அத்தியாயம் 23
காலையில் நடந்த சம்பவத்திற்கு பின்னர், பலர் அவரவர்களின் அறைக்குள் இருக்க, துவாரகா, மயூரன் மற்றும் பாஸ்கருக்கு நேரம் மகிழ்ச்சியாகவே சென்றது.
சிரிப்புடன் கதையடித்துக் கொண்டிருந்தவர்களின் கூட்டணியில், சக்கரவர்த்தியும் சோபனாவும் கூட அவ்வபோது கலந்து கொண்டனர்.
சொன்னதை போல, காலையுணவை முடித்த பின்னரே பாஸ்கரை செல்ல அனுமதித்தாள் துவாரகா.
அவன் செல்லும் போதும், “இனி, அடிக்கடி இங்க வரணும்.” என்று அன்புக்கட்டளையிட, ஒரு புன்னகையுடனே அங்கிருந்து கிளம்பினான் பாஸ்கர்.
மனைவியின் செயல்களில் அவள் மீது அளப்பரிய நேசம் பெருகியது மயூரனுக்கு.
அவள் தனியே சிக்கிய சமயம், “பரவாலையே, சொன்னதை சாதிச்சுட்ட. அதோட, நம்ம குடும்பத்தையும் அழகா ஹேண்டில் பண்ணியிருக்க.” என்று மயூரன் மனதார கூற, ‘இதெல்லாம் எனக்கு சர்வசாதாரணம்.’ என்பது போல அலட்சியமாக நின்றிருந்தாள் துவாரகா.
“இதுக்கு உன்னை இப்போ பாராட்டியே ஆகணுமே.” என்றவன், அவள் உணரும் முன்னே, அவள் கரத்தை பிடித்திழுத்து அவன் மீது மோத செய்திருந்தான்.
சட்டென்று நடந்த நிகழ்வில் திகைத்தவளோ, அவன் பாராட்டு எவ்விதம் இருக்கும் என்று புரிந்தவளாக, “அவுச்… நீங்க ஒரு ஆணியும் பிளக் பண்ண வேண்டாம்.” என்று உதட்டை சுழித்தபடி அவனிடமிருந்து விலகினாள்.
அவளின் கோபம் தான் இன்னும் மட்டுப்படவில்லையே. அத்துடன் அவளே, ‘இது என்ன சின்னப்பிள்ளத்தனமா கோபப்பட்டுட்டு!’ என்று யோசித்து கோபத்தை கைவிடலாம் என்று எண்ணும் சமயம் எல்லாம், சந்திரலேகா ஏதோ சிரித்தபடி மயூரனிடம் பேசுவதைக் கண்டு மீண்டும் மலையேறி விடுகிறாள்.
அவளின் மனநிலையை புரிந்து கொண்ட மயூரனோ, அவளை எப்படியாவது தெளிய வைத்து விட வேண்டும் என்று எண்ணினான்.
இல்லை என்றால், இதை வைத்தே அவனின் குடும்பத்தினர் ஏதாவது குளறுபடி செய்யக்கூடும் என்று சரியாக யூகித்தான்.
“வரா, லுக் அட் மீ. இப்போ உன் கோபத்துக்கான காரணம் எனக்கு தெரிஞ்சே ஆகணும்.” என்று தீவிர குரலில் அவன் வினவ, அதில் சற்று பயந்து தான் போனாள் துவாரகா.
அவனின் ‘ரெமோ’ அவதாரத்தை சமாளித்து விடும் துவாரகாவிற்கு, அவனின் இந்த ‘அந்நியன்’ அவதாரம் சற்று பீதியை உண்டாக்கியது உண்மை தான்!
அப்போதும் சமாளிக்கும் விதத்தில், “எனக்கென்ன கோபம்? அதெல்லாம் எதுவும் இல்ல.” என்றவளை இடைவெட்டியவன், “லேகா என்னோட பேசுறதை பார்த்து நீ கோபப்படல, அப்படி தான?” என்று சரியாக கேட்டுவிட, என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தாள் அவள்.
