அத்தியாயம் 24
தங்கள் பின்னிருந்து கேட்ட குரலில் திடுக்கிட்டு தான் போயினர் கார்த்திகேயனும் குமரகுருபரனும். அங்கு வெகு அலட்சியத்துடன் நின்றிருந்தாள் சந்திரலேகா.
அவள் உடல்மொழி மாற்றத்தில் குழப்பத்துடன் ஒருவரையொருவர் பார்த்தனர் சகோதரர்கள்.
அந்த நொடிநேர தாமதம் கூட பிடிக்காதவளாக, “உங்களுக்கு ஹெல்ப் வேணுமா வேண்டாமா?” என்று அதே அலட்சியத்துடன் அவள் வினவ, “ஹோல்ட் ஆன். நீ என்ன ஹெல்ப் செஞ்சுடப் போற எங்களுக்கு?” என்று நக்கலாக கேட்டான் குமரகுருபரன்.
அவன் எண்ணத்தில் இருந்ததெல்லாம் இருபது வயது பெண்ணவள், அப்படி என்ன செய்து விட முடியும் என்பது தான்.
ஆனால், அதன் பிறகு அவள் பேசியதைக் கேட்டவர்களால் வியக்காமல் இருக்க முடியவில்லை.
அவள் தான் சாரதாவின் மகள் என்பதை நிரூபித்திருந்தாளே. தாய் எட்டடி பாய்ந்தால், இவளோ பதுங்கி இருந்து பதினாறு அடிக்கும் மேலல்லவா பாய காத்திருந்தாள்.
குமரகுருபரனின் நக்கலை உணர்ந்தவள், அவனை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல், “உங்க நிலைமையை பார்த்து பரிதாபப்பட்டு தான் உங்களுக்கு ஹெல்ப் பண்ண வந்தேன். ஆனா, உங்களுக்கு அது வேண்டாம் போலயே. ஹ்ம்ம், ஹெட்வெயிட்டோட தலை குப்பற தான் விழுவேன்னு நீங்க நினைச்சா, என்னால என்ன செஞ்சுட முடியும்.” என்று அவள் கூற, எகிறிக் கொண்டு சென்றான் குமரகுருபரன்.
அவனை அடக்கிய கார்த்திகேயனோ, “இப்போ என்ன தான் சொல்ல வர? நேரடியா விஷயத்துக்கு வா லேகா.” என்றான் சந்திரலேகாவிடம்.
“ப்ரோ, இவ சொல்றதை கேட்கப் போறியா?” என்ற குமரகுருபரனிடம், “என்ன சொல்றான்னு முதல்ல கேட்போம் குரு.” என்று கண்களால் ஏதோ சைகை காட்டிய கார்த்திகேயன், இருவரையும் அழைத்துக் கொண்டு அவனின் அறைக்கு சென்றான்.
“குட் கார்த்தித்தான். இப்போ நான் சொல்றதை நல்லா கேளுங்க. நீங்க மயூரத்தானுக்கு எதிரா வைக்கிற ஒவ்வொரு ஸ்டெப்பும் உங்களுக்கு தான் பேக்-ஃபயராகுது. அப்படின்னா, உங்களோட மூவ்ஸ் எல்லாத்தையும் முன்னாடியே யூகிச்சு அதுக்கு ரெடியா அவரு இருக்காருன்னு அர்த்தம்.” என்று அவள் கூற, “வாரே வா, பெரிய கண்டுபிடிப்பு தான்.” என்று அதே நக்கல் குரலில் கூறினான் குமரகுருபரன்.
அவனை முறைத்தவளோ, “இதைக் கூட கண்டுபிடிக்காம தான், முட்டாள்தனமா அவரை அடிச்சு தூக்க பிளான் போட்டீங்க.” என்று பல்லைக் கடித்துக் கொண்டு கூறியவள், கார்த்திகேயனை நோக்கி திரும்பி, “நீங்க அவரை நேரடியா தாக்குறது முடியாத காரியம். ஏன்னா, இனிமே நம்ம குடும்பமே உங்களை கண்காணிக்கும். அது போக, மயூரத்தானுக்கு ஏதாவது சின்னதா ஆனா கூட, உங்க மேல தான் சந்தேகம் வரும். அப்படி அவரு சிசுவேஷனை மாத்தி வச்சுருக்காரு.” என்று நிலவும் சூழலை அழகாக விளக்கினாள் சந்திரலேகா.
