அத்தியாயம் 22
பத்து நாட்கள் செய்ய வேண்டிய வேலையை ஒரே நாளில் அலைந்து திரிந்து முடித்த சோர்வுடன் வீட்டிற்கு வந்த மயூரனை முதலில் எதிர்கொண்டது சந்திரலேகாவே தான்.
“ஹை, மயூரத்தான் எப்படி இருக்கீங்க?” என்று அவனிடம் கைகுலுக்கி வினவியவளை தெரியாத பாவனையில் அவன் பார்த்து வைக்க, “ப்ச், என்னை யாருன்னு கூட தெரியலையா? நான் தான் சந்திரலேகா.” என்று அழும் குரலில் அறிமுகப்படுத்திக் கொண்டாள் அவள்.
அவள் அழுதுவிடும் அபாயம் இருப்பதால், உடனே அவளை சமாதானப்படுத்தும் குரலில், “ரொம்ப நாளாச்சுல, அதான் சட்டுன்னு ஞாபகம் வரல. அதுக்கு ஏன் நீ ஃபீல் பண்ற?” என்று கூறிவிட, “அப்போ ஓகே. இனிமே, நீங்க இங்க தானாமே. நம்ம ஒண்ணா இருக்கலாம். ஜாலியா இருக்கும். மத்த அத்தானுங்க எல்லாம் வேஸ்ட்…” என்று அவன் கையோடு கை கோர்த்தபடி, ஏதேதோ பேசிக் கொண்டே உள்ளே நுழைந்தாள் சந்திரலேகா.
அதைக் கண்டதும் நெருப்பில்லாமலேயே புகைய ஆரம்பித்து, புசுபுசுவென்று மூச்சு வெளி வந்தது துவாரகாவிடம்.
அதை அப்போதும் கவனிக்காத மயூரனோ, இந்த திடீர் பாசப்பிணைப்பிலிருந்து (!!!) எப்படி விடுபடுவது என்று தெரியாமல் விழித்தான்.
இருவரும் ஒன்றாக வருவதை அவள் மட்டுமா பார்த்தாள், குடும்பமே பார்த்துக் கொண்டு தானே இருந்தது.
மகளின் செய்கையில் உண்டான கோபத்தில், “லேகா, என்ன பண்ணிட்டு இருக்க? முதல்ல இங்க வா.” என்று சாரதா கத்த, “மம்மி, ரொம்ப நாள் கழிச்சு அத்தானை பார்க்குறேன். பேச எவ்ளோ இருக்கு. இப்போ எதுக்கு என்னை கூப்பிடுறீங்க?” என்று சலித்துக் கொண்டாள் சந்திரலேகா.
“எனக்குன்னு வந்து பொறந்துருக்கு!” என்று சத்தமாகவே முணுமுணுத்த சாரதா, “அவன் உன்னை, நம்மளை எல்லாம் மதிக்க கூட இல்ல, அவனை போய் ஒட்டிட்டு நிக்கிற, அறிவில்ல உனக்கு?” என்று கத்தியவர், கையோடு மகளை இழுத்துக் கொண்டு சென்றார்.
அவரின் வார்த்தை பிரயோகங்கள் தீவிரமாக இருந்தாலும் துவாரகாவிற்கு அப்போது தான் சற்று நிம்மதியாக இருந்தது. மனதிற்குள் சாரதாவிற்கு நன்றி கூட கூறினாள். அவள் கவலை அவளுக்கு!
அங்கு நடந்த நாடகம் முடிவுற்ற நிலையில் தான் மயூரனுக்கு மனைவி அவன் கண்களுக்கு தெரிந்தாள்.
அவளின் முகபாவனை வைத்தே ஏதோ தவறென்று உணர்ந்தவன், உடனே அதை சரி செய்ய அவளிடம் விரைந்தான், நல்ல கணவனாக!
