Loading

தெம்மாங்கு 35

 

நண்பனின் நினைவு தினம் என்பதால், வாய்க்குப் பூட்டுப் போட்டு அமைதியாக வாகனத்தில் இருந்து இறங்க, “ஹேய்!” எனத் துள்ளிக் குதித்தான் குட்டி அன்பு.

 

செய்ய வேண்டிய அனைத்தையும் செய்துவிட்டு, “கற்பூரம் காட்டு, வா…” என அழைத்தாள்.

 

தன் மகனைச் சமாதி மீது நிற்க வைத்தவன், அவன் கை பிடித்துக் கொண்டு ஆரத்தி காட்டி கை நிறைய மலர்களை வைக்க, யாருக்கு இந்த மரியாதை என உணராத குட்டி அன்பு உற்சாகமாக மலர்களைத் தூவினான். 

 

இருவரும் அமைதியாக அமர்ந்திருக்க, அந்த இடத்தை விளையாடுகிறேன் என்ற பெயரில் அமர்க்களம் செய்து வைத்தான். வெகு நேரம் கழித்துத் தந்தையின் மடியில் அமர்ந்தவன், 

 

“குமரா…” என கவனத்தைத் திருப்பினான்.

 

“அன்பே…”

 

“இவர் யாரு?”

 

“சாமி!”

 

“அவரு…”

 

“பெரியசாமி!”

 

“ஓஓஓ…” என இழுத்தவன் கையெடுத்துக் கும்பிட, மகனை நெஞ்சோடு சேர்த்துக் கொண்டு இயல்புக்குத் திரும்பினான்.

 

கிளம்பப் போகிறோம் என்றதும், கண்ணாடியை எடுத்து ஸ்டைலாக மாட்டிக்கொண்ட குட்டி அன்பு, “நான் ஓட்டுறேன் குமரா…” சாவியை வாங்கிக் கொள்ள,

 

“டேய் குடுடா” அதட்டினாள் அன்னை.

 

மூக்கைச் சுருக்கி முறைத்தாலும், சாவியைக் கொடுக்காமல் கைக்குள் வைத்திருக்க, “புள்ளையத் திட்டாதம்மா” என்றதும் தந்தை மீது தாவியவன் “உம்மா…” முத்தம் பதித்தான்.

 

பதக்கம் வாங்கியது போல் பற்களைப் பளிச்சென்று காட்டித் தன் முன்னால் இருப்பவளிடம், முறைப்பை வாங்கிக் கொண்டவன் அமைதியாக வண்டியில் ஏறி அமர்ந்திட, உயரம் பத்தாத குட்டி அன்பு கையைத் தூக்கியது.

 

“இது உசரத்துக்குக் கூட இல்ல, வண்டி ஓட்டுறன்னு சொல்ற. எல்லாம் உன் அப்பா கொடுக்குற செல்லம். நாளையோட எல்லா சேட்டையையும் மூட்டை கட்டி வச்சுட்டு ஸ்கூலுக்குப் போகணும்.” 

 

“குமரா…”

 

“பிள்ளையத் திட்டாதம்மா.” 

 

எப்பொழுது தேனிசை தேவி திட்டினாலும், “குமரா…” என்ற ஒரு வார்த்தையில் தந்தையைத் தன் பக்கம் இழுத்துக் கொள்வான். பிள்ளையைத் திட்டாதம்மா என்ற வாசகம் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போனது தேனிசைக்கு. 

 

முன்னால் ஏறி அமர்ந்தவன் வண்டியில் சாவியை நுழைக்க, “போலாம் டூர்ர்ர்” வாயில் வண்டியை ஓட்டித் தந்தையை இயக்க வைத்தான்.

 

ஹாரன் அடித்துக் கொண்டே வரும் மகனைப் பின்னால் இருந்தவள் தலையில் அடித்து அதட்ட, “குமரா!” என அழைத்து முடிக்கும் முன் “பிள்ளைய அடிக்காதம்மா…” என்றான்.

 

மூச்சை இழுத்து விட்டுத் தன் கோபத்தை வெளிக்காட்டியவள், பெரியவன் தலையில் ஓங்கி அடிக்க, “ஆ… ஆ…” என்றான் பரிதாபமாக.

 

அமர்க்களத்தோடு மலைக்குச்சி கிராமத்திற்குள் வண்டி நுழைய, “ஓரமா நிறுத்து” என்றாள்.

 

“எதுக்கும்மா?”

