313 views
அத்தியாயம் 25
“இந்தா” என்று மகளிடம் செல்பேசியைக் கொடுத்தார் சிவசங்கரி.
என்னவென்று யோசித்துக் கொண்டே அதைப் பார்வையிட்டாள் இளந்தளிர்.
அதில் ஒரு பையனுடையப் புகைப்படம் இருந்தது.
தாயின் எண்ணத்தை அப்போது புரிந்து கொண்டாள்.
புகைப்படத்திலிருந்து விழியை அகற்றி அம்மாவைப் பார்க்க அதைப் புரிந்த சிவசங்கரி,
“கோவர்த்தனனுக்கும், உனக்கும் கல்யாணம் முடிக்கலாம்னு யோசிச்சாலும் அது சரி வராதுன்னு தெரிஞ்சு போச்சு. உன்னையும் கம்பெல் பண்ண முடியாது இல்லையா? அதனால் இந்த வரனோட டீடெய்ல்ஸ் தரகர் அனுப்பி விட்ருக்கார். பாத்துட்டு சொல்லு” என்று அவர் கூறவும்,
கோவர்த்தனனுக்கும், இவளுக்கும் நிகழ்ந்தப் பேச்சு வார்த்தையை எண்ணிப் பார்த்தவள், அதற்கான பதிலைத் தயார் செய்வதற்குள் தாயின் இந்தச் செயலால் இவளது மனம் ஆட்டம் கண்டது.
“அம்மா.. நான் ஒரு வாரம் டைம் எடுத்துக்கிறேன். அப்பறம் உங்க கிட்ட பதில் சொல்லவா?” என்க,
சிவசங்கரி, “எடுத்துக்கோ இளா” என்று நகர்ந்து விடவும்,
“ஃபோட்டோ பார்த்துப் பிடிக்குது, பிடிக்கலன்னு சொல்லலாமே? அவன்கிட்ட ஏன் டிஸ்கஸ் பண்ணனும்னு நினைக்கிறேன்?”
அவனது செல்பேசி எண்ணும் இளந்தளிரிடம் இல்லை.அப்படியிருக்க எப்படி கோவர்த்தனனிடம் கலந்தாலோசிப்பது?
அவனிடம் கலந்தாலோசிக்கும் எண்ணம் வந்ததற்குப் பிறகு, அவளுக்குக் காதல் மட்டும் துளிர்க்காமல் இருக்குமா?
அந்தக் காதல் வந்த பிறகு தானே இந்த யோசனை கேட்பதெல்லாம் தோன்றி இருக்கும்!
உடனே நேசம், அக்கறை எல்லாம் வருவதற்கு வாய்ப்புகள் இல்லையே… !
வந்தவற்றை உணர்வதற்கே இத்தனை நாட்கள் ஆகி உள்ளது என்று தான் கூற வேண்டும்.
ஒரு வாரத்திற்குள் நாங்கள் இருவரும் எங்காவது பார்த்துக் கொண்டால் தான் உண்டு. இல்லையென்றால் இவளே தன்னுடைய பதிலை அம்மாவிடம் கூற வேண்டும்.
சுபாஷினி வேறு இடையே, “
நீ கோவர்த்தனன் சாரை வேண்டாம்ன்னு உண்மையிலேயே தான் சொன்னியா? ” என்று வினவத் தொடங்கி விட்டாள்.
அது வேறு மூத்தவளுக்கு பாரமாக மனதில் ஏறியிருக்க, தாயிடம் கேட்டாலே அவனுடைய செல்பேசி எண் கிடைத்து விடும்.ஆனால் காதலைச் சொன்ன அவனே நாகரீகம் கருதி செல் எண்ணைக் கேட்கவில்லை, கொடுக்கவும் இல்லை.
“ப்ச்… கோவர்த்தனா..! நீயே எப்படியாவது, எதாவது காரண்த்தைச் சொல்லி என்ன மீட் பண்ணு”என்று நினைத்துக் கொள்ளும் அளவிற்கு அவனுடன் பேச நினைத்தாள்.
