தெம்மாங்கு 33
சந்தானத்தோடு வந்த இந்திரா, வேகமாக ஓடினார் மருமகளைத் தேடி. மாமியாரைக் கூடக் கண்டு கொள்ளாமல் ஓடும் அவரைக் கண்டு பின்னால் வந்த மூவரும் சிரிக்க, “குமரா…” என மகனைப் பார்த்ததும் குரல் கொடுத்தார்.
பெற்ற தாயைக் கண்டு பனித்துளியாய் உருகியவன், தன்னையும் தன் தாய் இவ்வளவு வலிகளைத் தாண்டித் தானே பெற்றிருப்பாள் என வருந்திப் பல நாள்களுக்குப் பிறகு, “அம்மா!” என்றழைக்க, நடந்து வந்தவர் அப்படியே நின்று விட்டார்.
தனக்குள் உண்டான அதிர்வை அடுத்த நிமிடமே ஒதுக்கி வைத்து, “எங்க தேனிசை?” கேட்டார்.
“இந்த ரூம்ல…”
உள்ளே சென்றவர் முதலில் தன் மருமகளை நலம் விசாரித்தார். மிகவும் சோர்வோடு காணப்பட்டவளைக் கண்டு மனம் கனிந்தவர், குழந்தையைப் பார்த்தார். பாட்டியான மகிழ்வு ஆனந்தக் கூத்தாடச் செய்தது. உரிமையாகத் தூக்கியவர்,
“அப்படியே அன்பு மாதிரி இருக்கு.” சிரித்தார்.
உள்ளே வந்த மற்ற மூவரும், தேனிசை தேவியை நலம் விசாரித்துவிட்டு குழந்தையைத் தூக்கி மகிழ்ந்தனர். நேரம் போனதே தெரியவில்லை அங்கிருந்தவர்களுக்கு. இந்த முறை குழந்தை பசிக்கு அழ மாமியாரே மருமகளுக்கு உதவி செய்தார்.
பெற்றோர்களாகியிருக்கும் இருவருக்கும், வாழ்த்துத் தெரிவித்த மூத்த தம்பதிகள் நேரமாவதால் முத்துமாரியை அழைத்துக் கொண்டு சென்று விட, மருமகளுக்குத் துணையாக இருப்பேன் என்று அடம் பிடித்து இருந்து விட்டார் இந்திரா. ஒன்றும் சொல்ல முடியவில்லை என்பதைத் தாண்டி அன்னையைத் தடுக்க மனம் வரவில்லை குமரவேலனுக்கு. அதுவும், ஒரு ஆணை விடப் பெண் துணை இந்த நேரத்தில் தேனிசைக்குத் தேவை என்பதால் அன்னையிடம் ஒப்படைத்து விட்டான்.
அன்புக்கரசன் பிறப்பு எடுத்து இரண்டாம் நாள் ஆகிறது இன்று. இரவெல்லாம் தங்கி இருந்த இந்திரா, மருமகளுக்கு உணவு எடுத்து வருவதற்காக வீட்டிற்குக் கிளம்பி விட, பிள்ளையை ஒட்டியபடியே அமர்ந்திருந்தான் குமரவேலன். இன்றுதான் முழு சுயநினைவை அடைந்திருந்தாள் பிரசவத்தைச் சந்தித்து வந்த பெண்.
அவளைப் பரிசோதிக்க வந்த செவிலியர், அனைத்தும் சரியாக இருப்பதை உறுதி செய்து கொண்டு, “மெல்ல எந்திரிச்சு நடங்க. சார், அவங்களுக்கு ஹெல்ப் பண்ணுங்க.” என்றார்.
படுக்கையை விட்டு எழச் சிரமப்பட்டவளுக்கு உதவி செய்தான். காலைத் தரையில் வைக்கவே கடினப்பட்டவள், எழுந்து நிற்க முடியாமல் அமர போக, பின் பக்கம் கை நுழைத்து முதுகைத் தாங்கிக் கொண்டவன், வலது கையைப் பிடித்துக்கொண்டு நடக்க உதவி செய்தான். அறுவை சிகிச்சை முடிந்து எடுத்து வைக்கும் முதல் அடி, பல பிரசவங்களைச் சந்தித்து வந்த வலிக்கு ஈடாக இருக்கும்.
அதைத் தாங்க முடியாமல், சோர்ந்து போனவளுக்குத் துணையாக நடக்க ஆரம்பித்தவன், “அவ்ளோதாம்மா, இன்னும் ரெண்டு அடி.” பேச்சுக்களால் ஊக்கம் கொடுத்தான்.
