Loading

தெம்மாங்கு 32

 

உடல் பாகங்களை இனி ஒட்ட வைக்க இயலாது என்று மருத்துவர்கள் கையை விரித்து விட, தன் நிலை தெரியாமல் மயக்கத்தில் இருந்தான் கருப்பன். மகன் நிலையைக் கேட்டவர் மாரடைப்பில் படுத்து விட்டார். அவருக்கான சிகிச்சை தொடர்ந்து நடந்து கொண்டிருக்க காளியைச் சந்திக்கச் சென்றிருந்தார் பேச்சியப்பன்.

 

“யார் பண்ணதுன்னு கண்டுபிடிச்சீங்களா அய்யா.”

 

“ம்ம்…”

 

“யாரு?”

 

‘என் மகன் தான்’ 

 

உள்ளுக்குள் நினைத்தவர் அதை வெளியில் செல்லாமல், “அது உனக்குத் தெரியணும்னு அவசியம் இல்ல. எனக்கு ஒரு உதவி மட்டும் பண்ணு காளி.” கேட்டார்.

 

“என்னங்கய்யா… உதவி அது இதுன்னு. இதைப் பண்ணுடான்னு சொல்லுங்க, பண்றேன். எனக்கு எவ்ளோ பெரிய உதவி பண்ணி இருக்கீங்க.”

 

“கருப்பனை இப்படிப் பண்ணது நீதான்னு சொல்லிச் சரணடைஞ்சிடு.”

 

“அய்யா”

 

“உன்ன விட்டா இப்போ எனக்கு உதவி செய்ய யாரும் இல்ல காளி. இதுக்காக என்ன வேணும்னு கேளு. என் சொத்து மொத்தமாக இருந்தாலும் கூட எழுதித் தரேன்.”

 

“அதெல்லாம் வேண்டாங்கய்யா. நான் செய்ய நினைச்சதை எவனோ ஒருத்தன் செஞ்சுட்டான். என்ன, உசுர எடுத்திருந்தா இன்னும் சந்தோஷமா ஜெயிலுக்குப் போய் இருப்பேன்.”

 

‘எடுத்திருந்தா கூட இவ்ளோ வலிச்சிருக்காது. என் மகன் சாமர்த்திய சாலின்னு புரிய வச்சிட்டான்.’

 

“அய்யா…” என உசுப்பிய பின் நிகழ்வுக்கு வந்தவர், “யார் எப்படிக் கேட்டாலும், நீ தான் பண்ணன்னு சொல்லணும் காளி. உன் பொண்ணு படிப்புச் செலவுல இருந்து, கல்யாணச் செலவு வரைக்கும் எல்லாம் என்னோட பொறுப்பு. அது மட்டும் இல்ல, எனக்குச் சொந்தமான நிலத்தை உன் பொண்டாட்டி பேருக்கு மாத்தித் தரேன். கொஞ்ச நாள் போகட்டும், இதுல இருந்து உன்னை மொத்தமா வெளிய எடுக்கப் பார்க்கிறேன்.” 

 

“இதெல்லாம் நீங்க எனக்குச் செய்யப் போறீங்கன்னு பழிய ஏத்துக்கல. என் பொண்டாட்டி பிள்ளைக்கு ஒரு அநியாயம் நடக்கும் போது தப்புன்னு துணிந்து நின்னீங்க பார்த்தீங்களா, அந்த நல்ல மனசுக்காகத்தான் ஏத்துக்கிறேன்.” 

 

காவல் நிலையத்திற்குச் சென்ற காளி, தன் மனைவியைத் தொந்தரவு செய்ததால், ஜாமீனில் வெளிவந்து இதைச் செய்தேன் என்று தானாக ஒப்புக் கொண்டான். விஷயம் தீயை விட வேகமாகப் பரவியது. தகவலைக் கேட்ட பவானி தலையில் அடித்துக் கொண்டு, 

 

“அப்பவே தலப்பாடா அடிச்சுக்கிட்டேன். இந்த மாதிரி கேடுகெட்ட வேலையைச் செய்யாதடான்னு. அந்த உத்தமன், அன்பு ஆத்மா சும்மா விடுமா. அப்பா, பிள்ளை ரெண்டு பேரையும் இப்படிப் படுக்க வச்சிடுச்சே.” கதறினார்.