இந்த செய்தி சுமதி மற்றும் ரோகினிக்கும் சிவசங்கரியின் மூலம் சென்று சேர்ந்தது.
சுமதியோ, தன் மகனுக்கு ‘இவள் பொருத்தம்’ என்று எண்ணி இருந்ததை எல்லாம் தூரப் போட்டு விட்டு,
” நல்ல வரனா இருந்தா கண்டிப்பாக முடிச்சிடுங்க சிவா”
கான்ஃப்ரன்ஸ் காலில் ரோகினியும் இருந்தார். அவருக்கு சுமதியின் கூற்று ஆச்சர்யத்தை வரவழைத்தது.
“வரன் நல்ல இடம் தான் சுமதி. இளா சம்மதிக்கனுமே? ஒரு வாரம் டைம் கேட்ருக்கா” என்றார் சிவசங்கரி.
ரோகிணி, “உங்கள் பொண்ணுக்கு கோவர்த்தனனைப் பிடிக்கலையா?” என்று பட்டென்று கேட்டு விட்டார்.
பின்னே சுமதியைப் போல் விட்டு விட இவரால் முடியவில்லை.
அதைக் கேட்டதும் சிறிது நேரம் மௌனமாக இருந்தார் சிவசங்கரி.
பிறகு, “நானும் இப்போ வந்த வரன் ஃபோட்டோ கொடுக்குறப்போ கூட கேட்டுப் பார்த்தேன் ரோகிணி.
முதல்ல – ன்னா எனக்கு ஒன்னும் தெரிஞ்சு இருக்காது. ஆனா இப்போ எனக்கும் சுமதி வீட்டு சம்பந்தம் தான் என் பொண்ணுக்கு அமையனும்னு விருப்பம்.ஆனா அவ சம்மதிக்கலையேங்க” என்றார் சோகமாக.
சுமதி, “ப்ச்… விடு சிவா. பிள்ளைங்க விருப்பம் தான முக்கியம். ரோகிணி அவங்கப் பொண்ணு தான வாழப் போறா, அப்போ அவ இஷ்டத்துக்கு தான கல்யாணம் நடக்கனும்” என்று கூறியவர்,
“இளந்தளிருக்குப் பிடிச்சதும் வரனைப் பத்தி நல்லா விசாரிச்சுடு சிவா”
சுமதியின் இந்தப் பேச்சு சிவசங்கரியின் தயக்கத்தைத் துடைத்து எறிந்தது.
” சரி சுமதி ” என்று இவர்களது அன்றைய சம்பாஷனை முடியவும்,
ரோகிணிக்குத் தெரியும் சுமதி இதையெல்லாம் கோவர்த்தனனிடம் கூற மாட்டார் என்று. ஏனெனில் மகன் ஏற்கனவே வருத்தத்தில் உள்ளான் இதைக் கூறி மேலும் வருத்தப்பட வைக்க வேண்டாம் என்று அவர் நினைத்திருப்பார்.
ஆனால் ரோகிணியோ வேறு ஒன்றை செய்தார்.
தன் மகனிடம் இதைக் கூறி ,
“கோவர்த்தனன் கிட்ட இந்த விஷயத்தைச் சொல்லுடா ஹரீஷ். அவன் இளந்தளிர் கிட்ட பேசினா உண்மையிலேயே அந்தப் பொண்ணு மனசில என்ன இருக்குன்னு சொல்லுவா – ன்னு தோனுது ” என்றார்.
அவனுக்கும் இது சரியெனப்பட,
“சரிங்க அம்மா. அவன்கிட்ட சொல்றேன்” என்று உடனே கோவர்த்தனனுக்கு அழைத்தான்.
“நண்பா… காஃபி ஷாப்க்கு வா. கொஞ்சம் பேசனும்” – ஹரீஷ்.
கோவர்த்தனன் , “இதோ வரேன் டா”
அவர்களுக்கு விடுமுறை தினம் ஆதலால், நண்பனை நேரில் பேச அழைத்தான் ஹரீஷ்.
