Loading

அத்தியாயம் 34

ஆரவின் கையணைப்பிலேயே படகில் வலம் வந்த வான்மதிக்கு, அத்தனை இதமாக இருந்தது. பெடல் போட்டு சோர்ந்து போனவள், “கால் வலிக்குது” என்று முகம் சுருங்க, “நான் பெடல் போடுறேன்டி.” என அவளுக்கும் சேர்த்து படகை ஓட்டினான்.

படகை பெடல் செய்தபடி, லயா தீவிர சிந்தனையுடன் இருக்க, கவினுக்கு தான் ஏரிக்கு நடுவில், தன் பல வருட கனவு காதலியின் அருகில் மிதப்பது பேரின்பமாக இருந்ததில், அவளின் பக்கம் சாய்ந்து அவள் தோள் மீது கை போட, அதில் நிகழ்வுக்கு வந்து திரும்பியவள், “என்னடா?” என்றாள்.

“என்ன என்ன?” அவன் இன்னும் இடித்து அமர, “எதுக்கு டா. தோள் மேல கை போட்ட?” எனக் கேட்க, “இதென்னடி கொடுமையா இருக்கு. கட்டுன பொண்டாட்டி மேல கை கூட போட கூடாதா?” என்றான் பாவமாக.

அவனை ஒரு மாதிரியாக பார்த்தவள், “என்ன சார் பேசுற தோரணையே சரி இல்ல” என இரு விழிகளையும் உயர்த்த, “அதுவா… கிளைமேட் வேற சில்லுன்னு இருக்கு. சுத்தி தண்ணி வேற… சோ…” என இழுத்தான்.

“ம்ம். சோ?” அவனை விட்டு நகர்ந்து அமர்ந்தபடியே லயா வினவ, “சோ!” என சொல்லிக்கொண்டே, அவள் கன்னத்தில் அழுத்தமாக இதழ் பதித்தவன், “லவ் யூ டி…” என்றான் கிசுகிசுப்பாக.

அவளோ லேசாக அதிர்ந்து, “டேய்… யாராவது பார்க்க போறாங்க. என்னடா பண்ற?” என வெட்கியபடியே கன்னத்தைத் துடைத்தவள், “நம்ம ஒன்னும் ஹனிமூன்க்கு வரல சார். பிரெண்டு லவ்வ சேர்த்து வைக்க வந்துருக்கோம்…” என்று அவன் காதை திருகினாள்.

அதில் விழித்தவன், “அ… அதுக்கும் தான் வந்துருக்கோம். அப்படியே இதுக்கும்…” என மீண்டும் முத்தமிட, “ஐயோ சும்மா இரு கவி. தன்வி போட்ல இந்த சைட் தான் சுத்திட்டு இருக்கான். பார்த்தா அசிங்கம்டா.” என்று நெளிந்தவள் வெட்கத்தை மறைக்க, அவன் தோளிலேயே முகத்தை மறைக்க,

‘இவன் வேற தனியா போய் போட் ஓட்ட வேண்டியது தான…’ என தன்வி சென்ற திசையைப் பார்த்து முணுமுணுத்தவன், “அப்போ இது நமக்கும் ஹனிமூன் தான்னு ஒத்துக்கோ. இல்லன்னா, இங்கயே முத்தம் கொடுத்துட்டே இருப்பேன்.” என்று வம்பிழுத்தவன், குனிந்து இதழ்களிலும் இதழ் பதித்து விலக,

“ப்ளீஸ் கவி. சும்மா இரு.” என்றவளுக்கு கன்னங்கள் சிவந்திருந்தது.

“வெட்கம்லாம் படாதடி. சிரிப்பா வருது.” என நமுட்டு சிரிப்பு சிரித்தவனை முறைத்தவள், “அடேய். நான் வெட்கப்பட்டா உனக்கு சிரிப்பு வருதா? ப்ளடி ராஸ்கல்.” என்று அவனை சரமாரியாக அடித்தவளுக்கும் சிரிப்பு வர, இருவரும் புன்னகையுடன் ஏரியில் வலம் வந்தனர்.

“மாமா. ஒரு ஸ்டில் குடு செல்ஃபி எடுக்கலாம்.” என கையில் போனை வைத்தபடி, மோனிஷா தன்விக்கை அழைக்க, ‘இவ வேற மனுஷன் நிலைமை புரியாம…’ என புலம்பியவன், “நானே தனியா விட்டுட்டானுங்களேன்னு கடுப்புல இருக்கேன். கொய்யால உனக்கு செல்ஃபி கேட்குதா?” என்று முறைத்தான்.

“தனியாவா? அதான் நானும் இருக்கேன்ல” அவள் புரியாமல் கேட்க,

“நீ இருந்து… நான் தண்ணிக்குள்ள விழுந்தா ஸ்விம்மிங் பண்ணி காப்பாத்துவியா. உனக்கும் ஸ்விம்மிங் தெரியாது. எனக்கும் ஸ்விம்மிங் தெரியாது. விழுந்தா அவ்ளோ தான்…” என்று சில்லென்று சுற்றிலும் நிரம்பி இருந்த ஏரியை திகிலாகப் பார்த்தவனை கண்டு தலையில் அடித்தாள்.

“பயந்தாங்கொள்ளி. இதுக்கு முன்னாடி நீ போட்ல போனதே இல்லயா.” என்று முறைக்க,

“போயிருக்கேன். அப்போல்லாம் கும்பலா போவேன் பசங்களோட. இப்ப உன்கூட கோர்த்து விட்டுட்டானுங்க.” என கதறியவனைக் கண்டு கடுப்பானவள்,

“உன்னை எல்லாம் ஏரில தள்ளி விட்டா தாண்டா நீ சரியா வருவ.” என அவனை தள்ளி விடுவது போல பாவனை செய்ததற்கே, அவளை இறுக்கி பிடித்துக்கொண்டவன்,

“வேணாம்டி. உன் புருஷன் அற்பாயுசுல போய்ட்டா உனக்கு தாண்டி கஷ்டம்” எனக் கத்தினான்.

அதில் சப்பென அவன் கன்னத்தில் அடித்தவள், “வாயை மூடு மாமா. விவஸ்தை கெட்ட தனமா பேசிக்கிட்டு.” எனக் கூறும் போதே கண்கள் கலங்கி இருக்க, அவன் தான், “ஹே. என்னடி ஆச்சு?” என்றான் பதற்றமாக.

“பின்ன, நீ ஏன் இப்படிலாம் பேசுற. எனக்கு கஷ்டமா இருக்கு. நான் சாகுற வரை எனக்கு நீ வேணும் மாமா.” என்றவளின் குரல் உடைந்திருக்க, அவனுக்கோ உள்ளம் துள்ளி குதித்தது.

“லூசாடி நீ. சும்மா விளையாட்டுக்கு சொல்றதை எல்லாம் சீரியஸா எடுத்துக்கிட்டு. எனக்கும் நான் சாகுற வரை நீ மட்டும் தான் வேணும்” என்றான் அவளை ரசனையாக பார்த்து.

கண்ணை துடைத்தபடியே அவனை விழி விரித்து பார்த்தவள், “நிஜமாவா?” எனக் கேட்க,

“ம்ம். நிஜ்ஜம்மா. எனக்கு உன்னை அவ்ளோ பிடிக்கும். சின்ன வயசுல இருந்தே… திடீர் கல்யாணமா இருந்தாலும், கல்யாண பொண்ணு நீ தான்றனால தான், அமைதியா பண்ணிக்கிட்டேன். இல்லன்னா, அப்பவே சென்னைக்கு ஓடி வந்துருப்பேன்.

ஆனா, நீ என்னையும் விக்ராந்த் மாதிரி நினைச்சது கஷ்டமா இருந்துச்சு. அதான்… கொஞ்சம் அப்செட் ஆகி, நீயே புருஞ்சுக்கட்டும்ன்னு விலகி இருந்தேன்.” என தன்போக்கில் தன் மனதையும் உரைத்தவனை இன்னும் கண்கள் அகல பார்த்தவள், அவன் நெஞ்சின் மீது சாய்ந்து கொண்டாள் புன்னகையுடன்.

“எனக்கும் உன்ன ரொம்ப ரொம்ப பிடிக்கும் மாமா. ஆனா, திடீர்னு வீட்ல ஃபிக்ஸ் பண்ணுவாங்கன்னு எதிர்பார்க்கல. அட்லீஸ்ட் கல்யாணத்துக்கு முதல் நாளாவது நீ என்கிட்ட ஒரு வார்த்தை பேசி இருந்தா, எனக்கு எதுவும் தோணி இருக்காது. நீ என் விருப்பத்தையும் கேட்கலையா… அதான் ரொம்ப பயந்துட்டேன்.” என்றவள் உதட்டைப் பிதுக்க, அவள் முகத்தை நிமிர்த்தியவன்,

“சாரி மோனி. நான் கேட்டு இருக்கணும். உனக்கு என்னை பிடிக்கும்ன்னு தெரியும். ஆனாலும், நான் கேட்டு நீ பிடிக்கலைன்னு சொல்லிட்டா என்ன பண்றதுன்னு நானும் பயந்து தான் உங்கிட்ட கல்யாணம் ஆகுற வரை பேசல. அது மட்டும் இல்லடி… எனக்கே கல்யாணத்துக்கு முந்தின நாள் சாயந்தரம் தான் தெரியும். நினைச்சா உனக்கு போன் பண்ணிருந்திருக்கலாம். கொஞ்சம் செல்ஃபிஷ் – ஆ இருந்துட்டேன். சாரி…” என்றவன், அவள் கழுத்தில் தன் முகத்தை புதைத்துக் கொண்டான் முகத்தை சுருக்கி.

“உன் சாரிலாம் எனக்கு ஒன்னும் வேணாம். நானும் கொஞ்சம் ஓவரா டைவர்ஸ் அது இதுன்னு ரியாக்ட் பண்ணிட்டேன். நானும் சாரி…” என்றவள், அவன் கேசத்தை கோதி விட, சற்று தெளிந்தவன் நிமிர்ந்து “சரி இப்போ சொல்லு. என்னை உனக்கு ஹஸ்பண்ட் – ஆ பிடிச்சு இருக்கா?” எனக் கேட்டான் கண் சிமிட்டி.

அதில் முறுவலித்தவள், குறும்புடன் “ரொம்ப சீக்கிரம் கேட்டுட்ட மாமா. பிடிக்கலைன்னு சொன்னா என்ன பண்ணுவியாம்?” என அவன் கையை பற்றிக்கொள்ள, அவளை முறைத்தவன், “கண்டிப்பா ஃபோர்ஸ் பண்ண மாட்டேன். நீ கேட்ட டைவர்ஸ கொடுத்துடுவேன். பிகாஸ் ஐ ஆல்வேஸ் லவ் யூ. நீ என்னை லவ் பண்ணாலும் இல்லைனாலும்…” என ஆழ்ந்து கூறியவனைக் கண்டு ஒரு நொடி திடுக்கிட்டவள், கண்ணோரம் துளிர்த்த நீருடன் மீண்டும் அவன் மீது சாய்ந்து, “லவ் யூ அ லாட் மாமா…” என்றாள் நேசம் பொங்க.