 

“கவிதா அக்கா ரெண்டு பிளவுஸ் தைச்சிட்டு, காசு தராம இழுத்து அடிக்கிறாங்க. என்ன ஏதுன்னு ஒரு வார்த்தை கேட்டுட்டு வந்துடறேன்.” 

 

“சரிங்க டெய்லரம்மா” 

 

“சேட்ட பண்ணாம ஒழுங்கா வீட்டுக்குப் போகணும்.” எனப் பெரியவனை அதட்டியவள், 

 

“சந்தானம் தாத்தாவைத் தொல்லை பண்ணக் கூடாது.” சின்னவனையும் அதட்டி அனுப்பினாள்‌.

 

இருவரும் ஒன்று போல் சமத்தாகத் தலையாட்டி அவள் உருவம் மறையும் வரை பதமாக இருந்துவிட்டு, “ரெடி ஜூட்!” கத்திக்கொண்டு வேகமாகப் பாய்ந்தனர்.

 

நம் குட்டி அன்புக்கரசனுக்கு, பந்தயத்தில் ஓடுவது போல் ஓட வேண்டும் வண்டி. அவன் தாய்க்கு சுத்தமாகப் பிடிக்காது. பிள்ளைக்காக வேகமாக ஓட்டி, பல கொட்டுக்களை வாங்கிப் பழுத்துப் போனது குமரனின் தலை. தந்தை வாங்கும் அடியில் வாயை மூடிக்கொண்டு வருபவன், இப்படி ஏதாவது ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் ஆட்டம் போட்டு விடுவான்.

 

வண்டியின் முன்பக்கப் பையில் இருந்த தந்தையின் கண்ணாடியை எடுத்தவன், “போட்டுக்கிட்டு ஸ்டைலா ஓட்டு குமரா” என உசுப்பி விட,

 

“சும்மா கெத்தா இருக்கனா அன்பே…” எனக் கண்ணாடியைப் போட்டுக் காட்டினான்.

 

“செம்ம!”

 

“உன் அம்மா வரதுக்குள்ள, இன்னொரு ரவுண்டு அடிச்சுட்டுப் பதமா போய் உட்கார்ந்துடுவோமா.”

 

“வேணாம் குமரா. யாராது போட்டுக் கொடுத்துடுவாங்க.”

 

“இந்த வேலையப் பார்க்குறது யாருன்னு தான் தெரியல அன்பே.” 

 

“கண்டுபிடிச்சு, அம்மா உன் தலையில கொட்டுற மாதிரி அவங்க தலையில கொட்டனும்.”

 

வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்த வண்டியைச் சடன் பிரேக் அடித்து நிறுத்த, ஐந்து வருடத்தில் வயது மூப்பின் எல்லைக்குச் சென்று கொண்டிருக்கும் சந்தானம் திண்ணையில் படுத்திருந்தார். 

 

“இந்தப் பெருசுக்கு எத்தனைத் தடவை சொன்னாலும் புரியாது.” என்று நெற்றியில் அடித்துக் கொண்ட குட்டி அன்பு, “இறக்கி விடு குமரா” என நேராகச் சந்தானத்தை நோக்கிச் சென்றான்.

 

சரியாக நடக்க முடியாமல் கம்பைத் துணைக்கு வைத்துக் கொண்டு நடப்பவர், அதை ஓரமாக வைத்துவிட்டு நல்ல உறக்கத்தில் இருக்க, அதை எடுத்து அவர் காலில் வலிக்காதவாறு அடித்தான்.

 

“என்னடா?”

 

“பாட்டுப் போடாம தூங்கிட்டு இருக்க.”

 

“போட முடியாது போடா”

 

“பெருசு… இப்ப மட்டும் நீ பாட்டுப் போடல, எழுந்து நடக்கத் தடி இருக்காது.”

 

சின்ன விரலை நீட்டிக் குறும்புத்தனமாக மிரட்டிக் கொண்டிருக்கும், தன் மகனை ஆசையாகப் பார்த்துக் கொண்டிருந்தவனைக் கவனித்த சந்தானம், 

 

“ஏன்டா திருட்டுப் பயலே! உன்னால மோத முடியாம இந்தச் சின்ன நண்டை அனுப்பி வைக்கிறியா? உங்க தொல்ல தாங்க முடியாம தான இருந்த எல்லா ரேடியோவையும் தூக்கிப் போட்டேன். நீங்களா ஒன்ன வாங்கி வச்சுப் பாட்டுப் போடுன்னு இம்சை பண்ணிட்டு இருக்கீங்க.” என அவனிடம் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார்.