அவள் கூறியதை கார்த்திகேயன் மட்டுமல்ல குமரகுருபரனும் ஒப்புக்கொள்ள வேண்டியதாகிற்று.
“சோ, என்ன பண்ணலாம்னு சொல்ற?” என்று கார்த்திகேயன் அவளிடமே வினவ, “அவரை நேரடியா தாக்க முடியாது. ஆனா, அவரோட வீக்பாயிண்ட்டை மறைமுகமாக தாக்கலாம்.” என்று எதையோ திட்டமிட்டபடி கூறியவளை இடைவெட்டிய குமரகுருபரன், “அப்படி என்ன வீக்பாயிண்ட் இருக்கு அவன் கிட்ட?” என்றான்.
“துவாரகா!” என்று ஒற்றை வார்த்தையில் அவள் பதிலளிக்க, “அவளா?” என்று குமரகுருபரன் குழப்பமாக வினவியவன், “அவளை நெருங்க முடியாம தான் செக் வச்சுட்டானே.” என்று மேரியை நினைத்துக் கூறினான்.
குழப்பமாக பார்த்த சந்திரலேகாவிடம் முன்னர் நடந்ததை கூறினான் கார்த்திகேயன்.
“இன்னொரு சொதப்பல்.” என்று அவள் கூற, தங்களை மட்டம் தட்டும் வகையில் இருந்த அவளின் பேச்சை ரசிக்காத குமரகுருபரனோ, “மேடம், அப்படி என்ன பண்ணி கிழிச்சுருப்பீங்க?” என்றான் அதே கோபத்துடன்.
“கண்டிப்பா இதை செஞ்சுருக்க மாட்டேன். உங்களுக்கு புரியுதா, எங்கேயோ இருந்த மனுஷன், நீங்க அப்பப்போ சீண்டின போதும் இங்க வராத மனுஷன், இந்த இன்சிடெண்டுக்கு பின்னாடி தான் இங்க வந்துருக்காரு. அப்போ, இங்க வர ஐடியாவே இல்லாதவருக்கு, நீங்களா ஆப்பர்சுனிட்டியை கையில தூக்கி குடுத்துருக்கீங்க.” என்று அவர்களின் திட்டத்தில் இருந்த ஓட்டைகளை சரியாக சுட்டிக் காட்டினாள் அவள்.
அதையும் அவர்கள் ஒப்புக்கொள்ள தானே வேண்டும்!
“அவ தான் அவரை சுத்தி சுத்தி லவ் பண்ணா. மயூரத்தான் அவளை கண்டுக்க கூட இல்லன்னு சொல்றீங்க. ஹ்ம்ம், இந்த இன்சிடெண்ட் நடந்த உடனே, உங்க கிட்ட சொன்ன மாதிரி, அவளை காப்பாத்த கல்யாணம் பண்ணதெல்லாம் சரி. ஆனா, அவங்க ரெண்டு பேரை பார்த்தா, இந்த ரீசனுக்காக மட்டும் நடந்த கல்யாணம் மாதிரி தெரியலையே. அதுவும், மயூரத்தான் பார்வையில இருக்க ஃபீலிங்… இட்ஸ் டெஃபனட்லி லவ்! அதுவும் பரிதாபத்துல வந்த காதல் மாதிரி எல்லாம் தெரியல. இவ்ளோ குறுகிய காலத்துல இப்படி காதலிக்க முடியுமா? சம்திங் ஃபிஷி.” என்று அத்தனை நேரம் அவளுக்கவளே பேசிக் கொள்ளும் பாவனையில் பேசிவள், கார்த்திகேயனிடம் திரும்பி, “அந்த துவாரகாவோட பேக்ரவுணட் தெரியுமா?” என்று வினவினாள்.
