Loading

அத்தியாயம் 56

ஒரு கையால் லைட்டரை ஆன் செய்து மற்றொரு கையில் தீக்காயத்தை ஏற்படுத்திக் கொண்டவனுக்கு சிறிதேனும் கூட வலி உணரவில்லை.

அதை விட ஆயிரம் மடங்காக நெஞ்சம் வலியில் துடித்துக் கொண்டிருக்கிறதே.

“என்ன பண்ற யுக்தா? ஆர் யூ மேட்?” என லைட்டரைப் பிடுங்க எத்தனித்தாள் விஸ்வயுகா.

அதனை இறுக்கி மூடி கைக்குள் அடக்கிக் கொண்டவன், “இன்னும் ஒரே ஒரு கேள்வி கேட்டுட்டுக் கிளம்புறேன். போய் உட்காரு” என்றான் சலனமின்றி.

“நீ முதல்ல இதை குடு யுக்தா” பதறிப் போன நெஞ்சமதை மறைக்கவும் இயலாமல் வெளிக்காட்டவும் இயலாமல் தவித்தாள்.

மற்றவர்களும் என்னவென பார்த்து அதிர, “என்னை எதுக்கு எல்லாரும் சுத்திப் பார்த்துட்டு இருக்கீங்க. கோ பேக் டூ யுவர் சீட்ஸ்” என்றான் சீறலாக.

“யுக்தா அறைஞ்சுடுவேன். லைட்டரைக் குடு” விஸ்வயுகாவும் சீற்றம் குறையாமல் கேட்க, “இப்ப என்ன இது சுட்டு தான் வலிக்க போகுதா. உன் வார்த்தையை விட பெருசா சுடல. அதான் நீ ஜஸ்ட் ஃப்ளர்ட் தான பண்ணுன!” எனக் கண்ணைச் சுருக்கினான்.

அதற்கு பதிலின்றி அவள் இருக்கையில் அமர்ந்து விட, குறிஞ்சி அவன் அசந்த நேரத்தில் லைட்டரைப் பிடுங்கினாள்.

“எப்ப பாரு உன்னையவே ஹர்ட் பண்ணிக்கிறனால எதுவும் மாறப்போறது இல்ல யுக்தா” என அதட்டவும் தவறவில்லை.

அவன் ஆழ்ந்த மூச்செடுத்து விட்டு, அவனைப் பாராமல் தரையைப் பார்த்தபடி அமர்ந்திருந்த தன்னவளை ஏறிட்டு, “வெங்கடேஷையும் விக்ரமையும் எதுவும் விசாரிக்கலையா?” எனக் கேட்டான் கடமையில் கண்ணாக.

அக்கேள்வியில் தான் அவனை நிமிர்ந்து பார்த்தவள், “விசாரிச்சேன். அவங்களை எந்த வகையிலயும் தப்பிக்க விடக்கூடாதுன்னு கல்யாணம் வரைக்கும் வெய்ட் பண்ணுனேன். நான் குடுத்தது ஸ்லோ பாய்சன். அந்த பாய்சன் அவங்க உடம்புல வேலை செய்ய குறைஞ்சது 24 ல இருந்து 48 மணி நேரம் ஆகும். அதைக் கணக்கு பண்ணி, கல்யாணத்து அன்னைக்கு காலைலயே வெங்கடேஷை விசாரிச்சேன். இயர்லி மார்னிங் வீட்ல இருந்து மண்டபத்துக்குப் போயிட்டு, அவனை விசாரிச்சுட்டு திரும்ப எப்பவும் போல கிளம்பி வர்ற மாதிரி மண்டபத்துக்கு வந்தேன். ஆனா ரோஜாவோட டெத்தை நாங்க எதிர்பார்க்கலை.

வெங்கடேஷை விசாரிச்ச வரைக்கும், தேய்ஞ்சு போன டேப் ரிகார்டர் மாதிரி… எனக்கு எதுவும் தெரியாது. அன்னைக்கு நடந்த எதுவும் ஞாபகம் இல்ல. என்னைத் தப்பா புருஞ்சுக்கிட்டீங்கன்னு சமாளிச்சான்.

இதுல பியூட்டி என்னன்னா, அவனுக்கு என்னை அடையாளமே தெரியல. என்னைக் கடத்தும் போது போற வழி தெரியக்கூடாதுன்னு முகத்துல துணி எதையோ வச்சு மறைச்சுட்டானுங்க. பில்டிங்ல இறங்குனதும், என் முகத்துல இருக்குற துணியை எடுத்துட்டாங்க தான். ஆனா அவங்களை நான் நல்லா அடிச்சேன். அதுல சுருண்டானுங்க. என் முகத்தைக் கூட சரியா பாத்துருப்பானுங்களான்னு தெரியல. கண்ணு முன்னு தெரியாம ரெண்டு பேரையும் ஹர்ட் பண்றதுல தான் குறியா இருந்தானுங்க.

