Loading

தெம்மாங்கு 36

 

மதியம்போல், மாமியாரோடு பேச்சுக் கொடுத்துக் கொண்டு மகனை அழைக்க நிற்க, அனைத்துப் பிள்ளைகளும் வந்ததே தவிர குட்டி அன்புவைக் காணவில்லை. கடைசியாக வருவான் என்று இருவரும் எட்டிப் பார்த்து ஏமாந்து போய், உள்ளே சென்று விசாரித்தார்கள்.

 

“உங்க பையன உங்க வீட்டுக்காரர் வந்து கூட்டிட்டுப் போயிட்டாரு.”

 

“எப்போ?”

 

“விட்டுட்டுப் போன கொஞ்ச நேரத்துலயே கூட்டிட்டுப் போயிட்டாரு.”

 

குமரன் அவளோடு சென்றதால், வேறு யாராவது அழைத்துச் சென்றிருப்பார்கள் என பயந்தவள், “அவரா இருக்காது. என் பையனை யார் கூட அனுப்பி வச்சீங்க? உங்களை நம்பித்தான விட்டுட்டுப் போனேன்.” சத்தம் போட்டாள்.

 

முன் வரிசைப் பற்கள் உள்ளங்கையில் மருதாணியாய் பதிந்திருக்க, “நீங்க கிளம்பிப் போன கொஞ்ச நேரத்துலயே உங்க வீட்டுக்காரர் வந்து ரகளை பண்ணி, அதுக்கு உங்க பையனும் அழுது… இங்கப் பாருங்க, எப்படிக் கடிச்சிருக்கான்னு. இப்படி இருந்தா எப்படிங்க குழந்தை ஸ்கூலுக்கு வரும். உங்க வீட்டுக்காரரைத் தயவு செஞ்சு அடக்கி வைங்க. இல்லன்னா, வேற ஸ்கூல் பார்த்துக்கோங்க.” என்றிடப் பற்களைக் கடித்தாள் தேனிசை தேவி.

 

அடுத்த நிமிடம் அங்கு இல்லை. தேய்ந்து போன செருப்பைத் தேய்த்து, மொத்தமாக முடித்து விடும் அளவிற்கு வேகமாக நடந்தாள். மருமகளின் நடைக்கு ஈடு கொடுக்க முடியவில்லை மாமியாரால். மகன் செய்த செயலில் அவருக்கும் கோபம் என்றாலும், மருமகளின் கோபத்தைக் கண்டு மகனைக் காப்பாற்ற அவள் கூடவே நடந்தார்.

 

பத்ரகாளியாய், வீட்டு எஜமானி தங்களைத் தேடி வருவதை அறியாத இரு குறும்புக்காரர்களும், ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவன் மட்டுமே வேலை பார்த்துக் கொண்டிருந்த நிலத்தில், விவசாயம் பெருகியதால் நான்கு, ஐந்து நபர்களைத் துணைக்கு வைத்திருக்கிறான். நாத்து நடும் நேரம், பாட்டுப் பாடி நெற்பயிருக்கும், நன்றாக விளைச்சலைக் கொடுக்கும் நிலத்திற்கும் உற்சாகத்தைக் கொடுப்பவர்கள், இன்றும் அதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். 

 

எப்போதும் பாடும் வயதான பெண்மணி இன்று வேலைக்கு வரவில்லை. பிள்ளையை அழைத்துக் கொண்டு வேகமாகத் தன்னிடத்திற்கு வந்தவன், மதிய நேரம் போல் வீட்டிற்குச் சென்று விடலாம் என்று கணக்குப் போட, இங்கு நடந்த கூத்தில் நேரத்தை மறந்து விட்டான். 

 

நீரும், மணலும் குழைந்து சேறாகத் தேங்கியிருக்க, நீர் பாய்ச்சிக் கணுக்கால் மூழ்கும் அளவிற்குப் பதப்படுத்தி வைத்திருந்தான். நடும் நாத்துக்களை கையில் அள்ளிச் சேற்றில் இறங்கத் தயாரானவனை முந்திக்கொண்டு இறங்கினான் அன்புக்கரசன். அந்த முற்றாத கைகளில், போதும் என்ற அளவிற்கு நாத்துகள். அன்னை, ஆசையாகத் தைத்துக் கொடுத்த பள்ளிச் சீருடை சேற்றில் காணாமல் போனது. 

 

மகன் குதித்த அழகைப் போதுமென்றவரை ரசித்தவன், “எல்லாரும் வேலையை ஆரம்பிங்க.” என்றான்.

