தெம்மாங்கு 34
மலைக்குச்சி கோவிலில் இருக்கும் ஐயரை அழைத்து வந்திருந்தான். சின்னதாகத் தீட்டுக் கழிக்கும் சடங்குகள் நடக்கத் தொடங்கியது. சந்தானம் காமாட்சி தம்பதிகளுடன், இந்திராவும் முத்துமாரியும் அமர்ந்திருந்தார்கள். பேரன் வந்த செய்தியைக் கேட்டும், ஒன்றும் செய்ய முடியாமல் மருத்துவமனையே கதி என்று இருக்கிறார் பவானி.
மயக்கம் தெளிந்து தன் உடலைப் பார்த்த கருப்பன், கத்திக் கூப்பாடு போட்டு மருத்துவமனையை இரண்டாக்கி விட்டான். அவனை அங்கிருக்கும் எவராலும் அடக்க முடியவில்லை. இதற்குத் தன்னுடைய உயிரே போய் இருக்கலாம் என்று அழுதவனைக் கண்டு, பாவம் மட்டுமே பார்க்க முடிந்தது பவானியால். இப்படி ஒரு நிலைக்கு அவனே காரணம் என்பதால், பெற்ற மனம் இதைச் செய்தவனை எந்தக் குற்றமும் குறையும் சொல்லவில்லை.
அதே மருத்துவமனையில், இதய அறுவை சிகிச்சை செய்து பயத்தோடு படுத்திருந்தார் பொன்ராசு. உயிர் பிரிந்து விடும் என்ற பயத்தில், மருத்துவமனையில் படுத்திருக்கும் நொடி போல், வேறு எந்த நொடியும் ஒரு மனிதனை ஆட்டிப்படைத்து விடாது. ஒற்றை மகனின் செய்தியைக் கேட்டவர் நெஞ்சைப் பிடித்து விட, தன் உயிர் சென்று விடுமோ என்ற உயிர் பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்கிறார்.
அவருக்குத் தேவையான மனநிலை சிகிச்சைகள் கொடுக்கப்பட்டது. மகனைப் பார்க்க விருப்பம் தெரிவிக்க, அதை மருத்துவர்கள் மறுத்து விட்டார்கள். ஒரே மருத்துவமனையில், மகனையும் கணவனையும் வைத்து அல்லோலப் பட்டுக் கொண்டிருக்கிறார் பவானி.
சின்னதாகக் குச்சி வைத்துத் தீ மூட்டிச் செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்து கொண்டிருந்த ஐயர், “ரெண்டு பேரும் குழந்தையை வச்சுக்கிட்டு உட்காருங்க.” என்றார்.
இருவரும் என்ன மனநிலையில் இருக்கிறார்களோ தெரியவில்லை. அதிசயமாக, எந்த மறுப்பும் சொல்லிக் கொள்ளாமல் பிள்ளையோடு அமர்ந்தார்கள். குழந்தையை வாங்கிக் கொண்டு முதலில் அவளைப் பொறுமையாக அமர வைத்தவன், அவள் மடியில் குட்டி அன்புவை வைத்துவிட்டுப் பக்கத்தில் அமர, பார்த்த மூத்தவர்களுக்கு மனம் நிறைந்து போனது.
சின்னப் புகையைத் தன் அன்புவின் முகத்தில் பட்டுவிடும் என்பதற்காகக் கைக்கொண்டு மறைத்தவனை முறைத்தவள், “உன்கிட்ட இருந்து இவனை எப்படிக் காப்பாத்தப் போறன்னு தெரியல.” குறைப்பட்டுக் கொண்டாள்.
“அன்புக்கு மூச்சு விடக் கஷ்டமா இருக்கும்.”
“சொன்னானாக்கும்.”
“இப்பத்தான் பேச மாட்டான்ல.”
“எல்லாம் என் தலையெழுத்து.”
“எப்பப் பாரு, என்னைத் திட்டிக்கிட்டே இரும்மா.”
“திட்ட வைக்கிறேன்னு விளக்கமா சொல்லு.”
“குமரவேலன், ஒன்னும் தெரியாத பச்சப்பிள்ளை…”
“அப்ப இது யாரு?” எனத் தன் மடியில் இருக்கும் குழந்தையைக் காட்டிக் கேட்க,
“பச்சப் பிள்ளையோட பச்சப் பிள்ளை!” என்றவன் முகத்தில் அநியாயத்திற்கு அசடு வழிந்தது.