“ஹே வரா, எப்படி போச்சு இன்னைக்கு? சாரி, கொஞ்சம் லேட்டாகிடுச்சு. பாஸ்கர் உன்னை கேட்டான்.” என்று அவள் பேசுவதற்கு இடம் தராமல் பேசிக் கொண்டிருக்க, அவளோ அவனை மேலும் கீழும் பார்த்து விட்டு சமையலறைக்குள் சென்றாள்.
மயூரன் விழிக்க, நமுட்டுச் சிரிப்புடன் சோபனாவோ, “மகனே, இன்னைக்கு உனக்கு அடி கன்ஃபார்ம். அதுக்குள்ள ஏதாவது பண்ணி தப்பிச்சுடு.” என்று எச்சரித்துவிட்டு மருமகளை பின்தொடர்ந்து சென்று விட்டார்.
‘அப்படி என்ன பண்ணிட்டேன் நான்?’ என்று குழம்பியவாறே அறைக்குச் சென்றான் மயூரன்.
திருமண வாழ்வில், அவன் சந்திக்க வேண்டியவை இன்னும் எக்கச்சக்கமாக இருக்கின்றன அல்லவா?
*****
ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த உற்சாக விடுதியின் ஒரு அறையில் இருந்தனர் கார்த்திகேயனும் குமரகுருபரனும். அவர்களின் வழக்கமான இடத்திற்கு தான் செல்ல முடியாதபடி செய்து விட்டானே அவர்களின் சகோதரன்!
அங்கு மட்டுமல்ல, அந்த நாளில் எங்குமே அவர்கள் செல்லவில்லை.
என்னதான் தவறு செய்திருந்தாலும், இதுவரை மறைத்து செய்தது திடீரென்று வெட்ட வெளிச்சமாகி விட, அதை எப்படி எதிர்கொள்வது என்றே தெரியவில்லை இருவருக்கும்.
வெளியிலும் செல்ல முடியாமல், குடும்பத்தினரையும் சந்திக்க முடியாமல், கோபத்தின் விளிம்பில் தடுமாறிக் கொண்டிருந்தனர் இருவரும்.
இருவரில் ஒருவர் தெளிவாக யோசிக்க கூடிய மனநிலையில் இருந்திருந்தால், இந்த புள்ளியில் கொஞ்சமாவது மனம் திருந்தி நல்ல வழிக்கு திரும்பி இருக்கலாம். ஆனால், அவர்கள் திருந்தும் காலம் இன்னும் வரவில்லையோ என்னவோ!
என்னதான் வெளியே செல்லவில்லை என்றாலும், மயூரன் செய்த, சாதித்த விஷயங்கள் யாவும் அவர்களுக்கு வந்து சேர்ந்து கொண்டு தான் இருந்தன.
அவன் கட்டுமானப் பிரிவில் இருக்கும் முக்கியஸ்தர்களை சந்தித்ததாகட்டும், அதன்பிறகு கவுன்சிலர் மற்றும் எம்.எல்.ஏவை மறைமுகமாக மிரட்டியதாகட்டும், அனைத்து தகவல்களும் உடனடியாக வந்து அவர்களின் கோபத்தை பெருக்க தான் செய்தன.
இதில், அவர்களின் தூரத்து சொந்தமான எம்.எல்.ஏ நேரடியாக கார்த்திகேயனுக்கு அழைத்து திட்டியிருந்தார்.
“ச்சை, இவனோட பெரிய இம்சையா இருக்கு. இப்படி நம்மள இதுல லாக் பண்ணி உக்கார வச்சுட்டு, அவன் நம்ம பிளான் எல்லாத்துலயும் மண்ணள்ளி போட்டுட்டான்.” என்று போதையுடனே குமரகுருபரன் கொந்தளிக்க, “இவ்ளோ சீக்கிரம் மூவ் பண்ணுவான்னு நான் நினைச்சு பார்க்கல குரு. நம்ம ரொம்ப நாள் அமைதியாவும் இருக்க முடியாது.” என்று கையில் கோப்பையுடன் கூறினான் கார்த்திகேயன்.