அப்பறம், டார்க் ரூம். அங்க யார் முகமும் எனக்குத் தெரியல. என் முகம் அவங்களுக்கு ஞாபகம் இருந்துதான்னு கூட தெரியல. வெங்கடேஷையும் விக்ரமையும் நான் விசாரிச்ச வரை, அவங்களுக்கு என்னை யாருன்னே தெரியல. ஆனா அந்தச் சம்பவத்துல இருந்தது அவங்க தான்னு ஒத்துக்கிட்டாலும், சுரேஷ் உங்கிட்ட சொன்ன மாதிரி தான்… இதைக் கிளறுன்னா என்னை கொன்னுடுவாங்கன்னு மிரட்டுனானுங்க” என்றாள் புருவம் சுருக்கி.

குறிஞ்சியோ, “எனக்கு ஒரு டவுட்… நீ மேட்ரிமோனி ப்ரொஃபைல் மூலமா அவங்களைக் கண்டுபிடிக்க முடியும்னு எப்படி நம்புன? ஹவ் இட் வொர்க்ஸ்?” எனக் கேட்டாள் கூர்மையாக.

“அவங்க என்னைக் கடத்தும் போதே அவங்க போட்டுருந்த பெர்ஃபியூம், ஷூ இதெல்லாம் ப்ராண்டடா இருந்தது.

அந்த பசங்க யூஸ் பண்ணிருந்தது ‘ஷுமுக்’ அப்படின்ற வெரி காஸ்ட்லி பெர்பியூம். 10 ஸ்டார் ஹோட்டல் கட்டுற விஷயமா அம்மா அப்போ அப்போ துபாய் ட்ரிப் போவாங்க. அங்க தான் எனக்கும் அந்த பெர்ஃபியூம் வாங்கிட்டு வந்தாங்க.

அதுலயே கூலிக்கு வேலை பார்க்குற ஆளுங்க இதை செய்யலைன்னு புரிஞ்சுது. ஒன்னு ரெண்டு வார்த்தையா இருந்தாலும் இங்கிலிஷ்ல பேசிக்கிட்டாங்க. சோ, கண்டிப்பா படிச்ச பசங்களா தான் இருக்கணும்னு எனக்குள்ள ஒரு தாட். அண்ட் அந்த ஐடி கார்ட். இது எல்லாம் ஜஸ்ட் கெஸ்ஸிங் தான்” எனச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே குறிஞ்சி நிறுத்தினாள்.

“ஒரு பெர்ஃபியூம் வச்சு எப்படி?” எனப் புரியாது பார்க்க,

“மிஸ் குறிஞ்சி, அந்த பெர்ஃபியூமோட காஸ்ட் நம்ம ஊர் காசுக்கு 10 கோடி” என விஸ்வயுகா கூறியதும் வாயில் கை வைத்தாள்.

“அவ்வா… ஒரு பெர்ஃபியூம்க்கு கோடிக்கணக்குல செலவு பண்ற நாட்டுல தான்டா நம்ம இருக்கோம்” என யுக்தாவிடம் குமுறிட, நந்தேஷ் முறைத்தான்.

அவனே பல வகையான பெர்பியூம் பாட்டில்களை அடுக்கி வைத்துள்ளானே. ஒவ்வொன்றும் இலட்ச ரூபாய்களை விழுங்கியவைகள்.

யுக்தா, “ம்ம்ம் மேல சொல்லு” என்று ஊக்குவித்தாலும், ஒரு வரி விடாமல் ஒவ்வொன்றையும் உள்வாங்கினான்.

விஸ்வயுகா குரலை சரி செய்து கொண்டு, “ஒன்னு அவங்க துபாய்ல இருந்து இங்க வந்தவங்களா இருக்கணும். இல்லன்னா இந்தியால 10 கோடிக்கு பெர்பியூம் வாங்குற அளவு வொர்த்தா இருக்கனும். அதை வச்சு தான் எங்களோட தேடுதல் வேட்டையை ஸ்டார்ட் பண்ணுனோம்.

எனக்கு அந்தப் பசங்களோட வாய்ஸ் கேட்டா அடையாளம் கண்டுபிடிக்க முடியும்னு தோணுச்சு. ஐடி கார்ட் வச்சும் அவங்களைத் தேடிப் பார்த்தோம். நிறைய தகவல் தேவைப்பட்டுச்சு. அப்போ, எங்களுக்கு இருந்த ஒரே துருப்புச்சீட்டு. வீட்டளவுல வெப்சைட் மூலமா நாங்க ஆரம்பிச்ச அந்த பிசினஸ் தான்.

