Loading

மனதினுள் தோன்றும் ஏக்கத்தையும், காதலையும், தவிப்பையும் சிறிதும் வெளிக்காட்ட விரும்பாத இரு உள்ளங்களும், நெருப்பாய் தகித்துக் கொண்டிருக்க, அவர்களுக்கு ஈடாய் சூரியனும் ஜொலித்தான்.

விடிந்ததுமே சுதாகர் வான்மதி முன் நின்றிருந்தான். ஆரவ், முன்பே அவளை விரும்பியதை சொல்ல வாய் வரை வந்தாலும், ஆரவின் உத்தரவின் பேரில் அதனை விழுங்கிக் கொண்டு, “வண்டு” என அழைத்தான்.

“என்ன அதிசயமா வீட்டுக்கு வந்துருக்க. இல்லனா ஆபிஸ்ல தான பார்ப்ப?” அவள் இயல்பாக பேச விழைய,

“மேடம் தான், என்னை இதுவரை கூப்பிட்டதே இல்லையே!” என்றான் குறைவாக.

“ஏன் கூப்பிட்டா தான் வருவியா?” தங்கையின் சிறு முறைப்பில் மெல்ல புன்னகைத்தவன், “ஆரவ் எங்க?” என்று வினவ, அவளும் விடிந்ததில் இருந்து அவனை பார்க்கவே இல்லை.

“தெரியல…” என்று அவனைப் பாராமல் பதில் கூற, “அவன் பாவம் வண்டு. யாரோ செஞ்ச தப்புக்கு அவனை ஏன் தண்டிக்கிற?” குற்றம் சுமத்தும் ரீதியில் அவளைப் பார்த்ததில், தமையனை அடி பட்ட பார்வை பார்த்தவள், “எனக்கும் இது தண்டனை தான் சுத்தி. ஐ மிஸ் ஹிம்…” என்றாள் கண்ணில் நீர் வழிந்தபடி.

அதில் பதறி அவளுக்கு கீழே அமர்ந்து, வான்மதியின் கையைப் பற்றிக்கொண்டவன், “ஐ நோ. யூ லவ் ஹிம் அ லாட் வண்டு. எல்லாத்தையும் மறந்துட்டு…” என அவன் பேசும் முன்னே,

“எதை மறக்க சொல்ற சுத்தி? இன்னும் கூட, எனக்கு இதை ஏத்துக்கவே மனசு வலிக்குது. என்னதான் கூட பிறக்கலைன்னாலும், உறவு முறையை மாத்த முடியாது தான. அண்ணனை டைவர்ஸ் பண்ணிட்டு தம்பிய கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு நினைக்கவே கூசுது. இதை என்னால டாலரேட் பண்ணவே முடியல சுத்தி. நான் என்ன பண்றதுன்னு எனக்கே தெரியல. ஆனா, ஐ லவ் ஹிம் அண்ணா. ஐ லவ் ஹிம் சோ மச்…” என்றவள் தேம்பியடி அவன் மீதே சாய்ந்து அழுக, சுதாகருக்கும் என்ன செய்வதென்று ஒன்றும் புரியவில்லை.

அவள் தலையை பரிவுடன் வருடியவன், மேற்கொண்டு பேசும் போது, அறைக்கதவை படாரென திறந்து கொண்டு உள்ளே வந்தாள் ஹேமா.

முந்தைய நாள் இரவு லயா அவள் வீட்டிற்கு வருவதாக குறுஞ்செய்தி அனுப்ப, அதன் பிறகு அவள் வராமல் போனதில் போன் செய்து கேட்ட போது தான், வான்மதிக்கு உண்மை தெரிந்ததும், அவள் விவாகரத்து கேட்டதும் லயா மூலம் தெரிந்து கொந்தளித்தாள்.

பொறுக்க இயலாமல், விடிந்ததுமே வான்மதியின் முன் கோபமாக நின்றவளின் விழிகள் சுதாகரை ஒரு நொடி திகைப்பாக பார்த்து விட்டு, பின், மீண்டும் வான்மதியை உறுத்து விழித்தது.

“உன் மனசுல என்னடி நினைச்சுட்டு இருக்க? பெரிய இவளா நீ? அந்த விக்ராந்த் பொறுக்கிட்ட டைவர்ஸ் கேக்குறதும் எங்க ஆரவ்ட்ட டைவர்ஸ் கேக்குறதும் ஒண்ணா உனக்கு? உன் வீட்ல என்னன்னா, அவனுக்கு உன்ன தரமாட்டேன்னு அவமானப்படுத்தி இருக்காங்க. நீ என்னன்னா, என்னமோ வார்த்தைக்கு வார்த்தை அந்த பொறுக்கி நாய் இவனோட அண்ணன் அண்ணன்னு சொல்லிட்டு இருக்க. இன்னொரு தடவை அப்படி சொன்ன வாயை உடைச்சுடுவேன்.” என்று விரல் நீட்டி எச்சரித்தவளை வான்மதி ‘பே’ வென பார்த்திருக்க, சுதாகர் “ஹேமா! மைண்ட் யுவர் வர்டஸ்…” என்றான் அதட்டலாக.