“ப்ச், எனக்கு இருக்க கோபத்துக்கு, மொத்தமா முடிச்சு விட்டுடலாம்னு இருக்கு.” என்று குமரகுருபரன் கூற, “அந்த தப்பை மட்டும் பண்ணிடாத.” என்று கார்த்திகேயன் ஏதோ நினைவில் கூறியவன், அப்போதும் அடங்காத தம்பியிடம், “அந்த மேரி என்ன ஆனான்னு விசாரிச்சியா?” என்று அவனின் எண்ணப்போக்கை மாற்றி விட்டான்.
“ப்ச், அவளை கான்டேக்ட்டே பண்ண முடியல. அவ ஃபிரெண்டு கிட்ட விசாரிக்க சொல்லியிருக்கேன். அதோட, அங்கயிருக்க நம்ம ஆளுங்க கிட்டயும் சொல்லியிருக்கேன். ஆனா, இப்படி எந்த தகவலும் இல்லாம காணாம போயிருக்குறதை வச்சு பார்த்தா, அவன் சொன்ன மாதிரி போலீஸ் கிட்ட மாட்டியிருக்க சான்ஸ் இருக்கு.” என்றான் குமரகுருபரன்.
“ம்ம்ம், சோ நமக்கு எதிரா ஒரு ஆதாரம் அவன் கிட்ட இருக்கு. அதுவும் ஸ்ட்ராங் எவிடன்ஸ்! இந்த நேரத்துல, அவனை ஏதாவது செஞ்சா, நமக்கு தான் ஆபத்து. நம்ம ஏதாவது செய்வோம்னு தான் மேரி விஷயத்தை இதுவரை வெளிய விடாம வச்சுருக்கானோ என்னவோ!” என்று கார்த்திகேயன் கூற, அப்போது ஒன்றும் சொல்லாத குமரகுருபரனோ, போதையுடன் சேர்ந்த கோபத்தோடு தள்ளாடியபடியே தனியே எழுந்து சென்று யாருக்கோ அழைப்பு விடுத்தான்.
அதன் விளைவு என்னவாக இருக்குமோ?
*****
இரவு நேர தனிமையில், எத்தனை கெஞ்சியும் துவாரகா மலையிறங்காமல் மயூரனை தலையால் தண்ணீர் குடிக்க வைத்தாள்.
“அட்லீஸ்ட், எதுக்கு கோபப்படுறன்னாவது சொல்லிட்டு கோபப்படேன். உன் கோபத்துக்கு வேலிட் ரீசன் இருக்கான்னு நான் தெரிஞ்சுக்க வேண்டாமா?” என்றான் மயூரன்.
அதில் அவனை முறைத்தவள், “பண்றதெல்லாம் பண்ணிட்டு எதுவுமே பண்ணாத மாதிரி எப்படி தான் மூஞ்சியை வச்சுக்குறாங்களோ?” என்று முணுமுணுக்க, மயூரனோ இனி அவளிடம் கேட்டு பிரயோஜனம் இல்லை என்று எண்ணியவனாக, நடந்தவற்றை மீண்டும் மனதிற்குள் ஓட்டிப் பார்த்தான்.
அப்போது தான் அது அவனுக்கு தோன்றியது.
“ஹே குட்டிம்மா, லேகா பேசுனதை கேட்டா கோபப்படுற?” என்று காரணத்தை ஒருவழியாக சரியாக யூகித்தவன், அத்துடன் நில்லாமல், “ஓஹ், இது பொஸஸிவ்நஸ் கோபமா?” என்று வேறு கேலியாக கேட்டு வைத்தான்.
