262 views
அத்தியாயம் 32
“கோவர்த்தனா! நாம எல்லாரும் ஒன்னா, ஒரே வீட்ல இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்?” என்று சுமதி கேட்டு விட, மகனுக்கோ அத்தனை சந்தோஷம்!
ஆனால் அதை தாயிடம் பிரதிபலிக்காமல்,
“ரொம்ப நல்லா இருக்கும் அம்மா.” என்று பிடி கொடுக்காமல் பதிலளித்தான்.
மகன் காதில் போட்டு விட்டோம் இனி இதைப் பற்றி முடிவெடுப்பான் என்று நினைத்தார் சுமதி.
ஆனால் அந்த முடிவை இவனும், இளந்தளிரும் சேர்ந்தே எடுத்து விட்டனர் என்பது தெரியவில்லை அவருக்கு.
🌸🌸🌸🌸
காதலுணர்வு எத்தனை அழகானது!
ஆம்! ஆனால் காதல் திருமணம் புரியத் போவதில்லையே அவள்?
பிறகு எப்படி காதலில் விழுந்தாள்?
ஆண் ஒருவனின் நன்னடத்தையை ரசித்தாள் அவ்வளவே! அதற்கு மதிப்புக் கொடுத்தாள்.
அவனுடைய குணாதிசயங்கள் யாவும் இவளுக்குப் பிடித்துப் போயிற்று.
கோவர்த்தனனும், இவளும் சந்தித்ததே மருத்துவமனையில், எதிர்பாராத விதமாகத் தான்!
அதற்குப் பிறகும், அவர்களுக்குள் காதல் துளிர்ந்திடவில்லை.
கோவர்த்தனன் கூட பார்த்தவுடன் காதல் வயப்பட்டதாகத் தெரியவில்லை.
ஆரம்பத்தில் இருவரும் சுபாஷினியின் நலனைப் பற்றித் தான் யோசித்தனர், முக்கியத்துவம் கொடுத்தனர்.
அதற்குப் பிறகான சந்திப்புகளில் கூட, இளந்தளிர் அவனைத் தவிர்க்கவே செய்தாள். உதவி செய்தான் என்பதற்காக அவனுடன் பேச வேண்டுமா? என்ற எண்ணம் தானே அவளுக்கு அன்றைய சூழலில் இருந்தது.
அதுவும் நல்லது தானே! வலியப் போய் பேசும் பழக்கமும் இவளுக்கு இல்லை. கோவர்த்தனனோ ஓரிரு முறைகள் பேச நினைத்தாலும், இளந்தளிரின் ஒதுக்கம் புரிந்து, ஒதுங்கி விட்டான்.
உதவி செய்ததற்காக அவளைத் தொந்தரவு செய்ய இவனுக்கு உரிமை உள்ளதா என்ன?
கண்ணியம் என்பதை விட, அதுதான் நல்ல குணமும் கூட.
அதற்குப் பிறகான நாட்களில், இருவரும் தத்தமது வேலைகளைச் செய்து கொண்டிருந்தார்களே!
ஆனால், இவர்கள் திருமணப் பந்தத்தில் இணைய வேண்டும் என்பது அவர்களைத் தவிர எல்லாருடைய விருப்பமாக இருந்தது போல, கோவர்த்தனனின் புகைப்படம் இளந்தளிரின் வீட்டிற்கு வந்து சேர்ந்தது.
எதிர்பாராமல், எதேச்சையாக நிகழ்ந்தது என்றாலும், இளந்தளிருக்கு அதைக் கண்டவுடன் கோவர்த்தனனது வேலையாகத் தான் இருக்கும் என்று சந்தேகம் எழுந்ததே!
தனக்கு விருப்பமில்லை என்பதைக் கூறியவுடன் அவளைத் தொந்தரவு செய்யாத குணம் பிடித்துப் போனதோ? என்னவோ? ஆனாலும், அவசரப்படாமல், எல்லாத் திக்குகளிலும் யோசித்துப் பார்த்தாள் இளந்தளிர்.
கோவர்த்தனனை வேண்டாம், பிடிக்கவில்லை என்று தவிர்க்க அவளிடமே எந்தவொரு காரணமும் இல்லையே!
இதையெல்லாம் கடந்து வந்து, இப்பொழுது அவர்களது திருமணம் நிகழப் போகிறது!
இனிமையே உருவான இந்நிகழ்வுகளை, மனமானது அசை போட்டுக் கொண்டிருப்பதை நிறுத்தவில்லை.