 

தன் மகன் கைப் பிடித்து முதல் நாற்றை நல்ல முறையில் நட்டு வைத்தவன், “மகேஸ்வரி அக்கா இன்னைக்கு வேலைக்கு வரல. பாட்டு பாடத் தெரிஞ்ச யாராது பாடுங்க.” கேட்க, அங்கிருந்தவர்கள் பேசிக்கொண்டனர்.

 

தங்களுக்குப் பாட வராது என மொத்தமாக ஒதுங்கிக்கொள்ள, “குமரா…” என்றழைத்தான்.

 

“அன்பே!”

 

“நீ பாடு…”

 

“நானா?”

 

“ம்ம்!”

 

“என்ன பாடுறது?”

 

“தெம்மாங்குப் பாட்டுப் பாடு…” 

 

மகன் ஆசைக்காகப் பாட முடிவெடுத்தவனுக்கு வார்த்தைகள் வரவில்லை. குனிந்து வேலை செய்து கொண்டிருந்தவன் நெற்றியில், வேர்வைத் துளிகள் உருண்டு வந்து நிலத்தில் விழுந்தது. அதைக் கவனித்த அன்பு துடைத்து விட, அவன் கையில் இருந்த சேறு மொத்தமும் குமரன் முகத்தில். மகன் செயலில் தந்தையானவன் மனம் உருகித் தெம்மாங்குப் பாட்டைத் தொடங்கினான்.

 

“தங்கப்புள்ள நாத்து நடுது 

நானே..நானானே…

மண்ணு கூடப் பொன்னா போகும் தன்னேனன்னானே…

நெல்லு மணிப் பல்லு அவன்

ராசா துரையே…

முத்துக்கல்லு தோத்துப் போகும்

நானே..நானானே… தானே

தன்னேனன்னானே…” 

 

குமரன் குரலில் இருக்கும் வளத்தை ரசித்த அங்கிருந்தவர்கள் பாடுபடிக் கேட்க, வாய்க்கு வந்ததைப் பாடியவன் அதற்கு மேல் முடியாது என்று விட்டான். எப்படிச் சொன்னால் அவன் கேட்பான் என்பதை ஐந்து வருடமாகப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் அன்புக்கரசனைத் தூது விட, “பாடு குமரா” என்றான்.

 

தந்தை பாட, நாத்து நட மறந்தவன் ஆட்டம் போட்டான். மகனின் ஆட்டத்தில் உற்சாகம் பிறப்பெடுக்க, அந்த வேலைகளை அப்படியே போட்டவன் அமர்ந்து பாட ஆரம்பித்தான். வெயிலின் தாக்கத்தைத் தணிப்பதற்காக, அங்கு வைத்திருந்த பானையைத் தட்டி இசையை உருவாக்கியவன் தன்னை மறந்து தெம்மாங்கில் மூழ்கிப் போனான்.

 

நடக்கும் தெம்மாங்குக் கச்சேரியை அறியாதவள் வேகத்தைக் குறைக்காது வந்தடைய, “எதுக்குக் கூட்டிட்டு வந்தான்னு தெரியல, பொறுமையா கேளு.” மகனுக்காகப் பரிந்துரை செய்தார் இந்திரா.

 

“எதுக்குக் கூட்டிட்டு வந்தாருன்னு உங்களுக்குத் தெரியாதா? இதெல்லாம் நல்லாவா இருக்கு. இப்படியே அவர் கைக்குள்ளயே அவனை வச்சிருந்தா எங்க இருந்து உலகம் தெரியும். உங்க மகன் ஸ்கூலுக்குப் போகும் போது சிரிச்சிக்கிட்டா போனாரு. அவர் அழுறதைப் பார்த்தும், விட்டுட்டுத்தான வந்தீங்க. இவர் என்னமோ, ஊரு உலகத்துல இல்லாத அதிசய அப்பா மாதிரி நடந்துக்குறாரு. இன்னைக்கு ரெண்டு பேரையும் என்ன பண்றன்னு பாருங்க.” 

 

“பிள்ளையைப் பிரியுற ஏக்கத்தைத் தாங்கிக்க முடியாம பண்ணிட்டான்.” 

 

“எனக்கு ஏக்கம் இல்லையா? இவர் கொடுக்குற செல்லத்துல அவன் யாரையும் மதிக்க மாட்டேங்கிறான்.” 

