அத்தியாயம் 51
கீழே விழுந்து கிடந்தவனை என்ன செய்வதென்று தெரியாமல் மூவரும் விழிக்க, “என்ன சத்தத்தையே காணோம்” என்ற எண்ணத்தில் கண்ணைத் துடைத்துக்கொண்டு உள்ளே வந்து பார்த்த விஸ்வயுகா தலையில் அடித்துக் கொண்டாள்.
“சைக்கோ… குடிச்சுட்டு என் ரூம்ல விழுந்து கிடக்குறான்!” எனக் காய்ந்திட, “விஸ்வா என்ன சத்தம்” என்றபடி மோகன் மாடியேறி வருவது தெரிந்தது.
“அய்யயோ பெரியப்பா வர்றாரு” எனப் பதறிய ஷைலேந்தரியிடம் “நீ போய் அவரை சமாளி” என்றான் மைத்ரேயன்.
“டிஃபிகல்ட் டாஸ்க் எல்லாம் எனக்கே குடுங்கடா” எனப் புலம்பியபடி வெளியில் சென்றாள். பெரியவர்கள் அனைவர்க்கும் கீழறைகள் ஒதுக்கப்பட்டிருக்க மாடி முழுவதிலும் இளையவர்களுக்கே அறைகள் முழுதும் ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கேயே ஜிம், பிரைவேட் ஸ்விம்மிங் பூல், டேபிள் டென்னிஸ் ரூம், நூலகம், மெடிடேஷன் அறை என ஒவ்வொன்றிற்குமாக பிரித்து வைத்திருந்தனர். பெரியவர்கள் உபயோகித்துக் கொள்ள கீழேயே அனைத்தும் தனி தனியாக இருப்பதில், யாரும் மாடிக்கு வந்து அவர்களது பிரைவேட் ஸ்பேஸில் தலையிடுவது இல்லை. அஸ்வினி இருந்தவரை அவர் மட்டுமே மாடிக்கும் கீழறைக்குமாக அல்லாடுவார்.
அவசரமாக பாதி படியிலேயே மோகனைத் தடுத்த ஷைலேந்தரி, “என்னாச்சு பெரிப்பா. ஏன் கத்திகிட்டே வர்றீங்க” என இளித்து வைத்தாள்.
அவரை முறைத்தவர், “நான் கத்துறேனா? மேல இருந்து தான் சத்தம் கேட்டுக்கிட்டே இருக்கு. என்ன செய்றீங்க?” என்றார் மாடியைப் பார்த்தபடி.
“அது ஒன்னும் பெரியப்பா, சும்மா தான் பேசிட்டு இருந்தோம். விஸ்வூ டிஸ்டர்ப்டா இருந்தா அதான்…” என முகத்தில் ஒரு டஜன் சோகத்தை வழிய விட, அவரும் “சரி சரி அவளை சீக்கிரம் தூங்க சொல்லு. எதையும் போட்டுக் குழப்பிக்காதீங்க” என்றவருக்கும் மகளின் நிலையில் வருத்தம் தான் என்றாலும், சிவகாமியின் கட்டளைக்கு கீழ்படிந்தே அவரது பெற்றோர் அவரைப் பழக்கி விட்டதில், அவருக்கும் இதில் முடிவெடுக்க இயலாத நிலை.
“ஹப்பாடா…” என அவள் மீண்டும் மாடிக்குச் செல்ல, அங்கு நந்தேஷ் “இவனை என்ன செய்றது விஸ்வூ. தூக்கிட்டுப் போகலாம்னா, ஆல்ரெடி நம்ம சத்தத்துல எல்லாரும் அலெர்ட் ஆகிருப்பாங்க. அம்மா பார்த்துட்டா அவ்ளோ தான்…” என யோசித்தான்.
யுக்தாவையே சில நொடிகள் பார்த்த விஸ்வயுகா, “அவனை என் பெட்ல படுக்க வை!” என்றாள்.
“ஹான்? நான் வேணா இவனைத் தூக்கிட்டுப் போய் என் ரூம்ல படுக்க வச்சுக்கவா” நந்தேஷ் விழித்தபடி கூற, “அவன் என்ன டெடி பியரா ஆளாளுக்கு வச்சுக்குறதுக்கு…” என முறைத்தான் மைத்ரேயன்.
நந்தேஷோ கமுக்கமாக சிரித்து, “உன் பொண்டாட்டி வந்தா என் க்ரஷை நான் பத்திரமா பாத்துக்குறேன்னு அவளே தூக்கிட்டுப் போனாலும் போவா” என்றதில் மிரண்ட மைத்ரேயன், “அவள் செய்யக்கூடியவ தான்” என்றதில் மெலிதான சிரிப்பலை எழுந்தது.
