தெம்மாங்கு 28
“என்ன அப்படிப் பார்க்கறீங்க? எனக்கு எப்படி உண்மை தெரியும்னா?. அன்னைக்கு நீங்க குமரனைப் பார்க்கப் போகும்போது நானும் பின்னாடி வந்தேன். என் புள்ள பேசின எல்லாத்தையும் கேட்டேன். அவனோட துடிப்பு, பெத்த வயித்தைக் கொதிக்க வச்சிடுச்சு. ஒத்தப் புள்ளையோட நிலமையைக் கண்ணு முன்னாடி பார்த்தும், ஒன்னும் செய்ய முடியாத அம்மாவா அருவருப்பா நின்னுட்டு இருக்கேன். கௌரவம், நட்புன்னு ஓயாமல் பீத்திட்டு இருந்த உன்ன, இப்படி வீட்டோட உட்கார வச்சான் பாரு. அங்க தான் கடவுள் இருக்கான்.
நட்பை விட என் மகன்தான் பெருசுன்னு பொன்ராசு காட்டிட்டாரு. ஆனா, நீ… ச்சீ! இத்தனை நாள் உண்மை தெரிஞ்சும், ஒரு வார்த்தை பேசாம இருந்தது உனக்குப் பயந்து இல்ல, அத்தைக்காக! ஒருவேளை, நான் பெத்த ஒத்த வாரிசு செத்துப் போயிருந்தா, இந்நேரம் நானும் உசுரோட இருந்திருக்க மாட்டேன். கல்யாணமானதுல இருந்து உன் கொடுமையைத் தாங்கி, தலை குனிந்து வாழ்ந்தது என் மகனுக்காக மட்டும் தான். அந்த மகனைப் பிரியக் காரணம் ஆகிட்டியேடா நாசமாப் போறவனே… எனக்கு அவனுங்க ரெண்டு பேரை விட, உன்னப் பார்த்தா தான் பத்திக்கிட்டு எரியுது.” என்றவரின் வார்த்தையை எதிரில் இருந்தவருக்கு நம்பவே முடியவில்லை.
பிரம்மை பிடித்தவர் போல் பேச்சியப்பன் நின்றிருக்க, “தெய்வத்தைக் கும்பிடுறதுக்குப் பதிலா என் புள்ள உசுரக் காப்பாத்தி, தன்னோட குடும்பத்தையே அழிச்சுக்கிட்ட அந்தத் தெய்வம் அன்புவை தான் அதிகம் கும்பிடுறேன். பெத்த வயித்தக் குளிர வச்ச அவனும் எனக்கு மகன் தான். அவன் வாரிசை ஒதுக்கி வச்சா தெய்வம் என்னை மன்னிக்குமா? கேடு கெட்ட உன் நட்பை விட, உசுரையே கொடுத்த அவங்க நட்பு ஆயிரம் கௌரவத்துக்குச் சமம். அந்தக் கௌரவத்துக்கு முன்னாடி நீங்களும், உங்க கூட இருந்தவரும் ரொம்பக் கேவலமானவங்க.”
கௌரவத்தின் பிரதிபலிப்பைக் காட்ட வீட்டைக் கட்டும் பொழுது தேக்கு மரம் தான் வேண்டும், அதுதான் அசையாமல் என்றும் நிற்கும் என்றவர், இன்று தேக்கு மரத்தை விடத் திடமான தூணாக நின்று கொண்டிருக்கிறார் அந்த வீட்டில். மனைவி பேசிக் கொண்டிருக்கும் வார்த்தைகள் காதில் விழுந்தாலும், எந்த உணர்வையும் வெளிக்காட்ட முடியாத ஜடமாக மாறிவிட்டார். அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத இந்திரா, தாலி கட்டியவரை நேருக்கு நேர் நின்று சந்தித்து,
“நீங்க என்ன சொன்னாலும், பொறக்கப் போற அந்தக் குழந்தை தான் இந்த வீட்டு வாரிசு. நாளைக்கே எனக்கு எதுன்னா ஆகிட்டா, கொள்ளி போடப் போற பேரப்பிள்ளை அது. இன்னும் தெளிவாச் சொல்லனும்னா… தேனிசை தேவியும், குமரவேலனும் மனசு மாறி நடந்த எல்லாத்தையும் மறந்துட்டு, கணவன் மனைவியா வாழ்ந்து ஒரு பிள்ளையைப் பெத்துக் கொடுத்தா கூட இந்தக் குழந்தை தான் இந்த வீட்டோட வாரிசு. இதை மாத்த உங்களாலயும், உங்க கௌரவத்தாலயும் முடியாது.” என்ற குரலில் இருந்த மிடுக்கு அதிரவிட்டது கேட்டுக் கொண்டிருந்தவரை.