 

விருவிருவென நடந்தவள் நடையை வைத்து, நடக்கப் போவதைக் கணித்துப் பயம் கொள்ள ஆரம்பித்தார் இந்திரா. வரப்பில் பூத்திருந்த புல்கள் புடவையைத் தடுப்பதைக் கண்டு எரிச்சல் உற்றவள், கால்களை உதறி வீசிக் கோபத்தை வெளிப்படுத்திக் கொண்டு நடக்க, குமரனின் சத்தம் காதில் விழுந்தது. பின்னால் வந்த இந்திரா, மகனை நினைத்துத் தலையில் அடித்துக் கொண்டார். 

 

பிள்ளையைப் படிக்க விடாமல், பாதியில் அழைத்து வந்து கச்சேரி நடத்தும் குமரனை, அடித்துத் துவைக்கும் நோக்கோடு நடையில் வேகத்தைக் கூட்டினாள். 

 

தந்தையின் தெம்மாங்கு இசையில் நனைந்த ரசிகன், “பாட்டிக்குப் பாடுங்க.” என்றான்.

 

“தங்கமயிலு அன்னமயிலு 

ஓஹோ… தன்னேனன்னானே…

பூவா சிரிக்கும் பொன்னுமயிலு 

நானே நானானே

கல்லு நெஞ்ச சிங்கத்துக்கு கட்டுப்பட்டே 

தன்னேனன்னானே… 

வாழ்க்கை போச்சு சின்ன மயிலு…

தன்னேனன்னானே…

ஒத்தப் பிள்ளை மகராசன் 

நானே நானானே…

பெத்தமடி சுகம் கொடுக்கும்

தன்னேனன்னானே… 

ஆமா… தன்னேனன்னானே…” 

 

என்ற பாடலைக் கேட்டுக்கொண்டு வந்து நின்றாள் தேனிசை தேவி. அவளுக்குப் பின்னால் வந்த இந்திரா, மகன் பாடலில் உள்ளம் உருகிப் பெருமிதம் கொள்ள, நின்றவள் கால்கள் அங்கேயே நின்று விட்டது.

 

பானையை இடது கையில் வளைத்துக் கொண்டவன், கல்லை வைத்துத் தாளம் போட்டு நடனமாடிக் கொண்டே பாட்டு பாடிக் கொண்டிருந்தான். கட்டி வந்த வெள்ளை வேட்டிக் கரையில் கலர் மாறி இருக்க, அதை முட்டி வரை ஏற்றிக் கட்டி இருந்தான். சட்டை அணியாமல், வெள்ளை பனியன் வேர்வையில் ஈரமாகிக் கசகசவென்று இருந்தது. 

 

மூப்பத்து ஆறு வயதாகியதால், உற்று நோக்கினால் தெரியும் அளவிற்குச் சின்னத் தொப்பை. தளராமல் இறுக்கமாக இருக்கும் கைகள், தாளம் போட்டுத் தன் வலுவைக் காட்டிக் கொண்டிருந்தது. அத்தனைக்கும் நடுவில், பளபளத்த அவன் பற்கள் சூரியனுக்கே வெளிச்சம் கொடுத்தது. 

 

பக்கத்தில் இருந்த தென்னை மரத்தில் அப்படியே சாய்ந்தாள். அங்கொருத்தி தன்னைப் பார்ப்பதை அறியாமல், “அம்மாக்கு ஒரு பாட்டுப் பாடு” என்ற மகனுக்காகப் பாடத் துவங்கினான்.

 

“பட்டுக்கொடி பதுமைப் பொண்ணு

தன்னேனன்னானே…

அல்லி ராணி பேத்தி அவ…

நானே..நானானே… ஐசா…

வெட்டி வீசும் கண்ணு அது கத்திக் கூர்மையே

நானே..நானானே… தன்னேனன்னானே

ராசன் என்னைக் கிழிக்கும் பொண்ணு 

கண்ணு கத்திக் கூர்மையே…

அய்யோ… நானே நானானே…

தன்னேனன்னானே

 

பத்து பவுன் தங்கத்துக்கு மவுசு சேர்க்குமே நானே..நானானே…

பேச்சு மொத்தம் ஆள சாய்க்கும்

தன்னேனன்னானே…

என்னை மொத்தமா சாச்சி நைசா…

தட்டித் தூக்குமே தன்னேனன்னானே… நானே நானானே…

 

மகாராணி பொண்ணு இப்போ

தத்தளிக்குதே என்னால…

சிக்கி தவிக்குதே தன்னேனன்னானே… தன்னேனன்னானே…

அல்லிராணி சின்னப்பொண்ண நல்லா வச்சு அழகு பார்க்கணுமே…

நானே நானானே தன்னேனன்னானே…

 