குட்டி அன்பு பிறந்த தேதி, நேரத்தைக் கேட்ட ஐயர், அவன் ராசி நட்சத்திரத்தைப் பார்த்தறிந்து, “ச, டா, நா, ல, இதுல தொடங்கற பேர் வைக்கலாம். இதுல பேர் இருந்தா சொல்லுங்க, இல்லனா தீட்டு மட்டும் கழிச்சிட்டுப் பதிமூன்றாவது நாள் சக்கரைத் தண்ணி வச்சுப் பேர் வச்சுக்கோங்க.” என்றார்.
“ஏற்கெனவே பேர் யோசிச்சு வச்சிட்டோம். நீங்க அதுக்கும் சேர்த்தே பண்ணிடுங்க.”
செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து முடித்தவர், சக்கரைக் கரைசல் கிண்ணத்தில் குமரவேலனின் தங்க மோதிரத்தை வாங்கிப் போட்டார்.
“மோதிரத்தால இந்தத் தண்ணியத் தொட்டு, குழந்தை நாக்குல வச்சு மூனு தடவை பேர் சொல்லுங்க.”
தேனிசை தேவி பக்கம் திரும்பியவன், உள்ளங்கையில் சக்கரைக் கரைசல் கிண்ணத்தை வைத்து மோதிரத்தை எடுத்தான். குட்டி அன்புவைப் பார்த்துப் புன்னகைத்தவன், கையில் எடுத்த மோதிரத்தை அவன் தாயிடம் கொடுத்து, “நீயே முதல்ல பேர் சொல்லுமா…” என்றான்.
இதை எதிர்பார்க்காதவள், “நீயே சொல்லு.” என்றாள்.
“இல்லம்மா, இவ்ளோ போராட்டத்துக்கு நடுவுல இந்தக் குழந்தையைப் பெற்றெடுத்த நீதான் முதல்ல சொல்லணும். நீ இல்லனா என் அன்பு இல்ல.”
அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளைச் சைகை செய்து, திசை திருப்பியவன் மோதிரத்தைக் கையில் கொடுத்தான். பெற்றெடுத்த பிள்ளையை ஆசையாக முத்தமிட்டு, மோதிரத்தை நுனி நாக்கில் வைக்கப் போக, “ரொம்ப வைக்காதம்மா…” என்று முறைப்பை வாங்கிக் கொண்டான்.
அந்த அக்னிப் பார்வையில், தன் திருவாயை மூடிக்கொண்டவன் கை மட்டும் சும்மா இல்லை. அவள் சக்கரைத் தண்ணியை வைத்த அடுத்த நொடி துடைத்து விட்டது. ‘திருத்த முடியாது இவனை…’ என மனதில் திட்டிக் கொண்டவள், “அன்புக்கரசன்… அன்புக்கரசன்… அன்புக்கரசன்…” என நாமம் சூட்டினாள்.
அத்தனை மகிழ்வு பெயர் சூட்டியவளுக்கும், பக்கத்தில் இருந்தவனுக்கும். எதையோ சாதித்தது போல், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு புன்னகைத்தனர். இப்பொழுது அவன் முறை என்பதால் மோதிரத்தைக் கையில் கொடுக்க, மீண்டும் சக்கரைக் கரைசலில் நனைத்தெடுத்து, “அன்பே…” என்றான்.
அவன் கண்ணில் உருவான நீர், குழந்தையின் உதட்டில் பட்டது. சக்கரைக் கரைசலை விடத் தித்திப்பான நீர் பட்டதும், சிணுங்கும் குட்டி அன்புவைக் கண்டு பூத்துச் சிரித்தவன், “அன்புக்கரசன்… அன்புக்கரசன்… அன்புக்கரசன்…” என்றான்.
மூத்தவர்கள் அனைவரும் பெயர் சூட்டினார்கள். பாட்டி முறைக்குப் பேரனை அலங்கரிக்கத் தங்கமும், வெள்ளியும் எடுத்து வந்திருந்தார் இந்திரா. அதை அணிவிக்க வருவதற்கு முன்னரே தடுத்து விட்டவன், “என் அன்புக்கு எல்லாமே நான் தான் செய்வேன். அந்தக் கௌரவத்துல வந்த எந்தச் சொத்து சுகமும், என் அன்புக்கு வேண்டாம். உங்க பாசம் மட்டும் என் பிள்ளைக்குப் போதும்.” என்று விட்டு அவன் வாங்கி வைத்திருந்த காப்பை அன்னை கையில் கொடுத்து அணிவித்தான்.
