திருமணமான அன்று முழுதும் மொட்டை மாடியிலேயே பொழுதைக் கழித்தான் மைத்ரேயன். தனக்கு பிரைவசி வேண்டும் என்று கூறிவிட்டவளின் முன்பு சென்று நிற்க மனமில்லை.
ஷைலேந்தரி திருமணம் முடிந்து மெத்தையில் படுத்தவள் தான் போனையே எத்தனை நேரம் பார்த்துக் கொண்டிருக்க முடியும். இரவும் ஆகி விட்டதில் பசி வேறு எடுத்தது.
‘ச்சை… கல்யாணம் பண்ணிக் கூட்டிட்டு வந்துட்டான். சோறு வாங்கி குடுத்தானா’ என எரிச்சல் கொண்ட ஷைலேந்தரி, அவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள்.
அவள் நினைத்தால் ஸ்விக்கியில் கூட ஆர்டர் செய்திருக்க முடியும். ஆனால் என்னவோ செய்யத் தோன்றவில்லை. அவளது குறுஞ்செய்தி கண்டதும் விறுவிறுவென கீழே வந்தவன், “நீ இன்னும் சாப்பிடலையா ஷைலா?” என்று கேட்டான் புருவம் சுருக்கி.
“நீ எங்கடா சாப்பாடு குடுத்த? விட்டுட்டு நீ பாட்டுக்கு எனக்கு என்னன்னு போய்ட்ட. விஸ்வூ இருந்துருந்தா தான் சாப்டுலாம் வாங்கி குடுத்து கவனிச்சு இருப்பியோ?” என்றாள் கடுப்பாக.
அவளது பின் வாக்கியத்தைக் கவனியாதவன், அவள் இன்னும் உண்ணாமல் இருந்த தகவலைக் கேட்டே கோபம் கொண்டு விறுவிறுவென அடுக்களைக்குச் சென்றான்.
அங்கு அவனது தாயார் உணவு பாத்திரத்தை எல்லாம் ஒதுக்கி வைத்துக் கொண்டிருந்தார்.
“ம்மா ஷைலாவுக்கு சாப்பாடு குடுக்கலையா?” எனக் கேட்க,
“அவள் ரூம் கதவைத் திறந்தா தான நான் குடுக்க முடியும்” எனச் சிலுப்பினார்.
“நீங்க கதவை தட்டுனீங்களா?” மூக்கு விடைக்க அவன் முறைத்திட, அகிலா பதில் கூற இயலாமல் மௌனமானார்.
அவனுக்கென்று மட்டும் நான்கு சப்பாத்திகளை வைத்திருந்தார். அதை எடுத்து தட்டில் நிரப்பியவன் குருமாவை பரப்பி விட்டு அறைக்குச் சென்றான்.
“பசிச்சா சொல்ல வேண்டியது தான ஷைலா? இது என்ன யாரோ ஒருத்தர் வீடா நம்ம வீடு தான!” என்றான் அதட்டலாக.
‘நம்ம வீடு…’ என்ற வாசகத்தில் திருதிருவென விழித்தவளுக்கு வயிறே நிறைந்தது போலொரு உணர்வு. இது என்ன விசித்திரம் என்று புரியாமலேயே, சப்பாத்தியை பிய்த்தவள் “நீ சாப்பிட்டியா?” என்று கேட்டாள்.
“நீ சாப்டு பர்ஸ்ட்” எனக் கண் மூடித் திறந்தவனை முறைத்தவள், இரண்டு சப்பாத்தியை பிரித்து தட்டில் மறுபாதியில் வைத்தவள், “இதை நீ சாப்பிடு” என்று பங்கு பிரித்தாள்.
ஒரே தட்டில் சாப்பிடுவதும், ஒன்றாய் படம் பார்ப்பது எல்லாம் அவர்களுக்கு புதிதல்ல தான். ஆனால், இன்றேனோ புதிதாய் ரசனையாய் இருந்தது.
அவனாவது இந்த சூழ்நிலைக்காக காத்திருந்தான். ஆனால், அவளுக்கு ஏன் இந்த ரசனை என்று தான் அவளுக்கே புரியவில்லை ஆனாலும் அதை அதிகம் ஆராயாமல் இருவரும் ஒரே தட்டில் உண்டு வயிறையும் மனதையும் நிரப்பிக்கொண்டனர்.