வலிகளுக்கு நடுவில் அவன் முகம் பார்த்தாள். நடக்க வைத்தவன் மீண்டும் மெத்தை வரை அழைத்து வந்து அமர வைத்தான். கால்களை மெல்ல உயர்த்தி மெத்தையில் சரித்தவன், தலையணையைச் சாய்வாக வைத்து அவளைச் சாய்ந்து அமர வைத்தான்.
“தேங்க்ஸ்”
“அட எதுக்கும்மா…”
“நீ இல்லனா ரொம்பக் கஷ்டப்பட்டு இருப்பன்னு மட்டும் புரியுது.”
“சத்தியமா இல்லமா. எப்படியா இருந்தாலும், இந்தப் பிள்ளையை நல்லபடியா பெத்து இருப்ப…”
“ரொம்ப சந்தோஷமா இருக்கியா?”
“ரொம்ப ரொம்ப…”
“இனி உன்னைக் கைலயே பிடிக்க முடியாது.”
“ஈஈஈஈ”
“படுக்க வைக்கிறியா.”
தலையணையை எடுத்துவிட்டு, மெல்ல அவளைப் படுக்க வைத்தவன் குழந்தையைப் பார்த்துக் கொண்டான். இன்று அவளுக்குக் கஞ்சி மட்டும் தான் என்பதால், அதை மட்டும் செய்தவர் மகனுக்காக ஆசையாகச் சாப்பாடு எடுத்து வந்திருந்தார். அவளால் எழுந்தமர்ந்து சாப்பிட முடியாது என்பதால் இந்திரா ஊட்ட, குழந்தை அழுதது.
“ரெண்டு நிமிஷம் பார்த்துக்க குமரா. இப்பத்தான் சாப்பிட உட்கார்ந்திருக்கா…”
குழந்தையைத் தூக்கிச் சமாதானம் செய்ய, பசியால் அழுதான் குட்டி அன்பு. மகன் அழுகையைச் சமாளிக்க முடியாது துள்ளிக் குதித்தவனைப் பார்த்த இந்திரா, தலையில் அடித்துக் கொண்டு, “நீ ஊட்டு, நான் பார்த்துக்குறேன்.” எனக் குழந்தையை வாங்கிக் கொண்டார்.
“அன்புக்குப் பசிக்குது.”
முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு மகனையே பார்த்திருக்க, “இப்பத் தான்டா பால் கொடுத்தா… நேத்துல இருந்து சாப்பிடாத புள்ளைக்குக் கொடு முதல்ல.” அதட்டியும் கேட்காதவன் தேனிசையைத் தொந்தரவு செய்ய, இம்சை தாங்க முடியாமல் பால் புகட்ட ஆரம்பித்தாள்.
பிள்ளை பசியாறியதும், பல்லை இளித்துக் கொண்டு வாங்கியவனை இரு பெண்களும் முறைக்க, “இப்பப் பார்த்துக்க.” எனக் குழந்தையைக் கொடுத்து விட்டு ஊட்ட ஆரம்பித்தான்.
குமரவேலன் முகத்தில் வந்து மறையும் பேரானந்தத்தை, இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவளைச் சாப்பிடும்படி சைகை செய்ய, ஒரு வாய் வாங்கிக் கொண்டவள், “தெய்வானைக்குச் சொல்லணும்.” என்றாள்.
“ம்ம்”
“இப்பவே சொல்லு…”
“அம்மாவ விட்டுச் சொல்லச் சொல்றேன்.”
“நீ சொல்ல மாட்டியா?”
“தயவு செஞ்சு எதையும் ஆரம்பிக்காதம்மா. இப்பத்தான் குழந்தையைப் பெத்து எடுத்திருக்க.”
“அதான், உன் அன்பு உன்கிட்ட வந்துட்டானே… இன்னும் என்ன தயக்கம்?”
“இப்ப என்ன பண்ணச் சொல்ற…” என்றவன் குரலில் இருக்கும் கோபத்தை உணர்ந்தாலும்,
“தெய்வானையும் ரொம்ப நல்ல பொண்ணு. அந்தப் பிள்ளையைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு, ரெண்டு பேரும் சேர்ந்து கூட என்னைப் பாருங்க.” என முடித்திருக்கக் கூட மாட்டாள்.
“வாய மூடு!” எனக் கத்தினான்.
