அத்தியாயம் 21
மறுநாள் சனிக்கிழமை என்றாலும் காலையிலேயே கிளம்பிக் கொண்டிருந்த மயூரனை துவாரகா கேள்வியாக பார்க்க, “பாஸ்கி வந்துருக்கான் வரா. அவனை தான் பார்க்கப் போறேன்.” என்றான்.
“அண்ணாவை வீட்டுக்கு கூப்பிட வேண்டியது தான?” என்று அவள் வினவ, “அவன் இங்க வர மாட்டான் வரா. அப்படியேன்னாலும், இப்போ இருக்க சிசுவேஷன்ல அவன் வீட்டுக்கு வரதும் நல்லதில்ல.” என்றவன் கிளம்பி விட்டான்.
அந்த புகழ்பெற்ற விடுதிலுள்ள அறையில் மயூரனுக்காக காத்துக் கொண்டிருந்தான் பாஸ்கர்.
அவன் மட்டுமல்ல, சக்கரவர்த்தி குழுமத்தின் கட்டட பிரிவில் வேலை செய்யும் முக்கிய தலைகள், அதாவது சக்கரவர்த்திக்கு விசுவாசமான ஆட்களும் அங்கு குழுமியிருந்தனர்.
விஜய்யிடம் கொடுக்கப்பட்ட வேலையை அவன் கச்சிதமாக முடித்திருந்தான்.
கார்த்திகேயனும் குமரகுருபரனும் அவர்களின் சொந்த விஷயத்தில் மூழ்கி இருக்கும் இந்த நேரத்தை தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள பார்த்தான் மயூரன். அதனாலேயே இந்த ஏற்பாடு!
தப்பித்தவறி கூட வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த விஷயம் தெரிந்து விடக்கூடாது என்பதற்காகவே பாஸ்கரையும் வரவழைத்திருந்தான்.
மயூரனைக் கண்ட பாஸ்கரோ, அவனை தழுவியபடி, “நீ நல்லா தான இருக்க? வெளிய எதுவும் தெரியலையே. ஒருவேளை எல்லாம் உள்காயமா இருக்குமோ?” என்று கிசுகிசுத்தான்.
மற்றவர்கள் இருந்ததால் தான் இந்த கிசுகிசுப்பு!
“இப்படியே உளறிட்டு இருந்தன்னா, உனக்கு தான் உள்காயம் உண்டாகும்.” என்று நண்பனை போலவே முணுமுணுத்தான் மயூரன்.
பின்பு, மற்றவர்களிடம் திரும்பிய மயூரன், “ஹலோ, உங்க ஃப்ரீ டைம்ல இப்படி இங்க மீட் பண்ணனும்னு சொன்னது ஒருவகையில தப்பு தான். ஆனா, கம்பெனி இப்போ இருக்க சிசுவேஷன்ல, என்னால வேற எந்த முடிவுக்கும் வர முடியல.” என்று மன்னிப்பு வேண்டியவாறே பேச துவங்கினான்.
சில நிமிடங்களில் அனைவரின் அறிமுகத்தையும் கேட்டவன், அவனையும் அறிமுகப்படுத்திக் கொண்டான்.
“இந்த ஃபீல்டு எனக்கு புதுசில்லன்னாலும், நிர்வாகம் எனக்கு புதுசு தான். அதனால, நீங்களும் உங்களால முடிஞ்ச உதவியை செஞ்சா, நீங்க, நான், நம்ம கம்பெனின்னு எல்லாரும் வளரலாம்.” என்று அவன் பேச பேச மற்றவர்களுக்கு அவனின் பேச்சு பிடித்துப் போனது.
“கண்டிப்பா சார். நாங்க எங்க சப்போர்ட்டை உங்களுக்கு தரோம். ஆனா…” என்று அவர்களில் ஒருவர் ஆரம்பித்தவர், பின்னர் தயங்க, “என்கிட்ட தயக்கம் வேண்டாம். என்னன்னாலும் தாராளமா சொல்லுங்க.” என்று அவர்களை பேச ஊக்கினான்.
அவர்கள் சொல்ல வந்த விஷயத்தை அவன் யூகித்தாலும், அவர்கள் வாயிலிருந்தே வரட்டும் என்று எண்ணினான்.