“என்ன இங்க ஒரே சிரிப்பா இருக்கு என் ஹேண்ட்ஸம் கை என்ன குரங்கு வித்தையா காட்டிட்டு இருக்கான்…” எனக் கேட்டபடி ஷைலேந்தரி உள்ளே வர, விஸ்வயுகா அவளை முறைத்து “மூடுடி” என சைகையும் காட்டி விட்டு “டேய் அவனை இங்க படுக்க வச்சுட்டுக் கிளம்புங்க” என்றாள்.
அதில் வேறு வழியற்று யுக்தாவை இரு ஆடவர்களும் தூக்கி கட்டிலில் படுக்க வைத்தனர். ஷைலேந்தரி யுக்தா சொன்னது போன்றே, சிந்திய மதுபானத்தைச் சுத்தம் செய்திட, நந்தேஷும் உடைந்து கிடந்த பாட்டிலை மெல்லமாக எடுத்தான்.
“இவனால என்ன என்ன வேலையெல்லாம் பார்க்க வேண்டியது இருக்கு” எனப் புலம்பியவர்களுக்குத் தெரியவில்லை அவர்களை இன்னும் பல குரங்கு சேட்டைகளை செய்ய வைக்கப் போகிறானென்று.
வேலையை முடித்து விட்டு நந்தேஷ், “நீ வேணும்னா என் ரூம்ல படுத்துக்கோயேன். நான் இங்க படுத்துக்குறேன்” என்றதும் அவனை முறைத்தவள், விழிகளாலேயே வெளியில் செல்லும்படி பணிக்க,
ஷைலேந்தரி தான் “அக்கா… என்ன இருந்தாலும் ஒரு ஆம்பளைப் பையன் இருக்குற ரூம்ல உன்னைத் தனியா விட என் அடிமனசு விரும்ப மாட்டேங்குது. நானும் இதே ரூம்ல அதோ அந்த சோஃபால உட்காந்துக்கிட்டே திஸ் ஹேண்ட்ஸம் கை ஒழுங்கா தூங்குறானான்னு பார்த்து உனக்கு அப்டேட் பண்றேனே” என அடக்க ஒடுக்கமாக நின்று கேட்டதில்,
மைத்ரேயன் அவளது கழுத்தைப் பிடித்து, “அவள் முதல்ல வெளில போக சொன்னதே உன்னையைத் தான். வாடி உனக்கு இருக்கு” எனத் தரதரவென தனது அறைக்கு இழுத்துச் சென்றான்.
அறைக்கு வந்தும் கழுத்தை விடாதவனிடம் இருந்து வலுக்கட்டாயமாக விலகிய ஷைலேந்தரி, “எதுக்குடா இப்படி பிடிக்கிற…” என வலித்த கழுத்தை மூக்கைச் சுருக்கித் தடவிக்கொண்டாள்.
“நீ ரொம்ப ஓவரா போற ஷைலா. உனக்குக் கல்யாணம் ஆனது ஞாபகம் இருக்கா இல்லையா? என்னைத் தவிர ஊர்ல இருக்குற எல்லாரையும் சைட் அடிக்கிற நீ…” என்றான் மூச்சுவாங்க.
“ஏன் ஏன் ஏன்… நீங்கள்லாம் கல்யாணம் ஆனதுக்கு அப்பறம் சைட் அடிக்கவே மாட்டீங்களா. உங்களுக்கு க்ரஷ் லிஸ்ட்டே கிடையாதா. நாங்க மட்டும் கல்யாணம் ஆகிட்டா கணவனே கண் கண்ட சைட்டுன்னு ஒதுங்கிடணுமா? இது அநியாயம். அக்கிரமம்” எனப் பேசிக்கொண்டே சென்றவளின் இதழ்களைச் சிறைப்பிடித்தான் மைத்ரேயன்.
அவளோ இதனை முற்றிலும் எதிர்பாராமல் விழி விரித்து திகைத்தாள். மறுக்க எண்ணியும் துளியும் விலக இயலவில்லை அவளால்.
மெல்ல மெல்ல அம்முத்தம் அவளை அவனிடத்தில் வசியம் செய்ய, அவனும் ஏதோ ஒரு வேகத்தில் முத்தத்தை ஆரம்பித்து விட்டு முடிக்க இயலாமல் திண்டாடினான்.
ஆரம்பமென்று ஒன்றிருந்தால் முடிவும் இருக்க வேண்டுமென்ற நியதியின் படி, சில நிமிடங்களில் அவனே விலகினான்.
கன்னங்கள் சிவந்து, மூச்சு வாங்கியபடி நின்றிருந்த பெண்ணின் வதனம் அவனை பித்து நிலைக்குத் தள்ளியது.
“ஷைலா…” பின்னந்தலைக் கூந்தலைக் கொத்தாகப் பிடித்து தன் புறம் அவளை இழுத்தான்.