 

பொன்ராசுக்கு ஆஞ்சியோ நடைபெற்றது. பலத்த சிந்தனையோடு வெளியில் அமர்ந்து கொண்டிருந்தார் பேச்சியப்பன். முதலில் யார் என்று மூளையைப் போட்டுக் குடைந்தவர், மகனை நினைக்கவே இல்லை. நேரம் கடந்து கருப்பனுக்கு இப்படிச் செய்யும் அளவிற்கு, யார் எதிரி என்று ஆராய்ந்தவர் எண்ணத்தில் முதலும் கடைசியுமாக மகன் மட்டுமே வந்து நின்றான்.

 

அப்போதும் அவர் மனம் நம்ப மறுத்தது. எதுவும் வேண்டாம் என்று ஒதுங்கி இருப்பவன் இதைச் செய்திருக்க வாய்ப்பே இல்லை என்று நம்பினார். இன்ஸ்பெக்டர் சொன்ன செய்தியில் தான் குமரவேலன் என்று கண்டு கொண்டார். கருப்பன் சம்பவம் தொடர்பாக மோப்ப நாயை உலாவ விட, அது சரியாக அன்புக்கரசனைக் கொலை செய்த இடத்தைச் சுற்றி வந்தது. 

 

உடல் நடுநடுங்க உறைந்து போனவரிடம், என்ன செய்யலாம் என்று இன்ஸ்பெக்டர் கேட்க, “எக்காரணம் கொண்டும் என் மகன் பேரு இதுல வரவே கூடாது. நான் சொல்ற மாதிரி கேஸை முடிச்சு விடு.” என்றவர்தான் காளியை ஒப்புக்கொள்ளச் சொன்னார்.

 

அவருக்குள் பல கேள்விகள். எப்படிக் காளி கடத்திச் சென்றது அவனுக்குத் தெரியும்? அங்கிருந்து அவனுக்குத் தெரியாமல் எப்படிக் கொண்டு சென்றான்? சின்னத் தடயம் கூட இல்லாமல் இவ்வளவு பெரிய சம்பவத்தை நடத்தியவன், ஒன்றுமே நடக்காது போல் தன் வேலைகளைக் கவனிக்க, எங்கிருந்து துணிவு வந்தது என்றெல்லாம் யோசித்து மகனிடம் தோற்றுப் போனார். 

 

***

விஷயம் அறிந்ததிலிருந்து குமரவேலன் மீது கடும் சினத்தில் இருக்கிறாள் தேனிசை தேவி. அவன் பேச்சிற்குப் பதில் கொடுக்காமல், முகத்தைத் திருப்பி வைத்துக் கொண்டாள். எல்லா வேலைகளையும் முடித்தவன், 

 

“சாப்பாடு எடுத்து வச்சிருக்கேம்மா, சாப்பிட்டுட்டு மாத்திரை போடு.” என்றிட வெளித் திண்ணையில் அமர்ந்து கொண்டிருந்தவள் சடாரென்று முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள். 

 

“என்னம்மா உன் பிரச்சனை?”

 

“எனக்கு என்ன பிரச்சனை?”

 

“அப்புறம் ஏன்மா மூஞ்சிய இப்படி வெச்சிருக்க?”

 

“என் மூஞ்சியே இப்படித்தான்”

 

“அது தெரியும்!” என்றவனை மூன்றாம் கண் திறந்து முறைக்க, “ஹா… ஹா…” எனச் சிரித்தான்.

 

“மனுசனாடா நீ?”

 

“சந்தேகமாதா இருக்கு!”

 

“கடுப்பேத்தாம கிளம்பிடு.”

 

“சரிம்மா, நான் மதியம் வர லேட் ஆகும்.”

 

“மத்த நாளை விட இன்னைக்கு ரொம்ப ஜாலியா இருக்க. எங்க ஊர் சுத்தப் போற?”

 

“ஊர் சுத்தப் போலமா, உன் அண்ணனப் பார்க்கப் போறேன்.”

 

அதிர்வு தாங்காது எழுந்து நின்றவள் தன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு, “ஹான்!” என்றிட, “பாவம்! கை கால் இல்லாம இருக்கானாமே… பார்த்துட்டு வரலாம்னு.” என்றான்.

 

“மரியாதையா என் கண்ணு முன்னாடி நிக்காமல் போயிடு.” 