“ஐ காண்ட். அதெப்படி அவள், ஆரவை ஹர்ட் பண்ணலாம். என் ப்ரெண்டுக்காக நான் தான் பேசணும். ஏன்னா, என்னால தான் அவன் குடும்பத்தோட சண்டை போட்டான். என்னால தான் வீட்டை விட்டு வந்தான். அந்த சம்பவத்தினால தான், ஆரவ் அம்மா கூட அவன் விரும்புன பொண்ணு வீட்ல பேச முடியாதுன்னு சொல்லிருக்காங்க. எல்லாமே என்னால தான்…” கோபத்துடன் ஆரம்பித்தவள், ஆதங்கத்துடனும் கேவலுடன் முடித்திருக்க, இருவருமே அதிர்ந்தனர்.

சுதாகர் கூட நிறைய முறை கேட்டிருக்கிறான், ஏன் வீட்டை விட்டு வந்தான் என்று. ஆனால், ஒரு முறை கூட அவன் ஹேமாவினால் என்று சொன்னதில்லையே.

‘ராஸ்கல்… இன்னும் என்ன என்ன தான்டா என்கிட்ட மறைப்ப. உன்ன பாத்துக்குறேன்’ என்று பற்களை நறநறவென கடித்தான்.

வான்மதிக்கோ ஒன்றும் புரியவில்லை. “என்ன சொல்ற ஹேமா?” என வினவ,

“என்ன சொல்ல? எல்லாம் அந்த விக்ராந்த் வெங்காயம்ன்னால வந்தது.” என்றவள், கல்லூரி முடியும் தருவாயில் இருந்த நாட்களுக்குள் புகுந்தாள்.

கல்லூரியில் பரீட்சை எல்லாம் முடிந்திருக்க, விடுதியில் இருந்து ஆரவ் வீட்டிற்கு வந்திருந்தான். பொதுவாக அறைக்குள்ளேயே இருந்து விடுபவன், நண்பர்களை சந்திக்கவும் வெளியில் தான் செல்வான். எப்போவாவது தான் அவனை வீட்டில் வந்து சந்திப்பர். அன்று காலையிலேயே ஹேமா போன் செய்திருக்க, “சொல்லு ஹேமா” என்றான் கண்ணாடி முன் நின்று தலை வாரியபடி.

“ஆரவ்… எங்க இருக்க?” என்று கேட்டவளின் குரலிலேயே உற்சாகம் பொங்கி வழிய, “வீட்ல தான்டி. ஒய்?” எனக் கேட்டிட,

“அங்கேயே இரு. நான் வந்துடுறேன். அப்பா எனக்கு சர்ப்ரைஸா ஸ்கூட்டி வாங்கி குடுத்து இருக்காரு. அதுல தான் உன் வீட்டுக்கும் கவி வீட்டுக்கும் வர போறேனே.” என்றாள் குதூகலமாக.

அதில் அழகாய் புன்னகைத்தவன், “அப்படியே தன்வி ஊருக்கும் போக வேண்டியது தான” எனக் கேட்க, “ஏண்டா… அவன் ஊரு இருக்குற தூரத்துக்கு வண்டில போய் என் புது வண்டி டயர் தனியா கழறவா? கொய்யால.” என்று முறைக்க, வாய்விட்டு சிரித்தவன், “சரி சரி வா.” என்று விட்டு போனை வைத்தான்.

அவள் வருவதற்குள், வண்டி வாங்கியதற்கு அவளுக்கு பரிசு வாங்கி கொடுக்கலாம் என்றெண்ணி, அவன் அருகில் இருக்கும் கடைக்கு சென்றிருக்க, அந்நேரம், அவளும் அவன் வீட்டிற்கு வந்து விட்டாள்.

“ஆரவ்…” என்று அழைத்துக்கொண்டு உள்ளே வந்தவளின் கண்ணிற்கு, அறையில் இருந்து வெளிப்பட்ட விக்ராந்த் தான் தெரிய, அவளுக்கு அவனை பற்றி தெரியாததால், “ஹாய்… நீங்க ஆரவ் பிரதர் தான?” என அவளே பேசிட, அவளை மேலும் கீழும் பார்த்த விக்ராந்த், ஆமோதிப்பாக தலையாட்டினான்.

“நான் ஆரவோட ப்ரெண்ட் ஹேமா. ஆரவ் இருக்கானா?” எனக் கேட்க, விக்ராந்த் ஆரவின் அறையைக் காட்டினான்.

“ஓ! தேங்க்ஸ்.” என்றவள், துள்ளி குதித்தபடி அவனறைக்கு செல்ல, அங்கு அவன் இல்லாமல் போனதில், போன் செய்து பார்த்தாள். அவனின் போனும் அறையிலேயே இருக்க, ‘ப்ச்… பக்கத்துல போயிருப்பான்.’ என எண்ணிக்கொண்டு அங்கேயே நின்றவளை அறை வாசல் கதவில் சாய்ந்தபடி நின்றிருந்த விக்ராந்த் பார்வையாலேயே அளந்தான்.

“பெட் ரூமுக்குள்ள வர்ற அளவு க்ளோஸ் பிரெண்டோ?” அவனின் தோரணையே அவளுக்கு இடர, இருந்தும், “ஸ்கூல்ல இருந்து ஒண்ணா தான் படிக்கிறோம்.” என மெதுவாக புன்னகைத்து வைத்தாள்.