அப்போதும் அவர்கள் தயக்கத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள, “என்னாச்சு? என்ன பிரச்சனை? இல்ல யாரு பிரச்சனை?” என்று வினவினான்.
“அது வந்து… கார்த்திகேயன் சார்…” என்று தயங்க, “ஹ்ம்ம், புரியுது. சரி அதை லாஸ்ட் பார்ப்போம். இப்போ கரண்ட்டா போயிட்டு இருக்க பிராஜெக்ட் பத்தி டீடெயில்ஸ் பார்த்தேன். அதுல, வில்லங்கமானதா உங்களுக்கு தோணுறது என்னென்ன?” என்று கேட்க, அவர்களும் அவர்களின் கருத்துகளை பகிர்ந்தனர்.
அவர்கள் கூறியதில் ஒன்று எம்.எல்.ஏக்காக கட்டப்படும் அப்பார்ட்மெண்ட். மற்றொன்று கவுன்சிலருக்காக கட்டப்படும் பங்களா. இரண்டுமே சற்று குளறுபடியான வேலை தான்.
இரண்டு நிலங்களுமே அரசாங்கம் மக்கள் நலனுக்காக வழங்கப்பட்ட இடங்கள். அவற்றை அவர்களின் சுயலாபத்திற்காக உபயோகிக்க திட்டம் தீட்டி, அதை சக்ரா குழுமத்தின் வழியே ஆரம்பிக்கவும் செய்தனர்.
இதன் பின்னணியில், வருங்காலத்தில் வரப்போகும் அரசாங்க கட்டிடத்திற்கான டெண்டரை சக்ரா குழுமத்திற்கு வழங்க மறைமுக ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதில் ஆறுதலான ஒரே விஷயம், இந்த இரண்டு திட்டங்களும் திட்ட வடிவிலேயே இருப்பது தான்.
மற்றவர்களின் கருத்துகளை கேட்டவன், “சோ, உங்களை பொறுத்தவரை இந்த ரெண்டு கேஸ் தான் வில்லங்கமானது ரைட்? இதை நான் பார்த்துக்குறேன். மத்த பிராஜெக்ட்ஸ்ல இனி எந்தவித தப்பும் நடக்காம பார்த்துக்குறது உங்க பொறுப்பு. குவாலிட்டி, குவான்டிட்டி, ரிசோர்ஸ்னு எதுலயும் எந்த குறையும் இருக்கக் கூடாது.” என்றான் மயூரன்.
அதைக் கேட்டவர்களுக்கு ஒருபுறம் நிம்மதியாக இருந்தாலும், மறுபுறம் கார்த்திகேயனை எண்ணி தயக்கமாகவும் இருந்தது. ஏனெனில், வெற்றிவேல் பொறுப்பேற்ற பிறகு, அவரைக் காட்டிலும் அவன் தலையீடு தானே அதிகம் இருந்தது.
அதையே மயூரனிடம் கூற, “கார்த்திகேயன் கொஞ்ச நாளைக்கு ஆஃபிஸ் பக்கம் வர மாட்டாரு. அதுக்குள்ள இதெல்லாம் நடந்து முடிஞ்சுருக்கணும். எல்லாம் ஆர்கனைஸாகி இருக்கணும். இந்த ப்ரோசஸ்ல உங்களுக்கு யார் இந்த நெருக்கடி குடுத்தாலும், அவங்களை ப்ரோபர் ரீசனோட சஸ்பெண்ட் பண்ணவோ, வார்னிங் குடுக்கவோ உங்களுக்கு எல்லா ரைட்ஸும் இருக்கு. அதுக்கு மேலயும் பிரச்சனை செஞ்சா, தாராளமா என்கிட்ட கூட்டிட்டு வாங்க. அட் எனி காஸ்ட், நம்ம கம்பெனியோட தரத்தை திரும்ப மீட்டெடுக்கணும்.” என்றான்.
சிலர் உடனே ஒப்புக்கொள்ள, மற்றவர்களையும் பேசி பேசியே கரைத்தான். இறுதியில், அனைவரும் அவனுக்கு துணை நிற்பதாக உறுதி கொடுத்த பின்பே அனைவரையும் அனுப்பி வைத்தான் மயூரன்.