“நடக்க வேண்டியதைப் பேசு இந்திரா. இவன்கிட்டப் பேசி நமக்கு என்ன கிடைக்கப் போகுது?”
“உண்மை தான் அத்தை.”
“நீ என்னம்மா சொல்ற?”
“இதுல நான் சொல்ல என்ன இருக்கு? எதுவும் செய்ய முடியாத பாவியா இருக்கேன். தாலி கட்டுன மனுஷன் தான் மனசாட்சி இல்லாம இருக்கான்னு பார்த்தா, வயித்துல பிறந்ததும் அதைவிட மோசமா இருக்கு. என் பொண்ணு நல்லா இருக்கணும்னு வேண்டுறதைத் தவிர வேற ஒன்னும் பண்ண முடியாது.”
“என்ன இந்திரா பண்ணலாம்?”
“நேரடியா நம்ம எதுவும் செய்ய முடியாது அத்தை. காமாட்சி அக்காவ விட்டு தான் செய்ய வைக்கணும். பெத்தவளா பவானியும், மாமியாரா நானும் செய்ய வேண்டியதை அவர் மூலமா செஞ்சி சந்தோஷப்பட்டுக்க வேண்டியது தான். இந்த மாதிரி மனுஷங்களைக் கட்டுன எங்களுக்கு இதுதான் கதி.”
“தேனிசைக்குத் தெரிஞ்சா ஏத்துக்க மாட்டா அண்ணி.”
“என் மகன் கூட தான் ஏத்துக்க மாட்டான். அதுக்காக என்ன பண்ண முடியும்? காமாட்சி அக்காகிட்டப் பேசித் தெரியாத மாதிரிச் செய்யலாம்.” என்றவரின் பேச்சைக் கேட்ட பவானி அங்கு நின்றிருந்த பேச்சியப்பனைப் பார்த்தார்.
அதைப் புரிந்து கொண்ட குமரவேலனின் தாய், “இவர் சொல்லிடுவாருன்னு பயப்படுறியா? செத்த பாம்பு படம் எடுத்து ஆடாது. பொம்பளைங்க நம்பகிட்ட வீரத்தைக் காட்டாம முதுகுல குத்துனவங்க கிட்டக் காட்டட்டும்.” என்றார்.
அங்கிருந்து மெல்ல நகர்ந்து தன் அறைக்குச் சென்ற பேச்சியப்பன், ஜன்னல் கம்பிகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு, “பாம்பு செத்தாலும், விஷமுள்ள பாம்பு தான்னு காட்டுறேன். எப்படி என் கூட இருந்து குழி பறிச்சானுங்களோ, அதே மாதிரி அவனுங்க கூட இருந்து குழி பறிச்சு இந்தப் பேச்சியப்பன் யாருன்னு காட்டுறேன்.” என்று சபதம் எடுத்தார்.
***
“என்னமா, முகம் ஒரு மாதிரியா இருக்கு?”
“என்னன்னே தெரியல, பின் இடுப்பு வலிக்கிற மாதிரி இருக்கு.”
“என்னம்மா சொல்ற?”
“மதியத்துல இருந்து இப்படித்தான் இருக்கு.”
“அப்பவே சொல்லிருந்தா ஆஸ்பத்திரி போயிட்டு வந்து இருக்கலாம்ல.”
“சரியாகிடும்னு விட்டுட்டேன்.”
“கொஞ்சம் கூடப் பொறுப்பே இல்லம்மா உனக்கு. எத்தனைத் தடவை சொல்லி இருக்கேன், எதாவது வலிச்சா உடனே சொல்லுன்னு.” என்றவன் சுடு தண்ணீர் எடுத்து வந்து சுடுநீர் பையில் ஊற்றினான்.