அதை ஒப்புக்கொள்ள மனமில்லாதவளோ, “ச்சு, நான் எதுக்கு அதுக்கெல்லாம் கோபப்படப் போறேன்? நீங்க கசின்ஸ், உங்களுக்குள்ள பேசிக்க ஆயிரம் இருக்கும்.” என்று அழுத்திக் கூற, அதுவே அவளின் கோபத்திற்கான காரணத்தை மறைமுகமாக கூறியது.
காரணம் தெரிந்ததும் சற்று ஆசுவாசமாக உணர்ந்தவன், அவளை எரிச்சல் படுத்த வேண்டி, “அப்போ எதுக்கு இந்த கோபமாம்?” என்று கேட்க, உண்மையான காரணத்தை மறைக்க எண்ணி, “அது… அது வந்து… ஹான், பாஸ்கர் அண்ணாவை ஏன் வீட்டுக்கு கூட்டிட்டு வரல? அப்படி என்ன, காலைல இருந்து ஈவினிங் வரை வெளிய வேலை உங்க ரெண்டு பேருக்கும்? சொல்லாம கொள்ளாம, என்னை விட்டுட்டு நீங்க மட்டும் சுத்துனது தான் கோபம் எனக்கு!” என்று சொல்லி சமாளித்தாள்.
“ஓஹ், அப்போ உன் நொண்ணன் இங்க வராதது தான் உன் கோபமா? நான் நம்பிட்டேன்.” என்றவன், “உன் அண்ணன் நீ கூப்பிட்டா தான் இங்க வருவானாம். முடிஞ்சா வர வை.” என்று சவாலாக கூற, உதட்டை சிலுப்பியவளோ, அவனுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டாள்.
*****
மயூரன் சாதாரணமாக தான் கூறியிருந்தான். ஆனால், அதை சவாலாக எண்ணி செய்து முடித்திருந்தாள் துவாரகா.
மறுநாள் விடுமுறை என்பதால், சற்று தாமதமாக எழுந்து கீழே வந்த மயூரன், அங்கு நடுகூடத்தில் பாவமாக அமர்ந்திருந்த பாஸ்கரை தான் முதலில் கண்டான்.
அவனை சுற்றி குட்டி கலாட்டாவே நடந்து கொண்டிருந்தது. உபயம், மயூரனின் வினோத குடும்பத்தினர்!
‘அடிப்பாவி, ஒரு பேச்சுக்கு தான் சொன்னேன். உடனே, கூப்பிட்டது மட்டுமில்லாம, சண்டையை வேற இழுத்து வச்சுருக்கா. இவன் எதுக்கு வான்டடா வந்து சிக்கியிருக்கான்னு தெரியல. இப்போ என்ட்ரி குடுத்தா, எந்த பக்கம் சப்போர்ட் பண்ணனும்னு வேற தெரியல. முதல்ல என்ன பிரச்சனைன்னு வேற தெரியல.’ என்று மனதிற்குள் புலம்பியவன், இரவில் சைலன்ட்டில் போட்ட அலைபேசியை எடுத்து பார்க்க, அதில் பாஸ்கரிடமிருந்து இருபதுக்கும் மேற்பட்ட தவறிய அழைப்புகள் இருப்பதைக் கண்டவன், நண்பனுக்கு மௌன அஞ்சலி செலுத்தினான்.
அப்போது மாடியேறிய சோபனாவை பிடித்த மயூரனோ, “சித்தி, என்ன பிரச்சனை? காலைலயே சண்டை களை கட்டியிருக்கு!” என்று வினவ, “வாடா நல்லவனே, உன்னை தான் தேடிட்டு இருக்காங்க. உன் பொண்டாட்டி, அங்க எல்லாரையும் லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிட்டு இருக்கா. நீ என்னடான்னா, சாவகாசமா தூங்கி எழுந்து வர.” என்று கேலியாக கூறிய சோபனா, “ஆனா, மகராசி, நான் செய்ய முடியாம தவிச்சதுக்கு சேர்த்து வச்சு செய்யுறா!” என்று பாராட்டவும் செய்தார்.