இந்திரா மகனைப் பார்க்க, தேனிசை தேவி மிரண்டு பார்த்தாள். கையில் இருந்த உணவை மெத்தையில் வைத்தவன், “இந்தப் பேச்சைப் பேசாதன்னு நிறையத் தடவை சொல்லிட்டேன். இப்பவும் சொல்றேன், பேசாத…” என்றவன் இந்திராவைப் பார்த்து,
“இந்தப் பிள்ளை கழுத்துல இருந்த தாலி அங்க இருக்கு, எடுத்துக் கட்டி விடுங்க.” குழந்தையை வாங்கிக் கொண்டு வெளியே சென்று விட்டான்.
ஒரு மாதிரியாக அமர்ந்திருந்த மருமகளைத் தொந்தரவு செய்ய விரும்பாது, பிரசவத்தின் போது கழற்றி வைத்த மாங்கல்யத்தை எடுத்து வந்து கட்டி விட்டவர், “வீட்டுக்குப் போனதும், தங்கத்துல தாலி எடுத்திடலாம்.” என்றிட, மஞ்சள் கயிற்றை ஏற்றுக் கொள்ளாதவள், தங்கத்திலானதை எப்படி ஏற்றுக் கொள்வாள்?
***
இன்று வீடு திரும்புகிறாள் தேனிசை. மருமகள் வருவதற்குள் வீட்டை முழுவதுமாகத் துடைத்துச் சுத்தம் செய்து வைத்துவிட்டார் மாமியார். அவர் செய்திருக்கும் மாற்றம் அறியாது குமரனோடு கிளம்பினாள். அன்றுச் சத்தம் போட்டவன் தான். அதன் பின் தேனிசையிடம் எதுவும் பேசவில்லை. அவளுக்குத் தேவையானதை மட்டுமே செய்து கொடுத்தான்.
இரண்டு நாள்கள் கழித்துப் பார்க்க வந்த தெய்வானை, மாமன் மகனுக்குப் புதுத் துணிகளையும், பொம்மைகளையும் வாங்கி வந்திருந்தாள். அவளைப் பார்க்கத் தடுமாறினாலும் வரவேற்றான். பல மாதங்களுக்குப் பிறகு நேருக்கு நேராகச் சந்தித்துக் கொண்டனர் இருவரும்.
“வாழ்த்துக்கள் மாமா”
“எப்படி இருக்க?”
“நீங்க எப்படி இருக்கீங்க?”
“நல்லா இருக்கேன்.”
“நானும் ரொம்ப நல்லா இருக்கேன் மாமா.”
“நீ வந்தது அத்தைக்குத் தெரியுமா?”
“தெரிஞ்சா போன்னு அனுப்பி வச்சிருக்குமா…”
“சீக்கிரம் பார்த்துட்டுக் கிளம்பு, உனக்கு ஏதாச்சும் பிரச்சனை வரப்போகுது.”
“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் மாமா…” என்றவளின் சாதாரணப் பேச்சு மனதிற்கு இதமாக இருந்தது.
ஏதாவது பேசுவான் என்று எதிர்பார்த்து ஏமாந்து போனாள் தேனிசை. காரில் இருந்து இறங்க உதவி செய்தவன், அவளை விட்டுத் தள்ளி நிற்க, “சேர்ந்து நில்லுங்க, ஆரத்தி எடுக்கணும்.” என்றார்கள்.
முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு, பிள்ளையைத் தன் கையில் வைத்துக் கொண்டவன், மனைவியோடு ஒட்டி நிற்க, மூவரையும் பார்த்து மனம் நிறைந்த இந்திரா, காமாட்சியோடு சேர்ந்து திருஷ்டி கழித்து வாசலில் ஊற்றினார்.
இருவரும் ஒன்றாக உள்ளே நுழைய இருவருக்கும் அதிர்ச்சி. வீட்டையே புதிதாக மாற்றி வைத்திருந்தார் குமரனின் தாய். பெரியதாக மாட்டி வைத்திருந்த அன்புக்கரசனின் புகைப்படம் அங்கு இல்லை. அதைக் கண்டு கொதித்து எழுந்தவன், “யார் இதை மாற்றியது?” என்ற சத்தம் போட,
“நான் தான் மாத்தி வச்சேன்.” ஒப்புக் கொண்டார் அவனின் அன்னை.
“எதுக்காக மாத்துனீங்க? அவன் போட்டோவ மாட்டுங்க.”