வலி பொறுக்க முடியாமல், கண்களை மூடிப் பல்லைக் கடித்துக் கொண்டிருந்தாள் தேனிசை தேவி. நாற்காலியை எடுத்துப் போட்டு, “உட்காரும்மா” என அவளை அமர வைத்தவன்,
“இதை முதுகுல வச்சுக்க.” என்றான்.
“ஐய்யோ! வைக்க முடியல.”
“ஆஸ்பத்திரி வேணா போகலாமா?”
“இன்னைக்கு ஒரு நாள் பார்க்கலாம்.”
வலி பொறுக்க முடியாமல், இருக்கையில் இருந்து எழுந்தவள் தரையில் படுத்து விட, என்ன செய்வது என்று தெரியவில்லை குமரவேலனுக்கு. காமாட்சியை அழைக்க ஓடியவன், அவர் இல்லாததால் மீண்டும் அவள் முன்பு நிற்க, மிகவும் சோர்ந்து காணப்பட்டாள்.
“கொஞ்சம் அதை எடுத்துத் தரியா?”
“இந்தாம்மா…”
வலது பக்கமாகப் படுத்திருந்தவள், சுடுநீர்ப்பையை பின் முதுகிற்குப் பின்னால் அரை நொடி பிடித்திருக்க, அதற்கு மேல் முடியவில்லை. அவள் அவஸ்தையைப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அரை நொடி என்றாலும், அந்தச் சூடு இதமாக இருந்தது கர்ப்பிணிக்கு.
பிள்ளை உருவான நாளில் இருந்து, அவை ஓரளவிற்கு வளர்ந்து நடமாடும் வரை யாராவது ஒருவரின் துணை அவசியம் தேவை. முன்பெல்லாம் கூட்டுக் குடும்பத்தில், பார்த்துக் கொள்ள ஆயிரம் பேர் இருப்பார்கள். இன்றைய சூழ்நிலையில் அது சாத்தியம் இல்லை என்றாலும், ஒருவராவது கர்ப்பிணிப் பெண்ணோடு இருக்க வேண்டும். குறைந்தபட்சம் அது கணவனாகவாவது இருக்க வேண்டும்.
அப்படியான எந்தச் சூழ்நிலையும் அமையாத, பாவப்பட்ட கர்ப்பிணிப் பெண் அசதியில் கண் மூடியபடி, “ம்மா…” எனப் பிதற்றிக் கொண்டிருந்தாள்.
பெரும் இடைவெளிக்கு இடம் விட்டு, அவளோடு பழகிக் கொண்டிருந்தவன் நெருங்க முடியாமல் தத்தளிக்க, “வந்துட்டாங்களான்னு போய் பார்த்துட்டு வரியா?” என்றதும் காமாட்சியைத் தேடி ஓடியவன் சில நொடிகளில் வீடு திரும்பி, “வரலம்மா…” என்றான்.
“கால் வீங்கி இருக்கான்னு பாரு.”
சிறு சிறு விரல்களைக் கொண்ட அவள் கால்களை ஆராய்ந்தவன் மிகவும் பரிதாபப்பட்டான். நேரம் கடக்க, அவள் சோர்வு நிலை அதிகரித்தது. இடைவெளிகளை எல்லாம் குறைத்து அவள் அருகே அமர்ந்தவன்,
“நான் வேணா வைக்கவாம்மா?” எனத் தயங்கிக் கொண்டு கேட்டான்.
வலிகளைத் தனக்குள் அடக்கிக் கொண்டவள், நேருக்கு நேராக அவன் விழியைச் சந்திக்க, “காமாட்சி அத்தை எப்போ வருவாங்கன்னு தெரியல. ரொம்ப நேரம் வலி பொறுக்க முடியாது உன்னால. கை படாம வைக்கிறேம்மா.” என்றதும்,
“ம்ம்…” சங்கடத்தோடு கண் மூடிக் கொண்டாள்.
