Loading

அத்தியாயம் 19

 

கார்த்திகேயனும் குமரகுருபரனும் கத்தி விட்டு சென்றதும், தன்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கூறிய மயூரன் விஜய் கொடுத்த கோப்புகளில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டான்.

 

மதிய உணவை கூட சக்கரவர்த்தி நினைவு படுத்தியதும் அவன் இடத்திற்கே கொண்டு வரச்செய்து உண்டான்.

 

அப்போது துவாரகாவிடம் அலைபேசியில் சில நிமிடங்கள் பேசிவிட்டு வைத்தவன் தான். அதன்பிறகு மணியை கூட அவன் பார்க்கவில்லை.

 

விஜய்யே உள்ளே வந்து, “சார், டைமாச்சே…” என்று தயக்கத்துடன் கூற, அப்போது தான் மணி எட்டாகி இருந்தது என்பதையே கவனித்தான் மயூரன்.

 

சக்கரவர்த்தியை மதியமே வீட்டிற்கு அனுப்பி விட்டான். இல்லை என்றால், அவராவது நினைவு படுத்தியிருப்பார்.

 

புருவத்தை கீறியபடி, “ஓஹ், இவ்ளோ நேரமாகிடுச்சா? உங்களையும் இருக்க வச்சுட்டேனா? சாரி விஜய், ஃபைல்ஸ் பார்த்துட்டு இருந்ததால கவனிக்கல.” என்று மயூரன் கூற, “நோ பிராப்ளம் சார், உங்களுக்கு லேட்டாச்சோன்னு தான் சொன்னேன்.” என்றான் விஜய்.

 

அதற்கு ஒரு சிரிப்புடன், “சின்சியரா இருக்கலாம் தான். அதுக்காக இவ்ளோ சின்சியாரிட்டி இருக்கக் கூடாது விஜய்.” என்று கூறிய மயூரன், “இது எனக்கு புதுசு. பழகுற வரை கொஞ்சம் டைமாகும். நீங்க சிக்ஸுக்கு எல்லாம் கிளம்பிடுங்க விஜய். எனக்காக பார்க்க வேண்டாம்.” என்று எடுத்து வைத்துக் கொண்டே கூறினான்.

 

“நானே பேச்சுலர். வீட்டுல போய் எனக்கும் வேற எந்த வேலையும் இல்ல சார்.” என்ற விஜய்யை நோக்கி நட்பாக புன்னகைத்த மயூரனோ, “லைஃபையும் என்ஜாய் பண்ணுங்க விஜய். இந்த டைம் திரும்ப கிடைக்காது.” என்று தோளில் தட்டி கூறியவன், வேகநடையில் வெளியேறினான்.

 

அங்கு அவனுக்காக ஒருத்தி காத்திருக்கிறாளே!

 

கந்தசாமி வாகனத்தை செலுத்த, மயூரனோ வேலையை பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருந்தான்.

 

மேலோட்டமாக பார்க்கும் போதே தெரிந்தது, அதில் ஏகப்பட்ட தில்லுமுல்லு வேலைகள் நடந்திருப்பது. அதோடு, சில பெரிய தலைகளின் உள்ளீடும் இருப்பதை அறிந்து கொண்டவன், அதிலிருந்து எப்படி மீட்டுக் கொண்டு வருவது என்ற யோசனையில் இருந்தான்.

 

அப்போது தான் கந்தசாமி தயக்கத்துடன், “தம்பி… உங்க சின்ன அத்தையும், பெரிய அத்தை பொண்ணும் வந்துருக்காங்க.” என்ற தகவலை கூற, “ஓஹ்…” என்றவனுக்கு அப்போதே தலை வலிப்பது போலிருந்தது.

 

அத்தனை நேரம் தெரியாத பசி வேறு அதனிருப்பைக் காட்ட, வீட்டிற்கு சென்றால் உணவுண்ணும் அளவுக்கு நிம்மதி இருக்குமா என்று தோன்ற ஆரம்பிக்க, இடையிலேயே நிறுத்தி உண்டு விடலாமா என்று சிந்தித்தவனின் கண்முன் துவாரகா வந்து போக, அந்த எண்ணத்தை கைவிட்டான்.