அவன் இழுத்த இழுப்பிற்கு தானாகச் சென்றவளோ இன்னும் படபடத்த இதயத்தையும் அவன் கொடுத்த இதழணைப்பின் ஸ்பரிசத்தையும் அடக்க இயலாமல் நின்றிருக்க, “உனக்கு என்னைப் பிடிக்குமா?” எனக் கேட்டான் ரசனையுடன்.
அதில் தான் சற்று நிகழ்விற்கு வந்தவள், நயனங்களை நிமிர்த்திப் பார்த்தாள்.
“இந்தக் கேள்வியை அவசரமாகக் கல்யாணம் பண்ணிட்டு, இப்படி முத்தம் கொடுத்துட்டு தான் கேட்பாங்களா?” சிறிதான குற்றப்பார்வையை அவன் மீது வீசினாள்.
“கேட்கணும்னு தான் நினைப்பேன். ஒரு தடவை இல்லை ஓராயிரம் தடவை நினைச்சுருக்கேன்… உங்கிட்ட என் காதலை சொல்லணும்னு. சௌந்தர் அங்கிள் காதலிச்சது தான் அஸ்வினி ஆண்ட்டிக்குப் பிரச்சனையா முடிஞ்சுது. அதுவே எனக்கு உறுத்திக்கிட்டே தான் இருக்கும். கொஞ்சம் தைரியம் வந்து உங்கிட்ட சொல்ல வர்றப்ப தான் அபர்ணாவோட பிரச்சினை. சரின்னு அதை ஆறப்போட்டு கொஞ்சம் நார்மல் ஆகி வந்ததும்…” என சொல்ல இயலாமல் நிறுத்தினான்.
“அதுக்கு அப்பறம் காதலைப் பத்தி யோசிக்க மனசு இடம் கொடுக்கல ஷைலா. எனக்கும் விஸ்வூவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு சிவகாமி ஆண்ட்டி முடிவு பண்ணுனது எனக்கு அந்த நேரத்துல சரின்னு தான் தோணுச்சு. உன் மேல இருக்குற காதலை மொத்தமா குழி தோண்டி புதைச்சுட்டு அவளைக் கல்யாணம் பண்ணிக்கிற ஐடியால தான் இருந்தேன். ஆனா முடியல… விவரம் தெரிஞ்சதுல இருந்து உன்மேல கொஞ்ச கொஞ்சமா ஆழமா வேர் விட்ட காதல்… அப்படி சட்டுன்னு தூக்கிப் போட முடியல. ஆனா காதலா விஸ்வூவான்னு வரும் போது… நான் என்ன முடிவெடுக்குறதுன்னு எனக்குப் புரியல ஷைலா.
ஆனா, எனக்கு அவளை ஏமாத்தி கல்யாணம் பண்ணிக்கிற மாதிரி ஒரு எண்ணம். நாளை பின்ன உண்மை தெரிஞ்சா, ஏதோ அவளுக்காக வாழ்க்கை குடுத்த மாதிரி நினைச்சு ஹர்ட் ஆகிடுவாளோன்னு எனக்கு பயமா இருந்துச்சு” என மனதிலிருக்கும் அனைத்தையும் கொட்டியவனை நிறுத்தினாள்.
“நீ லவ் பண்றது உனக்கு மட்டும் தான தெரியும். எனக்கே தெரியாது. அப்பறம் எப்படி அவளுக்குத் தெரியப்போகுது” என்று ஷைலேந்தரி புருவம் சுருக்கிக் கேட்க, அவன் லேசாக அசடு வழிந்தான்.
“அது… நான் சில நேரம் நைட்டு தூக்கத்துல உன் பேர சொல்லிப் புலம்புவேன்…” என மெல்லிய நாணப்புன்னகையுடன் கூற, ஷைலேந்தரி அடக்கப்பட்ட ரசனையுடன் அவனைப் பார்த்தாள்.
“எனக்கே தெரியாது. ஒரு தடவை அம்மா தான் என் ரூம்ல நைட்டு ஒரே சத்தமா இருக்குன்னு சொல்லுவாங்க. ஏதோ புலம்பிகிட்டே தூங்குறேன்னு என்னை டாக்டர்கிட்ட எல்லாம் கூட்டிட்டுப் போயிருக்காங்க. அப்பறம் ஒரு நாள் நானே போன் ரெக்கார்டிங்க ஆன் பண்ணிட்டுத் தூங்கிட்டேன். மறுநாள் எந்திரிச்சுப் பார்த்தா “ஷைலா ஐ லவ் யூ. டூ யூ லவ் மீ”ன்னு தூக்கத்துல ப்ரொபோஸ் பண்ணிருக்கேன். சரி அன்னைக்கு ஒரு நாள் தான் அப்படின்னு நினைச்சு சில நாள் தொடர்ந்து ரெகார்ட் பண்ணிருக்கேன். அப்பவும் உன் பேரை சொல்லிட்டே தூங்கிருக்கேன்” என்றவனுக்கு இன்னும் கொஞ்சமாக வெட்க புன்னகை பூத்தது.
