Loading

துருவின் ஆட்கள் சொன்ன இடத்திற்கு சென்றவன், அங்கு அந்த பாழடைந்த கட்டடத்தில் உள்ளே சென்று பார்த்தான்.

ஒவ்வொரு அறையாக மெல்ல திறந்துப் பார்த்தவன், எங்குமே அவள் இல்லை என்றதும் குழம்பிக் கொண்டே வெளியில் வந்தவன்,

அவனை காணாமல் கோபத்தில் காலை உதைக்க வித்தியாசமாக சத்தம் வந்தது.

மீண்டும் அதை உதைத்தவன், கட்டையில் இடிப்பது போல் சத்தம் வர, விறுவிறுவென அதை உடைத்து பேஸ்மெண்ட்டிற்கு சென்றான்.

அங்கு ரித்திஷ், உத்ராவின் அருகில் நின்று அவளுக்கு போதை மருந்தை சுவாசிக்கக் கொடுப்பதை கண்டவன், அவனை தரதரவென இழுத்து கீழே போட்டான்.

மயக்கத்தில் இருந்த உத்ராவை தட்டி, “ஹனி உதிம்மா… இங்க பாருடா.” என்று உருகிய குரலில் அழைக்க,

அவள் மயக்கத்திலேயே “துருவ்.. துருவ்” என்று முனங்க, அவளை தூக்கிக் கொண்டு வெளியில் வர முயற்சித்தவனை, ரித்திஷ் தாக்கினான்.

உத்ராவை ஒரு ஓரமாய் இறக்கி விட்டு விட்டு, ரித்தீஷின் சட்டையைப் பிடித்து, சுவற்றியில் சாய்த்து, முகத்திலேயே குத்தினான்.

மேலும், அவனை படுக்க வைத்து, அடிவயிற்றிலேயே நங்கு நங்கு என ஏறி மிதித்தவனை, ரித்தீஷின் ஆட்கள் சுற்றி வளைக்க, அவன் நிதானத்திலேயே இல்லை.

யாரை எங்கு அடிக்கிறோம் என்று கூட தெரியாமல், அனைவரையும் புரட்டி எடுத்தான். அவன் அடியை கண்டு நடுங்கிய அடியாட்கள் விட்டால் போதும் என ஓடி விட, ரித்தீஷை அடி அடி என அடித்தான்.

பின், அவனின் ஆட்களை வரவைத்து, ரித்தீஷை அவன் இடத்திற்கு தூக்கி செல்ல சொல்லி விட்டு, உத்ராவை அள்ளிக்கொண்டு மருத்துவமனை வந்தான்.

மற்றவர்கள் “என்னாச்சு உதிக்கு” என்று கேட்க, அவன் யாரையும் பார்க்காமல், எதையும் கேட்காமல், உதியை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான்.

பின், மருத்துவர் அவளுக்கு சிகிச்சை அளிக்க, அவளை விட்டு எங்கும் நகராமல், அவளையே பார்த்திருந்தான் துருவ்.

அவளுக்கு போதை மருந்தை கொடுத்தினால் மயக்கமாக இருக்கிறாள் என்று மாற்று மருந்தைக் கொடுக்க, எப்படியும் அவள் கண் விழிக்க ஆறு மணி நேரம் ஆகும் என்று கூறினர்.

அஜய், சுஜியை சென்று பார்க்க, அவள் அவனைப் பார்த்து மெதுவாக முறுவலித்தாள்.

அஜய் அவள் அருகில் சென்று “இப்போ எப்படிடா இருக்கு?” என்று கேட்க, அவள் கண்ணை மூடித் திறந்து எனக்கு ஒன்னும் இல்லை என்று சைகை செய்தாள்.

ஏதோ பேச முயற்சித்தவளுக்கு, பேச முடியாமல் வலியுடன் சேர்ந்து கண்ணீரும் வர, அதனை துடைத்து விட்டவன்,

“ஸ்ட்ரைன் பண்ணாதடா. காயம் ஆறுற வரைக்கும்  பேசக்கூடாதுன்னு டாக்டர் சொல்லிருக்காங்க” என்றவனுக்கு, வாய் ஓயாமல் பேசுபவள், இப்பொழுது இப்படி இருப்பது பெரும் வேதனையை கொடுத்தது.