 

அங்கு அவனை சோதிப்பது போல, துவாரகாவை விடுத்து மகளிர் கூட்டம் முழுவதும் நடுகூடத்தில் அமர்ந்திருந்தனர்.

 

அப்போதே மனதிற்குள் அலாரம் அடிக்க துவங்க, அவர்களை கண்டு கொள்ளாதவன் போல அவனின் அறைக்கு செல்ல எத்தனித்தான்.

 

“குத்துக்கல்லு மாதிரி இங்க உக்கார்ந்துருக்குறவங்க எல்லாம் உங்க மகன் கண்ணுக்கு தெரியலையா அண்ணி? என்னதான் பிள்ளை வளர்த்து வச்சுருக்கீங்களோ?” என்று சாரதா ஆரம்பிக்க, அவரை வெற்றுப் பார்வை பார்த்த மயூரனோ, “அதை என்கிட்ட நேரடியாவே கேட்கலாம். இன்னும் இந்த ஜாடை பேசுற பழக்கத்தை விடலையா அத்தை?” என்றான்.

 

அதில் கோபம் கொண்டவரோ, “என்ன ரொம்ப பேசுற? முன்னாடி எல்லாம் அமைதியா தான இருந்த? என்ன உன் பொண்டாட்டி சொல்லிக் குடுத்தாளா?” என்று சாரதா வினவ, துவாரகாவின் நினைவில் இதழோரம் பூத்த புன்னகையை அங்கேயே அடக்கியவன், “அதுல என்ன தப்பு? முன்னாடி தான், ஒதுங்கி போனேன். இப்போ, குட்ட குட்ட குனிஞ்சுட்டே இருந்தா கோழைன்னு முத்திரை குத்திடுவாங்கன்னு புரிஞ்சுடுச்சு. அதுக்கு ஒரு வகையில என் பொண்டாட்டியும் தான் காரணம்!” என்றான் மிதப்பாக. 

 

“ரொம்ப ஆடாத. அப்பறம் யாரை இவ்ளோ தூக்கி வச்சு ஆடுறியோ, அவ ஏமாத்திட்டு போயிடப் போறா.” என்று அக்மார்க் வன்மத்துடன் சாரதா கூற, “அவ என்ன உங்களை மாதிரியா?” என்று நீள்சாய்விருக்கையில் ஒய்யாரமாக அமர்ந்திருந்த கார்த்திகா, சாரதா மற்றும் சூரியபிரபாவை பார்த்து ஏளனத்துடன் கூறினான் மயூரன்.

 

“ஏய், யாரைப் பார்த்து என்ன பேசுற? அப்பாவை கைக்குள்ள போட்டுக்கிட்ட திமிரா?” என்று கார்த்திகா சீற, கால்சராய் பையில் கைவிட்டு நின்ற மயூரனோ ஆழ்ந்த பார்வையுடன், “ஆமா, அதுக்கென்ன இப்போ? இவ்ளோ நாள் நீங்க அப்படி தான இருந்தீங்க? எல்லாம் ‘பெரியவங்க’ உங்களை பார்த்து கத்துக்கிறது தான்!” என்றான் மயூரன்.

 

அதில் கார்த்திகா பல்லைக் கடிக்க, எத்தனை நேரம் இது நீளும் என்று தெரியாததால், ‘இப்படியா சோர்வா வந்தவனை நிக்க வச்சு கேள்வி கேப்பாங்க!’ என்று உள்ளுக்குள் சலித்தபடி, “மயூரா, நீ போய் ஃபிரஷாகிட்டு துவாவையும் சாப்பிட கூட்டிட்டு வா.” என்றார் சோபனா.

 

அத்துடன் கண்களால் ஏதோ சைகை செய்ய, புரிந்தவனாக விழிமொழியாலேயே பதில் கொடுத்தான் மயூரன்.

 

இரண்டிரண்டு படிகளாக தாவி அறைக்கு வந்தவனை இருட்டு அறையே வரவேற்க, விளக்கை உயிர்பித்தவன் கண்டது மெத்தையில் உறங்கிக் கொண்டிருந்த துவாரகாவை தான்.

 

அவளை உற்று நோக்கிய போது தான் கன்னத்தில் கண்ணீர்த்தடம் தெரிய சோபனா கோடிட்டு காட்டியதும் புரிந்தது.

