அத்தியாயம் 25
மறுநாள் காலை மயூரன் பரபரப்புடன் அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருக்க, துவாரகாவும் அவளின் விதியை நொந்தபடி அவனுடன் கிளம்பியபடி அவனுக்கும் உதவிக் கொண்டிருந்தாள்.
முன்தினம் இரவிலிருந்தே என்னென்னவோ காரணங்களை அடுக்கி விட்டாள், அவள் அலுவலகம் வராமல் இருப்பதற்கு. அவனோ அவற்றை கண்டு கொள்ள கூட இல்லை.
அந்த கோபத்தில் சுற்றிக் கொண்டிருந்தவளை வேண்டுமென்றே சீண்டியபடி தான் கிளம்பிக் கொண்டிருந்தான் மயூரன்.
கடனே என்று தலை வாரிக் கொண்டிருந்தவளை, “வரா, சட்டையை போட்டு விட ஹெல்ப் பண்ணு.” என்று அழைக்க, முறைப்புடன் திரும்பியவள், அவன் கையிலிருந்த கட்டை கண்டு நிதானித்து அவனுக்கு உதவி செய்தாள்.
கண்ணாடி முன்னின்று சீப்பை எடுத்தவளை மீண்டும் அழைத்தவன், “வரா, இந்த டையை கட்ட ஹெல்ப் பண்ணு.” என்று கூற, ஒரு பெருமூச்சுடன் திரும்பியவள், அவனைக் காணாமல் கருமமே கண்ணாக அவனுக்கு டையையும் அணிவித்து விட்டாள்.
கண்ணாடியை நோக்கி நடந்தவளை, அவளின் பொறுமையை சோதிக்கும் விதமாக, மீண்டும் அவன், “வரா…” என்றழைக்க, கடுப்புடன் திரும்பியவள், “இப்போ என்ன பேண்ட்டை போடணுமா?” என்று கேட்க, ஒரு நொடி திகைத்தவன், அடுத்த நொடியே நமுட்டுச் சிரிப்புடன், “ஐ டோன்ட் மைண்ட்!” என்றான்.
“பட் இ வில் மைண்ட்!” என்றவள், அவளின் இறுதி முயற்சியாக, “நேத்து தான் அவ்ளோ பெரிய ஆக்சிடெண்ட்ல இருந்து தப்பிச்சிருக்கீங்க, இன்னைக்கே ஆஃபிஸ் போகணுமா என்ன?” என்று குரலை குழைத்து கேட்க, “அந்த சாக்குல நீயும் மட்டம் போடலாம்னு தான பிளான் பண்ற? உன்னைப் பத்தி எனக்கு தெரியாதா? டைமாச்சு, சீக்கிரம் கிளம்பு!” என்றான்.
அடுத்த ஐந்து நிமிடங்களில் இருவரும் கீழே வர, வழக்கம் போல சோபனா தான் அவர்களுக்கு உணவினை எடுத்து வைத்தார். தேவி எப்போதும் போல ஓரமாக நின்று கொண்டாலும், எப்போதையும் விட மகனின் மீது அதிகமாக பார்வையை பதித்தார், குற்றவுணர்வுடன்!
அதை கண்டு கொள்ளாத மயூரனோ, சோபனாவின் முகவாட்டத்தைக் கண்டு, “சித்தி, நீங்க ஓகேயா?” என்று வினவ, சோபையாக சிரிக்க மட்டும் செய்தார் அவர்.
உதட்டில் ஒட்டியிருந்த சிரிப்பு கண்களை எட்டவில்லை!
அதைக் கவனித்த துவாரகாவோ, “நான் வேணும்னா சோபித்தை கூட இருக்கேன், ஆறுதலுக்காக.” என்றாள் மயூரனிடம். இதுவும் ஒரு சாக்கு தான்!
அது மயூரனுக்கு மட்டுமல்ல, சோபனாக்கும் புரிய, அவளின் செவியை திருகி, “நீ ஆஃபிஸ் போகாம மட்டம் போட, நான் தான் காரணமா கிடைச்சேனா?” என்றவர், “உன் பொண்டாட்டியை முதல்ல ஆஃபிஸுக்கு தூக்கிட்டு போடா.” என்றார் மயூரனிடம்.