“பாருடா. அப்போ, ரொம்ப க்ளோஸ் தான். பேசுறது தான், ரொம்ப நல்லவன் மாதிரி பேசுவான். ஆனா செய்றது எல்லாமே சில்மிஷம் தான் போல…” என வெகுவாக நக்கலை ஏந்தி கூற, ஹேமா புரியாது விழித்தாள்.

“போன வாரம் தான், ஒரு பொண்ணு வந்து அவனை பார்த்து பேசிட்டு போனா. சாரி, ரூமுக்குள்ள ஒரு மணி நேரமா ரெண்டு பேரும் என்ன பண்ணாங்களோ… ஹூ நோஸ்” என்று தோளைக் குலுக்கிட, அவன் லயாவை தான் கூறுகிறான் என்றதை உணர்ந்தவளுக்கு சினம் மிகுந்தது.

முந்தைய வாரம், படிப்பு ரீதியாக அவளுக்கு வீடியோ காலில் இன்டர்வியூ இருக்க, அப்போது அவளின் மடிக்கணினியும் வேலை செய்யாமல் சதி செய்தது. ஹேமாவும் வெளியூர் சென்றிருக்க, ஆரவிடம் தான் ஹை – டெக் மடிக்கணினி இருந்ததில், இங்கு வந்தே அவளின் இன்டர்வியூவில் கலந்து கொண்டாள். அதனை இவன் இப்படி திரித்து கூறுகிறானே என எண்ணும் போதே,

விக்ராந்த், “இப்போ நீ எத்தனை மணி நேரம் ரூமுக்குள்ள இருக்க போற?” என எகத்தாளமாக கேட்க ஹேமா திகைத்தாள்.

இதற்கு மேல் இங்கு நிற்பது சரியல்ல என உணர்ந்து நகர போனவளின் கையை பற்றியவன், “அவன் வர லேட் ஆகும் டியர். அதுவரை நம்ம என்ஜாய் பண்ணலாம். எனக்கும் இன்னைக்கு வேற எந்த கமிட்மெண்ட்டும் இல்ல.     
அண்ட் யூ லுக் ஆல்சோ சோ ஹாட். இப்ப தான் தெரியுது அவன் ஏன் வெளிய எந்த பொண்ணையும் தேடி போகலைன்னு. அதான்… கூடவே ரெண்டு பேரும் எப்பவும் அவைலபிளா இருக்கீங்களே…” என விஷமாக பேச, அவளுக்கோ அருவருப்பாக இருந்தது.

“வார்த்தையை பார்த்து பேசு விக்ராந்த். முதல்ல கையை விடு” என்றவளுக்கு அங்கிருந்து நகர்ந்தால் போதும் என்றளவு மனமெல்லாம் அச்சத்தில் நடுங்கியது.

“என்னடி ஏதோ ரொம்ப ஒழுக்கம் மாதிரி சீன் போடுற. ஏன், அவனை விட நான் எந்த விதத்துல குறைஞ்சுட்டேன். யூ நோ. அவனை விட என்கிட்ட தான் நிறைய பணம் இருக்கு.” என இளிவாய் இதழ் விரித்தவனை அவன் கண்ணிமைக்கும் நேரம், சடாரென தள்ளி விட்டு விட்டு, வெளியில் வந்தவள் வண்டியில் ஏறப் போக, அப்போது தான் ஆரவ் வந்தான்.

“ஹேமா. வந்துட்டியா. சாரிடி. உனக்கு தான் கிஃப்ட் வாங்க போனேன். கடைல செம்ம கூட்டம். வாங்காம வரவும் மனசு இல்ல…” என படபடவென பேசி விட்டு, “ஹே, ஸ்கூட்டி சூப்பரா இருக்கு. அதுவும் எனக்கும் பிடிச்ச லாவண்டர் கலர்ல.” என அதனை வருடிப் பார்த்தவன், அவளின் சாவியை வாங்கி அதில் அவன் வாங்கிய பொம்மை ‘கீ’ செயினை கோர்த்து விட்டான்.

பின், அவள் ஓட்டுவதற்கு ஏதுவாக, கையில் க்ளவ்ஸ், குளிர் கண்ணாடி என மேலும் சில பொருட்கள் வாங்கி இருந்தவன் அவளிடம் கொடுத்து, “கேர்ஃபுல் – ஆ வண்டி ஓட்டு.” என்று எச்சரித்தான்.

ஆனால், அவள் முகம் கலங்கிய நிலையில் இருந்ததையே அப்போது தான் கவனித்தவன், “என்னடி கீழ எதுவும் விழுந்து வைச்சுட்டியா? முகம் ஏன் ஒரு மாதிரி இருக்கு” என விழி சுருங்க வினவ,

“ஒ… ஒண்ணும் இல்லடா” என சமாளித்தவள், “எனக்கு டைம் ஆச்சு. நான் கிளம்புறேன்…” என அவசரமாக கிளம்ப எத்தனிக்க, அவளின் அவசரத்திற்கு அவளின் கரங்கள் ஈடு கொடுக்காமல் நடுங்கிட, பதட்டத்தில் வண்டியையும் சாய்த்தாள்.