 

‘ப்ச், என்மேல இருக்க கோபத்துல இவளை ஹர்ட் பண்ணியிருக்காங்க.’ என்று கோபம் கொண்டவன், இப்போது மனைவியை சமாதானப்படுத்துவதே முக்கியம் என்று எண்ணியவனாக, மெல்ல அவளை எழுப்பினான்.

 

விழிகளை சிரமத்துடன் திறந்தவள், அவனையும் அறையையும் மாறி மாறி பார்க்க, “என்ன தூங்குமூஞ்சி, எங்க இருக்கன்னு மறந்துடுச்சா?” என்று சிரிப்புடன் அவன் வினவ, “க்கும், அதை எப்படி மறக்குறதாம்? ஒரு பச்சை பிள்ளையை ஒரே வாரத்துல கல்யாணம்னு தூக்கிட்டு வந்து, ஒரு வினோத கும்பல் கிட்ட மாட்டிவிட்டுட்டு போனவரு தான நீங்க?” என்றாள் துவாரகா.

 

“சாரி வராம்மா. அவங்க ஏதாவது பேசிட்டாங்களா? அதான் அழுதியா?” என்று வருத்தத்துடன் கேட்டவன், “ப்ச், இதெல்லாம் நடக்கும்னு தெரிஞ்ச நான் தான் யோசிச்சுருக்கணும்.” என்று முணுமுணுத்தான்.

 

கணவன் வருந்துவது பிடிக்காத மனைவியாக, “ஹலோ ஹலோ, யாரு அழுதா? உங்க டிராமா குவீனும், தவுசண்ட் வாலாவும் எதுவும் சொல்லலையா? நல்லா குட்டிச்சுவரா பார்த்து மோது, இந்த துவாரகா கிட்ட மோதாதங்கிற மாதிரி நல்லா கேட்டு விட்டேனே. நீங்க தான் மிஸ் பண்ணிட்டீங்க. அப்பறம் இனிமே ஏதாவது பேசுனா, என்கிட்ட சொல்லுங்க. ஐ வில் ஹேண்டில்!” என்று இல்லாத கழுத்துப்பட்டையை தூக்கி விட்டுக் கொண்டாள்.

 

அதில் செல்லமாக அவளின் சிகையை கலைத்தவன், “நீ எனக்காக சொல்றன்னு புரியுது குட்டிம்மா. ஆனா, உனக்கு அவங்க பேசுனது ஹர்ட்டாச்சு தான?” என்றவனை இடையோடு கட்டிக் கொண்டவள், “அவங்க என்னை பேசுனா கூட ஓகே, நான் தாங்கிப்பேன். ஆனா, அப்பா – அம்மாவை தப்பா பேசவும்…” என்றவளின் குரல் உடைய, அவளை ஆதரவாக அணைத்துக் கொண்டவன், “சாரிம்மா…” என்றான்.

 

சில நொடிகள் அவனின் அணைப்பில் கட்டுண்டு இருந்தவள், “நீங்க எதுக்கு சாரி சொல்றீங்க? உங்க அத்தைங்க கிட்ட அதை கேட்டுக்குறேன்.” என்றவள், “ஆமா, அதென்ன குட்டிம்மா? அப்பப்போ இப்படி தான் கூப்பிடுறீங்க? என் பேரை எப்படி சுருக்குனாலும் ‘குட்டிம்மா’ வரல!” என்று பேச்சை மாற்றினாள்.

 

அதை புரிந்து கொண்டவனும், “வரலன்னா என்ன, வர வச்சுப்போம்.” என்றவன், மீண்டும் அவளின் சிகையை கலைத்து, “நீ எனக்கு குட்டிம்மா தான்!” என்றவன், “நீ ஓகே தான? கீழ போய் சாப்பிடலாமா? இல்ல, இங்க கொண்டு வரவா?” என்று வினவினான்.

 

“நம்ம என்ன தப்பு பண்ணோம்னு ரூமுக்குள்ளேயே இருக்கணும். நீங்க ஃபிரஷாகிட்டு வாங்க. போய் சாப்பிடுவோம். அதோட, உங்க அத்தைங்களை வெறுப்பேத்த வேண்டாமா?” என்றாள் சிரிப்புடன்.