அவள் “உத்ரா எங்க?” என்று வாயை மட்டும் அசைக்க, அதை புரிந்து கொண்டவன், “அவள் நல்லா இருக்கா பஜ்ஜி” என்றதும்,

“மத்தவங்க” என்று கேட்க, “எல்லாரும் நல்லா இருக்காங்க. நீ ரெஸ்ட் எடு… பேச ட்ரை பண்ணாத சரியா” என்று கண்ணில் நீர் தேங்க, நெற்றியில் முத்தமிட, சுஜியின் அப்பா அவனை வெளியில் தள்ளினார்.

இருவரும் அவரை புரியாமல் பார்க்க, அவர், “போதும் என் பொண்ணு உங்க கூட சேர்ந்து படுற கஷ்டம்லாம் போதும். ஃப்ரெண்ட் ஃப்ரெண்ட்ன்னு சொல்லி அவளை கொல்ல பார்த்துட்டீங்கள்ல. போடா முதல்ல வெளிய” என்று அவனை வெளியில் தள்ளினார்.

சுஜி “அப்பா” என்று பேச வர, அஜய், “நீ ரெஸ்ட் எடு சுஜி” என்றவன், அவர் எமோஷனலாக இருக்கிறார் இப்போது பேசக்கூடாது என்று நினைத்து வெளியில் வந்து விட்டான்.

அர்ஜுன் “மீரா” என்று அழைக்க, வேகமாக அவன் அருகில் சென்றவள், “என்ன ஆச்சு அர்ஜுன். எதுவும் வேணுமா. டாக்டரை கூப்பிடவா” என்று பதட்டமாக கேட்க,

அவன் புன்னகையுடன், “ம்ம் வேணும்…” என்றதும், “என்ன வேணுமா அர்ஜுன் தண்ணி தரவா” என்றாள்.

“ஒரு கிஸ் வேணும்” என்று குறும்புடன் கூற, அவன் சொன்னதை உள்வாங்கவே அவளுக்கு சில நிமிடம் பிடித்தது.

அவனை முறைத்தவள், “நான் என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன் அர்ஜுன்.” என்று ஆசுவாசமாகிவிட்டு,

பின், “நீங்க சரியாகி வீட்டுக்கு வந்ததும் நிறைய தரேன்” என்று தலையை சாய்த்துக் கூற, அவன் அவளை விழி விரித்து பார்த்து,

“பார்றா. இதையே நான் இன்னைக்கு காலைல கேட்டுருந்தா இப்படி சொல்லிருப்பியா. கத்தி குத்து பட்டாதான் உங்களுக்குலாம் லவ் வருது” என்று நக்கலடிக்க,

அதில் கண் கலங்கியவள், “சாரி அர்ஜுன்… நான் உங்களை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்ல. நான் காலைலலையே உங்களை பார்க்க தான் வந்தேன். அப்போ தான் அவனுங்க என்னை கடத்திட்டங்க.” என்றாள் பாவமாக.

அர்ஜுன், அவள் கையைப் பிடித்து கொண்டு, “என்ன சொல்ல வந்தன்னு இப்போ சொல்லு” என்று ஆர்வமாய் கேட்டான்.

அதில் அவள் சிவக்க, “அது அது… நீங்க வீட்டுக்கு வந்ததும் சொல்றேன்…” என்று நகரப் போனவளை பிடித்து இழுத்தவன்,

“இப்போ சொல்லு” என்று பிடிவாதமாய் கேட்க,

அவள், “ப்ச் அர்ஜுன்… ஸ்ட்ரைன் பண்ணாதீங்க.” என்று கண்டிக்க, அவன் கேட்கவே இல்லை.

பின், அவளே அவன் கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டு, “ஐ லவ் யு டாக்டர்” என்று வெட்கத்துடன் சொல்ல, அர்ஜுன் இருக்கும் இடத்தையும் மறந்து “யாஹூஹூ” என்று கத்தினான்.