காஃபி ஷாப்பிற்குள் இருவரும் அமர்ந்திருக்க,
“எப்பவும் போல அம்மாவும், அவங்களோட ரெண்டு ஃப்ரண்ட்ஸூம் கான்ஃப்ரன்ஸ் கால் பேசினாங்கடா. அப்போ…” என்று முழுக்கதையைக் கூறி,
” அம்மா தான் இதை உங்கிட்ட சொல்ல சொன்னாங்க ” என்று நிறுத்தினான்.
ஒரு சின்னப் புன்னகையுடன் காஃபியைப் பருகப் போன நண்பனைப் பார்த்து முறைத்தான் ஹரீஷ்.
“ஏன்டா?” என அதற்கும் புன்னகை செய்தவனிடம்,
“எவ்ளோ சீரியஸான விஷயம் சொல்லி இருக்கேன். நீ என்னடான்னா ஷாக் ஆகாம கூலாக இருக்க?” என்றான்.
கோவர்த்தனன், “நீ சொன்னதைக் கேட்டதும் ஜர்க் ஆனேன் தான். ஆனால் அந்த ஒரு வாரம் டைம் பத்தி நினைச்சதுமே இளந்தளிர் கண்டிப்பாக என்கிட்ட இதைப் பத்திப் பேச வருவாங்கன்னு தோனுது. சோ, அவங்க வந்து பேசினாலே என் லவ் சக்ஸஸ் தான்” எனவும்,
” டேய்… அப்போ லவ்வை சொல்லிட்டியா!?” என்றான் ஆச்சரியமாக.
“ஆமாடா.லாஸ்ட் ஆக மீட் பண்ணின அப்போவே சொல்லிட்டேன்”
“ஓஹோ… ! அதனால் தான் கான்ஃபிடன்ட் ஆக இருக்கியா?”
“அப்படியும் இருக்கலாம். ஆனா அவங்க வரலைனா என்னப் பண்றது? நிஜமாகவே கல்யாணத்தைப் பத்தி யோசிக்க அந்த ஒரு வாரம் ஆகும்னு கூட எடுத்துக்கலாமே” சொன்னவுடன்,
“என்னடா குழப்பறீங்க? அப்போ நீயே எதுவும் தெரியாம தான் ப்ளாங்க் (blank) ஆக இருக்க அப்படித்தான?”
” ஆமா நண்பா.. இளந்தளிர் மனசுல என்ன இருக்கு? அவங்களோட அடுத்த மூவ் என்ன? ஒன்னுமே எனக்குத் தெரியாது”
இவர்களை வெகு நாட்கள் காத்திருக்க விடாமல் , இவர்கள் கோயில் செல்லும் வழியில் தன் இருசக்கர வாகனத்தில் வந்தாள் இளந்தளிர்.
முன்பு போல், என்றால் கூட அவள் தங்களைக் கடந்து சென்று விடுவாள் என்று தோன்றியிருக்கும் கோவர்த்தனனுக்கு.இப்போது அவளது எதிர்வினை என்னவாக இருக்கும் என்று குழம்பி விட,
அருகிலிருந்த ஹரீஷ், “இன்னைக்கு ஒரு முடிவு தெரிஞ்சிடும்டா. நான் போய் மறுபடியும் சாமி கும்பிட்டு விட்டு வர்றேன் ” என்று விலகி கோயிலுக்குள் மீண்டும் சென்றான்.
“ஹாய்..” இளந்தளிர் அவனைப் பார்த்துப் புன்னகை செய்தாள்.
‘பார்றா… ‘மனதில் நினைத்துக் கொண்டு,
“ஹாய் இளந்தளிர்” என்று இவனும் விசாரித்தான்.
“அந்த ஸ்டோன் பெஞ்ச்ல உக்காந்துப் பேசலாமா?” என்று கூறவும்,
இவனும் தலையசைத்து கல் மேடையில் போய் அமர்ந்தனர்.