 

அதே சிரிப்பு அவனையும் தொற்றிக்கொள்ள, “தப்பு பண்ண எனக்கும் ஆசையா தான் இருக்கு.” என்று சடுதியில் குரலை மாற்றிக் கூற, அவனை தள்ளி விட்டவளோ, “அதெல்லாம் லவ் சொன்னதும் அக்செப்ட் பண்றவங்களுக்கு வரணும். இப்படி திடீர்னு லவர்பாய் அவதாரம் எடுத்தவங்களுக்கு இல்ல.” என்றாள்.

 

“ஹ்ம்ம், எத்தனை நாளைக்குன்னு பார்க்குறேன்.” என்றவன், குளியலறை சென்று வேகமாக சுத்தப்படுத்திக் கொண்டு, அவளுடன் கீழே சென்றான்.

 

*****

 

கூடத்தில் மகளிர் குழு இப்போதும் இடம் மாறாமல் அமர்ந்திருக்க, அவர்களுடன் இன்னும் இருவர் சேர்ந்து கொண்டனர்.

 

அவர்களை இதற்கு முன் பார்த்திருக்காததால் துவாரகாவுக்கு தெரியவில்லை. ஆனால், அவளருகே வந்த கணவனின் உடல்மொழியில் திடீரென்று வந்த இறுக்கத்தை உணர்ந்தவளுக்கு, எச்சரிக்கை மணி அடிக்கத்தான் செய்தது.

 

“ஹ்ம்ம், பாருடா கார்த்தி, நம்மளை மாதிரியா எல்லாரும் ஒரே மாதிரி இருக்காங்க? நிறம் மாறுற பச்சோந்தி! அவங்க நிறம் எல்லாம் இப்போ தான தெரியுது!” என்று கார்த்திகா வேண்டுமென்றே பேச, அனைவரின் பார்வையும் மாடியிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்த ஜோடியின் மீது தான் இருந்தது.

 

அவர்களை கண்டு கொள்ளாத மயூரனோ, “சித்தி, நீங்க சாப்பிட்டீங்களா?” என்றவன் பதிலை தெரிந்து கொண்டவனாக, “வாங்க சாப்பிடலாம்.” என்றான்.

 

துவாரகாவோ, “சோபித்தை, இன்னுமா சாப்பிடல நீங்க?” என்று உரிமையாக கடிந்து கொண்டாள்.

 

அப்படியே பேசியபடி மூவரும் உணவுண்ணும் அறைக்கு சென்று விட்டனர்.

 

“பார்த்தீங்களாடா? இங்க இத்தனை பேர் இருக்கோம். பார்வையாச்சும் இந்த பக்கம் திரும்புச்சா? எல்லாம் திமிர்!” என்று சாரதா பல்லைக் கடிக்க, “விடுங்க அத்தை. பார்த்துக்கலாம்.” என்று கார்த்திகேயன் கூற, “அவனை ஒருவாழியாக்கிடுவோம்.” என்றான் குமரகுருபரன்.

 

அத்தனை நேரம் அமைதியாக இருந்த சூரியபிரபாவோ, “நீங்க அவனை ஒருவழியாக்குறதா?” என்று மட்டம் தட்டும் குரலில் பேசியவள், எழுந்து சென்று உணவு மேஜையில் அமர்ந்திருந்த ஜோடிக்கு எதிரே அமர்ந்து, “ஹாய், சாரி நீங்க வந்தப்போ சரியா பேச முடியல.” என்று பேச ஆரம்பித்து விட்டாள்.

 

அவள் அப்படி தான்!

 

எந்தப்பக்கம் சாய்ந்தால் அவளுக்கு ஆதாயம் இருக்குமோ அந்தப்பக்கம் சாய்ந்து விடுவாள் நாணல் போல!

 

அவளைப் பெற்ற அன்னைக்கு தான் பெற்ற வயிறு பற்றிக் கொண்டு எரிந்தது.

 

“க்கும், அதுங்க ரெண்டும் என்னை மதிக்கலன்னு புலம்பிட்டு இருக்கேன். இவ என்னடான்னா, அதுங்களோட பாசப்பயிறை வளர்த்துட்டு இருக்கா!” என்று கூறி அலுத்துக் கொண்டார்.