“என்னதான் நடக்குதுன்னு சொல்லிட்டு உங்க மருமகளை கொஞ்சுங்க சித்தி.” என்றவனுக்கு நடந்ததை கூற ஆரம்பித்தார் சோபனா.
*****
சிலபல நிமிடங்களுக்கு முன்பு…
ஞாயிறு என்றாலும், எதையோ சாதிக்கும் எண்ணத்தில், விரைவாக அறையை விட்டு வந்த துவாரகா, கூடத்தில் அமர்ந்து வாசலிலேயே பார்வையை பதித்து யாருக்கோ காத்திருந்தாள்.
“பரவாலேயே மருமகளே, லீவு நாள்ல கூட சீக்கிரம் எந்திரிச்சுட்ட!” என்று வந்த சோபனாவிடம், “இன்னைக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. அதான் சீக்கிரம் எந்திரிச்சுட்டேன். இதையே எல்லா நாளும் எதிர்பார்க்க கூடாது மாமியாரே.” என்று வாயடித்தாள் அவள்.
அவளுக்கும் குளம்பியை எடுத்து வந்த சோபனா, “அப்படி என்ன முக்கியமான வேலை?” என்று கேட்டுக் கொண்டிருக்கும்போதே, “தங்கச்சி…” என்று வாசலில் குரல் கேட்டது.
அங்கு தூங்கு மூஞ்சியுடன் பாவமாக நின்றிருந்தது சாட்ஷாத் பாஸ்கர் தான்.
“இதோ வேலை வந்துடுச்சே… ச்சே, என் அண்ணன் வந்தாச்சே.” என்று கூறிய துவாரகா அவனை வரவேற்க செல்ல, “இது… டேய் நீ பாஸ்கர் தான?” என்று சோபனா அவனை அறிந்து கொண்டு வினவ, “அவனே தான்…” என்று முணுமுணுத்தபடி உள்ளே நுழைந்தான் அவன்.
“இவ்ளோ நாள் ஆளே காணோம். இப்போ மட்டும் இங்க வர வழி தெரிஞ்சுடுச்சோ!” என்று அங்கலாய்த்தபடி, அவனுக்கும் குளம்பி தயாரிக்க சென்றார் சோபனா.
“இப்போ கூட இங்க வந்துருக்க மாட்டேன். என் நேரம்…” என்று முனகியவன் துவாரகாவை பார்த்து சிரிக்க, அவனை கூர்மையாக பார்த்து கண்களால் மிரட்டிய துவாரகாவோ, “என் அண்ணனுக்கு நான் தான் செய்வேன்.” என்று வேறு சொல்ல, கிலி பிடித்துக் கொண்டது பாஸ்கருக்கு.
அப்போதும் விடாமல் அவனின் உயிர் நண்பன் மயூரனுக்கு அழைப்பு விடுக்க, அவன் தான் சுகமாக உறங்கிக் கொண்டிருந்தானே, எப்படி அழைப்பை ஏற்பான்!
‘நீயாடா உயிர் நண்பன்? என் உயிரை எடுக்குறதுக்கே ஒருத்தியை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்துருக்க துரோகி!’ என்று திட்டினான் பாஸ்கர். அது மட்டும் தானே அவனால் இயலும்!
கூடத்தில் நடக்கும் பரபரப்பு எப்படியோ கார்த்திகா மற்றும் சாரதா காதுகளுக்கு செல்ல, ‘அப்படி என்ன பொல்லாத அண்ணன்னு இந்த கவனிப்பு?’ என்பதை பார்க்க அவர்களும் வந்து விட்டனர்.
கேட்க வந்த விஷயத்தை நேரடியாக கேட்பது தான் சாரதாவின் அகராதியிலேயே இல்லையே!