தன் விரல் அவள் உடலைத் தொட்டு விடாதவாறு, சுடுநீர்ப்பையை எடுத்துக் கீழ் இடுப்புப் பக்கம் வைத்து வைத்து எடுக்க ஆரம்பித்தான். அவனது இந்த நெருக்கமே சொல்ல முடியாத நெருக்கடிக்குத் தள்ளியது கர்ப்பிணிப் பெண்ணை. இதில் அவன் செய்யும் வேலை, வலியைத் தாண்டி பெரும் வலியைக் கொடுத்தது. கூடவே உடலில் படும் சூடு, மெல்ல வலியைக் குறைக்கவும் ஆரம்பித்தது. உடலுக்குத் தேவையானதைக் கொடுப்பதால் சங்கடம் தள்ளிப் போனது.
உதவியாக எண்ணியவள் அதை முழுவதும் ஏற்றுக் கொண்டாள். முதலில் சங்கடத்தோடு கையாண்டவன், அவள் முகத்தில் தோன்றும் நிம்மதியைக் கண்டு வேலையில் தீவிரம் காட்ட, “இந்தப் பக்கம் கொஞ்சம் வை” என்றாள்.
அவள் தேவைகளைச் சரியாகத் தீர்த்து வைத்தவன், “சூடு கம்மியான மாதிரி இருக்குமா. கொஞ்ச நேரம் இரு வந்துடுறேன்.” எனச் சென்றவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
***
“பேர் சொல்லுங்க சார்”
“தேனிசை தேவி!”
“உங்க பேரு?”
தன் பெயரைக் கூற வந்தவன், சட்டென்று வாயை மூடிக்கொண்டு தன் பக்கத்தில் நின்றிருந்த அவளைப் பார்க்க, தர்ம சங்கடமான நிலையில் நின்றிருந்தாள். இருவருக்கும் அன்றைய நாள் நியாபகத்திற்கு வந்தது. அவள் பெயரோடு தன் பெயரைச் சேர்க்க விருப்பமில்லாது,
“அவங்க பேர் மட்டும் போதும்” என்றான்.
“போன் நம்பர் சொல்லுங்க சார்”
தன் கைபேசி எண்ணைச் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, “குமரவேலன்!” என அவன் வாயை மூட வைத்தாள்.
சொல்லி விட்டு அங்கிருக்கும் இருக்கையில் அமர, கைபேசி எண்ணைக் கொடுத்தவன் அவள் பக்கத்தில் அமர்ந்தான். சங்கடம் கடலளவு மனதில் இருந்தாலும், தன்னைத் தைரியப்படுத்திக் கொண்டு,
“என்னம்மா, பேரச் சொல்லிட்ட?” கேட்டான்.
அவனை விட அதிக சங்கடத்தோடு பதில் சொன்னாள்.
“என் புருஷனா அந்தப் பேரைச் சொல்லல. குழந்தையோட அப்பாவா சொன்னேன். என் குழந்தைக்காக இவ்ளோ பண்ற உனக்காக, என்னால கொடுக்க முடிந்த சின்ன வெகுமதி.” என்று.
அவளுக்குத் தெரியாமல் சிறிதாக இதழ் வளைத்துச் சிரித்தவன், வெகு மாதங்களுக்குப் பிறகு நிம்மதியாக உணர்ந்தான். அவன் சிரிப்பை நிறுத்த மருத்துவர் அழைக்க,
“குழந்தை வெயிட் சரியா இருக்கு. நல்லா வாக்கிங் போங்க, முடிஞ்ச வரைக்கும் உங்களை வருத்திக்காம வேலை பாருங்க. மனசை சந்தோஷமா வச்சுக்கோங்க.” என்றார் மருத்துவர்.
“பிரசவ வலி வந்துட்டா என்ன டாக்டர் பண்றது? ஊர்ல இருந்து இங்க வர ரொம்ப நேரம் ஆகிடும். இவங்க வேற வலிச்சா கூட சொல்ல மாட்டேங்கிறாங்க.”
“டெலிவரி பத்தின எந்தப் பயமும் வேண்டாம் சார். நீங்க தைரியமா இருந்தா தான் உங்க மனைவியும் தைரியமா இருப்பாங்க. உருவான குழந்தைக்கு வெளிய வரத் தெரியும். இப்பதான் அதை எல்லாரும் ஒரு பெரிய மருத்துவமா மாத்திட்டாங்க. அவங்க கூட ஹெல்ப்புக்கு இருங்க. நடக்கும்போது உதவி பண்ணுங்க. வலி வர மாதிரி இருந்தா, வெயிட் பண்ணாம ஹாஸ்பிடலுக்கு வந்துருங்க. மத்ததை நாங்க பார்த்துப்போம்.” என்றவரின் பேச்சைக் கேட்க ஒரு விதமான பரவசம் தோன்றியது இருவருக்கும்.