அவரின் முகம் கண்டு சற்று நிம்மதியடைந்த மயூரனோ அதற்கு காரணமான மனைவியை வாஞ்சையுடன் ஒரு நொடி பார்த்தவன், மறுநொடியே, “அவங்க துரத்தி விடுற அளவுக்கு டார்ச்சர் செஞ்சுருக்க, அப்படி தான?” என்று வினவினான்.
அவளோ அலட்டிக் கொள்ளாமல், “ஆமா டார்ச்சர் தான் செஞ்சேன்… லவ் டார்ச்சர்!” என்று கண்ணடித்தாள், “க்கும், என்னை டார்ச்சர் செஞ்சு என்ன புண்ணியம்?” என்ற சோபனா சிரிப்புடன் அங்கிருந்து அகல, மயூரனோ அவளை நெருங்கி, “ஐ’ம் வெயிட்டிங்!” என்றான் சரசமாக.
“ஹ்ம்ம், பில்டிங் மேல இருந்து தொங்க விட்டு டார்ச்சர் பண்றேன்.” என்றவளுக்கும் சிரிப்பு தான் வந்தது.
அதே சிரிப்புடன் அவர்கள் அலுவலகம் கிளம்ப எத்தனிக்க, அங்கு வந்த சந்திரலேகாவோ, “மயூரத்தான், இன்னைக்கும் ஆஃபிஸ் போறீங்களா? அதுவும், துவா அக்காவோடவா? ப்ச், நீங்களும் இல்ல, அவங்களும் இல்லன்னா நான் யாருக்கிட்ட பேசுவேன்? எனக்கு போரடிக்காதா? அம்மா, பெரியம்மா, அக்கா எல்லாரும்.வேற வெளிய போயிட்டாங்க…” என்று கொஞ்சி கொஞ்சி பேசினாள்.
துவாரகாவின் மனமோ, ‘இத்தனை நாள் யாருக்கிட்ட பேசுனியோ, அவங்க கிட்ட பேசேன்!’ என்று கவுண்டர் கொடுத்தது. வெளியே நல்ல பெண்ணாக அமைதியாக தான் நின்றிருந்தாள்.
“பிளீஸ் மயூரத்தான், துவா அக்காவையாவது இங்க விட்டுட்டு போங்களேன்.” என்று சந்திரலேகா கேட்க, ‘அட, இது நல்ல ஐடியாவா இருக்கே!’ என்று எண்ணிய துவாரகாவும், “பிளீஸ் மயூரத்தான்!” என்று அவள் பங்குக்கு கேட்டாள்.
அவளின் குரலில் கேலி இருந்தாலும், அவளின் அழைப்பும் பார்வையும் ஒருநொடி அவனை மயக்கத் தான் செய்தது.
அதே மயக்கத்துடன் அவளிம் கோரிக்கைக்கு தன்னிச்சையாக தலையசைத்தவன், “கேர்ஃபுல்லா இரு. எதுனாலும் சித்தி கிட்ட சொல்லு, இல்லன்னா எனக்கு கால் பண்ணு.” என்று தனியே எச்சரித்து விட்டே அலுவலகம் சென்றான்.
‘ஹ்ம்ம், ஏதோ பார்டர்ல விட்டுட்டு போற மாதிரி தான் ஓவர் அட்வைஸ்!’ என்று அவள் உள்ளுக்குள் சலித்துக் கொள்ள, ‘இது அதை விட டேஞ்சர்ஸ் பிளேஸ்!’ என்று அவளின் மூளை எச்சரித்தது.
ஆனால், அவள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
கணவனை அனுப்பி விட்டு உள்ளே நுழைந்தவளை பிடித்துக் கொண்டாள் சந்திரலேகா.
“துவாக்கா…” என்று ஆர்வத்துடன் பேசியவளை மறுக்க மனம் வரவில்லை துவாரகாவிற்கு. ஆனாலும், மனம் உறுத்திக்கொண்டு தான் இருந்தது.