“என்ன சுதி. போட்ல போனவனுங்களை கண்ணுக்கு எட்டுன தூரம் வரைக்கும் ஆளையே காணோம்…” என்று ஏரியை பார்த்து புலம்பிய ஹேமாவை கண்டு சிரித்தவன், “எல்லாரும் தண்ணிக்குள்ள விழுந்து ரொமான்ஸ் பண்றானுங்க போல” என்றான் நக்கலாக.

அவளோ வாய்விட்டு நகைத்து, “யாரு இவனுங்களா? அதெல்லாம் சுட்டு போட்டாலும் வராது. இப்போ கூட, நைட்டு என்ன ஆர்டர் பண்ணி சாப்பிடலாம்ன்னு தான் டிஸ்கஸ் பண்ணிட்டு இருப்பானுங்க…” எனக் கேலியாக கூறியவளிடம்,

“அதெல்லாம், கல்யாணத்துக்கு முன்னாடி. இப்போ… அப்படி இருப்பானுங்கன்னு தோணல. அங்க பாரு…” என்று ஏரியில் ஒரு ஓரத்தில் கை காட்ட, அங்கு தன்வியும் மோனிஷாவும் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து கொஞ்சிக் கொண்டிருக்க, ஹேமா “அடப்பாவி…” என வாயில் கை வைத்து வியந்து விட்டு,

“இந்த பூனை பியர் குடிக்கும்ன்னு எனக்கு இப்ப தான் தெரியும் சுதி” என்றாள் புன்னகைத்து.

அவனும் அதே புன்னகையுடன், அவளின் உள்ளங்கையை பிடித்தபடி, “இங்க தான் ஒரு கிஸ்ஸுக்கே வழியில்ல…” என்றான் சலித்தவாறு.

அவன் பாவனையில் வெட்கப் புன்னகை வீசியவளிடம், “ஆனா, ஜஸ்ட் மிஸ்ஸு ஹேமா. நானும் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி வண்டு கூட இங்க வந்துருந்தா, அப்பவே உன்னை பார்த்து இருப்பேன். அப்பவே கடத்திட்டும் போய் இருப்பேன். இந்நேரம், இஷு கூட விளையாட ஒரு பாப்பாவும் ரெடி ஆகியிருக்கும்” என வருத்தம் போல கூறியவனை போலியாய் முறைத்தவள், “நினைப்பு தான்…” என்றாள் நாக்கை நீட்டி அழகு காட்டி.

அதற்கும் மெதுவாக முறுவலித்தவன், தூரத்தில் ஏரியை ரசித்தபடி ஆரவின் கைப்பிடியில் படகில் சென்று கொண்டிருந்த தங்கையை பார்த்தவன்,

“அட்லீஸ்ட்… அப்பவே நான் வந்துருந்தா, என் தங்கச்சியும் அந்த விக்ராந்த் கையில சிக்கி இருக்க மாட்டாள்லப்பா. ஏதாவது ஒரு வகையில கண்டிப்பா உங்க கிட்ட பேசி இருப்பேன். ஆரவ் பத்தியும் அப்பவே தெரிஞ்சு இருக்கும்.” என்று பேசிக்கொண்டே பெருமூச்சு விட்டவனுக்கு கண்ணைக் கரித்தது.

“ஆரவ் மட்டும் அவள் லைஃப்ல வரலைன்னா… என்னால நினைச்சு கூட பார்க்க முடியலப்பா. எத்தனை நாள், அவள் தனியாவே எதையோ இழந்த மாதிரி எங்கயோ வெறிச்சு பார்த்துக்கிட்டு, ரூம்க்குள்ளயே அடைஞ்சு இருந்துருக்கா தெரியுமா. அப்போல்லாம் ரொம்ப வலிக்கும். ஒரு அண்ணனா இருந்து அவளை சேவ் கூட பண்ண முடியலைன்னு கில்டியா இருக்கும். இப்போ கூட அவள் எப்படி இதுல இருந்து வெளிய வர போறான்னு நினைச்சாலே கஷ்டமா இருக்கு.” என ஏதோ பேச சென்று இறுதியில் தங்கையிடம் வந்து நின்ற பேச்சில் இன்னும் கலங்கினான்.

இஷாந்தை ஒரு கையில் வைத்தபடியே, அவனின் கையை எடுத்து கன்னத்தில் வைத்துக்கொண்ட ஹேமா, “அவளுக்கு மட்டும் இல்ல சுதி. அவள் மட்டும் ஆரவ் லைஃப்ல வரலைன்னா, அவன் லைஃப் என்ன ஆகி இருக்கும்ன்னு கூட என்னால யோசிச்சு பார்க்க முடியல. அதுவும் என்னால அவன் வீட்டை விட்டு வந்தது நினைச்சு பல நாள் தூக்கமே வந்தது இல்லப்பா. அதுக்கு அப்பறமும், ஒரு விஷயம் கூட அவனுக்கு நல்லதா நடக்கவே இல்ல.

பட், நீங்க மதி பத்தி கவலை பட வேண்டிய அவசியமே இல்ல. இஷுக்காகவாவது கண்டிப்பா அவள் ஆரவ விட்டு போக மாட்டா. ஆரவும் விட மாட்டான். நீங்க வேணும்ன்னா பாருங்க… எல்லாத்தையும் மறந்துட்டு, அவள் ஹேப்பியா தான் இருக்க போறா.

மனசுல கொஞ்சம் கூட அவன் மேல காதல் இல்லாம தான், இப்படி அவன் கூட ஒண்ணா, கையை புடிச்சுட்டு போயிட்டு இருக்காளா? கொஞ்சம் குழம்புறா அவ்ளோ தான். அதையும் ஆரவ் சரி பண்ணிடுவான். நம்மளும் கூடவே தான இருக்கோம். எல்லாம் சரி ஆகிடும் சுதி…” என்றவள் அவன் கைகளுக்கு முத்தமொன்றை கொடுக்க,

சற்றே தெளிந்து, வலியுடன் புன்னகைத்தவன், தன் கையை பிடித்திருந்த அவள் கைகளுக்கும் முத்தமிட்டான் வாஞ்சையுடன்.

அதில், இஷாந்த் தான், ஹேமாவின் கையை அவனிடம் இருந்து பிடித்து இழுத்து, இத்தனை நேரம் அவளைக் கவனித்துக் கொண்டிருந்ததில், அவளை போலவே சுதாகரை நோக்கி நாக்கை நீட்ட, அதில் இருவரும் சத்தமாக சிரித்து விட்டனர்.

“டேய்… உனக்கு ஃபியூச்சர்ல ஒரு மாமா பொண்ணு வேணும்ன்னு தான்டா, நான் அஸ்திவாரம் போட்டுட்டு இருக்கேன். அப்பறம் உனக்கு தான் சைட் அடிக்க பொண்ணு இருக்காது பார்த்துக்க…” என்று அவனை விளையாட்டாக எச்சரித்ததில், அவனோ புரிந்தது போல எக்களித்து சிரித்திட,

ஹேமாவோ வெட்கத்தில் சிவந்த கன்னங்களை குனிந்து மறைத்து கொண்டு, “ப்ளீஸ் சுதி…” என தவித்துப் போக, அதனை ஆடவனின் விழிகள் ரசித்திருந்தது.

நடு ஏரிக்கு செல்லும் போதே, “ஆரவ்… எல்லாரும் படகுல போகும் போது கத்துவீங்க தான. இந்த தடவை கத்தவே இல்ல…” என வாய் விட்டு விட, அவனோ “நாங்க கத்துறது உனக்கு எப்படி தெரியும்?” என்றான் கூர்மையாக.

அவளோ திடுக்கிட்டு, “இல்ல இல்ல. நார்மலா போட்ல போகும் போது எல்லாரும் கத்துவீங்க தான? அதுவும் ப்ரெண்ட்ஸா போகும் போது” என இளித்து வைத்து சமாளிக்க, அதில் சிறிதாய் இதழ் விரித்தவன், “உனக்கு கத்தணுமா?” எனக் கேட்டான் தலை சாய்த்து.

விழிகள் மின்ன, “ம்ம்” என மேலும் கீழும் தலை ஆட்டியவளை இன்னும் ரசித்தவன், “அப்போ கத்து” என்றான் உதட்டை மடித்து.

அதில் சுற்றி முற்றி பார்த்தவள், “நான் மட்டுமா? எனக்கு கூச்சமா இருக்கே…” என்று கன்னத்தில் கைவைத்து கொண்டதில், “சரி நான் முதல்ல கத்துறேன். நீ ஜாயின் பண்ணிக்கோ.” என்றவன், “ஓஓஓஓஓ” என்று கத்திட, அவளும் சேர்ந்து கத்தினாள்.

“வாவ்… சூப்பரா இருக்கு முகில் கத்துனா.” என உற்சாகமடைந்தவள், மீண்டும் மீண்டும் கத்த, இவர்கள் கத்தியதில் மற்ற ஜோடிகளும் மோன நிலையில் இருந்து திரும்பி, அவர்கள் படகுடன் இணைந்து, கத்தி கூச்சலிட்டனர்.

ஏரியில் இருந்து திரும்பியவர்களுக்கு, மனதின் கவலைகளை நீரிலேயே விட்டு விட்டு வந்த உயிர்ப்பு முகத்தில் தென்பட, நான்கு ஜோடிகளுமே அதிகபட்ச குஷியுடன் காணப்பட்டனர்.

ஏரியைச் சுற்றி, சிறிது நேரம் சைக்கிள் ஓட்டி, தின்பண்டங்களையும் வாங்கி வஞ்சகம் இன்றி சாப்பிட்டு விட்டு, சோர்ந்து போனவர்கள், காட்டேஜிற்கு திரும்பினர்.

செல்லும் வழியிலேயே இஷாந்த் உறங்கி இருக்க, “நான் பேபிய படுக்க வைக்கிறேன் ஆரவ்” என்ற வான்மதி முதலில் அறைக்கு செல்ல, சென்றவள் திகைத்து நின்றாள்.

ஆரவிற்கு, மற்ற ஆறு பேருமே பதற்றமாக இருப்பது போல ஒரு மாயை தோன்ற, ஏதோ ஒரு வில்லங்கத்தை செய்து வைத்து விட்டனர் என்று மட்டும் உள்ளுணர்வு உந்த, அவர்களை ஒரு மாதிரியாக பார்த்தபடியே அவனும் மாடி ஏறி சென்று, அறையை பார்த்து அதிர்ந்து விட்டான்.

முதலிரவுக்கு தயார் செய்திருப்பது போல, அறை எங்கும் பூவால் அலங்கரிக்கப்பட்டு இருக்க, ரோஜாவின் மணம் நாசியில் இதமாக நுழைந்தது.

ஆனால், அதனை அனுபவிக்கும் நிலையில் இரு உள்ளங்களும் இல்லை. வான்மதிக்கோ, கையெல்லாம் நடுங்க ஆரம்பித்து விட்டது. ஏனோ, முதன் முதலில் விக்ராந்தின் அறைக்குள் நுழையும் போது இதே போல் தான் அலங்காரம் செய்திருக்க, இப்போது அதன்பிறகான சிதைக்கும் நினைவுகள் எல்லாம் வதைக்கத் தொடங்க, கண்ணில் நீர் தேங்க நின்றாள்.