அதில் இறுக்கத்தை தொலைத்தவன், சிறு சிரிப்புடன், “அப்படி கோபப்பட்டாலும் தப்பில்ல. ஹஸ்பண்ட் அண்ட் ஒய்ஃப்புக்குள்ள கொஞ்சமே கொஞ்சம் பொஸஸிவ்நெஸ் தப்பில்ல.” என்று கூற, இயல்பிற்கு திரும்பியவளும், “ஹலோ, அது ஒன்னும் பொஸஸிவ்நெஸ் கோபம் இல்ல. சும்மா… கோபம் அவ்ளோ தான்.” என்றாள்.
“ஆஹான், அப்போ என்மேல ‘சும்மா… கோபம்’ இருக்குறதும், அதுக்கு காரணம் லேகாங்கிறதும் கன்ஃபார்ம் அப்படி தான?” என்று அவளை போலவே பேசிக்காட்டி வெறுப்பேற்றியவன், அவளை தன்னருகே அமர வைத்துக் கொண்டு விளக்கம் கொடுக்க முயன்றான்.
“வரா, நான் சின்ன வயசுல இருந்தே நம்ம குடும்பத்தோட அவ்ளோ அட்டாச்ட்டா இருந்ததில்ல. படிச்சது ஹாஸ்டல்… வேலை செஞ்சப்பவும் வெளிய தான் தங்கியிருந்தேன். நான் பிசினஸ் பார்த்துக்கிட்ட சமயம், லேகா, அவளோட அப்பா வழி பாட்டி வீட்டுக்கு போயிட்டா. அதனால, எங்களுக்கு பழக சான்ஸே இருந்ததில்ல. இப்போ என்னை பார்த்ததும், அந்த எக்ஸைட்மெண்ட்ல வந்து பேசுறா, அவ்ளோ தான்! அதுவும் அவ சின்ன பொண்ணு. இப்போ தான் காலேஜ் ஜாயின் பண்ணியிருக்கா. சோ, அவ பேசுறதை பெருசா எடுத்துக்காத.” என்று தீவிர குரலில் கூறியவன், அப்போதும் தெளியாத மனையாளின் முகத்தைக் கண்டு, “அதுவுமில்லாம, என்னால ரெண்டு பேரையெல்லாம் சமாளிக்க முடியாது.” என்று குறும்பாக கூறினான்.
முதலில், அவன் கூறியதை புரிந்து கொள்ளாத துவாரகாவோ அர்த்தம் புரிந்ததும், அருகில் கிடந்த தலையணையை எடுத்து, “ரெண்டு கேட்குதோ உங்களுக்கு?” என்றவாறே அவனை அடிக்க ஆரம்பித்தாள்.
அந்த நேரத்தில் மருமகனை காக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டவராக கோபிநாத் துவாரகாவின் அலைபேசிக்கு அழைத்தார்.
அதன்பின்பு, துவாரகாவின் கவனம் தந்தையிடம் சென்று விட்டது. அன்று நடந்தவை அனைத்தையும் தந்தைக்கு ஒலிபரப்ப ஆரம்பித்து விட்டாள்.
இடையில், மாமனாரிடம் நலம் விசாரித்த மயூரனோ, “மாமா, ஒரு முக்கியமான ஃபங்ஷன் அட்டெண்ட் பண்ண இப்போ போகணும்.” என்று சொல்லி கிளம்பி விட, அதற்கும் சேர்த்து தந்தையிடம் புகார் வாசித்தாள் அந்த பாசமிகு மகள்!
*****
வீட்டிற்கு வெளியே வந்த மயூரன், யாரிடமோ அலைபேசியில் பேசிக் கொண்டே அவன் வாகனத்தை நெருங்க, துணைக்கு வந்த கந்தசாமியை தவிர்த்து விட்டு, அவனே வாகனத்தை எடுத்துச் சென்றான்.
அதைக் கண்ட ஒருவன், யாரிடமோ அலைபேசியில் அந்த தகவலை பகிர்ந்து கொண்டான்.