கீழுதட்டைக் கடித்து எழுந்த சிரிப்பை அடக்கிய ஷைலேந்தரி, “சரி சரி வெட்கப்படாதடா மைதா. இதைக் கேட்டு நான் வெட்கப்படணும். ஆனா பாரு எனக்குச் சிரிப்பு தான் வருது…” என்றவளை முறைத்தான். “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இந்த முகத்தில் ஒரு டன் வெட்கம் வழிஞ்சதை நானும் பார்த்தேனே” எனக் குறும்புடன் கூறியதில், மீண்டும் சிவந்து போனாள்.
அதனை ரசித்து வைத்தவன் பின் பெருமூச்சு விட்டு, “ஒருவேளை நான் விஸ்வூவைக் கல்யாணம் பண்ணிட்டு அர்த்த ராத்திரில உன் பேரை சொல்லிட்டு இருந்தா… ஐயோ அப்படி ஒரு சிட்டுவேஷனை என்னால யோசிக்கவே முடியல. அதான் அவள்கிட்ட உண்மையை சொல்லிட்டேன். அவளுக்கு ஆல்ரெடி யுக்தா மேல லவ்ஸ் இருக்குறனாள தான் தெளிவா என் லவ்க்கு ஹெல்ப் பண்றேன்னு எஸ்கேப் ஆகிருக்கான்னு இப்ப தான் புரியது…” என்றான்.
மேலும், “நீ மட்டும் என்னை ஒரு தடவை சைட் அடிச்சு என் மேல கொஞ்சூண்டு இன்டரஸ்ட் காட்டி இருந்துருந்தா கூட நான் சொல்லிருப்பேன். நீ தான் என்னை ஒரு மனுஷனாவே மதிக்க மாட்டுறியே இப்ப வரை…” என முறுக்கிக் கொண்டான்.
“சரி சரி அழுவாதடா மைதா. இனிமே உன்னையும் சைட் அடிக்க ட்ரை பண்றேன். நீயும் பார்க்க ஹேண்ட்ஸமா தான் இருக்கா. கூடவே இருக்குறனாள உன் அருமை எனக்குப் புரியல மைதா. வில் ஸ்ஸீ. இனிமே என் க்ரஷ் லிஸ்ட்ல உன்னையும் சேர்த்துக்குறேன்” என வெகு பாவப்பட்டு அவனுக்கு அனுமதி கொடுப்பது போல பாவனை செய்ய,
“என்னது க்ரஷ் லிஸ்ட்டா? அடியேய் நான் உன் புருஷன்டி” எனப் பதறினான்.
“ஹலோ, நீ மனசுக்குள்ளேயே ரோஜாவைத் தூக்கிட்டுச் சுத்துனது எனக்கே இப்ப தான தெரியும். அன்னைக்கு ஹாஸ்பிடல்லயே இதை பத்தி கேட்கலாம்னா, நம்மளை தான் ஒரு பதட்ட நிலையிலேயே வச்சுருக்கானுங்க. சரி பிரச்சனை முடியவும் உங்கிட்ட விவரம் கேட்டுக்கலாம்னு பார்த்தேன். அது முடியாது போல.
அதுவும் இல்லாம எடுத்ததும் டைரக்டா புருஷனாகனும்ன்னா எப்படி மைதா. பர்ஸ்ட் க்ரஷ் லிஸ்ட்ல நீ பாஸ் ஆகு. அப்பறம் லவர்க்கு ப்ரொமோட் பண்றேன். அப்பறம் புருஷனா பதவி ஏத்துக்க. ஆல் த பெஸ்ட் மை பாய்…” என அவன் கன்னத்தைத் தட்டிக்கொடுத்து விட்டு மெத்தையில் படுத்துக் கொண்டவள், மறுபுறம் திரும்பி சிரிப்பை அடக்க படாதபாடு பட்டாள்.
‘ஐயோ பாவம் மைதா மாவு வறுத்த ரவா மாவா கறுத்துப் போச்சு மூஞ்சி. இருந்தாலும் பரவாயில்ல. இத்தனை வருஷமா லவ்வ சொல்லாம விட்டதுக்கு பனிஷ்மெண்ட் வாங்கட்டும்’ எனக் குலுங்கிச் சிரித்தாள்.
விளக்கெண்ணைய் குடித்தது போல மைத்ரேயனின் முகம் கசந்து போனது.
‘எதே இனி க்ரஷ்க்கு பாஸ் ஆகி, லவர் ஆகி… சிவில் எக்ஸாம விட கஷ்டமா இருக்கும் போலயே!’ எனப் புலம்பியவனுக்குத் தெரியவில்லை அதை விடக் கடினமென்று.
