Loading

தெம்மாங்கு 5

 

அம்மாவாசை நேரம் என்பதால் விளக்கு இருந்தும் பயனில்லாமல் கரும்பு புகை இருட்டில் மூழ்கியிருந்தது மலைக்குச்சி கிராமம். அந்தப் புகை இருட்டிலும் ஒரு கால்கள் வேகமாக ஓட்டம் பிடித்துக் கொண்டிருந்தது. அவன் ஆயுள் முழுவதும் கடவுள் கொடுத்த மூச்சை மொத்தமாக வெளியிட்டு தன் உயிர் பயத்தை தானே உணர்ந்துக் கொண்டான். அவனைப் பிடிக்க பின்னால் துரத்தி வந்த கால்கள் ஏராளம்.

 

சிக்கினால் எந்த அளவிற்கு சேதாரம் வரும் என்பதை உணர்ந்தவன் இன்னும் ஓட்டம் பிடித்தான் தன்னை தற்காத்துக் கொள்ள. அரை மணி நேரத்திற்கு மேலாக இவன் ஓட்டம் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. ஒரு வழியாக எப்போதும் தன் காதலியோடு தனிமையில் இருக்கும் அந்த கிணற்றுக்கு வந்த அன்புக்கரசன் சோர்ந்து மூச்சு இழுத்து விட்டு துரத்தி வந்தவர்களை எட்டிப் பார்த்தான். 

 

அவர்கள் விடாமல் துரத்தி வருவதற்கு சாட்சியாக பலத்த காலடி ஓசைகள் கேட்டது. இனி தப்பிப்பதற்கு இந்த கிணற்றை விட்டால் வேறு வழியே இல்லை என்பதை உணர்ந்தவன் வேக வேகமாக உள் இறங்கி படிக்கட்டின் கடைசியில் அமர்ந்துக் கொண்டான். அவன் காலை உரசியபடி கிணற்று நீர் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்க, நடந்ததை எல்லாம் கண்மூடி நினைத்துப் பார்த்தவனுக்கு பயம் ஆட்கொண்டது. 

 

தன் நண்பன் துணையை தேடியவன் நள்ளிரவு என்றும் பார்க்காது அழைத்தான். நண்பனுக்காகவே மயக்கத்தை தேடாமல் தெளிவாக படுத்து இருந்தவன் நான்கைந்து அழைப்புகளுக்கு பிறகு எடுத்து காதில் வைக்க, “குமரா!” என்ற ஓசையில் திடுக்கிட்ட அமர்ந்தான்.

 

 

ஆங்காரம் இல்லை அதிகாரம் இல்லை அந்த குரலில். காற்றாக வந்தாலும் கையறு நிலையில் இருக்கும் பக்தன் கடைசி நேரத்தில் இறைவனை அழைப்பது போன்று கருணையை எதிர்பார்த்து இருந்தது அவன் குரல். தன் உயிரானவன் குரலில் உயிர் பெற்றவன், “அன்பே!” என பதற்றம் கொண்டான்.

 

“அய்யனார் கிணத்து கிட்ட இருக்கேன் குமரா. உன்ன நான் உடனே பார்க்கணும் சீக்கிரம் வா.” 

 

“அன்பே… என்ன குரல் ஒரு மாதிரி இருக்கு? என்னடா ஏதாச்சும் பிரச்சனையா?”

 

“என்னால பேச முடியல குமரா. ரொம்ப மூச்சு வாங்குது. நீ உடனே வா.”

 

“ஆஹான்” என்றவன் மேல் உடையை கூட அணியாமல் வேகமாக வீட்டை விட்டு வெளியேற, அன்புக்கரசனை தேடி வந்த பொன்ராசுவின் வேலையாட்கள் அந்த கிணற்று பக்கம் நின்றிருந்தார்கள். 

 

மூச்சுக்காற்றும் காலடி ஓசைகளையும் வைத்து தன்னை நெருங்கி விட்டதை உணர்ந்தவன் வாயை மூடிக்கொண்டு கண்கள் மூட, அவனைக் காணாது ஆளுக்கு ஒரு பக்கம் ஓட ஆரம்பித்தார்கள். அவர்களை விட அதிவேகமாக தன் இரு சக்கர வாகனத்தில் வந்தவன் ஒற்றை வழி பாதையின் ஓரம் வண்டியை நிறுத்திவிட்டு காலாட ஓட்டம் பிடித்தான். 

 

கிணற்றை நெருங்கும் வரை அவன் உயிர் அவனிடம் இல்லை. தன் உயிர் நண்பனின் நிலை குறித்து ஆயிரம் எண்ணங்கள். கிணற்றின் தடுப்பில் இரு கைகளையும் ஊனி, “அன்பே!” என்றழைக்க, தலை உயர்த்திப் பார்த்தான் அன்புக்கரசன்.