***
“உள்ள வரலாமா?”
“வாங்கம்மா”
“குமரன் இல்ல?”
“எங்கயோ போனாங்க.”
“எப்ப வருவான்?”
“அதெல்லாம் எனக்குத் தெரியாதும்மா.” என்ற தேனிசை தேவியை ஒரு மாதிரியாகப் பார்த்துக் கொண்டிருந்தார் காமாட்சி.
அதைத் தாமதமாக உணர்ந்து கொண்டவள், “என்னம்மா?” கேட்க,
“உன் கூட ஒரே வீட்ல இருக்கிறவன், எப்ப வருவான்னு கூடத் தெரியாதுன்னு சொல்ற?” என்றார்.
“ஒரே வீட்ல இருக்கோமே தவிர, தனிப்பட்ட எந்தப் பேச்சு வார்த்தையும் எங்களுக்குள்ள இல்ல. இருக்க வேண்டிய அவசியமும் இல்லன்னு நினைக்கிறேன். போகும்போது சொல்லிட்டுப் போவாங்க, வண்டிச் சத்தம் கேட்டா வந்துட்டாங்கன்னு தெரிஞ்சிப்பேன். அவ்ளோதான்…”
“அவனாவது ஏதாச்சும் சொல்லுவானா?”
“சாப்பிடு, பத்திரமா இரு, ஏதாச்சும்னா போன் பண்ணு. அவ்ளோதான்…”
“எப்போதான் வாழ்க்கையைப் புரிஞ்சுக்கப் போறீங்களோ?” என்ற மனைவியை அடக்கிய சந்தானம் சம்பந்தப்பட்டவனை அழைத்தார். வீட்டுப் பக்கத்தில் வந்து விட்டதாகக் கூறியவன், அடுத்த ஐந்து நிமிடத்தில் அவர்கள் முன்பு நின்றான்.
“என்ன கிழவா?”
“பிள்ளையே பிறக்கப் போவுது. இப்பவாது மரியாதை கொடுக்கிறானான்னு பாரு.”
“என் பிள்ளையே வளர்ந்து, என்ன பெருசுன்னு கேக்கப் போறான் பாரு.”
“பையன்னே முடிவு பண்ணிட்டியா?”
“இல்லையா பின்ன. என் அன்பே எனக்கு மகனாய் பிறக்கப் போறான்.”
“உன் ஆசை நடந்தா சரி.”
“கண்டிப்பா நடக்கும். இந்த முறை குமரவேலன் தோற்க மாட்டான்.”
“சரி சரி, அது இருக்கட்டும். நாங்க ஒரு முக்கியமான விஷயத்தைப் பேச வந்திருக்கோம்.”
“சொல்லுங்க அத்தை”
“உன் பொண்டாட்டிக்கு வளைகாப்புப் பண்ணலாம்னு இருக்கோம்.”
குமரவேலன் சம்பந்தப்பட்டவளைப் பார்க்க, அவளோ பிடித்தமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். இவனும் அதைப்பற்றி இதுவரை யோசித்தது இல்லை என்பதால், “அதெல்லாம் வேணாம் அத்தை.” என்று விட்டான்.
“என்னடா வேணாம்? மாசமா இருக்க பொண்ணுக்கு இதெல்லாம் பண்ணனும்.”
“ஊர் கூடி விழா நடத்துற அளவுக்கு, எங்க மனசு அவ்ளோ சந்தோஷமா இல்ல கிழவா. அதுவும் ரெண்டு பேரை இழந்துட்டு முழுசா ஒரு வருஷம் கூட ஆகாம இதெல்லாம் பண்றது நல்லா இருக்காது.”
“துக்கம் நடந்த வீட்ல உடனே ஒரு நல்லது பண்ணனும்னு சொல்லுவாங்க. அதுவும் இல்லாம உன் நண்பனே உனக்கு மகனாய் பிறக்கப் போறதா சொல்லுற. அவன் வரவைக் கொண்டாட வேண்டாமா?”