மல்லி சிரிப்புல வானம் தொடனுமே நானே நானானே…

தன்னேனன்னானே…

பட்டு உடம்புக்கு இறகு கட்டனுமே

நானே..நானானே…

நோகாம சுகமா வைக்க மயில் இறகு

தைக்கனுமே… 

நானே..நானானே… தன்னேனன்னானே…” 

 

 

ஒரு நொடி கூடக் குமரன் மீது இருந்த பார்வையை அகற்ற முடியவில்லை தேனிசை தேவியால். அவளுக்குள் ஊற்றெடுத்த கோபங்கள் எங்கு ஓடி மறைந்ததோ? இந்தக் குமரவேலனை இதுவரை பார்க்காதவள், இப்படியான ரசனையில் பார்ப்பதையும் அறியாமல் பார்த்துக் கொண்டிருக்கிறாள். கண்ணுக்குள் இருக்கும் கருவிழிகள், ஆண்டாண்டு காலங்கள் ஆகிய பின்னும் மறையாத நினைவுகளாக இதைச் சேமிக்கத் துவங்கியது. 

 

தன்னைச் சுற்றி நடக்கும் அனைத்தையும், வீசும் காற்று உட்பட மறந்து போனவள் குமரனை மட்டுமே சுற்றி வந்தாள். அவளுக்காகப் பாடிய பாடல் வரிகளில் உள்ளம் அலைமோதியது. தன் மீதான அவன் எண்ணமும், அவன் மீதான இவள் எண்ணமும் இந்த நொடி மாயமானது. 

 

மனம் உருகித் தனக்குள் அவன் உயிர் மருந்தாய் உலாவி பவனி வருவதை அறியாதவள், சிரிக்கும் அவன் அழகில் மொத்தமும் தொலைந்து போனாள். விடாமல் ஆட்டம் போட்டவன் நெற்றியில், பூத்துக் குலுங்கிய வேர்வைக்குள் வேர்வையாகத் தன் எண்ணங்களைப் புகுத்தி அவனுக்குள் புதையத் தொடங்கினாள்.

 

இந்த ஐந்து வருடங்களில், குமரவேலன் பெரிதாக எந்தத் தாக்கமும் நடத்தவில்லை அவளுக்குள். சகஜமான பேச்சுக்கள், நல்ல நட்பை உருவாக்கியதாக நம்பிக் கொண்டிருக்கிறாள். அந்த நம்பிக்கைக்குப் பின்னால் அவன் மீதான எண்ணங்கள் மாறியதைப் பேதை அறியவில்லை. அறியாமல் அவளுக்குள் ஒளிந்து கொண்டிருந்ததை இந்தத் தெம்மாங்குப் பாட்டு வெளிக்காட்டி விட்டது. 

 

தட்டிக் கொண்டிருந்த பானையைக் கீழே வைத்தான். முட்டியில் கை வைத்து மூச்சு வாங்கக் குனிந்தவன் மூச்சுக்காற்றாய் உலாவ விரும்பினாள். காலைச் சுற்றிய மகனை, ஒரே சுழற்றாகச் சுழற்றி முதுகுக்குப் பின்னால் கொண்டு வந்து தோள் மீது தூக்கி வைத்தவன், புருவங்களை உயர்த்தி ‘எப்படி?’ என்று கேட்டான். குட்டி அன்புக்கரசன் பாராட்டுப் பத்திரம் வாசித்தான்.

 

இதைப் பார்த்துக் கொண்டிருந்த அவளும் பாராட்டுப் பத்திரங்களை வாசித்தாள். சின்னவன் பாராட்டில் உற்சாகம் மட்டுமே. பெரியவள் பாராட்டில் ரசனையும், அளவில்லாக் காதலும் நிரம்பி இருந்தது. அவன் அருகில் சென்று பூத்திருந்த வேர்வை அனைத்தையும், முந்தானையால் துடைத்து விடப் பரபரத்த எண்ணங்களைத் தனக்குள் அடக்கினாள். என்றும் தெரியாத அழகனாகத் தெரிந்தான் தெம்மாங்குப் பாட்டுக்காரன். 

 

தேனின் தெம்மாங்கு இவனால் உருவெடுத்து, தேனிசை தேவியின் மனம் அடைந்து, காதல் காலத்தை வெற்றிகரமாகத் துவக்கி வைத்தது. அடி எடுத்து வைத்தவள், இனி ஒவ்வொரு அடியாக நடந்து அவனை அடைந்து விட்டால், ‘இந்தத் தேனே தெம்மாங்கு நானே’ இனிமையான நிறைவை எட்டிவிடும். அடி எடுத்து வைக்கத் தயாராகி விட்டாள், அவன் துணைக்கு வரமாட்டான் என்பதை அறியாது.