“என்ன இங்க ஒரே சத்தம்? வீட்டுல நிம்மதியா தூங்க கூட முடியல.” என்ற புகாருடன் அவர் வர, “வீடுன்னா சத்தம் வரத்தான் செய்யும். அது தாங்க முடியலன்னா, ஹோட்டல்ல ஸ்டே பண்ணிக்கோங்க.” என்று சாதாரணமாக கூறிவிட்டு துவாரகா அவரை கடந்து சென்று விட, “நீ எப்படி என்னை பார்த்த் அப்படி சொல்லலாம்?” என்று ஆரம்பித்த சாரதா, இரண்டு நிமிடங்கள் விடாமல் பேச, அதற்கு எதிர்வினை என்று எதுவும் இல்லாது போக, அவர் பேசியது அனைத்தும் வீணாகிப் போனது. இடையில், கார்த்திகா வேறு தங்கைக்கு சாதகமாக இரண்டு வரிகளை பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!
அப்போது தான் கூடத்தில் பாவமாக அமர்ந்திருந்த பாஸ்கரை கண்ட கார்த்திகா, “நீ எங்க இங்க?” என்று கேலி விரவிய குரலில் கேட்க, அதற்கு பதிலாக, “ஓஹ், நீதான் இவளோட திடீர் அண்ணனா?” என்று நக்கலாக வினவினார் சாரதா.
அதில் அவமானமாக உணர்ந்தான் பாஸ்கர்.
அவர்கள் எப்போதுமே அப்படி தான். வசதி இல்லாதவர்களை கீழாக பார்க்கும் அழுக்கு மனம் படைத்தவர்கள்.
சிறு வயதில் எப்போதாவது வந்து செல்லும் பாஸ்கரை இது போல பேசி வைக்க, அதன்பிறகு இங்கு வருவதே இல்லை அவன்.
இன்றும், துவாரகாவின் கண்டிப்பினால் மட்டுமே அங்கு தலைகாட்டி இருந்தான் பாஸ்கர்.
அவமான உணர்வுடன் அவன் எழுந்து நிற்க, வேகமாக அங்கு வந்த துவாரகா, “அதுக்குள்ள எங்க போறீங்க?” என்றவள், அவன் கரங்களில் குளம்பி கோப்பையை திணித்தவள், “சண்டே ஸ்பெஷல்… இன்னைக்கு சாப்பிட்டு தான் போகணும்.” என்று கட்டளையிட, அவன் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தான்.
சாரதாவோ, “ஹ்ம்ம், நேத்து உரிமைப்பட்டவளுக்கு செய்ய சொன்னதுக்கு அத்தனை பேச்சு! இன்னைக்கு யாரு யாருக்கோ வடிச்சு கொட்ட போறாங்களாம்.” என்று வேண்டுமென்றே பேச, “உங்களையா வந்து செய்ய சொன்னோம்? அப்பறம், அது யாரோ இல்ல. என் அண்ணன்! சோ, மரியாதை குடுத்து பேசுங்க.” என்றாள் துவாரகா கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு.
“உனக்கே இங்க மரியாதை இல்ல. இதுல உன் அண்ணனுக்கு எல்லாம் மரியாதை குடுக்கணுமோ?” என்று கார்த்திகா நக்கலாக கேட்க, அவர்கள் இருவரையும் முறைக்க, கூட்டம் கூடி விட்டது கூடத்தில்.
கார்த்திகேயன், குமரகுருபரன், மயூரன், சக்கரவர்த்தி ஆகியோரை தவிர அனைவரும் அங்கு வந்து விட்டனர்.
சில நொடிகள் அவர்களை முறைத்து பார்த்த துவாரகா விடுவிடுவென்று மேலே ஏற, அவளை தோற்கடித்து விட்டதாக சந்தோஷ பார்வையை பரிமாறிக் கொண்டனர் சகோதரிகள் இருவரும்.
அதெல்லாம், துவாரகா சக்கரவர்த்தியின் அறைக்கதவை தட்டும் வரையில் தான்!