“நத்திங் மச்! அவளோட அப்பா கன்ஸ்டிரக்ஷன் கம்பெனி வச்சுருக்காரு. அங்க தான் மயூரன் வேலை செஞ்சுட்டு இருந்தான். அவளோட அம்மா இறந்துட்டாங்க. இவ்ளோ தான் தெரியும். எங்க டார்கெட் அவ இல்ல. சோ, அவளை பத்தி ரொம்ப ஆராயல.” என்றான் கார்த்திகேயன்.
“இப்போ நம்ம டார்கெட் அவ தான். அவளைப் பத்தின எல்லா டீடெயில்ஸும் நமக்கு வேணும். அவளை வச்சு தான் மயூரத்தானை பிரஷர் பண்ணனும்.” என்றாள் சந்திரலேகா.
கார்த்திகேயனும், அவள் கூறியவற்றை ஆமோதித்து, அதற்காக அவனின் ஆட்களுக்கு அழைத்து பேசிக் கொண்டிருக்க, அத்தனை நேரம் அவனுக்கு இருந்த சந்தேகத்தை அவளிடமே கேட்டான் குமரகுருபரன்.
“ஆமா, நீ எதுக்கு எங்களுக்கு ஹெல்ப் பண்ணனும்? உனக்கு என்ன லாபம் இதுல?” என்று அவளை கூர்ப்பார்வை பார்த்து குமரகுருபரன் வினவ, “இது எனக்கு சொந்தமாக போற சொத்து தான? அதுல ஒரு ஷேர் குறைஞ்சா எனக்கு லாபம் தான்.” என்றாள் கோணல் சிரிப்புடன்.
அதில் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்த கார்த்திகேயனின் கவனம் கூட அவள் புறம் திரும்பியது.
“வாட்? உனக்கு சொந்தமாக போற சொத்தா? ஆர் யூ ஜோக்கிங்?” என்று குமரகுருபரன் பரபரப்புடன் வினவ, “எனக்கு தெரியும், நம்ம குடும்பத்துல, சொத்து எல்லாம் ஆண் வாரிசுக்கு தான்னு. ஆனா, நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா, சொத்துல எனக்கும் பங்கு இருக்குல.” என்று கண்களை சிமிட்டி கூறிவிட்டு சென்று விட, அதிர்ந்து நின்றது குமரகுருபரன் மட்டுமல்ல, அத்தனை நேரம் அவர்கள் பேசியதை மறைந்து நின்று வீடியோ எடுத்துக் கொண்டிருந்த சூரியபிரபாவும் தான்.
“அடிப்பாவி, குட்டிப் பொண்ணுன்னு நினைச்சா, என்னன்ன பேசுறா. இவகிட்ட ஜாக்கிரதையா தான் இருக்கணும். ஹ்ம்ம், இந்த வீடியோக்கு இப்போ வேலையில்ல. ஃபியூச்சர்ல யூஸ் பண்ணிக்கலாம்.” என்று தனியொரு திட்டத்துடன் அவளின் அறைக்கு சென்றாள் சூரியபிரபா.
இப்படி ஒவ்வொருவரும், அவரவரின் சுயலாபத்துக்காக அவர்களின் வாழ்வோடு விளையாடப் போவதை அறியாத அந்த இருவரும், அவர்களின் அறையில் மோனநிலையில் கட்டுண்டு இருந்தனர்.
*****
மயூரனை கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு அறைக்குள் வந்த துவாரகாவோ எதுவும் பேசவில்லை.
அவளின் மௌனம் அவனை இம்சிக்க, “வரா, ஏன் அமைதியா இருக்க?” என்று அவன் வினவ, அவளோ அந்த கேள்விக்கு சற்றும் சம்பந்தம் இல்லாமல், “இவ்ளோ ரிஸ்க் எடுத்து நம்ம இங்க இருக்கணுமா மயூ? நம்ம ஊருக்கே போயிடலாம். இங்க, இந்த கம்பெனி எதுவும் நமக்கு வேண்டாம்.” என்று கண்களில் வழியும் கண்ணீருடன் கூறினாள் துவாரகா.