வாகனத்தை செலுத்தும் போதும் ப்ளூடூத் வழியே அழைப்பில் இருந்த மயூரன், குறிப்பிட்ட அந்த இடம் வந்ததும், “கேட்ச் ஹிம்.” என்று கூறி, வாகனத்தின் கதவை திறந்து வெளியே குதித்தான்.
வாகனத்தின் வேகத்தை குறைத்திருந்ததால், சிறு சிறு சிராய்ப்புகளோடு தப்பித்து எழுந்தவன் கண்டது, அவன் வந்த வாகனம் நொறுங்கி இருப்பதை தான்.
சுதாரிக்காமல் விட்டிருந்தால்… அதை நினைக்கவே பிடிக்கவில்லை மயூரனுக்கு.
ஒரு பெருமூச்சுடன், இந்த பயணத்திற்கு முன்னர் நடந்ததை எண்ணிப் பார்த்தான் மயூரன்.
*****
தொழிலில் ஈடுபடும் முடிவை எடுத்தபோதே, கார்த்திகேயன் மற்றும் குமரகுருபரனை கண்காணிக்க ஆட்களை நியமித்திருந்தான் மயூரன்.
அதில், அலைபேசியை கண்காணிப்பதும் அடக்கம்!
இருவரும் எந்தளவிற்கு இறங்குவர் என்பதை தான் துவாரகாவின் விஷயத்திலேயே காட்டி இருந்தனரே.
அப்படி தான், குமரகுருபரனின் அலைபேசி அழைப்புகளை கண்காணிக்கும் போது, இந்த சதிச்செயலலை கண்டறிந்து அதை மயூரனுக்கும் தெரிவித்திருந்தனர்.
‘கொல்ல கூட துணிஞ்சுட்டாங்களா?’ என்று ஒருநொடி கசப்புடன் எண்ணியவன், மறுநொடியே திட்டமிட ஆரம்பித்து விட்டான்.
மயூரனின் திட்டம் இது தான். விபத்து அவர்கள் எண்ணியது போலவே நடக்க வேண்டும். அதிலிருந்து அதிர்ஷ்டவசமாக மயூரன் தப்பியது போல இருக்க வேண்டும். அங்கிருந்தவர்கள் விபத்து நடக்க காரணமான சரக்குந்து ஓட்டுநரை பிடித்து, விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்து, அதற்கு காரணமான குமரகுருபரனின் பெயரை இழுத்து விட வேண்டும்.
குமரகுருபரனின் அலைபேசி அழைப்புகளிலிருந்தே, சம்பவம் எங்கு, எப்போது நடத்த திட்டமிட்டுள்ளனர் என்பதை அறிந்து கொண்டவனுக்கு அதற்கான எதிர் தாக்குதலை திட்டமிட சிரமமாக இல்லை.
இந்த திட்டத்தில், கந்தசாமி, விஜய் அனைவரும் கூட்டு தான்.
கந்தசாமி முதலில் தயங்க, “சாமிண்ணா, இப்போ இதை நடக்க விடாம பண்ணிட்டா, அடுத்து என்ன பிளான் பண்ணுவாங்கன்னு நமக்கு தெரியாம கூட போக வாய்ப்பிருக்கு.” என்று கூறி அவரை சம்மதிக்க வைத்தான்.
சம்பவத்திற்கு முன்னரே அனைத்தும் தயாராக இருந்தது. சம்பவ இடத்தில், கந்தசாமிக்கு தெரிந்த ஆட்களை முன்னரே நிற்க வைத்திருந்தனர்.
கிளம்பும் சமயம் மயூரன் பேசிக் கொண்டிருந்ததும் அவர்களிடம் தான். அவர்கள் தான், அந்த சரக்குந்து நிற்கும் இடம் எல்லாவற்றையும் பகிர்ந்திருந்தனர்.
அதன் காரணமாகவே, சரியான நேரத்தில் வாகனத்தின் வேகத்தை குறைத்து, அதிலிருந்து குதிக்க முடிந்தது மயூரனால்.
அவர்களின் திட்டபடியே அனைத்தும் நடந்து முடிந்திருந்தது. அந்த சரக்குந்து ஓட்டுநரை பிடித்து விசாரிக்க, சில அடிகளில் அவனின் முதலாளியின் பெயரை அவன் கூற, மயூரனின் ஆட்கள் அவனையும் பிடித்திருந்தனர்.