அதில், ஆரவ் “ஏய் ஏய்… வண்டிய கீழ போட்டுடாத. என்ன நினைப்புல வண்டி ஓட்டுற நீ? முதல்ல இறங்கு. உள்ள வந்து ஏதாவது குடிச்சுட்டு போ. கம்.” என்று அழைக்க, அவளோ அரண்டு மறுத்தாள். அது அவனை உறுத்த, “ஹேமா. என்ன ஆச்சு? ஏதாவது ப்ராப்ளமா?” என புருவம் இடுங்க கேட்க, இப்போது பலவீனமாக மறுத்தாள்.

அதிலேயே கண்டுகொண்டவன், “இப்ப சொல்ல போறியா இல்லையா?” என்று அதட்டலாக கேட்டதில், கண்ணீர் மழை பொழிய, விக்ராந்த் பேசியதை ஒப்பிக்க, அவ்வளவு தான் ஆரவிற்கு கோபம் சுர்ரென ஏறியது.

ஹேமா தடுக்க தடுக்க, விறுவிறுவென உள்ளே சென்றவன், டைனிங் டேபிளின் முன் நின்று தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தவனின் தலையிலேயே சப்பென்று அடிக்க, அவன் முகம் டைனிங் டேபிளில் டம்மென அடித்ததில், கண்ணாடியால் ஆன டேபிள் நொறுங்கியது.

“வேணாம் ஆரவ். பொறுமையா இரு” என தடுத்தவளை தள்ளி விட்டவன், “நீ முதல்ல கிளம்பு” என்று கர்ஜிக்க, அவளோ வேறு வழியற்று கிளம்பி விட்டாள்.

அதன் பிறகு விக்ராந்தை அவன் பிரித்து மேய, இறுதியில் சரவணனும் சௌமியாவும் வந்து தான் அவனை பிடித்து இழுத்தனர்.

எப்போதும் அவன் விக்ராந்தை அடிப்பான் தான். ஆனால், இம்முறை இரத்தம் வரும் அளவு அடித்திருக்க, சௌமியா கோபத்தில் ஆரவின் கன்னத்தில் பளாரென அறைந்து விட்டார்.

அதனை வாங்கி கொண்டவன், “ம்மா. அவன் என்ன செஞ்சான்னு முதல்ல கேளுங்க.” என்று கோபத்தில் கத்த, “அவன் என்ன வேணாலும் செஞ்சுருக்கட்டும். என் பையனை நீ எப்படிடா அடிக்கலாம்” என்று சரவணன் அவரின் பங்கிற்கு ஆரவை அறைய, பல்லைக்கடித்து கோபத்தை இழுத்து பிடித்தவன்,

“அவன் என் பிரெண்டுகிட்ட தப்பா நடந்து இருக்கான். முதல்ல அவனை கண்டிங்க” என்றான் சினத்துடன்.

சௌமியாவோ, “எங்க உன் பிரெண்டு? உன் பிரெண்டுட்ட இவன் தப்பா நடந்ததை நீ பார்த்தியா? நீ மட்டும் என்னமோ பெரிய ஒழுங்கு மாதிரி, அவனை தப்பு சொல்ற. நீயும் தான் பொண்ணுங்க கூட சுத்துற? அப்படி பார்த்தா முதல்ல உன்ன தான் அடிக்கணும்” என்று எகிற,

ஆரவோ, ‘அம்மா… அவங்க என் ப்ரெண்ட்ஸ் அவளோ தான். அவனை மாதிரி நான் ஒன்னும் எவ கூடயும் படுக்கல. அப்படி நான் தப்பு செஞ்சுருந்தா தாராளமா என்ன தண்டிங்க. அதுக்கு முழு உரிமை உங்களுக்கு இருக்கு. அதே மாதிரி, அவன் பண்ண தப்பையும் தட்டி கேளுங்க’ என்று விழி சிவக்க கூறிட,

சரவணன், “என்னடா ரொம்ப பேசுற. என் பையனை பத்தி தப்பா பேசி, அவன் ஃபியூச்சர கெடுக்க பாக்குறியா?” என்று ஆரவின் சட்டையை பிடிக்க, அவரைப் பிடித்து தள்ளி விட்டவன்,

“ம்மா. உங்களுக்கு மட்டும் தான் என்ன தண்டிக்கவோ கேள்வி கேட்கவோ உரிமை இருக்கு. அவருக்கு இல்ல” என்று எச்சரிக்க, சௌமியா, “ஸ்டாப் திஸ் ஆரவ். ஒழுங்கா அவங்க ரெண்டு பேருகிட்டயும் மன்னிப்பு கேளு. இல்ல, வீட்டை விட்டு வெளிய போ” என்று அனல் பறக்க கூறியதில் ஒரு கணம் அதிர்ந்தவன்,

“அவன் ஒரு பொண்ணுட்ட மிஸ்பிஹேவ் பண்ணிட்டான்னு சொல்றேன். நீங்கலாம் என்ன பேரண்ட்ஸ்…?” என்று முகம் சுளித்தவன், “என்னால மன்னிப்பு கேட்க முடியாது…” என்றான் தீர்மானமாக.