அபர்ணாவோட இறப்புக்கு அப்பறம், இந்த பிசினஸை அம்மா கன்டின்யூ பண்ண வேணாம்னு சொல்லிட்டாங்க. நடக்க இருந்த முதல் கல்யாணமே இறப்புல முடிஞ்சதுல எங்களுக்கும் தயக்கம் தான். அதனால அப்போதைக்கு வேற பிசினஸ் ஸ்டார்ட் பண்ற ஐடியால தான் இருந்தோம். இந்த சம்பவத்துக்கு அப்பறம், நிறைய ப்ரொஃபைல் நிறைய காண்டாக்ட் கிடைக்கணும்னா இதே பிசினஸை டெவலப் பண்ணனும்னு தோணுச்சு. ஒரு பையனோட ப்ரொஃபைல் எடுத்தா, அவனைப் பத்தின மொத்த டேட்டாவை கலெக்ட் பண்ணிடுவோம். அவன் கூட யார் படிச்சா, இப்ப அவங்க என்ன பண்ணிட்டு இருக்காங்க. நடந்த சம்பவத்து அன்னைக்கு அவங்க என்ன பண்ணிருப்பாங்க… இப்படி நாங்களே ஒரு டீமை உருவாக்கி, அக்கு வேறு ஆணி வேறா பிரிக்க ஆரம்பிச்சோம்.

ஒருவேளை பெரிய இடத்துப் பசங்களா இருந்தா, கண்டிப்பா மேட்ரிமோனில ரெஜிஸ்டர் பண்ணுவாங்க. எங்க ஆப்ல வெரி ஹை ப்ரொபைல்க்கும் தனி ஸ்பேஸ், தனி பிரீமியம் ஆப்ஷன் எல்லாமே இருக்கு, அதை கொண்டு வந்ததே அந்த மாதிரி ஆளுங்களும் இதுல ரெஜிஸ்டர் பண்ணனும்னு தான். பொதுவா என் அம்மாவோட இன்ஃப்ளூயன்ச எனக்கு யூஸ் பண்ண பிடிக்காது. பிசினஸ் ஸ்டார்ட் பண்ண நினைச்சப்ப கூட எனக்கு அவங்க மூலமா முன்னுக்கு வரணும்னு ஐடியா இல்ல. ஆனா, எங்க பிசினஸை டெவெலப் பண்ணுனா மட்டும் தான், நாங்க நினைச்ச இலக்கை அடைய முடியும்னு புருஞ்சு, என் அம்மாவோட இன்ஃப்ளூயன்ச யூஸ் பண்ணி, நிறைய இன்வெஸ்ட் பண்ணி, இப்ப நம்பர் ஒன் பொசிஷன்ல வச்சிருக்கோம். அது கெட்டாலும் பரவாயில்லன்னு தான் வெங்கடேஷோட தகவல் முதல்முறை எங்களுக்கு வந்தப்ப, அவனைக் கல்யாணம் அன்னைக்கே முடிக்க பிளான் பண்ணுனோம்” என்றாள் கண்ணில் தீவிரத்துடன்.

இப்போது குறிஞ்சி நந்தேஷைப் பார்த்து, “அப்போ நீ உன் ஃபியான்ஸ் கல்யாணம் பண்ண போறதுக்காக சோகமா இல்ல. உன் ஃபியான்ஸோட ஃபியான்ச போட்டுத் தள்ளப் போற சோகத்துல தான் சோகமா இருந்தியா?” என வெகு முக்கிய கேள்வியைக் கேட்க, அசடு வழிந்து ஆமோதிப்பாக தலையாட்டினான்.

ஷைலேந்தரியோ, “இந்த நாய வச்சு இவ்ளோ பிளான் பண்ணுனா, ரோஜாவைப் பத்தி சொல்லவே இல்ல. நானே இவன் மூஞ்ச வச்சு தான் கண்டுபிடிச்சேன். அப்பறம் ரோஜா இறப்புக்கும் இவன் குமுறி குமுறி அழுகுறதை நிறுத்த வைக்கிறதுக்குள்ள உசுரு போய்டுச்சு” என்றாள் நெஞ்சில் கை வைத்து.

யுக்தா இன்னும் யோசனையில் மூழ்கி இருக்க, “வெங்கடேஷை எக்ஸ்சாக்ட்டா எப்படி ஃபைண்ட் அவுட் பண்ணுன?” எனக் கேட்டதும்,

விஸ்வயுகா, “அதே பெர்ஃபியூம் வச்சு தான் யுக்தா. அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி யாரெல்லாம் பெர்ஃபியூம் வாங்கி இருக்காங்கன்னு சர்ச் பண்ணுனோம். சிலர் பிளாக் மணில வாங்குவாங்க. சோ எங்களுக்கு சரியான தகவல் கிடைக்கல. ஆனா வெங்கடேஷ் அவன் கல்யாணத்துக்காக ரோஜாவுக்கு கிஃப்ட் குடுக்க திரும்ப அதே பெர்பியூம் வாங்குனான். அப்ப தான் சிக்குனான்.

அவன் வாங்குன டீலர் வச்சு அவன் எப்பலாம் வாங்கிருக்கான்னு தேடுனோம். சரியா அவன் காலேஜ் ஃபைனல் இயர் படிக்கும் போது வாங்கிருக்கான். எங்களைக் கடத்துன அன்னைக்கு அவனுக்கு காலேஜ்ல ஃபேர்வெல் நடந்துருக்கு. அன்னைக்கே குடிச்சுட்டு காலேஜ்ல தகராறு பண்ணிருக்கான். எதிர்க்கட்சி எக்ஸ் மினிஸ்டரோட பையன். அந்த டைம்ல பவர்ல இருந்துக்காரு.