அத்தனை நேரம் அங்கு நடந்த பேச்சுவார்த்தையை கண்ட பாஸ்கரோ வாயை பிளந்து, “மயூரா, உனக்குள்ள இப்படி ஒரு பிசினஸ்மேன் ஒளிஞ்சுருக்கான்னு தெரியாம போச்சே!” என்று ஆச்சரியப்பட்டான்.
“ரொம்ப வாயை பொளக்காதடா.” என்ற மயூரன் தளர்ந்து போய் அமர, “பிசினஸ் விஷயம் இருக்கட்டும், வீட்டுல என்ன நிலவரம்?” என்று பாஸ்கர் விசாரிக்க, முன்தினம் நடந்தவற்றை சுருக்கமாக கூறினான்.
“ஹ்ம்ம், ஏன் தான் அவனுங்களுக்கு புத்தி இப்படி இருக்கோ? உன் சித்தி தான் பாவம்! அந்த வீட்டுலயே நல்லவங்க அவங்க ஒருத்தர் தான்.” என்று சோபனாவுக்காக பரிதாப்பட்டவன், “ஆமா, என் தங்கச்சி எப்படி இருக்கா?” என்று கேட்க, சிறு சிரிப்புடன் அவளின் அலப்பறைகளை கூறினான் மயூரன்.
மயூரனின் முகத்திலிருந்த சிரிப்பைக் கண்ட பாஸ்கருக்கு மனம் நிறைந்தது. பல வருடங்களாக தொலைந்திருந்த சிரிப்பல்லவா?
சிறிது நேரத்தில், “சரி வா கிளம்புவோம்.” என்று பாஸ்கரை அழைத்து சென்றவன், அன்றைய நாள் முழுவதும் சுற்றித் திரிந்து கவுன்சிலர் மற்றும் எம்.எல்.ஏவை சந்தித்து பேசி, அவர்களாகவே விலகுவதாக சொல்ல வைத்து ஒப்பந்தத்தை ரத்து செய்ய வைத்திருந்தான்.
கிட்டத்தட்ட மிரட்டினான் என்று தான் கூற வேண்டும். கவுன்சிலர் இப்போது தான் பதவிக்கு வந்தவர். அவருக்கு சக்ரா குழுமத்தை பகைத்துக் கொள்ள விருப்பம் இல்லை.
எம்.எல்.ஏவோ எதிர்க்கட்சி. ஆளுங்கட்சியிடம் விஷயத்தை கூறி விடுவதாக மிரட்டி காரியத்தை சாதித்திருந்தான்.
மேலும், அந்த எம்.எல்.ஏ மயூரனுக்கு தூரத்து சொந்தம் தான். அதன் காரணமாக தான், மயூரனால் அத்தனை எளிதில் அவரை பார்க்க முடிந்தது. அதையே காரணம் காட்டி அவர் பேச முயற்சிக்க, பலன் தான் இல்லை.
அடுத்த கட்டமாக அந்த எம்.எல்.ஏ, “தம்பி, இதனால எங்களுக்கு ஒன்னும் பாதிப்பு இல்ல. ஃப்யூச்சர்ல உங்களுக்கு தான் டெண்டர் கிடைக்காது பார்த்துக்கோங்க.” என்று மறைமுகமாக மிரட்ட, “அதை அப்போ பார்த்துக்குறேன்.” என்று கூறிவிட்டு வந்திருந்தான் மயூரன்.
இப்படியாக ஒரே நாளில் பம்பரமாக சுழன்று காரியத்தை வெற்றிகரமாக முடித்து வீட்டிற்கு திரும்பியவனை வரவேற்றாள் சாரதாவின் மகள் சந்திரலேகா.
*****
முன்தினம் நடந்த கலாட்டாவின் விளைவாக அந்த வீடே சோம்பிக் கிடந்தது.
வழக்கம் போல ஆண்கள் வெளியே சென்று விட, வழக்கமில்லாமல் பெண்களோ அவரவர்களின் அறையில் தஞ்சம் புகுந்திருந்தனர்.