மிஞ்சி மிஞ்சிப் போனால், அவள் கணவனிடம் சொல்லி அழுவாள் என்று எதிர்பார்த்தவர்களுக்கு, அவளின் இந்த நகர்வு அதிர்ச்சியை கொடுக்க, சகோதரிகள் இருவருக்கும் சற்று பயம் ஏற்பட்டது உண்மை தான்.
இருப்பினும், ‘அப்பா தானே’ என்ற நம்பிக்கையில் இருக்க, அதை தகர்த்தெரிவதற்கு கையோடு சக்கரவர்த்தியை அழைத்துக் கொண்டு வந்து விட்டாள் துவாரகா.
“இப்போ சொல்லுங்க தாத்தா, இந்த வீட்டுல, எனக்கும் என்னை சேர்ந்தவங்களுக்கும் உரிமை இல்லையா? மரியாதை இல்லையா?” என்று கேட்க, சற்றும் பயமில்லாமல் சக்கரவர்த்தியையே நிற்க வைத்து அவள் கேட்டது, அங்கிருந்த அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
என்னதான் வயதானவர் என்றாலும், அங்கிருக்கும் அனைவருக்கும் சக்கரவர்த்தி என்றால் மனதிற்குள் ஒருவித பயம் இருக்கத்தான் செய்யும். ஏன், கார்த்திகேயனும் குமரகுருபரனுமே அவரிடம் ஓரளவுக்கு மேல் பேச தயக்கம் காட்டுவர்.
ஆனால், அதெல்லாம் எதுவும் இல்லாமல், தைரியமாக பேசிய துவாரகாவை கண்டு தான் இப்போது அங்கிருந்தவர்களுக்கு பயம் உண்டானது.
ஒருவேளை, சிறு வயதிலிருந்தே சக்கரவர்த்தியை பார்த்து வளர்ந்திருந்தால், துவாரகாவிற்கும் பயம் ஏற்பட்டிருக்குமோ என்னவோ!
துவாரகாவின் கேள்வியில் மகள்கள் இருவரையும் பார்த்த சக்கரவர்த்தி, “யாரும்மா அப்படி சொன்னது?” என்றவர், “இங்க மயூரனுக்கு என்ன உரிமை இருக்கோ, அது உனக்கும் இருக்கு. உனக்கு இருக்க மரியாதை, உன்னை சேர்ந்தவங்களுக்கும் இருக்கும், இருக்கணும்!” என்று அழுத்தமாகவே கூறினார்.
அது, அவரின் புதல்விகளுக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே தான் என்பது புரிந்து தான் இருந்தது.
அவர் கூறியது உள்ளுக்குள் குளிர் பரப்பினாலும், வெளியாளை வைத்துக் கொண்டு தந்தை தங்களை கண்டிப்பதை தாங்கிக்கொள்ள முடியாமல், “அப்பா, என்ன இருந்தாலும், நேத்து வந்தவளுக்காக எங்களை இப்படி கேள்வி கேட்குறது, எங்களுக்கு அசிங்கமா இருக்குப்பா.” என்றார் கார்த்திகா.
அதில், அவரை கூர்ப்பார்வை பார்த்த சக்கரவர்த்தி, “அப்படியா, அப்போ நீ உன் புகுந்த வீட்டுக்கு போயிடு.” என்றவர், அத்தனை நேரம் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மூத்த மாப்பிள்ளை சந்தானத்திடம், “கிளம்புங்க மாப்பிள்ளை.” என்றார் சக்கரவர்த்தி.
அதில் கிட்டத்தட்ட மயங்கி விழுகவே போனார் கார்த்திகா.
தந்தையிடம் இத்தகைய முடிவை எதிர்பார்க்காத கார்த்திகா, நம்ப முடியாமல் சக்கரவர்த்தியை காண, அவரோ அழுத்தமாக நின்றிருந்தார்.