காமாட்சியின் கடைசி வார்த்தையில் உடனே மனம் மாறிவிட்டது குமரவேலனுக்கு. நண்பன் வரவைக் கொண்டாட ஆசை துளிர்த்தது. சம்பந்தப்பட்டவளின் விருப்பம் இல்லாமல், இதைச் செய்ய முடியாது என்பதால் அவளைப் பார்க்க, அவளும் இவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
இருவரும் பார்த்துக் கொள்வதைக் கவனித்த மூத்த தம்பதிகள், “வாழ்க்கையோட அனுபவம் பத்தாது உங்களுக்கு. உங்களோட இந்த மௌனம், பல வருடங்களுக்குப் பிறகு ஏக்கமா தெரியும். அதுவுமில்லாம என் பொண்ணு மாதிரி நினைக்கிற உனக்கு, வளைகாப்புப் பண்ணிப் பார்க்கணும்னு ஆசைப்படுறேன். வேணுமான்னு யோசிக்கிற நீ, வளைகாப்பு முடிஞ்ச அன்னைக்கு ராத்திரி, உன்னை நீயே ஆசையா கண்ணாடில பார்த்துப்ப. கையில இருக்க வளையலும், அலங்கோலமா இருக்க சந்தனமும், உன்னோட தாய்மையைப் பாராட்டும். ரொம்ப யோசிக்காம அம்மா சொல்றதைக் கேளு.” என அவளைச் சம்மதிக்க வைத்தார்.
***
வெகு நாள்கள் கழித்து வீட்டை விட்டு வெளி வந்திருக்கிறார் பேச்சியப்பன். கணவன் செயலைப் பார்த்தும், பார்க்காதது போல் இந்திரா வேலையைக் கவனித்துக் கொண்டிருக்க, ஏறெடுத்தும் பார்க்கவில்லை முத்துமாரி. சொந்த வீட்டுக்குள் உண்டான ஒதுக்கத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் வெளியேறியவர், நேராக வந்து நின்ற இடம் பொன்ராசுவின் தோப்பு.
தன்னோடு எந்த நேரமும் இருக்கும் நண்பன் இல்லாது, தனியாளாகக் கட்டளையிட்டுக் கொண்டிருந்த பொன்ராசு, வந்து நின்றவரைக் கண்டு திகைக்க, “முக்கியமான விஷயம் பேசணும்.” என்றார்.
ஒரு சில நொடிகள் ஒன்றும் புரியாமல் தத்தளித்தவர் மன மகிழ்வோடு, “வா பேச்சு, வந்து உட்காரு. இப்பவாவது என்னைப் பார்க்கணும்னு தோணுச்சே.” எனத் தாவி அணைத்துக் கொள்ள வர, நகர்ந்தார்.
குமரவேலன் தந்தையின் செயலில் உள்ளம் வதங்கியவர், “இன்னும் என்னை மன்னிக்கலயா பேச்சி. நான் உன் மகனைக் கொலை பண்ண நினைச்சிருப்பன்னு நினைக்கிறியா? சத்தியமா என் பையன் பண்ணப் போற வேலை, எனக்குத் தெரியாது. எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் தான் அந்தப் படுபாவி என்கிட்டச் சொன்னான்.
அவனை ஏதாவது பண்ணிடுவேன்ற பயத்துல தான் மறைச்சேன். நீயும் என்னை மாதிரி ஒத்தப் புள்ளைய வச்சிருக்க ஆள் தான பேச்சி. என் பயம் உனக்குப் புரியாதா? குமரன் மேல கோபம் இருந்தது உண்மை. அதனால அவனைக் கஷ்டப்படுத்தனும்னு நினைச்சதும் உண்மை. ஆனா, கொலை பண்ற அளவுக்குப் போகல. என்ன இருந்தாலும், அவன் நான் தூக்கி வளர்த்த பையன். அதே மாதிரி தான், என் பையனும் நீ தூக்கி வளர்த்தவன்.” என்றார்.
“நடந்ததைப் பத்திப் பேச வரல.”
“இந்த ஒரு தடவை அவனை மன்னிச்சு விட்டுடு பேச்சி.”