விதிவிலக்காக, மருமகள்கள் மட்டும் சமையலறையில் இருந்தனர். சோபனாவிற்கு துணையாக, அவரை தனியே விட விரும்பாமல் அவருடன் பேசிக் கொண்டே இருந்தாள் துவாரகா.
அதிசயத்திலும் அதிசயமாக தேவி கூட மருமகளிடம் இரண்டொரு வார்த்தைகள் பேசினார், பொதுவாக தான்!
அப்போது சமையலறை வாசலில் நின்று கொண்டு, “க்கும், இன்னும் கொஞ்ச நேரத்துல என் பொண்ணு வந்துடுவா.” என்று குரல் கொடுத்தார் சாரதா.
உடனே, “இன்னொரு புது என்ட்ரி?” என்று துவாரகா சோபனாவிடம் முணுமுணுத்தவள், சாரதாவிடம் திரும்பி, “ஓஹ், தேங்க்ஸ் ஃபார் தி இன்ஃபர்மேஷன்.” என்று கூறிவிட்டு, அவளின் வேலையில் கவனமாகி விட்டாள்.
மற்றவர்களும் எதுவும் கூறாமல் இருக்க, பல்லைக் கடித்த சாரதாவோ, “இவ வந்ததும் உங்களுக்கு எல்லாம் ஏத்தமாகிடுச்சோ?” என்று கத்த, ஏதோ கூற வந்த சோபனாவை தடுத்த துவாரகா, “இப்போ எதுக்கு இங்க நாய்ஸ் பொல்யூஷன் உண்டாக்கிட்டு இருக்கீங்க? உங்க பொண்ணு வரப்போறான்னதும் பேனர் வச்சு, மைக்செட் போட்டு கொண்டாடனுமா என்ன? அப்படி ஏதாவது ஐடியா இருந்தா, நீங்களே செய்ங்க. தவுசண்ட் வாலா பட்டாசை கொளுத்தி விட்ட மாதிரி சும்மா சும்மா சத்தம் போட வேண்டாம்.” என்றாள்.
அவளின் பேச்சில் திகைத்து தான் போனார் சாரதா. இதுவரை அந்த வீட்டில் எவரும் இப்படி அவரை எதிர்த்து பேசியதில்லையே!
வீட்டுப் பிரச்சனையில் ஆண்கள் நுழைவதில்லை என்பதால், எப்போதும் கார்த்திகா மற்றும் சாரதாவின் குரலே ஓங்கி இருக்கும்.
இன்றோ, அதை எதிர்த்து ஒரு குரல் ஒலித்ததும், சம்பந்தப்பட்டவர்களுக்கு அதை எப்படி கையாள்வது என்றே புரியவில்லை.
அவர்களுக்கு மட்டுமா அதிர்ச்சி?
அவ்வீட்டு மருமகள்களான யமுனா, தேவி மற்றும் சோபனாவிற்கும் தான் அதிர்ச்சி!
சட்டென்று பேசி விட்டவளை சோபனா அடக்க முயல, “நீங்க சும்மா இருங்க சோபித்தை. சும்மா சும்மா வந்து, அவங்க வந்துட்டாங்க, இவங்க வந்துட்டாங்கன்னு ஆர்டர் போடுறது. நீங்களும் இந்த வீட்டு பொண்ணுங்க தான? இல்லை, வேலை பார்க்கன்னு கூட்டிட்டு வந்தாங்களா? அவங்க பொண்ணு உசத்தின்னா, அவங்களே வந்து விருந்து சமைச்சு குடுக்கட்டும்.” என்று பொங்கி விட்டாள்.
அவளும் நடப்பது அனைத்தையும் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறாள்.
சாரதா கடுப்புடன் அங்கிருந்து சென்று விட, “இதெல்லாம் முன்னாடியே நீங்க செஞ்சுருக்கணும்.” என்று மற்ற மூவரையும் துவாரகா குற்றம்சாட்ட, “ஹ்ம்ம், உனக்கு உன் புருஷன் துணையா இருப்பான். எங்களுக்கு யாரு இருப்பா? இவங்களை நம்பி நாங்க எதுவும் செய்ய முடியாது. ஒத்த வார்த்தைல, பிளேட்டை மாத்தி, எங்களை வீட்டை விட்டு துரத்தி விட்டுடுவாங்க.” என்று சோபனா அங்கலாய்க்க, அதை ஆமோதிப்பது போல தேவி மௌனமாக இருக்க, யமுனாவோ எதுவும் சொல்லாமல் அங்கிருந்து நகர்ந்து விட்டார்.
