தெய்வானைக்காக ஒரு கதை எழுதுறேன். டுவிஸ்ட் அழுகையின் எதுவும் இல்லாம காதல மட்டுமே வெச்சி. ரொம்ப சின்ன கதை தான் ஒரு காம்பெடிஷனுக்கு எழுதுறேன். லிங்க் ஷேர் பண்ற மறக்காம உங்க ஆதரவை தாங்க. கதாநாயகன் கந்தன் குமரன விட அதிகமா உங்க மனசுல இடம் பிடிப்பானு நம்புறேன் .
வாக்கப்பட்டு வந்த வாசமலரே
கந்தன் தெய்வானை
தெம்மாங்கு 37
காலம் மாறிவிட்டது குமரவேலனுக்கு. அதிகாலை எழுவது என்பது கட்டாயம் இல்லை. தேனிசை தேவி வந்து எழுப்பும் வரை நல்ல உறக்கத்தில் இருக்கலாம். அதிகாலைக்குச் சொந்தக்காரி இவனைக் கட்டியவள் ஆகிவிட்டாள். கண் முழித்ததும், பார்வை கட்டியவனிடம் சென்றது. குமரவேலன், மகனை அணைத்து அழகாக உறங்கிக் கொண்டிருந்தான்.
கண்கள் தூக்கக் கலக்கத்திலிருந்து கலைந்து மென்மையாகச் சிரித்தது. ஒரு கையை ஊன்றியபடி படுக்கையில் இருந்து எழுந்தமர்ந்தவள், ‘தூங்கும் போது கூடச் சிரிக்க இவனால மட்டும்தான் முடியும்.’ களையான முகத்தைப் பாராட்டினாள்.
‘ரொம்ப நாள் கழிச்சு, நேத்துதான் உன்னைப் பழைய குமரனா பார்த்தேன். அந்தக் குறும்பும், தெனாவட்டும் கொஞ்சம் கூடக் குறையல.’
எழுந்ததும் வேலையைக் கவனிக்க ஓடுபவள், தன்னை மறந்து தன்னவனின் அழகில் அமர்ந்திருக்க, சிணுங்கி திரும்பிப் படுத்தான் குட்டி அன்பு. தன்னை விட்டுத் திரும்பிப் படுத்தவனைச் சேர்த்தணைத்தவன் தட்டிக் கொடுத்தான்.
‘புள்ளையத் தூக்கத்துல கூட விடுதா பாரு. அப்படியே கன்னத்துல ஒரு இடி இடிக்கணும்.’
கன்னத்தில் இடிக்கக் கையை எடுத்துச் சென்றவள், மனம் இல்லாமல் முகத்தைச் சுருக்கிக் கொண்டு, ‘பாவம்!’ என எழுந்து கொண்டாள். சாணியைக் கரைத்துத் தெளிக்க நிமிர்ந்தவள், நிற்பவனைக் கண்டு “என்னடா அதிசயம்?” என்று கேலி செய்தாள்.
“திருந்திட்டேம்மா”
“யாரு?”
“குமரவேலன்!”
“காலையிலயே வெட்டியாப் பேசாம நகரு.”
“சத்தியமா குமரவேலன் திருந்திட்டான்.”
“சரி!”
“குளிக்கப் போறான்…”
“சரி!”
“அன்புவை எழுப்பிக் குளிக்க வச்சி ஸ்கூலுக்குக் கிளப்பப் போறான்.”
“ம்ம் சரி!”
“மதியம் ஸ்கூல் முடிச்சுக் கூட்டிட்டு வரப்போறான்.”
“சரி!”
“என்னம்மா நீ? ஒருத்தன் திருந்தி, தப்ப உணர்ந்து சரி பண்ணப் பேசுறான். தட்டிக் கொடுக்காம கேலி பண்ற.”
“சரி!”
“குமரன் கோவமா போறான்.”
“சரி!”
மூக்கைச் சுருக்கிக் கொண்டு புருவத்தை நெறித்தவன், இடது காலை ஓங்கி நிலத்தில் அடித்தான். அதற்கும் அவள் சரி என்று நக்கல் அடிக்க, முகத்தைக் கொனட்டிக் கொண்டு குளிக்கச் சென்றான். விம்மி விம்மி நடந்து குளியலறைக்குச் செல்லும் முன் அவள் முகத்தைப் பார்த்துவிட்டு, வெடுக்கென்று திரும்பியவன் கதவைச் சாற்றிக் கொள்ள, தேனிசை தேவி சிரித்த சிரிப்பில் தூக்கத்தைக் கலைத்தான் சூரியன்.