சோ இவன் மேல எந்த கேசும் ஃபைல் பண்ணல. அன்னைக்கு ஈவ்னிங்கு மேல ஆள் அப்ஸ்காண்ட். மறுநாள் எப்போதும் போல வீட்டுக்கு வந்துருக்கான். அந்த ஃபுட் ஏஜை கஷ்டப்பட்டு எடுத்தோம். அதுல சேம் ஷு, சேம் பாடி லாங்குவேஜ். ஒரு எய்ட்டி பெர்சன்ட் அவன் தான்னு எனக்கு தெரிஞ்சுடுச்சு. ஆனா வாய்ஸ் வச்சு எனக்கு ஒரு குழப்பம் இருந்துட்டே இருந்துச்சு.

பட், அவனை ஃபாலோ பண்ணும் போது தான் தெரிஞ்சுது, அவன் நிறைய பொண்ணுங்களை அபியூஸ் பண்ணிட்டு இருந்துருக்கான்னு. அவனா இருந்தா என்ன இல்லைன்னா என்ன, அந்த ஜென்மமெல்லாம் உயிரோட இருக்க வேணாம்னு தைரியமா பாய்சன் பண்ணுனோம். பட், அந்தக் கடத்தலைப் பத்தி பேசுனதுமே திருதிருனு முழிச்சான். அப்பவே எனக்கு 100 பெர்சன்ட் உறுதி ஆகிடுச்சு. மே பி அன்னைக்கு அந்த ஆறு பேருமே அதே பெர்பியூம் யூஸ் பண்ணிருக்கணும். அதனால தான் இவன் ரேப்ல சம்பந்தட்டவன்னு நினைச்சுட்டேன். இதே தான் விக்ரம் டெத்க்கும் நடந்துச்சு. ஆனா குறிஞ்சி உன் பிரெண்டுன்னு எதிர்பார்க்கலை” என நீண்ட விளக்கத்துடன் முடிக்க அவ்வறையில் பலத்த அமைதி.

“ஓகே… பட் அவங்க எல்லாம் ஒரே காலேஜும் இல்ல. ஒரே ஸ்கூலும் இல்ல. பேமிலி பிரெண்ட்ஸும் இல்ல. ஆனா எங்கயோ கனெக்ட் ஆகிருக்காங்க. வில் ஸீ!” காயம் படாத ஒரு கையால் புருவத்தை நீவிக்கொண்டவனுக்கு அழைப்பு வர, அவ்வழைப்பில் “வாட்?” என அதிர்ந்து விட்டு,

“ஓகே அருண். ஐ ஆம் ஆன் தி வே. அருண் பீ கேர்புல். ஹாஸ்பிடல்ல டைட் செக்கியூரிட்டி இருக்கட்டும். போலீஸ் ப்ரொடெக்ஷன் இருந்தாலும் நம்ம எப்பவும் அலெர்ட்டா இருக்கணும்” எனச் சொல்லிக்கொண்டே எழுந்தான்.

கையில் மறக்காமல் விஸ்வயுகாவுடைய மெடிக்கல் ரிப்போர்ட்டை எடுத்துக்கொண்டு, மைத்ரேயனைப் பார்த்தவன், “அபர்ணாவுக்குப் பார்த்திருந்த மாப்பிள்ளை உன் ஸ்கூல் சீனியர்னு தான சொன்ன. அவன் பேமிலி, ப்ரெண்ட்ஸ் சர்க்கிள் பத்தின டீடெய்ல்ஸ குறிஞ்சிகிட்ட குடு” என்றதும்,

“ஆனா அவன் சூசைட் பண்ணிக்கிட்டானே யுக்தா” என்றான்.

“அது சூசைட்னு நான் இன்னும் கன்ஃபார்ம் பண்ணல” என்றவன் குறிஞ்சியிடம் திரும்பி, “டீடெய்ல் வாங்கிடு” என உத்தரவாகக் கண்ணைக் காட்டி விட்டு, விஸ்வயுகாவை நிமிர்ந்து பாராமல் விறுவிறுவென வெளியில் சென்று விட்டான்.

அவன் சென்றதையே வெறித்தவள், அவனது உருவம் மறைந்தபின்னும் அதே திசையையில் பார்வையை படர விட்டாள்.

குறிஞ்சியோ எழுந்து நின்று நெட்டி முறித்து, “ஓகே கைஸ்… வாங்க வாங்க!” என ஏதோ டூர் செல்வது போல அழைக்க, நந்தேஷ் “எங்க?” என்றான் குழப்பமாக.

“அபர்ணாவோட பியான்ஸ் டெத்ல இருந்து ஸ்டார்ட் பண்ணி நம்ம பியான்ஸ் டெத் வரைக்கும் இன்வெஸ்டிகேட் பண்ணனும்ல. கமான் கைஸ்!” என குளிர்கண்ணாடியை மாட்டிக்கொண்டு அழைத்தவளை நால்வரும் ‘பே’ வென பார்த்தனர்.