“உங்களை அப்படி கூப்பிடலாம்ல?” என்று சந்திரலேகா வினவ, “ம்ம்ம், ஆனா, எனக்கு இது புதுசா இருக்கு. யாரும் என்னை அப்படி கூப்பிட்டது இல்ல.” என்றாள் துவாரகா.
“ஏன்? உங்களுக்கு தம்பி தங்கச்சி யாரும் இல்லையா?” என்று சந்திரலேகா சாதாரணமாக கேட்க, இல்லை என்று தலையசைத்தாள் துவாரகா.
“ரிலேட்டிவ்ஸ்ல கூட யாரும் இல்லையா?” என்று சந்திரலேகா போட்டு வாங்க முயற்சிக்க, அவளின் முயற்சி புரியாத துவாரகாவோ, “எனக்கு சொந்தம்னு சொல்லிக்க என் அப்பாவை தவிர யாரும் இருந்தது இல்ல.” என்றாள்.
“ஓஹ், ஏன் அப்படி? உங்க அம்மா…” என்று அவள் கேட்கும் போதே அங்கு வந்த சோபனா, “துவா, கொள்ளைல போய் கறிவேப்பிலை பறிச்சுட்டு வாயேன்!” என்று அவளை அனுப்பி அந்த பேச்சுக்கு முட்டுக்கட்டை இட்டார்.
அதில் உள்ளுக்குள் எரிச்சல் மூண்டாலும், வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தாள் சந்திரலேகா.
சோபனாவோ, “அவகிட்ட இதை பத்தி பேசாத லேகா. அவளோட அம்மா அவ சின்ன வயசா இருக்கும்போதே இறந்துட்டாங்க. அந்த வலியை திரும்ப திரும்ப கிளற வேண்டாம்.” என்று சொல்லி சென்று விட்டார்.
‘ப்ச், எப்படியெல்லாமோ சர்க்கஸ் பண்ணி, அவளை பேச வைக்க டிரை பண்ணா, கெடுத்து விட்டுட்டாங்க.’ என்று எண்ணியபடி, நேராக கார்த்திகேயனின் அறைக்கு தான் சென்றாள் சந்திரலேகா.
“அவளைப் பத்தி தெரிஞ்சுதா?” என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தவளிடம், அலைபேசியிலிருந்த ஒரு புகைப்படத்தை காட்டியவன், “இது அவளோட அப்பா கோபிநாத். துவா கன்ஸ்டிரகஷனோட எம்.டி. அவங்க ஊருல பேர் சொல்ற கம்பெனி தான். நம்ம அளவுக்கு இல்லன்னாலும், பணக்காரங்க தான்.” என்று அவனுக்கு கிடைத்த தகவல்களை கறியவன், புருவச் சுழிப்புடன் அந்த புகைப்படத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“ம்ச், இதை வச்சு எதுவும் செய்ய முடியாது.” என்றவாறே திரும்பிய சந்திரலேகா, கார்த்திகேயனின் முகம் பார்த்து என்னவென்று வினவ, “இவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு. எங்கன்னு தெரியல.” என்றான்.
பின் அவனே, “ஒரே பிசினஸ்… ஏதாவது டெண்டரப்போ பார்த்துருப்பேன்.” என்று கூறியவன், “இன்னும் டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணிட்டு தான் இருக்காங்க. நமக்கு தேவையானது கண்டிப்பா சிக்கும்.” என்றான்.
அங்கிருந்து வெளியேறப் போன சந்திரலேகா மீண்டும் வந்து, “அவங்க ரெண்டு பேரையும் நீங்க ஃபோட்டோ எடுத்தது அவளுக்கு தெரியுமா?” என்று கேட்க, “தெரியாதுன்னு தான் நினைக்கிறேன். இல்லன்னா, எங்களை சாதாரணமா பார்த்து கடக்க மாட்டாளே.” என்றான் அவன் யோசனையுடன்.
அதைக் கேட்டவள், ஒரு கோணல் சிரிப்புடன், “எனக்கு வேலை வந்துடுச்சு.” என்றவாறே அங்கிருந்து சென்றாள்.