 

“ம்ம்…” என நகைத்தவன் அன்புக்கரசனின் வாகனத்தில் ஏறி அமர்ந்து, “நீயும் வரியாம்மா, ஆஸ்பத்திரி வரைக்கும் போயிட்டு வந்துடலாம்.” கேட்க, அடிக்க ஏதாவது கிடைக்கிறதா என்று தேடினாள்.

 

“ஹா ஹா…”

 

என்றும் இல்லாத திருநாளாக, இன்று மிக மகிழ்வுடன் காணப்பட்டவனைப் பார்க்க எரிச்சல் முட்டிக்கொண்டு வந்தது. அந்த எரிச்சலில் சாப்பிட மறந்தவள், கடுகடுப்போடு அமர்ந்திருக்க காமாட்சி பார்க்க வந்திருந்தார். தான் வந்ததைக் கூட அறியாமல், ஏதோ சிந்தனையில் இருப்பவளை உசுப்பியவர், “விஷயம் தெரியுமா?” என்று கேட்டார்.

 

“ம்ம்…”

 

“குமரன் எங்க?”

 

“இப்ப தான் கிளம்புனாங்க”

 

“ஏதாச்சும் சொன்னானா? குமரன் தான் இதைப் பண்ணி இருப்பான்னு நாங்களும் சந்தேகப்பட்டோம். அப்புறம்தான், அன்புவக் கொலை பண்ணவன் பண்ணதா செய்தி வந்துச்சு.” 

 

“யாரு இவரா… அவனுக்கு என்ன நடந்தா, எனக்கு என்னன்னு சொல்லிட்டுப் பார்க்கப் போயிருக்காரு.”

 

“அப்படியா?” 

 

“ஆமா. இந்த லட்சணத்துல இவர்தான் குத்தப் போறாரு.”

 

“இப்பதான் நிம்மதியா இருக்கு. நேத்து ராத்திரி குமரன் மாதிரி யாரோ போறதைப் பார்த்திருக்காரு. அவன்தான் இதைச் செஞ்சுட்டான், இப்படிப் பண்ணிட்டானேன்னு புலம்பிக்கிட்டே இருந்தாரு.” 

 

அதுவரை கோபத்தில் இருந்தவள் சட்டென்று புருவம் நெறிய, நேற்று இரவு திடீரென்று கண் முழித்துப் பார்க்கும் பொழுது குமரன் இல்லாதது நினைவிற்கு வந்தது. கழிவறை சென்றிருப்பான் என்று உறங்க ஆரம்பித்தவள் அடுத்த முறை கண் விழிக்கும் பொழுதும் அவன் இல்லை. 

 

நேரத்தைப் பார்த்தவள், அப்படியே விழித்தபடி படுத்துக் கொண்டிருக்க, சிறிது நேரம் கழித்து வந்தான். எங்குச் சென்றாய் என்ற விசாரித்ததற்கு, அவள் முகம் பார்க்காமல் இயற்கை உபாதைக்குச் சென்று வந்தேன் என்று சொல்லியவன், அன்புக்கரசன் புகைப்படத்தைப் பார்த்தபடி அமர்ந்து கொண்டான். அந்நேரம் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாது உறங்கி விட இப்போது பெரிதாகத் தெரிந்தது.

 

***

 

“ஹலோ”

 

“சொல்லும்மா…”

 

“எங்க இருக்க?”

 

“இப்பதான் வேலைய முடிச்சேன். ஆஸ்பத்திரிக்குப் போகக் கிளம்பிட்டு இருக்கேன்.”

 

“உடனே வீட்டுக்கு வா…” 

 

“எதுக்கும்மா?”

 

“வீட்டுக்கு வா, சொல்றேன்.”

 

அழைப்பைத் துண்டித்த பத்து நிமிடத்தில் வீட்டிற்குள் வந்து நிற்க, “கருப்பன நீ தான் இப்படிப் பண்ணியா?” சுற்றி வளைக்காமல் நேரடியாகக் கேட்டாள்.

 

“ஹா ஹா… என்னம்மா சொல்ற, நான் எப்படி?”

 

“பொய் சொல்லாத.”

 

“நிஜமா நான் இல்லம்மா”

 

“அப்போ ராத்திரி எங்க போயிருந்த?”

 

“வயித்தக் கலக்கி விட்டுடுச்சும்மா. அடிக்கடி எழுந்து போக முடியலன்னு வெளிய உக்கார்ந்துட்டேன்.”