அத்தியாயம் 57 

லைஃப்லைன் மருத்துவமனை பரபரப்புடன் காட்சியளித்தது.

அருண் வாசலிலேயே நின்று யுக்தாவை வரவேற்றான் பதட்டத்துடன்.

“சார்… ஜோடி மேட்ரிமோனி மூலமா ரெண்டு நாள்ல கல்யாணத்தை எதிர்பார்த்துட்டு இருந்த பொண்ணுக்கு சடன் ஹார்ட் அட்டாக். பேர் தேவிகா. மயங்கி விழுந்ததும் ஹாஸ்பிடல்க்கு கூட்டிட்டு வந்துட்டாங்க. மேட்ரிமோனி ரிலேட்டடா வர்ற கேஸை டைரக்டா நமக்கு ஃபார்வர்ட் பண்ண சொன்னதுனால ராயப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து இன்ஸ்பெக்டர் சோமன் நமக்கு தகவல் அனுப்பி இருந்தாரு” அருணின் பேச்சுக்களைக் கேட்டபடி வேக நடையுடன் ஐசியூ வார்டை அடைந்தான் யுக்தா சாகித்யன்.

“எப்படி ஆச்சு?” ஐசியூ கதவின் ஓட்டை வழியே உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பெண்ணின் மீது பார்வையை செலுத்தியவாறு கேட்டான்.

“அவங்களுக்கு ஸ்கின் அலர்ஜி ஆகியிருக்கு சார். அது எக்ஸ்ட்ரீம் லெவலுக்குப் போயிருக்கு. திடீர்னு ஸ்வெட் ஆகி, கை காலெல்லாம் நடுங்கிடுச்சாம். இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் எங்கேஜ்மெண்ட் முடிஞ்சு இருக்கு.”

“ஸ்கின் அலர்ஜி…” இதற்கு முன் நடந்த பெண்களின் இறப்பிற்கும் இப்படியான காரணம் சொன்னதாக நினைவு.

“அவங்க யூஸ் பண்ணுன ட்ரெஸ், மேக் அப் செட்ஸ், ஆர்னமெண்ட்ஸ் எல்லாத்தையும் செக் பண்ணுங்க. ரைட் நொவ்!” எனக் கட்டளையிட்டதும் “ஓகே சார்” என்ற அருண் அலைபேசியை எடுத்துக்கொண்டு தனியே சென்றான்.

ஒரு மணி நேரம் கடந்தும் அப்பெண்ணின் உடல்நிலையில் மாற்றமில்லை.

மருத்துவர் ஐசியூவில் இருந்து வந்ததும் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு “பேஷண்டை பார்க்கலாமா டாக்டர்?” எனக் கேட்டான் யுக்தா.

“நோ சார். ஹெவியா எதுவோ அஃபெக்ட் ஆகியிருக்கு அவங்களுக்கு. அவங்களால நார்மலா மூச்சு விட முடியல. அவங்க உடம்பெல்லாம் திட்டு திட்டா இரத்தம் கட்டிப் போகுது. ஆனா கம்ப்ளீட்டா செக் பண்ணியும் எதனால அவங்களுக்கு இப்படி ஆகுதுன்னே ஃபைண்ட் அவுட் பண்ண முடியல. ஹார்ட் பீட் ரைஸ் ஆகுது, அப்பறம் அப்படியே டௌன் ஆகிடுது. வெரி ரேர் கேஸ் சார். கொஞ்சம் டைம் குடுங்க. ஐ வில் டூ மை பெஸ்ட்” எனச் சொல்லிச் சென்றதும் யுக்தா “ப்ச்” என பின்னந்தலையைக் கோதினான்.

—-

ஈக்காட்டுத்தாங்கல் தாண்டி அமைந்திருந்தது மைத்ரேயனின் பள்ளி சீனியரான தரணியின் வீடு.

விசாலமான டியூப்லெக்ஸ் வீடு தான்.

“இந்த வீடு தானா?” காரில் அமர்ந்தபடியே மைத்ரேயனிடம் கேட்டு தெளிவு படுத்திக் கொண்டாள் குறிஞ்சி.

“சரி உள்ள போலாம். முதல்ல நீ போய் பேச்சுக்குடு” என்றதும் மைத்ரேயன் விழித்தான்.

“திடீர்னு போய் என்ன பேசுறது?”

“ம்ம்ம் செத்தவனுக்கு ஆதார் கார்டு எடுத்தாச்சான்னு கேளேன்” குறிஞ்சி முறைத்தாள்.

“படுமொக்கை” என முனகிக்கொண்டே நந்தேஷ் மைத்ரேயனை இழுத்துச் சென்றான்.

“உன்னை விட மொக்கை இல்ல” அவளும் முணுமுணுத்துக் கொண்டாள்.

அழைப்பு மணி அடித்த சில நிமிடங்களில் வயதான பெண்மணி ஒருவர் கதவைத் திறந்தார்.