குளித்து முடித்துப் பந்தாவாகப் பிள்ளையை எழுப்ப அமர்ந்தவன், அரை மணி நேரமாகப் போராடிக் கொண்டிருக்கிறான். செல்லத் தந்தைக்குப் போக்குக் காட்டிக் கொண்டு, பிள்ளை சிணுங்கி உறங்க, “எழுப்பச் சொன்னா கொஞ்சிக்கிட்டு இருக்க…” என்றாள்.
“சத்தமா கூப்பிட்டா அன்பு பயப்படுவான்.”
“ஹான்! இப்படியே எழுப்பு ராசா, உன் பிள்ளை ஸ்கூலுக்குக் கிளம்பிடுவான்.”
“போம்மா, போய் வேலையைப் பாரு.”
“பின்ன உன்ன மாதிரி, வெட்டியா உட்கார்ந்தா இருக்கப் போறேன்.”
“குமரவேலனுக்குக் கோவம் வந்தா தாங்க மாட்ட.”
“இன்னைக்கு உனக்கு என்ன ஆச்சு? சிரிப்பு வர மாதிரியே பேசிட்டு இருக்க…”
கட்டியவளை முறைத்தவன் பிள்ளையின் காதில், “அன்பே… கொஞ்சம் எந்திரிடா. உங்க அம்மா என்னை ரொம்ப நக்கல் பண்றா. இந்தக் குமரன் மானத்தைக் காப்பாத்து.” எனக் கெஞ்சியும் பயனில்லை.
“ம்ஹூம்… ப்பே…”
“தங்க அன்பு”
“ங்ஙே… ங்ஙே”
“சரி சரி, அழாத அன்பே!”
பொய்யாகப் பிள்ளை அழ எழுப்புவதை நிறுத்தி விட்டான் தந்தையானவன். சமைத்துக் கொண்டிருந்தவள் நடுநடுவே இவனைக் கண்டு ஏளனமாகச் சிரிக்க, தலையைத் தொங்கப் போட்டுச் சமையலறைக்குள் நுழைந்தான். வந்தவனைக் கண்டு கொள்ளாது, சமையலைக் கவனித்துக் கொண்டிருக்க, “குடுமா, நான் அரிஞ்சி தரேன்.” எனக் காய்கறிகளை வாங்க முற்பட,
“உங்க கொள்கையைப் பாருங்க குமரவேலன்.” என்றாள்.
“ம்மா…”
……
“உன்னத்தாம்மா”
“ம்ம்!”
“ஒரு உதவி…”
“சொல்லு.”
“என் முகத்தைப் பார்த்துக் கேட்க மாட்டேங்குற. அப்போ இன்னும் நீ என்னை மன்னிக்கல.”
அவன் முகம் பார்க்கத் திரும்பினாள். தலையைத் தொங்கப் போட்டு உதட்டைப் பிதுக்கி, அடுப்பங்கரை மேடையை உரசிக் கொண்டிருந்தான் விரலால். அதைப் பார்த்ததும் சிரிப்பு வந்துவிட்டது. குட்டி அன்பு வளர ஆரம்பித்த பின், இது போன்ற பல முகங்களைப் பார்த்திருக்கிறாள் இவனிடம். இருவருக்குள்ளும் சகஜமான பேச்சு வந்ததற்கு, இது போன்ற முக பாவனையும் காரணம்.
பலமுறை ரசித்தும் இருக்கிறாள். அந்த ரசிப்பிற்குப் பின்னால் இருக்கும் உண்மையான காரணம் இன்று விடுதலை ஆகி விட, ரசனையின் சாயல் தூக்கலாக இருந்தது. அப்படியே பார்த்துக் கொண்டிருக்கலாம் என்ற எண்ணத்தைக் கலைத்தான்,
“பச்சப்புள்ள உதவி கேட்டு நிக்குது.” என்று.
சிரிப்பைச் சிறிதும் குறைக்காமல், “சொல்லு” என்றாள்.
“அன்பு என்னை ஏமாத்துவான். நீ எழுப்பி மட்டும் விடு, மத்ததை நான் பார்த்துக்கிறேன்.”
“அதெல்லாம் முடியாது.”
“ப்ளீஸ்மா…” என அவள் கை பிடிக்க, உறைந்து போனது கைகள்.