“பட்ட அசிங்கத்துக்காக, என் மகனை இந்த அளவுக்கு நிறுத்திட்ட. உன் மகனை மட்டும் நான் மன்னிச்சு விடணுமா?” என்றவரின் வார்த்தையில் அரண்ட பொன்ராசு பேச வருவதற்குள்,
“பயப்படாத. என்னைக்கும் உன்னை மாதிரித் தரம் கெட்ட வேலையைச் செய்ய மாட்டேன். வார்த்தையால மட்டும் தான் தூக்கி வளர்த்த பையன்னு நீ சொல்ற. உண்மையாவே உன் மகனை, என்னோட மகனா நினைக்கிறதால தான் இங்க வந்திருக்கேன்.” என்றார்.
“புரியல பேச்சி”
“அன்புவக் கொலை பண்ணவனுக்கு, மாசம் மாசம் நான் தான் காசு கொடுத்துட்டு இருக்கேன். அவனோட தம்பி, ரெண்டு நாளைக்கு முன்னாடி வந்து என்னைப் பார்த்தான். உன் மகன் ஜெயில்ல இருக்குறவனோட பொண்டாட்டி கிட்டத் தப்பா நடந்துக்கிறானாம். விஷயம் பெருசாகுறதுக்குள்ள உன் மகனை அடக்கி வை.”
“பெரிய மனுஷன்னு காட்டிட்ட.” எனப் பேச்சியப்பனின் கைப்பிடித்து, “அந்தப் பாவிப் பையனப் பெத்துட்டுப் படாதபாடு பட்டுட்டு இருக்கேன். தயவு செஞ்சு என் கூட இருந்து அவனைத் திருத்து பேச்சி.” எனக் கெஞ்சியவரை மதிக்காது நகர்ந்தார்.
“மன்னிச்சிடு பேச்சி.” என்று பொன்ராசு காலில் விழ வர, “டேய்! என்னடா நீ… என்ன இருந்தாலும் நீ என் நண்பன்டா. உன்னை யாருக்காகவும், எதுக்காகவும் விட்டுத் தர மாட்டேன். இன்னொரு தடவை இந்த மாதிரி என்கிட்ட நடந்துக்காத…” எனத் தேனிசை தேவியின் தந்தையை அணைத்துக் கொண்டார் பேச்சியப்பன்.
நண்பன் மனம் மாறிவிட்டான் என்ற மகிழ்வில் நம்பி அணைத்தபடி பொன்ராசு நின்றிருக்க, பழிவாங்கும் புன்னகையை நண்பனுக்குக் காட்டாமல் மறைத்தார் பேச்சியப்பன்.
உண்மை தெரிவதற்கு முன்பாகவே, சம்பந்தப்பட்டவனின் தம்பி கருப்பன் மீது புகார் தெரிவித்துச் சென்றிருக்க, நண்பன் மகனைக் கண்டிக்க விரும்பாது அவன் போக்கில் விட்டு விட்டார். இன்று பழி வாங்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் நிற்பதால், அதைத் திணித்து உறவைப் புதுப்பித்து இருக்கிறார்.
***
“என்னடா எப்படி இருக்க?”
“உங்க புண்ணியத்தால நல்லா இருக்கேங்க அய்யா.”
“மாசம் மாசம் காசு வந்து சேருதுல.”
“அதெல்லாம் கரெக்டா வருதுங்க அய்யா.”
“சரி சரி, எனக்கு விசுவாசமா இருக்கியே, எப்படி இருக்கன்னு பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்.” என்றவர் அங்கிருந்து விடை பெற நகர,
“அய்யா…” எனத் தயக்கமாக அழைத்தான் காளி.
வந்த வேலை நடக்கப் போவதால் மனதிற்குள் சிரித்தவர், ஒன்றும் அறியாத போல் அவனைப் பார்க்க, “பொன்ராசு அய்யா மகன் தொந்தரவு பண்ணிட்டு இருக்கிறதா என் பொண்டாட்டி வந்து அழுதுட்டுப் போறா. காசுக்கு விசுவாசமா இருக்கனே தவிர, என் பொண்டாட்டி தான் எனக்கு எல்லாம். கொஞ்சம் அவர்கிட்டச் சொல்லிப் புரிய வைங்க.” எனத் தயங்கிக் கூறினான்.
“இன்னுமா அவன் தொந்தரவு பண்ணிக்கிட்டு இருக்கான்?” என்றதற்கு அவன் தலையசைத்தான்.