 

“அன்பு மேல சத்தியமா…”

 

முகத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றாலும், கண்கள் ஒரு நொடி அதிர்வைப் பிரதிபலித்து, “சத்தியமா நான் பண்ணல.” என்று விட, அவனையே முறைத்துக் கொண்டிருந்தாள்.

 

“சத்தியம் பண்ணியும் நம்ப மாட்டியாம்மா.” 

 

“உன் கண்ணு பொய் சொல்றன்னு சொல்லுது.”

 

“அன்பு மேல எப்படிப் பொய் சத்தியம் பண்ணுவேன்?” 

 

“அதான் சந்தேகமா இருக்கு.”

 

“நான் தான் பண்ணேன்னு ஒருத்தன் போலீஸ் ஸ்டேஷன்ல உட்கார்ந்து இருக்கான். அவனுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் இருக்கு? அவன் என்னைக் கொல்ல வந்து அன்புவக் கொன்னவன். அவன் எப்படி நான் பண்ணதை அவன் பண்ணான்னு சொல்லி சரண்டர் ஆவான்?” 

 

எதுவும் பேசாமல் தன்னிடத்தில் அமர்ந்து கொண்டாள். தப்பித்தால் போதும் என்று குமரன் அங்கிருந்து நழுவப் பார்க்க, “நில்லு!” என்றாள்.

 

சொன்னதும் நின்றவனைப் பக்கத்தில் வருமாறு அழைக்க, முழி இரண்டும் வலது, இடமாகச் சென்று குழம்பியது. அந்தத் திருட்டு முழியைக் கண்டுகொண்டு மீண்டும் கையசைக்க, பெரும் சம்பவத்தை நிகழ்த்தியவன் ஒன்றும் அறியாத பிள்ளை போல் பாவமாக அவள் பக்கத்தில் அமர்ந்தான். 

 

“கடைசியா கேட்கிறேன், உண்மையச் சொல்லு.” 

 

“எத்தனை தடவை கேட்டாலும் நான் இல்லம்மா.” 

 

“குழந்தை மேல சத்தியம் பண்ணிச் சொல்லு.” 

 

ரௌத்திரம் பொங்கும் முகத்தோடு அவளை ஏறிட்டவன் பல்லைக் கடித்துக் கொண்டு, “பைத்தியக்காரி! குழந்தை மேல சத்தியம் பண்ணச் சொல்ற. இல்லன்னு சொல்லிட்டா நம்பனும். இன்னொரு தடவை இந்த மாதிரிக் கிறுக்குத்தனமா குழந்தை விஷயத்துல பேசாத. எல்லா நேரமும் அமைதியா இருக்க மாட்டேன்.” என எழுந்தவன் கையைப் பிடித்தாள் தேனிசை தேவி.

 

இதுதான் முதல் முறை, குமரனைத் தொடுவது. தன் கைப்பிடித்ததை நம்ப முடியாமல், உறைந்து போனவன் உள்ளத்தில் இருந்த கோபம் தளர்ந்தது. மெல்ல அவள் பக்கம் பார்வையைத் திருப்ப, உட்காரக் கையை இழுத்தாள். காற்றாக அவள் பக்கத்தில் அமர்ந்தவன் இமைக்காது பார்த்திட, பிடித்த கையை விடாமல் இருந்தவள் அவன் விழிகளை ஆழமாகப் பார்த்து, 

 

“இப்பச் சொல்லு!” என அந்தக் கையை வயிற்றில் வைத்தாள்.

 

உடல் என்னவோ செய்தது. உள்ளம் பொங்கி வழிந்து தனக்குள் அடங்கிப் போனது. அப்படியே அவன் உடலை வானத்திற்குள் தூக்கி அடித்து, மீண்டும் தரையில் விழ வைத்த உணர்வு. ஆழமான தண்ணீருக்குள் தலையைப் பிடித்து அழுத்தியது போன்று இருந்தது. உடலில் ஓடிக்கொண்டிருந்த ரத்தம் உறைந்து உணர்வை இழந்தது. உள்நாக்கு போல் பெரிய நாக்கும் வாய்க்குள் மறைந்து போனது. அத்தனைப் போராட்டங்களைத் தனக்குள் சந்தித்தவன் கண்கள் உயிர்ப்போடு கண்ணீர் சிந்தியது. 

 

“நான் தான் பண்ணேன்.” 