பின் “நீ பெட்ல படுத்துக்கிறியா? நான் சோபால படுத்துக்குறேன்” என மைத்ரேயன் கேட்டதும்,
“நான் ஒன்னும் உன் மேல பாஞ்சு ரேப் பண்ணிட மாட்டேன். நம்பிக்கை இருந்தா பக்கத்துல படுத்துக்க.” என்று குதறி விட்டவளைக் கண்டு சிரிப்பை அடக்க முயன்றான்.
“நான் சொல்ல வேண்டிய டயலாக்கை எல்லாம் நீயே சொல்லுடி!” என்றவன் அவள் அருகிலேயே படுத்துக்கொண்டான்.
இருவரும் முதுகு காட்டிப் படுத்துக்கொண்டாலும், இருவரின் அண்மையும் நிறைவையே கொடுத்தது.
மறுநாள், எப்போதும் போல வாதம் செய்தபடியே அலுவலகம் கிளம்பினர் புதுமணத் தம்பதிகள்.
வாசலுக்கு வரும் போது தான், மைத்ரேயனின் தந்தை லிங்கம் காரை விட்டு இறங்கி வீட்டினுள் நுழைந்தார்.
உள்ளே வந்தவர் ஷைலேந்தரியைப் புரியாமல் பார்த்து விட்டு, பின் “என்னம்மா உன் அக்காவை விட்டு இருக்க முடியலையா? காலைலயே விஸ்வாவைப் பார்க்க வந்துட்ட போல” என்றவர், மகனிடம் திரும்பி “மேரேஜ் நல்லபடியா முடிஞ்சுதுல” என்றார் தோளைத் தட்டிக்கொடுத்து.
வியாபார விஷயமாக ஜெர்மனுக்கு சென்றிருந்தவருக்கு மகனின் திருமணத்திற்கு கூட வர இயலாத அளவு வேலைப்பளு.
அவருக்கு நடைபெற்ற நாடகம் பற்றி தெரியாமல் போனதோடு, மைத்ரேயன் மேலோட்டமாக நடந்ததைக் கூட, அவருக்கு சிறு அதிர்வு. அதனை மறைத்துக் கொண்டவர், “ஓ! இருந்தாலும் கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி என்கிட்ட ஒரு வார்த்தை கேட்டு இருக்கலாம்” என்றார் குறையாக.
அதில் ஷைலேந்தரிக்கு சுள்ளென கோபம் எழுந்தது.
மைத்ரேயனோ, “அந்த நேரத்துல எதுவும் தோணலப்பா. அவள் வர லெட்டர் எழுதி வைச்சுட்டுப் போய்ட்டா. அதான்…” என்று சமாளித்தது சுத்தமாகப் பிடிக்கவில்லை.
“நீ உன் குடும்ப விஷயம் பேசிட்டு வா. நான் கிளம்புறேன்” எனத் திமிருடன் கூறி விட்டு விறுவிறுவென காரில் அமர்ந்து கொண்டாள்.
லிங்கம் அதிருப்தியுடன், “ஸ்ஸீ… விஸ்வாகிட்ட இருக்குற ஒரு பெர்பக்ஷன் அண்ட் ரெஸ்பெக்ட் இவள்கிட்ட இருக்காது மைத்ரா. அகிலா கூட உன்ன தடுக்கலையா? அகிலா” என அழைத்தபடி உள்ளே செல்லப் போனவரைத் தடுத்தவன்,
“ப்பா… நொவ் ஷைலா இஸ் மை வைஃப். நீங்களும் அம்மாவும் உங்க வேலையை மட்டும் பார்த்துட்டு இருந்தா பெட்டர்” என முகத்தில் அடித்தது போல பேசி விட்டு அவனும் காருக்குச் சென்றான்.
அங்கோ கோபத்தில் எரிமையாக அமர்ந்திருந்தாள் ஷைலேந்தரி.