“சும்மா கத்தாத குமரா. வாழ்க்கை, உங்க ரெண்டு பேருக்கும் விளையாட்டாய் தெரியுதா? அவன் போட்டோவ வீட்டுக்கு நடுவுல இவ்ளோ பெருசா மாட்டி வச்சிருந்தா, ரெண்டு பேரும் எப்படிச் சேர்ந்து வாழ யோசிப்பீங்க? உன்ன விடு, அந்தப் பொண்ணுக்கு நீ தான் புருஷன்னு எப்படி மனசுல பதியும். எப்பப் பாரு, அன்பு அன்புன்னு சொல்லாம, கொஞ்சமாது நிஜத்தைப் புரிஞ்சுக்கப் பாரு. உன் நண்பன் தான், உனக்குத் திரும்பக் கிடைச்சிட்டான்ல. உசுரோட வந்தவன் கூட வாழப் பாரு.
முக்கியமா, இந்த மாதிரி மூஞ்சத் தூக்கி வச்சுகிட்டு அந்தப் பிள்ளைகிட்டப் பேசாத. அவ ஏதாச்சும் கோவமா பேசினால் கூட விட்டுக் கொடுத்துப் போ… பிள்ளையப் பெத்த பச்சை உடம்பு. முன்னாடி நீ கவனிச்சதெல்லாம் பெருசு இல்ல, இப்ப கவனிக்கப் போறது தான் பெருசு. நீங்களா முடிவெடுத்து வாழ்ந்த வாழ்க்கை போதும், பெரியவங்க சொல்றோம். கேட்டு நடந்துக்கோங்க.”
அதன் பின், இருவரும் எதுவும் பேசிக் கொள்ளாமல் அமைதியாக நின்றிருக்க, தங்கத்தால் ஆன மாங்கல்யத்தை மஞ்சள் கயிற்றில் கோர்த்து வைத்திருந்த இந்திரா மகன் கையில் கொடுத்தார்.
“இது எதுக்குமா? அதான் அந்தப் புள்ள கழுத்துல ஏற்கெனவே இருக்கே.”
“கிழங்குல கட்டி இருக்கு குமரா. அதுவும் அது ரொம்பப் பழசாகி இருக்கு.”
“எனக்கு இதுவே போதும்.”
“குழந்தைக்குப் பால் கொடுக்கணும். பழசான மஞ்சள் கிழங்கு ஒத்துக்காது.” எனக் குழந்தையைக் காரணம் காட்டி இருவரின் வாய்க்கும் பூட்டுப் போட்டார்கள்.
அரைகுறை மனதோடு வாங்கியவன், தேனிசை தேவியைப் பார்த்துக் கொண்டிருக்க, அவளும் அவனைத்தான் என்ன இது என்பது போல் பார்த்துக் கொண்டிருந்தாள். இதுவரையும் அதிகம் யோசிக்க வைக்க விரும்பாத பெரியவர்கள், நல்ல நேரம் போவதற்குள் கட்டச் சொல்ல, மூன்று முடிச்சுப் போட்டு மீண்டும் தன் மனைவியாக்கிக் கொண்டான்.
அனைவரையும் கிளம்பும்படி முத்துமாரி சைகை செய்ய, இருவரையும் குழந்தையோடு விட்டுவிட்டு வெளியில் வந்தார்கள். வந்த மூவரிடமும், “அடிக்கடி இந்த வீட்டுப் பக்கம் வர வேண்டாம். ரெண்டு பேரும் சேர்ந்து குழந்தையைப் பார்த்துக்க ஆரம்பிச்சா, அவங்களுக்குள்ள புரிதல் வரும். சேர்ந்து வாழறதைப் பத்தி யோசிப்பாங்க.” என்றவரின் அனுபவத்தை நம்பிச் சம்மதித்தார்கள்.
ஒரு வாரம் கழித்து இருவரும், அந்த இல்லத்தில் இரவைக் கழிக்கப் போகிறார்கள். வீட்டில் ஏற்பட்ட மாற்றத்தை விட, அவர்களுக்கு நடுவில் வந்த குட்டி அன்புதான் பெரும் மாற்றம். தன் மகனோடு பேச்சு கொடுத்துக் கொண்டிருந்தானே தவிர, அவன் தாயிடம் ஒரு வார்த்தை பேசவில்லை. அதைக் கவனித்தாலும், கவனிக்காதது போல் எழுந்தவளைப் பிடித்தவன்,
“எழுந்துக்கணும்னா சொல்லு, நீயே எந்திரிக்காத…” என மூன்று நாள்களுக்குப் பிறகு அவள் முகம் பார்த்துப் பேசினான்.