இளந்தளிருக்கு இவ்விஷயங்களை அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றியது.
இவளுக்கே இப்படி யோசிக்கத் தோன்றுகிறதே! அப்படியென்றால் கோவர்த்தனனுக்குத் தோன்றாதா?
அளப்பரிய ஆசையாய், ஆனந்தம் பொங்கும் மனதை அடக்க மாட்டாது, அனுதினமும் தன்னுடைய உயிரானவளின் எண்ணங்களை உள்ளக்கிடங்கில் சேமித்து வைத்துக் கொண்டே இருக்கிறான்.
“ஹலோ” ஆரவாரமாகப் பேசினாள் இளந்தளிர்.
அழைத்தது யாரென்று தெரிந்திருக்குமே!
கோவர்த்தனன் தான்.
“ஹாய் தளிர்… மெசேஜ்லயே பேசிட்டு இருக்கோம்னு கால் பண்ணலாம்னு நினைச்சுக் கூப்பிட்டேன்.எதுவும் டிஸ்டர்பன்ஸ் ஆக இருக்கா?” என்றான் அக்கறையுடன்.
“இல்லை கோவர்த்தனன். வீட்ல சுபா கூட தான் பேசிட்டு இருந்தேன். அவளும் தூங்கப் போயாச்சு. நைட் அவ சரியாகவே தூங்கல” என்றாள் இளந்தளிர்.
“ஓகே ஓகே.நாம ஏற்கனவே பேசி வச்ச மாதிரி, எல்லாரும் ஒரே வீட்ல இருக்கப் போறோம். அது எந்த வீடுன்னு டிஸைட் பண்ணனும்” என்றான்.
“அட ஆமாங்க!”
“எங்க வீட்ல தான் இருக்கனும்னு நான் ஃபோர்ஸ் பண்ண மாட்டேன்.நீயே சொல்லு? எங்க இருக்கலாம்?” என்று அவளது விருப்பத்தைக் கேட்டான்.
“நானுமே ஃபோர்ஸ் பண்ற ஐடியால இல்லங்க.ஒரு வீடு சொந்தமாக வாங்கவும் நமக்கு இப்போ நேரம் இல்லை.ஆனா ஒரு ஐடியா?”
“என்னது தளிர்?” – கோவர்த்தனன்.
இளந்தளிர்,”டென் டேய்ஸ் ஒரு வீட்லயும் , நெக்ஸ்ட் டீன் டேய்ஸ் ஒரு வீட்லயும் இருப்போம்ங்க. இதை வீட்ல சொல்லிப் பார்ப்போம். நாம மட்டுமே முடிவு பண்றது சரியில்லைலங்க” என்று கூறினாள்.
“ஆமா தளிர். இந்த முடிவையே நாம அவங்க கிட்ட டிஸ்கஸ் செய்துருக்கனும். நல்ல விஷயம்ன்றதால் கோபப்பட மாட்டாங்க.அதுக்காக எல்லாத்தையுமே அப்படி எடுத்துக்கக் கூடாதுல்லையா?” என்றான் அவனும்.
“நானும் யோசிச்சேன் கோவர்த்தனன்.நாளைக்கு நலங்கு ஃபங்க்ஷன் முடிஞ்சா அடுத்த நாள் மேரேஜ் தான? சோ, ஒரு நாள் வெய்ட் பண்ணலாம். ஆனா என்ன! என்னோட வாய் தான் உளறப் போகுதோன்னுப் பதட்டமாக இருக்கு” என்றாள் இளந்தளிர்.
“தளிர்… ! அப்படி எதுவும் உளறிடாத. நானும் அதை நினைச்சுத் தான் பயப்பட்றேன். இங்கே அம்மாவும் இப்போ தான் கேட்டாங்க. வாய் வரைக்கும் வந்துடுச்சு. நல்லவேளை சொல்லல” என்று கூறிட,
“வேறெந்த விஷயத்துக்கும் பதற மாட்டேங்குறோம். ஆனா இந்த விஷயத்துக்கு நல்லா பயப்பட்றோம். நாம என்ன விதமான ஜீவன்கள்ன்னு இன்னும் புரியவே இல்லை கோவர்த்தனன்” என்று கூறிச் சிரித்தாள் இளந்தளிர்.
“ஹா ஹா…! நம்ம மேரேஜே அப்படித்தான் இருக்கு தளிர். எல்லாருக்கும் இஷ்டம் இருந்தும் நாம தான் வேண்டாம்ன்னு இருந்தோம்.நம்ம இஷ்டம்ன்னு அவங்க கண்டுக்காம விட்டதுக்கு அப்பறம் தான் நமக்குப் பிடிச்சுக் கல்யாணத்தைப் பத்தி யோசிச்சோம்” என்றான் கோவர்த்தனன்.