சிரிப்பை இடை நிறுத்தி உதடுகள் அப்படியே நின்று விட, விழிகளுக்குள் பார்வையால் கெஞ்சிக் கொண்டிருக்கும் குமரவேலன் முகம் அடி ஆழத்திற்குச் சென்றது. தன்னையே பார்த்துக் கொண்டிருப்பவளின் பார்வை உணராது, உதட்டைக் குவித்து உதவி கேட்க, தன்னால் தலை ஆடியது. உடனே அவள் கைகளை விட, உயிர் பெற்றுச் சுழன்ற உணர்வுகள் கைகளை ஏக்கமாகப் பார்த்தது.
தேனிசை தேவி கொடுத்த இரண்டாவது குரலுக்கு எழுந்தமர்ந்து விட்டான் அன்புக்கரசன். அன்னையின் குரலைத் தாங்க முடியாது ஒப்பாரி வைத்தவனை, அள்ளியணைத்துத் தோளில் போட்ட குமரவேலன் போராடிக் குளிக்க வைத்தான்.
“அய்… ம்ம் ஹான்!”
பல்வேறு ஓசைகளைக் கொடுத்துச் சிணுங்கும் குட்டி அன்புவை என்னவென்று கேட்க, “கூசுது!” என நெளிந்தான்.
“ஹா! ஹா! குட்டிக் குஞ்சான்!”
“புள்ளகிட்டப் பேசுற பேச்சா இது?”
“இவன் என்னமோ பெரிய மனுஷன் மாதிரிக் கூச்சமா இருக்குன்னு சொல்றான்.”
“அவனுக்கு அஞ்சு வயசு ஆயிடுச்சு.”
“இது ஒரு வயசாம்மா?”
“இன்னும் அஞ்சு ஆறு வருஷத்துல, மீசை முளைக்கிற அளவுக்கு வளர்ந்திடுவான்.”
“அப்பவும் அன்பு குழந்தை தான்…”
“ம்ம்! அவன் வளர்ந்து கல்யாணம் பண்ணி ஒரு குழந்தையைப் பெத்தா கூட உனக்குக் குழந்தையாதான் தெரிவான்.”
ரசனையாகத் தலையசைத்தவன், “அன்பு வேகமாக வளர்ந்துட்டுப் போறான்ல.” என்றிட, “நீதான் இன்னும் வளராம இருக்க.” எனச் சிரித்தாள்.
எப்போதும் தன்னை வம்பிழுக்கும் மனைவியின் பேச்சில் முறைத்தவன், மகனைத் தூக்கிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்துவிட, அழகுக்கு மேல் அழகாகத் தெரிந்தது அவன் நடவடிக்கைகள். இருவரும் ஆட்டம் போட்டுக் கிளம்பும் அழகை ரசித்தவள் காலை உணவை எடுத்து வைக்க, நேற்று இரவு நியாபகத்திற்கு வந்தது.
குட்டி அன்புக்கு உணவை ஊட்டி முடித்தவன் வெற்றிகரமாகக் கையசைக்க, “ரெண்டு பேரும் பார்த்துப் போங்க.” வழி அனுப்பி வைத்தாள்.
அப்பனும், பிள்ளையும் சென்ற பின் வீடு வீடாகவே தெரியவில்லை அவளுக்கு. அவன் திரும்பி வரும் வரை சோகமாக அமர்ந்திருந்தவள், வண்டி சத்தத்தைக் கேட்டு மலராக மலர்ந்தாள். முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தவனைக் கண்டு புன்னகைக்க, “அழுறான்” என்றான்.
“அப்படித்தான் இருக்கும், சரியாயிடுவான்.”
“விட்டு வர மனசே இல்ல.”
“விட்டுத்தான ஆகணும்.”
“ம்ம்!” என்ற பெருமூச்சோடு அமர்ந்தவனுக்குத் தேநீர் போட்டுக் கொடுத்தவள், “பாட்டு சூப்பரா இருந்துச்சு” என்றாள்.
“வாய்க்கு வந்ததைப் பாடுனேம்மா.”
“உண்மையா ரொம்ப நல்லா இருந்துச்சு. நீயா இதுன்னு ஒரு நிமிஷம் அசந்து போயிட்டேன்.”
மெல்லியதான புன்னகை இதழோரம் தவழ, “ஸ்கூல் படிக்கும்போது அப்பப்போ பாடிட்டு இருப்பேன். அப்புறம் அப்படியே விட்டாச்சு.” என்றான்.
“அத்தை இன்னும் வரல.”