“ஒன்னும் தேவை இல்ல, கைய விடு.”
“உன்னால தனியா எதுவும் செய்ய முடியாதும்மா…”
“அதை நான் பார்த்துக்குறேன்.”
“உனக்கு ஆபரேஷன் பண்ணி இருக்காங்க, நியாபகம் இருக்காம்மா.”
“அதனால என்ன இப்போ? இவ்ளோ நாள் விழுந்து விழுந்து கவனிச்சவன், இப்ப என்னமோ வேண்டா வெறுப்பா எல்லாத்தையும் செய்யற. நீ சரியான துரோகின்னு அப்பப்ப நிரூபிக்கிற…”
“நான் வேண்டா வெறுப்பா செய்யல. நீ தான் எப்படா என்னைத் துரத்தி விடலாம்னு பார்த்துட்டு இருக்கம்மா…”
“தெரியுதுல்ல, அப்போ என்னை ஏதும் சொல்லாத விடு.”
“ப்ச்! இப்ப எதுக்குமா எந்திருச்ச?”
“சொல்ல முடியாது.” என்றவள் மெல்ல நடந்து குடத்தில் இருக்கும் தண்ணீரை எடுக்கக் குனிய, அதற்குள் அவளை முந்திக்கொண்டு தண்ணீரை எடுத்துக் கையில் கொடுத்துவன் கண்டபடி முறைத்தான்.
***
பிள்ளை வந்த பின், ஒரு வீட்டில் ஏற்படும் மாற்றத்தைக் கண்கூடாகப் பார்த்தார்கள் இருவரும். இரவெல்லாம் காவலாளி வேலை பார்த்துக் கொண்டிருக்கும் குட்டி அன்பு, பகல் முழுவதும் உறக்கத்தில் தள்ளாடுகிறான். அவளுக்கு ஓய்வு கொடுக்க, இரவு முழுவதும் பிள்ளையைப் பார்த்துக் கொள்பவன் அரைகுறைத் துக்கத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறான்.
குழந்தையைத் தனியாகச் சமாளிக்க முடியாமல் தேனிசை தவிக்க, இந்த ஒரு வாரத்தில் ஒரு முறை மட்டுமே இந்திரா வந்து சென்றார். சரியான தூக்கம் இல்லாமல், வீட்டு வேலைகளையும் செய்து கொண்டு வெளி வேலையும் செய்து வரும் குமரனைக் காணப் பாவமாக இருந்தது.
நேற்றிரவு, “நீ தூங்கு, நான் பார்த்துக்குறேன்.” என்றாள்.
“இப்போ உனக்குத் தூக்கம் மட்டும் தாம்மா நிறையத் தேவை. பகல்ல நான் வேலைக்குப் போயிட்டா தனி ஆளா குழந்தையைப் பார்த்துக்கணும். எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல. நீ நல்லாத் தூங்கு.”
“குழந்தை பிறந்ததுல இருந்து நீ சரியாத் தூங்கல.”
“அன்பு முகத்தைப் பார்க்குறதை விடத் தூக்கமா ம்மா பெருசு. என்ன, என்னைத் தான் கண்ணத் தொறந்து பார்க்க மாட்டேங்கிறான்.”
“இன்னும் கொஞ்ச நாள் ஆகும்.” என்றவளை உறங்க உத்தரவிட்டவன் குழந்தை அழும்போது மட்டும் குரல் கொடுப்பான்.
***
இன்று குட்டி அன்புக்குத் தீட்டு கழிக்கிறார்கள். அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் எழுந்து, தோட்ட வேலைகளை முடித்துவிட்டு வந்தவன் குளிக்க வெந்நீர் வைத்துவிட்டு, “நான் பார்த்துக்குறேம்மா படுத்துக்க…” எனக் குழந்தையை வாங்கிக் கொண்டவன் தோளில் போட்டுத் தாலாட்டுப் பாடினான்.
குமரவேலனின் செயலைப் பார்த்துக் கொண்டிருந்தவள் எண்ணத்தில், அவன் மீதான மதிப்பு அதிகரித்தது. இவ்வளவு தூரம் ஒரு ஆண் செய்வது மலைப்பாக இருக்க, தன் நண்பனுக்காக எனும் போது வியப்பாக இருந்தது. இப்படி ஒருவனை எப்படிக் கையாள்வது என்று தெரியவில்லை. ஓய்வு முதல் கொண்டு அனைத்தையும் தனக்குக் கொடுத்துவிட்டு, ஒன்றும் செய்யாதது போல் நடமாடிக் கொண்டிருக்கிறான்.