 

பிடிக்க முடியாமல் பிடித்துக் கொண்டிருந்த தடியை வைத்து, மீண்டும் அடித்த குட்டி அன்பு, “என்ன, குமராவ மிரட்டுற?” என்றதும் சத்தமிட்டுச் சிரித்தான் குமரவேலன்.

 

“நண்டுப் பயலே, எந்திரிச்சேன்…”

 

“தடி என்கிட்ட இருக்கும்போது எப்படி எந்திரிப்ப? வவ்வவவ… வவ்வவவ” 

 

பெரியவர், கால் முட்டி உயரம் இருக்கும் அன்புக்கரசனை முறைக்க, “என்னடா பேராண்டி பண்ற தாத்தாவ…” என அங்கு வந்தார் காமாட்சி.

 

“பாட்டி!”

 

“தாத்தா பாவம் இல்லையா அன்பு.”

 

போதும் என்ற வரை முத்தம் கொடுத்துக் காமாட்சிக்கு ஐஸ் வைத்த அன்பு, “நானும் பாவம் இல்லையா பாட்டி.” எனக் கண்ணைச் சிமிட்டினான்.

 

“அழகுப் பேரன்!”

 

“ஆமாண்டி! அவன் என்னைத் தடி எடுத்து அடிக்கிறான். அதை என்னன்னு கேக்காம கொஞ்சிக்கிட்டு இருக்க.”

 

“புள்ள, பாட்டு தான கேக்குது. போட்டு விட்டா என்ன?”

 

“இவன் நிமிஷத்துக்கு ஒரு தடவை, ரோட்டுல வந்து நின்னு பாட்டுப் போடச் சொல்றான்டி.”

 

“ஹா! ஹா!”

 

“அங்க நிக்கிறான் பாரு அந்தத் திருட்டுப் பையன். வேணும்னே அவன் பிள்ளைக்குச் சொல்லிக் கொடுத்து இப்படிப் பண்ண வைக்கிறான்.”

 

“யோவ் கிழவா! எத்தனைத் தடவை பாட்டைப் போட்டு என்னை வெறுப்பேத்தி இருப்ப. இப்ப எங்க முறை! நீ போட்டே தான் ஆகணும்.”

 

“முடியாது, ரெண்டு பேரும் போங்கடா.”

 

“அன்பே!”

 

“சரி குமரா…” என்றவன் சந்தானம் அணிந்திருந்த கண்ணாடியைப் பிடுங்கிக் கொண்டு, தடியையும் எடுத்துக்கொண்டு ஓட, வயதானவர் எழுந்து நிற்பதற்குள் தன் மகனைக் காப்பாற்றியவன் பாடலை ஒளிபரப்பினான். 

 

“திருட்டுப் பயலுங்களா, குடுங்கடா”

 

அவரைக் கோபப்படுத்தி, போதுமென்றவரை அலைய வைத்துவிட்டு, இரண்டையும் கொடுத்த குட்டி அன்புவைத் தூக்கிய காமாட்சி, “இந்திரா பாட்டி இப்பத்தான் வந்துட்டுப் போனாங்க. உன்னப் பார்க்காம உன் பாட்டி மூஞ்சியே வாடிப் போச்சு.” என்றதும் வேகமாக அவர் மடியில் இருந்து இறங்கியவன் தந்தையை உசுப்பினான்.

 

இந்திராவின் செல்லப் பேரப்பிள்ளை குட்டி அன்பு, அவர் வீட்டு வாசலில் நின்று, “பாட்டி” என்று குரல் கொடுத்தான்.

 

திண்ணையில் நாற்காலி போட்டுச் சாய்ந்து அமர்ந்திருந்த பேச்சியப்பன் எழுந்தமர்ந்து முறைக்க, “ராசா…” ஓடி வந்து அணைத்து முத்தமிட்டார்.

 

அவர் கொடுத்ததை விட அதிக முத்தங்களைக் கொடுத்து மகிழ்வித்தவன், “என்னைப் பார்க்க வந்தியா…” கேட்க, “ஆமாய்யா ராசா” என்றார்‌.

 

“சரி வா, உள்ள போலாம்”

 

“அன்பே!” 

 

கண்டிப்புடன் ஒலித்த தந்தையின் குரலுக்குத் திரும்பியவன், “பாட்டி பாவம்!” என்றிட, “எதுவா இருந்தாலும் இங்கயே பேசு. அந்த வீட்டுக்குள்ள நீ போகக்கூடாது.” கரகரத்த குரலில் கூறினான்.