அவளின் கண்ணீரை துடைத்த மயூரனோ, “இன்னும் கொஞ்ச நாள் தான் குட்டிம்மா. தாத்தாக்கு பிராமிஸ் பண்ண மாதிரி, கம்பெனியை மீட்டுக் குடுத்து, நல்லவங்க கையில ஒப்படைச்சுட்டு, இங்கயிருந்து போயிடலாம்.” என்றான்.
‘உனக்கான உரிமையையும் வாங்கிக் குடுக்குறது தான் முக்கியமான பிளான் குட்டிம்மா. அதையும் செஞ்சுட்டு போயிடலாம். திரும்ப இங்க வரவே வேண்டாம்.’ என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டான்.
ஆனால், அதற்குள் அவர்களின் வாழ்வு புயலில் சிக்கிய தோணியை போல சிதறி சின்னப்பின்னமாகப் போவதை அவன் அறியவில்லை. அறிந்திருந்தால், மனைவியின் பேச்சுக்கு கட்டுபட்டிருப்பானோ?
அப்போதும் சமாதானமாகாமல் அவனின் காயங்களை தடவிக் கொண்டிருந்தவளின் இடையில் கைபோட்டு தன்னருகே இழுத்துக் கொள்ள, அது அவளின் கவனத்தை திருப்பும் வேலையை சரியாக செய்தது.
“ஹே பார்த்து பார்த்து, அடிபட்ட கையோட என்ன வேலை செய்யுறீங்க?” என்று அவள் பதறியபடி வினவ, “என்ன செய்ய, இப்போ தான் என் பொண்டாடிக்கு ஃபிரெண்ட்ஷிப் ஸோனை தாண்டி வர மனசு வந்துருக்கு. அதை சரியா யூஸ் பண்ணிக்க வேண்டாமா?” என்று அவன் வினவ, “ஹலோ யாரு சொன்னா? இன்னமும் ஃபிரெண்ட்ஷிப் ஸோன் தான்.” என்றாள் அவள் கருவிழிகளை உருட்டியபடி.
அதில் அவனுக்கு சிரிப்பு எட்டிப் பார்த்தாலும், அதை கட்டுப்படுத்திக் கொண்டு, “அப்போ இந்த டச்சிங் டச்சிங் எல்லாம்?” என்று கேட்க, “ஹான்… ஃபிரெண்டுக்கு அடிப்பட்டா பார்ப்போம்ல, அது மாதிரி தான்.” என்று அவளும் சளைக்காமல் பதில் கொடுத்தாள்.
“அப்போ எப்போ தான் ஃபிரெண்ட்ஷிப் ஸோனை தாண்டுறதாம்?” என்று அவன் கேட்க, “அதெல்லாம் சொல்ல முடியாது. எப்போ வேணும்னாலும் தாண்டலாம்.” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “நீ எப்போ வேணும்னா தாண்டு. நான் இப்போ தாண்டிக்குறேன்.” என்று அவள் முகம் பற்றி அருகில் செல்லும் போது, கதவு தட்டும் சத்தம் கேட்க, களுக்கென்று சிரித்தாள் துவாரகா.
“சோ சேட்.” என்று அப்போதும் அவனை சீண்டி விட்டே கதவை திறந்தாள்.
அங்கு தேவி நிற்பதைக் கண்ட துவாரகாவோ, ஆச்சரியத்துடன் அவருக்கு வழிவிட்டு நகர்ந்து நின்றாள்.
இதுவரை அவர்களின் பக்கம் எட்டிக்கூட பார்க்காதவர் திடீரென்று வந்து நின்றால், அவளும் என்னை செய்வாள்?
உள்ளே நுழைந்த தேவியோ, “மயூரா…” என்றபடி அருகே வர, “உங்க ஹஸ்பண்ட் கிட்ட பெர்மிஷன் கேட்டுட்டீங்களா?” என்று வார்த்தைகளால் அவரை தள்ளி நிறுத்தினான் மயூரன்.
அதைக் கேட்ட மாமியாரும் மருமகளும் திகைத்து நிற்க, முதலில் அதிலிருந்து மீண்டது தேவி தான்.
“மயூரா… என்ன சொல்ற?” என்று தேவி கேட்க, “ஆமா எப்பவும் அப்படி தான? அதான் கேட்டேன்.” என்று அவன் தோளை குலுக்கியபடி கூற, “மயூரா…” என்றவருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
அவன் கூறுவதும் உண்மை தானே!