மகன் எண்ணம் புரிந்தாலும், பேரனுக்கு எதையும் போட்டு அழகு பார்க்க முடியாததால் இந்திராவின் முகம் சிறிது வாடியது. அதைக் கவனித்தவள் வாங்கிக் கொண்டாள். குமரவேலனைச் சமாதானம் செய்து பிறகு போட்டு விடுவதாக.
வந்த அனைவரும் குட்டி அன்புவைப் பார்த்துவிட்டுச் சென்ற பின், மூவர் மட்டுமே அந்த வீட்டில். குழந்தையை மடியில் வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தவனைப் பார்த்துக் கொண்டிருந்தவள், “ஏது காசு?” கேட்டாள்.
“என்னம்மா?”
“டெலிவரிக்கே நிறையச் செலவாகி இருக்கும். உன்கிட்டக் காசு இல்லன்னு தெரியும். இந்தக் காப்பு, கொலுசு எல்லாம் வாங்க ஏது காசு?”
“அது எதுக்கும்மா…” என நழுவப் பார்த்தவனை விடாது நச்சரித்தாள். சொன்னால் நிச்சயம் திட்டுவாள் என்பதால் மறைக்கப் பார்த்தான். தெரிந்தே ஆக வேண்டும் என்று ஒற்றைக் காலில் நிற்பவளைச் சமாளிக்க முடியாது,
“நிலத்தை அடமானம் வச்சுட்டேன்.” என்றான்.
“லூசா நீ? நான்தான் கவர்மெண்ட்ல பார்த்துக்கலாம்னு சொன்னேன்ல. நிலத்த மீட்குறதுக்குக் காசு கொடுத்தவருக்கே, இன்னும் காசத் திருப்பிக் கொடுக்கல. அதுக்குள்ள அதைத் திரும்ப வச்சிருக்க. இப்போ ஒன்னுக்கு ரெண்டு கடன். எப்படி இதெல்லாம் திருப்பிக் கொடுப்ப. நான் சொன்ன மாதிரி கேட்டிருந்தா, இந்தக் கடன் வந்திருக்காதுல.”
“விடும்மா. அதான் குழந்தை நல்லபடியா பிறந்துடுச்சே. கொஞ்ச நாள்ல ரெண்டு கடனையும் அடைச்சிடலாம்.”
“அப்போ இந்த வீடு கட்டக் கொடுத்த காசு?”
“இது ரெண்டையும் முடிச்சுட்டு அடுத்து அதை அடைச்சிடுவேன்.”
“இதுதான் கடைசி. இனிமே இந்த மாதிரிக் கடன் வாங்கி எனக்கும், என் பிள்ளைக்கும் எதுவும் பண்ணாத. நம்மளோட வாழ்க்கை எதுன்னு நல்லாத் தெரியும். அதுக்கேத்த மாதிரி செலவு பண்ணிக்கலாம். கொஞ்ச நாள் போனதும், ஒரு மிஷினை வாங்கிப் போட்டு வீட்லயே வேலை பார்க்க ஆரம்பிச்சிடுறேன். வீட்டுச் செலவை நான் பார்த்துக்கிறேன். நீ இந்த எல்லாக் கடனையும் அடைக்கிற வழியைப் பாரு.”
“சரிம்மா” என்றவன் குரலைக் குறைத்து, “நான் கருப்பனைப் பார்க்கப் போகலாம்னு இருக்கேன்.” என்றான்.
“எதுக்கு?” என அதிர்ந்திட, “அவன நான் பார்க்கணும்.” பதில் கொடுத்தான்.
“அதெல்லாம் வேணாம், அவங்களுக்குச் சின்னதா உன் மேல சந்தேகம் வந்தால் கூட இப்ப இருக்க வாழ்க்கை நமக்கு இருக்காது. நடந்ததும், நீ பண்ணதும் போதும். எல்லாத்தையும் விட்டுட்டுப் பொழப்பை மட்டும் பாரு.”