அதில் வயிற்றில் வலி எடுக்க “ஷ்ஷ்” என்று முகத்தை சுருக்கியதும் அவள் பதறி, “என்ன ஆச்சு அர்ஜுன் வலிக்குதா? எதுக்கு இப்படி கத்துனீங்க. இப்போ பாருங்க எப்படி வலிக்குதுன்னு” என்று கலங்க,

அர்ஜுன், சிறு சிரிப்புடன், அவளை அருகில் இழுத்து, அவள் இதழில் அழுந்த முத்தம் கொடுத்து விடுவித்தான்.

“இப்போ வலிக்கலை என் சீனிக்கட்டி…” என்று சொன்னதில் மீரா செவ்வானமாய் சிவந்தாள்.

அப்பொழுது, சஞ்சு உள்ளே வந்து, அர்ஜுன் அருகில் அமர்ந்து, “ரத்தம் வந்துச்சாப்பா” என்று விழிகளை உருட்டி கேட்க, அவன் தான் அவனை வியந்து பார்த்தான்.

இவ்வளவு நாளாய், நான் தான் அவனின் அப்பா என்று சொல்லி கொண்டிருந்தாலும், சஞ்சுவிடம் அப்படி சொல்ல சொல்லி சொன்னாலும் அப்பா என்று அழைக்காதவன் இன்று அழைத்ததை கண்டதும், மீராவை பார்த்தான்.

காலையில் அவள் தான் சஞ்சுவிடம் அர்ஜுனை அப்பா என்று அழைக்க வேண்டும் என்று கூறி இருந்தாள்.

அர்ஜுன், சஞ்சுவின் கன்னத்தை கிள்ளி “இல்லடா செல்லம். லேசா தான் அடி பட்டுச்சு. சீக்கிரமா சரி ஆகிடும்” என்று சொல்ல,

சஞ்சு, “ஜெரி ஆண்டிக்கு ரொம்ப வலிக்குதாப்பா… அவங்க என்கிட்ட பேச மாட்டுறாங்க” என்று சொல்ல, அர்ஜுனுக்கு தான் என்ன சொல்வது என்று தெரியவில்லை.

பின், விடாமல் சஞ்சு “விது சித்தப்பாக்கு தலைல பெரிய்ய்ய்ய கட்டுப்பா” என்று சொன்னவன்,

“உதி அத்தை என்னை பார்க்கவே மாட்டுறாங்க. துருவ் அங்கிளும் என்கிட்ட பேசமாத்துறாங்க” என்று அவனை யாருமே கண்டுகொள்ளவில்லை என உதட்டை பிதுக்கி அழுகுரலில் கூற, அர்ஜுன் அவனை வாரி அணைத்து,

“எல்லாருக்கும் அடி பட்டுருக்குல்ல சஞ்சுமா… அதான், யாரும் உன்னை கவனிக்கல. நீங்க குட் பாயா வீட்ல இருப்பீங்களாம். எல்லாரும் வீட்ல வந்து உன்கூட பேசுவாங்க. நம்ம டாம் அண்ட் ஜெரி ஷோ கூட பார்க்கலாம்” என்று அவனை சமாதானப்படுத்த சொன்னவனுக்கு கண்ணீரே வந்து விட்டது, அனைவரையும் நினைத்து.

மீரா, அர்ஜுனை சமாதானப்படுத்தி, வீட்டினரையும், சமன்படுத்தி வீட்டிற்கு அனுப்பினாள்.

விதுன் ஆபத்து கட்டத்தை தாண்டியதும், கரண் அனுவை கட்டாயப்படுத்தி வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டார். அவள் எவ்வளவோ கெஞ்சியும் அவர் கேட்கவே இல்லை.

விதுன் கண் விழித்ததும், அவன் கண்கள் அவளைத் தான் தேடி அலைபாய்ந்தன.

அஜய் வேகமாக அவன் அருகில் வந்து “இப்போ ஓகே வா டா.” என்று கேட்க, அவன் தலையை ஆட்டி மீண்டும் அவன் பின்னே தேடினான்.

அஜய் “என்னடா ஏதாவது வேணுமா” என்று கேட்க,  அவன் ஒன்னும் இல்லை என தலையாட்டி மற்றவர்களை பற்றி விசாரித்து விட்டு கண்ணை மூடி கொண்டான்.