*****
கீழே சோபனாவிற்கு சமையலில் உதவிக் கொண்டிருந்த துவாரகாவிற்கு தேவியிடம் பேச வேண்டும் போல இருந்தது.
முன்தினம் கணவன் கூறியவைகள் மனதை அரித்தபடி இருக்க, அதற்கு ஏதேனும் காரணம் இருக்குமா என்று அறிய வேண்டிய உந்துதல் உண்டானது பாவைக்கு.
அவளின் பார்வை அவ்வபோது தன்மீது படர்வதை உணர்ந்த தேவியோ, “என்ன கேட்கணுமோ கேளு.” என்று நிர்மலமான குரலில் கூறினார்.
துவாரகா சோபனாவை பார்க்க, “அவளுக்கு மறைச்சு எதுவும் என் வாழ்க்கைல இல்ல. நீ கேளு.” என்றார் தேவி.
“அது வந்து… நீங்க ஏன் அவரோட போகல?” என்று தயக்கத்துடன் கேட்டாள் துவாரகா.
அவளின் கேள்வி மொட்டையாக இருந்தாலும், சம்பந்தப்பட்டவருக்கு அது புரிந்தே இருந்தது.
ஒரு விரக்தி சிரிப்புடன், “நான் இருக்கப் போய் தான், இப்போ அவனால இங்க வர முடிஞ்சுது. இல்லன்னா, அவனுக்கான உரிமையை எப்போயோ அவனோட அப்பா தாரை வார்த்து குடுத்திருப்பாரு.” என்று கூறினார்.
துவாரகா புரியாமல் பார்க்க, ஒரு சிரிப்புடன், “எப்போடா திண்ணை காலியாகும் பாயை போடலாம்னு காத்திருக்க கும்பல் இது. இங்க அவனுக்காகன்னு நான் எப்பவும் வெளிப்படையா நின்னது இல்ல. எனக்கு அதுக்கான தைரியமும் இல்ல. அதான், நான் எவ்ளோ கஷ்டப்பட்டாலும் பரவால, அவனோட உரிமையையாவது அவனுக்கு காப்பாத்தி குடுக்கணும்னு நினைச்சேன்.” என்று அவரின் செயலுக்கான காரணத்தை விளக்கினார் தேவி.
“ஆனா, அதுல உங்க மகனையே இழந்துருக்கீங்களே அத்தை. நேத்து அவரு எவ்ளோ வருத்தப்பட்டாரு தெரியுமா? நேத்து மட்டுமில்ல, அப்போ இருந்தே அத்தனை வேதனையையும் தனியா தாங்கிட்டு இருக்காரு.” என்று கணவனுக்காக பேசினாள் அந்த மனைவி.
“என்னமா பண்றது, குடும்ப அரசியல் ரொம்ப சிக்கலானது. ஒன்னை இழந்தா தான் இன்னொன்னு கிடைக்கும். அவனோட பேச முடியாதது, எனக்கு மட்டும் கஷ்டம் இல்லையா? அவன் நல்லா இருந்தா, அதுவே போதும்னு தான் அந்த கஷ்டத்தையும் தாங்கிட்டு இருக்கேன்.” என்று கண்கலங்க கூறினார் அவர்.
“என்னதான் நீங்க காரணம் சொன்னாலும், நீங்க செஞ்சதை என்னால ஏத்துக்க முடியல அத்தை. ” என்று துவாரகா கூற, ஒரு சிரிப்புடன், “இனி அவன் நல்லா இருப்பான். நான் இல்லன்னா என்ன, நீ அவனை நல்லா பார்த்துப்ப. பார்த்துக்கோ! சந்தோஷமா இருங்க.” என்றவர் அங்கிருந்து சென்று விட்டார்.
அவர்கள் இருவரின் மகிழ்ச்சியை கெடுக்க ஒரு திட்டம் தயாராகிக் கொண்டிருந்ததை பாவம் அவர் அறியவில்லை.
*****
சோபனா அவரின் அறைக்கு சென்றிருக்க, துவாரகா தனியாக கூடத்தில் அமர்ந்திருந்தாள். கார்த்திகா மற்றும் சாரதா ஏதோ ஒரு விழாவிற்கு சென்றிருந்ததால், கூடத்திலேயே அமர்ந்து அவளின் அலைபேசியில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தாள்.
