தெம்மாங்கு 29
“எந்தச் சந்தர்ப்பத்திலும் என் மகனுக்கு இந்த விஷயம் தெரியக்கூடாது. தெரிஞ்சா ஏத்துக்க மாட்டான். உரிமையா நின்னு செய்ய முடியாத பாவியா கெஞ்சிக் கேட்கிறேன்.” எனக் கையெடுத்து கும்பிடும் இந்திராவின் கைகளை இறக்கிவிட்ட காமாட்சி,
“சந்தர்ப்ப சூழ்நிலை உனக்கு எதிரா இருக்கு. சீக்கிரம் இந்த நிலைமை மாறி உன் மகன் உன்கிட்டப் பேசுவான். மருமகளும், பேரப்பிள்ளையும் தன்னால உன்கிட்ட வருவாங்க. உன்ன மாதிரி ஒரு அம்மாவையும், மாமியாரையும் புரிஞ்சிக்கச் சின்னஞ்சிறுசுங்களுக்கு நேரம் தேவைப்படும்.” என்றார் அனுபவம் வாய்ந்தவராக.
“என்னைப் புரிஞ்சுக்கணும்னு அவசியம் இல்ல. இப்ப வரைக்கும், ரெண்டு பேருக்குள்ள எந்த முன்னேற்றமும் இல்லைன்னு நல்லாத் தெரியுது. கடைசி வரைக்கும் இதே மாதிரி இருந்துடாம, அவங்களோட வாழ்க்கைய நல்லபடியா வாழ்ந்தா போதும். ரெண்டு பேரும் ரொம்ப நொந்து போயிட்டாங்க. இனியாது நல்லபடியா இருக்கணும்.”
“கவலைப்படாத மருமகளே, பிள்ளை பிறக்கிற நேரம் ரெண்டு பேரும் சேர்ந்துடுவாங்க.” என்ற முத்துமாரி, “பவானி எப்ப வரன்னு சொன்னா?” விசாரித்தார்.
“பாவம், அவங்க கண்ணுல சிக்காம வரணுமே. எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவான்னு நினைக்கிறேன்.”
“நீங்களும் வாங்க, குமரனை நான் சமாளிச்சுக்கிறேன்.”
“அய்யய்யோ! வேணவே வேணாம்.” எனப் பதறினார் குமரனின் தாய்.
“நாங்க வந்தா பேரன் மனசு சங்கடப்படுதோ இல்லையோ, அந்தப் புள்ள மனசு சங்கடப்படும். என் மருமக ஆசைப்பட்ட மாதிரி, நீங்க முன்ன நின்னு வளைகாப்பு செஞ்சு முடிங்க. அது போதும்.”
“ஒரே மருமகளோட வளைகாப்பைப் பார்க்கணும்னு ஆசை இல்லையா?” என்றதும் இருவரின் முகமும் வாடி விட, உள்ளே நுழைந்தார் பவானி.
“அதான் சொன்னனே, பார்க்க முடியாத பாவின்னு.”
இந்திராவின் அருகே சென்ற காமாட்சி, பதமாகத் தலையை வருடிக் கொடுத்து, “வருத்தப்பட வேண்டிய அவசியமே இல்லை. குமரன் எதுவும் சொல்லாத மாதிரி நான் பார்த்துக்கிறேன். நீங்க வாங்க” என்றழைத்தார்.
“எங்களால அவங்க வாழ்க்கைக்குள்ள நடந்த கலவரம் போதும். ஒதுங்கி இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டோம். அண்ணி சொல்ற மாதிரி, அந்த சந்தோஷத்தைப் பார்க்காத பாவிங்களாவே ஒதுங்கி நின்னுக்கிறோம்.”
“நீயும் புரிஞ்சுக்காம பேசுற பவானி.”
“நாங்க எதுவுமே தெரியாத மாதிரி, வீட்ல இருந்தாத்தான் பிரச்சனை வராம இருக்கும்.” என்பதும் சரி என்பதால் அமைதியாகி விட்டார் காமாட்சி.
மகளுக்காக வாங்கி வந்த வளைகாப்பு வளையல்களைக் கையில் கொடுத்த பவானி, “நல்லா கை நிறையப் போட்டு விடுங்க. என் மக கை நிறைஞ்சி இருக்குற மாதிரி வாழ்க்கையும் நிறையனும். அம்மா இல்லாத குறை தெரியாத அளவுக்குப் பண்ணுங்க. நான் கூட இல்லனாலும், நினைப்பு மொத்தமும் அவகிட்ட தான் இருக்கும். மாங்காய் சாதம்னா ரொம்பப் பிடிக்கும். நிறையச் சாப்பிடக் கொடுங்க.” எனப் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே விழியை விட்டுக் குபுகுபுவென்று வெளியேறியது நீர்.