 

அந்த இருட்டில் முகம் பார்க்க முடியாமல் தடுமாறியவன் மீண்டும் அவன் பெயரை அழைக்க, “குமரா” என்றழைத்தவன் படிக்கட்டில் மெல்ல ஏறினான். 

 

“டேய்…அன்பே” 

 

“நான் நல்லா இருக்கேன் குமரா”

 

“என்னடா ஆச்சு? இந்த நேரத்துல இங்க என்ன பண்ற?” 

 

“ஒரு பிரச்சனை ஆயிடுச்சு குமரா.” சென்றவன் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக நடந்ததை நண்பனுக்கு விவரிக்க துவங்கினான்.

 

தேனிசை தேவியை பார்த்து இருபது நாள்களுக்கு மேல் ஆகிவிட்டது. தாத்தாவின் மீது முழு கவனத்தை வைத்தவன் அவர் ஓரளவிற்கு தேறிவிட்ட பின் காதலியை தேடினான். வாரத்தில் இரண்டு முறையாவது காதலித்தவனை பார்த்து பழகியவள் முழுதாக இரு வாரங்களுக்கு மேல் ஆகியும் பார்க்காமல் பரிதவித்தாள். அன்று அவள் தாமதமாக வந்ததிலிருந்து கிடுக்கு பிடி விசாரணையை நடத்த ஆரம்பித்து விட்டார் அன்னை. 

 

அவள் மீதான முதல் சந்தேகம் லேசாக துளிர் விட்டது. அதன் பலனாகத்தான் இப்படி வீட்டிற்குள் சிறை இருந்து வெளியில் இருப்பவனை தவிக்க விட்டாள். கைபேசியின் மூலம் காதலுக்கு உயிர் கொடுத்து வந்தவர்களுக்கு மனம் கேட்கவில்லை. அதிலும் தேனிசை தேவி இரண்டு நாள்களுக்கு முன்பாகவே பார்க்க வேண்டும் என்று அழுக ஆரம்பித்து விட்டாள். ஓரளவிற்கு சமாதானம் செய்தவன் இன்று மாட்டிக் கொண்டான்.

 

 

அன்று தன்னை பார்க்க வருவதற்காக நண்பனோடு வாசலில் வந்து நின்றவன் நிலையை முழுதாகப் பார்த்த பின் நிச்சயம் சேர்த்து வைக்க மாட்டார்கள் என்று நம்பியவள் குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்து கொள்ளலாம் என்றாள். முதலில் அதைக் கேட்டு திடுக்கிட்டவன் தன் நிலையை புரிய வைத்து நேரம் கேட்க, 

 

“நீ எவ்ளோ நேரம் கேட்டாலும் நமக்கு சம்மதம் சொல்ல மாட்டாங்க. இவங்களுக்கு முக்கியம் கௌரவம் தானே தவிர பொண்ணோட சந்தோஷம் இல்லை. என் அம்மா வேற ஓயாம போன் எடுத்தா கூட என்ன எதுன்னு வந்து பார்க்கிறாங்க. என்னால இங்க கொஞ்சம் கூட இருக்க முடியல அன்பு. மாப்பிள்ளை பார்க்க போறதா பேசிக்கிறாங்க. உன்ன பார்த்தா வாச்சும் கொஞ்சம் நிம்மதியா இருக்கும்.” புலம்பி தீர்த்தாள். 

 

 

தன்னைப் பார்த்தால் இந்த புலம்பல் கொஞ்சம் குறையும் என்ற எண்ணத்தில், “நான், உன்னை பார்க்க வரேன்.” என்றிட, “வேணாம். பிரச்சனை ஆகிடும்.” பயந்தாள். 

 

“ராத்திரி எல்லாரும் தூங்குனதுக்கு அப்புறம் வரேன். நீ சத்தம் இல்லாம வெளிய மட்டும் வந்து நில்லு.” 

 

“பயமா இருக்கு”

 

அவனுக்குள்ளும் பயத்தின் அளவு அதிகமாக இருப்பினும் காதலியின் அழுகைக்காக தன் முடிவில் உறுதியாக இருந்தான். அவளும் அவனைப் பார்த்தால் போதும் என்று ஒரு கட்டத்திற்கு மேல் இறங்கி வந்துவிட, நள்ளிரவைத் தாண்டி ஊருக்குள் நடமாடினான். காதலன் வருகைக்காக தூங்காமல் விழித்திருந்தவள் குறுஞ்செய்தியை பார்த்து ஜன்னலை திறக்க, அன்புக்கரசன் தரிசனம் கொடுத்தான்.