 

துவாரகாவுக்கோ சூரியபிரபாவின் செயல்கள் ஆச்சரியமாகவே இருந்தது.

 

‘இப்படியும் இருப்பார்களா?’ என்ற எண்ணத்தில் விழி விரித்து அவள் பார்த்திருக்க, அதைக் கண்டவனுக்கு அந்த சூழலிலும் சிரிப்பு வந்தது.

 

உதட்டோரம் முகிழ்த்த சிரிப்போடு அவளை நெருங்கியவன், “இப்படி ஆன்னு பார்த்துட்டு இருந்தா தட்டுல இருக்க சாப்பாடு தானா உள்ள போயிடுமா என்ன?” என்று அவன் மென்குரலில் கேலி செய்ய, அவனை திரும்பி முறைத்தவளோ, “ஹ்ம்ம், அந்த மேஜிக் எல்லாம் உங்க குடும்பத்துல இருக்கவங்க வேணும்னா பண்ணுவாங்க.” என்றவள், “நானே இங்க புரிஞ்சுக்க முடியாம திண்டாட்டிட்டு இருக்கேன். இதுல காமெடி ஒன்னு தான் குறைச்சல்.” என்றாள்.

 

“ஓஹ், அந்த ஜெனர் வேண்டாம்னா வேற ஜெனர் டிரை பண்ணலாமா? இந்த ரொமான்ஸ்… 18+ இப்படி ஏதாவது?” என்று ரகசியக் குரலில் அவன் கூற, ‘அடப்பாவி, எங்க வச்சு எதை பேசுறான்?’ என்று அதிர்ந்தவள், அந்த கனம் தாங்காமல் புரை ஏறி தண்ணீரைக் குடித்து சமாளித்தாள்.

 

இத்தனையும் சூரியபிரபாவின் முன்னர் தான் நிகழ்ந்தது. அங்கு சோபனாவும் இருந்தார் தான். ஆனால், இருவரும் தனியாக பேசும்போதே, அவர்களுக்கு தனிமை கொடுக்க வேண்டி நாசுக்காக நகர்ந்து விட்டார்.

 

அதை எல்லாம் கார்த்திகாவின் பெண்ணிடம் எதிர்பார்க்க முடியுமா?

 

‘ப்ச், நானே இறங்கி வந்து பேசுனாலும், கண்டுக்குறாங்களா?’ என்று கடுப்பாக எண்ணிய சூரியபிரபா செருமலுடன், “நியூலி மேரிட் கப்பில்ஸ், உங்களை டிஸ்டர்ப் பண்றேனோ?” என்று அவள் சம்பிரதாயமாக வினவ, அதுவரை மனைவியை நோக்கி இருந்த மயூரனின் பார்வை அத்தை மகளை நோக்கி திரும்பியது.

 

அதில், ‘ஆம், அப்படி தான்!’ என்ற செய்தியே இருக்க, ‘ஏன் தான் அப்படி கேட்டோமோ?’ என்று சூரியபிரபா தான் நொந்து கொள்ள வேண்டியதாகிற்று.

 

“ஓஹ்… ஓகே… நீங்க சாப்பிட்டு வாங்க. மெதுவா பேசுவோம்.” என்று அவள் சென்று விட, “உங்களோட…” என்று அலுத்துக் கொண்டே உணவை உண்டு முடித்தாள் துவாரகா.

 

தோல்வியுடன் வெளியே வந்த சூரியபிரபாவை நக்கல் சிரிப்புடன் குமரகுருபரன் வரவேற்க, அவனைக் கண்டு கொள்ளாமல் அவளின் அறைக்கு சென்று விட்டாள் அவள்.

 

மற்றவர்களும் அவரவரின் அறைக்கு செல்ல, கார்த்திகேயனும் குமரகுருபரனும் மட்டும் அங்கேயே இருந்தனர்.

 

அவர்களின் இருப்பை உணர்ந்த  மயூரனோ முன்னர் போலவே கண்டு கொள்ளாமல் நகர முயல, அதை தடுக்கும் விதத்தில், “ஹே ப்ரோ, என்ன கண்டுக்காம போற? உன் ஒய்ஃப்… ஓஹ், சாரி சாரி அண்ணி ரைட்? அவங்களை இன்ட்ரோ குடுக்க மாட்டியா?” என்று விஷமத்துடன் கேட்டான் குமரகுருபரன்.