“முத்துக்கு உடம்பு முடியலன்னு போன் பண்ணி இருந்தாங்க.”
“என்னவாம்?”
“வயித்தால போகுதாம். ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போகணும்னு சொன்னாங்க.”
“நீ கூட்டிட்டுப் போ”
“அன்புவை யார் கூட்டிட்டு வரது?”
“நான் கூட்டிட்டு வரேன். நீ பாட்டியைக் கூட்டிட்டு ஆஸ்பத்திரிக்குக் கிளம்பு.”
“ரொம்ப வயசாயிடுச்சு முத்துக்கு.”
“என்ன?”
“ஒன்னும் இல்லம்மா…”
“உன் முகமே சொல்லுது. என்னன்னு சொல்லு.”
“முத்துவக் கூட இருந்து பார்க்க முடியலன்னு கவலையா இருக்கு.”
அவன் மடி மீது கை வைத்துத் தட்டிக் கொடுத்தவள், “நீ போய் பார்த்துட்டு வரலாம்ல.” கேட்க, “நான் எப்படிம்மா அந்த வீட்டுக்குப் போவேன்?” பதிலுக்குக் கேட்டான்.
“வயசானவங்களால நடந்து வந்து உன்னப் பார்க்க முடியாது. இன்னும் எத்தனைக் காலத்துக்கு அவங்க இருக்கப் போறாங்க. எல்லாத்தையும் மறந்துட்டுப் போய் பார்த்துட்டு வா.”
“பார்க்கணும்னு ஆசை இருந்தாலும், அந்த வீட்டுக்குள்ள போக மனசு வரமாட்டேங்குது. வருஷம் ஓடினாலும், மனசுல ஏற்பட்ட தழும்பு விட மாட்டேங்குது. என்னால என் அம்மாவுக்கும், முத்துக்கும் ரொம்பக் கஷ்டம். என்னைப் பெத்து வளர்த்ததுக்கு அவங்களுக்கு நான் எதுவுமே பண்ணல.”
“இப்படி வருத்தப்படுறதுக்குப் பதிலா போய் பாருன்னு சொல்றேன்.”
“இல்லம்மா” என எழுந்தவன் கையைப் பிடித்தவள், “சரி, அங்க போக வேண்டாம். ஆஸ்பத்திரிக்கு ஆச்சும் கூட்டிட்டுப் போ.” என்றாள்.
“சரி!” என்றவனின் சோர்வு அவளையும் தாக்கியது. அவன் மனதை மாற்ற எண்ணி, “அவங்களை வேணா ரெண்டு நாள் இங்க இருக்கச் சொல்லுவோமா?” என்றவள் முகம் பார்த்தான்.
“ஆஸ்பத்திரில இருந்து நேரா இங்க கூட்டிட்டு வந்துடு. உன்னையும், அன்பையும் பார்த்தா சீக்கிரம் உடம்பு சரி ஆகிடும்.”
“முத்து இல்லாம அம்மாக்கு இன்னும் கஷ்டமா இருக்கும்.”
“அப்போ அத்தையையும் இங்கயே இருக்கச் சொல்லிடுவோம்.”
“வேணவே வேணாம்மா”
“அவங்களுக்கும் ஆசை இருக்கும்ல. பாவம் அத்தை! தினமும் இந்த வீட்டுக்கும், அந்த வீட்டுக்கும் நடையா நடக்குறாங்க. எப்பத்தான் அவங்களுக்கு ஓய்வு கிடைக்கிறது?”
“கூப்பிட்டா அம்மா வருவாங்களான்னு தெரியல.”
“நீ எப்போ கூப்பிடுவன்னு காத்துட்டு இருக்காங்க.”
அவள் சொன்னதை ஏற்றுக் கொள்ள மனம் இல்லாமல் பேசிக் கொண்டிருந்தவன் வாயை மூடியவள், “ரெண்டு பேரும் இங்க இருக்கணும், அவ்ளோதான்.” கட்டளை போட்டாள்.
சின்னத் தயக்கத்தோடு கிளம்பியவனைப் பிடித்தவள் சாப்பிட வைத்து வழி அனுப்ப, முத்துமாரியை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான். வயது மூப்பின் காரணமாக, உடல் உபாதைகளுக்கு மருந்துகளை வாங்கிக்கொண்டு, அழைத்து வரும் வழியில் தேனிசையின் விருப்பத்தைத் தெரிவிக்க, ஆனந்தம் தாங்கவில்லை அந்த முதியவருக்கு.