தன்னிடம் பேசிக் கொண்டிருந்தவளைப் பார்க்கப் புதிதாக இருந்தது குமரவேலனுக்கு. இறந்தவனின் மரணத்திற்கு நீதி கேட்டுக் காவல் நிலையத்தில் நின்றவள், உடனிருந்தும் ஒன்றும் செய்ய இயலாதவன் என்று கடுமையாகச் சாடியவள் இன்று எதுவும் வேண்டாம் என்கிறாள்.
இது தன் மீதான அக்கறையா? அல்லது பிறந்த குழந்தைக்கு நான் வேண்டுமென்ற எண்ணமா? என அறியாது அவளையே பார்த்திருக்க, “அந்த மோசமானவங்க பார்வை, என் குழந்தை மேல விழக் கூடாது.” என அவன் எண்ணத்திற்கான பதில் கொடுத்தாள்.
தன் மீதான அக்கறை என்றும் வராது என உள்ளுக்குள் நினைத்துக் கொண்டவன், “அப்படி எதுவும் ஆகாது…” என்று விட்டு விடை பெற, செல்பவனின் மீதான அக்கறை தான், இந்தப் பயத்திற்குக் காரணம் என்பதை அறியவில்லை தேனிசை தேவி.
***
அறை வாசலில் நின்றவன், பெருமூச்சு விட்டுத் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு உள்ளே நுழைய, கை கால்கள் இன்றித் தன் உடல் அளவைச் சுருக்கிக் கொண்டு பரிதாபமாகப் படுத்திருந்தான் கருப்பன்.
பேச்சியப்பன் நண்பரோடு இருக்க, மகனோடு துணைக்கு இருந்தார் பவானி. வந்தவனைக் கண்டு வாய் விட்டுக் கதறியவர் சத்தத்தில் எழுந்த கருப்பன், கத்த முடியாமல் பரிதவித்து உடலைத் தூக்கிப் போட்டான்.
பிளவுபட்ட நாக்கு, கத்துவதற்கு வழி கொடுக்கவில்லை. அவன் துடிப்பதைக் கருவிழிகளுக்குள் சேமித்துக் கொண்டவன், இமையில் கூட அந்த மகிழ்வைக் காட்டாது திடமாக முகத்தை வைத்தான். பவானிக்கு ஆறுதல் கூறியவன் மெல்லக் கருப்பனை நோக்கி நகர, அன்று அருவாளால் வெட்டி வீசிய சம்பவம் கண் முன்னால் தோன்றியது இருவருக்கும்.
வெட்டி வீழ்த்தியவன் கர்வமாகவும், வீழ்ந்தவன் மரண பயத்திலும் அந்த நிமிடங்களைச் சந்தித்தனர். தன் பக்கத்தில் நிற்பவனைப் பார்க்க அஞ்சி நடுங்கியவன், மரண பயத்தை மீண்டும் ஒருமுறை சந்தித்தான். அவன் முகத்தில் வந்து செல்லும் மரண பீதியைக் கண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவன், “எப்படி இருக்க கருப்பா… உனக்கு இந்த மாதிரி ஆனதை ஜீரணிக்கவே முடியல என்னால.” என்றதும் தன்னால் முடிந்தவரை எதிர்ப்பு தெரிவித்துப் போராடினான்.
அத்தனைப் போராட்டமும், இனி அவன் வாழும் காலம் வரை வீண் என்பதை அறியாது குமரவேலன் முன்பு தோற்றுப்போய், பரிதாபமாக மூச்சு வாங்கப் படுத்தான். பக்கத்தில் நின்றிருந்த பவானியை, “அந்தத் தண்ணிய எடுத்துக் குடுங்க அத்தை.” என அங்கிருந்து நகர்த்தியவன் கருப்பனின் தலைகோதி விட்டான்.
விழிகளைக் கனமாக்கி, அதற்குள் ரத்த நரம்புகளை ஓடவிட்டு மிரள வைத்தவன், அய்யனார் சிலை போல் விரைப்பாக முகத்தை வைத்து,
“அன்பே…” என்றிட, சர்வமும் அடங்கிப் போனது கருப்பனுக்கு.
***
வந்து நின்ற மகனைக் கண்டு ஆடிப் போனார் பேச்சியப்பன். அவனை இங்கே எதிர்பார்க்காதவர் முகத்தில் சீற்றம். இப்படி ஒரு காரியத்தைச் செய்யத் துணிந்தவன் மீது ஏற்கனவே கடும் கோபத்தில் இருப்பவர், இங்கு வந்த துணிவில் இன்னும் கோபம் உற்றார்.