 

**

 

மகன் போடும் ஆட்டத்தையும், அதைக் கவனித்துக் கொண்டிருக்கும் மருமகளையும் பார்த்தவர்ம் வேகமாக ஓடிச் சென்று, “குமரா…” என்று முதுகில் அடித்தார்.

 

அப்போதுதான், தன் எதிரில் இருப்பவளைக் கவனித்தான். தெம்மாங்கு பாடிக் கொண்டிருந்த வாய் பசை போட்டு ஒட்டிக் கொண்டது. முட்டி வரை இருந்த குட்டி அன்பு, தந்தையின் காலைத் துணைக்குப் பிடித்துக் கொண்டது. அவர்கள் செய்வது கண்ணுக்குத் தெரிந்தாலும், உள்ளத்தில் பதியாததால் தன் நிலையில் மாறாமல் இருந்தாள்.

 

“ஏன்டா, ராசாவ ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு வந்த?”

 

“இல்லம்மா…”

 

“வாய மூடுடா! பொறுப்பா இருப்பன்னு பார்த்தா இப்படிப் பண்ற. இந்த மாதிரிச் செல்லம் கொடுத்தினா, அவன் எப்படிடா உருப்படுவான். உன் பிள்ளை படிச்சு நல்ல நிலைமைக்கு வரணும்னு ஆசை இல்லையா?”

 

“நாளைல இருந்து சரியா போவாம்மா‌”

 

“நீ இப்படி இருக்குற வரைக்கும், அவன் ஸ்கூலுக்குப் போக மாட்டான்டா. அவளைப் பாரு, எவ்ளோ கோவமா நிக்கிறான்னு” 

 

குட்டி அன்புவைத் தூக்கிக் கொண்டவன், தவறு செய்ததை ஒப்புக்கொண்டு தலை குனிந்து நிற்க, வசை பாடுவதை நிறுத்தவில்லை இந்திரா. அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தவனைச் சீண்டினான் சின்னவன்.

 

அன்னை அறியாது ரகசியமாக, “என்ன அன்பே…” கேட்டான்.

 

“பாட்டியே இப்படித் திட்டுறாங்களே, அம்மா எப்படித் திட்டுவாங்களோ…”

 

“அந்தப் பயத்துல தான்டா நானும் நிக்கிறேன்.”

 

“அப்பவே வரமாட்டேன்னு சொன்னேன். நான் பார்த்துக்கிறேன்னு கூட்டிட்டு வந்து இப்ப அம்மாகிட்டத் திட்டு வாங்க வைக்கப் போற.”

 

“அடப்பாவி!”

 

“அம்மா கேட்டா நீதான் எல்லாத்துக்கும் காரணம்னு சொல்லிடுவேன். தப்பா எடுத்துக்காத குமரா. அம்மாகிட்ட என்னால பொய் சொல்ல முடியாது.” 

 

“டேய்! அநியாயத்துக்கு நடிக்காதடா. நான் உன்னப் பார்க்க மட்டும்தான் வந்தேன். நீ தான் கையக் கடிச்சுட்டு ஓடி வந்த.”

 

“பொய் சொல்லாத. கையக் கடிச்சுட்டு ஓடிவாடா, நான் பார்த்துக்குறன்னு சொன்னல்ல”

 

தலை குனிந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தவன், தடால் என்று தன் மகனை நோக்க, அப்பாவியாகப் பார்த்தான் குட்டி அன்பு. கவனித்துக் கொண்டிருந்தவள் இதழோரம் மெல்லிய சிரிப்பு தவழ்ந்து ஓடியது. 

 

“அவனை என்னடா பார்க்குற. போ, அவளைச் சமாதானப் படுத்து.” 

 

“டேய் மகனே, எதையாது சொல்லி என்னையும் காப்பாத்தி, உன்னையும் காப்பாத்தித் தொலையுறேன். தயவுசெஞ்சி உன் திருவாயை மூடிகிட்டு இரு.” 

 

“உன்னையே காப்பாத்த முடியாது, இதுல என்னைக் காப்பாத்துறியா?”

 

“அம்மா மாதிரியே அசிங்கப்படுத்து.”

 

“அப்போ எங்க அம்மா அசிங்கப்படுத்தறாங்கன்னு சொல்றியா?”