குட்டி அன்புவைத் தட்டித் தூங்க வைத்தவன், “சுடு தண்ணி ஊத்தி வச்சிருக்கேம்மா, போய் குளிச்சிட்டு வந்துடு.” என்றவன் காலை உணவு தயாரிக்கத் துவங்கினான்.
“நீ சாப்பிடலையா?”
“வேலை நிறைய இருக்கு. எல்லாத்தையும் முடிச்சிட்டுச் சாப்பிடுறேன், நீ சாப்பிடு.”
“இவன் எழுந்துட்டா சாப்பிட மாட்ட. வந்து உட்காரு சேர்ந்து சாப்பிடலாம்.”
“கொஞ்ச நேரத்துல எல்லாரும் வந்துடுவாங்கம்மா. அன்புவ வேற குளிக்க வைக்கத் தண்ணி போடணும்.”
“நான் போடுறேன்.”
“வேண்டாம்”
“வான்னு சொல்றன்ல…”
அதற்கு மேல் மறுப்பு சொல்ல முடியாமல் அவளோடு அமர்ந்தவன் இரண்டு இட்லியை வைத்துக் கொள்ள, கவனித்தவள் இன்னும் இரண்டு இட்லியை வைத்தாள்.
“ரொம்பப் பண்ணாத. ரெண்டு இட்லி போதுமா உனக்கு? தூங்கவும் மாட்டேங்குற. சாப்பிடவும் மாட்டேங்குற. உடம்பு என்னத்துக்கு ஆகுறது?”
“அதெல்லாம் சூப்பரா இருக்கும்.”
“கிழிக்கும். எனக்கு எப்படி ரெஸ்ட் முக்கியமோ, அதே மாதிரி தான் உனக்கும் முக்கியம். ஒருத்தரே பார்த்துட்டு இருந்தா வேலைக்கு ஆகாது. நானாது பரவால்ல, வீட்ல இருக்கேன். நீ அப்படியா? ரெண்டு பேரும் மாத்தி மாத்திப் பார்த்துக்கலாம். மதியம் கொஞ்சம் வீட்டுக்கு வந்து தூங்கி எந்திரிச்சுப் போ…”
“இன்னும் கொஞ்ச நாள் தான்மா. உடம்பு சரி ஆகிட்டா அன்புவைப் பார்த்துக்கன்னு முழுசாய் கொடுத்துடுவேன்.”
“யாரு நீ…” என அவனை ஒரு மாதிரியாகப் பார்க்க, உதடைப் பிரிக்காமல் இழுத்துக் சிரித்தவன் கேவலமாகத் தலையசைத்தான்.
“யார் கிட்டயும் கொடுக்காம, கங்காரு குட்டியை வச்சுச் சுத்துற மாதிரி சுத்திட்டு இருக்க…”
“அன்பு…ம்மா…”
“ரொம்ப வழியுது தொடச்சிக்க.”
“நீ எப்பவுமே இப்படித்தான் பேசுவியா?”
“ஏன்?”
“இல்ல, பார்க்க அப்பாவிப் பொண்ணு மாதிரி இருக்க. வாயத் தொறந்தா பத்து ஊரை ஓட விடுற. வரவர உன்கிட்டப் பேச்சுக் கொடுக்கனும்னாலே பக்குனு இருக்குமா…”
“என்னை இந்த மாதிரிப் பேச வைக்கிறது நீதான்.”
“நான் என்னம்மா பண்ணேன்?”
“இந்த நல்லவன் மாதிரி மூஞ்ச வைக்காத. உன் ஓவர் பாசத்துக்கு, என்னைப் பார்த்துக்குறன்னு பேரு.”
“சாப்பிட உட்காருன்னு சொல்லிட்டுத் திட்டுறம்மா…”
“ஏய்! மூஞ்சிய மாத்து.”
அவள் மிரட்டிய பின்பு தான் இன்னும் பாவமாக வைத்தான் முகத்தை. அதைக் கண்டு பல்லைக் கடித்தவள், “நடிகன்டா நீ. எவ்ளோ பெரிய வேலையப் பார்த்துட்டு ஒன்னுமே தெரியாத பச்சைப்புள்ள மாதிரி உட்கார்ந்து இருக்க. நீ கொடுத்த பர்பாமன்ஸ்ல பயந்து ஆபரேஷன் பண்ற அளவுக்குப் போயிட்டேன். எங்க இருந்து இவ்ளோ தைரியம் வந்துச்சு உனக்கு…” என்றாள் முறைப்பு குறையாது.
