‌.  இன்னொரு பக்கம் அன்புவை கண்டமேனிக்கு அடித்துக் கொண்டிருந்தனர். அவர்களை எல்லாம் தடுக்க முற்படும் தன் மகனை பேச்சியப்பன் அடக்க போக, பெண்கள் அனைவரும் தங்கள் வீட்டு ஆண்களை சுற்றி வளைத்து தடுக்க பார்த்தனர்.

“விட்டுங்கய்யா என் பேரனை…”

“அன்பே”

“அன்பு”

“இசை…”

“விடுங்கடா அவனை”

“ப்ளீஸ் ப்பா என்னை வாழ விடுங்க”

“செத்தாலும் பரவால்ல. அவன் கட்டுன தாலி கழுத்துல இருக்க கூடாது.

“என் கௌரவத்தை கெடுக்க பிறந்தவனே”

“ஐயோ! இப்படி தாலி கட்டிட்டு வந்து நிற்கிறாளே… நான் என்ன பண்ணுவேன்.”

“மாமா, மாமன விடுங்க மாமா…”

இது போன்ற சத்தங்கள் தான் அந்த பஞ்சாயத்தில் கேட்டது. நடந்த பிரச்சனையில் அன்பிற்கு தான் அதிக அடி. ஊட்டி வளர்த்த பேரனின் ரத்தத்தை பார்த்த மாணிக்கம் தலையில் அடித்துக் கொண்டு மயங்கி சரிய, போதும் என்ற வரை வேடிக்கை பார்த்த போலீஸ்காரர்கள் தடுத்து விட்டனர்.

ஊருக்குள் வருவதற்கு முன்னரே காவல் துறையிடம் புகார் தெரிவித்து இங்கு வர செய்திருந்தான். பெரிய இடத்து பிரச்சினை என்பதால் அவர்களுக்கு தலையாட்டி பழகியவர்கள் அவர்களே ஒரு முடிவுக்கு வரட்டும் என்று ஒதுங்கி நின்றிருந்தனர்.

தன் தாலியை மட்டும் காப்பாற்றிக் கொண்ட தேனிசை தேவி தாலி கட்டியவனைப் பார்த்து கூச்சலிட, நண்பனை தாங்கி பிடித்த குமரவேலன், “இனி எவனாவது இவன் மேல கைய வச்சீங்க எந்த எல்லைக்கும் போவேன்‌. என்ன தான்டா உங்களுக்கு பிரச்சனை? இவனுக்கு என்ன குறை இவ்ளோ ஆர்ப்பாட்டம் பண்றீங்க. பணம் இருந்தா மட்டும் கௌரவம் வந்துடாது நீங்க நடந்துக்குற முறையில தான் வரும். கொஞ்சமாவது மனுஷ தன்மையா நடந்துக்கோங்க.” என்றவன் இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த காவலர்களை நோக்கி,

“உங்க முன்னாடி இவ்ளோ கலவரம் நடந்துட்டு இருக்கு பொறுமையா பொழுது போகனும்னு தடுத்து விடுறீங்க. நீங்க எங்களுக்கு நியாயம் சொல்லலைன்னா இதை எங்க வேணா எடுத்துட்டு போவேன். உங்க வேலைய காப்பாத்திக்கனும்னா நியாயத்தை செய்ங்க.” கத்தியவனை கண்டு பெரிதும் அலட்டிக்கொள்ளவில்லை அவர்கள்.

பேச்சியப்பன் பொன்ராசு இருவரும் அவர்களுக்கு தேவையானவர்கள். பல வேலைகளை அவர்களை வைத்து நடத்தி இருக்கிறார்கள். தங்கள் தேவைக்கு காவலர்களை இவர்களும் பயன்படுத்தி இருக்கிறார்கள். ஒன்றுக்குள் ஒன்றாக இருப்பவர்கள் எந்த நியாயத்தை கூறுவார்கள். அன்புவை விசாரிக்க காவல் நிலையத்திற்கு அழைக்க,

“புகார் கொடுத்தவனை எதுக்கு கூப்பிடுறீங்க?” கேட்டான் குமரன்.

“எதுவா இருந்தாலும் போலீஸ் ஸ்டேஷன்ல வச்சு தான் பேச முடியும். ஊருக்குள்ள பேசி முடிக்க இது பஞ்சாயத்து இல்லை. நீங்க கேட்ட நியாயம் கிடைக்கணும்னா அங்க வாங்க.” என அன்புக்கரசன் சட்டையில் கை வைக்க வந்த அதிகாரியை தடுத்தவன்,

“வா அன்பே” என தன் வண்டியில் அழைத்துச் சென்றான்.

தெம்மாங்கு ஒலிக்கும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
18
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்