ஒருவழியாக அந்த முதலாளி குமரகுருபரனின் பெயரை சொன்னதும் தான் விபத்து நடந்த தகவலை வீட்டிற்கு சொல்ல சொன்னான் மயூரன். அதுவும் சக்கரவர்த்தியிடம்!
*****
மயூரனின் விபத்து பற்றிய தகவல் அந்த வீட்டில் சிறு பூகம்பத்தை உண்டாக்கி இருந்தது என்று கூறினால் மிகையாகாது.
சரியாக சொல்ல வேண்டும் என்றால், அதற்கான காரணி அந்த வீட்டின் இன்னொரு வாரிசான குமரகுருபரன் தான் என்பதால் உண்டான விளைவு தான் இது.
அதில், நொறுங்கிப் போனது என்னவோ சோபனா தான்.
இப்போது தான் மகனின் ஒரு ஈனசெயலின் தாக்கத்திலிருந்து மிகுந்த சிரமத்துடன் வெளி வந்திருந்தார்.
அந்த சமயத்தில், இப்படி ஒரு செய்தி! அதுவும் கொலை முயற்சி!
அவர் பெற்ற மகன் வளர்த்த மகனை கொலை செய்ய முயன்ற செய்தி!
எந்த அன்னையால் அதை தாங்கிக் கொள்ள இயலும்?
தகவலை கேட்டு மயங்கி சரிந்தவரை தாங்கிப் பிடித்துக் கொண்டாள் துவாரகா.
அவளுக்கும் பெருத்த அதிர்ச்சி தானே. ஒருபக்கம் கணவனின் நிலை என்ன என்று சரிவர தெரியாமல் உள்ளுக்குள் மறுக, மறுபக்கம் தாயாக அவளை தாங்கிக் கொண்டவரின் சிரம காலத்தில் துணையாக இருக்க வேண்டுமே என்ற பதற்றமும் சூழ்ந்து கொள்ள, இதற்கிடையில் தள்ளாடி தான் போனாள் அவள்.
அவளின் நிலை அறிந்து தான் என்னவோ, அவளை அதிகம் காத்திருக்க வைக்காமல், அங்கு வந்து சேர்ந்தான் மயூரன்.
வலது கையிலும் காலிலும் சிறு கட்டுடன் வந்தவனை முதலில் நெருங்கிய துவாரகாவிற்கு வார்த்தைகள் வெளிவரவில்லை. கண்ணீர் தான் அவற்றை முந்திக் கொண்டு வெளியேறியது.
இடது கரத்தால் அவளை தோளோடு அணைத்துக் கொண்ட மயூரன், “ஷ், எனக்கு ஒன்னுமில்ல குட்டிம்மா. நீ ரிலாக்ஸாகு.” என்று சமாதானப்படுத்த, தள்ளாத வயதிலும் சக்கரவர்த்தி பேரனைக் காண ஓடி வந்தார்.
சூழல் கருதி அவன் அணைப்பிலிருந்து விலகிய துவாரகா, அவனை பிடித்துக் கொள்ள, அவர்களை நெருங்கிய சக்கரவர்த்தியின் கண்களிலும் கண்ணீரின் பளபளப்பு.
“மயூரா…” என்று ஒற்றை வார்த்தையில் அவர் நிறுத்த, “எனக்கு ஒன்னுமில்ல தாத்தா. சின்ன அடி தான்.” என்றான்.
அப்போது அங்கு ஓடி வந்த சோபனா, “மயூரா… மயூரா… உனக்கு ஒன்னுமில்ல தான?” என்று வினவியபடி அவனின் அடிபட்ட கையையும் காலையும் தடவியவர், “நான் பெத்த பாவி இப்படி செய்வான்னு நான் நினைக்கவே இல்ல மயூரா. அவனே உன்னை இப்படி…” என்றவருக்கு பேச வார்த்தைகள் வரவில்லை.
அவரைக் காணும்போது தான் மயூரனுக்கு வலித்தது. இருவருக்குமிடையே இருந்த உறவு அத்தகையது!