 

 

மனம் கவர்ந்தவனைப் பார்த்ததும் அருவியாய் கொட்டியது பெண்ணுக்குள் தேங்கி இருந்த உவர் நீர். தூரமாக இருந்தாலும் அதை உணர்ந்தவன் கைபேசியில் அழைப்பு விடுத்து, “இந்த மாதிரி நேரம் கிடைக்கும்போது நான் வந்து பார்த்துட்டு போறேன். கொஞ்ச நாள் எனக்காக தாக்குப்பிடி.” என்றான். 

 

“என்ன சொல்றதுன்னு தெரியல. உனக்காக அவசரப்படவும் முடியல என் வீட்டுக்காக பொறுமையா இருக்கவும் முடியல. நாளுக்கு நாள் பயம் தான் அதிகமா வருது. நம்ம கல்யாணம் நடக்குமா?”

 

“கண்டிப்பா நடக்கும் இசை. எனக்கு ஒரு வேலை கிடைக்கிற வரைக்கும் தான் நமக்கு இந்த பிரச்சனை. கவர்மெண்ட் வேலையை காட்டி நிச்சயம் சம்மதம் வாங்கிடுவேன்.”

 

“அதுக்கெல்லாம் அசர ஆளா இவங்க.”

 

“நம்புவோம் இசை. நம்ப நம்பிக்கை நம்மளை காப்பாத்தும்.” என்றவன் யாராவது பார்க்கும் முன் சென்று விட நினைத்து,

 

“கிளம்பவா?” கேட்டான்.

 

சற்று நேரம் நிறுத்தி வைத்திருந்த அழுகை மீண்டும் படையெடுத்தது. விசும்பலுக்கு நடுவில் இன்னும் சிறிது நேரம் கேட்க, அவளுக்காக அங்கு நின்றிருந்தான். அந்த நேரமும் கடந்த பின் கிளம்ப முயற்சித்தவனை நெருங்கிப் பார்க்க விரும்பியவள் மீண்டும் கோரிக்கை வைக்க, மறுத்து உறுதியாகக் கிளம்பினான். 

 

அதில் அவளின் மடை நீர் அளவுக்கதிகமாக ஊற்றெடுத்து திக்கித் திணறி பேச ஆரம்பிக்க, சரியாக தூக்கம் வராமல் புரண்டு படுத்த பவானி காதில் விழுந்தது. புருவம் சுருக்கியவர் புரியாது அந்த ஓசையை உற்றுக் கேட்க ஆரம்பித்தார். அறையில் பேசிக் கொண்டிருந்தவள் தன் நிலை அறியாமல் பெற்றோர்களின் அறைப் பக்கம் இருக்கும் முற்றத்தில் வந்து நின்று பேசிக் கொண்டிருந்தாள். 

 

பெற்ற மகளின் குரலை உறுதி செய்த பவானி அவளுக்குப் பின் வந்து நிற்க, 

 

“என்னை உன்னோட கூட்டிட்டு போயிடு அன்பு. என்னால இந்த வீட்ல இருக்க முடியாது.” உளறிக் கொண்டிருந்தாள். 

 

கருவிழிகள் உருண்டு திரண்டு மகளைக் கவ்விக்கொள்ளும் அளவிற்கு கோபம் விரிந்தது. அதை அறியாது தன் மனதில் இருப்பதை ஒவ்வொன்றாக தாய்க்கு தெரிவித்துக் கொண்டிருந்த தேனிசை தேவி சற்று நகர்ந்து நிற்க, அவளைப் பார்த்தபடி நிற்கும் இவன் உருவம் தென்பட்டது பவானிக்கு. 

 

“ஏய்!” என்ற குரலில் சர்வமும் அடங்கிவிட்டது இருவருக்கும். 

 

கைபேசியை கீழே விட்ட தேனிசை தேவி நெஞ்சில் கை வைத்தபடி அன்னையை மிரண்டு பார்க்க, சத்தம் கேட்டதும் செய்வதறியாது அதே இடத்தில் நின்றான் அன்புக்கரசன்.

 

“எவன்டி அவன்? என்ன கூத்தடிச்சிட்டு நிக்கிற. நான் அப்பவே நினைச்சேன் இந்த மாதிரி குடி கெடுக்கிற வேலையை தான் நீ செஞ்சுகிட்டு இருக்கேன்னு.” என அவிழ்ந்த கூந்தலை அள்ளிக் கொண்டை இட்டவர்,

 

“என்னங்க… கருப்பா… வெளிய எவனோ ஒருத்தன் நிக்கிறான். வேகமா வாங்க.” கத்தி கூச்சலிட்டர்.