“ஈஈஈஈ….”
“வேணாம்… மூஞ்சிய இந்த மாதிரி வைக்காதன்னு சொல்லிட்டேன்.”
“குமரவேலன் மூஞ்சியே அப்படித்தாம்மா…” என்றவன் தலையைக் கரண்டியைக் கொண்டு பதம் பார்த்தவள்,
“போலீஸ், கேஸ்னு போயிருந்தா இன்னைக்கு உன் அன்புவைப் பார்த்திருக்க முடியுமா?” கேட்டாள்.
“குமரன் போட்ட ஸ்கெட்ச் எப்படி மிஸ் ஆகும்.? எங்க அப்பா அந்தக் காளியை வெளிய எடுத்துட்டு வரணும்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன். வந்தான் முடிச்சிட்டேன். எங்க அப்பா என்னை ஜெயிலுக்குப் போக விட மாட்டாருன்னு தெரியும்.”
“இருந்தாலும், இப்ப நினைச்சாலும் ரொம்பப் பயமா இருக்கு.” என்றவள்,
“எதற்காக அவனுக்கு இப்படி ஒரு தண்டனை? உயிரை எடுத்து இருக்கலாம்ல.” என்று கேட்க,
“அது அவனுக்கு வலிக்காதும்மா… முக்கியமா உன் அப்பாக்கு. இப்பப் பார்த்தல்ல, அதிர்ச்சி தாங்காமல் படுத்தவருக்கு ஆஞ்சியோ பண்ணியும் சரியாகாம ஆபரேஷன் பண்ணிருக்காங்க. தன் தேவையைச் செஞ்சுக்க முடியாம அந்தக் கருப்பன் துடிக்கணும். எல்லாமே தன்னை விட்டுப் போய், வெறும் உசுர மட்டும் வச்சுக்கிட்டு அவன் அப்பா வாழனும்.” என்றவனை ஆழமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
வெகு நிமிடங்களுக்குப் பிறகு அதைக் கவனித்தவன் என்னவென்று கேட்டுப் புருவம் உயர்த்த, “ஒருதடவை அன்புகிட்ட, நீ முக்கியமா நான் முக்கியமான்னு கேட்டேன். கொஞ்சம் கூட யோசிக்காம, நீ தான் முக்கியம்னு சொன்னான். அதுக்கான அர்த்தம் இப்பத்தான் புரியுது.” என்றவள் மகிழ்வாகப் புன்னகைத்தாள்.
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே குட்டி அன்பு எழுந்து விட, பாதிச் சாப்பாட்டோடு எழ முயன்றவனை அதட்டி, அமர வைத்த தேனிசை குழந்தைக்குப் பால் புகட்ட, சாப்பிட்டு முடித்தவன் அனைத்துப் பாத்திரங்களையும் கழுவி வைத்துவிட்டு அன்புவோடு நேரம் செலவழித்தான்.
இருவரும் குழந்தையை நடுவில் வைத்துக் கொண்டு அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். குமரவேலன், குட்டி அன்புவின் உள்ளங்கையில் தன் ஆள்காட்டி விரலை நுழைத்துக் கொண்டு, அவன் சிணுங்கும் அழகை ரசித்துக் கொண்டிருக்க, பாதங்களை வருடிக்கொண்டு பாசத்தைப் பொழிந்தாள் தேனிசை தேவி.
இவ்விருவரின் பேச்சைக் கேட்ட குட்டி அன்பு, சுகமாக தாய் தந்தையருக்கு நடுவில் உறங்கத் துவங்க, அந்த அழகைத் தங்களுக்குள் பொக்கிஷமாகச் சேமித்தார்கள் பெற்றோர்கள். குட்டி அன்புவை விட்டு நகர மனம் வரவில்லை இருவருக்கும். பெயர் சூட்டும் விழாவிற்கு இன்னும் நேரம் இருப்பதால், தேனிசை தேவி தன் மகனோடு படுத்துக்கொள்ள, விரலை விலக்கிக் கொள்ளாமல் ஒரு பக்கமாகச் சரிந்து படுத்தான் குமரவேலன்.