மைத்ரேயன், “வணக்கம்மா. நான் தரணியோட ஸ்கூல்மேட்” என்றதும் முணுக்கென அப்பெரியவரின் விழிகள் நீரால் நிரம்பியது.

“அவன் எங்களை விட்டுப் போய் பல வருஷம் ஆச்சேப்பா. உனக்குத் தெரியாதா?” கண்ணைத் துடைத்தபடி அவர் கூற,

“தெரியும்மா. அப்போ என்னால வரமுடியல. இப்போ தான்…” என்றதும் வாசலில் பெண்களும் நிற்பதை பார்த்து விட்டு “உள்ள வாங்க” என்று அழைத்தார்.

விஸ்வயுகா ஏதோ யோசனையிலேயே இருக்க, அவர் அழைத்தும் உள்ளே வராமல், “நீங்க விசாரிச்சுட்டு வாங்க. ஐ ஹேவ் டூ கோ” எனக் குறிஞ்சியிடம் அவளது காரின் சாவியை வலுக்கட்டாயமாகப் பிடுங்கிக் கொண்டு பறந்து விட்டாள்.

“ஏய் ஏய் என் காரு…” எனக் குறிஞ்சி கத்த, ஷைலேந்தரி “இவ்ளோ அவசரமா இவள் எங்க போறா?” எனத் தலையைச் சொறிந்தாள்.

காரில் போகும்போதே அவள் கரங்கள் தானாக யுக்தாவின் எண்ணிற்கு அழைத்தது.

தேவிகாவின் குடும்பத்தினரிடம் விசாரணையில் இருந்தவன், அழைப்பு வந்தது தெரிந்தும் ஏற்காமல் பாக்கெட்டில் வைக்க, மீண்டும் இரண்டு மூன்று முறை அழைத்திருந்தாள்.

முழுதாய் விசாரணையை முடித்தபிறகே அவளுக்கு மீண்டும் அழைத்தவன், “ம்ம்” என்றிட,

“போன் பண்ணுனா எடுக்க மாட்டியா?” அதட்டலுடன் ஒலித்தது அவள் குரல்.

அவனிடம் அமைதி தென்பட, “எங்க இருக்க?” என்றாள் அவளே.

“ஹாஸ்பிடல்ல!”

“என்ன ஆச்சு? என் அம்மாவோட ஆளுங்க உன்னை அடிச்சுப் போட்டுட்டாங்களா என்ன?” சிறிதான பதற்றம் அவளிடம்.

“ஆமா ஆமா வந்து அள்ளிட்டுப் போ…” என அழைப்பைத் துண்டித்தவன், லொகேஷனை அனுப்பி விட்டு மீண்டும் விசாரணையில் இறங்கினான். அதுவரையிலும் தேவிகாவின் உடல்நிலையில் சிறிதும் மாற்றமில்லை.

அடுத்த சில நிமிடங்களில் விஸ்வயுகா மருத்துவமனைக்கு வந்து விட, அங்கு ஐசியூ வாசலில் நின்றிருந்த ஆடவனை உச்சி முதல் பாதம் வரை ஒரு முறை முழுதாய் அளந்து முடித்த பிறகே, அவனே அறியாது சீரற்று துடிக்கும் இதயம் சீராகியது.

அவனருகில் வரும்போதே அவள் இயல்பிற்குத் திரும்பியிருக்க, “இன்னும் முழுசா தான் இருக்கியா?” என நக்கலாகக் கேட்டாள்.

“உன் அம்மாவோட ஆளுங்களை எல்லாம் அடிச்சு புத்தூர் கட்டுப் போட அனுப்பியாச்சுடி பொண்டாட்டி. இருக்குற பிரச்சினைல அவ வேற குறுக்கும் மறுக்குமா ஓடிட்டு இருக்கா. என் கையால தான் சாவா. ஆனா கேஸ் முடியட்டும்னு பாக்குறேன்” என்றவனுக்கு விவரிக்க இயலாத கோபம் எழுந்தது.

மருத்துவமனைக்கு வரும்போதே சிவகாமி அனுப்பிய ஆள்கள் அவனைத் தாக்க முயல, அவர்களை தர்ம அடியுடன் துரத்தி துரத்தி அடித்து விட்டே வந்திருக்கிறான்.

தாயைப் பற்றி பேசியதும் அவள் முகம் இறுக, பதிலேதும் சொல்லாமல் தீக்காயம் பட்டு பொங்கிப் போய் இருந்த அவனது உள்ளங்கையைப் பார்த்தாள்.

பின், ஒரு தாதியரை அழைத்து ஏதோ பேசியவள், சற்று தள்ளி நின்று கொண்டாள். அவள் கூறியதில் ஒரு தாதியர் வந்து அவனது காயத்திற்கு மருந்திட்ட முற்பட,

“டாக்டரை ஒரு தடவை பார்த்துடுங்க சார். கொஞ்சம் ஆழமா இருக்கு. எப்படி தீக்காயம் பட்டுச்சு” என கேட்டார்.