“என் பேத்திக்கு இருக்குற அக்கறைகூட உனக்கு இல்ல ராசா.”
அவர் உள்ளத்தைப் படிக்காது போன முட்டாள்தனத்தை எண்ணி வருந்தியவன் விஷயத்தை இந்திராவிடம் பகிர, கணவனை நினைத்து ஒரு நொடி யோசித்தவர் சம்மதம் சொன்னார். முத்துமாரியைத் தன்னுடைய வீட்டில் விட்டவன், பிள்ளையை அழைக்கக் கிளம்ப, அவன் முகத்தில் தெரியும் தெளிவைக் கண்டு மனம் பூரித்தாள்.
***
வீட்டை விட்டு வெளியேறும் முன், மகன் வீட்டிற்குச் சென்று வருவதாகப் பந்தாவாக இந்திரா கிளம்ப, தனிமை எனும் இனிமை மிகக் கொடுமை என்பதை உணர்ந்தார் பேச்சியப்பன். அவரை விட மோசமான தனிமை அவர் நண்பர் பொன்ராசுவிற்கு. அறுவை சிகிச்சை செய்த இரண்டு வருடத்திற்கு வீடே கதி என்று இருந்தார். உடம்பில் எங்கு வலி எடுத்தாலும், இதயத்தைப் பிடித்துக் கொண்டு பதற ஆரம்பித்தார்.
அவருக்குப் பக்கத்து அறையில் கருப்பன். வாழ்க்கை என்றால், என்ன என்பதை இந்த ஐந்து வருடம் புரிய வைத்துவிட்டது அவனுக்கு. பவானி மட்டும் இல்லை என்றால், இவன் நிலைமை என்ன ஆகியிருக்கும் என்பதை யோசிக்கக்கூடத் தயாராக இல்லை. செய்த தவறும், தானே ஏற்படுத்திய பாவங்களும் துரத்தியது. மகன் என்பதற்காகத் தன்னை மன்னித்துச் சேவை செய்யும் தாயைக் கையெடுத்துக் கும்பிடக் கூட முடியவில்லை.
பேரன் பிறந்த இரண்டு மாதம் கழித்துதான் பார்த்தார். அள்ளி அணைத்து மகிழ்வதற்குப் பதில் அழுகைதான் முட்டிக்கொண்டு வந்தது அவருக்கு. நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் பார்த்துவிட்டுச் செல்வார். இந்திரா, மனதில் பதிந்த அளவிற்குப் பவானி பதியவில்லை குட்டி அன்புவிற்கு. மகள் வாழ்க்கை, நல்லபடியாகச் சென்று கொண்டிருக்கிறது என்ற ஒரே ஆனந்தம் மட்டும் தான் இப்போதைக்கு அவருக்கு.
சிரித்த முகமாக வந்து கொண்டிருக்கும் இந்திராவை நிறுத்திய காமாட்சி காரணம் கேட்க, “என் மகன் வீட்டுல தங்கலாம்னு வந்திருக்கேன்.” என்றவர் அணிந்திருந்த நகையெல்லாம், காணாமல் போய்விட்டது பளிச்சென்று மின்னிய சிரிப்பில்.
இந்திரா பட்ட கஷ்டத்திற்கெல்லாம் இந்த மகிழ்வு அவசியம் என்பதால், “பாட்டியையும் பேரனையும் கைலயே பிடிக்க முடியாது.” என்றார்.
“ராசாவைதான் இன்னும் காணும்.”
“காலைல போகும் போதே அப்பனும் மகனும், சும்மா இருந்த என் புருஷனை வம்பு இழுத்துட்டுப் போயிருக்காங்க. வந்து என்ன கூத்து அடிக்கப் போறாங்களோ?”
“எத்தனை தடவை சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறான்.”
“விடு இந்திரா. புள்ளைங்க, பேரன், பேத்திங்க எல்லாம் எங்கயோ இருக்குங்க. இவன்தான் அப்பப்ப எங்களைச் சந்தோஷப்படுத்திட்டுப் போறான்.”
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது தந்தையின் வாகனத்தை வாயில் ஓட்டியபடி வந்தவன், “பாட்டி!” என்றழைத்துத் தாவிக்கொள்ள, “வந்துட்டானுங்க.” குறைப்பட்டுக் கொண்டார் முதியவர் சந்தானம்.