 

அவன் சந்தித்த அத்தனைப் போராட்டங்களையும், இப்பொழுது தேனிசை தேவி சந்தித்தாள். மூச்சு முட்டுவது போன்று இருக்க அவன் கையை விட்டவள், வயிற்றில் கை வைத்துக் கொண்டு மூச்சு வாங்க ஆரம்பித்தாள்‌. அவள் நிலையை அறியாது அப்படியே உறைந்து அமர்ந்திருக்க, அழுத்தம் தாங்காது கர்ப்பப்பை நீர் உடைந்து வெளியேறியது. 

 

“குமரா…” 

 

தன்னைத் தொலைத்து உறைந்திருந்தவன், உசுப்பியவளின் செயலில் நினைவு திரும்பிட, “பனிக்குட நீர் உடைஞ்சிடுச்சு. உடனே ஆஸ்பத்திரி போகணும்.” என்றாள் பல்லைக் கடித்து. 

 

தட்டுத் தடுமாறி, தன் முன்னால் இருப்பவளின் நிலையைத் தாமதமாக உணர்ந்தவனுக்கு நடுக்கம் ஏற்பட்டது. என்ன செய்வதென்று தெரியாமல் தத்தளித்தவன், ஒரு வழியாகத் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு, கார் ஓட்டுனரை அழைக்க, பத்து நிமிடத்தில் வருவதாகக் கூறினார். 

 

மறைந்த இருவரின் முன்பு நின்றவன், நல்லபடியாகக் குழந்தை பிறக்க வேண்டும் என்று வேண்டுதல் வைத்து அவளுக்குத் தேவையான அனைத்தையும் எடுத்து வைத்தான். பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் பனிக்குட நீர் பாதியளவு வெளிவந்துவிட்டது. அதை நன்றாக உணர்ந்தவள் எழுந்து நின்ற உடனே தண்ணீர் ஊற்றியது.

 

பயம் தொற்றிக் கொள்ள, “குமரா…” என்றழைத்தாள்.

 

பயத்தில் இருவருக்கும் கண்ணீர் வந்தது‌. அவளைத் தாங்கிப் பிடித்தவன், எடுத்து வைத்த துணிகளையும் கையில் எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேற இருவரும் ஒன்றுபோல் அன்புக்கரசனைத் திரும்பிப் பார்த்தார்கள். சிரித்த முகமாகத் துணைக்கு வரத் தயாரானவனை முழுதாக நம்பியவர்கள் காரில் ஏறி அமர்ந்தார்கள். 

 

***

 

மருத்துவமனை வாசலில் கால் வைத்ததும் வலி வந்து விட்டது. அதிகரிக்கும் பிரசவவலியைத் தாங்க இயலாது தவித்தவளைத் தனக்குள் வைத்துக் கொண்டு தாங்கி நடந்தான். மெத்தையில் படுத்தவளைப் பரிசோதித்தார் மருத்துவர். பிரசவ வலியை விடக் கொடுமையானது பிரசவத்திற்கு முன் நடக்கும் நடைமுறைகள். பிறப்புறுப்பில் பரிசோதிக்கும் மருத்துவரைக் கட்டுப்படுத்த முடியாது வாய் விட்டுக் கதறினாள். 

 

வெளியில் இருந்தவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது அந்தச் சத்தத்தில். அறை வாசல் முன்பு நின்றவன் மறைந்திருக்கும் திரையை எட்டிப் பார்க்க முடியாது தவித்துக் கொண்டிருக்க, “குழந்தையோட ஹார்ட் பீட் செக் பண்ணுங்க.” என்றவாறு வெளியே வந்தார் மருத்துவர்.

 

“தண்ணி மொத்தமும் வெளிய வந்துடுச்சு சார். இப்பதான் வலி வருது. குழந்தையோட ஹார்ட் பீட் செக் பண்ணச் சொல்லி இருக்கேன். கொஞ்ச நேரம் பார்க்கலாம்.” 

 

முதல் பிரசவத்தில், துணைக்கு ஆள் இல்லாமல் பரிதவித்தவளுக்குச் சுத்தமாகத் தெம்பு இல்லை. பயத்தில் தன் நிலையை இழக்க ஆரம்பித்தவள் வலியைக் கட்டுப்படுத்த முடியாமல் கூச்சலிட்டாள். குழந்தையின் இதயத் துடிப்பைப் பரிசோதிக்க, வயிற்றில் பசையைத் தடவிய செவிலியர் குழாய்களைப் பொருத்தி இதயத் துடிப்பைக் கணக்கிட்டுக் கொண்டிருக்க, “குமரா…” சத்தமாக அழைத்தாள்.