 

மகன் பேச்சைக் கேட்ட பேச்சியப்பன் முறைக்க, “போடா, உனக்கு வேற வேலை இல்ல.” எனப் பேரனைத் தூக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார் இந்திரா.

 

எப்பொழுதும் தான் வந்தால் முறைக்கும் பேச்சியப்பனைக் கடந்தவன் பாட்டியின் காதில், “எப்பப் பாரு, இவரு ஏன் பாட்டி என்னை முறைச்சிக்கிட்டே இருக்காரு.” கேட்டான்.

 

“பயந்துட்டியா ராசா?”

 

“சிரிப்பா வருது பாட்டி!”

 

“அதான! உங்க அப்பன் புத்தி தான உனக்கும் வரும்.”

 

உள்ளே சென்றவன் படுத்த படுக்கையாக இருக்கும் முத்துமாரியின் கன்னத்தில், இதழ் பதித்து விட்டு இந்திராவோடு ஒட்டிக் கொண்டான். வெளியே நின்று இருந்தவன் ஹாரன் அடித்துக் கொண்டிருக்க, ஏக்கமாகப் பார்த்துக் கொண்டிருந்தார் பேச்சியப்பன்.

 

இந்த ஐந்து வருடங்களில் பலவகையான மாற்றங்கள் நிகழ்ந்து விட்டது மலைக்குச்சியில். சந்தானம் தொடங்கி குட்டி அன்பு வரை வளர்ச்சி என்பது அமோகமாக வளர்ந்தது. குட்டி அன்புக்கரசன் தான், முதியோர் அனைவருக்கும் ஒரே மகிழ்வு. முதலில் அன்னையைத் தன் வீட்டிற்குள் அனுமதித்தவன், மகனை அவர் வீட்டிற்கு அழைக்கும் பொழுது மறுத்து விட்டான்.

 

தந்தைக்குத் தெரியாமல் தாயின் சம்மதத்துடன், இங்கு வரப்போக இருந்தவன் தந்தை கையில் சிக்கி விட்டான். அதட்டி மிரட்டிக் கண்டிப்பானா நம் நாயகன்! மகனைச் சாதுவாகக் கொஞ்சிக் கெஞ்சி, செல்ல வேண்டாம் என்றிட, சமத்தாகத் தலையசைத்தவன் அதன்பின், தைரியமாகச் சென்று வர ஆரம்பித்தான்.

 

தினமும் பேரனைப் பார்க்கவில்லை என்றால் பொழுது விடியாது இந்திராவிற்கு. பேரனே உலகமாகிவிட்டது அவருக்கு. படுத்த படுக்கையாக இருக்கும் முத்துமாரி, கொள்ளுப் பேரன் குரல் கேட்டுக் கடைசிக் காலங்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்.

 

தன் மகனின் வாரிசை முதல் முறையாகத் தன் வீட்டில் கண்டதும், ரத்தக் கொதிப்பு வந்தது பேச்சியப்பனுக்கு. அவை மெல்ல மெல்ல உருக ஆரம்பித்து விட்டது அவன் சேட்டையில். மனிதன், தளர்ந்து தள்ளாடி அமரும்பொழுது பேரப்பிள்ளைகள் தானே ஒரே மகிழ்வு. அதை இந்திரா முழுமையாக அனுபவிக்க, கௌரவத்தைத் தன் உடையாகப் போட்டுக் கொண்டிருந்தவர், அவ்வளவு எளிதாக இறங்கி வர முடியவில்லை.

 

ஆனாலும் கண்டும் காணாமலும், அன்புக்கரசன் செய்யும் சேட்டைகளைக் கவனித்துக் கொண்டிருப்பார். தான் முறைக்கும் பொழுது பயப்படாமல், பதிலுக்கு முறைக்கும் பேரனின் பார்வையில் அப்படியே தன் மகனைக் கண்டார். 

 

‘அவன மாதிரியே பார்க்கிறான் பாரு.’ பலமுறை உள்ளுக்குள் சொல்லி இருக்கிறார்.

 

“நான் போறேன் பாட்டி”

 

“கொஞ்ச நேரம் இருந்துட்டுப் போ ராசா.”

 

“அப்பா வேலைக்குப் போனதும் வரேன்.”

 

“நாளைல இருந்து ஸ்கூலுக்குப் போறியா?”

 

“ஆமா!”