அஜய்க்கு தான் என்ன ஆச்சு இவனுக்கு என்று புரியாமல் யோசித்தான். இந்த கலவரத்தில் யாருமே அனுவை கண்டுகொள்ளவில்லை.

சில மணி நேரம் கழித்து, உத்ரா கண் விழித்ததைப் பார்த்த துருவ்.. “ஹனி ஹனி… எப்படிடா இருக்கு இப்போ.” என்று கேட்க,

அவள் “எனக்கு ஒன்னும் இல்லை துருவ்” என்று மெலிதாய் சொன்னதும், துருவிற்கு தான் உடலெல்லம் நடுங்கியது சிறிது நேரம் முன்பு மருத்துவர் சொன்னதை  கேட்டு…

இன்னும் இரண்டு நிமிடம் அதை சுவாசித்திருந்தால், அவள் எப்பொழுதுமே மயக்கத்தில் தான் இருந்திருப்பாள் என்றும், மேலும், போதை மருந்து கொடுத்தால் மட்டுமே உயிர் வாழ்ந்திருக்க முடியும் என்று சொன்னதில், அவனுக்கு இதயமே பதறியது.

இப்போது அதை நினைக்க, அவன் நடுங்கியதை கண்ட உத்ரா, “துருவ் எனக்கு ஒன்னும் இல்ல” என்று அவனை சமாதானப்படுத்த, அவன் அருகில் வந்து அவள் கையில் படுத்து அவளை கட்டி கொண்டு, அழுதான்.

“உன்னை மறுபடியும் தொலைக்க பார்த்துட்டேன் உதி. என் உயிரே எங்கிட்ட இல்லடி…” என்று கலங்க,

உதி, அவனை அணைத்து “அச்ச்சோ அதான் நான் திரும்ப வந்துட்டேன்ல. நீங்க இருக்கும் போது என்னை யாராலயும் எதுவும் பண்ணமுடியாது துருவ்.” என்று சொல்ல, அவன் அவளை விடவே இல்லை.

உத்ரா, “துருவ்…” என்று அழைக்க, அவன் பதில் பேசாமல் இருக்கவும், “துருவ்” என்று மீண்டும் அழைத்தாள்.

அவன் நிமிர்ந்து அவளைப் பார்த்து விட்டு, மீண்டும் அவள் நெஞ்சிலேயே புதைந்து கொள்ள, அவள் அவன் முடியை பிடித்து, தலையைத் தூக்கி, “டேய் புருஷா?” என்று கண்டிப்பான குரலில் அழைக்க, சிறு குழந்தையாய் அவளை பாவமாக பார்த்தான்.

“இந்த அப்போ அப்போ அப்பாவியா பார்க்குற மூஞ்சியை எங்க இருந்துடா வாங்குன…” என்று உத்ரா குறும்பாக கேட்க, அதில் அவளை முறைத்தவன்,

அவள் கழுத்தில் முகத்தை புதைக்க, அதில் திணறியவள், “புருஷா கூசுதுடா” என்று சிணுங்கினாள்.

அதில் சிரித்தவன், மேலும் சிணுங்க வைத்தான்.

சிறிது நேரம் கழித்து அவள் மற்றவர்களைப் பற்றி விசாரிக்க, அவன் சொன்னதும், மூவரையும் நினைத்து கண் கலங்கினாள். உடனே மூவரையும் பார்க்க வேண்டும் என்று சொல்ல, விதுன் அறைக்கு அழைத்து சென்றான்.

அங்கு விது, “உதி உனக்கு ஒன்னும் இல்லைலடா “என்று கேட்க, அவள் “அண்ணா” என்று அணைத்து கொண்டு அழுக,

அவன் “ஹே என்ன இது அழுதுகிட்டு… லேசான அடி தான் உதி.” என்று அவள் உச்சந்தலையில் முத்தமிட, அவள் அவன் காயத்தை கண்டு மீண்டும் அழுதாள்.