அவர் பிடித்த கையை வலுக்கட்டாயமாகப் பின்னிழுத்தவன், “இங்க என் டியூட்டியைப் பார்க்க தான் வந்துருக்கேன். ட்ரீட்மெண்ட்க்கு இல்ல” என்று திட்டவட்டமாக உரைத்தவன், விஸ்வயுகாவை அழுத்தத்துடன் முறைத்து விட்டு நகர்ந்து நின்றான்.

தாதியர் செய்வதறியாமல் விஸ்வயுகாவைப் பார்த்து விட்டு அடுத்த நோயாளியைப் பார்க்க நகர,

அவனருகில் வந்து நின்றவள், “எதுக்கு ஓவரா பண்ற? உன் மேல இருக்குற அக்கறையில ஒன்னும் நர்ஸை கூப்பிடல. கில்லரைக் கண்டுபிடிச்சு என்கவுண்டர் பண்ணும் போது இந்தக் காயத்தால டிஸ்டர்ப் ஆகி, வேற எங்கயாவது சுட்டுட்டா. வேலை முடியவும், உன் கையை தனியா கூட கழட்டி வச்சுக்கோ ஐ டோன்ட் கேர்” என்றாள் தோளில் விழுந்த முடியைச் சிலுப்பியபடி.

அந்நேரம் ஐசியூவில் இருந்த நர்ஸ் அவசரமாக மருத்துவரை அழைக்க ஓட, அங்கு திடீர் பரபரப்பு.

“என்ன ஆச்சு?” யுக்தா கேட்கும்போதே தேவிகாவின் வீட்டினரும் அங்கு சுற்றி வளைக்க, மருத்துவர் ஐசியூவிற்குச் சென்று சில நிமிடங்கள் கடந்தும் வரவில்லை.

யுக்தாவிற்கு அழுத்தம் தலைக்கேறியது. எப்போதும் எந்த வழக்கும் அவனை இப்படி சோதித்ததில்லை.

இறப்பிற்கான காரணம் கூட தெரியாமல் அல்லாடவிட்டதில்லை. மருத்துவர் வெளியில் வந்ததுமே பதறிப்போய் பெண்ணைப் பெற்ற வீட்டார் கேட்ட கேள்விகளுக்கு “இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது” என்று முடித்துக் கொண்டவர், “சார் ரூம்க்கு வாங்க” என்று மெல்லமாகச் சொன்னார்.

அவன் பின்னே விஸ்வயுகாவும் செல்ல வாசற்கதவில் நின்று விட்டவன், “நீ ஏன் வர்ற?” என்றான் விழி இடுங்க.

“அந்தப் பொண்ணுக்கு என்ன ஆச்சுன்னு தெரிஞ்சுக்கணும்ல…”

“இது கான்ஃபிடென்ஷியல்!” என அவன் மறுத்ததில், சுற்றி முற்றி பார்த்தவள், “நான் நிறைய ஸ்லோ பாய்சன் பத்தி ரிசர்ச் பண்ணிருக்கேன். இந்தப் பொண்ணுக்கு என்ன ஆச்சுன்னு தெரிஞ்சா ஐ கேன் ஹெல்ப் யூ!” தன்மையாகவே பதில் அளித்தாள்.

“ம்ம்” என்ற உறுமலுடன் அவன் உள்ளே செல்ல, “ரொம்பத்தான்” என முணுமுணுத்துக் கொண்டாள்.

மருத்துவர் ஏதோ ஒரு சிந்தனையில் அமர்ந்திருக்க, யுக்தாவைக் கண்டதும் “ப்ளீஸ் பீ சீட்டட் சார்” என்றார்.

இருவரும் அமர்ந்ததும், “என்ன ஆச்சு டாக்டர். எனி க்ளூஸ்?” யுக்தா வினவியதில்,

“என்ன ட்ரீட்மெண்ட் குடுக்குறதுன்னே தெரியல சார். உடம்புல பாய்சன் ஏறுனதுக்கான அறிகுறியே இல்ல. ஆனா சடனா ஹார்மோன்ஸ் லெவல் மாறுது. திடீர்னு மூச்சு அடைக்குது. அப்பறம் கொஞ்ச நேரம் நார்மல் ஆகிடுது. இப்போ கூட வெண்டிலேட்டர் எடுத்துட்டா ஷீ கேன்னாட் சர்வைவ்.” என்றார் பெருமூச்சுடன்.

“வெண்டிலேட்டர் மூலமா தான் அவங்க மூச்சு விடுறாங்க. இனி அதை வச்சு ப்ரோயஜனமில்லை” அஸ்வினியின் நினைவில் அவன் இரத்தம் கொதித்தது.

கண்கள் சூடேறி சிவந்து கலங்க, “அந்தப் பொண்ணு எப்படியாவது பொழைச்சு வரணும் டாக்டர். அவள் மூலமா தான் கில்லரை கண்டுபிடிக்க முடியும். ஸ்பெஷலிஸ்ட்ட வர சொல்லுங்க” என்றான்.