 

“அழகுப் பிள்ளையா நல்லாப் படிக்கணும். எல்லாரும் இந்திரா பேரன் மாதிரி வருமான்னு பெருமையாப் பேசணும். பாட்டி உன்ன நாளைக்கு ஸ்கூல்ல வந்து பார்க்கிறேன்.” 

 

“மக்குப் பாட்டி! இந்திரா பேரன் நான் ஒருத்தன் தான. அப்புறம் எப்படி மாதிரி வரும்?”

 

“ஆத்தாடி! எம்புட்டு அறிவு என் பேரனுக்கு.”

 

***

 

 

உலகிற்கே பொதுவான இயற்கை அலாரம், “கொக்கரக்கோ…” என்று கூச்சலிட அனைத்து உயிர்களும் எழ ஆரம்பித்தது. அதிகாலையில் எழுந்து தலையில் நீரைக் கொட்டி அலறவிடும் குமரவேலன், குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருக்க, அவன் மீது கை கால்களைப் போட்டுக் கொண்டு உறங்கிக் கொண்டிருக்கும் மகனைப் பார்த்தபடி எழுந்தாள் தேனிசை தேவி.

 

நினைவு தெரிந்த நாளிலிருந்து, ஒருமுறை கூடத் தந்தை இல்லாமல் இரவு உறங்கியதில்லை குட்டி அன்பு. அவன் ஏற்படுத்திய பழக்கம், மூவருக்கும் ஒரே இடத்தில் படுக்கை ஆனது. ஆரம்ப காலத்தில் அவன் தூங்கிய பின் தள்ளிப் படுத்திருந்தவன், நடு இரவில் எழுந்து அழும் மகனால் நிரந்தரமாகத் தேனிசை பக்கத்திலேயே படுக்க ஆரம்பித்தான்.

 

முதலில் இதை எதிர்கொள்ளத் தயங்கியவள், நடுவில் குட்டி அன்பு இருப்பதால் பழகிக் கொண்டாள். இந்த ஐந்து வருடத்தில் பேச்சுவார்த்தை சகஜம் ஆகிவிட்டாலும், கணவன் மனைவி என்ற உறவு சிறிதும் துளிர்க்கவில்லை. அன்புக்கரசனின் தந்தையை நன்றாகப் புரிந்து மட்டும் வைத்திருக்கிறாள்.

 

“எப்படித் தூங்குதுங்க பாரு.” எனப் புலம்பிக் கொண்டே வெளியில் வந்தவள் கலைந்த முடிகளை ஒன்று சேர்த்துக் கொண்டையிட்டாள். சாணத்தை நீரில் கரைத்து வாசல் எங்கும் தெளித்துக் கோலம் போட்டாள். குளித்து முடித்து ஈரத் தலையைத் துவட்டியவள் கண்ணாடி முன்பு நின்றாள். 

 

புருவங்களுக்கு நடுவில் பொட்டு வைத்தவள், எந்தச் சலனமும் இன்றிக் குங்குமத்தை நெற்றி வகுட்டில் வைத்துக் கொண்டாள். எல்லாம் காலம் ஏற்படுத்திய மாற்றம் தான். மஞ்சள் கயிறு தங்கச் சரடாக மாறி இருக்கிறது. குட்டி அன்பு வளர்ந்து திருமணத்தை மனதார ஏற்க வைத்து விட்டான். தாலி கட்டியவனை மட்டும் ஏற்க மனம் வரவில்லை. கட்டியவனும், அதற்கு இடம் கொடுக்கவில்லை.

 

“குமரா… குமரா…” 

 

அவள் எழுப்ப, மகனைக் கட்டிப்பிடித்துக் கொண்டு உறங்கினான். கடுப்பானவள் தலை முடியைப் பிடித்து இழுத்து, “நீ போடுற டிராமா தெரியும். இன்னைக்கு இவனை ஸ்கூலுக்குக் கூட்டிட்டுப் போயே ஆகணும். நடிக்காம எந்திரிச்சுக் கிளம்பு…” என்றதும் சாயம் வெளுத்துப்போன கடுப்பில் எழுந்தமர்ந்தான்.

 

சென்ற வாரமே அன்புக்கரசனைப் பள்ளியில் சேர்க்க வேண்டியது. தன் மகன் தன்னை விட்டுப் பிரியக் கூடாது என எப்படியோ அதைத் தள்ளிப் போட்டவன், அடுத்த வருடம் சேர்த்துக் கொள்ளலாம் என்று சமாதானம் செய்தான். அதற்கு இடம் கொடுக்காமல், சேர்த்தே தீருவேன் என்று அடம் பிடித்து அட்மிஷன் போட்டு விட்டாள். 