 

வேகமாக ஓடி வந்த தேனிசை அன்னையின் காலில் விழுந்து கெஞ்சிக் கொண்டிருக்க, அவர் குரலில் தூக்கம் கலைந்து எழுந்து வந்த வீட்டின் ஆண்கள் என்னவென்று விசாரித்தார்கள். தன் காலை பிடித்துக் கொண்டிருந்த மகளை எட்டி உதைத்தவர்,

 

“எவனையோ வீட்டுக்கு வர வச்சு கொஞ்சிக்கிட்டு நிக்கிறா. அவனோட போகப் போறாளாம். அங்க நிக்கிறான் பாரு… வேகமாக போய் பிடிங்க.” 

 

அமளித்துமளி ஆகி கலவரங்கள் வெடித்தது தேனிசை வீட்டில். பெற்ற மகளை தன் பங்கிற்கு அடித்த பொன்ராசு அவர் வீட்டில் இருக்கும் நபர்களை விரட்டினார். நிலவரம் புரிந்து தப்பித்து ஓட முயன்ற அன்புக்கரசனை வளைத்து பிடித்த கருப்பன் முகம் பார்க்க முயற்சிக்க, அதற்குள் சாமர்த்தியமாக தப்பித்து ஓட்டம் பிடித்தான்.

 

 

நடந்ததை முழுமையாக நண்பனுக்கு விவரித்தவன் அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் தலைகுனிய, “லூசா அன்பே நீ? என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்ல. பொறுமையா இருன்னு சொல்லிட்டு நீயே இப்படி அவசரப்பட்டு இருக்க.” கோபம கொண்டான். 

 

“அவ அழுததும் என்ன பண்றதுன்னு தெரியாம பண்ணிட்டேன்.”

 

“இப்ப எவ்ளோ பெரிய கலவரம் நடக்கும் தெரியுமா. எங்கப்பனும் உன் மாமனாரும் சேர்ந்து ஊரையே ரெண்டு பண்ணிடுவானுங்க.”

 

“அதை நினைச்சா தான் ரொம்ப பயமா இருக்கு குமரா.”

 

“எதையும் நினைக்காம பண்ணிட்டு இப்ப என்னத்த நினைக்கிற?” என்றவன் இடுப்பில் கை வைத்துக் கொண்டு யோசிக்க ஆரம்பித்தான்.

 

 

தேனிசை தேவியின் நிலை குறித்து கவலையில் அமர்ந்தான் அன்புக்கரசன். நண்பனின் முகம் பார்த்த பின் தன் கோபத்தை கைவிட்டவன், “என்னைக்காவது ஒரு நாள் தெரிய தான போகுது. முடிஞ்சதும் இதுக்கு ஒரு முடிவு கட்டிடலாம் விடு.” தைரியப்படுத்திக் கொண்டிருக்கும் பொழுது அன்புவின் கழுத்தை இறுக்கிப் பிடித்தான் கருப்பன்.

 

 

 

“அன்பே…”

 

“இது உனக்கு தேவையில்லாத பிரச்சினை தள்ளிப்போ.” 

 

“என் அன்பு மேல இருந்து கையை எடுடா.”

 

“என் தங்கச்சியை திருட்டுத்தனமா வீட்டுல வந்து பார்த்துட்டு போவான் சும்மா விடனுமா.”

 

“முதல்ல கையை எடு”

 

“பேச்சியப்பன் மாமாக்காகத்தான் உன்கிட்ட பேசிட்டு இருக்கேன். மரியாதையை கெடுத்துக்காம இங்க இருந்து போ.”

 

“ஏய்! அவன் மேல இருந்து கைய எடுத்துட்டு பேசுடா.” 

 

கருப்பன், எதிரில் இருப்பவன் பேச்சைக் கேட்காமல் கையை இறுக்கி அவன் கழுத்தை நெருக்கினான். கால்களை அங்கும் இங்கும் உதைத்து மூச்சு விட சிரமப்பட்ட அன்புக்கரசன் நண்பனை பார்க்க, “இந்த நாயை இங்கயே கொன்னு புதைக்கிறேன்.” என்றவன் வாயிலிருந்து ரத்தம் பீறிட்டது.