அதைத் துடைக்க மறந்தவர் புடவையைக் கையில் கொடுத்து, “என் பிள்ளை கலருக்கு எடுப்பா இருக்கும். சீக்கிரம் கொடுத்து பிளவுஸ் தைச்சிக்கச் சொல்லுங்க. தல நிறையப் பூ வச்சு, அவளை மங்களகரமா உட்கார வைங்க.” என்றிட, பார்க்கப் பாவமாக இருந்தது சந்தானத்திற்கு.
“அவளை நேரில் பார்த்து ரொம்ப நாள் ஆகுது. வயிறு எப்படி இருக்குன்னு பார்த்துச் சொல்லுங்க. அனேகமா, ஆம்பளப் புள்ளையா தான் இருக்கும்.”
பெருமிதத்தோடு கண்ணீருக்கு நடுவில் சிரிப்பைச் சிந்திய பவானியைத் தட்டிக் கொடுத்து, சமாதானம் செய்தார் முத்துமாரி. தனக்கும் அதே நிலை தான் என்பதால் அவர் வலியை முழுதாக உணர்ந்த இந்திரா,
“ஒன்பது வகைச் சாப்பாடு செஞ்சு கொடுத்து விடறேன். என்னென்ன தேவையோ, அத்தை சொல்லி லிஸ்ட் போட்டுட்டேன். ஒரு தடவை பார்த்துட்டு, வேற ஏதாச்சும் வேணும்னா சொல்லுங்க. நாளைக்குச் சந்தைக்குப் போய் மொத்தமா எல்லாத்தையும் வாங்கிட்டு வந்திடுறேன்.” என்றார்.
“பேச்சியப்பனுக்குத் தெரியப் போகுதுமா” என்ற சந்தானத்தைக் கண்டு ஏளனமாகச் சிரித்தவர், “அந்த மனுஷனுக்கு ஏற்கனவே தெரியும்.” எனத் திகைக்க வைத்தார்.
மூத்த தம்பதிகளின் விழிகளில் மிரட்சி ஊஞ்சலாடிக் கொண்டிருக்க, “இனி அவரால எந்தப் பிரச்சனையும் வராது.” என்று நடந்ததை இருவருக்கும் விவரித்தார்.
“அடப்பாவிங்களா! அநியாயமா ஒருத்தனக் கொன்னுட்டு குற்ற உணர்ச்சியே இல்லாம, அன்னைக்கு எவ்ளோ பெரிய கலவரத்தைப் பண்ணிட்டானுங்க. இவனுங்களைச் சும்மா விடக் கூடாது.”
“கடவுள் தான், என் வீட்ல இருக்க ரெண்டுத்துக்கும் கூலி கொடுக்கணும்.”
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது இடைப் புகுந்த சந்தானம், “இந்த விஷயம் தெரிஞ்சும், குமரன் எப்படி இவ்ளோ அமைதியா இருக்கான்?” சந்தேகத்தோடு கேட்டார்.
“எங்களுக்கும் அதே சந்தேகம் தான். இருந்தாலும், என் பையனை அவ்ளோ சாதாரணமா எடை போடக்கூடாது. நேரம் பார்த்து அடிக்குறதுக்காகக் காத்திருக்கான்னு நினைக்கிறேன்.”
என்ன இருந்தாலும், பெற்ற தாயின் புரிதலுக்கு ஈடாகாது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறார் இந்திரா. காத்துக் கொண்டுதான் இருக்கிறான், தனக்கான காலத்திற்கு. அந்தத் தருணம் அமையும் நொடி கருப்பனின் நிலையை எண்ணிக் கூடப் பார்க்க முடியாது. என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானித்தவன், அதற்கான நாளையும் ஏற்கனவே தீர்மானித்து வைத்திருக்கிறான்.
பேச்சியப்பன் ஒரு பக்கம் சூழ்ச்சி வலை விரிக்க, அவரை அந்த வலை விரிக்க வைத்து, அவரையும் விழ வைப்பதற்காக நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறான் அன்புக்கரசனின் ஆருயிர் நண்பன்.