அவரின் கண்ணீர் மயூரனுக்கும் கண்ணீரை உண்டாக்க, அதை அடக்கியபடி, “ச்சு, எதுக்கு இவ்ளோ அழுகை? அதுதான் எனக்கு எதுவும் இல்லையே.” என்றபடி அவரையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான் மயூரன்.
கார்த்திகேயனையும் குமரகுருபரனையும் தவிர்த்து அனைவரும் அங்கு தான் இருந்தனர்.
சிலரின் பார்வையில் பரிவும், சிலரின் பார்வையில் பதற்றமும், இன்னும் சிலரின் பார்வையில் பரிதாபமும் தான் இருந்தது.
என்னதான் இருந்தாலும், மயூரன் அவர்கள் வீட்டுப் பிள்ளை அல்லவா?
மகன் மீது கோபத்தில் இருந்த சக்திவேல் கூட, அவனை பரிவுடன் பார்த்தபடி இருக்க, கதிர்வேல் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பை வேண்ட, அவரை தடுத்து விட்டான் மயூரன்.
தேவியோ பல மாதங்களுக்கு பின்னர் மகனிடம் வந்து, அவனை தொட்டு தடவி கண்ணீர் வடித்தார்.
அப்போதைய சூழலில் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான் மயூரன்.
சக்கரவர்த்தியோ கந்தசாமியிடம் விசாரித்துக் கொண்டிருந்தார். கந்தசாமியும் அவர்களின் திட்டப்படியே கூறினார்.
“நீ அவனோட போகலன்னா, உனக்கு எப்படி விஷயம் தெரிஞ்சுது?” என்று கந்தசாமியை நோக்கி கேள்வி வர, “தம்பி பர்ஸை விட்டுட்டு போயிடுச்சு. ஃபோன் அடிச்சு பார்த்தா பிசின்னு வந்துச்சு. அதோட, எனக்கும் மனசுக்கு நெருடலா இருந்துச்சு. அதான் பர்ஸை எடுத்துட்டு பின்னாடியே போனேன். அப்போ தான் ஆக்சிடெண்ட் ஆச்சு.” என்று ஏற்கனவே திட்டமிட்டிருந்ததை கூறினார் கந்தசாமி.
அந்த சூழலில், அதன் உண்மைத்தன்மையை ஆராயும் அளவுக்கு யாரின் மனநிலையும் இல்லை.
“இப்போ அந்த ராஸ்கல் எங்க?” என்று சக்கரவர்த்தி வினவ, விஷயத்தை கேள்விப்பட்டு கார்த்திகேயனும் குமரகுருபரனும் அங்கு வந்தனர்.
“நாயே, எவ்ளோ தைரியம் இருந்தா செய்யுறதையும் செஞ்சுட்டு, இங்க வந்து நிப்ப?” என்று அடிக்க ஆரம்பித்து விட்டார் கதிர்வேல்.
பெரியவர்கள் யாரும் அவரை தடுக்காமல் இருக்க, “சித்தப்பா, என்ன பண்றீங்க?” என்று கேட்டு அவரை தடுத்தான் கார்த்திகேயன்.
சில அடிகளை வாங்கிய பின்னர், அவரை தள்ளிவிட்ட குமரகுருபரனோ, “ப்ச், என்ன ஏதுன்னு கேட்காம அடிச்சுட்டு இருக்கீங்க! நான் எதுவும் பண்ணல. யாரு என்ன சொன்னாலும் நம்பிடுவீங்களா?” என்றான் அப்போதும் அலட்சியத்துடனே.
மீண்டும் அடிக்க பாய்ந்த கதிர்வேலை கார்த்திகேயன் தடுக்க, அந்த வேலையை கையில் எடுத்துக் கொண்டார் சோபனா.
“ஏற்கனவே உன்னால ரொம்ப நல்ல பேரு… இப்போ நம்ம வீட்டு பையனையே கொலை செய்ய பார்த்துருக்க… உன்னை பெத்த இந்த வயிறு எரியுதுடா.” என்று கதறியவர், “உனக்கு மட்டும் ஏன்டா இப்படி போகுது புத்தி?” என்றவரை தாங்கிக் கொண்டான் மயூரன்.