அதைக் கண்ட சந்திரலேகாவோ, அது தான் சரியான சமயம் என்று எண்ணி, அவளருகே வந்து அமர்ந்தாள்.
அருவம் உணர்ந்து நிமிர்ந்து பார்த்த துவாரகா, அவளைக் கண்டு ஒரு சிரிப்புடன் மீண்டும் தன் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டாள்.
‘ப்ச், இப்படி இருந்தா எப்படி ஆரம்பிக்க?’ என்று கடுப்புடன் எண்ணிய சந்திரலேகா, அவளை நெருங்குவதும் விலகுவதுமாக ஆட்டம் காட்டிக் கொண்டிருக்க, முதலில் அதை கவனிக்காத துவாரகாவோ, சிறிது நேரத்தில், சந்திரலேகாவை நோக்கி திரும்பினாள்.
அதற்காக தானே அவளும் அந்த சகாசத்தை நிகழ்த்தி இருந்தாள்.
அதில் ஒரு வெற்றிச் சிரிப்பை மனதிற்குள் மட்டும் தேக்கி வைத்துக் கொண்டு, துவாரகாவை நோக்கி பரிதாப பார்வையை படரவிட, அவளின் பார்வையில் இருந்தது என்னவென்றே துவாரகாவிற்கு புரியவில்லை.
“என்னாச்சு லேகா? எதுவும் வேணுமா?” என்று கேட்டு சந்திரலேகாவை தலையால் தண்ணீர் குடிக்க வைத்தாள் துவாரகா.
‘ப்ச், இவ ஒருத்தி!’ என்று உள்ளுக்குள் சலித்துக் கொண்ட சந்திரலேகாவோ, மீண்டும் ஒரு நாடகத்தை அரங்கேற்றினாள்.
“அது வந்து… துவாக்கா… உங்க கிட்ட எப்படி சொல்ல? இல்ல, வேண்டாம்…” என்று மறுப்பாக ஏதோ கூறி எழுந்து செல்ல முற்பட, இப்போது அவளின் திட்டம் நன்றாகவே வேலை செய்தது.
செல்பவளின் கரத்தை பிடித்து தடுத்த துவாரகாவோ, “இப்படி ஏதோ சொல்ல ஆரம்பிச்சு பாதியில விட்டு போனா, அது என்னன்னு யோசிச்சே என் மண்டை வெடிச்சுடும். என்ன சொல்ல வந்தன்னு தயங்காம சொல்லு லேகா.” என்று சிரிப்புடனே கூறினாள்.
அவள் சொல்ல இருப்பதையும், அதனால் உண்டாகப் போகும் அனர்த்தங்களையும் யூகித்திருந்தால், ஆர்வமாவது ஒண்ணாவது என்று சந்திரலேகாவை நிறுத்தி வைத்து கேட்டிருக்க மாட்டாளோ என்னவோ!
அசாத்திய சூழலில், பல அதிர்ச்சிகளையும், சில ஆச்சரியங்களையும் தர வல்லது காலம் தானே! அதன் பிடியிலிருந்து எவரால் தப்பி விட முடியும்? அதில் தற்சமயம் சிக்கிக் கொண்டவள் தான் துவாரகா.
“உங்க கிட்ட எப்படி சொல்றது துவாக்கா? ஒருவேளை, உங்களுக்கு இதுவரை தெரியலன்னா… தெரியாமலேயே இருக்கட்டுமே… ப்ச், நான் இப்படி உங்க கிட்ட பேச வந்துருக்கவே கூடாது. எல்லாம் என் தப்பு!” என்று தலையில் அடித்துக் கொண்டாள் சந்திரலேகா.
அவளின் அவஸ்தையான நடிப்பு, பார்வையில் தெரிந்த பரிதாபம் போன்றவை துவாரகாவின் உள்மனதை அசைத்து பார்க்க, “எனக்கு எதுவும் புரியல லேகா. எனக்கு என்ன தெரிய வேண்டாம்? என் சம்பந்தப்பட்ட எந்த விஷயம் எனக்கு தெரியக் கூடாது? அதை முடிவெடுக்க வேண்டியது நான் தான். சோ, என்னன்னு தெளிவா சொல்லு.” என்று இம்முறை சற்று அழுத்தமாக கேட்டிருந்தாள் துவாரகா.