***
“அவசியம் சீமந்தம் வைக்கணுமா?”
“என்னம்மா இப்படிக் கேக்குற”
“வேணாம்னு தோணுது.”
“எனக்கும் முதல்ல அப்படித் தான் தோணுச்சு. அத்தை சொன்னதுக்கு அப்புறம் வைக்கிறது சரின்னு தோணுது.”
“என்னால சுத்தி இருக்குறவங்க பேச்சைக் கேட்க முடியாது. இப்பவே வரும்போதும், போகும்போதும் ஜாடமாடையா பேசுறதைக் கேட்க முடியல. இப்பதான் எல்லாத்தையும் மறந்துட்டுக் கொஞ்சம் சகஜமா இருக்க ஆரம்பிச்சு இருக்கேன். திரும்பவும் ஏதாவது ஒரு வார்த்தை வந்து, எல்லாத்தையும் கிளறி விட்டுட்டுப் போயிடுவாங்களோன்னு பயமா இருக்கு.” என்றவளின் நிலை தெளிவாகப் புரிந்தது குமரவேலனுக்கு.
அவளுக்காக எடுத்து வந்த இளநீரை வெட்டிக் கொடுத்தவன், “இன்னுமா ஊருக்குப் பயந்துட்டு இருக்கம்மா… இவங்களை எல்லாம் நான் தூக்கிப்போட்டு ரொம்ப நாள் ஆகுது. சுத்தி இருக்குறவங்க நல்லவன்னு சொல்றதால என்ன கிடைக்கப் போகுது? தப்பாக் கூட சொல்லட்டுமே, அதனால ஏதாச்சும் கிடைக்குமா என்ன?
அவங்க பேச்சைக் கேட்டு நம்ம ஒதுங்கி இருக்க ஆரம்பிச்சா, வாழ்க்கை மொத்தமும் ஒதுக்கத்துலயே போயிடும். உண்மை எதுன்னு உனக்கும் எனக்கும் தெரியும். நம்மளை இவ்ளோ தூரம் கூட்டிட்டு வந்த அந்தக் கடவுளுக்குத் தெரியும். முக்கியமா இதோ இவங்களுக்கு…” எனப் புகைப்படத்தைக் கை காட்டினான்.
அவன் சொல்வது புரிந்தாலும், ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலையில் தேனிசை தேவி இருக்க, “இதுதாம்மா நம்ம வாழ்க்கை. இந்த வாழ்க்கையை நம்ம வாழ்ந்து தான் ஆகணும். ஊருக்கு மதிப்புக் கொடுக்குறதை விட்டுட்டு, உன் வயித்துல இருக்க அந்தக் குழந்தையைப் பத்தி யோசிம்மா… காலங்காலமா, புள்ள பெத்துக்கப் போற பொண்ணுக்கு வளைகாப்புப் பண்ணி வளையல் போடுறாங்கன்னா, அதுக்குப் பின்னாடி நிச்சயம் ஒரு காரணம் இருக்கும். அது உன் குழந்தைக்கும், உனக்கும் வேணும்.
பிரசவம் மறுபிறவின்னு சொல்லுவாங்க. நீங்க ரெண்டு பேரும் நல்லபடியா திரும்பி வரணும்னா, காமாட்சி அத்தை மாதிரி நல்ல மனசு உள்ளவங்க ஆசீர்வாதம் நிறைய வேணும். யார் என்ன பேசினாலும் காதுல வாங்கிக்காம, உனக்கான சந்தோஷத்தை மனசார ஏத்துக்க.” எனப் பொறுமையாகப் பேசிப் புரிய வைத்தான்.
அரைகுறை மனதோடு தலையசைத்தவள், இளநீரைக் குடித்துவிட்டு வெளியில் வந்து நிற்க, “செருப்புப் போட்டுக்கம்மா…” என வேலையைக் கவனிக்கச் சமையலறை சென்று விட்டான்.
கடந்த மூன்று நாள்களாக, காலை மாலை இரு வேளையும் நடைப்பயிற்சி செய்கிறாள் தேனிசை தேவி. மருத்துவர் அறிவுறுத்தியதால், காலை வேளை வீட்டு வாசலிலும், மாலை வேளை வெளியிலும் நடக்கிறாள். சரியாக நான்கு மணிக்குத் தன் வேலைகளை முடித்து விட்டு வருபவன், மாணிக்கத்திற்குச் சொந்தமான விவசாய நிலம் வரை அழைத்துச் செல்வான்.