“எதுக்குடா இங்க வந்த?”
“மாமாவைப் பார்க்க வந்தேன்”
“குமரா…” எனப் பல்லைக் கடிக்கும் தந்தையைக் கண்டு ஏளனமாக நகைத்தவன், “பரவால்ல, நீ கொஞ்சம் நல்ல அப்பா தான். இதுவரைக்கும், வாழ்க்கையில உன் மேல எந்த இடத்திலும் நம்பிக்கை வச்சதில்லை. முதல் தடவை வச்சேன், அதைக் காப்பாத்திட்ட.” என்றான்.
“சத்தமா பேசாதடா.”
“பேச்சியப்பனுக்குப் பயம் வருதா?”
“நீ பண்ண காரியத்துக்கு ஈரக் குல நடுங்கிப் போச்சு.”
“சரி விடுங்க, அதான் எல்லாத்தையும் காளிய விட்டுச் சரி பண்ணிட்டீங்களே.”
“இது மட்டும் இவனுங்க ரெண்டு பேத்துக்குத் தெரிஞ்சுது…”
“பெருசா என்ன ஆகும்? வாயத் தொறந்து ஒருத்தனால பேச முடியாது. இன்னொருத்தன் படுத்த படுக்கையா, மரண பயத்துல இருக்கான். திருப்பி அடிக்க முடியாத அளவுக்கு தான் என் செயல் இருந்திருக்கு. இனி அடிக்கணும்னு நினைக்க மாட்டாங்க. அப்படியே நினைச்சாலும் நீங்க விட்டிடுவீங்களா என்ன…”
“நான் இருக்க தைரியத்துல தான் இப்படிப் பண்ணியா?”
“ஹா ஹா… அந்த அளவுக்குக் குமரன் கோழை இல்லை. உங்களை இதுல சிக்க வச்சதே நான் தான். இது ஒரு வகைல மறைமுகத் தண்டனை உங்களுக்கு.”
“இப்பக் கூட ஒன்னும் கெட்டுப் போகல. நடந்த எல்லாத்தையும் மறைச்சிட்டேன். அந்தப் பொண்ண விட்டுட்டு வீடு வந்து சேரு.”
மீண்டும் ஏளனமாகச் சிரித்து, “உங்களுக்குப் பேரன் பிறந்திருக்கான்.” என்று விட்டு உள்ளே சென்றான்.
குமரனைப் பார்த்ததும், பேச்சியப்பன் உறைந்து நின்றதை விடப் பொன்ராசு உறைந்து நின்றது தான் அதிகம். அதைக் கவனிக்காதது போல் அவர் அண்மையில் நின்றவன், “எப்படி இருக்கீங்க மாமா?” கேட்டிட, கண்கள் விரிந்தது அவருக்கு.
“என்கிட்டப் பேச மாட்டீங்கன்னு தெரியும். இருந்தாலும், உங்களை இப்படிப் பார்க்க மனசு வரல. உங்க பையனுக்கும், இப்படி ஒரு நிலைமையைக் கடவுள் கொடுத்திருக்கக் கூடாது. ரெண்டு பேரும் உடம்பைப் பார்த்துக்கோங்க.”
“குமரா…”
அவர் அழைத்ததும் திரும்பிட, “நீ வருவன்னு எதிர்பார்க்கல.” என்றார்.
“நானும் எதிர்பார்க்கல மாமா. முதல்ல வரக்கூடாதுன்னு தான் நினைச்சேன் அப்புறம் என்னால முடியல. கௌரவத்தை விடப் பாசம் பெருசு மாமா. மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்க, உசுர விடப் பெருசா நினைச்ச கௌரவம், உங்களையும் உங்க மகனையும் காப்பாத்துச்சா? இனியாவது எல்லாத்தையும் விட்டுட்டு மனுஷனா வாழப் பாருங்க.”
மனப்பாடம் செய்து வைத்ததை அப்படியே பொன்ராசுவிடம் ஒப்புவித்தவன், தன்னையே வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருக்கும் தந்தையைக் கண்டு கண் அடித்தான். பெற்ற மகனைப் பார்க்க பயமாகத்தான் இருந்தது அவருக்கு. ‘நயவஞ்சகம்’ என்னவென்ற கேள்விக்கு விடையாய் நின்றான் அவர் முன்பு.