அத்தியாயம் 52
இந்தக் கலவரத்தை எல்லாம் அறியாதவனாக யுக்தா சாகித்யன் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தான். கூடவே, “ஏஞ்சல் மிஸ் யூ டி” எனப் புலம்பிக்கொண்டே அருகில் கிடந்த தலையணையை இறுக்கிக் கட்டிக்கொள்ள, அவனை முறைத்து வைத்தவள், இரவு உடைக்கு மாறி விட்டு வேறு தலையணையை எடுத்து அவன் அருகில் போட்டு அவனைப் பார்த்தவாறு படுத்தாள்.
ஒரு காலத்தில் அவனைப் பார்க்க தவம் இருந்தவள். இப்போதோ வெகு அருகிலேயே அவளுக்காக உருகிக் கொண்டிருக்கிறான். ஆனால், பக்கம் இருந்தும் தூரமாகிப் போன உறவாக மாறி விட்டான்.
ஏதேதோ எண்ணங்கள் நெஞ்சை அழுத்திக் கொய்ய, “யுகி…” என மெதுவாக அழைத்தாள் விஸ்வயுகா.
படக்கென எழுந்து அமர்ந்தவன், “ஏஞ்சல் ஏஞ்சல் ஆர் யூ ஓகே ஏஞ்சல். நான் வந்துட்டேன் நான் வந்துட்டேன்” எனப் போதை தெளியாமலேயே தலையணையைத் தூர எறிந்து விட்டு, அவளை அள்ளி அணைத்துக் கொண்டான்.
“யுக்தா விடு!” என அதிர்வை விழுங்கி கொண்டு அவள் தடுமாறியதெல்லாம் அவன் புத்திக்கே உறைக்கவில்லை.
“தூங்கு ஏஞ்சல். யூ ஆர் சேஃப் நொவ் தூங்கு” எனத் தூக்கத்திலேயே அவளையும் தூங்க வைத்தான்.
அவளும் அவன் அணைப்பிலேயே உறங்கி விட, மறுநாள் சிவகாமி தனதறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார்.
மோகனோ “என்ன ஆச்சுமா?” எனக் கேட்டதில்,
“அந்த யுக்தா எங்கயோ தலைமறைவாகிட்டான். நைட்டுல இருந்து நம்ம ஆளுங்க அவனைத் தேடுறாங்க. எங்க போய் ஒளிஞ்சு இருக்கானோ…” என எரிச்சலடைய இங்கோ அவரது மகளின் நெஞ்சில் தலையை அழுந்தப் புதைந்து உறங்கிக் கொண்டிருந்தான் யுக்தா சாகித்யன்.
யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்டதில், “வரேன்” என்றபடி எழப்போனவளுக்கு நகரவே இயலவில்லை.
அதன்பிறகே இரவில் அவளவன் செய்த கலவரங்கள் கண் முன் காட்சியாக, “யுக்தா டேய் யுக்தா” என்று அவனை உலுக்கினாள்.
அவனோ சாவகாசமாக நெளிப்பு விட்டபடி, “குட்மார்னிங் ஏஞ்சல்…” எனப் புன்சிரிப்புடன் எழ,
“டேஷு மார்னிங். எப்படி வந்தியோ அப்படியே வெளில போய்டு” என்று அவனைத் தரதரவென இழுத்து பால்கனியில் விட்டவள், அங்கு அவளது சௌந்தர் சித்தப்பா தோட்டத்தில் நடைப்பயிற்சி செய்வது கண்டு மீண்டும் அறைக்குள்ளேயே இழுத்தாள்.
அவளது இழுப்பிற்கெல்லாம் வந்தவன், காலை வேளையில் கலைந்து போன அவளின் கேசத்தையும், சீரற்ற இரவு உடையையுமே ரசித்திருந்தான்.
சில நொடிகளில் அவளது சித்தப்பா அங்கிருந்து உள்ளே சென்றதும், “தேங்க் காட். முதல்ல இது வழியா இறங்கிப் போய்டு. நான் வாட்ச்மேனை எப்படியாவது டிஸ்ட்ராக்ட் பண்றேன்” எனச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே சிவகாமி இன்னும் அழுத்தமாக கதவைத் தட்ட, “அம்மா டூ மினிட்ஸ்” எனச் சத்தம் கொடுத்தாள்.
அவனோ அசையாமல் நின்றபதைக் கண்டு, “சைக்கோ சைக்கோ கிளம்பித் தொலை. இன்னொரு வாட்டிக் குடிச்சுட்டு வந்த… செருப்பு பிய்யும்” என விழிகளில் நெருப்பு பரவ அவனை அதட்டிட, அவளது கேசத்தை ஒழுங்கு படுத்தியவாறே,
“உன்னைப் பார்த்ததுல இருந்தே குடிக்கிறதை நிறுத்துட்டேன் ஏஞ்சல். நேத்து சுத்தமா அழுத்தம் தாங்கல. உன்னைப் பார்க்கணும்னு தோணுச்சு. அதான் குடிச்சுட்டேன்” எனப் பேசி முடிக்கும்போது, அவளது இரவு உடையையும் சேர்த்து சரி செய்தான்.