இளந்தளிர், “நீங்க கூட விருப்பப்பட்டீங்கள்ல-ங்க. நான் தான் பிடிவாதமாக இருந்துட்டேன்” என்ற குற்ற உணர்வில் கூறினாள்.
“ப்ச்! தளிர்… அப்படியெல்லாம் இல்லை. காம் டவுன் (calm down) : (அமைதியாக இரு)” என்று அவளைச் சமாதானம் செய்தான்.
“உங்களுக்கு என் மேல வருத்தமே இல்லையா?” என்று அவள் திடீரென்று கேட்கவும்,
“இல்லையே! ஏன்?” – கோவர்த்தனன்.
“உங்களை நிறைய தடவை ஹர்ட் பண்ணியிருக்கேன். அதெல்லாம் நினைச்சுப் பார்த்தேன்”
“அதை இனிமே நினைச்சுப் பார்க்காத தளிர். ஹர்ட் பண்ணிட்டேன்னு நீயா சொல்லிட்டு இருக்காத. அதை நான் சொல்லனும்.இது வரைக்கும் நடந்த எல்லா விஷயத்திலும் உன்னோட ஒபீனியன் தான் சொல்லியிருக்க. அது எப்படி என்ன ஹர்ட் பண்ணும். உன்னை மிஸ் பண்ணிடுவேனோன்னு தோன்றி இருக்கே தவிர உன்னால எப்பவும் ஹர்ட் ஆனது இல்லை” என்று தீவிரமான குரலில் கூறினான் கோவர்த்தனன்.
அவனது வார்த்தைகள் இவளது இனிமையாக மனதை வருடியது.
“இப்போ ஒன்னு சொல்லப் போறேன்” என்று மெலிதான குரலில் கூறினாள் இளந்தளிர்.
“என்ன?” என்று ஆர்வமாய்க் கேட்டான் ஆடவன்.
“ஐ லவ் யூ கோவர்த்தனன்” என்று அடி மனதிலிருந்துக் காதலைத் தெரிவித்தாள்.
இவளது காதலை அன்று கூட மறைமுகமாகத் தானே தெரிவித்தாள். இன்றோ பகிரங்கமாக ‘உன்னைக் காதலிக்கிறேன்’ என்று உரைத்து விட்டாளே!
அன்று போல இன்றும் , கண்கள் கலங்கி விட்டது கோவர்த்தனனுக்கு.
அவளது குரலில் தெரிந்த அளவுக்கதிகமான காதலை தற்போது வெளிப்படையாகவே அறிந்து கொண்டானே!
அவளோ, காதலை வெளிப்படுத்திய குறுகுறுப்பில் ஆட் கொண்டு இருந்தாள்.
இவனோ, தன்னவள் காதல் சொல்லிய தருணத்தைக் கொண்டாடித் தீர்த்தான்.
இருவரும் மோனநிலையில் இருந்து விடுபட்டு,
இளந்தளிர், “அழறீங்களா கோவர்த்தனன்?” என்று பரிவாகக் கேட்டாள்.
“தளிர்…!”
மென்மையான வருடலான அழைப்பிலேயே புரிந்து விட்டது அவன் அழுதுள்ளான் என்று.
“கோவர்த்தனன்!” உணர்ச்சி வசப்பட்டுப் போனாள் பெண்ணவள்.
“இந்த வார்த்தைகளை எதிர்பார்த்துட்டே இருந்தேன். ஆனால் ஒருநாளும் உன்னை ஃபோர்ஸ் பண்ணி கேட்கக் கூடாதுன்னு இருந்தேன்.அவ்ளோ எதிர்பார்ப்பு எனக்குள்ளே இருந்துச்சு.மென்டலி உன்னை ஃபோர்ஸ் பண்ணிடக் கூடாது, என் கூட இருக்கும் போது, உன் மனசு லேசா இருக்கிறதை நீ உணரனும்னு நினைச்சுக் கவனமாக இருப்பேன்.இப்போ நீயா டைரக்ட் ஆக ‘ஐ லவ் யூ’ சொன்னதும் அழுகையைக் கன்ட்ரோல் பண்ண முடியல” என்று உணர்வுப் பூர்வமாக கூறினான்.