“பாட்டுப் போடு பெருசு…”
“தாத்தாவ அப்படிச் சொல்லக் கூடாது ராசா”
பாட்டி சொன்னதும் சமத்துப் பிள்ளையாகத் தலையசைத்தவன் சந்தானத்தைக் கண்டு முகத்தை மாற்ற, “அப்படியே அப்பன மாதிரி.” எனக் குமரனைச் சிரிக்க வைத்தார்.
***
குமரன் வீட்டில் பேச்சின் சத்தங்கள் ஓயாமல் கேட்டுக் கொண்டிருந்தது. வெகு வருடங்கள் கழித்து, அன்னை, பாட்டியோடு அமர்ந்து மனம் விட்டுப் பேசிக் கொண்டிருந்தான். குட்டி அன்புவைக் கையில் பிடிக்கவே முடியவில்லை. முதல்முறை, நாள் முழுவதுமாகப் பள்ளியிலிருந்து விட்டு வந்த தருணத்தைக் கதை கதையாக அளந்தான். வயதானவர் சிரிக்க முடியாமல் சிரித்துப் படுத்து விட, முத்துமாரியின் கால் பிடித்து விட்டான் குமரவேலன்.
“இப்படி உன்னப் பார்க்க எவ்ளோ சந்தோசமா இருக்கு தெரியுமா ராசா. இதைப் பார்க்காமல் போயிடுவனோன்னு பயந்துட்டு இருந்தேன்.”
“ஏன் முத்து இப்படிப் பேசுற. எனக்கு என்ன நான் ரொம்ப நல்லா இருக்கேன்.”
“நல்லா இருக்கணும் ராசா.” என்றவர் தேனிசையைப் பார்த்துக் கொண்டே, “உன் பொண்டாட்டிகிட்ட சகஜமா பேசுறியா ராசா” விசாரித்தார்.
“பேசாம?”
“ஐயோ!” எனக் குறைப்பட்டுக் கொண்டவர், “இங்க வா ராசா…” என்றழைத்தார்.
விவரம் புரியாமல் அவரை நெருங்கி அமர்ந்தவன் காதில், “மூத்த பிள்ளைக்குத் துணைக்கு ஒன்னு கொடுக்கச் சம்மதம் சொல்லிட்டாளா?” நாசூக்காகச் சேர்ந்து விட்டீர்களா என்று விசாரித்தார்.
“அய்ய… என்ன பேச்சு முத்து இது? எங்களுக்கு அன்பு மட்டும் போதும்.”
“அடப் போடா கிறுக்குப் பயலே! நீ ஒத்தப் புள்ளையா போனதால தான், நல்லது கெட்டதுக்கு உன் கூட நிற்க ஆள் இல்லாம இருக்கு. மூத்தவனுக்கு அஞ்சு வயசு ஆயிடுச்சு. தள்ளிப் போடாம சட்டுனு பெத்துப் போடுங்க. அதையும் என் கண்ணால பார்த்துட்டுக் கண்ண மூடுறேன்.”
அவர் வார்த்தையில் விருப்பமில்லாதவன் அந்தப் பேச்சைத் தவிர்த்திட, “ஏம்மா” பேத்தியை அழைத்தார்.
“என்ன ஆச்சி?”
“இவன் பதில் சொல்லத் தயங்குறான், நீயாது பட்டுன்னு போட்டு ஒட…”
என்னவென்று புருவத்தைச் சுருக்கி குமரனிடம் விசாரிக்க, அவனோ வாயை மூடும்படி சைகை செய்து கொண்டிருந்தான் முத்துவை. பேரன் செய்கைகளைக் கண்டு கொள்ளாதவர், “அன்புக்கு வயசு ஆகுதே, எப்போ தங்கச்சி வரும்?” சத்தமாகக் கேட்க, இந்திரா கண்டும் காணாமல் இருந்து கொண்டார்.
அவரால் இதைப்பற்றி மகனிடமும், மருமகளிடமும் பேச முடியாது. அவர்களுக்குள் என்ன நடக்கிறது என்று தெரியாமல் பெத்த மனம் கடவுளை நாடிக் கொண்டிருக்கிறது. வேண்டிய தெய்வம் வீடு வந்து கேட்டது போல் முத்துமாரி கேட்டு விட, மருமகள் சொல்லப் போகும் பதிலுக்காக ஆவலாகக் காத்திருந்தார்.
அவளுக்கோ சங்கடமான நிலை. என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் நெளிந்து கொண்டிருந்தவளின் அவஸ்தை புரிந்து, “பேசாமல் படு முத்து.” என்றவன் கண்ணசைத்தான் அவளைச் செல்லும்படி.