அவர் விட்டுச் சென்ற சொத்தால் தான், இன்று மூன்று உயிர்களும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது. அதை மீட்க ஏற்பாடு செய்த சந்தானத்தை, என்றும் மறக்க மாட்டான் குமரவேலன். இங்கு வரை அழைத்து வருபவன், ஓய்வெடுக்கச் சொல்லி விட்டுத் தன் வேலைகளைக் கவனிக்க, இயற்கையோடு அமருபவள் இதயம் மெல்ல இலகுவாகிறது. இருவரும் சேர்ந்து இல்லம் திரும்ப இரவு ஏழு மணி ஆகிவிடும்.
நேற்றிலிருந்து இதைக் கவனித்த கருப்பன், தன் தந்தையிடம் சொல்லிக் குமைந்து கொண்டிருக்க, “குமரன் விஷயத்துல தலையிடாதன்னு சொல்லிட்டேன்.” எனப் பல்லைக் கடித்தார்.
“என்னப்பா… ரொம்ப மிரட்டுற மாதிரி இருக்கு. சும்மாவே நண்பன் புள்ளனு உருகுவிங்க. இப்பப் போனவரு திரும்ப வந்துட்டாரு. உங்க நட்பு, பாசத்துக்காக என் மரியாதைய விடச் சொல்றீங்களா?”
“ஆமாடா. விட தான் சொல்றேன். என் மேல எவ்ளோ மதிப்பும் மரியாதையும் வச்சிருந்தா, இவ்ளோ நடந்ததுக்கு அப்புறமும் தேடி வந்து பேசி இருப்பான். அப்படிப்பட்ட ஒருத்தனுக்குத் துரோகம் பண்ண வச்சிட்டியே. நீ செய்யப் போற காரியம் மட்டும் முன்னாடியே தெரிஞ்சிருந்தா, என்ன பண்ணியாது தடுத்திருப்பேன்.” என்ற தந்தையின் பேச்சை உதாசீனம் செய்தவன்,
“அவர நம்பாதீங்கப்பா.” என்றான்.
“உன்னத் தான்டா நம்பக் கூடாது. நீ செய்யற கேடு கெட்ட வேலை தெரியாதுன்னு நினைக்கிறியா?” என்றவரைக் கேள்வி முடிச்சோடு கருப்பன் பார்க்க,
“அந்தக் காளி பொண்டாட்டி கிட்டச் சில்மிஷம் பண்றியாமே. உன்ன விட வயசுல பெரிய பொம்பளடா அவ. இந்த மாதிரி ஒரு அசிங்கத்தைப் பண்ண அசிங்கமா இல்ல உனக்கு.” என்றார்.
‘இவை எப்படித் தந்தைக்குத் தெரியும்.’ என்று ஒரு நொடி தடுமாறியவன், “இது என் தனிப்பட்ட விஷயம், இதுல நீங்க தலையிடாதீங்க.” என நழுவப் பார்த்தான்.
“எதுடா தனிப்பட்ட விஷயம்? உனக்காகப் பணத்தைக் கொட்டி ஜெயிலுக்குள்ள உட்கார வச்சிருக்கான் பேச்சி. அவன் மட்டும் இல்லனா, இந்நேரம் நீ சிதைந்து போயிருப்ப. இந்த விஷயம் மட்டும் காளிக்குத் தெரிஞ்சுது, அவ்ளோதான். அடுத்த பிரச்சனைக்குள்ள, என்னைத் தள்ளி விடாம ஒழுங்கா திருந்திடு.”
“சும்மா அவர் காப்பாத்தின மாதிரியே பேசாதீங்க. நானே பணத்தைக் காட்டிச் சரி பண்ணி இருப்பேன் அதுக்குள்ள மூக்கை நுழைச்சு நல்ல பேர் வாங்கிட்டாரு.”
“உன்னத் திருத்தவே முடியாதுடா.” என்றவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. தன் கை மீறிச் செல்லும் மகனை அடக்க வழி தெரியாது,
“கார்த்திகை பிறக்க அஞ்சு மாசம் தான் இருக்கு. அதுக்குள்ள எல்லாத்தையும் மூட்டை கட்டி வச்சிடு. ஐயப்பனுக்கு மாலை போட்டதுக்கு அப்புறம் எந்த வேலையும் பார்க்கக் கூடாது.” என்றிட,
“இந்த வருஷம் நான் மாலை போடல.” எனச் சொல்லிச் சென்றவன் பேச்சில் கொதித்தெழுந்தார் பொன்ராசு.