‘இது தான எனக்கு வேணும்!’ என்று குதூகலித்த சந்திரலேகாவோ, “உங்களுக்கு இப்படி ஆகியிருக்க வேண்டாம்.” என்ற பீடிகையுடன் ஆரம்பிக்க, பொறுமை முற்றிலுமாக குறைந்து போனது துவாரகாவிற்கு.
“ப்ச், இப்போ என்னன்னு சொல்லப் போறீயா இல்லையா?” என்று துவாரகா கத்த, அவளின் சத்தத்தில் பதறி தான் விட்டாள் சந்திரலேகா.
அவள் குரல் கேட்டு யாரேனும் வந்து விட்டால், அவளுக்கு தானே பிரச்சனை. அவள் கவலை அவளுக்கு!
“ஷ், நான் சொல்றேன் சொல்றேன்…” என்று பயந்ததை போல நடித்த சந்திரலேகா, “எதேச்சையா, கார்த்தித்தானும் குருத்தானும் பேசிக்கிட்டதை கேட்டேன் துவாக்கா. அவங்க சொன்னது எனக்கு ஷாக்கிங்கா இருந்துச்சு. அது வந்து…” என்று நிறுத்தியவள், எதிரிலிருந்தவளின் விழியைக் கண்டு, “ரீசண்ட்டா யாராவது உங்களை கடத்துனாங்களா? நீங்களும் மயூரத்தானும்… ஒரே ரூம்ல… ஹ்ம்ம்… அது வந்து…” என்று கூற வந்தவளை, “ஸ்டாப்!” என்று அடிக்குரலில் கூறி நிறுத்தியிருந்தாள் துவாரகா.
அவளுக்கு தான் அந்த நினைவே இல்லையே. அந்த நினைவே வராதவாறு மயூரன் பார்த்துக் கொண்டான் என்று கூற வேண்டுமோ?
அந்த சம்பவம் நடந்ததிலிருந்தே பல ஆச்சரியங்களையும் அதிர்ச்சிகளையும் வழங்கி, எப்போதும் அவன் நினைவிலேயே அவள் இருப்பது போன்று பார்த்துக் கொண்டானே!
இதோ, இப்போது சந்திரலேகா நினைவு படுத்தி இருக்கா விட்டால், அப்படி ஒன்று நடந்தையே மறந்து போயிருப்பாளோ என்னவோ!
ஆனால், இனி எங்கிருந்து மறக்க?
சந்திரலேகாவின் படபடப்பு, ஏதோ தவறான ஒன்று வெளிவரப் போகிறது என்பதை உணர்த்த, அதைக் கேட்க விரும்பாமல் தான், அவளை இடை வெட்டினாள் துவாரகா.
ஆயினும், தன்னைப் பற்றிய விஷயம் தனக்கு தெரியாமல், மூன்றாம் மனிதருக்கு தெரிவதா என்று மூளை இடித்துக் கூற, வருவது வரட்டும் என்ற மனநிலையில் கண்ணசைவில் சந்திரலேகாவை பேச ஊக்கினாள்.
“துவாக்கா, உங்களுக்கு நடந்ததுக்கு காரணம் கார்த்தித்தானும் குருத்தானும் தானாம். எங்க மயூரத்தான் திரும்ப இங்க வந்து கம்பெனி பொறுப்பை ஏத்துப்பாங்களோன்னு பயந்து, அவங்களை மிரட்ட பண்ணதாம். உங்க ரெண்டு பேரையும் கடத்தி, தப்பு தப்பா ஃபோட்டோ எடுத்து… மயூரத்தானுக்கு காட்டி மிரட்டுனாங்களாம். அதனால தான் மயூரத்தான் உங்களை உடனே கல்யாணம் பண்ணிக்கிட்டாராம். திரும்ப இங்க அவரு உங்களோட வந்தது மட்டுமில்லாம, அவங்க ஃபோட்டோஸை கம்பெனி சைட்ல போட்டதுக்கு பழி வாங்க, உங்க ஃபோட்டோஸை சோசியல் மீடியால போட போறேன்னு பேசிட்டு இருந்தாங்க… எனக்கு ரொம்ப பயமாகிடுச்சு.” என்று உண்மை கொஞ்சம் பொய் மிச்சமாக கதையை கட்டினாள் சந்திரலேகா.