பேரனை வாய்க்குள் வசை பாடியவர் அமைதியாகப் படுத்துக்கொள்ள, கட்டியவளைத் தேடி நகர்ந்தான். சமையலறையில் நின்று கொண்டு முத்துமாரி பேசியதைப் பற்றித் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தாள். அவளை இரு நொடி கவனித்து நின்றவன், “முத்து தெரியாம பேசிடுச்சு. நீ ஒன்னும் மனசுல வச்சுக்காதம்மா.” என்றான்.
“அவங்க பேசுனதுல தப்பு ஒன்னும் இல்லையே.”
தேனிசை தேவியின் முகத்தை அழுத்தமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். அவளும் சலிக்காமல், நின்றிருந்த அவனைப் பார்த்துக் கொண்டிருக்க, “தப்பு இல்ல. ஆனா…” இழுத்தான்.
“நான் ஒன்னும் மனசுல வச்சுக்கல.”
“சரிம்மா”
அவள் மனம் புரியாமல் குமரவேலன் நகர, சென்றவனின் நினைவு தான் வேறு எங்கும் கவனத்தைத் திருப்ப முடியாமல் சுற்றி வந்தது. அதன்பின் சகஜமாகப் பேச ஒரு மாதிரியாக இருந்தது தேனிசைக்கு. அவள் செயலைத் தவறாகப் புரிந்து கொண்டவன், “அம்மா கூட இரு அன்பே” என மகனை அனுப்பி வைத்தான்.
***
இரவு ஐந்து பேரும் நிலாச் சோறு சாப்பிட வெளியில் அமர்ந்தார்கள். மனைவியின் துணையோடு, தடியைப் பிடித்தபடி வந்த சந்தானத்திற்கு இருக்கையைப் போட்டு அமர வைத்தவன், “இன்னைக்கு ராத்திரி இங்கயே படுத்துக்க கிழவா.” என்றான்.
“உங்க தொல்ல இல்லாம ராத்திரிதான் நிம்மதியா தூங்குறேன். அது பொறுக்கலையாடா உனக்கு.”
முறைத்தவனை அடக்கி அமர வைத்த தேனிசை அனைவருக்கும் உணவு பரிமாற, குட்டி அன்புக்கு ஊட்டி விட்டபடி சாப்பிட ஆரம்பித்தார் இந்திரா. குமரவேலன், தேனிசை தேவியின் பக்கத்தில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
எப்போதும் இருவருக்கும் நடுவில் இடைவெளியும், அன்புக்கரசனும் அமர்ந்திருப்பார்கள். இன்று தான் இவ்வளவு நெருக்கமாக அமர்ந்திருக்கிறார்கள். அவனையும் அறியாமல், மனைவியின் முட்டியோடு அவன் முட்டியை உரசிக் கொண்டிருந்தான். அதை உணர்ந்தவளுக்கு உணவு இறங்கவில்லை. ஒவ்வொரு பருக்கையாக எண்ணிக் கொண்டிருந்தாள். அதை கவனித்த காமாட்சி சாப்பிடச் சொல்ல, கவனத்தைத் திருப்பிச் சாப்பிட ஆரம்பித்தாள்.
“ம்மா அதை எடு” என அவள் தொடையைச் சீண்ட, மீண்டும் மனம் அவனிடம் சென்றது.
கேட்டதை எடுத்துக் கொடுக்காமல், தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் தேனிசையைத் தீண்டியவன், “என்னம்மா?” கேட்க, வரும் வெட்கத்தை மறைத்துக் கொண்டு தலையசைத்தாள்.
அவன் கேட்டதை எடுத்துக் கொடுத்தவள், தன்னை மறந்து சாப்பிட உச்சி மண்டையில் புரை ஏறியது. அவள் கை தலையைத் தட்டுவதற்குள், அழுத்தமான கரம் ஒன்று உச்சந்தலையில் பதிந்து அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்க, புரை நின்றதை அறியாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அதைப் பற்றிக் கவலை கொள்ளாதவன்,
“தண்ணிய எடுங்கம்மா” என வாங்கியதை மனைவியின் கையில் கொடுத்து, “மெல்லச் சாப்பிடக் கூடாதா? இந்தா, தண்ணி குடி.” என வாயில் வைத்தான்.