இருவருக்குள்ளும் நடக்கும் மாற்றம் புரியாமல், குட்டி அன்புவின் எதிர்காலத்தைப் பேசிக் கொண்டிருந்தார்கள். சுகமான அனுபவமாக இருந்தது. பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தவள், மெல்லக் கண் அயர ஆரம்பிக்க, இருவரையும் மனம் நிறைவாகப் பார்த்துக் கொண்டிருந்தவனும், சற்றுக் கண் மூடத் துவங்கினான். இருவரின் கைகளும், பிள்ளையை அணைத்துக் கொண்டிருந்தது.
***
இன்று பெயர் சூட்டும் விழா என்பதால் குளிக்கப் போகிறான் அன்புக்கரசன். மகனுக்காகப் பதமாக வெந்நீர் எடுத்து வைத்தவன், தாயிடம் பலமுறை கூறி விட்டான். பொறுமையாக உடல் வலிக்காமல் குளிக்க வைக்குமாறு. பெற்ற மகனின் தொல்லை தாங்க முடியாமல், “இவனக் கொஞ்சம் ஓரமா உட்கார வை.” என மருமகளிடம் கெஞ்சினார்.
கால் நீட்டி அமர்ந்தவர், சுடுதண்ணீரில் கை வைத்ததும் கடுமையாக முறைக்க, “என்ன அத்தை?” கேட்டாள்.
“தண்ணி கொஞ்சம் கூடச் சூடே இல்லை.”
“உங்க பையனுக்கு, அன்புக் கிறுக்கு பிடிச்சி அலையுது.”
“நான் சூடு பண்ணி எடுத்துட்டு வரேன்.”
சென்றவரைத் தாவிப் பிடித்துத் தடுத்து நிறுத்தியவன், இந்தச் சூட்டில் குளிக்க வைத்தால் போதும் என்று விட, இருவராலும் சமாளிக்க முடியவில்லை அவனை.
அவன் தொந்தரவு தாங்காதும் அந்த மிதமான சூட்டில் குளிக்க வைக்க அமர்ந்தவரை நிம்மதியாகக் குளிக்க வைக்க விடவில்லை. தண்ணீரை ஊற்றும் முன் அதைத் துடைத்து விட்டு அமர்க்களப்படுத்தினான். அங்கு வந்த காமாட்சியும் முத்துமாரியும் அவன் அலம்பல் தாங்க முடியாமல் வசைபாட, “என் அன்புக்கு வலிக்கும். வயசான கட்டைங்க உங்களுக்கு என்ன தெரியும்?” சண்டைக்குப் பாய்ந்தான்.
சோப்பு போடக் கூட விடாமல், “கண் எரியும். காதில் தண்ணீர் போகும்.” என்று அலப்பறை செய்தான்.
“ஒழுங்கு மரியாதையா ஓரமா உட்கார்ந்துடு. இல்ல, இன்னைக்கு முழுக்கப் புள்ளையத் தூக்க மாட்ட.” என்றதும் வாயைப் பொத்திக் கொண்டு திண்ணையில் அமர்ந்து கொண்டான்.
அவனைப் பார்த்த மூன்று பெண்களும் சத்தமாகச் சிரிக்க, தேனிசை தேவி முதல் கொண்டு அனைவரையும் உள்ளுக்குள் வசை பாடினான். பாட்டியின் பதமான குளியலைத் தாங்கிக் கொள்ளாத குட்டி அன்பு, குளியலுக்கு நடுவில் சத்தம் கொடுக்க,
“அன்பே…” என ஓடி வந்து பிள்ளையைத் தூக்கிக் கொண்டான்.
“ப்ச்… ஏய்! குழந்தையைக் கொடு.” என்ற தேனிசையை முறைத்தவன், “என் அன்புவ நானே குளிக்க வைக்கிறேன். எல்லாரும் எழுந்து போங்க. அன்பு வலி தாங்காம அழறான், மனசாட்சி இல்லாம வேடிக்கை பார்க்குறீங்க.” என்றவன் நான்கு பெண்களுக்கும் போக்கு காட்டிவிட்டுக் கால் நீட்டி அமர்ந்து,
“குமரன் உன்னைப் பதமா குளிக்க வைக்கிறேன் அன்பே. வலிச்சா, வலிக்குது குமரான்னு மட்டும் சொல்லு.” என்றதும் அங்கிருந்த நான்கு பெண்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
அதைக் கருத்தில் கொள்ளாதவன் உள்ளங்கையில் அள்ளித் தண்ணீரை ஊற்றிப் பட்டும் படாமல் சோப்பைப் போட்டுக் குளிக்க வைத்தான். குட்டி அன்பு தந்தையானவன் குளியலில் தூங்கியே விட்டது சுகமாக.