“ஷைலா” மைத்ரேயன் பேச வருவதை கேட்க பொறுமையற்று “காரை எடுக்குறியா? ஈவ்னிங் வரும்போது என் காரை நான் எடுத்துட்டு வந்துடுறேன். தென், உங்கிட்ட இப்படி தொங்கிட்டு இருக்கணும்னு அவசியம் இல்ல” என்றாள் வெடுக்கென.
மௌனமாகவே காரை அலுவலகம் முன்பு நிறுத்தியவன், அவள் கோபம் தணியாமல் இறங்க முயன்றதில், அவள் கையைப் பிடித்தான்.
“அப்பா பேசுனதுக்கு சாரி” என மெல்லமாக கூற,
“என் கோபம் உன் அப்பா பேசுனதுக்கு இல்ல” என அனல் பார்வையை பரிசளித்து விட்டு கையையும் உதறிவிட்டுச் சென்றவளை தலையைச் சொறிந்து கொண்டு பார்த்தான் மைத்ரேயன்.
இங்கு, யுக்தா சாகித்யனையே திகைப்புடன் பார்த்திருந்தவளின் அலைபேசி அதிர்ந்தது. மைத்ரேயன் தான் அழைத்திருந்தான்.
“சொல்லுடா. என்ன சொல்றா உன் புது பொண்டாட்டி?” எனக் கேட்டாள் இயல்பாக.
“என்னத்த சொன்னா… எல்லாமே க்ளாஷ்லேயே போகுது விஸ்வூ” அவன் பாவமாக நடந்ததைக் கூற,
“அட மக்கு மாடசாம்பிராணி. இன்னும் நீ லவ் பண்ண விஷயத்தையே அவள்கிட்ட சொல்லலையா? அது இருக்கட்டும்… அவளுக்கு கோபமே அங்கிள் பேசும்போது அவளை நீ விட்டுக்கொடுத்த மாதிரி பிஹேவ் பண்ணிருக்க கூடாதுன்றது தான். என்ன தான் அவள் உன் ப்ரெண்டுன்னாலும் இப்ப அவள் உன் வைஃப்டா. சின்னதா கூட நீ அவளை விட்டுக்குடுக்குற சூழ்நிலைக்குள்ள கொண்டு வரக்கூடாது. இனி கேர்ஃபுல்லா இரு. முதல்ல லவ்வ சொல்லித் தொலை பக்கி” என்று புரிய வைத்தாள்.
“ஹே! நான் அவளை விட்டுக்கொடுக்க நினைக்கல விஸ்வூ, பட் அவள் அதை அப்படி எடுத்துருப்பாளோ… ப்ச், நான் அவளை சரி பண்றேன். சும்மா லவ்வ சொல்லு லவ்வ சொல்லுன்னா, லவ் பண்ணிப் பாரு அப்ப தெரியும் அதை சொல்றது எவ்ளோ கஷ்டம்னு” என்று புலம்பினான்.
“ஏன்டாங் இவ்ளோ லெந்தியா டயலாக் பேசுறதுக்கு, ‘ஐ லவ் யூ’ ன்னு ஒரு மூணு வார்த்தை சொல்றது கஷ்டமாடா” எனத் திட்டி விட்டு வைத்தவளை கண்ணெடுக்காமல் பார்த்திருந்தான் யுக்தா சாகித்யன்.
“உன் பிசினஸை சின்ன கேப்ல கூட ரொம்ப அழகா வளர்க்குற ஏஞ்சல்!” அவன் நக்கலாகக் கூறியதில் அவள் புரியாமல் பார்த்தாள்.
“அதான் மாமா வேலை பாக்குறியே…” யுக்தா கேலிச்சிரிப்பொன்றை உதிர்க்க, அவன் தோள்களில் அடித்தவள், “இறங்கிப் போ. நான் கிளம்பனும்” என்றாள் கண்ணைக்காட்டி.
“இவ்ளோ அவசரமா எங்கப் போகப்போற. ரூம்க்குப் போகலாமே ஏஞ்சல். வீ ஆர் நவ் ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் ரைட்?” என விரல்களால் அவள் உள்ளங்கையை வருடிட, “இன்னும் ஈவ்னிங் ஆகல” என்றாள்.