அவளின் கலக்கத்தை நேர்கொள்ள இயலாதவன், “நீ கொஞ்சம் வெளிய இரு” என்றான் உணர்வுகளற்ற குரலில்.

அதில், விழுந்தடித்து இஷாந்தை இறுக்கி நெஞ்சோடு அணைத்தபடியே வெளியில் இருந்த சோபாவில் அமர்ந்தவளுக்கு இன்னும் நடுக்கம் மட்டும் நிற்கவில்லை.

நிமிடத்தில், அனைத்து அலங்காரங்களையும் கலைத்தவன், ஒரு பூ கூட மிச்சம் வைக்காமல் அனைத்தையும் குப்பையில் போட்டு விட்டே, வெளியில் சென்றான்.

“இப்போ உள்ள போ!” என உத்தரவிட்டு விட்டு, அவளை பாராமல் கீழே சென்றவன், ஹாலில் திருதிருவென விழித்தபடி அமர்ந்திருந்த நண்பர்களின் முன் சென்று நெருப்பை உமிழ்ந்தான்.

“அறிவிருக்கா இல்லையாடா உங்களுக்கு? என்னை கேட்காம உங்களை யாரு இதெல்லாம் பண்ண சொன்னது. எனக்கு தெரியாதா… என் பொண்டாட்டி கூட படு…” என்று பேச வந்தவன், மோனிஷாவை மனதில் நிறுத்தி, வார்த்தையை விழுங்கி கொண்டு,

“இன்னொரு தடவை சேர்த்து வைக்கிறேன் புடுங்குறேன்னு ஏதாவது செஞ்சுட்டு இருந்தீங்க. நான் கிளம்பி சென்னைக்கு போய்டுவேன்.” என மிரட்டி வைத்தான்.

கவின் தான் பாவமாக, “மச்சான். சத்தியமா இது எங்க பிளான்லேயே இல்ல.” என மெதுவாக முணுமுணுக்க,

தன்விக், “ஆமா மச்சான். இந்த காட்டேஜ் மேனேஜ்மெண்ட் தான், நியூ கபிள்ஸ் வந்தா, இந்த மாதிரி செட் அப் பண்ணுவாங்களாம். எங்ககிட்ட கேட்டப்போ நாங்க முதல்ல வேணாம்ன்னு சொல்லிட்டோம். அப்பறம், ஹேமா ரூமை மட்டும் தான் டெகரேட் பண்ண சொன்னோம். அவங்க என்னன்னா எல்லார் ரூமையும் டெகரேட் பண்ணிட்டாங்க. பிராமிஸா!” என்றான் சத்தியம் செய்யாத குறையாக.

சுதாகரோ திகைத்து, “எதுக்குடா எங்க ரூமை மட்டும் பண்ண சொன்னீங்க…?” எனக் குழம்ப,

கவின், “அது… ரெண்டு பேருக்கும் சர்ப்ரைஸ் குடுக்கலாம்ன்னு தான்! நீங்களும் மேரேஜ் ஆனதுல இருந்து, தள்ளி தான் இருக்கீங்கன்னு தெரியும்.” என்றதில், ஹேமா லயாவை பார்க்க, அவள் இளித்து வைத்தாள்.

காலையிலேயே லயா இதனை பற்றி கேட்டிருக்க, “முதல்ல ஆரவ் ப்ராப்லம் சரி ஆகட்டும்” என்று மழுப்பி இருந்தாள். அதனாலேயே கவினும் தன்விக்கும் இவ்வேலையை பார்த்திருக்க, அது என்னவோ அவர்களுக்கு எதிராக திரும்பி இருக்கிறது.      

சுதாகர் தான், “லூசாடா நீங்க. அப்படி பார்த்தா நீங்களும் தான் சிங்கிள்ஸ் மாதிரி சுத்திட்டு இருக்கீங்க.” என்று முறைக்க, அதற்கு கவின் பதில் பேச வரும் முன் ஆரவ் “ஸ்டாப் இட்!” என்று கத்தினான்.

“பெரிய தியாக செம்மலா நீங்கள்லாம்? என் வாழ்க்கையை எப்படி எப்போ வாழணும்ன்னு எனக்கு தெரியும். உங்க இஷ்டத்துக்கு எல்லாம் கம்பல்சரியா வாழ முடியாது. நாங்க இப்ப இருக்குற நிலைமையிலேயே இந்த செகண்ட் நல்லா தான் இருக்கோம். ஹேப்பியா தான் இருக்கோம். அப்படியே சண்டை போட்டாலும், அது உங்களுக்கு தேவை இல்லாத விஷயம். எனக்கும் என் பொண்டாட்டிக்கும் நடுவுல யாரும் வராதீங்க.

கவி… உனக்கு நான் ஏற்கனவே சொல்லி இருக்கேன். யாரோட வாழ்க்கையையும் யாரும் வாழ முடியாது. அவங்க அவங்க வலி. அவங்க அவங்களுக்கு மட்டும் தான் சொந்தம். நீங்க துறவியா போனா கூட, அந்த வலியை வாங்க முடியாது. சோ, உங்க உங்க வாழ்க்கையை நீங்க வாழுங்க. என் வாழ்க்கையை எனக்கு வாழ்ந்துக்க தெரியும்.” என அடக்கப்பட்ட கோபத்துடன் பற்களை அழுந்த கடித்து கடிந்தவன்,

சுதாகரை ஒரு நொடி அதிகமாக முறைத்து, “ஒழுங்கா அவ கூட வாழுற வழியை பாரு. நீ லவ் பண்றேன்னு சொன்னதும் என் ப்ரெண்டை கல்யாணம் பண்ணி வைச்சது, வேடிக்கை பார்க்க இல்ல.” என்று அனலடித்தவன், அதே பார்வையுடன் கவினையும் தன்விக்கையும் கூடவே லயாவையும் முறைத்து வைக்க,

அவளோ “என்னடா நீ… அப்போ அவளை டைவர்ஸ் பண்ண மாட்டியா? அடுத்த ஜென்மத்துல நான் இவனை டைவர்ஸ் பண்ணிடுறேன். நீயும் பண்ணிடு. ஓகே வா” என அனைத்து பற்களையும் காட்டி வைக்க,

அதில் தணிந்து தலையில் அடித்துக் கொண்டவன், “நீ திருந்தவே மாட்ட.” என்று விட்டு, மாடிக்கு சென்றதில் தான் பெருமூச்சு விட்டவள், கவின் புறம் திரும்ப, அவனோ “சைக்கிள் கேப்ல நீ எனக்கு டைவர்ஸ் குடுக்க பிளான் பண்றியாடி.” என்றான் முறைத்து.

அவன் கோபத்தில் அசடு வழிந்தவள், “அது அவனை டைவர்ட் பண்றதுக்காக சொன்னேன்டா கவி…” என ஆறுதல் படுத்த முயல, “எதே, டைவர்ட் பண்ண நீ டைவர்ஸ் பண்ணுவியா?” என்று பெருமூச்சுக்கள் வாங்கியதில், மற்ற நால்வரும் நமுட்டு சிரிப்புடன் அவரவர் அறைக்குள் சென்று விட்டனர்.

“ஐய்யோ நான் இந்த ஜென்மத்துல சொல்லலைடா. அடுத்த ஜென்மத்துல தான் சொன்னேன். இப்போதைக்கு டைவர்ஸ் பண்ற ஐடியா இல்ல ட்ரஸ்ட் மீ.” என்றாள் சிரிப்பை அடக்கிக்கொண்டு.

“அஸ்கு புஸ்கு… அடுத்த ஜென்மத்துலயும் உனக்கு நான் தான். உன் தலையெழுத்தை யாராலும் மாத்த முடியாது” என சிலுப்ப, “இருந்தாலும் என் வாழ்க்கை இவ்ளோ மோசமா இருக்க வேண்டாம்” என்றாள் பாவப்பட்டு.

“அடியேய்…” என வெறியானவனுக்கு, நச்சென்று ஒரு முத்தத்தை கொடுத்தவள், “கூல்டா புருஷா. சும்மா லுலுவாய்க்கு சொன்னேன். என் செல்லம்ல…” என்று அவன் தாடையை பற்றி கொஞ்ச, அவனோ அவள் தீண்டலில் உருகி, வெளியில் அதே கெத்தை தொடர்ந்தான்.

அதனை கண்டுகொண்ட லயா, “நடிக்காதடா தடிமாடு.” என்று அடிக்க, அதில் சிரித்து விட்டவன்,

“பாரு லயா இவனை… இவன் வாழ்க்கைக்குள்ள நம்ம வர கூடாதா? எப்படி பேசிட்டு போறான் பாரு…” என்று முகம் சுருங்கினான்.

“அவன் சொன்னதுல என்ன தப்பு இருக்கு கவி. கட்டாயப்படுத்தி அன்பை வரவழைக்க முடியாதுடா. அது நிலைக்கவும் செய்யாது. யூ நோ தட்.” என அவன் தலையை மெல்லமாக கலைத்து விட்டாள்.

“புரியுதுடி. ஆனா, இது உண்மையா என் பிளான் இல்ல… மதியோட மனநிலை தெரிஞ்சும் நான் எப்படி இந்த மாதிரி பண்ணுவேன். நான் ஒன்னும் அவ கூட வாழ்ந்தே ஆகணும்னு சொல்லல. மனசுல இருக்குற காதலை தான் சொல்ல சொல்றேன்.” என்று குரல் கம்ம கூற,

“அது அவனுக்கும் புரியுது டா. சடனா டெக்கரேஷன் பார்க்கவும் டென்ஷன் ஆகி இருப்பான். அதுவும் இல்லாம, அவனுக்காக நம்ம லைஃப் ஸ்டார்ட் பண்ணாம இருக்கோம்ன்னு கொஞ்சம் ஃபீல் ஆகி இருப்பான்.” என ஆரவின் மன அலைகளை சரியாக எடுத்துரைத்ததில்,

“ஆமால அப்படியும் இருக்குமோ…!” என்று சிந்தித்தவனைக் கண்டு சிரித்தவள்,

“அப்படியே தான் வா உள்ள போலாம்…” என அறைக்கு அழைத்து செல்ல, அங்கு சென்றதும் பார்த்த மலர் அலங்காரங்களும், அந்த மோனநிலை எழுப்பிய உணர்வில் தடுமாறிய ஆடவனின் தாப பார்வையும் அவளை சிவக்க வைத்தது.

அச்சிவப்பில் மொத்தமாக வீழ்ந்தவன், அவளை தன்னில் வீழ வைக்கும் முயற்சியில் இறங்கினான் காதலுடன்.