அந்த உண்மை சுட, வேதனையுடன் அங்கிருந்து சென்று விட்டார். அவர் சென்றதும் தான் சுயத்தை அடைந்தாள் துவாரகா.
“மயூ, என்ன இது? ஏன் இப்படி பேசுனீங்க? அத்தை பாவம்.” என்று துவாரகா சொல்ல, “அவங்க பாவம் இல்ல வரா. இந்த வீட்டுல, அதுவும் அவங்களுக்கு பொறந்த நான் தான் பாவம்.” என்று பழைய நிகழ்வுகளை எண்ணி வருந்தியவனை நெருங்கிய அவனின் மனையாளோ, “பழசை நினைச்சு நினைச்சு ஃபீல் பண்ணிட்டே இருக்காதீங்க மயூ. சப்போஸ் ஷேர் பண்ணனும்னா, என்கிட்ட சொல்லுங்க. உங்க மைண்ட் கொஞ்சம் ஃப்ரீயாகும்.” என்றாள்.
அவனும் அவனின் கடந்த காலத்தை மனைவியிடம் பகிர வேண்டும் என்று தான் எண்ணியிருந்தான்.
அவளை அருகே அமர்த்திக் கொண்டவன், “நான் தான் ஏற்கனவே சொல்லியிருக்கேன்ல, இந்த வீட்டுக்கும் எனக்கும் செட்டே ஆகல. ஏன்னு எனக்கும் தெரியல. இத்தனைக்கும் இங்க தான் பொறந்தது, விபரம் தெரியுற வரை வளர்ந்தது எல்லாமே… ஆனாலும், எனக்கு இங்க ஒட்டல. மேபி, அதுக்கு காரணம் என் பேரண்ட்ஸா கூட இருக்கலாம்.” என்றவனின் கரத்தை ஆறுதலாக பற்றிக் கொண்டாள் துவாரகா.
அதில் உண்டான விரக்தி சிரிப்புடன் மீண்டும் தொடர்ந்தான் மயூரன்.
“ஏன்னு தெரியல, என் அப்பாவும் அம்மாவும் நார்மலா வாழ்ந்து நான் பார்த்ததே இல்ல. லைக், ஒரு ஹஸ்பண்ட் அண்ட் ஒய்ஃபுக்குள்ள இருக்க அன்யோனியம் அவங்களுக்குள்ள எப்பவுமே இருந்ததில்ல. இந்த குடும்பத்துக்குள்ள யாருமே அப்படி இல்லங்கிறது வேற விஷயம். ஆனா, என் அப்பா, அம்மாவை அடிமை மாதிரி ட்ரீட் பண்றதா சின்ன வயசுல இருந்தே என் மனசுல பதிஞ்சுருச்சு. அதுக்கேத்த மாதிரி, எப்பவும் அவரு அம்மாவை திட்டுறதும், அம்மா பேசாம இருக்குறதும்னு தான் அவங்க வாழ்க்கை போயிட்டு இருந்துச்சு. அந்த வயசுலயே, நான் அம்மா கிட்ட பேசுனேன், எதிர்த்து நிக்க சொல்லி. ஆனா, என் அம்மா கடைசி வரைக்கும் அவங்க ஹஸ்பண்டுக்கு எதிரா நிக்கவே இல்ல, அவங்க மகனுக்காக கூட!” என்றவனின் இறுதி வரி வேதனையில் தோய்த்து வெளிவந்தது.
அதில் பெண்ணவளின் இதயம் தான் துடித்தது.