***
வளைகாப்பிற்குத் தேவையான அனைத்தையும் மாமியாரும், மருமகளும் சென்று வாங்கி வந்தனர். நடப்பதைப் பார்த்தும், ஒன்றும் செய்ய முடியாமல் ஒதுங்கிக் கொண்டார் பேச்சியப்பன். முன் நின்று செய்ய முடியாத ஒரே குறையைத் தவிர வேறு எந்தக் குறையும், தன் மருமகள் வளைகாப்பில் இருந்து விடக் கூடாது என்பதற்காகப் பார்த்துப் பார்த்து ஒவ்வொன்றையும் செய்தார் இந்திரா.
இவருக்குச் சீமந்தம் செய்து, இன்று இவரின் மருமகளுக்குச் சீமந்தம் செய்யும் அனுபவசாலியாக முத்துமாரி கட்டளை இட்டுக் கொண்டிருக்க, பேரப் பிள்ளையை வரவேற்க அனைத்தும் ஜோராக நடந்தது. இந்த ஏற்பாடுகள் தெரிந்தால் என்ன சொல்வானோ நம் நாயகன்!
“ஒரே படப்பா இருக்கு அத்தை”
“பேரன நினைச்சா?”
“இல்ல அத்தை. எப்படி நடக்குமோ என்னமோன்னு…”
“அதெல்லாம் நம்ம குலசாமி அருளால நல்லபடியா நடக்கும். காமாட்சி கிட்ட எல்லாத்தையும் சரியா ஒப்படைச்சிடு.”
“ம்ம்” என்றவர் பூ கட்டத் துவங்க, “அய்யாவைப் பார்க்கணும்.” எனக் காளியின் சகோதரன் வந்து நின்றான்.
எந்தப் பதிலும் சொல்லாமல் இந்திரா தன் வேலையைக் கவனிக்க, “மேல வாப்பா.” குரல் கொடுத்தார்.
படியேறி அவர் அறைக்குள் நின்றவன், “இந்தாங்க…” எனக் கட்டுப் பணத்தைக் கையில் கொடுக்க, “எதற்கு?” என்று விசாரித்தார்.
“இனிமே இந்தக் காசு வேணாம். அண்ணன் கிட்டயும் சொல்லிட்டேன். பொன்ராசு அய்யா மகன் தொல்லை, நாளுக்கு நாள் அதிகமா இருக்கு. அண்ணி கிட்ட வம்பு பண்ணிட்டு இருந்தவன், இப்போ அவங்க பொண்ணு கிட்டயும் வம்பு பண்றான். பெரிய இடத்து ஆளுங்களைப் பகைச்சிக்க வேண்டாம்னு நினைக்கிறோம். உங்களுக்கும், எங்களுக்கும் நடுவுல உறவா இருக்கற இந்தப் பணம் வேண்டாம்னு அண்ணி கொடுக்கச் சொல்லிட்டாங்க.”
“ஏன்டா, என் மேல வச்சிருக்க மரியாதையும் நம்பிக்கையும் அவ்ளோதானா? அன்னைக்கே உங்க அண்ணன் கிட்ட என்ன சொல்லிட்டு வந்தேன்? திரும்ப ஒரு தடவ பிரச்சனை பண்ணா, என்ன பண்ணனும்னு தோணுதோ அதைப் பண்ணு. முழு ஆதரவையும் நான் தரேன்னு சொன்னனா இல்லையா? பொம்பளைங்க விஷயத்துல போக்கு சரியா இருக்கணும். பேச்சியப்பன் வம்சத்துக்குப் பொண்ணுங்க மானம் ரொம்ப முக்கியம்.
என்ன பண்றதுன்னு யோசிக்குறதை விட்டுட்டுப் பணத்தைத் திருப்பிக் கொடுக்குற. இந்த மாதிரி வக்கெத்த ஆம்பளைங்க வீட்ல இருக்குறதால தான், அவன் அவ்ளோ தைரியமா நெருங்கி வரான். கொலை பண்றவனுங்க மாதிரியாடா பேசுறீங்க. வெட்டி வீசிட்டு, அய்யா காப்பாத்துங்கன்னு வந்து நின்னிருந்தா சந்தோஷப்பட்டு இருப்பேன்.”