அறைக்கு சென்ற மோனிஷா தான் விழுந்து விழுந்து சிரித்திருந்தாள். தன்விக்கோ ஆரவ் திட்டியதில் உர்ரென இருக்க, இவளின் சிரிப்பு மேலும் கடுப்பேற்றியது. “ஏண்டி சிரிக்கிற…?” என முறைக்க,

“இல்ல, அன்னைக்கு மதி சொன்னா. அண்ணா பச்சை மிளகாயை கடிச்ச மாதிரி கத்துறாங்கன்னு அப்போ கூட நான் நம்பல. இன்னைக்கு நம்புறேன்… ஹா ஹா…” என்று மேலும் நகைத்ததில், அவனுக்கும் சிரிப்பே வந்தது.

பின் வாடியவன், “நிஜமா நாங்க இப்படி பண்ணல மோனி. மதி ஹர்ட் ஆகி இருப்பாளா?” எனத் தவிப்பாக கேட்க, அவனை கனிவுடன் பார்த்தவள், “அப்படி எல்லாம் இல்ல மாமா. அவள் எப்டியா இருந்தாலும் இதை ஃபேஸ் பண்ணி தான ஆகணும். இந்த மாதிரி இன்சிடென்ட் தான் அவளை நார்மலா மாத்தும். சோ ஃபீல் ஃபிரீ…” என்று அவனை சமன் படுத்த, அதில் இயல்பிற்கு வந்தவன்,

அறையை நன்றாக சுத்தி பார்த்து விட்டு, “ஆனாலும் ரொம்ப பக்கவா டெகரேட் பண்ணிருக்கானுங்க. இதை பார்த்தா எனக்கே கடுப்பாகுது. அவனுக்கு ஆகாதா?” என்றான் சலித்து.

அவளோ புரியாது, “ஏன்? உனக்கு ஏன் கடுப்பாகுது?” எனக் கேட்க,

“பின்ன, இத்தனை பூவை வேஸ்ட் பண்ணிருக்கானுங்க. அதெல்லாம் விட, ரோஜால இருக்குற முள்ளு குத்துச்சுன்னா, என்ன பண்றது?” என தீவிர சிந்தனையில் இருக்க, மோனிஷா தான் இடுப்பில் கை வைத்து முறைத்தாள்.

அவள் முறைப்பை ரசித்தவன், “முள்ளு குத்துதா இல்லையான்னு டெஸ்ட் பண்ணி பார்த்துடலாமா மோனி?” எனக் கேட்க, நாணிப் போனவள், வெட்கத்தில் முகத்தை மூடி கொள்ள, அவன் அவளை மூடிக்கொண்டான்.

“சாரி சுதி. நான் லயாகிட்ட எதார்த்தமா தான் சொன்னேன். அவள் இப்படி எல்லார்ட்டயும் சொல்லி வைச்சுருப்பான்னு தெரியல.” என்றவளுக்கு அழுகையே வரும் போல இருந்தது.

இதனை எதிர்பாராதவன் திகைத்து, “ஹேய்… மிஸஸ் சைட்… என்ன இது அழுகை? இதுக்குலாமா அழுவாங்க?” என பதற,

“இல்ல… என்ன இருந்தாலும் நமக்குள்ள இருக்குற பெர்சனல ஃப்ரெண்டா இருந்தாலும் சொல்லிருக்க கூடாதுல. என் மேல கோபம் இல்ல தான?” எனக் கேட்டாள் பாவமாக.

“இப்ப எதுக்கு நான் கோபப்படணும் முதல்ல அதை சொல்லு” என கையைக் கட்டிக்கொண்டு அவன் கேட்க,

“இல்ல… ஆரவ் மதி ப்ராப்ளம் முடிஞ்சதும் தான் நம்ம லைஃப் ஸ்டார்ட் பண்ணனும்ன்னு இருந்து இருப்பீங்க. அதை நான் வெளிய சொல்லி இப்போ இப்படி…” என திணற, அவளையே அழுத்தமாக பார்த்தவன், “நான் எப்போவாவது உங்கிட்ட இப்படி சொல்லி இருக்கேனா?” என்றான் கூர்மையுடன்.

அதில் இன்னும் தடுமாறியவள், மறுப்பாக தலையசைக்க, “சோ… நீயே முடிவு பண்ணிக்கிட்ட…? அப்படி தான?” என முறைத்தவனை ஏறெடுத்துப் பார்க்க இயலாமல் தலை தாழ்த்தி இருந்தவளுக்கு கண்ணீரே சுரந்தது.

“சத்தியமா நான் அப்படி நினைக்கல ஹேமா. அவங்க லைஃப் வேற. அவங்களோட வே ஆஃப் லைஃப்ல தெ ஆர் ஹேப்பி. இப்போ இந்த செகண்ட் என் தங்கச்சி என்கூட இருக்கா, அவனுக்கு பிடிச்சவனோட, அவ குழந்தையோட நிம்மதியா இருக்கா. அது எனக்கு போதும். அதுக்காக, என்னை நம்பி வந்த உன்ன கஷ்டப்படுத்துவேன்னு நீ எப்படி நினைக்கலாம்” என்று கோபமாக கேட்க, இதுவரை தன்னிடம் கோபத்தையே காட்டிராதவனின் சினம் அவளுக்கு மேலும் அழுகையைக் கொடுத்தது.

“இங்க பாரு ஹேமா. நமக்கு கல்யாணம் ஆகியே நாலு நாள் தான் ஆகுது. உனக்கே தெரியும். நான் பேமிலி பிசினெஸ விட்டுட்டு வந்துட்டேன்னு. தனியா பிசினெஸ் பண்ணனும்ன்னு அந்த வேலைல இருந்தேன். நம்ம லைஃப் ஸ்டார்ட் பண்ணும் போது ரெண்டு பேரோட மைண்ட் செட்டும் அமைதியா இருக்கணும். கல்யாணம் பண்ணிட்டோமேன்னு ரிலேஷன்ஷிப் வச்சுக்குறது என்னை பொறுத்தவரை முட்டாள்தனம்.

எப்டியும் ஊட்டிக்கு தான வரப்போறோம் இங்க வந்ததும் பார்த்துக்கலாம்ன்னு நினைச்சேன். என்ன இதை உங்கிட்ட ஷேர் பண்ணி இருக்கனும். இல்லைன்னா நீயா ஒன்ன நினைச்சுட்டு இருந்துருக்க மாட்ட.” என்று தன்னிலை விளக்கம் கொடுத்தவனை திகைப்பாக பார்த்தாள்.

“சரி இப்ப சொல்லு, உனக்கு ஆரவ் லைஃப் செட் ஆனதும் தான் லைஃப் ஸ்டார்ட் பண்ணனும்ன்னு தாட் இருக்கா? இருந்தாலும் நோ ப்ராப்ளம் நான் வெய்ட் பண்றேன்.” என்றான் சலனமின்றி.

அவள் வேகமாக “அப்படி எல்லாம் இல்ல” என முணுமுணுக்க, அதில் அவளருகில் நெருங்கி வந்தவன், “அப்போ ஓகே வா?” என ஹஸ்கி குரலில் கேட்க, அக்கேள்வியில் கண்ணீர் கண்ணிலேயே தங்கி விட்டதோடு, கரங்களில் ரோமம் சிலிர்த்தெழுந்தது.

“ம்ம்…” என வெட்கத்துடன் தலையாட்டியவள், அவன் மார்பிலேயே வெட்கத்தையும் மறைத்துக் கொள்ள, அவனோ முழுதாக அவளை ஆட்கொள்ளத் தொடங்கினான் ரசித்து.

அலங்கரித்த தடமே தெரியாமல், சுத்தம் செய்யப்பட்டிருந்த அறையைக் கண்டதும் தான், இறுக்கம் தளர்ந்து இதழ்கள் புன்னகை பூத்தது வான்மதிக்கு.

கூடவே, ஆரவ் கீழே பேசிய அனைத்தும் அவளுக்கும் கேட்டிட, அவளுக்கான அவனின் கோபம் ஏன் இத்தனை இதத்தை கொடுக்கிறது என்றே புரியவில்லை அவளுக்கு.

இரவு முழுதும் யோசனையிலேயே உறக்கம் தழுவ மறுக்க, அதன் பிறகு ஆரவ் அறைக்கும் வரவில்லை. சோஃபாவிலேயே படுத்து விட்டான் போலும். அவன் புரிதலில் பூரித்த மனதுடன் திடமாக ஒரு முடிவெடுத்தவள் விடியலுக்காக காத்திருக்க இன்றென பார்த்து அவனும் சரி, அவளின் பேபியும் சரி எழுந்த பாடில்லை.

இரவின் கொஞ்சல்கள் ஏற்படுத்திய தாக்கத்தில் 10 மணி ஆகியும் மற்றவர்களும் எழும்பாமல் போக, அவளுக்கோ ‘என்னடா இது… டூருக்கு வந்துட்டு காலைலயே அவுட்டிங் கூட்டிட்டு போகாம, எல்லாரும் தூங்குறாங்க’ என்று முணுமுணுத்துக் கொண்டவள், அந்த காட்டேஜிலேயே சிறிய கிட்சனும் அங்கு சில தேவையான பொருட்களும் இருக்க,

“சரி எல்லாரும் எந்திரிக்கிறதுக்குள்ள காபி போடலாம்.” என்று பொறுப்பாக அடுக்களைக்கு சென்றாள்.  

‘நம்ம வீட்டு கிட்சன்லயே எது எங்க இருக்குன்னு தெரியாது. இதுல இங்க சுத்தம்…’ என தலையை சொறிந்தவள்,  அடுப்புக்கு கீழே இருந்த கப் போர்டை திறந்து பார்க்க, அங்கு ஒரு பால் பாத்திரம் இருந்தது.

அதை வேகமாக எடுக்க போனவளுக்கு கை வழுக்கி விட, அதனுள் இருந்த பாத்திரங்கள் முழுதும் அதிக சத்தத்தை ஏற்படுத்தி கீழே விழ, “அய்யயோ” என்று காதை மூடிக்கொண்டாள்.

இச்சத்தத்தில் ஆரவ் எழுந்து விட, கூடவே ஹேமாவிற்கும் விழிப்பு தட்டியது.

“சுதி… ஏதோ சத்தம் கேட்டுச்சுல…” எனக் கேட்க, “எனக்கு ஒன்னும் கேட்கலப்பா. தூங்கு.” என்று இன்னும் அவளின் வெற்று மேனியை இறுக்கிக் கொண்டான்.

அவளோ சிவந்து நெளிந்து, “விடுங்கப்பா. நான் போய் பாக்குறேன். பாத்திரம் விழுந்த மாதிரி இருந்துச்சு.” என்று சில நொடிகளின் போராட்டத்தில் அவன் கைகளை எடுத்து விட்டு, புடவையையும் சுற்றிக்கொண்டு வெளியில் வந்து பார்க்க, அப்போது ஆரவும் அடுக்களைக்கு வந்து விட்டான்.

வான்மதியைக் கண்டதும் “என்னடி பண்ற?” என புருவம் சுருக்க, அவசரமாக பாத்திரத்தை எடுத்து வைத்துக் கொண்டிருந்தவள், “காபி போடலாம்ன்னு வந்தேன் ஆரவ். எல்லாம் கீழ விழுந்துடுச்சு” என பாவமாக கூற, கூந்தலை அள்ளி முடிந்தபடியே அங்கு வந்த ஹேமாவும் அவளின் விழியை கண்டு சிரித்தாள்.