“அப்போ வீட்டை விட்டு வெளிய போ!” என்று அவரும் பிடிவாதம் பிடிக்க, அவரை கூர்மையாக ஒரு பார்வை பார்த்தவன்,

“ஃபைன். வெரி ஃபைன். நான் போறேன். இனிமே இப்படி ஒரு பையன் இருக்கான்னு நீங்களே மறந்துடுங்க.” என்று வெறிப்பிடித்தவன் போல கத்தி விட்டு, பின், விரக்தி புன்னகையுடன் “அதான் ஆல்ரெடி உங்களுக்கு என்னை ஞாபகமே இல்லையே…” எனக் கூறி விட்டு, ஒட்டு மொத்தமாக அக்குடும்பத்தையே தலை முழுகி விட்டு வந்து விட்டான்.

அட்லீஸ்ட்… பேருக்காவது குடும்பம்ன்னு ஒன்னு இருக்கணும். இல்லைன்னா… வாழ்க்கைல நிறைய அடிபடணும்ன்னு அவனை பார்த்து தான் தெரிஞ்சுக்கிட்டோம். அதுக்கு அப்பறம் அவனுக்குன்னு ஒரு அடையாளத்தை உருவாக்க ரொம்ப கஷ்டப்பட்டான். இப்போ உருவாக்கியும் இருக்கான். அவனை அவனே செதுக்கி இருக்கான்.

ப்ளீஸ் மதி… அவன் அம்மா, மிருணா மாதிரி நீயும்  மறுபடியும் மறுபடியும், அவன் ஏங்குற குடும்ப சூழ்நிலையை இழக்க வைக்காதீங்க. அப்படி நீ அவனை விட்டு போகணும்ன்னு முடிவு பண்ணிட்டா, மொத்தமா எங்களுக்கு விஷத்தை குடுத்து கொன்னுட்டு போ. இன்னொரு தடவை அவன் நிர்கதியா நிக்கிறத எங்களால பார்க்க முடியாது…” என உறுதியுடனும் அதட்டலுடனும் கூறியவளை சுதாகரின் விழிகள் இன்னுமாக ரசிக்க, வான்மதிக்கு இன்னும் அதிர்வு நிலை தான்.

லயா தான் ஹேமாவின் சத்தம் கேட்டு அங்கு வந்து, “விடு ஹேமா. அவள் புருஞ்சுப்பா. நீ வா முதல்ல.” என்று பிடித்து இழுக்க, ஹேமா இருவரையும் பாராமல் வெளியில் செல்லும் நேரம் தான், இஷாந்தை தூக்கியபடி வெளியில் இருந்து ஆரவ் வந்தான்.

அவனையும் பாராமல் அவள் விருட்டென வெளியேறி விட, லயாவும் “மதியை பாரு” என கண்ணை காட்டிவிட்டு, அவளுடன் சென்றாள்.

ஹேமா என்ன கூறி இருப்பாள் என கணித்தவன், வான்மதியின் அறைக்கு செல்ல, அங்கு சுதாகர் தான்,

“ஏன்டா… என்கிட்ட இன்னும் நீ என்ன தான் மறைச்சு இருக்க. கொஞ்சம் கூட மச்சினன்ன்னு உனக்கு பயமே இல்ல. இனிமே ஏதாவது சஸ்பென்ஸ் வை. அவள் என்ன டைவர்ஸ் பண்றது நானே உன்ன டைவர்ஸ் பண்றேன்.” என்று முறைக்க, ஆரவ் வான்மதியை பார்த்தான்.

அவளோ, விழி கலங்க அவனைப் பார்த்திருக்க, அதனை கண்டுகொள்ளாதவனாய், “முதல்ல, உன்ன டைவர்ஸ் பண்ணுனா தாண்டா எனக்கு நிம்மதி. ஒரு வழியா வீட்டு பக்கம் வந்துட்ட போல.” என கிண்டலாக கேட்க,

“ம்ம்… என் அப்பா அம்மாவுக்கு மகனா இங்க வரக்கூடாதுன்னு ஒரு உறுதி இருந்துச்சு. அதனால வரல. ஆனா, இப்போ என் தங்கச்சிக்கு அண்ணனா, என் மச்சானுக்கு மச்சானா, என் மருமகனுக்கு மாமனா மட்டும் தான் இங்க வந்துருக்கேன்” என்று அழுத்தி கூற, வான்மதி இன்னும் திகைத்து, “சுத்தி, வீட்டை விட்டு வந்துட்டியா?” எனக் கேட்டாள்.

ஆரவோ, இதனை ஏற்கனவே எதிர்பார்த்திருந்தான். அதிலும், அவனின் தாய் தந்தை கடைக்கு வந்து வான்மதியை காயப்படுத்தியதை கேட்டதுமே அவன் இந்த முடிவுக்கு வந்திருந்ததை அவனும் அறிவான்.

அதில், “ஓ… இது மட்டுமா… உன் லவருக்கு லவ்வராவும் வந்து இருக்கேன்னு சொல்லு” என்று கண் சிமிட்ட, சட்டென முகம் வாடியவன், சிறு முறுவலுடன் “அப்பறம் பார்ப்போம்” என கிளம்பி விட்டான்.

அவன் கிளம்பியதும், இஷாந்தை அவளிடம் கொடுத்தவன், “ஒர்க் இருக்கு. நீ ரெஸ்ட் எடுக்குறதுன்னா வீட்ல இரு.” என்று விட்டு கிளம்பி விட, அவளுக்கு தான் செய்வதறியாத நிலை.