“நான் ரெண்டு மூணு பேரை கான்டேக்ட் பண்ணிருக்கேன் சார். கண்டிப்பா என்னால முடிஞ்ச அளவு ட்ரை பண்றேன்”

இருவரும் மருத்துவர் அறையில் இருந்து வரும்போது தான், அருணும் அங்கு வந்து சேர்ந்தான்.

“சார்…” என அவன் முன் விறைப்பாக நின்றவன், “நீங்க சொன்ன எல்லாமே செக் பண்ணியாச்சு சார். எதுவும் சஸ்பீஷியஸா இல்ல. என்கேஜ்மென்ட் அப்போ கூட அந்தப் பொண்ணு எதுவுமே சாப்பிடலன்னு சொல்றாங்க. உடம்புல காயம் கூட எதுவும் இல்ல” என்றதும் கண்ணை மூடி நெற்றிப்பொட்டில் தட்டி சிந்தித்தான்.

“எங்க எங்க போனான்னு விசாரிங்க. இதுக்கு முன்னாடி இறந்து போன பொண்ணுங்களும் எங்க எங்க பர்சேஸ் போனாங்க. எங்க சாப்டாங்க எல்லாத்தையும் விசாரிங்க” என்றதும், அருண் தயங்கினான்.

“சார் ஆல்ரெடி நம்ம எல்லாமே விசாரிச்சுட்டோம். சிங்க் ஆகுற மாதிரி எதுவும் கிடைக்கல. பொண்ணுங்க வாயில நுரை தள்ளி இறந்து போனது தான் ஒரே மாதிரி இருக்கு. அவங்க இறப்புக்கான காரணம் கூட ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கு. நோ எவிடன்ஸ், நோ விட்னஸ், நோ க்ளூஸ். அண்ட் சென்ட்ரல்ல இருந்து இதை எல்லாம் சூசைட் கேஸாவே முடிக்க சொல்றாங்க சார். டெல்லில நீங்க ரௌடீஸ வாஷ்அவுட் பண்ண எடுத்துக்கிட்ட ப்ராஜக்ட் இன்னும் 20 பெர்சன்ட் அப்படியே இருக்கு. என்கவுண்டர் லிஸ்ட் கூடிட்டே போகுதுன்னு ப்ரெஷர். உங்களை அங்க ஜாயின் பண்ண சொல்றாங்க” என்று அவன் பேசி முடிக்கும் வரையிலும் அவன் கண்ணைத் திறவாமல் நெற்றிப்பொட்டில் தட்டிக்கொண்டே இருந்தான்.

“நம்ம மூணு முன்ன தான ஆக்டிவிடீஸ் கலெக்ட் பண்ணுனோம். வேணாம், ஒரு மாசம் முன்ன வரை அவங்களோட ஆக்டிவிடீஸ் எல்லாம் கலெக்ட் பண்ணு. இன்வைட் பண்ணுன ப்ரெண்ட்ஸ், கெட் டு கெதர், ப்ரெண்ட்ஸ் பார்ட்டி இப்படி ஒன்னு விடாம எனக்கு தகவல் வரணும். கண்டிப்பா… கண்டிப்பா அதுல ஏதோ ஒரு க்ளூ கிடைக்கும். சின்னதா ஒன்னு கிடைச்சா கூட போதும். ஐ வில் ஃபைண்ட் ஹிம்” என்றவனின் முகத்தில் ஆத்திரம் தாண்டவமாடியது.

“நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான்…” என்ற பாடலின் இசையை விசிலடித்தபடியே பாடிய அந்த மனிதனின் இதழ்களில் ஏளனப் புன்னகை.

“சின்ன க்ளூ இல்ல. பெரிய க்ளூ கிடைச்சா கூட… நான்… உனக்கு கிடைக்க மாட்டேன் யுக்தா. நீ எவ்ளோ ட்ரை பண்ணுனாலும் தேவிகாவைக் காப்பாத்த முடியாது. லெட்ஸ் வெய்ட் பார் யுவர் ஏஞ்சல் டர்ன்!!!” என்றவனின் கரங்கள் ஒரு புகைப்படத்தை எடுக்க, அதில் அழகிய இளம்பெண் புன்னகை முகத்துடன் காட்சியளித்தாள்.

அந்தப் புகைப்படத்தை சுவரில் இருந்த அறிவிப்பு பலகையில் மாட்டி பின் செய்து விட்டு, “இந்தப் பொண்ணோட உயிரை டேஸ்ட் பார்த்துட்டு, உன் கூட இருக்குற மூணு பொண்ணுங்களோட உயிரையும் டேஸ்ட் பார்த்துடுறேன் யுக்தா. அதுக்குள்ள என்னைக் கண்டுபிடிக்க முடியுமா? ப்ச் ரொம்ப திணறுற. உனக்காக அடுத்த வதத்துல ஒரு க்ளூ விட்டுட்டுப் போறேன். கண்டுபிடிக்க முடியுதான்னு பாரேன்… ஹா ஹா ஹா…” என வெடித்துச் சிரித்தவன்,

“கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்!
நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது…”
என்ற பாடலின் இசையை விசிலடித்து ஒலி எழுப்பினான்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
28
+1
123
+1
3
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்