“எனக்கு இந்த மாதிரி வேலை எல்லாம் பிடிக்காது காளி. பொண்ணுங்க விஷயத்துல சுத்தமா இல்லனா, நானே அவனை வெட்டிப் போட்டுட்டுப் போயிட்டே இருப்பேன். திரும்பவும் கண்டிக்கிறேன், கேக்குறானான்னு பாரு. இல்லன்னா, உனக்கு என்ன பண்ணனும்னு தோணுதோ சொல்லு பண்ணிடலாம். எதை நினைச்சும் கவலைப்படாத. எனக்கு விசுவாசியா இருக்க உனக்காக, என்ன வேணாலும் செய்யத் தயாரா இருக்கேன்.” என்றவரின் பேச்சு ஊசியாக உள்ளுக்குள் இறங்க, மெல்ல அவர் பேச்சுக்கு அடிமையாக ஆரம்பித்தான்.
***
நள்ளிரவு நேரம் தூங்கிக் கொண்டிருந்தவளுக்கு முழிப்புத் தட்டியது. எழுந்தமர்ந்தவள், நன்றாக உறங்கிக் கொண்டிருப்பவனைக் கண்டு எழுந்து நின்றாள். என்றும் அவள் அசையும் பொழுது என்னவென்று கேட்பவன் இன்று ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.
இரவு நேரத்தில், வெளியில் செல்லப் பயம் தேனிசை தேவிக்கு. மாதம் நெருங்கத் துவங்கியதும், அடிக்கடி இரவு நேரத்தில் இது போன்று வெளியில் செல்ல வேண்டிய தேவை வரும். எப்பொழுது எழுந்தாலும் அவனும் எழுந்து விட, பிரச்சனை இல்லை கர்ப்பிணிக்கு. இன்று எழுந்தவள், சில நிமிடங்கள் காத்துக் கொண்டிருந்தும் பலனில்லை. வாய்விட்டு அவனை எழுப்பவும் மனமில்லை.
தன்னைத் தைரியப்படுத்திக் கொண்டு கதவு வரை வந்தவள், அடுத்த அடி எடுத்து வைக்க நடுங்கினாள். இயற்கை உபாதையை அடக்கவும் முடியவில்லை அவளால்.
‘எரும மாடு மாதிரித் தூங்குறான் பாரு. இதுல வாய் கிழியப் பாதுகாப்புக்கு இருக்கன்னு சொல்லுவான். எந்திரிச்சுத் தொலடா காண்டாமிருக மூக்கா.’
தேனிசை தேவி எழுந்து அரை மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டது. அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாத நிலை வந்து விட்டது. கதவைத் திறந்தவள் வெளியே இருக்கும் இருட்டைக் கண்டு அரண்டு நின்றாள். அவனை எப்படி எழுப்புவது என்று யோசித்தவள், கதவை வேகமாகத் தட்டி விட்டு வெளியே செல்வது போல் பாவனை செய்ய, மிரண்டு எழுந்தவனுக்கு ஒன்றும் புரியாத நிலை.
வெளியில் செல்பவளைக் கவனித்துச் சுதாரித்தவன், “இரும்மா, நான் வரேன்.” என்றிட,
“நீ இல்லாம தனியா போக முடியாதா என்னால. எப்பப் பாரு கூட வர்றேன்னு தொல்லை பண்ற.”
தினமும் அவள் சொல்லும் வாசகம் என்பதால், அலட்டிக் கொள்ளாமல் பின்னே நடக்க, நடப்பதை நிறுத்தினாள் தேனிசை தேவி.
“என்னம்மா?”
“தனியா இருக்க பயந்துட்டுத் தான என் பின்னாடி வர…
முன்னாடி நட, உனக்குக் காவலா வந்து தொலையுறேன்.”
“இல்லம்மா…” எனப் பேச வந்தவனைக் கண்டு கொள்ளாது நடக்கச் சைகை செய்ய, அப்பிராணிப் பிள்ளை தனக்காகச் சொல்லியது தான் அவள் மன நிலை என்று தெரியாமல் முன்னே நடக்க, பாதுகாப்பாகப் பின்னால் நடந்தாள் தேனிசை தேவி.