“சோ வாட்! நமக்கு எதுக்கு நேரம் காலம்…” எனக் கண்சிமிட்டியவன் அவளது கனல் பார்வையை உணர்ந்து, “மறுபடியும் சொல்றேன்… கேஸ் பத்தி டிஸ்கஸ் பண்ண தான் ரூம்க்குப் போகலாம்னு சொல்றேன்” என்று நினைவுபடுத்தினான்.
அவனை முறைத்தவள் இறுகிய முகத்துடன் “சரி போகலாம்” என்று அனுமதி கொடுக்க, அவன் விழிகள் வியப்பில் உயர்ந்தது.
அதில் ஒற்றை விரலை அவனது முகத்திற்கு நேரே நீட்டியவள், “கேஸ் விஷயத்தைப் பேச தான். அங்க போனதும் புருஷன் பொண்டாட்டின்னு உளறக்கூடாது…” என கண்டிப்புடன் கூறியே அறைக்குச் சென்றாள்.
எப்போதும் போல, அந்த கட்டடத்தின் பதிமூன்றாம் மாடியில் அமைந்திருந்த அறைக்குச் சென்ற நொடியே அவளைப் பின்னிருந்து அணைத்தான் யுக்தா.
“டேய் விடுடா” என அவள் துள்ள, “ஈஸி ஏஞ்சல். ஜஸ்ட் ஒரு ஹக் தான. உன் புருஷன் உன்னை கட்டிப்பிடிக்க கூடாதா?” என அவள் எதைப் பற்றிப்பேச கூடாதென்று கூறினாளோ அதையே பேசி உரிமை கொண்டாடினான்.
“இந்த ரூமுக்குள்ள வந்தா பொண்டாட்டி பீல் வரல. உன்கூட ஒட்டிட்டு வந்த கால் கேர்ள் மாதிரி இருக்கு” அவனை வெடுக்கென தள்ளிவிட்டு கத்தினாள்.
அதில் அவன் முகம் சிவந்து விட, “என் வீட்டுக்குப் போகலாமா?” எனக் கேட்டான் உடனடியாக.
அவளோ பேந்தப் பேந்த விழிக்க, அவளருகில் நெருங்கி நின்று கன்னத்தில் அழுத்தமாகக் கோடிழுத்தவன், “சொல்லு ஏஞ்சல். உன் பங்களா மாதிரி இருக்காது என் வீடு. சிம்பிளா இருக்கும். வர்றியா?” என்ற கேள்வியில் அவளை மீறியும் அவளது தலை ஆமோதிப்பாக ஆடியது.
—-
தனது வண்டிக்குப் பின்னே ஸ்கூட்டியுடன் விழுந்து கிடந்த பெண்ணைப் பார்த்த நந்தேஷ் திகைத்தான்.
“ஏய்… பார்த்து” என அவளைத் தூக்கி விட்டவன், “எதுக்கு என் வண்டில வந்து விழுந்த?” என்றான்.
அவளோ கையிலும் தலையிலும் ஒட்டி இருந்த மண்ணைத் தட்டியபடி, “உங்களை பாலோ பண்ணிட்டு வரும்போது, கரெக்ட்டா வண்டியை நிறுத்திட்டீங்க. நான் ஸ்லிப் ஆகிட்டேன்” என்று மையிட்ட விழிகளை அங்குமிங்கும் உருட்டி மூக்கு நுனி சிவக்க முறைத்தாள் அந்த கருமை நிற அழகி.
கண்மையின் கருமையினால் அவள் அழகா? அல்லது தமிழச்சியின் நிதர்சன நிறமான கருமையினால் அத்தனை அழகியாகத் தெரிந்தாளா என்று அவனுக்கு புரியவில்லை.
ஆனால், அவள் அழகி என்று மட்டும் மனதில் பதிந்து விட்டது.
அவன் உறைந்து நின்றிருப்பதைக் கண்டு அவன் முன்னே சொடுக்கிட்டவள், “ஹலோ! இந்த இடத்துல நீ ஏன் என்னை பாலோ பண்ணுனன்னு நீங்க கேட்கணும்” என்றாள் முறைப்பாக.
அதில் கண்ணைச் சிமிட்டி நிகழ்விற்கு வந்தவன், “எ… எதுக்கு பாலோ பண்ணுன?” எனக் கேட்டான்.