“காபி எல்லா பாத்திரத்துலயுமா போட போற நாத்தனாரே?” என கிண்டல் செய்ய, “என்ன ஜோக்கா? இவ்ளோ பெரிய பாத்திரம் விழுந்த சத்தம் உங்க காதுல மட்டும் தான் கேட்டுச்சா அண்ணி. மத்த எல்லாரும் ரொம்ப தூங்கு மூஞ்சீங்களா இருக்காங்க. சுத்தி கூடவா இவ்ளோ சத்தத்துல தூங்குறான்” என்று அலட்டலாக மூக்கை சுருக்கியவளிடம் பதில் கூற தெரியாமல் விழிப்பது ஹேமாவின் முறையானது.

ஆரவ் தலையை கோதிய படி, சிரிப்பை அடக்கிக் கொண்டு “நீ போ ஹேமா. நான் பாத்துக்குறேன்” என அவளை அனுப்பிட, அவளுக்கோ இருவரையும் பார்க்கவே வெட்கமாக இருந்ததில் உள்ளே ஓடி விட்டாள்.

“ஏய்… அரை வேக்காடு…” என திட்ட வரும் போதே, மோனிஷா பாதி தூக்கத்தில் வந்திருந்தவள், “என்ன இங்க சத்தம்?” எனக் கேட்க,

“அடிப்பாவி… பாதி கிட்சனே கீழ விழுந்துச்சு. நீ என்னன்னா லூசு மாதிரி கேட்குற.” என அவளை லூசாக்க,

அதில் தான் நன்றாக விழித்தவள், “ஆமாடி நான் லூசு. காபி கூட போட தெரியாத நீ தெளிவு பாரு. கொய்யால… தூங்கும் போது, இனிமே பாத்திரத்தை உருட்டு, வந்து கடிச்சு வைக்கிறேன்…” என்று மிரட்டி விட்டு செல்ல, அதில் கடுப்பான வான்மதி வேண்டுமென்றே ஒரு பாத்திரத்தை போட்டு நங்கென உடைத்தாள்.

அதில் முழு தூக்கமும் மோனிஷாவை விட்டு செல்ல, “ஏண்டி?” என்றாள் பாவமாக.

இந்நிலையில் தான், கவின் அடித்து பிடித்து வெளியில் ஓடி வந்து “என்ன ஆச்சு?” என்று வினவ, ஆரவிற்க்கு எங்காவது முட்டிக்கொள்ளலாமா என்றிருந்தது அவனின் துணைவியார் செய்த ஆர்ப்பாட்டத்தில்.

அத்தியாயம் 35

மதியோ மோனிஷாவிடம் “எனக்கா காபி போட தெரியாது. ஆரவ் எப்படி போடணும்ன்னு சொல்லி குடுத்து இருக்காரு. நான் நல்லா தான் போடுவேன்.” என அவளின் சமையல் திறனை எடுத்துரைக்க, “உனக்கு காபி போட தெரியும்ன்னு சொல்றதுக்கா எல்லாத்தையும் உடைச்சு எங்களை எழுப்புன?” என விழித்தபடி வினவினான் கவின்.

“சே சே… இல்லண்ணா. தெரியாம தான் போட்டேன். ஆனா, எல்லாரையும் எழுப்பணும்ன்னா, இப்படி பாத்திரத்தை உடைக்கணும்ன்னு தெரிஞ்சுக்கிட்டேன். சோ நாளைல இருந்து இதையே ஃபாலோ பண்றேன்” என்றாள் குறும்புடன்.

அதில் திகைத்த கவினும் மோனிஷாவும் “எதுக்கு?” என்று ஒரு சேர கேட்க,

“அப்போ தான காலா காலத்துல எந்திரிச்சு, வெளிய கூட்டிட்டு போவீங்க. 10 மணி வரை தூங்குனா, அப்பறம் எப்படி சுத்தி பாக்குறது…” என்ற நியாயமான கேள்வியை முன் வைக்க, மோனிஷாவிற்கோ ஒரே வெட்க வெட்கமாக வந்து விட, “நான் போய் மாமா எந்திரிச்சுட்டானான்னு பாக்குறேன்” என தலையை குனிந்து கொண்டு அறைக்குள் புகுந்து கொண்டாள்.

கவினுக்கோ அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை. பின், தன்னை மீறி சிரித்து விட்டு, “வெளிய தான போகணும். அரை மணி நேரத்துல எல்லாரையும் கிளம்ப சொல்லிடலாம் டன்.” என மிருதுவாக கூறியவனின் பனியனில் லயாவின் பொட்டு ஒட்டிருக்க,

ஆரவ் தான் “அரை மணி நேரத்துல? நீ…?” என்று கேலியாக அப்பொட்டை பார்க்க, அவனும் அதனை அப்போது தான் கண்டுகொண்டு அசட்டு சிரிப்புடன் நெளிந்தான்.

இதனை உணராத வான்மதி தான், “அப்போ சரி சீக்கிரம் போய் கிளம்புங்க.” என்று உத்தரவிட, ஆரவ் “டேய்… இன்னைக்கு நாங்க மட்டும் வெளிய போயிட்டு வரோம். எல்லாரும் ரெஸ்ட் எடுங்க” என்று விட்டு, வான்மதியை தரதரவென இழுத்துக்கொண்டு மாடிக்கு சென்றான்.

“ஏன் ஆரவ் இப்படி இழுத்துட்டு வரீங்க?” என அவள் புருவம் சுருக்கிக் கேட்க, அவனோ “லூசு லூசு… ஏண்டி அநியாயம் பண்ணிட்டு இருக்க?” எனக் கேட்கும் போதே அவனுக்கு சிரிப்பு வந்து விட்டது.

“நான் என்ன பண்ணேன்? ஏழு மணிக்குலாம் எந்திரிச்சுட்டேன் தெரியுமா. பேபியும் இன்னும் எந்திரிக்கல. நீங்களும் எந்திரிக்கல. சரின்னு கீழ போனா யாருமே எந்திரிக்கல. அப்போ கூட நான் யாரையும் டிஸ்டர்ப் பண்ணாம காபி போட தான் நினைச்சேன். அதுக்குள்ள என்ன என்னமோ ஆகிடுச்சு.” என்று அனைத்து பாவனைகளும் ஒரு சேர இதழ் சுளித்து பேசியவளிடம் மனது மீண்டும் மீண்டும் தொலைய ஆரம்பிக்க, ஆரவ் வாய்விட்டே பெருமூச்சை வெளியிட்டு தன்னை அடக்கினான்.

“என்னை எழுப்பி விட்டுருக்கலாம்லடி.” என மென்மையாக வினவ, “நல்லா தூங்குனீங்க அதான் எழுப்பல…” என்றவளிடம் “அதுக்காக, எல்லாரையும் எழுப்பி விடுவியா?” என்றான் முறைப்பாக.

“என்னமோ நான் காலங்காத்தால அஞ்சு மணிக்கு எழுப்பி விட்ட மாதிரி சொல்றீங்க? 10 மணிக்கு தான எழுப்புனேன்.” என சிலுப்பியவளைக் கண்டு நொந்தவன், “அடி பைத்தியமே. எல்லாரும் ஹனிமூன் செலெப்ரெட் பண்ணிட்டு இருக்காங்கடி.” என்றான் பல்லைக்கடித்து.

“நீங்களும் பைத்தியம் மாதிரி பேசாதீங்க ஆரவ். நானும் ஹனிமூன் செலெப்ரெட் பண்ண தான், வெளிய போலாம்ன்னு கூப்புடுறேன்” என்றவள், அவனை வெளியில் அழைத்து சென்று, அவனை முதன் முதலில் இங்கு பார்த்ததை பற்றி பகிரலாம் என்ற ஆர்வத்தில் இருந்திட, வேறேதும் அவள் மனதில் பதியவில்லை பாவம்.

“யாரு நான் பைத்தியமா? நீ தான் பைத்தியம். சுத்தி பார்க்கவாடி ஹனிமூன் வருவாங்க…?” என்றவன் முறைத்து வைக்க, அவள் வேகமாக “ஆமா…” எனக்கூறி விட்டு அதன் பிறகே பேந்த பேந்த விழித்தாள்.

சில நிமிடங்கள் கழித்தே இரவு அனைவரின் அறையும் அலங்கரித்ததே நினைவு வந்திட, அவன் முன்னேயே அவள் தலையில் நறுக்கென கொட்டிக்கொண்டாள்.

“சாரி ஆரவ். நான் இதை யோசிக்கவே இல்லை. எல்லாரையும் டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” என கேட்டவளுக்கு விட்டால் கண்ணீரே வந்து விடும் போல இருந்தது.

“ம்ம்க்கும். டிஸ்டர்ப் பண்ணிட்டு கேட்குறா பாரு கேள்வி” என கேலி செய்தவன், அவள் அழப்போவது அறிந்ததும், “விடுடி. தெ கேன் அண்டர்ஸ்டாண்ட்.” என்று விட்டு, “உனக்கு காபி போட்டு தரேன் வா.” என்றான் கையை பிடித்து.

“இல்ல வேணாம்.” என கையை இழுத்துக் கொண்டவளுக்கு குற்ற உணர்ச்சி ஆகி விட்டது.

அந்நேரம் ஹேமா தான், தலையில் கட்டிய துண்டுடன், அவர்களின் அறைக் கதவை தட்டி விட்டு, இருவருக்கும் காபியுடன் உள்ளே வந்தவள், “என்ன நாத்தனாரே, நீ இன்னுமா காபி போடல” என நக்கலடித்தவள், அவளிடம் ட்ரேயை நீட்ட, அதனை எடுக்காமல் “சாரி அண்ணி” என்றாள்.

ஹேமா ஒரு நொடி விழித்து விட்டு, பின் “ஹே. நீ காபி போட்டு தந்துருந்தா தான் சாரி சொல்லி இருக்கணும். உன் சமையல் திறனை பத்தி எனக்கும் தெரியும்” என்று மேலும் வாரியதில், சிரித்து விட்ட வான்மதிக்கு ஆரவே காபியை எடுத்து கொடுக்க, அந்நேரம், கவினும் தன்வியும் அங்கு வந்திருந்தனர்.

“இன்னுமா நீங்க கிளம்பல. சீக்கிரம் வாங்க வெளிய போலாம்.” என்று விட்டு, ஹேமாவை பார்த்த கவின், “நீ ஏன்டி தலையை துவட்டாம ஈர துண்டோட நிக்கிற. போய் ட்ரையர் போடு.” என்று எப்போதும் போல அதட்டியவன், சுதாகர் அங்கு வந்ததும் சட்டென நிறுத்தி விட்டான்.

அவளோ அதனை கண்டுகொள்ளாமல், “உங்களுக்கு காபி வேணுமா?” என நண்பர்களிடம் கேட்க, “வேணாம்.” என்றதில், சுதாரிடம் கேட்க, அவன் “கீழ வந்து குடிக்கிறேன்” என்றதில், சரி என்று கீழே இறங்கி விட்டாள்.