தண்ணீர் இறங்க மறுத்தது தொண்டைக் குழியைத் தாண்டி. அந்த நிலவு இருட்டிலும் அவன் முகம் மயக்கியது. குடிக்காமல் தன்னைப் பார்ப்பதைக் கண்டு சொம்பில் அழுத்தம் கூட்ட, எச்சிலை விழுங்கித் தன்னை நிலைப்படுத்தப் போராடினாள்.
பாட்டி மடியில் இருந்தவன், தாய் மடிக்குத் தாவி என்னவென்று கேட்கும் வரை சுயநினைவு எட்டாதவள், சுற்றி இருக்கும் ஆள்களைக் கருத்தில் கொண்டு தலை குனிந்து கொள்ள, அவள் மீதான கருத்தை மாற்றிக் கொள்ளாமல் சாப்பிடும் வேலையில் மூழ்கிப் போனான் குமரவேலன்.
நல்ல சூழ்நிலை அங்கு நிலவிக் கொண்டிருக்க, ஒருத்தி மட்டும் ஒருவனைப் பார்வையால் பின் தொடர்ந்து கொண்டிருந்தாள். வெளியில் ஜமுக்காளத்தை விரித்த காமாட்சி, அதன்மேல் நான்கு ஐந்து போர்வைகளை விரித்துத் தன் கணவனுக்குப் படுக்கையைத் தயார் செய்ய, வீட்டிற்குள் படுத்து விட்டார் முத்துமாரி. அவர் பக்கத்தில் இந்திரா பேரனைச் சேர்த்தணைத்துப் படுத்துக் கொள்ள, இருவர் மட்டும் மீதம் இருந்தார்கள்.
இத்தனைப் பெரியவர்களுக்கு முன்னால் தனியாகப் படுக்க முடியாது. இருவருக்கும் நடுவில் தூணாக இருக்கும் அன்புக்கரசனும் இன்று இல்லை. வேண்டும் என்றுதான் இந்திரா தன் பேரனைத் தன்னுடன் வைத்துக் கொண்டார். தினமும் இங்கு வருவதும், சிறிது நேரத்தில் போவதுமாக இருப்பதால் அவரால் இங்கு நடப்பதைக் கவனிக்க முடியவில்லை. ஆனால், பெற்றோருக்குத் தெரியும் இங்கு எந்த முன்னேற்றமும் இல்லை என்று. தங்கச் சம்மதித்ததற்கு முதல் காரணமே இதுதான். எப்படியாவது இங்கிருந்து செல்வதற்குள், இருவருக்குள்ளும் இருக்கும் இடைவெளியைக் கொஞ்சமாவது குறைக்க இந்த ஏற்பாடு.
தன்னைத் தயார்படுத்திக் கொண்டவள் சுவர் பக்கம் படுத்துக்கொள்ள, கொஞ்சம் இடைவெளி விட்டு அவள் பக்கத்தில் படுத்தான் குமரவேலன். மூச்சு முட்டுவது போன்று இருந்தது இருவருக்கும். இருந்த ஒரு தலையணையை அவனுக்கு வைத்துவிட்டுத் தரையில் கை வைத்துப் படுத்தவள் பக்கம், அதை நகர்த்தி விட்டான். சுவரைப் பார்த்தபடி இருந்தவள் திரும்பிப் படுத்தாள்.
அவள் பக்கம் பார்வையைத் திருப்பாமல், திடமாகத் தன்னை வைத்துக் கொள்ள முயன்றவனுக்குச் சிந்தனைகள் சிதறியது. ‘தன்னைப் பற்றி என்ன நினைப்பாள்?’ என்ற கேள்வி தலைக்கு மேல் குடைந்தது. இவர்களை இங்கு வரவழைத்திருக்கக் கூடாது என்று தாமதமாக உணர்ந்தவன், விடிந்ததும் மன்னிப்புக் கேட்க எண்ணிக் கொண்டான்.
இவன் கேட்கப் போகும் மன்னிப்பு, எந்த விதத்திலும் ஆனந்தத்தைக் கொடுத்துவிடப் போவதில்லை தேனிசைக்கு. உள்ளம் நடுங்கினாலும், இந்தத் தருணத்தை மெல்ல ஏற்க ஆரம்பித்தாள். இருக்கும் சின்ன இடைவெளி பாதுகாப்பாகவும், அதே நேரம் அவளை அவனிடம் இருந்து பிரிப்பதாகவும் எண்ணினாள். அதற்கு மேல் தன்னை நெருங்க வைக்க முடியாமல் போராடியவள், இரவு முழுவதும் தூக்கத்தைத் தொலைத்தாள்.
தெம்மாங்கு ஒலிக்கும்…