அதில் சட்டென உடையைப் பிடித்துக் கொண்டவள், “என்னடா செய்ற?” எனத் திகைத்துக் கேட்க,
“மார்னிங் தரிசனத்தை பார்த்துட்டு ஆபிஸ் போனா, என்னால இன்வெஸ்டிகேஷன்ல இன்வால்வ் ஆக முடியாது ஏஞ்சல்…” என்று கண் சிமிட்டி அவளைக் கரைய விட்டவன், பால்கனியில் இருந்து குதிக்கப் போனான்.
அதற்கு முன் அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டவன், “சாரி ஃபார் எவ்ரிதிங்!” என மன்னிப்பும் வேண்டி விட்டு அப்படியே குதிக்க, “டேய் பார்த்துடா” என அவளை மீறி பதறினாள்.
அவனோ ஸ்பைடர் மேனுக்கே குதிக்க கற்றுக்கொடுப்பவனாக சரியாக புல்லில் விழுந்து, காற்றிலேயே அவளுக்கு முத்தத்தையும் பறக்க விட்டு, “பத்து மணிக்கு ஆபிஸ்க்கு வரேன்…” என்று வாயசைவிலேயே சொல்லிச் சென்றான்.
“இவனை…” அவன் கொடுக்கும் முத்தத்திற்கெல்லாம் சிலிர்க்கும் தேகத்தை எரிக்கவே தோன்றியது அவளுக்கு.
விரும்பும் நெருக்கங்கள் விரும்பத்தகாத சூழ்நிலைகளில் கிடைப்பது ஒருவகையில் சாபக்கேடு தான்.
அதற்கு மேல் அவளை யோசிக்க விடாமல் சிவகாமி கதவைத் தட்டும் சத்தம் கேட்க, அவசரமாக கதவைத் திறந்தவள் “என்னமா?” என்றாள் இயல்புடன்.
“ஏன் கதவைத் திறக்க இவ்ளோ நேரம்?” எனக் கேட்டபடி அறையை ஆராய, “பாத்ரூம்ல இருந்தேன். இன்டர்காம்ல கூப்பிட்டு இருந்தா நானே வந்துருப்பேனே…” என்றதை கண்டுகொள்ளாமல், “என்ன ஸ்மெல் இது… ட்ரிங்க் பண்ணுனியா?” எனச் சந்தேகமாகப் பார்த்தார்.
திருதிருவென விழித்தவள், “அ… அது ஆமா… ஏன் பண்ணக் கூடாதா?” என்றாள் வீராப்பாக.
“பிசினஸ் பார்ட்டில ஒரு ஃபார்மாலிட்டிக்கு கைல வைன் க்ளாஸ் வச்சுக்க சொன்னா கூட பிகு பண்ணுவ?”
“அப்ப தோணல. இப்ப தோணுச்சு. இதைக் கேட்க தான் வந்தீங்களா? சீக்கிரம் சொல்லுங்க எனக்கு ஆபிஸ்க்கு டைம் ஆகுது” என எரிச்சலுற்றாள்.
மகளை முறைத்த சிவகாமி, “அந்த யுக்தாவுக்கு நான் நாள் குறிச்சா, அவன் எங்கயோ தலைமறைவாகிட்டான். உன் பின்னாடி என் ஆளுங்களை வாட்ச் பண்ண சொல்லிருக்கேன். எப்படியும் உன்னைத் தேடி வருவான். அந்த நேரத்துல அவனை முடிச்சுடுவேன்…” எனக் கங்கணம் கட்டிக்கொண்டு கூற,
“பெஸ்ட் ஆஃப் லக் மா!” எனக் கேலிப்புன்னகையுடன் அவரை வெளியில் நிறுத்தி கதவை அறைந்து சாத்தியதில் அவருக்கு கோபம் பீறிட்டு எழுந்தது.
‘அவன் கூட சேர்ந்துட்டு திமிரா காட்டுற… பாத்துக்குறேன் இரு’ எனக் கறுவியபடி கீழே சென்றார்.
பத்து மணியளவில் நால்வரும் அலுவலகம் வந்து விட, அங்கு விஸ்வயுகாவின் அறையில் அவர்களுக்கு முன் சுழல் நாற்காலியில் சுழன்றபடி அமர்ந்திருந்தான் யுக்தா சாகித்யன்.
“ஹாய் ஏஞ்சல்!” எனக் கண்ணடித்து அவளை வரவேற்க, விஸ்வயுகா “நீ என்ன பண்ற இங்க?” என்றாள் திகைத்து.
“உன் உடன்பிறப்பு தான் நைட்டு வீட்ல கத்தாத. காலைல ஆபிசுக்கு வந்து எவ்ளோ வேணாலும் கத்துன்னு சொன்னான். அதான் ஆன் டைம்க்கு வந்துட்டேன். கம் ஏஞ்சல் சிட் சிட்” என்றதில், விஸ்வயுகா அவனை முறைத்தபடி அவனுக்கு எதிரில் அமர்ந்தாள்.