கதவு வரை நகர்ந்தவன், “எனக்கு மகன் பிறந்திருக்கான் மாமா. எல்லாத்தையும் மறந்துட்டு, என் மகனைப் பார்க்க வருவீங்கன்னு நம்புறேன்.” என்று விட்டு வெளியே வந்தவனுக்குப் பரம நிம்மதியாக இருந்தது.
குமரவேலனுக்கு நிச்சயம் தெரியும். இந்த நிலையிலும் பொன்ராசு திருந்த மாட்டார் என்று. அப்படியே திருந்தினாலும், தன் மகனை வந்து பார்க்கும் அளவிற்கு நல்லவராக மாட்டார் என்றும் அறிவான். உடல் முழுவதும், ஊசி குத்தியது போன்ற வலியைக் கொடுத்துவிட்டு வந்தவன் நேராகச் சென்று நின்ற இடம் நண்பன் சமாதி.
***
குமரவேலன் வரும் வரை, குழந்தையை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தவளுக்கு ஏகப்பட்ட சிந்தனைகள். அங்கு என்ன நடந்து கொண்டிருக்கும் என்ற பயத்தில், பிள்ளைக்குப் பசியாற்றக் கூட மறந்து போனாள். நண்பனிடம் உரையாடிவிட்டு வெகு தாமதமாக வீட்டிற்கு வந்தான்.
“என்ன ஆச்சு, இவ்ளோ நேரம் என்ன பண்ணிட்டு இருந்த… அங்க ஏதாச்சும் பிரச்சனையா?” அடுக்கடுக்காகக் கேட்டவள் பதில் கிடைக்காததால்,
“உன்னத்தான கேட்கிறேன். வாயத் தொறந்து பதில் சொல்லு.” எரிந்து விழுந்தாள்.
“ஒன்னும் ஆகலம்மா. பேச வேண்டியதைப் பேசிட்டு வந்துட்டேன்.”
“உண்மையாவா?”
“ம்ம்…”
“இனிமே அவங்களைப் பார்க்குற வேலையை வச்சுக்காத. நீ வர வரைக்கும், நான் நானா இல்ல…” என்றவளை முதன் முறையாகத் தன்னை மறந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
***
கடகடவென்று நாள்கள் கடந்தது. குட்டி அன்புக்கரசன், தன் பெற்றோர்களோடு நன்கு பழக ஆரம்பித்து விட்டான். அவர்களும், இவனை வைத்து எப்படிச் சமாளிப்பது என்று ஓரளவிற்குக் கற்றுக் கொண்டார்கள். இன்று, குட்டி அன்புக்குத் தடுப்பூசி போடும் நாள். ஒன்றரை மாதத் தடுப்பூசி போட்டு வந்த பின், அவன் செய்த கொடுமைகளை விடக் குமரவேலன் செய்த கொடுமைகள் தான் ஏராளம்.
ஊசி குத்திய இடம் வீங்கியதால், வேலைக்குக் கூடச் செல்லாமல் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு கவலையில் மூழ்கிப் போனான். அவன் தொந்தரவு தாங்காது மறுநாள் அடித்துப் பிடித்து வெளியே துரத்தி விட்டாள். மதியம் வரை வேலை செய்தவன் அதற்கு மேல் முடியாது பிள்ளையின் அண்மையில் அமர்ந்து கொள்ள, “அடுத்த தடவை தடுப்பூசி போட்டு, ஒரு வாரத்துக்கு வீட்டுப் பக்கம் தலை வைக்காத…” என்றவள் அதை மறந்து விட்டு இன்று அவனைத்தான் அழைத்திருக்கிறாள்.
“அன்புக்குத் தேவையான எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டியாம்மா.”
“எல்லாம் ரெடியா இருக்கு. கார் வந்துடுச்சா?”
“அந்த அண்ணா வர லேட் ஆகும்னு சொன்னாரு. வேற யாராது கிடைக்குமான்னு கேட்டு இருக்கேன்.”
“பைக்லயே போலாமா…”
“பைக்லயா?”
“ம்ம்… அன்பும் பிடிச்சிட்டு உட்கார அளவுக்கு வந்துட்டான். கார் செலவை மிச்சம் பண்ணலாம்.”