 

நொடி பொழுதில் அன்பு மீதி இருந்த கையை எடுத்து முறுக்கிட, ரத்தம் வழிந்த வாயிலிருந்து சத்தம் எகிறியது. அதை பொருட்படுத்தாதவன் அவன் முதுகுக்குப் பின்னால் கையை சுழற்றி, 

 

“எம்புட்டு தெனாவட்டு இருந்தா என் முன்னாடி என் அன்புவ கொன்னுடுவேன்னு சொல்லுவ. உன் தங்கச்சி என்னடா எலிசபெத்து ராணியா. அவளை பார்க்க வந்தது அவ்ளோ பெரிய குத்தமா. கோழைத்தனமா பின்னாடி வந்து பிடிக்கிற. மாடு பிடிக்கிற கை அது. மாட்டுன… தோலை உரிச்சிடுவான்.” என்று முறுக்கிய கையை பாவம் பார்க்காமல் இறுகி முறுக்கினான்.

 

“ஆஆஆஆஆ!”

 

“விடு குமரா அவன”

 

“தள்ளு அன்பே… உன்னை கொன்னுடுவேன்னு சொன்னவன குத்தி கிழிச்சா தான் நிம்மதி எனக்கு.”

 

“டேய்… ஏதாச்சும் ஆக்கிட போது குமரா”

 

“ஆகி போவட்டும். உன்னை கொல்ல நினைச்சவன் எதுக்கு?” 

 

“விடு” என நண்பனிடம் இருந்து காதலியின் அண்ணனை காப்பாற்றியவன்,

 

“இங்க பாரு கருப்பா நானும் இசையும் காதலிக்கிறோம்.” என அவன் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே எட்டி அவன் மார்பில் உதைத்தான் கருப்பன். 

 

“ஏய்!” என ஆவேசமாக அவன் மீது பாய்ந்த குமரவேலன் ஈவு இரக்கம் பார்க்காமல் தரையில் தள்ளி உதைக்க ஆரம்பித்தான். இந்த முறை அன்புக்கரசன் தடுக்கவில்லை. தடுக்க ஆள் இல்லாமல் போனதால் தன் இஷ்டத்திற்கு கிழிந்த துணியை மீண்டும் கிழிப்பது போல் கருப்பன் உடலை கிழித்தான். ஆங்காங்கே ரத்தம் சிதறி கசங்கிய துணியாக தரையில் கிடந்தான்.

 

 

“சாவடிச்சிடுவேன்! யாரடா அடிக்க வர. அவன் சட்டையை பிடிக்கக்கூட தகுதியில்ல உனக்கு. ஆமாடா… உன் தங்கச்சியை காதலிக்கிறான். உன்னாலையும் உங்கப்பனாலயும் என்ன பண்ண முடியுமோ பண்ணுங்க.” 

 

“தேவை இல்லாம இந்த பிரச்சினையில மூக்கை நுழைக்காத.”

 

“ஓங்கி உதைச்சேன் சங்கு உடைஞ்சிடும். ரெண்டு பேரும் காதலிக்கிறாங்க கல்யாணமும் பண்ணிப்பாங்க. இதுல நடுவுல உனக்கு என்னடா வேலை. ஒழுங்கா ஒதுங்கி போய்டு.” 

 

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே பொன்ராசுவின் வீட்டு ஆட்கள் அந்த பக்கம் வந்திட, “இவன் தான்டா அந்த நாய். பிடிச்சு கட்டி போட்டு அப்பா முன்னாடி நிறுத்துங்க.” எனக் கட்டளையிட்டான் அவர் மகன் கருப்பன். 

 

“எவனாது கிட்ட வந்தீங்க… குடலை உருவிடுவேன்.”

 

“முதல்ல இவனை அடிச்சு தூக்கி போடுங்கடா. மனசுல பெரிய மண்ணாங்கட்டின்னு நினைப்பு.” 

 

கருப்பன் பேச்சை கேட்ட அந்த ஆறு பேரும் குமரவேலனை தாக்க ஆரம்பித்தார்கள். தன்னை நெருங்குவதற்கு முன்னரே சண்டை பிடிக்க ஆரம்பித்தவன் ஆறு பேரையும் ஒற்றை ஆளாக சமாளித்துக் கொண்டிருக்க, “பிரச்சனை பண்ணாம அவனை விட சொல்லு ” என்றான் அன்புக்கரசன்.

 

 

உடல் முழுவதும் காயங்கள் இருந்ததால் செயலில் இறங்காமல் இருந்த கருப்பன் இன்னும் பலமாக அடிக்க உத்தரவிட, ஆறு பேரும் மாற்றி மாற்றி அடித்துக் கொண்டிருந்தனர் அங்கு. என்ன பலம் இருப்பினும் ஒருவனை சுற்றி வளைத்து தாக்கும் பொழுது தடுமாற தானே செய்வான். குமரவேலனும் சற்று தடுமாறினான். 