அவள் மீதிருந்த பார்வையை அவன் விலக்காது போக, “என்ன வேணும் உனக்கு?” என்றவளின் எரிச்சலில் குளிர் காய்ந்தவன்,
“உன் மெடிக்கல் ரிப்போர்ட்” என்றான் நாற்காலியின் சாய்ந்தபடி.
சற்றே இறுகிப் போன அவளது வதனத்தைக் கண்டு, “இன்வெஸ்டிகேஷன்க்கு தேவைப்படும் யுகா” என நெஞ்சில் குத்தும் வலியுடன் கூற, “ம்ம்!” என்றவள் தனது பிரைவேட் லாக்கரில் வைத்திருந்த ஃபைலை எடுத்து அவனிடம் நீட்டினாள்.
அதனை வாங்கிப் பிரித்து பார்த்தவன், ஒரு கட்டத்திற்கு மேல் பட்டென மூடி வைத்து விட,
“டோன்ட் பீ எமோஷனல் ஃப்ரீக் யுக்தா. நீ ரேப் கேஸ் ஹேண்டில் பண்ணுனதே இல்லையா?” எனத் தோளைக் குலுக்கினாள்.
அவளது எகத்தாளத்தில் உறுத்து விழித்தவன், சில நிமிடங்கள் செலவழித்து முழுதாய் அந்த ஃபைலை ஆராய்ந்தான்.
அவ்வப்பொழுது கலங்கி நின்ற கண்களை சிமிட்டுவதும் அவளுக்குப் புரிந்தாலும், ஒரு கட்டத்திற்கு மேல் அவனைப் பார்க்க இயலாமல் அவளும் திரும்பிக் கொண்டாள்.
முயன்ற மட்டும் தன் உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வந்தவன், “ஓகே…” எனத் தனக்குத் தானே சொல்வது போல சொல்லி விட்டு,
“அன்னைக்கு” என்று ஆரம்பித்தான்.
அவன் பேச வந்ததும் அவளும் பார்வையை அவனிடத்தில் நிலைக்க வைக்க, அத்துடன் அவனால் மறுகேள்வி கேட்க இயலவில்லை.
ஆகினும் இது அவனது வேலை. விவரம் தெரிந்து கொள்ளாமல் அடுத்த கட்டத்திற்கு அவன் செல்ல இயலாது. இதைக் கடந்தே ஆக வேண்டுமென்ற நிலைப்பாட்டிற்குத் தன் மனதைத் தயார் செய்தவன், இப்போது பிசிறின்றி கேள்வி கேட்டான்.
“அன்னைக்கு எக்ஸ்சாக்ட்டா என்ன நடந்துச்சு?”
“என்னையும் சித்தியையும் கடத்துனாங்க. ரிமெய்னிங் நேத்தே சொல்லிட்டேன்”
“வேற ஏதாவது… அவனுங்களைப் பத்தின ஏதாவது அடையாளம்?” எனக் கேட்டு முடிக்கும் முன், “தெரியாது” என்றாள்.
“கொஞ்சம் யோசிச்சு சொல்லு ஏஞ்சல்” என்றதில் அவனை நோக்கித் தீப்பார்வை வீசினாள்.
“கொஞ்சம் இல்ல. பல லட்சம் தடவை யோசிச்ச விஷயம் தான். இனிப் புதுசா யோசிச்சு சொல்ல எதுவும் இல்ல. எனிதிங் எல்ஸ்?” எனக் கேட்டு விட்டு அசையாமல் அமர்ந்திருந்தாள்.
அவளை ஊடுருவிய ஆடவனின் பார்வையில் பல செய்திகள் பொதிந்திருந்தது. அந்நேரம் “விஸ்வூ” என அழைத்தபடி உள்ளே வந்த மைத்ரேயன் யுக்தாவை எதிர்பாராமல் திகைத்தான்.
“நீயா… நேத்தே நீ எக்ஸ்பயர் ஆகியிருக்க வேண்டியது. நீ குடிச்ச குடிக்கு வெளில திரிஞ்சுருந்தா என் கனவுல வந்த மாதிரி கண்டமாகி இருப்ப. ஏதோ எங்க வீட்ல இருந்ததுனால தப்பிச்ச” என்றவனிடம், “நான் தப்பிச்சது இருக்கட்டும் முதல்ல நீங்கள்லாம் எப்படி தப்பிக்கப் போறீங்கன்னு பார்க்கலாமா?” என விஷம நகையுடன் தாடையைத் தடவினான் யுக்தா.
“நா… நாங்க ஏன் தப்பிக்கணும்?” திருட்டு முழியுடன் அவன் நிற்க, விஸ்வயுகா யுக்தாவைக் கூர்ந்து பார்த்தாள்.