“என்னாச்சு மயூ? ஏதாவது பெருசா நடந்துருச்சா?” என்று அதே தவிப்புடன் அவள் வினவ, “ஹ்ம்ம், எனக்கு பிசினஸ்ல செட்டாகல. அப்போ நடந்த பிரச்சனைல, அப்பா என்னை மட்டுமில்ல, அம்மாவையும் தப்பா பேசிட்டாரு. அதுக்கு மேல இங்க இருக்க பிடிக்காம, அம்மாவையும் என்னோட வர சொன்னேன். ஆனா, அவங்க கடைசி வரை நான் என்ன சொல்ல வரேன்னு புரிஞ்சுக்காம, அவங்க என்னோட வராதது மட்டுமில்லாம, என்னையும் இங்கேயே இருக்க கம்பெல் பண்ணாங்க. அதுல, அப்பா அவங்களை என்கிட்ட பேசக் கூடாதுன்னு சொல்ல, அதை வேதவாக்கா எடுத்துக்கிட்டு, இதோ இப்போ வரைக்கும் என்னோட பேசல.” என்று அவன் கூற, துவாரகாவிற்கு தான் அதை எப்படி கையாள்வது என்று தெரியவில்லை.
அவளுக்கும் அதிர்ச்சி தான், இப்படியும் இருப்பார்களா என்று!
அவளுக்கு தெரிந்த வரை, ஒரு அன்னைக்கு அவர்களின் பிள்ளைகள் தானே அனைத்தும்.
அப்படிப்பட்ட ஸ்தானத்தில் இருப்பவர், என்னதான் கணவர் கூறினாலும், எப்படி மகனை ஒதுக்கினார் என்பதில் அவளுக்கு திகைப்பு தான்.
அதை அவள் யோசிக்கும் வேளையில் மயூரனின் மனதில் அவனின் கடந்த கால நிகழ்வுகள் வந்து போயின.
*****
“அப்பா, என்னால இந்த பிசினஸ்ல முழுமனசா ஈடுபட முடியல. என்னை விட்டுடுங்க.” என்று மயூரன் குரல் உயர்த்தி பேச, “என்ன குரல் உயருது? தோளுக்கு மேல வளர்ந்துட்டன்னு திமிரா? அடிச்சு பல்லைக் கழட்டுடுவேன். என்ன பேசிட்டு இருக்க நீ? ஆயிரம் பேருக்கு சம்பளம் குடுக்குற குடும்பத்துல பொறந்துட்டு, வெளிய எவனுக்கோ கைகட்டி வேலை பார்ப்பியா?” என்று அவனை கடித்த சக்திவேல், மனைவியிடமும் பாய்ந்தார்.
“என்னடி நினைச்சுட்டு இருக்கான் அவன்? இப்படி என்னை எதிர்த்து பேச சொல்லி தான் வளர்த்தியோ?” என்று மனைவியிடம் கோபமாக வினவ, தேவியோ மகனை தவிப்புடன் பார்த்தார். அவரால் செய்ய முடிந்தது அதுவே!
“அப்பா, இப்போ எதுக்கு தேவையில்லாம அம்மாவை திட்டுறீங்க?” என்று மயூரன் எரிச்சலுடன் வினவ, “ஓஹ், அம்மாவை சொன்னதும் பிள்ளைக்கு கோபம் வருதோ? தொழிலை பெருக்கி கையில குடுத்து அதை பார்த்துக்கோன்னு சொன்னா, அதுக்கு வக்கில்ல, என்னை கேள்வி கேட்குறீயோ? என்று எகிறினார் சக்திவேல்.
“அப்பா, வக்கில்லன்னு எல்லாம் சொல்லாதீங்க. என்னால இங்க ஃப்ரீயா வேலை பார்க்க முடியல. எந்த முடிவையும் தன்னிச்சையா எடுக்க முடியல. எல்லாத்துலயும் உங்க அண்ணன் மகன் குறுக்க வரான். அது எனக்கு பிடிக்கல.” என்றான் மயூரன்.
“அவன் உன் நல்லதுக்கு தான் சொல்லுவான். அதை ஏத்துக்க முடியலையா உனக்கு? இப்ப தான் நீ தொழிலுக்குள்ள வந்துருக்க. அவன் மூணு வருஷமா கவனிச்சுக்குறான். அவன் உனக்கு உதவி செஞ்சா கசக்குதா? இதுல, என்னன்னு நீ வெளிய வேலை பார்ப்பியோ?” என்று மகனை மட்டம் தட்டிப் பேசுகிறோம் என்று புரியாமலேயே பேசிக் கொண்டிருந்தார்.