“சித்தி, ரிலாக்ஸ்.” என்றபடி அவரை தனியே அழைத்துச் செல்ல முயல, “இல்ல மயூரா. பணத்தாசையால ரத்த வெறி பிடிச்சு அலையுறவனை போலீஸ்ல பிடிச்சு குடுக்கணும்.” என்று அழுதார் சோபனா.
மகனை பார்த்து எந்த தாயும் சொல்லாத வார்த்தை தான். அப்படி சொல்ல வேண்டும் என்றால், அவரின் மனம் எந்தளவு காயப்பட்டிருக்கக் கூடும்.
அங்கிருந்த அனைவரும் அந்த நொடி ஸ்தம்பித்து தான் போயிருந்தனர், குமரகுருபரன் உட்பட.
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்க தான் செய்தது.
எனினும், குமரகுருபரன் மீண்டும் சொன்னதையே சொல்ல, “இன்னமும் திருந்ததுற ஐடியா இல்லல? இதோ, உன் ஆளு… இவனை பார்த்தாவது உண்மையை சொல்லுவியா?” என்று உடலில் ஆங்காங்கே காயங்களுடன் குமரகுருபரன் ஏவிய ஆளை சுட்டிக் காட்டினார் சக்கரவர்த்தி.
அவனைக் கண்டதும், அத்தனை நேரமிருந்த உடல்மொழி மாற, பதற்றம் வந்து ஒட்டிக் கொண்டது குமரகுருபரனிடம்.
அவனைக் கவனித்துக் கொண்டிருந்த கார்த்திகேயனோ, “உன்கிட்ட இதை எக்ஸ்பெக்ட் பண்ணல குரு.” என்று கண்டிப்புடன் முணுமுணுத்தான்.
“இன்னும் என்ன பேசிட்டு இருக்கீங்கப்பா? போலீசை கூப்பிடுங்க.” என்று கதிர்வேல் கூற, அப்பட்டமான பயம் அவன் முகத்தில் தெரிய ஆரம்பித்தது.
சோபனாவை சமாதானப்படுத்திக் கொண்டிருந்த மயூரனோ, “வேண்டாம் சித்தப்பா.” என்று மறுத்தான்.
இப்போது அனைவரும் அவனை குழப்பமாக பார்க்க, “இது வெளிய தெரிஞ்சா, நம்ம குடும்பத்துக்கு தான் அசிங்கம். அது நம்மை பிசினஸையும் பாதிக்கும்.” என்று கூற, ஒருவாறு அனைவரும் அதை ஏற்றனர்.
அப்படியும் குமரகுருபரனை எச்சரித்து விட்டே அங்கிருந்து சென்றனர். அவனின் அன்னையும் தந்தையும் அவனிடம் அடுத்து பேசவே இல்லை.
குடும்பத்தினர் முன்னிலையில் கூனிக் குறுகி நின்ற குமரகுருபரனோ அந்த கோபத்தை எல்லாம் மயூரனிடம் தான் திருப்பினான்.
“குரு, நான் தான் அத்தனை முறை சொன்னேனே, பொறுமையா இருன்னு. இப்போ பாரு…” என்று கார்த்திகேயன் கூற, “ப்ச் ப்ரோ, இது எனக்கே முழுசா ஞாபகம் இல்ல. போதையில ஏதோ உளறி இருக்கேன் போல. அதை அந்த கிறுக்கன் எக்சிக்யூட் பண்ணிட்டான்.” என்று நொந்தபடி கூறினான் குமரகுருபரன்.
“அடுத்து என்னன்னு யோசிக்கவே முடியல.” என்று கார்த்திகேயனும் விரக்தியாக கூற, “உங்க பேசிக் பிளானே தப்பு! நான் வேணும்னா ஐடியா தரட்டுமா?” என்ற பெண்குரல் பின்னிருந்து கேட்க, இருவரும் திடுக்கிட்டு திரும்பினர்.
தொடரும்…
வில்லி யாரு