 

“இன்னைக்கு என்னடா ஆச்சு உனக்கு.” 

 

“அம்மா பார்க்குறதைப் பார்த்தா ரெண்டு பேரையும் வீட்டுக்குள்ளேயே சேர்க்க மாட்டாங்க போல.” 

 

“அதான்டா எனக்கும் தோணுது.” என்றவன் தேனிசை தேவி முன்பு நின்று,

 

“அது வந்தும்மா…” சமாளிக்க வார்த்தை வராது இழுத்தான்.

 

“பாட்டெல்லாம் பலமா இருக்கு.”

 

“ஹான்!”

 

“பாட்டு! பாட்டு!”

 

“இல்லம்மா”

 

“அவனை இறக்கி விடு.”

 

“அன்பு எதுவும் பண்ணலம்மா”

 

“இறக்கி விடுன்னு சொன்னேன்.”

 

“புள்ள பாவம்மா…”

 

“இறங்குடா”

 

“ம்ஹூம்!”

 

“இப்ப நீ இறங்கல, உன் அப்பாக்குதான் அடி விழும்.”

 

“குமரா பாவம்”

 

“ஒன்னு போல சொல்லித் தப்பிக்கப் பார்க்குறீங்களா. ரெண்டு பேரும் தனித்தனியா நிக்கல, என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.” 

 

விரல் நீட்டி மிரட்டுபவளைச் சமாளிக்க முடியாது மகனைக் கீழே இறக்கி வைக்கக் குனிந்தவன், “குமரா ஜூட்” என்றுவிட்டுத் திபுதிபுவென்று ஓட ஆரம்பித்தான்.

 

“ஏய்!” 

 

“மன்னிச்சிடும்மா. நாளைல இருந்து கரெக்டா ஸ்கூலுக்குப் போவான். இன்னைக்கு ஒரு நாள் இந்த ரெண்டு அப்பாவிங்களையும் மன்னிச்சிடு. இனி நீயே சொன்னாலும், அன்பு ஸ்கூல் விஷயத்துல தலையிட மாட்டேன். பெரிய மனசு பண்ணி எங்களை விட்டுடு தாயே” 

 

“ஒழுங்கா நில்லுங்க.”

 

“திட்ட மாட்டேன். கைல கிடைக்குறதைத் தூக்கி அடிக்க மாட்டேன்னு சொல்லும்மா.”

 

“வேணா நின்னுடு.”

 

“ஐயோ! ஆபரேஷன் பண்ண உடம்ப வச்சுக்கிட்டு இப்படி வேகமாக ஓடி வராதம்மா.”

 

“திருட்டுப் பசங்களா, நில்லுங்கடா” 

 

பின்னால் ஓடி வந்தவளுக்கு, மூச்சு வாங்கியதே தவிர அவர்களைப் பிடிக்க முடியவில்லை. மருமகள் பின்னால் ஓடி வந்த இந்திரா அவளைத் தாங்கிப் பிடித்து, “வீட்டுக்குத்தான வருவாங்க, அங்க வச்சுக்க.” என ஏற்றிவிட்டார்.

 

“ரெண்டு பேருக்கும் இருக்கு இன்னைக்கு…” 

 

***

 

“நிறுத்து! நிறுத்து!”

 

“யோவ் கிழவா! என் புள்ளைக்குத் தினமும் வேலை வைக்கிறியா?”

 

“விடு குமரா, நான் பார்த்துக்கிறேன்.”

 

பூனைக் கண்ணைச் சுருக்கி முறைத்து, “பாட்டப் போடு பெருசு” என்றது.

 

“படவா! பிச்சி எடுத்துடுவேன்.”

 

“அதுக்கு நீ எந்திரிச்சு உட்காரனும்”

 

“எனக்கு என்னடா…” என எழுந்து உட்கார முயன்றவர் முடியாமல் முனங்க, “ஹீ ஹீ ஹீ…” நகைத்தான்.

 

“ஏன்டா, நான்தான் பாட்டுப் போட மாட்டேங்குறேன்ல. எதுக்குடா தினமும் உன் பிள்ளையை விட்டுக் கெஞ்ச வைக்கிற.”

 

“பெருசு, குமராவத் திட்டாத.”

 

“அப்படித்தான்டா திட்டுவேன். என்னடா பண்ணுவ சுண்டெலி.”

 

“குமரா, கடைசியா மிச்சம் இருக்க அந்த ரெண்டு பல்லையும் கழற்றி விடு.”

 

“சொல்லிட்டல்ல, இப்பப் பாரு.” என எழுந்தவன் தோளை யாரோ பிடித்தார்கள்.