“அப்பா… என்ன இப்படி சொல்லிட்டீங்க?” என்று கார்த்திகா வினவ, “ரொம்ப லேட்டா சொல்லிட்டேன். இப்போயாச்சும் சொன்னேனே…” என்றார் சக்கரவர்த்தி.
“இதெல்லாம் நியாயமே இல்ல.” என்று பதற்றத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேச, “உன் பொண்ணையே கல்யாணம் பண்ணி புகுந்த வீட்டுக்கு அனுப்பி வச்சாச்சு. நீ மட்டும் எதுக்கு இங்க இருக்க?” என்றார் சக்கரவர்த்தி.
அதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியாமல் கணவனை பார்க்க, அவரோ வழக்கம் போல அமைதியாக நின்றார்.
‘ச்சை, இந்த ஆளை கட்டிக்கிட்டதுக்கு ஒன்டிக்கட்டையாவே இருந்துருக்கலாம்.’ என்று மனதிற்குள் புழுங்கிய கார்த்திகா, இறுதி முயற்சியாக தந்தையை காண, “ஒழுங்கா, மத்தவங்களுக்கு தொல்லை தராம இருக்குறதுன்னா, இருங்க. இல்ல, அவங்கவங்க வீட்டை பார்த்துட்டு கிளம்பிட்டே இருங்க.” என்றவரின் பார்வை சாரதாவையும் தொட்டது.
அதற்கு மேல் சகோதரிகள் பேசுவார்களா என்ன?
*****
தந்தைக்கும் மகளுக்கும் நடந்த இறுதிக்கட்ட உரையாடலின் போது தான் மயூரன் மாடியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
சோபனா கூறியதைக் கேட்ட மயூரனுக்கோ, மனைவியை எண்ணி ஆச்சரியமாக இருந்தது.
‘பரவாலேயே குட்டிம்மா, சூப்பரா ஹேண்டில் பண்றியே!’ என்று மனதிற்குள் கொஞ்சி வேறு கொண்டான்.
கூடத்தில் கூட்டம் மெல்ல கலைய, ‘இப்போ என்ட்ரி குடுப்போம்.’ என்று எண்ணியபடி கீழே சென்றான் மயூரன்.
வந்தவனை அண்ணன் தங்கை இருவருமே முறைத்தனர்.
மயூரனோ அதைக் கண்டு கொள்ளாமல், “கையை குடு குட்டிம்மா..” என்று பாராட்ட, “சினிமால வர போலீஸ் மாதிரி, எல்லாம் முடிஞ்சதும் வந்துட்டு பாராட்டு வேற!” என்று அவள் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
பாஸ்கரோ, “துரோகி, எத்தனை முறை டா கால் பண்ண? நீயெல்லாம் என்ன டேஷுக்கு மொபைல் வச்சுருக்க?” என்று இருக்கும் இடம் கருதி கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தாமல் திட்டினான்.
“அதுசரி, நீ எப்படி இவ கிட்ட மாட்டுன?” என்று மெல்லிய குரலில் பாஸ்கரிடம் மயூரன் வினவ, “அந்த கொடுமையை ஏன்டா கேட்குற? காலங்கார்த்தால சேவல் கூவுறதுக்கு முன்னாடியே கால் பண்ணிட்டாடா உன் பொண்டாட்டி! சும்மா இல்ல, இப்போவே இங்க வரணும், இல்லன்னா வேலை போயிடும்னு மிரட்டில வர வச்சா.” என்று பாவமாக சொல்ல, மனைவியின் திருவிளையாடல்களை கேட்டவனுக்கு சிரிப்பை அடக்க தான் முடியவில்லை.
சிரிப்புடன் ஆரம்பித்த நாள், அதே சிரிப்புடன் முடியுமா என்பது சந்தேகம் தான்!
அதற்காக தானே ஒரு திட்டத்துடன் காத்திருக்கிறான் குமரகுருபரன்!
அவனின் திட்டம் என்ன? அதனால் யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம்? விடை விதியின் கைகளில்!
தொடரும்…