‘என்ன சொல்லப் போறாங்கன்னு தெரிலயே!’ – கோவர்த்தனன்.
“எப்படி இருக்கீங்க? வீட்ல அம்மா நல்லா இருக்காங்களா?”
“நல்லா இருக்கேன். அவங்களும் நல்லா இருக்காங்க”
அவள் கேட்டதற்கு மட்டும் பதில் சொல்லிக் கொண்டு இருந்தான்.
“எனக்கு மாப்பிள்ளை பார்த்திருக்காங்க” என்றாள் இளந்தளிர்.
“அப்படியா? சூப்பர்ங்க. கங்கிராட்ஸ்” என்று வாழ்த்தினான்.
“தாங்க்யூ.ஆனா ஒரு கன்ஃப்யூஷன்” எனவும்,
“என்னங்க கன்ஃப்யூஷன்?” – கோவர்த்தனன்.
“எனக்கு அந்த மாப்பிள்ளை ஃபோட்டோ காட்டினதும் உங்ககிட்ட தான் அதைப் பத்தி டிஸ்கஸ் பண்ணனும்னு தோனுச்சு. அது ஏன்?”
அவள் கேட்கவும், கோவர்த்தனனுக்கு மனதில் படபடப்பு அதிகமானது.
காதலைச் சுற்றி வளைத்துச் சொல்லிக் கொண்டு இருப்பவளைப் பார்த்து சிறு முறுவல் செய்தான். இத்தருணத்தைத் தான் எதிர்பார்த்திருந்தான்.
இளந்தளிருக்குத் தன் மேல் நல்ல அபிப்பிராயம் வராதா என்ற எதிர்பார்ப்பு கோவர்த்தனனுக்கு இருந்தது.அந்த அபிப்பிராயத்தை வரவழைக்க அவன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனாலும் அவனது செயல்களைப் பார்த்து அவளுக்கு நல்ல எண்ணம் தோன்றியிருக்கிறது.
“ஏங்க? ஹலோ… ! ” என்று அவள் அழைக்கவும்,
“அது தான் ஏன்ங்க?என்கிட்ட எதுக்கு டிஸ்கஸ் பண்ணனும்? இது உங்க பர்சனல் லைஃப் ஆச்சே? அதுவும் மேரேஜ் பத்தின டிஸ்கஷன்?”
“அதான் தெரியலங்க. நானுமே ஏன்-னு யோசிச்சேன்.சரி அதை விடுங்க”
“ம்ம்… விட்டுடலாம்” இவன் சிரித்தான்.
“உங்க மொபைல் நம்பர் குடுங்க” என்று தன் செல்பேசியை எடுத்துக் கொண்டே கூறினாள்.
“என்னது மொபைல் நம்பரா…!”
“ஆமாம் கோவர்த்தனன். குடுங்க.”
“உங்களுக்கு ஞாபகம் இருக்கான்னு தெரில? நீங்களாகவே எனக்கு ஃபோன் நம்பர் குடுத்தா நான் அன்னைக்குச் சொன்ன மாதிரி உங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்கு, அதுக்கு முதல்ல என் மேல நம்பிக்கை இருக்குன்னு அர்த்தம்?” என்றான் கோவர்த்தனன்.
இளந்தளிருக்குமே இது தெரியுமே! தெரிந்ததால் தானே அவனது செல்பேசி எண்ணையேக் கேட்டிருக்கிறாள்.
அவனைப் போல நேரடியாக தன் பிடித்தத்தைக் கூறுவதில் அவளுக்குத் தயக்கம். அதனாலேயே இந்த வழியைத் தேர்ந்தெடுத்தாள்.
கோவர்த்தனனுக்குள் சிலிர்ப்பு ஏற்பட்டு விழிகள் கலங்க ஆரம்பித்து விட்டது.
அழுகையின் பிடியில் ஆட்கொள்ளப்பட்டான் ஆடவன்.
“என்னாச்சு கோவர்த்தனன்? அழுகை வர்ற அளவுக்கா நான் உங்களை ஹர்ட் பண்ணிட்டேன்?”