 

நடந்த பிரச்சனையை பெரிதாக்காமல் சுமூகமாக முடிக்க எண்ணி பொறுமையாக பேசிக் கொண்டிருந்தவன் நண்பன் தடுமாறுவதை கவனித்தான். அவனிடம் விடுமாறு கோரிக்கை வைத்தும் கேட்காமல் குமரவேலன் தாக்கப்படுவதை ரசித்துக் கொண்டிருக்க, “விட சொல்லு கருப்பா” என அவன் சட்டையை பிடித்தான்.

 

 

தன் சட்டை மீது கை வைத்திருப்பவனை ஆங்காரத்தோடு முறைத்தவன், “என் வீட்டு வாசல்ல கால் வைக்க கூட தகுதி இல்லாத வக்கெத்தவன் சட்டையவா பிடிக்கிற…” என அவன் கையை உயர்த்த, கண்ணிமைக்கும் நொடிக்குள் தரையில் தொப்பென்று சரிந்தான் தேனிசை தேவியின் அண்ணன். 

 

அவன் விழுந்த சத்தத்தில் அடித்துக் கொண்டிருந்த ஆறு பேரும் அன்பு பக்கம் திரும்ப, குமரவேலன் மீசையை முறுக்கினான் மிதப்பாக. தன் நண்பனை பற்றி அவன் அறியாததா! துடுக்குத்தனமாக இருக்கும் தன்னிடமே இவ்வளவு வீரம் இருக்கிறது என்றால் பொறுப்பான ஆண்மகன் அவனுக்குள் எவ்வளவு இருக்கும். என்ன‌… இவனைப் போல் அதிரடியில் இறங்க மாட்டான் அவ்வளவு எளிதில்.

 

 

கருப்பன் நெஞ்சின் மீது வலது காலை வைத்த அன்புக்கரசன், “என்னடா… வாய்க்கு வாய் நாய்னு சொல்ற. நாய்னா உனக்கு அவ்ளோ கேவலமா. விசுவாசத்தையும் ஆக்ரோசத்தையும் என்னன்னு கேட்டு பாரு. அது சொல்லிக் கொடுக்கும் உனக்கு. என்னமோ கௌரவம் கௌரவம்னு பீத்திட்டு இருக்கீங்க. அந்த நாய்க்கு நீங்களும் மனுஷன் தான் நானும் மனுஷன் தான்.” என்றவன் மிதித்திருந்த காலில் அழுத்தத்தை கூட்டும் பொழுது அவனது ஆட்கள் அன்புக்கரசனை தாக்க வந்தார்கள்.

 

 

அவர்களில் இருவரை குமரன் அடக்கிக் கொண்டிருக்க, “உன் தங்கச்சியை பார்க்க வந்தது நான். அவளுக்காக நீ பேசுறதையும் அடிக்குறதையும் பொறுத்துப்பேன். என் குமரன் மேல கைய வச்ச…உசுர குடிச்சிடுவேன்.” என்றான். 

 

 

அத்தோடு கூட கருப்பனும் அவனது ஆட்களும் ஒதுங்கி இருக்கலாம். ஆனாலும் பிடிவாதம் மல்லுக்கு நின்றனர். ஆறு பேரில் ஒருவன் அன்புவை பின்னிருந்து உதைத்து விட, அவ்வளவுதான் அவனும் இவனும் சேர்ந்து அந்த இரவை கதி கலங்க விட்டனர். ஏழு பேரையும் பாரபட்சம் பார்க்காமல் வெளுத்து துவைத்தனர். ஒருவரால் கூட முடியவில்லை திருப்பி அடிக்க. கசங்கிய சட்டையை உதறிக் கொண்ட நண்பர்கள் கருப்பனை முறைத்து விட்டு நடையை கட்ட, பல்லை கடித்து குரோதத்தை துவங்கி வைத்தான் கருப்பன்.

 

***

 

விஷயம் பொன்ராசு காதிற்கு சென்றது. மகளை அடித்து அதிகாரத்தைக் காட்டியவர் மாணிக்கத்தின் வீட்டிற்கு ஆளை அனுப்பிவிட்டார். பாதி உறக்கத்திலிருந்து கலைந்தவர் ஒன்றும் புரியாமல் சண்டையிட வந்தவர்களை சமாளிக்க, ஊர் நள்ளிரவில் விழித்தது. தன் வீட்டில் நடந்த கலவரத்தை நண்பருக்கு தெரிவிக்க, 

 

“எனக்கு அப்பவே தெரியும். எம்புட்டு தைரியம் இருந்தா நம்ம வீட்டு பொண்ண ஆசைப்படுவான். இன்னையோட அப்படி ஒருத்தன் இந்த ஊருக்குள்ள இருந்தான்ற சுவடே இருக்கக் கூடாது.” ஆவேசமாக வீட்டில் இருந்து கிளம்பினார்.