அதை ஆராய்ந்து பார்க்க துவாரகா முயலவில்லை. அவளால் முடியவில்லை என்றும் கூறலாம்.
அவளுடைய புகைப்படங்கள், அதுவும் தவறான முறையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், கயவர்களின் கையில் இருப்பதை அவளால் ஜீரணிக்க முடியவில்லை. அந்த நினைவில் அருவருத்துப் போனாள் என்றால், அதை கணவன் அவளிடமிருந்து மறைத்ததில் இன்னும் வேதனையூற்றாள்.
அதிலும் மற்றவள் சொன்ன, ‘அதனால தான் மயூரத்தான் உங்களை உடனே கல்யாணம் பண்ணிக்கிட்டாராம்.’ என்ற வார்த்தைகள் நேரடியாக அவளின் இதயத்தை தாக்கின.
சொன்னவளுக்கும் அது தானே வேண்டும்?
‘அப்போ மயூ, என்னை காதலிக்கலையா? பரிதாபத்துல தான் கல்யாணம் பண்ணிக்கிட்டாரா?’ என்ற எண்ணம் அவளுள் தோன்ற, அவனின் திடீர் மாற்றத்திற்கான காரணத்தை அறிந்து கொண்டதாக எண்ணி மாய்ந்து போனாள்.
இதில், அவன் வெளிப்படையாக அவளிடம் காட்டும் அன்பு எல்லாம் அவளின் மூளைக்கு அப்போது எட்டவே இல்லை.
அத்துடன், இறுதியாக சந்திரலேகா கூறியது அவளின் சர்வாங்கத்தையும் அதிரச் செய்தது.
அவளுடைய புகைப்படங்களை வெளியிட்டால்… அதன்பிறகு அவளின் நிலை? அதை யோசிக்க கூட முடியவில்லை அவளால்.
துவாரகாவின் முகபாவனையை வைத்தே அவள் வந்த வேலை வெற்றிகரமாக முடிந்ததை எண்ணி திருப்தியுடன் அவளறைக்கு சென்றாள் சந்திரலேகா.
அங்கு பேயறந்ததை போன்று அமர்ந்திருந்த துவாரகாவின் தோளை தொட்ட சோபனாவோ, “துவா, என்னாச்சு? ஏன் இப்படி இருக்க?” என்று வினவ, “ஒன்னுமில்ல… தலைவலிக்குது… நான் போய் படுக்குறேன்.” என்று முணுமுணுத்து விட்டு அவளின் அறைக்கு ஓடினாள் துவாரகா, அவளின் கண்ணீரை மறைக்க வேண்டி!
அதைக் கண்ட சோபனாவிற்கு ஏதோ தவறாக பட, உடனே மயூரனுக்கு அழைத்து விட்டார்.
ஆனால், அவன் ஒரு முக்கிய கலந்துரையாடலில் இருந்ததால், சோபனாவின் அழைப்பை ஏற்க முடியவில்லை.
அப்போதும் சோபனாவிற்கு மனம் அடித்துக் கொள்ள, அங்கிருந்த கந்தசாமியிடம், உடனே மயூரனை அழைத்து வரக்கூறி அனுப்பி விட்டார்.
தகவல் மயூரனை அடையும் முன், கோபிநாத்திற்கு சென்றிருந்தது.
அதுவும் மகளின், “அப்பா…” என்ற கதறல், அவரை துயரத்தில் ஆழ்த்த, உடனே கிளம்பி விட்டார் மகளை காண.
அவர் வரும் வரை துவாரகாவின் நிலை என்னவோ? தன்னவளை மயூரன் காப்பானா? அதற்கு காரமாணவர்களை தண்டிப்பானா?
தொடரும்…