 

முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு, முகம் கை கால்களைக் கழுவி வந்து வேறு உடை மாற்றியவன் நீர்பாய்ச்சக் கிளம்ப, “இந்தா…” தேநீரை நீட்டினாள். 

 

முகத்தை வெடுக்கென்று திருப்பிக் கொண்டவன், “தேவையில்லை.” என்றான். 

 

“ரொம்ப நல்லது!”

 

எதிரில் நிற்பவளைக் கடுமையாக முறைக்க, அதைப் பற்றி எல்லாம் கவலை கொள்ளாதவள், திண்ணையில் அமர்ந்து தான் போட்ட தேநீரை ருசித்துக் குடிக்க ஆரம்பித்தாள். மூக்கில் இருந்து புகை கிளம்பியது குமரவேலனுக்கு. வலது காலை நிலத்தில் உதைத்து, 

 

“புள்ளையத் துரத்தி விடுறதுல அவ்ளோ சந்தோஷம்.” புலம்பிக் கொண்டு நடையைத் தொடர்ந்தான்.

 

“படிக்க வேண்டாமா?”

 

“அஞ்சு வயசுலயே படிக்கணுமா? ஆறு வயசுல படிச்சா ஒத்துக்க மாட்டீங்களா… நானெல்லாம் ஆறு வயசுல தான் பள்ளிக்கூடத்துக்குப் போனேன். படிச்சு நல்லா வாழலையா?”

 

“படிச்சியா?”

 

“நக்கலா?”

 

“சத்தியமா தான் கேட்கிறேன், நீ படிச்சியா?”

 

“டிகிரி முடிச்சிருக்கேம்மா…”

 

“அதை யார் வேணா முடிப்பாங்க, நான் கேட்டது நீ படிச்சியா?”

 

“படிக்காம எப்படி முடிப்பாங்க?”

 

“அதுக்கு நீ தான் பதில் சொல்லணும்.”

 

“பொறாமை!”

 

“எதுக்கு?”

 

“நானும், அன்பும் ஒன்னா சுத்திக்கிட்டு இருக்கோம்ல.”

 

“உனக்கு ஏழு கழுதை வயசாச்சு. அவன் கூட ஜோடி போட்டுச் சுத்துற.”

 

“அப்படி ஒன்னும் வயசாகலம்மா. இப்பத்தான் முப்பத்து ஆறு ஆகுது.”

 

“கால் நூற்றாண்டைக் கடந்து, அரை நூற்றாண்டை நோக்கிப் போயிட்டு இருக்க…”

 

“இப்பக் கூட குமரவேலன், நல்லா பளிச்சுன்னு டிரஸ் போட்டுக்கிட்டு மினுமினுப்பா நின்னா, எல்லாப் பொண்ணுங்களும் வாயப் பொளந்து பார்க்கும்.” 

 

“போட்டு நிக்க வேண்டியது தான?”

 

“வரிசையா நிக்கிற பொண்ணுங்களை என் அன்பு பார்த்துட்டு, இந்த அம்மா தான் வேணும்னு செலக்ட் பண்ணிட்டா, நீ என்னம்மா பண்ணுவ?” 

 

“எது!”

 

“வாய்ப்பு நிறைய இருக்கும்மா. நீ வேற எப்பப் பாரு, அவனத் திட்டிக்கிட்டே இருக்க. இந்தத் திட்டுற அம்மா வேணாம் குமரான்னு சொல்லிட்டா, என்னால என்ன பண்ண முடியும்?”

 

“அவன் சொல்லிட்டா… அய்யா என்ன பண்ணுவீங்க?”

 

“பெருசா என்ன பண்ணுவேன்?” எனத் தோளைக் குலுக்கியவன், “என் பின்னாடி சுத்துற யாரையாவது ஒருத்தியை செலக்ட் பண்ணி, இந்தாடா புது அம்மான்னு கொடுத்துடுவேன்.” என்றவன் முகத்தில் டம்ளர் வந்து விழுந்தது.

 

“உன் மூஞ்சிக்கு நிக்கிறாங்க நாலு லைனுக்கு. அங்கங்க வெள்ளை முடி எட்டிப் பார்க்குது. உட்கார்ந்தா எந்திரிக்க முடியல. நாலு பொருளை நாப்பது நிமிஷத்துக்கு மேல தூக்க முடியல. இந்த லட்சணத்துல இவர் செலக்ட் பண்ணுவாராம். போயி வேலை வெட்டியப் பார்த்துட்டு, சீக்கிரம் வீடு வந்து சேரு.” 