 

திமிரோடு யார் என்று பார்க்கத் திரும்பியவன், தேனிசை தேவியைப் பார்த்துவிட்டு முழிக்க, “தாத்தா, காப்பாத்து.” சந்தானத்தின் பின்னால் ஒளிந்தான் அன்புக்கரசன்.

 

“என்னடா, வேலை பார்த்தீங்க?”

 

“குமரா என்னை ஸ்கூல்ல இருந்து பாதில கூட்டிட்டு வந்துடுச்சு.”

 

“அடங்கவே மாட்டீங்களாடா?”

 

“அப்புறம் பதில் சொல்றேன் பெருசு. எங்க அம்மாகிட்ட இருந்து முதல்ல காப்பாத்து.”

 

“இவ்ளோ வாய் பேசுற. எதுக்குடா என் பின்னாடி வந்து ஒளியிற?” என அவனை முன்னே இழுத்து விடச் சந்தானம் முயற்சிக்க, 

 

“செல்லத் தாத்தால்ல, அம்மா அடிச்சா வலிக்கும்.” கொஞ்சினான்.

 

அதற்குள் அவன் சட்டையைப் பிடித்தவள், “எவ்ளோ தூரம் ஓடுவ…” கேட்க, “நம்ம வீடு வரைக்கும் மட்டும் தான்மா.” என உதட்டைப் பிதுக்கினான். 

 

“அப்புறம் எதுக்கு ஓடுன?”

 

“சும்மா உல்லலாய்க்கு!” 

 

அங்கு அப்பனும், இங்கு மகனும் கெஞ்சிக் கொண்டிருப்பதைப் பார்த்தவர், “இந்தாம்மா, அடி வெளுத்து விடு.” எனத் தடியைக் கொடுக்க அடிக்க ஆரம்பித்தாள். 

 

ஒரு அடி விழுந்ததுமே துள்ளிக் குதித்தவன், அவளிடம் இருந்து தப்பிக்கப் போக்குக் காட்ட, சந்தானம் பின்னால் ஒளிந்து கொண்ட குட்டி அன்பு, பயத்தில் அவர்கள் பக்கம் திரும்பவே இல்லை. ஒவ்வொரு அடியும் அவன் மீது விழாமல் வீணாக, கோபம் அதிகரித்தது அவளுக்கு.

 

அதை உணர்ந்து சிரித்தவன், “முடியாதும்மா” என வெறுப்பேற்றிட அடியில் வேகத்தைக் கூட்டினாள்.

 

சில அடிகள் குமரன் மீது விழ ஆரம்பித்ததும் உஷாரானவன், “அய்யோ, என்னாச்சு?” சந்தானத்தைப் பார்த்துக் குரல் கொடுத்தான். அவருக்கு ஏதோ ஆகிவிட்டது என்று திரும்பியவள் கையில் இருந்த தடியை வாங்கிக் கொண்டு, ஒளிந்திருந்த தன் மகனைத் தூக்கிக் கொண்டு வீட்டிற்கு ஓடி விட்டான். 

 

***

 

இரவு சமையலை முடித்தவள், எதுவும் பேசாமல் துணி தைத்துக் கொண்டிருந்தாள். தந்தை மடியில் அமர்ந்து கொண்டிருந்தவன் எட்டிப் பார்த்து, “ம்க்கும்! அம்மா கோபம் இன்னும் போல.” என்றான்.

 

“ரொம்ப வெறுப்பேத்திட்டோமோ? நாலு அடி வாங்கிச் சமாதானப்படுத்தி இருக்கலாம்.”

 

“பேசாம இப்பப் போய் நின்னு அடிக்கச் சொல்லுவோமா?” 

 

“ஐடியா நல்லா தான் இருக்கு. ஆனாலும், தன்னால சிக்குனா ரொம்ப அடிப்பாடா உங்க அம்மா.”

 

“ஏன் குமரன், அம்மாக்கு இவ்ளோ பயப்படுற?”

 

“அதான்டா எனக்கும் தெரியல. ஆனா, உங்க அம்மா முறைச்சாலே காலு நடுங்க ஆரம்பிச்சுடுது.”

 

“சாப்பிட வாங்க” என்ற குரல் கேட்டதும் இருவரும் கையைக் கழுவிக்கொண்டு அமர, முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு உணவு பரிமாறினாள். 