வான்மதி தான், ‘ஐயோ நமக்காகவா எல்லாரும் உடனே கிளம்பி இருக்காங்க.’ என்று மேலும் சங்கடமாகி விட, தன்வியும் கவியும் கீழே இறங்க போனதில், சுதாகர் “டேய் நில்லுங்கடா” என்றான் அதட்டலாக.

அதில் நின்று விட்ட கவினுக்கு, அவன் தவறாக எடுத்துகொள்வானோ என்றே பதற்றமாக இருந்தது.

சுதாகரோ, “நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன். நான் என்னமோ உங்க மாமியார் மாதிரி பார்த்து பார்த்து பேசுறீங்க? உங்க பிரெண்டு மேல உங்களுக்கு இருக்குற உரிமைய நான் எப்பவும் பறிக்க நினைக்க மாட்டேன். நான் ஒன்னும் அவ்ளோ கொடுமைக்காரன் இல்ல. அவள் என்ன தான் வெளிய சொல்லலைன்னாலும் நீங்க எப்பவும் மாதிரி பேச மாட்டுறீங்கன்னு அவளும் ஃபீல் பண்றா?” என்று மூவரையும் முறைக்க, கீழே இருந்த ஹேமாவிற்கும் லேசாக கண்கள் கலங்கியது.

“நல்லா காதுல விழுகுற மாதிரி கத்தி சொல்லு சுத்தி. உனக்கும் தான் கல்யாணம் ஆகிடுச்சு. அதுக்காக நான் உன்னை வாடா போடான்னு கூப்பிட கூடாதுன்னு அண்ணி என்கிட்ட சண்டைக்கு வருவாங்களா என்ன? இவங்க தான் உன்ன ஓவரா பில்ட் – அப் பண்றாங்க. பட் நீ ஒரு டம்மி பீஸ்ன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்” என அவனுக்கு பல்பு கொடுத்தவளை முறைத்த சுதாகர்,

“நான் எவ்ளோ ஃபீல் பண்ணி பேசிட்டு இருக்கேன். உன்ன…” என்று அவளை அடிக்க துரத்த, அவள் காபி கோப்பையை டேபிளில் வைத்து விட்டு, ஆரவின் பின்னால் சென்று ஒளிந்து கொண்டாள்.

“அங்க போய் நின்னா உன்ன அடிக்க முடியாதா வண்டு? பிசாசே… எல்லாரும் ஹேமாகிட்ட ஓவர் ஃபார்மலா இருக்காங்க. என் தங்க புருஷன் ஹேமாவை நினைச்சு ஃபீல் பண்றாருன்னு நீ தான ஒரே ஒப்பாரி வைச்ச. சரி மச்சானுக்காக இல்லைன்னாலும் தங்கச்சிக்காக பேசலாம்னு வந்தா…” என்று ஆரவை தாண்டி அவளை கொட்ட வந்திட, ஆரவ் அவனை தடுத்து அணைத்துக் கொண்டான்.

கவினும் தன்விக்குமே இதனை எதிர்பாராமல் சுதாகரை வாஞ்சையுடன் அணைத்துக் கொள்ள, அவனுக்கும் மென்முறுவல் பூத்தது.

சில நிமிட பேச்சின் பிறகு, மற்றவர்கள் கீழே சென்று விட, இப்போது ஆரவ் வான்மதியை அணைத்துக் கொண்டான்.

திடீர் அணைப்பில் திணறிப் போன பெண்ணவள், செய்வதறியாமல் நிற்க, “என்… என்னாச்சு ஆரவ்” என்றாள் தயக்கத்துடன்.

“தேங்க்ஸ் டி. நீயும் உன் அண்ணனும் இவ்ளோ அண்டர்ஸ்டாண்டிங் – ஆ இருப்பீங்கன்னு நான் நினைக்கவே இல்ல. ஆனாலும் எப்படிடி, உன் அப்பா அம்மால இருந்து, என் அம்மா வர எல்லாரும் இந்த உறவை அசிங்கப்படுத்த தான் செஞ்சாங்க. ஆனா நீ எப்படிடி புருஞ்சுக்கிட்ட. இப்போ வரை கூட நான் பெருசா எங்க உறவை பத்தி உங்கிட்ட விளக்குனது கூட இல்லையே…” என புரியாது கேட்டவனுக்கு நெஞ்சம் நிறைந்தது.

“உங்களை புருஞ்சுக்கிட்ட என்னால… உங்க உறவை புரிஞ்சுக்க முடியாதா ஆரவ்?” எனக் கேட்கும் போதே கண்ணீர் சுரக்க, அவனோ இன்னுமாக இறுக்கினான்.

“ஆரவ்… போதும்…” என இறுக்கம் தாள இயலாமல் அவள் திணற, சட்டென பிடியை விட்டவன், “சாரி” என்றபடி விலகினான்.

பின் ஏதோ தோன்ற, “என்னை புருஞ்சுக்கிட்டியா?” என விழிகள் மின்ன கேட்க, அவளோ அவனையே பார்த்தபடி, “நான் உங்ககிட்ட பேசணும்” என்றாள் கமறிய குரலில்.

“பேசு” என அவளை ஆழ்ந்து பார்க்க, அவன் பார்வையில் தடுமாறியவள், “இ… இங்க வேணாம்… வெளிய போய்…” எனத் திக்கினாள்.

“எங்க போலாம்?” என அவன் மீண்டும் கேட்க, “நேத்து போன லேக்குக்கு” என்றதில் ‘நேத்து தான போனோம்’ எனக் கேட்க வந்தவன் கேட்காமல், “ஓகே” என்றான்.

அதற்குள் இஷாந்தும் எழுந்து விட, அவனையும் கிளப்பிக்கொண்டு அனைவரும் வெளியில் சென்றனர்.

வான்மதிக்கு பதற்றமாகவே இருந்தது. சொல்லலாமா? சொன்னால் புரிந்து கொள்வாரா? தவறாக எண்ணுவாரா? என பல கேள்விகள் மனதினுள் ஒலிக்க, ஏரியையும் அடைந்தனர்.

மற்ற ஜோடிகள் அவரவர் உலகில் சஞ்சரித்து தனி தனியாக ஏரியை சுற்ற கிளம்ப, “ஏதோ பேசணும்ன்னு சொன்ன?” என அவளைப் பார்த்தான் ஆரவ்.

அவளோ அடிபட்ட பார்வையுடன், “தெரியாம கூட கண்ணம்மான்னு கூப்பிட மாட்டீங்களா ஆரவ்…?” என்று கேட்டு விட, சில நொடிகள் மௌனம் காத்தவன்,

“உனக்கு எப்போ அந்த வார்த்தை துளி கூட அருவருப்பு இல்லாம இருக்குன்னு நினைக்கிறியோ அப்போ சொல்லு. ஒரு தடவை என்ன, ஓராயிரம் தடவை நெஞ்சுக்குள்ளயே சொல்லிக்கிறதை வெளியவும் சொல்றேன்…” என்றே தேய்ந்த குரலில் பேசி முடிக்க, அவள் திகைத்தாள்.

அந்நேரம், இஷாந்த் ஆரவின் கன்னத்தைத் திருப்பி, ஏதோ ஒரு கடையை காட்டி அதிலிருக்கும் பொம்மையை கைகாட்ட, குரலை சரி செய்து கொண்டவன், “என்னடா வேணும்?” என அவன் கை காட்டிய திசையை பார்த்தான்.

“பொம்மை கேக்குறான்.” கலங்கிய முகத்துடனே வான்மதி கூற, “நான் வாங்கி குடுத்துட்டு வரேன். இங்கயே இரு” என்றவன், அவளை நிற்க வைத்து விட்டு செல்ல, அந்நேரம், “மதி?” என ஒரு பெண்மணி அழைப்பது போல இருந்ததில் திரும்பினாள்.

அவளின் ஒன்று விட்ட அத்தை முறையில் ஒருவர் இருக்க, ‘எங்க போனாலும் விடமாட்டீங்களா?’ என நொந்தவள், வலுக்கட்டாயமாக ஒரு சிரிப்பை சிந்தி, “அத்தை. நீங்க எங்க இங்க?” எனக் கேட்டாள்.

“நான் வந்தது இருக்கட்டும். நீ இங்க என்ன பண்ற தனியா?” என ராணி அவளை மேலும் கீழும் ஆராய, “தனியா வரல அத்த. ஹஸ்பண்ட் கூட தான் வந்து இருக்கேன். பேபிக்கு டாய்ஸ் வாங்கி குடுக்க போய் இருக்காரு” என பதிலளித்தவளிடம்,

அவர் விடாமல், “உன் குழந்தை தான் கலைஞ்சுருச்சுன்னு கேள்வி பட்டேனே. அப்பறம் எப்படி?” என்று தெரிந்து கொண்டே தோண்டி துருவ, ஏனோ அவ்வார்த்தையே அவளுக்கு கால்களை துவள வைத்தது.

“ஏன் உங்களுக்கு எதுவுமே தெரியாதா?” என அவள் எரிச்சலாக கேட்டு வைக்க, அவரோ “நீ ஏதோ கல்யாணம் பண்ணிட்டதா கேள்விப்பட்டேன். ஆனாலும், நீ புருசனோட இருக்கியா தனியா இருக்கியான்னு தெரியல. நீ ஒண்ணொண்ணுக்கும் கேஸ் போடுறேன்னு கிளம்புனா எவன் கூட வச்சு இருப்பான். இவன் கூடயாவது ஒழுங்கா வாழு.” என இலவச அறிவுரையை வழங்கியவர்,

“அப்பறம், முதல் புருசனோட தம்பிய தான் கட்டி இருக்கன்னு கேள்வி பட்டேன்.” என கேட்கும் போதே முகத்தை அருவருப்பாக சுளித்தவர், “எப்படி தான் இதுக்குலாம் மனசு வருதோ. உனக்கு ஒன்னும் இல்ல. உன் புருசனுக்கு அசூசையா இருக்காது. என்ன இருந்தாலும் அண்ணன் பொண்டாட்டின்னு…” என கேட்க வேண்டியதை எல்லாம் கேட்டு விட்டு, “சரி எப்படியோ நல்லா இருந்தா சரி!” என சலித்துக் கொள்ள, இவர்களை தூரத்திலேயே பார்த்து விட்டு, அவசரமாக தங்கையின் அருகில் வந்த சுதாகர்,

“என்ன அத்தை…? நீங்க இங்க என்ன பண்றீங்க?” என தங்கையின் அதிர்ந்த முகத்தை தவிப்புடன் பார்த்தபடி கேட்க, “ஏண்டா உன் தங்கச்சி தான் வீட்டுக்கு அடங்காம இருக்கா, நீயாவது…” என்று ஆரம்பிக்கும் போதே,

ஆரவ், அங்கு வந்து இருக்க, “யாரு நீங்க? என் பொண்டாட்டி பத்தி என்ன பேச்சு வேண்டியது இருக்கு?” என விழிகளில் அனல் அடிக்க கேட்டான்.