“கருப்பன், பொன்ராசு அய்யா பையன். அதுவுமில்லாம உங்க நண்பரோட மகன்.” என அவன் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே,
“ஒழுக்கங்கெட்டவனைப் பாதுகாப்பன்னு நினைச்சியாடா. என் வம்சத்துப் பொண்ண ஒருத்தன் இழுத்துட்டுப் போய் தாலி கட்டுனதால தான் வெட்டிப் போடுங்கன்னு சொன்னேன்.” என்றவரைத் திகைப்பு மாறாது பார்த்தான்.
செய்யாத ஒன்றைச் செய்ததாக அவனை நம்ப வைத்தவர், “பொண்ணுங்க மானத்தைக் கெடுக்கிற கேடுகெட்டவன் எவனா இருந்தாலும், மரணம் ஒன்னு தான் பதிலா இருக்கணும். என் பக்கம் இருந்து என்ன உதவி வேணும்னு மட்டும் சொல்லுங்க.” என ஏற்றி விட்டார்.
“அண்ணன் கிட்டப் பேசிட்டு சொல்றேன்.”
“அது என்னடா பேசிட்டுச் சொல்றன்னு நேரத்தை வீணடிச்சிக்கிட்டு. இப்பவே பேசு.”
“இங்க இருந்துட்டு ஜெயில்ல இருக்க அண்ணன்கிட்ட எப்படிப் பேச முடியும்?”
“என்னடா, பேச்சியப்பனைப் பார்த்தா முட்டா கிறுக்கன் மாதிரித் தெரியுதா? உன் அண்ணன் கிட்ட, யாருக்கும் தெரியாம போன்ல பேசுறன்னு தெரியும்.” என்று போட்டு உடைத்தவர் தன் முகத்தைக் குரோதமாக மாற்றிக் கொண்டு,
“எல்லாமே என் காதுக்கு வந்துடும். விசுவாசமா இருக்குறவனை ஒன்னும் பண்ண மாட்டேன். விசுவாசத்தை மறந்து நன்றி கெட்டதனமா நடந்தா, உசுரு மிஞ்சாது இந்தப் பேச்சியப்பன் கிட்ட.” என அவன் தோளைத் தட்டினார்.
பேசிக் கொண்டிருப்பவரைப் பார்க்கப் பயமாக இருந்தது காளியின் தம்பிக்கு. அவர் கொடுத்த அழுத்தத்தில் அண்ணனைத் தொடர்பு கொண்டவன், நடந்த அனைத்தையும் தெரிவிக்க, “என் பொண்ணு கிட்டப் போற அளவுக்குத் துணிஞ்ச அவனைச் சும்மா விட்டு வைக்கக் கூடாது. வாழ்க்கை முழுக்க இந்தக் காளி குடும்பத்துப் பொம்பளைங்களைத் தொட நினைச்சதுக்கான தண்டனையை அனுபவிச்சுக்கிட்டே இருக்கணும்.” என்றவன் பேச்சியப்பனிடம் ஃபோனைக் கொடுக்கச் சொன்னான்.
“சொல்லுடா விசுவாசி”
“நான் வெளிய வரதுக்கு ஏற்பாடு பண்ணுங்க அய்யா.”
“இதான்டா வீரனுக்கு அழகு. ஒன்னும் கவலைப்படாத. உன்னையும், உன் குடும்பத்தையும் காப்பாத்த வேண்டியது என்னோட பொறுப்பு. பொன்ராசுவால உனக்கு எந்த ஆபத்தும் வராது.”
“ரொம்ப நன்றிங்க அய்யா. வாழ்க்கை முழுக்க உங்களுக்கு விசுவாசமா இருப்பேன்.”
காளியின் தம்பியை அனுப்பி வைத்தவர், கண்ணாடி எதிரே நின்று சத்தம் இல்லாமல் சிரித்தார். அந்தச் சிரிப்புக்குப் பின்னால் இருக்கும் விரோதம், பளபளத்தது கண்ணாடியில். தனக்கான நேரம் நெருங்கி விட்டதை அறியாத கருப்பன்,
“என்னடி, ரொம்பத் துள்ளுற? உன் புருஷன் வாழ்க்கை முழுக்க ஜெயில்ல தான் இருப்பான். கொஞ்சம் எனக்கு அனுசரிச்சு நடந்துக்க. அப்பப்ப உன் பொண்ணையும் அனுசரிக்கச் சொல்லு. வசதி வாய்ப்பை அள்ளிக் கொடுக்கிறேன்.” எனக் காளி மனைவியோடு தகராறு செய்து கொண்டிருந்தான்.