“காசுக்காக யோசிக்காதம்மா. எப்படி அவ்ளோ தூரம் பிடிச்சுக்கிட்டு வருவ…”
“அதெல்லாம் வரலாம். பொறுமையா மட்டும் ஓட்டு, நான் பார்த்துக்கிறேன்.”
“உன்னால ரொம்ப நேரம் உட்கார முடியாதும்மா.”
“சும்மா முடியாதுன்னு சொல்லிட்டு இருக்காத. நம்ம பைக்ல தான் போறோம்.”
அரைகுறை மனதோடு இருசக்கர வாகனத்தை இயக்கியவன் பின்னால் அமர்ந்தாள் தேனிசை தேவி. மெல்ல ஊர்ந்து கொண்டு நகர்ந்தவனிடம், “வரும்போது துணிக் கடைக்குப் போலாமா?” கேட்டாள்.
“எதுக்கும்மா?”
“எனக்கு ரெண்டு நைட்டி எடுக்கணும், பால் கொடுக்கக் கஷ்டமா இருக்கு.”
“சரிம்மா.”
“அப்படியே அன்புவோட நினைவு நாள் வருது. அவனுக்கும் ஒரு புதுத் துணி எடுத்துட்டு வரலாம்.”
ஊர்ந்து கொண்டிருந்த வாகனம் நின்றது. திரும்பி தேனிசையைப் பார்த்தவன், அதற்குள் ஓராண்டு நிறைவடைந்ததை நம்ப மறுத்தான். நண்பன் இல்லாமல் வாழ்ந்த இந்த ஓராண்டு, பெரிய சாதனை தான் இவனுக்கு.
“போ…” எனத் தோள் தட்ட, எந்தப் பேச்சும் இன்றி மருத்துவமனையை நோக்கிச் சென்றான்.
குட்டி அன்பு, ஊசி குத்தியதில் அழுது கண்ணீர் வடிக்க, மகனை நெஞ்சோடு சாய்த்துக் கொண்டு கண்ணீர் மறையும் வரை சமாதானம் செய்தான். பிள்ளைக்குப் பசியாற்றியவள், மீண்டும் பயணப்பட இருசக்கர வாகனத்தில் ஏறி அமர்ந்தாள். அவள் சொன்னது போல் கடைவீதிக்குச் சென்றவன் போன முறை ஆடை அடுத்த அதே கடையில் வண்டியை நிறுத்தினான்.
மாற்றங்கள் எவ்வளவு வேகமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதற்குச் சாட்சியாக நின்றாள் தேனிசை தேவி. சென்ற முறை ஆடை எடுக்க வந்ததற்கும், இந்த முறை ஆடை எடுக்க வந்திருப்பதற்கும், உள்ள வித்தியாசத்தை அவள் மனம் உணர்ந்தது. அதைப் பெரிது படுத்தாமல் உள்ளே சென்றவள், தனக்குத் தேவையான ஆடைகளை எடுத்துக் கொண்டாள்.
அன்புக்கரசனுக்கு ஆடை தேர்ந்தெடுப்பதற்குள் ஒரு வழி ஆகிவிட்டவன், குட்டி அன்புவின் முகத்தில் அனைத்தையும் மறந்தான். முன்பு இவர்களைச் சமாதானம் செய்ய எதுவும் இல்லாததால், அதிலேயே சுழன்று கொண்டிருக்க இப்பொழுது ‘குட்டி அன்பு’ என்னும் ஆயுதம் அனைத்திலிருந்தும் வெளிவர வைக்கிறது.
அந்தக் கடையை விட்டு வெளிவந்தவளை நகைக் கடைக்கு அழைத்துச் சென்றான். நிலத்தை அடமானம் வைத்ததில் மீதமிருந்த பணத்தை அப்படியே அவளிடம் கொடுத்து வைத்திருந்தான். இன்று அந்தப் பணத்தில், பிள்ளைக்கு நகை எடுக்க வந்திருப்பதாய் நினைத்தவள் எண்ணத்தைத் தவிடு பொடியாக்கி அவளுக்கு எடுத்தான். வேண்டாம் என்றும் கேட்காமல், தங்கச் சங்கிலி எடுத்திட, வெகு நாள்கள் கழித்துத் தன் கழுத்தில் ஊஞ்சலாடும் தங்கத்தை ரசித்தாள்.