சுதாகர், “என் அத்தை முறை” என கூற வரும் போதே,

“என்ன மயிரா இருந்தா எனக்கு என்ன? என் பொண்டாட்டி பேர் என்ன இதுக்கு வருது. வந்தோமா சுத்தி பார்த்தோமா போனோமான்னு இருக்கணும் இல்ல ஏரில முக்கிடுவேன். கோ…” என சிங்கத்தின் கர்ஜனையுடன் எகிறியவனைக் கண்டு மிரண்டு விட்ட ராணி அடுத்த நொடி இடத்தை அப்புறப்படுத்தி இருந்தார்.

அவரின் நல்ல நேரம், இதற்கு முன் வான்மதியிடம் பேசியதை இருவருமே கேட்கவில்லை. இல்லையென்றால், ஆரவ் உண்மையிலேயே ஏரியில் தூக்கி வீசி இருப்பான்.

சுதாகர், “மதி… என்னடா ஆச்சு?” என அவள் தோளை குலுக்க, அவளோ இன்னும் கூட அவர் பேசிய வார்த்தைகளில் இருந்து வெளி வராது நலிந்து, சுதாகர் மீதே சாய்ந்து அழத் தொடங்கினாள்.

ஹேமா பதறி, “ஏய் மதி என்ன ஆச்சு?” என அவளருகில் வர, சுதாகர் ஆரவை வேதனையுடன் பார்க்க, ஆரவிற்கோ அவள் அழுகை எதற்கென்று புரியவில்லை என்றாலும், வலித்தது.

ஹேமாவிடம் இஷாந்தை கொடுத்தவன், வான்மதியை சுதாகரிடம் இருந்து பிரித்து, தன் கைக்குள் கொண்டு வந்து, “நான் கார் எடுத்துட்டு காட்டேஜுக்கு போறேன். இஷு அழுதா சொல்லு.” என்று விட்டு, அவளை இழுத்துக்கொண்டு, காருக்கு செல்ல, அவளின் அழுகை மட்டும் நிற்கவே இல்லை.

“போதும் மதி. தயவு செஞ்சு அழுகாத. ப்ளீஸ்.” எனக் கெஞ்சியவன், காட்டேஜிற்கு சென்றதும், மாடிக்கு அழைத்து சென்று சோபாவில் அமர வைத்தான்.

அவனும் அவளருகில் அமர்ந்து, “என்ன ஆச்சு கண்ணம்மா?” என வேதனை மிஞ்ச கேட்க, அதில் இன்னும் தேம்பி தேம்பி அழுதவள்,

“உங்களுக்கு அருவருப்பா இல்லையா ஆரவ்? என் அத்தை கூட முகத்தை சுளிச்சுக்குறாங்க. ஆனா, உங்களுக்கு எதுவுமே தோணலையா? என்ன இருந்தாலும் அவன் கூட… நான் வாழ்ந்து… இப்போ உங்க கூட…” என எண்ணியதை கூற இயலாமல் வார்த்தைகள் உடைய வெந்து போனாள்.

அவனோ ஒரு நொடி இறுகி விட்டு, பின் “ஆமா அருவருப்பா தான் இருக்கு.” என்றான் சலனமற்று.

அதில் திகைத்தவள், அவனை அதிர்வுடன் பார்க்க, அவனோ கண்ணில் தானாக உருப்பெற்ற கண்ணீரை மறைக்கவும் தடுக்கவும் இயலாமல், அதன் விருப்பத்திற்கு வெளிவிட்டு, நெற்றியை சுருக்கி

“அருவருப்பா தாண்டி இருக்கு. என்னை நினைச்சே எனக்கு அருவருப்பா இருக்கு. உயிரா காதலிச்ச பொண்ண, கண்ணுக்குள்ள வைச்சு பாத்துக்காம கை விட்டுட்டுமோன்னு நினைக்கிறப்ப அருவருப்பா இருக்கு.”

ஒவ்வொரு செகண்டும் பார்த்து பார்த்து ரசிச்ச என் கண்ணம்மாவை ஒரு அரக்கன்கிட்ட குடுத்துட்டு அதை பத்தி தெரியாம வாழ்ந்துருக்கேன்னு நினைக்கும் போது  அருவருப்பா தான் இருக்கு.

ஒரு சின்ன கீறல் கூட விழாம பார்த்துக்கணும்ன்னு நினைச்ச என் கண்ணம்மாவுக்கு, என் சொந்த குடும்பத்துக்கிட்ட இருந்தே அத்தனை வலியும் வந்துருக்குன்னு நினைக்கும் போது ரொம்ப அசிங்கமா இருக்கு. நீ சொன்ன மாதிரி அருவருப்பா தாண்டி இருக்கு. என்னை நினைச்சா எனக்கே அருவருப்பா இருக்கு. இந்த காதலுக்கும், நேசத்துக்கும் எனக்கும் கொஞ்சம் கூட அருகதை இல்லைன்னு நினைக்கும் போதே அருவருக்குது.” என்று நேரம் செல்ல செல்ல காட்டேஜ் அதிரும் அளவு கத்தினான்.

“இதே ஊட்டில, இதோ… இந்த பால்கனி வழியா உன்ன முதல் முதல்ல பார்த்தப்போ, அந்த மேகத்தை பார்த்து அந்த மேகத்துல இருந்து ஏஞ்சல் வந்து காப்பாத்துவாங்கன்னு சொன்னியே… அப்பவே, உங்கிட்ட வந்து, இல்ல இடியட் பொண்ணே. ஏஞ்சல்ஸ் வந்து காப்பாத்த மாட்டாங்க. நம்மளை நம்ம தான் காப்பாத்திக்கணும்ன்னு சொல்லணும்னு தோணுச்சு.

அதுக்கு அப்பறம், அந்த லேக்ல… பயத்துல நீ குட்டி பாப்பாவை கையில வைச்சுட்டு கண்ணை மூடிட்டு படகுல போகும் போது, உன் கையை பிடிச்சுட்டு உன் கூட வரணும் போல இருந்துச்சு. நான் இருக்கேண்டி பயப்படாதன்னு சொல்லணும் போல இருந்துச்சு. ஆனா சொல்லல.” என கூறும் போதே குரல் தேய்ந்தது அவனுக்கு.

“அதுக்கு அப்பறம்… உன்ன… ஒரு ரெஸ்டாரண்ட்ல பார்த்தப்போ, ஐஸ்க்ரீமை ட்ரெஸ்ல கொட்டிக்கிட்டு உன் அம்மாட்ட திட்டு வாங்கும்போது, நீ சொன்னியே, என் புருஷன் வந்து ஊட்டி விடுவான்னு. அப்போ அப்போவே வந்து உனக்கு ஐஸ்க்ரீம் ஊட்டி விடணும் போல இருந்துச்சு. ஆனா பண்ணல.

தூங்குற குழந்தையை கொஞ்சும் போது, உன்ன கொஞ்ச தோணுச்சுடி. ஆனா கொஞ்சல.”

மூக்கை உறிஞ்சிக்கொண்டவன், கன்னத்தை அழுந்தத் துடைத்து, “கடைசியா உங்கிட்ட பேச வரலாம்ன்னு நினைச்சப்போ… ப்ச். பேச முடியாத சூழ்நிலையில நான் கிளம்பிட்டேன். அப்போ மிஸ் பண்ணுன உன்ன விதியே அப்படியே தூக்கி என் கையில குடுத்துச்சுடி.

ஆனா அதை யூஸ் பண்ண தெரியாத முட்டாள்டி நான். ஐ ஆம் ஜஸ்ட் ஆன் இடியட். ஐ ஆம் யூஸ்லெஸ். உன் போட்டோ கையில வந்தப்போ, அதுல உன்ன அடையாளமே தெரியலைன்னாலும், ஏதோ ஒரு கியூரியாசிட்டில உன்ன ஃபேஸ்புக்ல சர்ச் பண்ணி, அது நீ தான்னு கண்டுபிடிச்ச செகண்ட் எனக்கு இருந்த ஹேப்பி நெஸ் அளவுக்கு என் வாழ்க்கைல நான் ஒரு செகண்ட் கூட சந்தோஷமா இருந்ததே இல்ல கண்ணம்மா.

அடுத்த நாள், உன்ன பார்க்க போறோம்ன்னு பைத்தியக்காரன் மாதிரி, பத்து ட்ரெஸ்ஸ மாத்தி, உனக்கு என்னை பிடிக்குமோ பிடிக்காதோன்னு பதட்டத்துல கிளம்பி… கடைசில உன் வீட்ல…

என்ன சொல்லிருந்தாலும் நான் விட்டிருக்க மாட்டேன் கண்ணம்மா. என் கூட இருந்த ப்ரெண்ட்ஸயும், அந்த உறவையும் தப்பா சொல்லும் போது, நான் எப்படி புரிய வைக்கிறது. ஒருவேளை நீயும் அப்படி நினைச்சுட்டா?

என் மனசுல என்னைக்குமே மாறாத ஒரு ஒரு… பரவச நிலைல இருக்குற உன்னோட அந்த உணர்வு எனக்குள்ள என்னைக்குமே மறையக் கூடாது கண்ணம்மா. உன்மேல துளி கூட தப்பான அபிப்ராயம் வந்துட்டா… அது அந்த ஃபீலிங்கை கலைச்சுடுமே. அது கலைஞ்சுட்டா, என் வாழ்க்கைல நான் நினைச்சு பார்க்கன்னு இனிமையான தருணம் எதுவுமே இல்லாம போய்டும்.” என்னும் போதே, கண்ணீரில் நனைந்திருந்தான் ஆடவன்.

பின் எங்கோ வெறித்தவன், “அவ்ளோ லவ்… லவ்வா என்னன்னு கூட பெருசா யோசிக்கல. ஆனா, ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்கோ. முதல்ல நீ எனக்கானவள். அதுக்கு அப்பறம் தான் இந்த கல்யாணம், பிளா பிளா எல்லாம். அப்படி பார்த்தா கூட அவன் கல்யாணம் பண்ண பொண்ணை நான் கல்யாணம் பண்ணிக்கல.

என் உயிரா, என் உணர்வுல, என் ஒவ்வொரு அணுவுலையும் நிறைஞ்சு இருக்குற என் கண்ணம்மாவை தான் அவன் வதைச்சுருக்கான். அது தெரிஞ்சு நான் துடிச்சது எனக்கு தாண்டி தெரியும். உனக்கு புரியாது. இன்னும் கூட துடிக்குதுடி. யாரோ என்னவோ பேசுறாங்கன்னு, அது பாதிக்குதுன்னு நீ அழும் போதெல்லாம் சாகனும் போல இருக்கு. முடியலடி. என்னால முடியல. ஆயிரம் பேரு ஆயிரம் பேசுவாங்க கண்ணம்மா… ஆனா, யாருக்கும் தெரியாது, என்னோட இன்னுயிர் நீ தான்னு. அது உனக்கு தெரிஞ்சா போதும்டி.