“இப்போ இன்னும் லவ் யூ சொல்லத் தோணுதே! நான் என்னப் பண்ணட்டும்?” என்று குறும்பாய்க் கூறினாள் இளந்தளிர்.
“தோணுச்சுன்னா சொல்லிடனும் தளிர்” அவனும் அதே பாணியில் பதிலளித்தான்.
“ஐ லவ் யூ…!”
மறுபடியும் காதலைச் சொல்லிக் கொண்டிருந்தாள் இன்னும் அதிகமான உற்சாகத்துடன்.
கண்மூடி ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தான் கோவர்த்தனன்.
“ஐ லவ் யூ டூ ஸ்வீட் பெப்பர்!” என்று அவளுக்காகத் தான் வைத்தச் செல்லப் பெயர் சொல்லி இப்போது தெளிவாக, தைரியமாக அவளை அழைத்தான்.
“ஹேய் கோவர்த்தனன்! இந்தப் பேரை ஏற்கனவே சொல்லி என்னைக் கூப்பிட்டு இருக்கீங்க தான?” – இளந்தளிர்.
“ஆமாம் தளிர். ஞாபகம் இருக்கா? உனக்கு கரெக்டான பேர்.ஆனா அதை அந்த நேரத்துல வச்சது தப்பு தான? ஓவர் அட்வாண்டேஜ் எடுத்துக்கிட்டேன். இப்போ கூப்பிடலாமா?”
“தாராளமாக கூப்பிடலாம்” என்று சிரித்தாள்.
“இப்படியே சந்தோஷமாக சிரிச்சுட்டு இருக்கனும்” என்று கூறி அழைப்பை வைத்தான் கோவர்த்தனன்.
“லவ் பண்ணியிருந்தா கூட இப்படி ஒரு லைஃப் பார்ட்னர் கிடைச்சு இருப்பாங்களா?”
அந்தளவிற்குக் கோவர்த்தனன் இவளது மனம் கவர்ந்து விட்டான்.
🌸🌸🌸
நேற்று அம்மா கூறியது போல், சுபாஷினி வெள்ளி மோதிரத்தைப் பற்றி அவருக்கு ஞாபகப்படுத்தினாள்.
“பீரோவில் இருக்கு அப்படியே எடுத்துட்டு வந்துரு சுபா”
அவள் கொண்டு வந்ததும், இளந்தளிரின் விரலில் மோதிரத்தைப் போட்டு விட்டார்.
ஏற்கனவே கல்யாணம் என்பதால் கழுத்தில் மற்றுமொரு தங்கச் செயின், கையில் வளையல்கள் என்று அணிந்து கொண்டு இருந்தவளுக்கு இம்மோதிரம் இன்னும் அழகு சேர்த்திருந்தது.
கல்யாணக் களை மணப்பெண் முகத்தில் அத்தனை வர்ணஜாலங்களைத் தோற்றுவித்து இருந்தது.
மங்காதப் புன்சிரிப்புடன் வளைய வந்த மகளைப் பார்க்கத் தெவிட்டவில்லைத் தாய்க்கு.
இன்று மகிழ்ச்சியில் திளைத்து விட்டதால், அதைக் கொண்டாட இனிப்புச் செய்ய எண்ணினார் சிவசங்கரி.
மூத்தவளுக்குப் பிடித்த குலாப் ஜாமூனும், இளையவளுக்குப் பிடித்த ரவா கேசரியும் மணக்க மணக்கத் தயார் செய்து அடுக்கினார்.
“நான் குலாப் ஜாமூன் மட்டும் தான் சாப்படனும். கேசரியில் கை வைக்கக் கூடாதுன்னு ரூல் போடுவியா சுபா?” என்று தங்கையிடம் பாவமாகக் கேட்டாள் இளந்தளிர்.
“ரூல் போடவே மாட்டேன் அக்கா. உனக்கு எவ்ளோ வேணுமோ, அவ்ளோ எடுத்துச் சாப்பிடு” பெருந்தன்மையுடன் கூறினாள் தங்கை.
“தாங்க்ஸ் சுபா” என்று கேசரியையும் சுவை பார்த்தாள் இளந்தளிர்.
இருவருக்கும் சேர்த்து திருஷ்டி சுற்றிப் போடுவதில் இறங்கி விட்டார் சிவசங்கரி.
நலங்கு விழாவிற்கு அனைவரும் தயாராகுங்கள்.
அதற்குப் பிறகு கோவர்த்தனன், இளந்தளிரின் திருமண வைபவம் தான்! அதையும் சிறப்பாகச் செய்து முடிப்போம்!
- தொடரும்