 

“ஆமா மயூரா, நாங்க முன்னாடியே அவங்களை ஃபோட்டோல பார்த்திருந்தாலும், அவங்களுக்கு எங்களை தெரியாதுல?” என்று கார்த்திகேயனும் நக்கலாக கேட்க, கோபத்தை வெகு சிரமத்துடன் கட்டுப்படுத்தினான் மயூரன்.

 

அவன் கரங்களை மடக்கி இருப்பதைக் கண்ட துவாரகாவிற்கு ஏதோ சரியில்லை என்பது புரிந்தது. கணவனின் நினைவில் இருந்தாலும், அவள் மனமோ, அவர்கள் கூறிய ‘ஃபோட்டோ’வை குறித்துக் கொண்டது.

 

அதோடு, ‘என்னை எப்போ, எந்த ஃபோட்டோல பார்த்திருப்பாங்க?’ என்ற கேள்விக்கு, ‘அன்னைக்கு எடுத்த செல்ஃபிலயா இருக்கும்!’ என்று அவளின் மனமே பதிலைக் கூறி கேள்வியை ஒதுக்கி வைத்தது.

 

“வரா, நீ ரூமுக்கு போ.” என்று மயூரன் பல்லைக் கடித்து கூற, அவனின் கோபத்தைக் கண்டவளோ எதுவும் பேசாமல் அறைக்கு சென்று விட, அந்த இருவரை நோக்கி திரும்பினான் மயூரன்.

 

“ஹவ் டேர் யூ போத்? நான் முன்னாடியே எச்சரிச்சும், இப்படி கேவலமா தான் நடப்பீங்கன்னா, அதுக்கான விளைவுகளை ஃபேஸ் பண்ணவும் தயாரா இருங்க. முன்னாடியாச்சும், குடும்பங்கிற எண்ணம் ஒரு ஓரத்துல ஒட்டிட்டு இருந்துச்சு. இனிமே, அதுவும் கிடையாது. மொத்தமா அறுவடை பண்ணிட வேண்டியது தான்!” என்றான் மயூரன்.

 

அவன் குரலை உயர்த்தவில்லை. ஆனால், அதலிருந்த அழுத்தம் மற்ற இருவருக்கும் குளிரை பரப்பியது.

 

ஏற்கனவே, அவனின் அதிரடியை கண்டிருந்த கார்த்திகேயனுக்கு வியர்க்க ஆரம்பிக்க, முன் அனுபவம் இல்லாத குமரகுருபரனோ, “பண்ணு… அப்படி என்ன பண்ணி கிழிக்கிறன்னு பார்த்துடலாம்.” என்றான்.

 

ஒரு கோணல் சிரிப்புடன் கைகளை மேலே தூக்கி முறுக்கேறியவன், “தம்பி… உனக்கு ஹிஸ்டரி தெரியாதுல… உன் நொண்ணன் கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோ.” என்று கூறிவிட்டு சென்றுவிட, “அவன் என்ன சொல்லிட்டு போறான் ப்ரோ?” என்று வினவினான் குமரகுருபரன்.

 

உண்மையை வெளியிட முடியாமல், “ஏதோ சொல்லிட்டு போறான், விடு. நம்ம எதுக்கும் கேர்ஃபுல்லா இருக்கணும் குரு.” என்றான் கார்த்திகேயன் தீவிர குரலில்.

 

மேலே செல்லும்போதே சில புகைப்படங்களை விஜய்க்கு அனுப்பிய மயூரன், “ப்ரோஸீட்” என்ற செய்தியும் அனுப்பி இருக்க, “ஆர் யூ ஸ்யூர்?” என்ற கேள்வி வந்திருந்தது விஜய்யிடமிருந்து.

 

ஒரு பெருமூச்சுடன் அதற்கு மறுமொழி அனுப்பியவன், அவன் அறைக்குள் நுழைந்தவனிடம் வந்த துவாரகாவோ, “என்னாச்சு? எதுக்கு இவ்ளோ கோபம்?” என்று வினவினாள்.