செல்லும் அவரை பார்த்தபடி, “ஹ்ம்ம், இவங்களை மட்டும் என்னால புரிஞ்சுக்கவே முடியல.” என்ற துவாரகா, “ஆமா, உங்க நாத்தனாரோட பொண்ணு என்ன பண்றாங்க? எதுக்கு இந்த திடீர் விஜயம்?” என்று வினவினாள்.
“இந்த வீட்டோட கடைக்குட்டி அவ. பேரு சந்திரலேகா. கோயம்புத்தூர்ல காலேஜ் படிச்சுட்டு இருக்கா. சின்ன பொண்ணுன்னு செல்லம் ஜாஸ்தி. அவ கொஞ்சம் நல்ல டைப் தான். அவ அக்கா மாதிரி சந்தர்ப்பவாதி இல்ல.” என்று அவளைப் பற்றிக் கூறியபடியே சமையலை கவனித்தார் சோபனா.
அவர்கள் பேச்சின் நாயகியான சந்திரலேகாவோ, சிறிது நேரத்தில் அந்த வீட்டிற்குள் நுழைந்தாள்.
சோபனா சொல்லியது போலவே, அனைவரிடமும் நன்றாகவே உரையாடினாள்.
துவாரகாவிடமும் கூட, “அட, எங்க மயூரத்தானை கல்யாணம் பண்ணிக்கிட்ட புது பொண்ணு நீங்க தானா?” என்று ஆர்வத்துடன் பேசினாலும், ஏனோ அவளின் மீது சிறிது எரிச்சல் உண்டானது உண்மையே.
அந்த எரிச்சலின் காரணம் அவள் விளித்த ‘மயூரத்தான்’ தான் என்று கூறவும் வேண்டுமோ?
அடுத்து அவளுடன் பேச சந்தர்ப்பம் கிட்டவில்லை. சாரதாவும் கார்த்திகாவும் தான் அவளை அவர்களின் அறைக்கு கூட்டிச் சென்று விட்டனரே.
“நீ வந்ததுல ஒரு நல்லது இது. எப்பவும் ஹால்ல உக்கார்ந்து நாட்டாமை பண்ணிட்டு இருப்பாங்க. இப்போ பாரு, ரகசியமா ரூமுக்குள்ள போய் பேசிக்குறாங்க.” என்ற சோபனா, “இந்த சாமர்த்தியம் நம்ம கிட்ட கொஞ்சமும் இல்ல பாருங்க அக்கா.” என்று தேவியையும் பேச்சுக்குள் இழுத்தார்.
“ஹ்ம்ம், எப்பவும் போல அமைதியாவே இருந்துருக்கலாம். இப்போ, அவங்க என்ன பேசுவாங்களோன்னு பதட்டமா இருக்கு.” என்ற தேவியின் குரலில் மறைமுகமான குற்றச்சாட்டு ஒளிந்திருந்ததை கண்டு கொண்டாள் துவாரகா.
“அவங்க குட்ட குட்ட குனிஞ்சுட்டே இருந்தா, நம்ம தலை மேல தான் ஏறிக்குவாங்க அத்தை. இதை கூட தைரியமா ஃபேஸ் பண்ணலன்னா எப்படி?” என்று துவாரகா கூற, “ஆக, புருஷனும் பொண்டாட்டியும் முன்னாடியே பேசி வச்சுட்டு தான் வந்துருக்கீங்க?” என்று கிண்டல் செய்தார் சோபனா.