 

“ஹான்!” 

 

ஓடி வந்தவன் கையைப் பிடித்துக் கொண்டு, “ரொம்ப வலிக்குது” என்று அழ, “ஒன்னும் இல்லம்மா, சரி ஆகிடும்.” என்றவனுக்குத் தான் அதிகமாக உதறல் எடுத்தது.

 

“பயமா இருக்கு. எனக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா குழந்தையைப் பத்திரமா பார்த்துக்க…” 

 

வேகமாக அவள் வாயை மூடியவன், “நீயும், குழந்தையும் நல்லபடியா வருவீங்க. பயமா இருந்தா அன்புவ நினைச்சுக்க. இன்னும் கொஞ்ச நேரத்துல அவன் உன் கையில குழந்தையா இருக்கப் போறான். அவனைத் திரும்பவும் பார்க்கப் போறேன். நீ தைரியமா இருந்தா தான், அன்பு எந்தக் கஷ்டமும் இல்லாம வெளிய வருவான். உன்னால முடியும். நீ ரொம்பத் தைரியமான பொண்ணு.” எனக் கையை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டான்.

 

நேரங்கள் கடக்கத் துவங்கியது. குழந்தையின் இதயத் துடிப்பைப் பரிசோதித்த மருத்துவர், குறைந்து கொண்டு வருவதாகக் கூற, கேட்ட இருவருக்கும் ஈரக்குலை நடுங்கியது. அதிலும் தேனிசை தேவி மிகவும் பயந்து பிதற்றத் துவங்க, தன்னோடு சேர்த்துக் கொண்டவன் முதுகை நீவி விட்டு ஆசுவாசப்படுத்த முயற்சித்தான். 

 

நேரங்கள் பல கடந்த பின் மீண்டும் பரிசோதித்த மருத்துவர், “வலி வருதே தவிர கர்ப்பப்பை வாய் திறக்கல சார். மருந்தும் வச்சுப் பார்த்துட்டோம். வயித்துல தண்ணி இல்லாம குழந்தையால உலாவ முடியல. ஆபரேஷன் பண்றது நல்லது. வேணாம்னு தோணுச்சுன்னா, வெயிட் பண்ணுங்க பார்க்கலாம்.” என்றிட, என்ன முடிவெடுப்பது என்று தெரியவில்லை.

 

“ஆபரேஷன் பண்ணா அந்தப் புள்ள உடம்பு தாங்குமா?”

 

“இப்ப இதெல்லாம் ரொம்பச் சாதாரணம் சார். அவங்க மனநிலையும், நார்மல் டெலிவரிக்கு ஒத்து வரல. காம்ப்ளிகேட் ஆகுறதுக்குள்ள சிசேரியன் பண்றது நல்லது.” 

 

அவள் பயப்படாதவாறு விஷயத்தைக் கூறியவன் சம்மதம் கேட்க, வலியைப் பொறுத்துக் கொண்டு தலையசைத்தாள். நல்ல நேரம் பார்ப்பதாக இருந்தால் பார்க்குமாறு மருத்துவர் உரைக்க, “என் அன்பு வரப்போற நேரம், நல்ல நேரம் தான் டாக்டர்.” என்றவன் காகிதத்தில் கையெழுத்து இட அறுவை சிகிச்சை அறைக்குள் நுழைந்தாள் தேனிசை தேவி.

 

அடுத்த பதினைந்து நிமிடத்தில் ஒரு சத்தம் கேட்டது. கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டான். மூடிய விழிகளில் இருந்து ஆற்று வெள்ளம் படையெடுக்க, உள்ளே இருந்தவளிடம் குழந்தையைக் காட்டினார்கள். அவள் இருக்கும் நிலைக்குக் கலங்க முடியவில்லை. அப்படியே தான் நேசித்தவன் போல் இருக்கும் பிள்ளையை, அள்ளி அணைக்க முடியாது மயக்கத்தில் படுத்திருந்தாள். 

 

“சார்”

 

விழி திறந்தவன் முன்பு வெள்ளைத் துணி போர்த்திய பிஞ்சு, கண் மூடிய நிலையில் பதமாகப் படுத்துக் கொண்டிருந்தது. அதையே பார்த்துக் கொண்டிருந்தவன் மீண்டும் ஆற்று வெள்ளத்தைத் தன் விழிகளில் இருந்து வெளியேற்ற, “ஆண் குழந்தை சார்…” என அவன் கையில் கொடுத்தார்கள்.