 

அவர் சொல்வதைக் கண்ட இந்திரா மகனை அழைத்து விவரத்தை கேட்க, அவருக்கு பதில் சொல்லாதவன் அங்கு நடப்பதை விசாரித்தான். அவருக்குத் தெரிந்தவரை அனைத்தையும் மகனிடம் தெரிவிக்க,

 

“என்கிட்ட கொடுங்க அத்தை” பரிதவிப்போடு கேட்டாள் தெய்வானை.

 

அவள் குரல் செவியில் விழுந்ததும் புருவங்களை சுருக்கி எப்படி அவள் இங்கு என்று யோசித்துக் கொண்டிருக்க, “மாமா” என்ற அழைப்பு காவியமாக தெரிந்தது.

 

அந்தப் பதட்டமான சூழ்நிலையிலும் வலது பக்க இதழ்கள் லேசாக விரிந்தது. பேசுவது பெரிதாகிப் போன சூழ்நிலையில் “மாமா” என்ற அழைப்பும் அரிதாகி போனது. அதைக் கேட்ட மகிழ்வோடு எப்படி இங்கு என்று விசாரிக்க,

 

“வீட்டுக்கு சீக்கிரம் வந்தா தான பார்க்க வந்தவ கண்ணுக்கு தெரியும்.” என்று விட்டு, “நல்லா இருக்கீங்க தான?” விசாரித்தாள்.

 

“நீ பதட்டப்பட்டு கேக்குற அளவுக்கு இங்க எந்த பிரச்சனையும் இல்லை. மனச போட்டு குழப்பிக்காத. நாளைக்கு நான் வந்து உன்ன பார்க்கிறேன்.”

 

“இல்ல மாமா…உங்களை பார்க்குற வரைக்கும் தூக்கம் வராது. இப்பவே நீங்க இங்க வாங்க.” 

 

“நிலவரம் புரியாம பேசாத. நாளைக்கு கண்டிப்பா வர” என்றவன் பரிவான குரலில் “சாப்டியா” என்று விசாரிக்க, “நீங்க சாப்டீங்களா?” கேட்டாள்‌.

 

“ம்ம்!” என பேசிவிட்டு அழைப்பை துண்டித்தான்.

 

“பிரச்சனை ரொம்ப பெருசாகிடுச்சு அன்பு. இவங்க கிட்ட பேசி பிரயோஜனம் இல்லை. நான் சொல்ற வரைக்கும் இங்க இருந்து வராத. மீதி எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன்.” என்றான். 

 

“என்ன பண்ண போற?”

 

“உங்களுக்கு கல்யாணம் பண்ண போறேன்.”

 

உச்சபட்ச அதிர்ச்சிக்கு ஆளான அன்புவின் தோளை தட்டிக்கொடுத்து,

“இதை விட்டா நீங்க கல்யாணம் பண்றதுக்கு வேற வாய்ப்பே கிடையாது.” என்றிட,

 

“இப்ப கல்யாணத்துக்கு எந்த அவசரமும் இல்ல குமரா. என்ன இருந்தாலும் அவங்க பொண்ண பெத்தவங்க. தன் வீட்டு பொண்ண யாருக்கு கட்டிக் கொடுக்கணும்னு முடிவு பண்ற உரிமை அவங்களுக்கு இருக்கு. பிரச்சனையை சுமுகமா பேசி முடிக்க பார்க்கலாம்.”

 

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பார்த்த தான. கூடப் பொறந்தவனே எப்படி இருந்தான்னு. எங்க அப்பா வேற இதான் சாக்குனு உன்ன முடிச்சு கட்ட முடிவோட கிளம்பி இருக்காராம்.”

 

“அவங்க என்ன வேணா பண்ணிட்டு போகட்டும். கல்யாணம் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வாகாது.”

 

“உனக்கு தேனிசை வேணுமா வேணாமா?”

 

“வேணும். ஆனா, எந்த பிரச்சனையும் இல்லாம.”

 

“அது நடக்க வாய்ப்பே இல்ல. உனக்கு தேனிசை தேவி இல்ல.” என்றவனிடம் தன் வாதத்தை முன் வைக்க வந்த அன்பிற்கு அழைப்பு ஒன்று வந்தது. 