“அதெல்லாம் எனக்கு தெரியாது. இது என் அப்பா சொன்னது. பொண்ணுங்க எப்பவும் தைரியமா இருக்கணும்னும், எதுக்காவும் தன்மானத்தை இழக்கக் கூடாதுன்னும் சொல்லி இருக்காரு.” என்று பெருமையாக கூறியவள், “என் அம்மா அப்படி தான் இருந்தாங்களாம். ஒரு சிசுவேஷன்ல, அவங்க குடும்பமே அவங்களை அவமானப்படுத்துனப்போ, தைரியமா அதை ஃபேஸ் பண்ணி, அவங்க குடும்பமே வேண்டாம்னு வெளிய வந்தாங்களாம். இந்த காலத்துல இது சாதாரணமா இருக்கலாம். ஆனா, அப்போவே அப்படின்னா, என் அம்மா எவ்ளோ பிரேவ்ல.” என்றவளின் குரலில் தான் எத்தனை உற்சாகம்.
சோபனாவின் மூலம் மருமகளின் குடும்பத்தை பற்றி அறிந்திருந்த தேவிக்கு ஒருபுறம் அவளிடம் பரிதாபம் தோன்றினாலும், மறுபுறம் அவள் வார்த்தைகளில் இருக்கும் உண்மையும், அதில் பொருந்தாத அவரின் வாழ்வை எண்ணி வெறுமையும் அவரை தாக்கின.
அதோடு, தன் மகனுக்காக கூட நிற்காத அவரின் கோழைத்தனத்தினால் உண்டான குற்றவுணர்வும் சேர்ந்து கொண்டது.
அதன் காரணமாக அவர் மௌனமாகினார் என்றால், சோபனாவோ இறந்த காலத்தின் சுவடுகளை யோசித்து அமைதியாகிப் போனார்.
“ஹலோ லேடீஸ், என்ன அமைதியாகிட்டீங்க?” என்று பேச்சை மாற்றிய துவாரகா, அவர்களை மேலும் யோசிக்க விடாமல், அவளின் பேச்சில் அவர்களையும் கட்டிப்போட்டு விட்டாள்.
சில நிமிடங்களுக்கு பிறகு அங்கு வந்த சந்திரலேகாவோ, “ஒரே சிரிப்பா இருக்கே, நம்ம வீடு தானா இது?” என்றாள்.
அவள் வந்ததும் துவாரகா அவளை ஆராய்ச்சியாக பார்த்தபடி அமைதியாகி விட, “அட என்ன சைலன்ட்டாகிட்டீங்க? அதுசரி, மத்தவங்க எல்லாரும் எங்க சின்னத்தை?” என்றாள் அவள்.
“எல்லாரும் வெளிய போயிட்டாங்கம்மா.” என்று சோபனா கூற, “ப்ச், இன்னைக்கு சனிக்கிழமை வீட்டுல இருப்பாங்கன்னு நினைச்சேன்.” என்று அலுத்துக் கொண்டவள், “மயூரத்தானும் வெளிய போயாச்சா? ரொம்ப நாளாச்சே பார்த்து, ஆர்வமா வந்தேன்.” என்று தேவியிடம் சொல்லியவள், “அச்சோ, இனி உங்க கிட்ட தான கேட்கணும்.” என்று துவாரகாவிடம் கூறினாள்.
அது மற்றவர்களுக்கு சாதாரணமாக தெரிந்தாலும், துவாரகாவிற்கு எங்கோ இடித்தது. அவள் வேண்டுமென்றே குழைந்து பேசுவது போலிருந்தது துவாரகாவிற்கு.
அவளைப் பற்றி தெரியாமல் வாயை விட்டுவிடக் கூடாது என்று எண்ணியவளாக சிரித்து மட்டும் வைத்தாள்.
அதன்பின்பும் சும்மா இருக்காமல், “அத்தானுக்கு அது பிடிக்காது, இது பிடிக்கும், இங்க கூட்டிட்டு போக சொல்லணும்…” என்று துவாரகாவின் எரிச்சல் சிறிதும் குறையாமல் பார்த்துக் கொண்ட பெருமை சந்திரலேகாவையே சேரும்.
அதை அறிந்திடாத மயூரனோ, துவாரகாவின் பார்வையை உணராமல், சந்திரலேகாவிடம் பேசி, வெற்றிகரமாக முதல் ஊடலுக்கு வழிவகுத்தான்.
தொடரும்…