 

எம்மாதிரியான உணர்வில் தன் உள்ளம் இருக்கிறது என்பதை உணர மறந்தவன், விழி எடுக்காமல் தன் நண்பனைப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்படியே அவனை அச்சு எடுத்து இருக்கும் அவனது குழந்தை, தந்தையானவன் கையில் பதமாகத் துயில் கொள்ள, “அன்பே…” என்றவன் குழுங்கி அழுதான்.

 

மேற்கொண்டு சிகிச்சைக்காகக் குழந்தையை வாங்கிக் கொண்டு செவிலியர் சென்றுவிட சந்தானத்தை அழைத்து, “அன்பு… அன்பு வந்துட்டான் கிழவா…” என இன்ப அதிர்வு கொடுத்தவன், நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டான் சொல்லாமல் சென்றதில்.

 

அவர் பேச்சு எதுவும் காதில் விழவில்லை குமரவேலனுக்கு. மீண்டும் எப்பொழுது தன் உயிரானவனைப் பார்ப்போம் என்றே இருந்தது. நடக்க வேண்டிய அனைத்தும் நடந்து முடிந்தது தேனிசை தேவிக்கு. நீல நிறத் துணியைப் போர்த்தி முகம் மட்டும் தெரிய வெளியே வந்தவளைக் கனிவாகப் பார்த்தான். அவளுக்காக ஒதுக்கப்பட்ட அறையில் படுக்க வைத்த செவிலியர்கள் உதிரப்போக்கைக் கட்டுப்படுத்த அடையாணையை வைத்து விட்டுச் செல்ல, பாதி மயக்கத்தில் படுத்திருந்தாள். 

 

இரண்டு மணி நேரங்கள் கடந்த பின் குழந்தை தேனிசை பக்கத்தில். உணர்ந்தாலும், தலையைத் திருப்பிப் பார்க்க முடியாத நிலையில் படுத்திருந்தவள் பாதத்தைப் பிடித்தவன், 

 

“பிரசவ வலியைத் தாங்கி, ஒரு பிள்ளையப் பெத்து எடுக்கிற பொம்பளைங்களுக்கு முன்னாடி ஆம்பளைங்க நாங்க ஒண்ணுமே இல்லம்மா. வெட்டி வீராப்புக்கு நாங்க தான் ஒசத்தின்னு சொல்லிக்கிட்டு இருக்கமே தவிர, உங்க வலிய ஒரு நிமிஷம் கூட எங்களால அனுபவிக்க முடியாது. அப்படி ஒரு புனிதத்தைத் தாங்கி, ஒவ்வொரு உசுரையும் பெற்றெடுக்கிற உங்களை எவ்ளோ அசிங்கமான வார்த்தையால நோகடிக்கிறோம். 

 

ஊருக்கு முன்னாடி களங்கப்படுத்தி, உன் தாய்மையை அசிங்கப்படுத்துனதுக்காக என்னை மன்னிச்சிடுமா. இந்த நிமிஷம் உன்னப் பார்க்க அசிங்கப்படுறேன்.” எனக் காலைக் கண்ணீரால் நனைக்க, கண் அசைத்தாள். 

 

பக்கத்தில் சென்றவன் அக்கறையாக என்னவென்று கேட்க, “பார்க்கணும்” என்றாள். 

 

கண்ணீரைத் தனக்குள் உள் இழுத்துக் கொண்டவன், சிரித்த முகமாகத் தூக்கப் போகக் கைகள் நடுங்கியது. அந்த நடுக்கம் தாங்காது, செவிலியரை அழைத்து வந்தவன் தூக்கிக் காட்டச் சொல்ல, மார்பில் கால் உதைத்து முகத்தோடு முகம் சேர்த்துச் சிவந்திருக்கும் தன் உயிரைப் பார்த்து அனைத்து வலியையும் மறந்து போனாள். 

 

குழந்தையைத் தொட்டிலில் வைக்கச் சென்ற செவிலியரிடம், “நர்சக்கா, என் கையில கொஞ்ச நேரம் கொடுங்க.” கை உயர்த்திக் கேட்டான் ஏக்கமாக.