“அப்டி கேளுங்க. வி. யூ மேட்ரிமோனில நீங்களும் ஒன் ஆஃப் தி பார்ட்னர் தான…” புருவம் நெறித்து அவள் வினவ, நந்தேஷ் பதில் பேசாமல் அவளையே பார்த்தான்.
அவனது பதில் அவளுக்குத் தேவையில்லை என்பதுபோல அவளே பேசினாள்.
“இன்னும் ரெண்டு வாரத்துல உங்க மேட்ரிமோனி மூலமா எனக்கு கல்யாணம் நடக்கப் போகுது மிஸ்டர் நந்தேஷ். ஆனா அந்த கல்யாணம் நடக்க கூடாது. எப்படியாவது நிறுத்தணும். அதுக்கு தான் உங்க ஹெல்ப் கேட்டு வந்தேன்” என்றாள் கெஞ்சல் குரலில்.
அவனுக்கோ இதயம் சுளீரென இருந்தது. ஏற்கனவே அவனது மேட்ரிமோனியில் தான் கொலைகளே நிகழ்கிறது. இவளும் அந்த சீரியல் கில்லரின் டார்கெட்டாக இருந்தால்? என்ற எண்ணமே பயத்தைக் கொடுக்க, ஆகினும் நரேஷ் தான் சீரியல் கில்லர் என்று ஓரளவு ஊர்ஜிதமானதால் சட்டென இயல்பும் ஆகி விட்டான்.
“சாரி.. கல்யாணத்தை நடத்துறது தான் என் வேலை. நிறுத்துறதுக்குன்னு நான் பிசினஸ் ஸ்டார்ட் பண்ணல. மிஸ் அழகி!” என்றான் பணிவாக.
“அழகியா?” அவளோ அவனது அழைப்பில் தடுமாறிப் பின் “என்ன கலாய்க்கிறீங்களா?” எனக் கோபத்துடன் கேட்க,
“வாட்? நான் ஏன் உங்களை கிண்டல் பண்ணனும். உங்க பேர் அழகின்னு சொன்ன மாதிரி இருந்துச்சு…” என இழுத்தான்.
“குறிஞ்சி. அதான் என் பேர். நீங்க தான எல்லாம் ஆர்கனைஸ் பண்ணுனீங்க. பேர் கூட தெரியாதாக்கும்” என்று நொடித்தாள்.
“நான் வாரம் ஒரு கல்யாணம் மேனேஜ் பண்றேன், சில நேரம் தொடர்ந்து மேரேஜ் ஒர்க் இருக்கும் அழகி… சாரி குறிஞ்சி. சோ பேர் எல்லாம் ஞாபகம் வச்சுக்குறது இல்ல” என்றதில்,
“ஓகே விடுங்க. இப்ப என் கல்யாணத்தை நிறுத்தணும். அதுக்கு வழி சொல்லுங்க” என்று நிலையாக நின்றாள்.
‘ஐயோ இந்த பொண்ணு வேற…’ என நொந்தவன், “இன்னும் 5 டேஸ்ல கல்யாணம் ஒன்னு நடக்கப் போகுது குறிஞ்சி. அது நல்லபடியா நடந்துட்டா உன் கல்யாணத்தை நிறுத்துறேன். அப்படி அந்த கல்யாணம் நல்லபடியா நடக்கலைன்னா உன் கல்யாணமும் தானா நின்னுடும்னு தான் நினைக்கிறேன்” எனப் பரிதாபமாகக் கூறியவன், அங்கிருந்து கிளம்பி விட, “என்ன குழப்பிட்டுப் போறான் இவன்” என்று திருதிருவென விழித்தாள் குறிஞ்சி.
—
“வெல்கம் ஹோம் ஏஞ்சல்!” தனது ஒரு பெட்ரூம் அபார்ட்மெண்ட்டிற்கு மனையாளை அழைத்து வந்திருந்தான் யுக்தா சாகித்யன்.
சிறிய ஹாலும், அதனை ஒட்டிய அடுக்களையும், சிறிய படுக்கையறையுமாக காம்பாக்ட் வசதியுடன் இருந்தது. பங்களாவில் வளர்ந்தவளுக்கு இந்த மொத்த வீடும் அவளது அறை அளவு கூட இல்லை தான்.