என்னவோ, சிறு வயதிலிருந்தே கார்த்திகேயன் மீது அத்தனை பாசம் சக்திவேலுக்கு. மயூரன் மீதும் அத்தகைய பாசம் இருக்கிறதா என்று கேட்டால், அதற்கான விடையை அவர் மட்டுமே அறிவார்!
அவரிடம் இதைப் பற்றி பேசி பிரயோஜனம் இல்லை என்று முடிவுக்கு வந்த மயூரனோ, “நான் இன்னைக்கு நைட்டே ஊருக்கு கிளம்புறேன். எனக்கான வேலை அங்க தயாரா இருக்கு.” என்று கூற, கோபத்தின் எல்லைக்கே சென்ற சக்திவேலோ, அதை மகனிடம் காட்ட முடியாமல் மனைவியிடம் காட்டினார்.
“சொல்லிட்டே இருக்கேன், அவன் போறேன்னு பிடிவாதமா இருக்கான். அதை என்னன்னு கேட்காம, வாயை பார்த்துட்டு இருக்க?” என்றவாறே தேவியை அவர் அடிக்க, அவரை தடுக்க முயன்ற மயூரனோ, தேவியை அவன் பின் நிற்க வைத்துக் கொண்டான்.
“அப்பா, என்ன பண்றீங்க? எதுக்கு இப்படி காட்டுமிராண்டி மாதிரி அம்மாவை அடிச்சுட்டு இருக்கீங்க?” என்று அவன் கேட்க, சில அடிகள் அவன் மீதும் விழுந்தன.
“யாருடா காட்டுமிராண்டி? அவ என் பொண்டாட்டி! அவளை அடிக்க எனக்கு உரிமை இல்லையா?” என்று மகனிடம் கேட்டவர், “என்னடி? உன்னை அடிக்க கூட உரிமை இல்லையா?”என்று மனைவியிடமும் கேட்டார்.
அப்போதும் தேவி அமைதியாக இருக்க, அன்னையின் மௌனத்தை கண்டு விரக்தியுடன், “அம்மா, நீங்க என்கூட வந்துடுங்க? இங்க இருந்தா அதுக்கும் உங்களை தான் அடிப்பாரு.”என்றான் மயூரன்.
அவன் சொல்லியதும் அவர் கிளம்பி விடுவார் என்ற நம்பிக்கை இல்லையென்றாலும், இப்போதிருந்தே அழைத்தால், பின் எப்போதாவது வருவார் என்று தான் அழைத்தான்.
“அப்பன் பேச்சுக்கு அடங்காம நீ வேணும்னா வெளிய போடா. அவளை ஏன் கூப்பிடுற? அப்படியே போயிடு. இதுக்கப்பறம் உனக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.” என்று கத்தினார் சக்திவேல்.
அதில் திகைத்த மயூரனோ அன்னையை பார்த்தபடி நின்று விட்டான்.
ஒரேடியாக வீட்டை விட்டு சென்று விட வேண்டும் என்றெல்லாம் அவன் எண்ணவில்லையே.
அந்த அதிர்ச்சியில் அவன் இருக்க, அதையும் தவறாக புரிந்து கொண்ட சக்திவேலோ, “என்ன சொத்து கையை விட்டு போயிடுமோன்னு பயமா இருக்கா? அப்போ ஒழுங்கா இங்கேயே இரு. பெத்து தொலைச்சுட்டோமேன்னு தண்டச்சோறு போடுறேன்.” என்று கோபத்தில் பேச, பொங்கி விட்டான் மயூரன்.
“கொஞ்சம் நிறுத்துறீங்களா? அப்போ இருந்து வாய்க்கு வந்ததை பேசிட்டே இருக்கீங்க! உங்க சொத்து யாருக்கு வேணும்? நீங்களே அதை கட்டிட்டு அழுங்க! இவ்ளோ சொன்னதுக்கு அப்பறமும் இங்க இருப்பேன்னு நினைக்குறீங்களா? அப்பாங்கிறதால தான் இத்தோட நிறுத்திட்டு போறேன்.” என்று கோபத்தை கட்டுப்படுத்தி பேசியவன், அன்னையிடம் திரும்பியவன், “அம்மா வாங்க.” என்று அவரின் கரத்தை பிடித்து இழுத்தான்.