 

“இந்தாம்மா…” என வாதம் செய்ய வந்தவன், அவள் அடிக்க எதையோ தேடுவதைக் கண்டு அமைதியாகச் சென்று விட்டான். 

 

இருசக்கர வாகனத்தில் ஏறி அமர்ந்தவன், கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்து, “உனக்கு என்னடா குமரா…” என மீசையை முறுக்கி விட, திண்ணையில் இருந்தவள் சிரித்தாள்.

 

***

 

நெற்பயிர்களுக்கு நீர் பாய்ச்சி விட்டு ஏழு மணி போல் வந்தவன், தண்ணீரைப் பிடித்து வைத்துவிட்டுக் குளிக்கச் சென்றான். உடம்பு முழுவதும் சோப்பு நுரை அப்பி இருக்க, “குமரா…” என்ற குரல் கேட்டது.

 

“அன்பே!”

 

“உசுக்கு உசுக்கு வருது.”

 

“உள்ள வாடா…”

 

“அய்ய… நீ ஜட்டி போடாம இருப்ப…”

 

“டேய்!”

 

“சீக்கிரம் வெளிய வா”

 

“இப்பதான் அன்பே குளிக்க வந்தேன்.”

 

“உசுக்கு உசுக்கு வேகமா வருது.”

 

“கொஞ்ச நேரம் இரு.” 

 

இயற்கை உபாதையைப் பொறுக்க முடியாது அன்புக்கரசன் விடாமல் கதவைத் தட்டிக் கொண்டிருக்க, குளிக்கும் வேலையில் மும்முரமாக இருந்தான் குமரவேலன்.

 

“குமரா…”

 

“ஆச்சு அன்பே!”

 

“உசுக்கு கிட்ட வந்துடுச்சு.” 

 

“ஹா…ஹா…ஹா…”

 

“உடனே வெளிய வரலன்னா, நேத்து நம்ம ரெண்டு பேரும் கிணத்துல குளிச்சதை அம்மாகிட்டச் சொல்லிடுவேன்.”

 

“வேணாம்டா டேய்!”

 

“அப்போ வா…”

 

“முகத்துக்குச் சோப்பு போட்டுட்டு வந்துடுறேன்.”

 

“அம்மா!” 

 

அவசரமாகக் கதவைத் திறந்தவன், “ரெண்டு நிமிஷம் அன்பே!” என்றிட தேனிசை தேவியைச் சத்தமிட்டு அழைத்தான்.

 

வேகமாகத் துண்டை எடுத்து இடுப்பில் கட்டியவன், “போ தெய்வமே!” என அலுப்போடு வெளியே நிற்க, “ஹீ…ஹீ…” எனச் சிரித்து வெறுப்பேற்றினான்.

 

***

 

அன்புக்கரசனுக்கு மூன்று வயது ஆனதும், தையல் தொழிலைப் பார்க்க ஆரம்பித்து விட்டாள். அவளது வருமானம் வந்த பின், குடும்பம் நடத்துவது எளிதானது இருவருக்கும். கொஞ்சம் சேர்த்து வைக்க ஆரம்பித்து விட்டார்கள். நிலத்தின் மீது வாங்கிய கடன் அடைந்தது. சந்தானத்தின் கடன் மட்டுமே இப்போது பாக்கி. தன் மகனுக்குத் தன் கையால் தைத்த பள்ளிச் சீருடையைப் போட்டு அழகு பார்த்தவள், அனைத்தையும் தயார் செய்து வைத்தாள்.

 

வேண்ட வேண்டிய இரு தெய்வங்களையும் வேண்டிய பெற்றோர்கள், பிள்ளையை அழைத்துக் கொண்டு பள்ளிக்குச் செல்லும் முன், “ராசா…” என இந்திரா வந்து நின்றார்.

 

பள்ளிச் சீருடையில் நிற்கும் பேரனைக் கண்டு திருஷ்டி கழித்தவர், “நல்லபடியா ஸ்கூலுக்குப் போயிட்டு வாயா. பாட்டி உனக்குப் பிடிச்ச கொழுக்கட்டை பண்ணி வைக்கிறேன்.” என்றார். 

 

இரு கன்னத்தில் முத்தம் வழங்கியவன், மாலை கிடைக்கப் போகும் கொழுக்கட்டைக்காகப் பள்ளி செல்லச் சம்மதித்தான். வண்டியில் சென்று கொண்டிருந்த இருவரும் சந்தானம் வீடு வந்ததும் பார்த்துக் கொள்ள, “அடி வாங்குவீங்க” என்ற மிரட்டலில், மாலை வரும் பொழுது பார்த்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் கிளம்பினார்கள்.