பதறிப் போய் கேட்டாள் பெண்ணவள்.
“இல்லை இளந்தளிர்.கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன். நீங்க கடைசியா எங்கிட்ட பேசிட்டுப் போதைப் பார்த்தா உங்களுக்கு லவ் வராதோ இல்லன்னா லேட் ஆகுமோன்னு தோனுச்சு. நானும் வெய்ட் பண்ணுவோம்னு நம்பிக்கையோட இருந்தேன். ஆனா கொஞ்சம் பதட்டமாகத் தான் இருந்துச்சு.மறுபடியும் உங்களைச் சங்கடப்படுத்திடக் கூடாதுன்னு இருந்தேன்.இப்போ…” என நிறுத்தவும்,
“ஸ்ஸ்… கோவர்த்தனன் ப்ளீஸ்… இந்தளவுக்கு நீங்க எமோஷனல் டைப் ஆ? ஜாலியான கேரக்டர்னு நினைச்சேனே?” – இளந்தளிர்.
“ஜாலியான கேரக்டர்னா எமோஷனல் ஆகக் கூடாதாங்க?”என்று கண்களைத் துடைத்துக் கொண்டான்.
” உங்க நம்பர் இன்னும் குடுக்கலையேங்க?” குறுஞ்சிரிப்புடன் கேட்டவளிடம்,
“தர்றேன்ங்க.அதுக்கு முன்னாடி வீட்ல என்ன சொல்லுவீங்க?வரன் பத்திக் கேட்பாங்களே?”
“ம்ஹ்ம்…உங்ககிட்ட பேசிட்டு சொல்லனும்னு நினைச்சேன்” என்றாள் அவனது கண்களைப் பார்த்தவாறே…
“தளிர் ப்ளீஸ்…” இப்போது வெட்கப்பட ஆரம்பித்து விட்டான் கோவர்த்தனன்.
“என்னங்க நீங்க வெட்கப்பட்றீங்க?”
அவனைப் பார்க்கையில் இளந்தளிருக்குமே வெட்கமும்,புன்னகையும் தோன்றியது.
“ஆமாம்.ஏன் உங்க ஃப்ரண்ட் என்னைப் பார்த்தாலே உங்களை விட்டுத் தள்ளிப் போய்ட்றாரு?” என்று கேட்டாள்.
“நாம பர்சனல் ஆக பேசுவோம். அதுல தலையிடக் கூடாதுன்னும், உங்களுக்கும் சங்கடமாகக் கூடாதுன்னும் ஒதுங்கூப் போய்டுவான்” என்று விளக்கினான்.
“ஓஹோ.. ஆனால் இனிமேல் அப்படி போக வேண்டாம்ன்னு சொல்லுங்க. உங்க ஃப்ரண்ட் எனக்கும் ஃப்ரண்ட் தான?என்னை சிஸ்டர்ன்னு வேற சொல்லிட்டாரு. சோ, கண்டிப்பாக நெக்ஸ்ட் டைம் மீட் பண்ணும் போது அவரையும் கூப்பிட்டு ரெஸ்டாரெண்ட் போகலாம்”
அதில் சிரித்தவன்,
“கண்டிப்பாக அவனைக் கூப்பிட்றேன்ங்க. இப்போ எனக்காக வெய்ட் பண்ணிட்டு இருக்கான். போகலாமா?”
“ம்ம்.. போகலாம்” என்று எழுந்தவளிடம்,
“என்னோட மொபைல் நம்பர்” என தன் பத்து இலக்க செல்பேசி எண்ணைக் கூறினான்.
அதைத் தன்னுடைய செல்பேசியில் பதிவு செய்து கொண்டாள் இளந்தளிர்.
தன்னுடைய எண்ணையும் அவனுக்கு அனுப்பி வைத்தாள்.
இளந்தளிர் தன் ஸ்கூட்டியில் வீட்டிற்குப் போக, ஹரீஷிடம் வந்தான் கோவர்த்தனன்.
– தொடரும்