அவரோ அப்போதும் கணவனை தான் பார்த்தார். அதில் சக்திவேலுக்கு கர்வம் கூட ஏற்பட்டது!
“அம்மா…” என்று பல்லைக் கடித்தவன், “அவரு பேசுனதை கேட்டீங்க தான? அப்பா மாதிரியா பேசுறாரு! ச்சே… அவரோட நீங்க இருந்து கஷ்டப்பட்டது எல்லாம் போதும். வாங்க என்னோட.” என்றான்.
“நீ பையன் மாதிரியா நடந்துக்குற? இதுல, என்னை பேச வந்துட்டான். நேத்து முளைச்சவன் எல்லாம், எனக்கு கத்துக் குடுக்குறான். ச்சை… ஏய், முதல்ல வெளிய போடா. இந்த வீட்டு வாசப்படியை நீ மிதிக்கக் கூடாது. எங்களுக்கு பையனே இல்லன்னு நினைச்சுக்குறோம்.” என்று அவனை தள்ளியபடி அந்த அறைக்கு வெளியே கூட்டிச் சென்றார்.
அப்போதும் அவன் பார்வை முழுவதும் தேவியிடத்தில் தான்!
‘நீயும் என்னை விட்டுட்டேல!’ என்று சொல்லிய அந்த பார்வையை சந்திக்க முடியாத தேவியோ சக்திவேலிடம் கெஞ்ச ஆரம்பித்து விட்டார்.
“ஏய், நீ சும்மா இரு. இவனுக்கு பரிஞ்சுட்டு வந்த, உன்னை உன் வீட்டுக்கே அனுப்பி வச்சுடுவேன்.” என்று சக்திவேல் கூற, அதையும் நிறுத்தி விட்டார் தேவி.
அவ்வளவு தான்!
அதன்பிறகு, மயூரன் ஒரு கணம் கூட அங்கு நிற்கவில்லை.
என்னவென்று கேட்ட மற்றவர்களிடமும், “இனி இங்க வர மாட்டேன். உங்க சொத்தும் எனக்கு வேண்டாம்.” என்று மட்டும் கூறிவிட்டு வெளியேறி விட்டான்.
அப்போது அன்னையை தவிர்க்க ஆரம்பித்தவன், தந்தையை ‘அப்பா’ என்று கூப்பிட மறுத்தவன், இப்போதும் அதை தொடர்கிறான்.
*****
“எனக்கு அப்பப்போ தோணும், என் அம்மாக்கு என்னை விட அப்பா தான் முக்கியமான்னு! அப்படி ஒன்னும் அவரு அவங்களை நல்லாவும் பார்த்துக்கலையே, அப்பறம் ஏன் அவரு பேச்சைக் கேட்டு என்னை ஒதுக்கி வச்சாங்க?” என்று மயூரன் நினைவுகளின் தாக்கத்தில் கேட்க, அதற்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் விழித்தாள் துவாரகா.
அவளிடம் பதிலில்லாமல் போக, அப்போது தான் அவளின் முகம் பார்த்தான் மயூரன்.
“ஹே நீ எதுக்கு இப்படி இருக்க? சாரி, என் கதையை சொல்லி போரடிச்சுட்டேனா?” என்று மயூரன் வினவ, இல்லை என்று தலையாட்டியவள், “எல்லா அப்பாவும் கோபி மாதிரி இருப்பாருன்னு நினைச்சேன்.” என்றாள் அவள்.
ஒரு சிரிப்புடன் அவளை அணைத்துக் கொண்டவனோ, “ஹ்ம்ம், உன் அப்பாவும் அம்மாவும் ரொம்ப ப்ரிசியஸ். எல்லாருக்கும் அவங்களை மாதிரி பேரண்ட்ஸ் கிடைக்க மாட்டாங்க.” என்றான்.
அவன் அணைப்பிற்குள் அடங்கியவள், கணவனுக்கு அவளின் தாயை பற்றி எப்படி தெரியும் என்பதை யோசிக்க மறந்து விட்டாள்.
தொடரும்…