 

முதல் நாள் பிள்ளைகளைப் பள்ளியில் விடும் பெற்றோர்களுக்கு அப்போது தான் தெரியும், தனக்குள் இருக்கும் குழந்தைத்தனம். கண் கலங்கக் கை அசைத்து, அழுது கொண்டிருக்கும் அன்புக்கரசனை, ஆசிரியர் கையில் ஒப்படைத்துவிட்டுக் கிளம்பினார்கள். கண் துடைத்துக் கொண்டு, “நானே ஸ்கூல் விட்டதும் கூட்டிட்டு வந்துடறேன்.” என்று குமரவேலன் முகம், பார்க்க இடி விழுந்த தோரணையில் கண்ணைக் கசக்கிக் கொண்டிருந்தான். 

 

முகம் முழுவதும் கண்ணீரில் நனைந்திருந்தது. எத்தனை அணைகளை உருவாக்கினாலும், அவன் கண்ணில் இருந்து கொட்டும் நீரை நிறுத்த முடியாது போல. மூக்கை உறிஞ்சிக் கொண்டு, மீசை முடியைச் சேதாரம் செய்து கொண்டிருக்கும் அவனைப் பார்க்கச் சிரிப்பு தான் வந்தது. பக்கத்தில் ஒருத்தி தன்னைக் கேலி செய்வதைக் கூட அறியாது,

 

“அன்பு அழுதேன்” தனக்குத்தானே பேசிக் கொண்டிருந்தான்.

 

அவன் கை சீண்டி, “எல்லாக் குழந்தைங்களும், முதல் நாள் ஸ்கூலுக்குப் போகும்போது அழத்தான் செய்வாங்க.” எனச் சிரித்தாள்.

 

“கல்நெஞ்சக்காரி! புள்ள கண்ணுல இருந்து மால மாலயா தண்ணி வருது.” என உதட்டைப் பிதுக்கினான்.

 

“ரெண்டு நாள் போனா சரியாகிடுவான்.”

 

“ஆமா‌… போ.”

 

“சரி வண்டிய எடு, எனக்கு நிறையத் துணி தைக்கிற வேலை இருக்கு.” 

 

வரும் வழி எங்கும், அவனைச் சமாதானப்படுத்திக் கொண்டே வந்தவள் இல்லம் வந்ததும், “அன்பு பண்ற சேட்டைக்கு அவங்க தான் அழனும். ஓவரா சீன் போடாம போய் வேலையைக் கவனி. அத்தையும், நானும் அவனைக் கூட்டிட்டு வந்துடறோம்.” என அனுப்பி வைத்தாள்.

 

பார்க்கக் கூடாத துயரத்தைப் பார்த்தவன் போல் முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு, தலையசைத்தவனைக் காணச் சிரிப்பு வந்தாலும் பாவமாகவும் இருந்தது. இன்றைய நாள் கடந்து விட்டால் சரியாகி விடுவான் என்ற நம்பிக்கையில், வேலையைக் கவனிக்க உள்ளே சென்றுவிட, வண்டியை எடுத்தவன் நேராகப் பள்ளி முன்பு நிறுத்தினான். 

 

அன்புக்கரசன் இன்னும் அழுது கொண்டிருக்க, “அன்பே!” என்ற குரல் கேட்டுத் தந்தையிடம் ஓடி வர முயன்றான்.

 

அங்கிருந்த ஆசிரியர்கள், செல்ல விடாமல் தடுத்துக் கொண்டு குமரவேலனை வெளியேறக் கூற, தந்தை சென்று விடுவானோ என்ற பயத்தில் கைநீட்டி அழைத்துக் கலவரம் செய்தான். அதைப் பார்த்தவனின் மனம் தாங்க முடியாத துயரத்தில் தத்தளித்தது. வெளியே இருந்து இவன் கைநீட்டி அழ, உள்ளே இருந்து அவன் கை நீட்டி அழுதான். 

 

இருவருக்கும் நடுவில் இருந்த ஆசிரியர்கள் சமாளிக்க முடியாது தடுமாற, தன்னைப் பிடித்திருக்கும் ஆசிரியர் கையைக் கடித்தவன் தந்தையிடம் தாவிக் கொண்டான். 

 

தெம்மாங்கு ஒலிக்கும்…

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
25
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்