தன்னறையில் அமர்ந்து, வேலையில் மூழ்கியவன், ஹேமாவின் வரவில் தான் நிமிர்ந்தான்.

“எங்க போன நேத்து?” அவள் வந்ததும் ஆரவ் புருவம் சுருக்கி வினவ,

“அக்கா கல்யாணம் சொன்னேன்ல. அதான் கொஞ்சம் வேலை இருந்துச்சுடா.” என்றவள் முயன்று முறுவலித்திட,

மேலும், “அப்பாவுக்கும் வயசாகிடுச்சுல. சோ எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்ய முடியாது. அதோட என் என்கேஜ்மெண்ட் வேற இருக்குல்ல…!” என்றவளை அழுத்தமாக பார்த்தான்.

அந்நேரம் கவினும், தன்விக்கும் ஆரவாரத்துடன் உள்ளே வந்து, “மச்சான்… மண்டபம்லாம் புக் பண்ணியாச்சு. மேரேஜுக்கு தேவையான ட்ரெஸ் ஜுவெல்ஸ் எல்லாம் வீட்லயே வர வைக்க ஏற்பாடு பண்ணியாச்சு. இந்த கேட்டரிங் ஆளுங்க தான் இன்னும் பெஸ்ட் – ஆ யாரும் சிக்கல. லயா, அவ பேமிலி பங்க்ஷன்க்கு ரெகுலரா பண்ற கான்டராக்டர்ட்ட பேசுறேன்னு சொல்லிருக்கா. அப்டியே, மண்டபம் டெக்கரேஷன்க்கும் பேச சொல்லிருக்கோம்.” என்று இருவரும் மாறி மாறி கூற, ஹேமா குழம்பினாள்.

“டேய்… யாருக்குடா மேரேஜ் பிளான் பண்றீங்க? கவி, லயா உனக்கு ஓகே சொல்லிட்டாளா?” எனக் கேட்டாள் விழி விரித்து.

அவனோ அவளை விசித்திரமாக ஒரு பார்வை பார்த்து, “அக்கா கல்யாணத்துக்கு தான் இதெல்லாம் ஏற்பாடு பண்ணிட்டு இருக்கோம். நீ எந்த உலகத்துல இருக்க?” என்றதில், அவள் திகைத்தாள்.

“எ… என்ன?” என்று விழித்தவள் மூவரின் முறைப்பிலும் தயங்கி விழி தாழ்த்தினாள்.

“இல்லடா… நீங்களே பெர்சனல் ப்ராபளம்ல இருக்கீங்க. அதான்… எதுக்கு டிஸ்டர்ப் பண்ணனும்ன்னு…” என்று இழுக்க,

“ம்ம். டிஸ்டர்ப் பண்ணணும்ன்னு?” ஆரவ் நக்கலாக கேட்டதில், தன்விக், “மேடம் தான் தனியாவே எல்லா முடிவையும் எடுத்து, தனியாவே கல்யாணத்தை நடத்துற அளவு பெரிய ஆள் ஆகிட்டாங்களே. நம்மளாம் எதுக்குன்னு நினைச்சுருப்பாங்க” என்றான் ஏகத்துக்கும் குத்தலாக.

அப்போதே விழிநீர் அவளுக்கு கட்டுப்படுத்த இயலாத அளவு வெளிவர துடித்தது. இருந்தும் அடக்கிக்கொண்டவள், “சாரி டா.” என்றாள் பொதுவாக.

பின், “அய்யயோ. நீங்க வேற எல்லாம் ஏற்பாடு பண்ணிருக்கீங்க. என் அப்பா வேற மண்டபம் பார்க்க போறேன்னு சொன்னாரே.” என்று பதற,

கவின், “மூடு. அப்பாவை மண்டபம் பார்க்க கூட்டிட்டு போனதே நாங்க தான். வந்துட்டா பேச. நீ அக்கா கல்யாணம்ன்னு சொன்னதுமே, நாங்க அப்பாட்ட பேசி, எல்லாம் நாங்க பாத்துக்குறோம்ன்னு சொல்லிட்டோம்.” என்று முறைக்க, அவளுக்கு கண்கள் பனித்தது.

அப்போது தான், அவளுக்கும் இன்று காலையில் அவளின் தந்தை ‘ஆரவ்’ என்று அவன் பேச்சை ஆரம்பித்து ஏதோ பேசியது நினைவே வந்தது. அவள் எங்கே சுற்றி நடப்பதை கவனித்தாள், எண்ணம் முழுதும் ஒருவன் மட்டுமே நிறைந்திருக்க, வேறு சிந்தனையற்று போனாள்.