இப்போ கூட, என்னை சட்டையை பிடிச்சு ஏண்டா அப்பவே என்னை கல்யாணம் பண்ணிக்கலைன்னு கேட்கணும்ன்னு உனக்கு கோபம் வருதுல. வரும்…

இன்னும் கூட உன் மனசு காயப்படும் தான். இதை நான் சொல்லவே கூடாதுன்னு தான்டி மனசுல புதைச்சு வைச்சுருந்தேன். ஆனா, இனிமே ஒரு செகண்ட் கூட, நான் உன்ன அருவருப்பா பார்க்குறேன்னு மட்டும் சொல்லாதடி.

அவன் ஒரு சாக்கடை கண்ணம்மா. சாக்கடைல விழுந்ததுக்காக, ஒவ்வொரு நொடியும் அருவருக்கணும்ன்னா, அந்த சாக்கடையை பார்த்து தானே தவிர, உன்ன பார்த்து இல்ல கண்ணம்மா. இன்னொரு தடவை நீ அப்படி நினைக்க கூடாதுன்னு தான் இதை சொன்னேன். இதுக்கு மேலயும் உனக்கு என்ன தோணுதோ அதை செய். இதை கேட்டதுக்கு அப்பறம் இன்னும் என் மேல கோபப்பட்டாலும் நான் தாங்கிக்கிறேன். ஆனா, அதை கோபமா காட்டு. அழுகையா காட்டாத கண்ணம்மா. ப்ளீஸ்… ப்ளீஸ்…” என அழுத்தம் திருத்தமாக அனைத்தையும் கூறி இருந்தவன், வாய்விட்டே கதறி இருந்தான்.

ஆண்களுக்கு அழுகை வராது என்று யாரு சொன்னது, இதோ தன் கால் மீதே முகத்தை புதைத்து, தொண்டை வற்ற அழுது தீர்த்து கொண்டிருக்கிறானே.

அவனையே பார்த்திருந்த வான்மதிக்கு ஒன்றும் புரியவில்லை. அவன் பேச ஆரம்பித்ததில் இருந்து சிலையானவள் தான், அச்சிலைக்கு தன் வெளிப்படுத்தாத காதலால் உயிரூட்டிக்கொண்டிருந்தான் அவளின் மணவாளன்.

கண்ணீரைத் தாங்க கன்னத்தில் இடம் பற்றவில்லை என்பது போல, அவளது கன்னம் முழுதும் ஈரத்தடம் தெரிய, இன்னும் கண்ணீர் மழை பொழிய தயாராக இருந்தது.

இவனென்ன சொல்கிறான். என்னை காதலித்து இருக்கிறானா? அதுவும் தன்னை போன்றே… ஜீரணிக்க இயலவில்லை அவளுக்கு. அவ்வுண்மை புரிய புரிய நெஞ்சம் அடைத்தது. சொல்லாமல் காதலிப்பது மட்டுமல்ல, காதலிக்கப்படுவதும் தான் எத்தனை சுகம்? அந்த சுகம் சிறிது சிறிதாக அவளுள் பரவி, அதன் வெளிப்பாடாக அழுகையை கொடுக்க, மெல்ல எழுந்து அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டாள்.

அவள் எழுந்தது தெரிந்தும் அவனிடம் அசைவில்லை. சென்று விட்டாளோ. இங்கிருந்து மட்டுமா? அல்லது மொத்தமாக தன்னிடம் இருந்தே சென்று விட்டாளா? என்ற ஏக்கம் மனதை பிசைய, உள்ளே அவளோ கத்தி அழுது கொண்டிருந்தாள்.

முகமோ சிரிப்பை பிரதிபலிக்க, கண்களோ கண்ணீரை பிரதிபலிக்க, எதை வெளிப்படுத்துவது என்றே புரியாமல் கத்தி தீர்த்தாள் பெண்ணவள்.

இங்கோ ஆரவ் காதை பொத்திக் கொண்டு, “ப்ளீஸ் கண்ணம்மா. வேணாம். அழாத கண்ணம்மா… ப்ளீஸ்…” என்று பிதற்ற, சில நிமிடங்கள் உள்ளிருந்து அந்த அழுகையும் நின்றிருந்தது.

உள்ளே இருந்து எந்த சத்தமும் வராது போனதில், அவன் நிமிர எத்தனிக்கும் போதே, கதவு திறக்கப்பட, ஆரவ் உதட்டை அழுந்த கடித்துக் கொண்டான்.

அவள் வந்தும், எதுவும் பேசாமல் இருக்க, கண்ணீர் மறைக்க அவளை நிமிர்ந்து பார்த்தவன் கண்ணை திருப்பிக்கொண்டான்.

சில நொடிகளில் மீண்டும் அவளை பார்த்தவன், ஏதோ உறுத்த விழிகளை அவளிடம் இருந்து பிரித்துக்கொள்ள, இப்போதோ நெஞ்சம் படபடக்க மறுபடியும் அவள் மீது விழிகளை பதித்தான்.

ஏதோ தோன்றினாலும் இது தான் என்று அவனுக்கு புரியவில்லை.

அவளோ கண்ணில் வழிந்த நீரை துடைத்துக்கொண்டு, இன்னும் அவனைப் பார்த்தபடியே அவன் முன் நிற்க, அவனுக்கு புரியவில்லை என்றதும், கம்மிய குரலில், “எல்லா ஜென்மத்துலயும் ஒரே பொண்ணை எப்படி லவ் பண்ணுவீங்க முகில். எனக்கும் அந்த லவ் வேணும்.” என்றவள் பொறுக்க முடியாமல் வாயை பொத்தி அழுதிட, அவனுக்கோ தலை வலித்தது.

‘இதை நம்ம எப்பவோ சொல்லி இருக்கோம் ஆனா எப்போ?’ என்று சிந்தித்தவனுக்கு ஒன்றும் புரியாத நிலை.

அதன் பிறகே இப்போது அவள் உடுத்தி இருக்கும் புடவையைக் கண்டு அவனுக்குள் மின்னலடித்தது. அதே லாவண்டர் நிறத்தில் தங்க பார்டர் நெய்யப்பட்டிருந்த புடவை. அதே தான். ஆனால் இது எப்படி இவளிடம் என சிந்தித்தவனுக்கு கண்ணை இருட்டியது.

“உங்களுக்கு பிடிச்ச புடவை. இதை கட்டிக்கிட்டு தான் உங்களை முதன் முதல்ல பார்க்க வரணும்னு நினைச்சேன் முகில்.

இதோ… எதிர்ல இருக்குற காட்டேஜ் பால்கனில நின்னு தான் முதல் முதல்ல உங்களை பார்த்தேன். ஹேமா வாமிட் பண்ணும் போது அவங்களை அவ்ளோ கேர் பண்ணி பார்த்துக்கிட்டீங்கள்ல. முதல்ல அவங்களோட ஹஸ்பண்ட்ன்னு தான் நினைச்சேன்.” என கூறும் போதே மெல்லிய குறுநகை அவள் இதழில்.

“அப்பறம் லேக்ல உங்களை பார்க்கும் போது, உங்க ப்ரெண்ட்ஸ் எல்லாரும் பேசிட்டு இருக்கும் போது தான், நீங்க ப்ரெண்ட்ஸ்ன்னு தெரிஞ்சுது. என்னவோ, உங்களை பார்க்கணும் போல இருந்துச்சு. பார்த்தேன். ஆனா வந்து பேச தைரியம் இல்ல.

லயாகிட்ட சொன்னீங்கள்ல, எல்லா ஜென்மத்துலயும் ஒரே பொண்ணு தான்னு. அது நானா மட்டுமே இருக்கனும்ன்னு எனக்குள்ள பேராசை முகில்.” என தலைசாய்த்து கூறியவளுக்கு கண்ணீர் மட்டும் நின்றபாடில்லை.

“அதுக்கு அப்பறம், இந்த ட்ரெஸ் கடைல இந்த சேரியை நீங்க ரசிச்சு பார்த்ததை பார்த்ததும், உடனே வாங்கிட்டேன். உங்களுக்காக. ஏன் வாங்குனேன்னுலாம் எனக்கு தெரியல. ஆனா வாங்கிட்டேன்.” என மெல்ல சிரித்தவள், மீண்டும் அழும் தொனியில்,

“கடைசியா, உங்க கிட்ட பேச வரலாம்னு நினைக்கும் போது தன்வி அண்ணனுக்கு ஆக்சிடென்ட் ஆகிடுச்சு. நீங்களும் போயிட்டீங்க.

ஆனா, நீங்க சொன்ன விதியே உங்களை அப்படியே என் கையில தரும் போது என்னால தக்க வைச்சுக்க முடியல முகில். என் கடந்து போற மேகமா மட்டும் இருப்பீங்கன்னு நான் அப்போ நினைக்கல.

உங்க போட்டோ பார்த்ததும், ஐ வாஸ் ஷாக்ட். நான்… நான்… நான் தான் அவ்ளோ லக்கின்னு தோணுச்சு முகில். அடுத்த நாள் உங்களை பார்க்க, இதே புடவையை கட்டிக்கிட்டு உங்களுக்கு ஷாக் குடுக்கலாம்ன்னு நினைச்சேன். ஆனா, அப்பா…” என்று முடித்தவள், சோபாவில் தொம்மென அமர்ந்து விட்டாள்.

பின் சட்டென நிமிர்ந்து, “ஆனா, சத்தியமா, என் அப்பா சொன்ன ஒன்னை கூட நான் அக்செப்ட் பண்ணிக்கல முகில். வீட்டை எதிர்த்து பேசுற தைரியம் அப்போ எனக்கு இல்ல. வெட்கம், மானம், குழந்தைன்னு எல்லாத்தையும் இழந்ததுக்கு அப்பறம் தான், வாழ்க்கைன்னு ஒன்னு இல்லவே இல்லைன்னு தெரிஞ்சுது. அந்த வாழ்க்கைக்குள்ள முகில்ன்னு ஒருத்தரோட நினைவும் சுத்தமா இல்லைன்னு என்னை நானே நம்ப வைச்சுக்கிட்டேன்.

அதுக்கு அப்பறம் மறுபடியும் உங்களை பார்த்து, உங்க பேபியையும் பார்த்து நான் அவ்ளோ ஹேப்பி ஆனேன். ஆனா, அதுவும் கொஞ்ச நேரம் தான். உங்களுக்கும் டைவர்ஸ் ஆகிடுச்சுன்னு தெரிஞ்சதும், ‘என்னை தான் சோதிக்கிற. எனக்கு பிடிச்சவரையும் ஏன் சோதிக்கிற’ன்னு கடவுளோட சண்டை தான் போட்டேன்.

அப்பவே உங்களை கல்யாணம் பண்ணிருந்தா, மிருணான்னு ஒருத்தி உங்க வாழ்க்கைல வந்து உங்களை காயப்படுத்தி இருந்துருக்க மாட்டான்னு நினைச்சு துடிச்சு போயிருக்கேன் முகில்.” என பொங்கி சத்தம் போட்டு கேவியவளை, மறுநொடி தன் மார்புக் கூட்டுக்குள் பாதுகாப்பாக மூடி இருந்தான் கண்ணம்மாவின் முகிலன்.

தேன் தூவும்…!
மேகா!

Next ud on Sunday ❤️🥰 என்ஜாய் ரீடிங்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
49
+1
275
+1
9
+1
4

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.