“ப்ச், உதி நான் தான் சொல்றேன்ல, பிஞ்சு மண்டை. அதான் லேசா அடிக்கவும் உடைஞ்சுருச்சு..” என்று சிரிப்புடன் கூறி, அவளை மேலும் பேசி சிரிக்க வைத்தான்

இதை எல்லாம் கை கட்டி பார்த்திருந்த துருவ்,பின், அர்ஜுனை பார்க்க அழைத்து செல்ல, அங்கு அர்ஜுன் மீரா மடியில் படுத்து கொண்டு கதை பேசி கொண்டிருக்க, மீரா, அவனுக்கு ஸ்பூனில் எதையோ ஊட்டி விட்டு கொண்டிருந்தாள்.

உத்ரா, உள்ளே சென்றதும், “டேய் இந்த ரணகளத்துளையும் உனக்கு ஒரு கிளுகிளுப்பு கேட்குது” என்று நக்கலடிக்க, மீரா இவர்களை பார்த்து அவசரமாய் எழுந்திருக்க போனாள்.

அர்ஜுன் அவளை விடாமல், “உங்களை விட கம்மி தான்…” என்று கேலி செய்தவன், “ஆனாலும், ஹாஸ்பிடல்ல இருந்துகிட்டு ஒரே பெட்ல படுத்துகிட்டு ரொமான்ஸ் பண்றதுலாம் கொஞ்சம் ஓவர் தான்” என்று கிண்டலடித்தான்.

சிறிது நேரம் முன்பு உத்ராவை பார்க்கலாம் என்று அவள் அறைக்கு வந்து நடந்ததை பார்த்து விட்டு சத்தமில்லாமல் வெளியில் சென்று விட்டான்.

இதில் உத்ரா தான் சிவந்து போனாள். பின் இவனுக்கு எப்படி தெரியும் என்று முழித்து துருவை பார்க்க,

அவன் “உனக்கு என்னடா வந்துச்சு. நான் இங்க கூட ரொமான்ஸ் பண்ணுவேன்” என்று அவள் இடையை அவன் புறம் இழுக்க, உத்ரா பதறி தலையில் அடித்து கொண்டு, “விவஸ்தை கெட்டதுங்க…” என்று திட்டியபடி சுஜியை பார்க்க போனாள்.

அவளை பார்க்க, விதுனும் அர்ஜுனும் வர, அஜயைத் தவிர அனைவரும் அங்கு குழுமினர்.

உத்ரா, அவளைப் பார்த்து கண் கலங்கி, “சாரி சுஜி” என்று சொல்ல, அவள் இவளை முறைத்தாள்.

“உனக்கு ஒன்னும் இல்லைல” என்று சைகையிலேயே கேட்க, அவள் கண்ணீருடன் இல்லை என்று தலையாட்டினாள்.

விதுன் அவர்களை இயல்பிற்கு கொண்டு, வர, “இந்த வில்லனுங்க பண்ணுன ஒரே நல்ல காரியத்துனால கொஞ்ச நாளைக்கு உன்னோட மொக்கைல இருந்து தப்பிக்கலாம்” என்று நக்கலடிக்க, சுஜி, அவர்களை புரிந்து கொண்டு லேசாக சிரித்தாள்.

ஆனால், அவளின் அப்பா வந்து, அவளை உடனே வீட்டிற்கு அழைத்து செல்கிறேன் என்றும் இனிமேல் ஃப்ரெண்ட் மண்ணாங்கட்டி என்று அவளிடம் யாரும் பேச வேண்டாம் என்றும் அவர்களை வெளியில் அனுப்ப முயல,

உத்ரா, “அங்கிள்…” என்று பேசவருவதை கேட்காமல்,

“நீ பேசாத… உன்னால தான் இவ்வளவு பிரச்சனையும்… பொம்பளை பிள்ளையா அடக்க ஒடுக்கமா இருக்காம ஊர்ல இருக்குறவங்ககிட்ட எல்லாம் பிரச்சனை இழுத்து, அதுல என் பொண்ணையும் இழுத்து விட்டு கொலை பண்ண பார்த்திட்ட. இப்போ பாரு… எப்படி என் பொண்ணு ஊமையா இருக்காள்னு… அவளுக்கு மட்டும் பேச்சு வரல உன்னை சும்மாவே விடமாட்டேன்” என்று கத்த, உத்ரா அதிர்ந்து போனாள்.