அவனும் அந்நேரம் விஸ்வயுகாவை அழுத்தத்துடன் பார்த்திருக்க, அவள் இதழ்களில் ஏளனப் புன்னகை.
“சோ சொல்லுங்க ஸ்பெஷல் இன்வெஸ்டிகேஷன் ஆஃபிசர்! டாக்டர் சுதர்மனை டிரான்ஸ்ஃபர் பண்ணியாச்சு. அடுத்து என்ன?” எனக் கேட்டாள் நக்கலாக.
அவன் பதிலின்றி அதே அழுத்தத்துடன் அவளை வெறித்ததில், “ஓ! கடமை தவறாத சி. பி. ஐ ஆஃபிஸராச்சே அரெஸ்ட் பண்ண வந்துருக்கீங்களா ஆஃபிசர். எப்படி பண்ணுவீங்க? எவிடன்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ணிட்டீங்களா? மோட்டிவ் ஃபைண்ட் அவுட் பண்ணியாச்சா?” என்றவளின் வார்த்தைகளில் அதீத கேலி.
“கொஞ்சம் பொறுத்துருக்கலாம் யுகா!” தொண்டையைச் செருமிக்கொண்டு யுக்தா கூற, அவள் விழிகளில் தீ ஜுவாலை ஜொலித்தது.
“பொறுக்கணுமா? பொறுத்து பொறுத்து தான் சரியான நேரத்துக்காக வெய்ட் பண்ணிட்டு இருந்தேன். நான் உருவாக்குன இந்த தொழில், ஜஸ்ட் எல்லாத்தையும் மறந்துட்டு போறதுக்குன்னு நினைச்சியா. இல்ல, எனக்காக ஒருத்தன் வந்து பழிவாங்குற வரை மூலைல உக்காந்து அழுதுட்டு இருப்பேன்னு நினைச்சியா? நெவர் யுக்தா. கிட்டத்தட்ட லாக்ஸ் ஆஃப் ப்ரொஃபைல்ஸ்… அத்தனை ப்ரொஃபைலையும் சிறுக சிறுக சேகரிச்சது அந்த நாலு பேரையும் கண்டுபிடிக்கத்தான். கண்டுபிடிச்சேன். ரெண்டு பேரைக் கொன்னேன்!” வெகு அசட்டையாகவும் பழிவெறியுடனும் பேசியவளை அமைதியாக ஏறிட்டான்.
“உன்மேல சந்தேகம் வரக்கூடாதுன்னு தான், நான் உன்னை ஃப்ளர்ட் பண்ணுனதுக்கு கோ ஆபரேட் பண்ணுனியோ?” விழி இடுங்க அவன் கேட்ட விதத்தில் அவளது பார்வையில் சிறு தடுமாற்றம்.
ஆனாலும் தன்னைச் சமன் செய்து கொண்டு “வேற என்ன நினைச்ச? உன் மேல காதல் பொங்கி வழிஞ்சு உன் கூட ஒட்டி உறவாடுனேன்னா… சில்லி ஃபெல்லோ! சரியா என் வேலையை நடைமுறைப்படுத்துறப்ப என் காத்திருப்புக்குலாம் குழி தோண்டுற மாதிரி நீ சார்ஜ் எடுத்துக்கிட்ட. உன் கூடவே இருந்தாதான நீ எந்த வழில இன்வெஸ்டிகேட் பண்றன்னு தெரிஞ்சுக்க முடியும். சோ தெரிஞ்சுக்கிட்டேன். உன்னால ஒரு துண்டு ஆதாரம் கூட கலெக்ட் பண்ண முடியாதுன்னு தெரியும் யுக்தா. இப்ப கூட நான் ரேப் விக்டிம்னு சொன்னதும் தான உனக்கு சந்தேகம் வந்துச்சு. என்ன இன்னும் கொஞ்சம் நீ கோ ஆபரேட் பண்ணிருந்தா, முழுசா என் வேலை முடிஞ்சுருக்கும். நீ தான் முந்திக்கிட்ட…” எனக் கம்பீரமாய் அறையெங்கும் ஒலித்தது அவள் குரல்.
அதற்கு ஈடாக அத்தனை நேரம் இறுகி இருந்த யுக்தா சாகித்யனின் முரட்டு இதழ்கள் வளைந்து நகைத்தது.
“எல்லாக் கொலைக்கும் என்கிட்ட ஆதாரம் இருக்கே ஏஞ்சல். உன்னைத் தவிர மத்த மூணு போரையும் உள்ள தூக்கிப் போட்டுடலாமா?” என இரு புருவத்தையும் உயர்த்திக் கேட்க, “நோ வே” எனக் கர்ஜித்து இருக்கையில் இருந்து எழுந்தாள் விஸ்வயுகா.
மோகம் வலுக்கும்
மேகா