ஆரவ் அதனை கண்டுகொள்ளாமல், “அது இருக்கட்டும். உனக்கு என்ன திடீர் என்கேஜ்மெண்ட்? ஏன், இலவச இணைப்பா உன்னையும் கல்யாணம் பண்ணி குடுத்தா தான், உன் அக்காவை கல்யாணம் பண்ணிப்போம்ன்னு மாப்ள வீட்ல சொல்லிட்டாங்களா?” என்று கூர்மையாக கேட்க,

அவள் வேகமாக, “சே! சே! அப்டி எல்லாம் இல்லடா. மாமா வீட்ல எல்லாருமே ரொம்ப ஜெனுயின். ஜஸ்ட், அபிப்ராயம் தான் கேட்டாங்க. அப்பா, அம்மாவும் ஆசைப்பட்டாங்க. உனக்கே தெரியும். அக்காவுக்கே மாப்ள தேடி ரொம்ப அலைஞ்சாங்க. இப்போ அடுத்து என் ஜாதகத்தை தூக்கிக்கிட்டு லொங்கு லொங்குன்னு அலைவாங்க. நோ சொல்ல பெருசா ரீசனும் இல்ல. சோ ஓகே சொல்லிட்டேன்” என்றவள் லேசாக சிரித்து வைக்க, அவனோ இரு புருவத்தையும் உயர்த்தி அர்த்தப்பார்வை பார்த்தான்.

“சரி, மாப்ள என்ன பண்றாரு?” அவன் கையைக்கட்டிக்கொண்டு கேட்க,

ஹேமா, “மாமா தான. பேரு ஆனந்த். கன்ஸ்ட்ரக்ஷன்ல ஒர்க் பண்றாரு. மாமாவும் ரொம்ப சுவீட் ஆரவ். நம்மளை மாதிரியே ஜாலி டைப். அக்காவை கூட ரொம்ப கேர் பண்ணிக்கிறாரு.” என்று மகிழ்வுடன் சொல்லிக்கொண்டே வர, ஆரவ் ஒரு நொடி மௌனம் காத்து,

“நான் அவரை கேட்கல. உன் ஃபியான்சிய கேட்டேன்.” என்று ஆழ்ந்த குரலில் கேட்டதில் அவள் கப்சிப் என ஆகி விட்டாள்.

“அது… அது… அவரும் ரொம்ப நல்ல டைப் தான்” என்று திணறியவளுக்கு, அவன் பெயர் கூட தெரியாது என்பதே உண்மை.

அதில், கவினும் தன்விக்கும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். 

ஆரவோ, விடாமல் “எங்க ஒர்க் பண்றாரு?” என வினா தொடுக்க,

திருதிருவென விழித்தவள், “அது… ஏதோ ஜாப் தான்… வந்து…” என்று பதில் கூட முடியாமல் தடுமாறினாள்.

அவள் பதிலில் திருப்தியான ஆரவ், “நோ சொல்றதுக்கு மட்டும் இல்ல, எஸ் சொல்றதுக்கும் ஏதாவது ரீசன் வேணும் ஹேமா” என்றான் கடுகடுவென.

எங்கே அழுது விடுவோமோ என்று பயந்தவள், “இப்போ எதுக்கு இந்த ஆராய்ச்சி எல்லாம். நான் போய் வேலையை பாக்குறேன்…” என்று கிளம்ப எத்தனிக்க, அவனோ அவன் தீப்பார்வையை மாற்றவே இல்லை.

“அறிவுரை எல்லாம், மத்தவங்களுக்கு மட்டும் இல்ல. உனக்கும் தான். மதி என்னை அவாய்ட் பண்றது தப்புன்னா, நீ சுதாகரை அவாய்ட் பண்றதும் தப்பு தான்.” என்று அழுத்தம் திருத்தமாக கூற, இதற்கு மேல் முடியாமல், நாற்காலியில் பொத்தென அமர்ந்தவள், முகத்தை மூடி அழுது தீர்த்தாள்.

அவனை விட்டு செல்லப்போவதால் வரும் அழுகையா, அல்லது அவனை அன்று காயப்படுத்தியதால் வந்த அழுகையா, அல்லது காலையில் அவனைப் பார்க்கும் போது கூட தறி கெட்டு ஓடும் மனதை அடக்க முடியாத இயலாமையால் வந்த அழுகையா என்பது புரியாமலேயே சில நிமிடங்கள் அழுது கரைந்தவள், மெல்ல மெல்ல கண்ணீருக்கு அணை போட்டு, முகத்திலிருந்து கையை எடுக்க, எதிரில் நின்றவனை பார்த்து அதிர்ந்தாள்.

சுதாகர் தான் அவள் முன் அவளையே தீர்க்கமாக பார்த்தபடி நின்றிருந்தான்.

அவனைக் கண்டதும், அவசரமாக கண்ணீரை துடைத்துக்கொண்டவள், அவளின் நண்பர்களை தேட, அதன் பிறகே, தன்னை தூண்டி விட்டு, வெளியில் சென்று விட்டனர் என்பது புரிய, தலையை நிமிர்த்தாமல் அமர்ந்திருந்தாள்.

அவள் முகம் பார்க்க, சேரை இழுத்துப் போட்டு அவள் முன் அமர்ந்தவன், இறுக்கி மூடி இருந்த பாவையின் கரங்களை பற்றிட, அவளுக்கோ தடுக்கவும் தோன்றவில்லை. அதே நேரம் இறுக்கத்துடன் அமர்ந்திருக்க,

“இப்பவும் நான் அன்னைக்கு சொன்னதை தான் சொல்றேன் ஹேமா. ஐ லவ் யூ. நீ என்னை விட்டு போனாலும், என்னால உன்னை மறக்க முடியாது. என் குடும்பத்த உனக்கு பிடிக்கலைல. இப்போ எனக்கு குடும்பமே இல்ல. நான் தனி ஆள். ஏன், அவங்களோட சொத்துல இருந்து எதுவுமே என்கிட்ட இப்போ இல்ல. எல்லாத்தையும் விட்டுட்டு வந்துட்டேன்.” என்றவன் நிறுத்தி விட்டு அவள் முகம் பார்க்க, அங்கு அதிர்வலைகள் மிதந்தது.