 துருவிற்கு கட்டுக்கடங்காமல் கோபம் வந்து, அவர் சட்டையை பிடித்தான். உத்ரா அவனைத் தடுத்து, அமைதியாய் இருக்க சொல்ல,

அர்ஜுன், “அங்கிள் அவளுக்கு ஒன்னும் இல்ல. காயம் சரியாகவும் பேச ஆரம்பிச்சுடுவாள்…” என்று சொல்வதை எல்லாம் காதில் வாங்கவே இல்லை.

உத்ராவும், “அங்கிள் என் மேல தான உங்களுக்கு கோபம்… அவள் அஜயை லவ்” என்று சொல்லவருவதற்குள் அவர் கை எடுத்து கும்பிட்டு,

“உங்க குடும்பத்தோட சங்காத்தமே வேணாம். என் பொண்ணை விட்டுடுங்க. இனிமே நீ அவளை பார்க்கவே கூடாது. அவளும் உன்னை பார்க்க வரமாட்டா…” என்று சொல்ல, சுஜி, அப்பா என்று கையை தூக்கி அழைத்தாள்.

அவர், வா போகலாம் என்று அவளை அழைக்க, அவள் இல்லை என்று தலையாட்டினாள்.

அப்பொழுது அஜய் உள்ளே வந்து நடந்ததை பார்க்க, உத்ரா, “அஜய் நீ பேசு. அவரு சுஜியை கூட்டிட்டு போறேன்னு சொல்றாரு” என்றாள்.

அஜய் “அவள் போகட்டும்” என்று சொல்ல, சுஜி, அவனை பாவமாக பார்த்தாள்.

விது “டேய் என்னடா சொல்ற” என்றதும், “அவள் போகட்டும்ன்னு சொன்னேன். கூட்டிட்டு போங்க சார் உங்க பொண்ணை” என்றவன் சுஜியை பார்க்காமல் வேறு புறம் திரும்பி கொள்ள,

அவர் சுஜியை “உனக்கு அப்பா அம்மான்னு நாங்க வேணும்னா எங்க கூட வா இல்லைன்னா அவங்களோடயே போய்டு” என்று சொல்ல, அவளுக்கு தான் என்ன செய்வது என்று தெரியவில்லை.

அஜயையே பார்த்தவள்,பின் உத்ராவை பார்த்து “சாரி” என்று வாய் அசைத்து விட்டு, அவர்களுடன் சென்று விட்டாள்.

உத்ரா கடினமாக, “அந்த மூணு பேரும் எங்க துருவ்” என்று கேட்க,

அவன் “நம்ம கிட்ட தான் இருக்காங்க” என்று சொல்ல, “நான் பார்க்கணும் ரைட் நொவ்” என்று கண்ணில் கோபத்துடன் கூற, துருவ் யோசித்து விட்டு, அவளை அழைத்து சென்றான். அங்கு, மூவரையும் தலைகீழாக கட்டி தொங்க விட்டிருந்தான் துருவ்.

பின், அவர்களை இறக்க சொல்லி விட்டு, உத்ரா கோபம் தீரும் வரையில் அவர்களை அடி பின்னி எடுத்தாள்.

துருவ் “உதி விடு நான் பார்த்துக்கறேன். நீ ஸ்ட்ரைன் பண்ணாத” என்று சொன்னதை கேட்காமல், அவர்களை அடித்து விட்டு அமர்ந்தவள், துருவிடம், ரித்திஷையும், கிருபாவையும் பார்த்து,

“இவனுங்கள உயிரோட விட்றதும் விடாததும் உங்க இஷ்டம். ஆனால்… அப்படி இவனுங்க உயிரோட இருந்தா, வாழ்நாள்ல யார்கிட்டயும் இவனுங்க பேசவே கூடாது…” என்று தீர்க்கமாய் சொல்ல, துருவ் அவள் சொன்னதை அவள் முன்னேயே செய்து முடித்தான்.

உறைதல் தொடரும்…
-மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
35
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.