***
இரவெல்லாம் இருவரும் தூங்கவில்லை. குட்டி அன்புக்கு இரட்டைச் சந்தோஷம். பெற்றோர்கள் இருவரும் உறங்காமல் அவனைச் சுற்றி அமர்ந்திருந்ததால், இரவெல்லாம் ஆட்டம் போட்டவன் அவர்களின் வருத்தத்தை அறியவில்லை. இன்றைய இரவை எதிர்கொள்ளப் பயந்த குமரவேலன் சீக்கிரமாக வீடு வந்துவிட்டான்.
அவனைக் கவனிக்கும் நிலையில் இல்லை தேனிசை. ஆக்கி வைத்த சோறு அப்படியே வீணாய் போனது. மனம் கேட்காதவன், சோளக்காட்டிற்குச் சென்றான். கடைசியாகத் தன் ஆருயிர் அன்புக்கரசன் தன்னோடு பேசிய அனைத்தையும் நினைத்தவன், அந்த நிமிடத்தை நினைத்து அழுத்தமாகப் புதைந்து போனான்.
பலமணி நேரங்கள் கழித்து, அவன் வீட்டில் இல்லை என்பதை அறிந்தவள் அழைப்பு விடுத்து வருமாறு கூற, “நான் வரல.” என்றான்.
“உன் பையன் அழுதுட்டு இருக்கான்…” என்றதும் கால்கள் வீட்டை நோக்கி நகர்ந்தது.
படுத்துக் கொண்டிருந்தவன் விழிகளில், அவனையும் அறியாமல் கண்ணீர் பிறப்பெடுக்க, காதலித்தவனைப் பிரிந்த நாளை எதிர் கொள்ளத் தடுமாறிப் போனாள்.
முதலில் எழுந்த தேனிசை தேவி குளித்து முடித்துவிட்டு அவனை எழுப்ப, மனமே இல்லாமல் குளித்தான். குட்டி அன்புவைக் குளிக்க வைத்தவர்கள், ஒன்றாகக் கிளம்பினார்கள் அன்புக்கரசனைப் பார்க்க. மாலையிட்டு அவனுக்குப் பிடித்த பதார்த்தங்களை வைத்து உயிருக்கு உயிரான நண்பன் சமாதியில் தலை சாய்த்திட, மற்ற அனைத்தையும் செய்து கொண்டிருந்தாள் தேனிசை. விழிகள் சிவந்தது அழுதழுது. தன்னைத் தேற்றிக் கொண்டவள் மகனை மடியில் ஏந்தி கொண்டு, தெய்வமாக இருக்கும் அவனை மனதார வணங்கினாள்.
அவனின் வாரிசு கையில், பூவைக் கொடுத்தவள் தந்தை மீது போட உதவ, அடுத்த வருடம் நிற்கும் அளவிற்கு வளர்ந்த குட்டி அன்புக்கரசன், அன்னை பேச்சைக் கேட்டு கையில் இருந்த மலரைத் தூக்கி அடித்தான். அவனோடு சேர்ந்து நின்று பெற்றோர்கள் வணங்கினார்கள். அடுத்த வருடமும் பிறந்து, மலரை வீசி அடித்தான் அன்புக்கரசன்.
நான்காம் ஆண்டு பெற்றோர்களின் கைப்பிடித்துக் கொண்டு நடந்து வந்த குட்டி அன்புக்கரசன், தானே கையெடுத்துக் கும்பிட்டுத் தாய் சொல்லிக் கொடுத்தது போல் தந்தைக்கு மலர்த்தூவ, இதோ வந்துவிட்டது ஐந்தாம் ஆண்டு.
குமரவேலன் இருசக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டிருக்கப் பின்னால் அமர்ந்திருந்தாள் தேனிசை. குட்டிச் சங்குக் கண்ணிற்கு ஏற்ற கருப்புக் கண்ணாடி அணிந்து கொண்டு, குட்டி முடிகள் காற்றில் ஆடுவதைக் கண்டுகொள்ளாது, தானே வாகனம் ஓட்டுவது போல் தந்தையின் கை மீது கை வைத்து, “டுர்ர்… டுர்ர்…” ஓட்டிக் கொண்டு வந்தான் குமரனின் மகன்.
தெம்மாங்கு ஒலிக்கும்…
Taknu poidch yrs alaga katirukinha