இந்தக் காரணத்திற்காகத் தான் ஐயப்பன் மாலையைத் தவிர்த்தான். வருடம் தவறாமல், தந்தையோடு மாலை அணிந்து சபரிமலைக்குச் சென்று வருபவன் வருங்காலத்தை ஐயப்பன் கண்டு கொண்டானோ என்னவோ, அவன் வாயாலேயே மாலை அணிவிக்க மாட்டேன் எனச் சொல்ல வைத்து விட்டார்.
தெய்வத்திற்கு மேலான சக்தி இவ்வுலகில் உண்டோ! எல்லாம் அறிந்து அவரவருக்கு ஏற்றதை நடத்தி வைக்கும் அந்தக் கடவுள் இவனுக்கு ஆக வேண்டியதைச் செயல்படுத்திக் கொண்டிருக்க, வெளிவரும் நாளுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறான் காளி. அவரவர் எண்ணப்படி நடந்து விட்டால் தெய்வத்திற்கு என்ன வேலை இருக்கிறது? போட்டு வைத்த திட்டத்தையும் தாண்டி நடக்கப் போவது தான் சம்பவமே.
***
“ஒன்னு கேட்கவா?”
பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தவன் திரும்ப, “தெய்வானைக்குக் கல்யாணம் முடிவானா என்ன பண்ணுவ?” கேட்டவளின் விழி நோக்க முடியாமல் திரும்பிக் கொண்டான்.
“இவ்ளோ வருத்தப்படுறதுக்குப் பதிலா, அந்தப் பிள்ளையைச் சமாதானம் பண்ணிக் கல்யாணம் பண்ணிக்கலாம்ல.”
“பிள்ளைக்கு அப்பா என்ற இடத்துல என் பேரைப் போட்டுட்டு எப்படிம்மா…”
“அதுதான் உன்னோட பிரச்சனையா? குழந்தை பிறந்து சர்டிபிகேட்ல வர்றது தான் பேரு. நீ தெய்வானையைக் கல்யாணம் பண்ணிக்க.”
“ஏற்கனவே, நான் ஒரு பொண்ணு கழுத்துல தாலி கட்டிட்டேன்.” என்றவன், தேய்த்த பாத்திரங்களை எடுத்துக் கொண்டு உள்ளே சென்று விட, வாயடைத்துப் போனாள் தேனிசை தேவி.
குமரவேலன் சொன்ன வார்த்தைக்குப் பின் இருக்கும் உண்மையான காரணம் விளங்கவில்லை. மனைவி என்ற ஸ்தானத்தைத் தனக்குக் கொடுக்கிறானா என்ற ஆராய்ச்சியில் ஈடுபடக்கூட மனம் விரும்பவில்லை. எப்படியாவது அவனை மாற்றித் தெய்வானையோடு சேர்க்க நினைத்தவள் எண்ணத்தை ஒரு நொடியில் சரித்து விட்டான்.
கையை ஊன்றிக்கொண்டு எழுந்தவள் உள்ளே நுழையப் போகும் நேரம், “இனிமே இந்த மாதிரிக் கேட்காதம்மா. அந்தப் புள்ளைக்கு என்னை விட நல்ல பொருத்தமான புருஷன் அமையனும்னு கடவுள்கிட்ட வேண்டிகிட்டு இருக்கேன்.” என்று விட்டு வெளியில் சென்று விட்டான்.
எப்போதும் இந்த நேரம் வெளியில் செல்ல மாட்டான். சென்றவன் உடனே வந்து விடுவான் என்று காத்துக் கொண்டிருந்தவள், ஒரு மணி நேரமாகக் காத்துக் கொண்டு மட்டும் தான் இருக்கிறாள். அதற்கு மேல் பொறுக்க முடியாமல் அவனை அழைக்க, “சொல்லும்மா” என்றான்.
“எங்க இருக்க?”
“இங்க தான், கோவில் பக்கத்துல.”
“அங்க என்ன பண்ற?”
“சும்மா தான்மா”
“சரி, வீட்டுக்கு வா”
“இல்லம்மா, நான் வர லேட் ஆகும். நீ சாப்பிட்டுட்டு சீக்கிரம் படு.”
“என்ன உன் பிரச்சனை?”
“எனக்கு என்னம்மா?”