பெருமூச்சு விட்டவன், “என் தங்கச்சிக்கு கிடைக்க வேண்டிய நியாயத்துக்காக மட்டுமில்ல. உனக்காகவும் தான். இப்ப நான் ரொம்ப சாதாரண ஆள் ஹேமா. என்கிட்ட எதுவுமே இல்ல உன் காதலை தவிர.” என்றவனின் கரங்கள் அவளின் கன்னங்களில் வழிந்த கண்ணீரை வருட, 

“நீ என்னை காதலிக்கிறதை உன் கண்ணீர் உணர்த்திடுச்சு ஹேமா. சோ, உனக்கு என் மேல இருக்குற காதல்ல எனக்கு சந்தேகம் இல்ல. இப்பவும் அதே வெறுப்பு, அதே கோபம் இருந்தாலும் இட்ஸ் ஓகே ஹேமா. ஆனா, எந்த சூழ்நிலையிலயும் உன் மேல இருக்குற காதலை என்னால அழிக்க முடியாது. ஐ ஸ்டில் லவ் யூ. ஐ வில் லவ் யூ.” என உணர்வற்ற குரலில் அழுத்தத்துடன் பேசியவனின் கண்களில் இருந்து நேசமும், தவிப்பும் ஒன்றாக வழிய அவனையே உறைந்து பார்த்திருந்தாள் ஹேமா.

அவன் காதலிப்பது தெரியும். ஆனால், இந்த அளவு ஆழத்தை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. ஏன் அவள் அவனை காதலிக்கிறாள் என்றதையே, அவனை வேண்டாம் என மறுத்து விட்டு வந்தபிறகு தானே உணர்ந்தாள். 

இப்போதோ பேச்சற்று கண்ணில் நீர் வழிய அமர்ந்திருந்தவளின் நீரை துடைத்து விட்டவன்,

“எனக்கு இந்த ஹேமா பிடிக்கல. என்னை பார்த்ததும், சைட் அடிச்சு வம்பிழுக்குற ஹேமா தான் வேணும். அது விளையாட்டா இருந்தா கூட, அந்த நிமிஷம் என் வாழ்நாள் முழுக்க போதும்.” என மனம் நிறைய தன் காதலை உரைத்தவன், அவன் கரங்களில் சிக்கி இருந்த அவளின் கரங்களை விடுவிக்க போக, இப்போதோ அது அவளிடம் சிக்கி இருந்தது.

அக்கரத்தையும் அவளையும் மாறி மாறி பார்த்தவன், “வேணாம் ஹேமா. என்னை டெம்ப்ட் பண்ணாத. ப்ளீஸ்…” என மீண்டும் கையை விலக்க போக, அப்போதும் அவள் கையை விடாமல் பிடித்து உதட்டை பிதுக்கியதில், வாரி அணைத்துக் கொண்டான்.

ஆடவனின் முதல் அணைப்பு, அவளுள் பல்வேறு உணர்வுகளை உருவாக்க, அவனுக்கோ தன்னவள் தன்னிடம் சேர்ந்த நிம்மதியில் பிடி இறுகியது.

முதலில், கண்ணை மூடி ரசித்தவள், பின், வலுக்கட்டாயமாக அவனிடம் இருந்து பிரிந்து,

“என் எலும்ப உடைச்சுறாதீங்க மிஸ்டர் சைட்…” என்று வெட்கத்துடன் மொழிய, சுதாகரோ மெல்ல இதழ் விரித்து, “நீ என்னை வேணாம்ன்னு சொன்னதுக்கு உன் வாய தான் உடைச்சு இருக்கணும் மிஸ் சைட்.” என்றான் குறும்பாக.

“ஓ… என் வாய உடைச்சுட்டு இங்க இருந்து முழுசா போய்டுவீங்களா. என் தளபதிங்க உங்களை சுக்கு நூறா கிழிச்சுருவாங்களாக்கும். தைரியம் இருந்தா உடைங்க…” என்று நாக்கை நீட்டி அழகு காட்ட, மறுநொடி அது அவனின் ஆழ்ந்த இதழணைப்பில் கட்டுண்டு இருந்தது.

தேன் தூவும்…
மேகா!

ஹாய் டியர் ஃப்ரெண்ட்ஸ். வீட்ல கெஸ்ட் வந்துட்டாங்க என்னால டைப் பண்ண முடியல. அடுத்த பதிவு வியாழன் வரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
51
+1
222
+1
7
+1
6

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    2. நண்பர்களின் குறும்பு அட்டகாசம். நட்பின் பிணைப்பை வெகு ஆழமாகவும் அதே நேரம் மனதை வருடும் படியும் அமைத்துள்ளார் எழுத்தாளர். வேற லெவல். பல இடங்களில் வாய் விட்டு சிரிக்க முடிந்தது.