 

காதலியின் பெயரை பார்த்ததும் பயம் கொண்டு காதில் வைக்க, “அன்பு… பத்திரமா இருக்கியா.” என்று அவன் நலனை விசாரித்தவள்,

 

“தாத்தாவை பிடிச்சு வச்சு கலவரம் பண்ணிட்டு இருக்காங்க. இதுக்கு மேல நான் இங்க இருக்குறது சரி வராது. எப்படியாது என்னை கூட்டிட்டு போ.” அழுக ஆரம்பித்தாள். 

 

 

 

அழுத்தத்திற்கு மேல் அழுத்தம் கூட என்ன செய்வதென்று தெரியவில்லை அன்புக்கரசனுக்கு. காதலியிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே, “திருந்த மாட்டியா நீ” என்ற பவானியின் குரல் கேட்டது.

 

அதற்குப் பின் அவன் காதில் விழுந்ததெல்லாம் காதலியின் கதறல் சத்தம் மட்டுமே. கைபேசியை துண்டித்த கையோடு, “தாத்தாவை காப்பாத்தணும் குமரா‌” என்றவன் முகம் முழுதும் பயம் சேர்ந்த குழப்ப ரேகைகள்.

 

 

“அது எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன். உனக்கு போன் பண்ணும் போது மலை மேல இருக்க முருகன் கோவிலுக்கு வந்துரு.” 

 

அவனுக்குள் கேள்வி ரேகைகள் ஓடிக்கொண்டிருக்க, “நீ ஊரை தாண்டி வரும்போது ஒருத்தனும் உன்னை பார்க்க மாட்டான். எல்லா பிளானையும் தெளிவா போட்டுட்டேன். பயப்படாம ஆக வேண்டிய வேலையை பார்க்கலாம். உனக்கு இப்படித்தான் கல்யாணம் நடக்கணும்னு முடிவாகி இருக்கு. கடவுள் விட்ட வழின்னு நம்பிக்கையா வா அன்பு.” என்றவனுக்கு தெரியாது அவனுடைய திருமணம் இதை விட மோசமான ஒரு தருணத்தில் நடக்கப் போகிறது என்று. 

 

நண்பனிடம் ஆயிரம் பத்திரங்களை சொல்லி விடை பெற்றவன் ஊருக்குள் நுழைய, கலவரத்தின் தீவிரம் புரிந்தது. அவனை ஆளாளுக்கு பிடித்து கேள்வி கேட்க ஆரம்பித்தனர். யாருக்கும் பதில் சொல்லாமல் தன் தந்தையோடு இருக்கும் ஊர் தலைவரில் ஒருவரை சந்தித்து பஞ்சாயத்தை ஏற்பாடு செய்தான். 

 

 

உறுதியான பஞ்சாயத்து சம்பந்தப்பட்ட ஆள்களுக்கு செய்தி அனுப்பியது. தேனிசை தேவி வீட்டில் சிறை இருக்க, சம்பந்தப்பட்டவனை கூண்டோடு பிடிக்க அனைவரும் பஞ்சாயத்தில் ஆஜராகினார்கள். பஞ்சாயத்து கூடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக ஏற்பாடு செய்தவரை அணுகி,

 

“நீங்கதான் அன்புக்கு உதவி செய்யணும். அவன் பண்ணது தப்பு தான். இனிமே அந்த பொண்ணு பின்னாடி வரமாட்டான். அவன் கிட்ட பேசி முடிவு பண்ணிட்டு தான் இந்த பஞ்சாயத்தை கூட்டி இருக்கேன். தேனிசை வீட்ல இருந்து அவனுக்கும் தாத்தாவுக்கும் எந்த ஆபத்தும் வரக்கூடாது. அதுக்கு மட்டும் ஏற்பாடு பண்ணுங்க. நான் போய் அவனை கூட்டிட்டு வரேன்.” என்று ஊரை விட்டு வெளியேறி இருந்தான். 

 

அவன் பேச்சை நம்பியவர் பொன்ராசுவையும் மாணிக்கத்தையும் ஓரிடத்தில் சங்கமிக்க வைக்க, கடும் கோபத்தில் நின்றிருந்தார் பேச்சியப்பன். மருத்துவமனையில் இருந்து வந்த கருப்பன் மூக்கு விடைக்க காத்திருக்க, இரு குடு

ம்பத்தின் பெண்கள் உற்றார் உறவினர்கள் என மலைக்குச்சி கிராமமே

நண்பர்களுக்காக  காத்திருந்தது.

 

ஊரையே ஒரு பக்கம் திசை திருப்பி விட்டு யாருக்கும் தெரியாமல் பொன்ராசு வீட்டிற்குள் நுழைந்தவன் தேனிசை தேவியின் கை பிடித்தான். 

 

 

தெம்மாங்கு ஒலிக்கும்…

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
17
+1
2
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்