“தெய்வானையைப் பத்திப் பேசாதன்னு சொல்லிட்ட. நானும் சரின்னு கேட்டுகிட்டேன். அப்புறம் எதுக்கு சீன் போட்டுட்டு இருக்க. போனை வச்ச அஞ்சு நிமிஷத்துல வீட்டுக்கு வரல, அவ்ளோதான்…” என்றவள் சொன்னது போல் சரியாக வந்தவனைக் கண்டு முறைத்தவள்,
“உட்காரு, சாப்பிடலாம்” என்றாள்.
“பசிக்கலம்மா”
“அதெல்லாம் பசிக்கும், உட்காரு.” என்ற பின்னும் அமர அவன் மறுக்க, “உட்கார்ந்து தொலைடா” என எடுத்து வந்த தட்டை விசிறி அடிக்க, நங்கென்று தலையில் விழுந்து கிறுகிறுக்க வைத்தது குமரவேலனை.
வலியில் துடிப்பவனைக் கண்டு கொள்ளாது, உணவுப் பாத்திரங்களைத் தொம்மென்று தரையில் வைத்து, “எப்பப் பாரு, நீ நல்லவனாகி என்னை வில்லி ஆக்கிடு.” என்றவளைப் பாவமாகப் பார்த்துக் கொண்டிருக்க,
“மூஞ்சிய அப்படி வைக்காதடா.” என விரல் நீட்டினாள்.
தேனிசை தேவி முகத்தில் தெரியும் கோபத்தில், பயந்து நடுங்கியவன் அமைதியாகச் சாப்பிட அமர, அவனுக்கு வேண்டிய சாப்பாட்டைப் போட்டு அவன் பக்கம் தள்ளி விட்டாள்.
‘ஆத்தாடி! நல்லவேளை தட்டைத் தூக்கித் தலையில அடிக்கல.’
இருவரும் அமைதியாகச் சாப்பிட ஆரம்பித்தார்கள். அன்னை கொடுத்த சத்தத்தில், உள்ளே இருந்த குழந்தை உலாவி சிணுங்க, ‘உனக்காக இங்க ஒருத்தன் எவ்ளோ பாடுபடுறான்னு பாரு தங்கம். நம்ம ரெண்டு பேரும் ரொம்பக் கடமைப்பட்டு இருக்கோம். அம்மாவால இவனுக்கு எந்தச் சந்தோஷத்தையும் கொடுக்க முடியாது. நீயாது இவன் எதிர்பார்க்கிற சந்தோஷத்தைக் கொடு.’ குழந்தையோடு பேசிக் கொண்டாள்.
சாப்பிட்டு முடித்தவள் தட்டை வாங்கிக் கொண்டு கழுவி வைத்தவன் இன்னும் இரண்டு நாளில் வளைகாப்பு இருப்பதால் அதைப் பற்றிப் பேசத் துவங்கினான். தூக்கத்தில் நெளிபவளைக் கவனித்து, தூங்கச் சொன்னவனும் படுத்தான்.
இருள் சூழ்ந்த வீட்டில் வெளிவராத சிசுவின் இதயத் துடிப்போடு, இந்த இருவரின் இதயத் துடிப்பும் ஏதேதோ எண்ணங்களில் சுழன்று கொண்டிருந்தது. குமரவேலன் சிந்தனையில் தன் தூக்கத்தைத் தொலைத்தவள்,
“நீ தாலி கட்டுனவ என்னைக்கும் உனக்கானவளா இருக்க மாட்டா…” என அவன் காதில் விழுமாறு கூறினாள்.
முழித்திருப்பதை அறிந்து பேசியவள் அவன் பதிலுக்காகக் காத்திருக்க, பெருமூச்சோடு சில நிமிடங்களைக் கழித்து விட்டுப் பதில் சொன்னான்.
“எனக்காக இருக்க வேண்டிய அவசியம், உனக்கும் இல்ல. எனக்கும் இல்லை. ரெண்டு பேருமே இந்தக் குழந்தைக்காக தான் இருக்கப் போறோம்.” என அந்த இரவை முடிவுக்குக் கொண்டு வரக் கண்களை மூடினான்.
தாய் சொல்லியதையும், தந்தையானவன் கொடுத்த பதிலையும் கேட்ட அந்தப் பிஞ்சு உசுரு, இவர்களுக்குப் பதில் கொடுக்கக் காத்துக் கொண்டிருக்கிறது வெளிவரும் நாளுக்காக.
தெம்மாங்கு ஒலிக்கும்…