 

குமரவேலன், குட்டி அன்புக்குக் கண்ணைக் காட்ட, அவன் தந்தைக்குக் கண்ணைக் காட்டினான். இருவரும் செய்யும் திருட்டுத்தனத்தைக் கவனித்தும், கவனிக்காதது போல் சாப்பிட்டுக் கொண்டிருக்க, “ம்மா…” என ஏலம் போட்டான்.

 

வாயில் அடக்கிய உணவோடு அவனைப் பார்த்தவள் உஷ்ணத்தை உமிழ, “ஒன்னும் இல்லம்மா.” எனத் தலை கவிழ்ந்து கொண்டு சாப்பிட ஆரம்பித்தான்.

 

பழையபடி சாப்பிடும் வேலையில் தேனிசை தேவி இருக்க, ‘ஊட்டுடா’ மகனுக்குக் கண்ணைக் காட்டினான்.

 

தன் உள்ளங்கையில் எண்ணக்கூடிய அளவு பருக்கைகளை எடுத்து வைத்தவன், உருண்டை பிடித்து அன்னை வாய் அருகே கொண்டு செல்ல, மகனை முறைத்தாள்.

 

அன்புக்கரசன் தந்தையைப் பார்க்க, ‘பயப்படாம கிட்ட போய் ஊட்டு.’ என்றிட, தைரியம் வந்தவன் தாயின் மடி மீது அமர்ந்து கையை உயர்த்தினான். 

 

எதுவும் பேசாமல் அந்த உருண்டையை வாங்கிக் கொண்டாள். புருவத்தை உயர்த்தித் தலையசைத்த அன்புக்கரசன், வெற்றிக் குறியீட்டைத் தந்தைக்குக் காட்டினான். மகன் வெற்றியில் நம்பிக்கை பிறந்து மெல்ல அமர்ந்தபடி நகர்ந்தான். அதை ஓரக்கண்ணால் கவனித்தவள் தள்ளி அமர, சாமர்த்தியமாக நகர்ந்து அவள் பக்கத்தில் அமர்ந்தான்.

 

முரட்டுக் கையால் வாய்கொள்ளும் அளவிற்குச் சாதத்தை எடுத்து உருண்டை பிடித்தவன் அவளிடம் நீட்ட, வாங்கவில்லை. முகத்தைச் சுருக்கி வைத்துக் கொண்டவன், “நான் பண்ணது தப்புதான். அன்பு அழறதைப் பார்க்க ஒரு மாதிரியா இருந்துச்சு. சத்தியமா இனிமே உன்னை மீறி எதுவும் பண்ண மாட்டேன். இந்த ஒரு தடவை மட்டும், பச்சப் புள்ளைய மன்னிச்சுப் பெரிய மனசு பண்ணும்மா.” என உணவை உயர்த்தினான். 

 

பதமாகப் பேசியவன் முகத்தைப் பார்க்க, அசடு வழிந்து கண்ணைச் சிமிட்டிப் பாவமாக, வாங்கிக் கொள்ள சைகை செய்தான். இவ்வளவு நேரம் பிடித்து வைத்திருந்த பொய்க்கோபம் தடுமாறத் துவங்கியது. உதட்டைத் தாண்டி வரும் சிரிப்பைக் காட்ட விரும்பாது தலை குனிந்து கொள்ள, 

 

“அம்மா சிரிச்சா அழகா இருக்குல்ல அன்பே” என மறைந்த சிரிப்பை வெளிக்கொண்டு வந்தான்.

 

பட்டென்று சிரித்தவள், உணவை வாங்கிக் கொண்டு சமாதான உடன்படிக்கைக்குக் சம்மதம் சொல்ல, “நானும்…” எனக் குட்டி அன்புவும் ஒரு வாய் ஊட்டினான்.

 

“நீ இருக்கியே… உன்ன மாதிரியே இவனும் உருப்படாம ஆகப் போறான்.”

 

“நீ இருக்கும் போது அப்படி நடக்காதும்மா.” 

 

“போதும் நிறுத்து!”

 

“உண்மையச் சொன்னா இந்த உலகம் நம்ப மாட்டேங்குது.”

 

“இந்த வாய் மட்டும் இல்ல, குமரவேலன் காணாமல் போய் இருப்பான். நாளைக்கு நான் எதுவும் சொல்ல மாட்டேன். நீயே இவனை ஸ்கூலுக்குக் கூட்டிட்டுப் போய்டு.”

 

“அப்படியே ஆகட்டும் மகாராணி!” எனக் குமரவேலன் தலை குனிந்து சலாம் போட, தந்தையைப் பின்பற்றினான் அன்புக்கரசன்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
27
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்