ஆனாலும், அந்த முடிவு பெறாத கட்டடம் கொடுத்த பயத்தை இந்த வீடு தரவில்லை. மாறாக, ஒரு புத்துணர்ச்சியை தந்தது.
“வீடு குட்டியா அழகா இருக்கு” என்றவள் வேறு எந்த விளக்கமும் கேட்கவில்லை. அவனும் சொல்லவில்லை.
அவளது கைப்பிடித்து இழுத்து தனது கைவளைவிற்கு கொண்டு வந்தவன், அவள் கழுத்தில் எப்போதும் அணிந்திருக்கும் சிறு இதய வடிவ மெல்லிய செயினை வருடினான் தன்னிச்சையாக.
அது அவளைத் தாக்கி இருக்க வேண்டும்!
“அதைத் தொடாத” என வெடுக்கென கூறியவளிடம் “உன் கழுத்துக்கு இது அழகா இருக்கு ஏஞ்சல்” என்று மீண்டும் வருடி, கழுத்தில் முத்தம் வைத்தான்.
அவனைத் தள்ளி விட்டு விலகி “அதைத் தொடாதன்னு சொல்றேன்ல. என் சித்தி வாங்கி குடுத்தது. நீ அதை டச் பண்றது எனக்குப் பிடிக்கலை” என்றவள் அவனது முத்தத்திற்கு மட்டும் மறுப்பு கூறவில்லை.
“ஓஹோ!” என ராகமிட்டவன், ‘அதைத் தொடுறதுக்கு என்னைத் தவிர யாருக்கும் உரிமை இல்லைன்னு உனக்குப் புரியலையே யுகா’ என மனதினுள் எகத்தாளம் புரிந்து விட்டு, “காபி குடிக்கிறியா?” எனக் கேட்டான்.
“போட்டுக் குடுத்தா குடிப்பேன்” மிடுக்காய் அவள் கூறிய தோரணையில் விழுந்தவன், “காபி போட்டு உனக்கு ஊட்டி கூட விடுறேன். தட்ஸ் மை டியூட்டி ஏஞ்சல்” என்று ரசனை மின்ன அவளது சிவந்த இதழ்களில் இதழ் பதித்து விட்டு அடுக்களைக்குச் சென்றான்.
பற்களை நறநறவென கடித்தபடி, வாயை அழுத்தி துடைத்து விட்டு, வீட்டை அளந்தவளின் கவனத்தை ஈர்த்தது அந்த கையளவு சொக்கன் மீனாட்சி சிலை.
சொக்கனுக்கு வலப்புறம் நளினமாக நின்றிருந்தாள் மீனாட்சி.
ஷோ கேஸில் அழகாய் வெளிப்பட்ட அந்த சிலையை கையில் எடுத்தவள் அதனை வருடிட, சட்டென வெளியில் வந்த யுக்தா அதனைப் பிடுங்கி இருந்த இடத்திலேயே வைத்தான்.
“டோன்ட் டச் இட்!” அவளை போன்றே கடுகடுப்புடன் இம்முறை அவன் கூற,
“ஏனாம்?” அவளது குரலில் ஏளனம்.
“அது என் அம்மா எனக்கு வாங்கி குடுத்தது. அதைத் தொட யாருக்கும் உரிமை இல்ல” என்றவனின் விழிகளில் நெருப்பு படலம்.
“ஓஓஓஓஓ!” அவனைப் போலவே உதடு குவித்து, ‘என்னை விட யாருக்குடா உரிமை வேணும் சைக்கோ!’ என்று மனத்தினுள்ளேயே எக்களித்துக் கொண்டடாள்.
பின் அவனை நெருங்கி வந்து, “காபி போட உனக்கு இவ்ளோ நேரமாடா சைக்கோ புருஷா. டூ ஸ்லோ…” என சிலுப்பியவள் கால்களை எக்கி அவன் இதழ்களில் இதழ் பதித்து கேலிச்சிரிப்புடன் அடுக்களைக்குச் செல்ல, இம்முறை எரிச்சலுடன் இதழ்களை அழுத்தித் துடைப்பது அவன் முறையானது.
மோகம் வலுக்கும்!
மேகா