 

“ரிலாக்ஸ் வரா. பெருசா எதுவுமில்ல.” என்று அவன் சமாளிக்க பார்க்க, “யாரு அவங்க ரெண்டு பேரு? என்னை அவங்களுக்கு முன்னாடியே தெரியுமா? என்னை ஏன் அங்க இருந்து சீக்கிரமா அனுப்பீட்டீங்க?” என்று கேள்விகளை அடுக்கினாள் அவள்.

 

மனைவியிடம் நடந்ததை கூறலாமா வேண்டாமா என்ற சிந்தனையில் இருந்தவனை உலுக்கியவள், “உங்க கிட்ட தான் கேட்குறேன். யாரு அவங்க?” என்றாள்.

 

‘நடந்ததை அவள் சரியாக புரிந்து கொள்வாளா?’ என்ற கேள்விக்கு,  ‘நிச்சயம் இல்லை’ என்ற பதிலை அவன் மனது கொடுக்க, ஒரு பெருமூச்சுடன் சமாளிக்க ஆரம்பித்தான்.

 

“நீ அன்னைக்கு எடுத்த செல்ஃபில உன்னை பார்த்துருப்பாங்க.” என்றவன், அவர்களை அறிமுகப்படுத்த, “ஓஹ், உங்க பிரதர்ஸா? ஆனா, ஏன் நீங்க கோபமா இருந்தீங்க? அவங்களுக்கும் உங்களுக்கும் ஆகாதா? ஒருவேளை… சொத்து பிரச்சனையா? வெயிட் வெயிட்… அதனால தான், இவ்ளோ பெரிய வீட்டை விட்டுட்டு அங்க வந்து வேலை பார்த்தீங்களா?” என்று மீண்டும் அடுக்க ஆரம்பித்து விட்டாள் கேள்விகளை.

 

‘இன்னைக்குன்னு பார்த்து இவ்ளோ அறிவாளியா இருக்கக் கூடாது!’ என்று உள்ளுக்குள் சலித்துக் கொண்டவன், “போதும் உன் ஆராய்ச்சி. இன்னைக்கு செம டையர்ட். தூங்கலாமா?” என்று அவன் கொட்டவியை அடக்கியபடி கேட்க, “ஓஹ் சாரி சாரி… ரொம்ப வேலையோ? ஆமா நீங்க என்ன…” என்று ஆரம்பித்தவள், அவன் பாவனையில் வாயை கைகளால் மூடி, கண்களால் மன்னிப்பு கேட்டாள்.

 

அதில் அத்தனை நேரம் அவனுக்கு இருந்த பதற்றம் குறைய, “நம்ம பிசினஸ் என்னென்னன்னு நாளைக்கு நேர்ல கூட்டிட்டு போய் காட்டுறேன். இப்போ உன் மூளைக்கு ரெஸ்ட் குடு.” என்றவன், அடுத்து ஏதாவது வில்லங்கமாக கேட்கும் முன், அவளை அலேக்காக தூக்கி கட்டிலில் படுக்க வைத்தான்.

 

அதில் அவள் தான் விழிகள் தெறித்து விடுமளவுக்கு விரித்து அதிர்ச்சியை வெளிப்படுத்தினாள்.

 

“ஹோய், நான் இன்னும் ஒன்னுமே செய்யல. அதுக்குள்ள இப்படியொரு ரியாக்ஷனா? நீயெல்லாம்…” என்று அவன் கேலியாக ஆரம்பித்து முடிப்பதற்குள், அவனின் வாயை தன் கரம் கொண்டு அடைத்தவள், “நான் தூங்கிட்டேன்.” என்று கண்களை மூடிக் கொண்டாள்.

 

அவளை ஆதுரமாக பார்த்தவன் வெளியில் சிரித்தாலும், உள்ளுக்குள் சஞ்சலமான மனநிலையில் தான் இருந்தான்.

 

அவன் மனதிற்குள், உண்மையை அவளிடமிருந்து மறைப்பது சரியா தவறா என்று பட்டிமன்றம் நடந்து கொண்டிருக்க, அதற்கான தீர்ப்பு வெகு விரைவில் வெளியாக போவதை அவன் அப்போது அறிந்திருக்கவில்லை.

 

அறியும் போது, அனைத்தும் கைவிட்டு சென்றிருக்குமோ?

 

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
26
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்