 

தன்னிடம் வந்த பூக்குவியலைப் பதமாகப் பிடித்துக் கொண்டு இருக்கையில் அமர்ந்தவனுக்கு, என்னென்ன ஆனந்தமோ! இன்று குமரவேலனை விட மகிழ்வான மனிதன் உலகத்தில் இருக்க மாட்டான். சிணுங்கும் பிள்ளையின் அசைவில் தன் முகத்தைச் சுருக்கியவன், “அன்பே!” என்றழைத்து நெற்றியில் முத்தமிட்டான்.

 

குழந்தை லேசாகக் கண்ணைத் திறக்க, “அன்பே… என்னைப் பார்க்கணுமா? இவ்ளோ நாள் எங்கடா போன… போனா விட்டிடுவேன்னு நினைச்சியா? பார்த்தியா, உன்னைத் திரும்பவும் கூட்டிட்டு வந்துட்டேன். என்கிட்ட இருந்து உன்னை யாராலயும் பிரிக்க முடியாது.” என்றவனின் ஆனந்தக் கண்ணீர் குழந்தை மீது விழத் துவங்கியது.

 

மீசை முடி குத்தாமல், அழுத்தமாகத் தன் பிள்ளைக்கு முத்தம் கொடுத்தவன், “நான் உனக்கு அப்பாவா அன்பே… என்னமோ உள்ளுக்குள்ள பண்ணுது. என்னை நானே புதுசாப் பார்க்குற மாதிரி இருக்கு. உன்னை இப்படிக் கைல வாங்கத்தான் இவ்ளோ கஷ்டத்தையும் அனுபவிச்சனா? எப்படா, குமரான்னு கூப்பிடுவ? கேட்கணும்னு ஆசையா இருக்கு. 

 

உன்னையும், என்னையும் கடவுள் நினைச்சா கூடப் பிரிக்க முடியாதுன்னு இப்போ அந்தக் கடவுளுக்கே புரிந்திருக்கும். எனக்கு நீ பிள்ளையா பிறந்து, உனக்கு நான் பிள்ளையா பிறந்து, இந்த உறவு காலம் காலத்துக்கும் தொடரும். என் அன்பு என்னை விட்டு எங்கயும் போக மாட்டான். அவனை நான் எங்கயும் போக விடமாட்டேன்.” என்றவன் பேச்சைக் கேட்டு விழிகள் கலங்கியது தேனிசைக்கு. 

 

“அழுத்தமா உன்னைக் கட்டிப்புடிச்சு அழனும் போல இருக்கு அன்பே… கொஞ்ச நேரம் பொறுத்துக்க.” 

 

பதமாகத் தன் நெஞ்சின் மேல் போட்டு அணைத்தவன் விம்மி அழ ஆரம்பித்தான். பல நாள் வலியை மொத்தமாகத் தன் நண்பனிடம் கொட்டத்தான், வைராக்கியமாக வரும் கண்ணீரை நிறுத்தி வைத்திருந்தான் போல. அவன் இட்ட சத்தத்தில் பிள்ளை அழ ஆரம்பித்தது. அவனுக்குள் உண்டான சத்தம் அப்படியே அமிழ்ந்து, “அய்யோ… அன்பே!” என எழுந்து நின்றான்.

 

இருவரையும் ஒன்றாகச் சேர்த்துப் பார்த்த தேனிசையின் மனம் நிறைந்தது. எந்தப் பிள்ளை அவனுக்கு உரிமை இல்லை என்று உரைத்தாளோ, அந்தப் பிள்ளை அவன் கையில் இருக்கும் அழகை ரசித்தாள். 

 

“நான் அழ மாட்டேன் அன்பே, நீயும் அழாத…” 

 

மயக்கம் தெளியும் வரை செவிலியரின் கண்காணிப்பில் இருந்தவள், முதல் முறையாகப் பால் கொடுத்தாள். அறுவை சிகிச்சை செய்த யாரும், உடனே எழுந்தமர்ந்து பால் கொடுக்க முடியாது. படுத்திருப்பவள் மேல் யாராவது ஒருவர் குழந்தையைப் பிடித்தபடி போட வேண்டும். தனியாக இருக்கும் இவர்களை விசாரித்த செவிலியர் அவர்களுக்கு உதவி செய்ய, விழிகள் நனைந்தது. மெதுவாகப் பிள்ளையின் தலையைப் பிடித்தவள், இத்தனை மாதங்களாகப் பட்ட வலிகளைப் பாலாகக் குறைத்தாள்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
27
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்