18 – விடா ரதி…
சில நிமிடங்கள் நீண்டது அந்த இதழணைப்பு… அவளுக்கு சுவாசம் தேவைபடவும் தான் அவளைச் சற்றுத் தள்ளி நிறுத்தினான்.
ஒற்றை முத்தத்தில் மொத்த ஆசையும், வளர்ந்து வரும் காதலின் தீவிரமும் அவளுக்கு உணர்த்தியிருந்தான் அவளின் பதி.
உடலில் மின்சாரம் பாய்ந்தது இன்னமும் உடல் சிலிர்த்து, ரோமங்கள் குத்திட்டு நின்றன. வார்த்தைகளில் வடிக்கமுடியாத உணர்வலைகளில் சிக்கி மூழ்கியபடி அவன் கைப்பாவையாக மாறி இருந்தாள்.
“ஹே.. என்னடி ஒரு உம்மாவுக்கே இப்படி உறைஞ்சி நிக்கற?”, எனக் கிண்டலாக அவன் கேட்கவும் தான் அவளுக்கு உணர்வுத் திரும்பியது.
“எரும எரும… இப்படியா பண்ணுவ? நான் உன்ன என்ன கேட்டேன் நீ என்ன பண்ற? இப்படியா மட்டை ஆகற அளவுக்கு குடிப்ப நீ? அவங்க நம்ம வீட்டுக்கு வந்திருக்காங்க எவ்ளோ கவனமா பாத்துக்கணும்…. நாங்க மட்டும் வரலைன்னா எப்படி வீட்டுக்கு வருவீங்க? இனிமே இப்படி குடிச்ச உன்ன வீட்டுகுள்ளவே சேர்க்க மாட்டேன்….”, என அவன் வைத்திருந்த துவாலையைப் பிடுங்கி அவனை துரத்தித் துரத்தி அடித்தாள்.
“அப்போ இப்போ எடுத்த போதைய தினமும் எடுத்துக்கவா?”, என அவளின் கையை பின்னால் வளைத்துப் பிடித்தபடிக் கேட்டான்.
அவள் அமைதியாக அவன் கண் கலந்து நின்றாள். அதில் தான் எத்தனை காதல்….. அவள் மீதான இப்போதைய காதல் அவன் கண்களில் நன்றாகவே தெரிந்தது. அதில் தெரிந்த கனிவும், ஒளியும் அவளைக் கட்டிப்போட்டபடி நிற்கவைத்தது.
“என்னடி ? பதிலே காணோம்…. ”, கொஞ்சலாக அவளின் காது மடல்களை உரசியபடி அவன் கேட்டதும் உடல் சிலிர்த்து விலகி நின்றாள்.
“இனிமே இவளோ குடிக்காத ராக்கி….”, எனக் கூறிவிட்டு நகர்ந்தாள் .
“அப்போ எனக்கு தேவையானது தினம் எடுத்துக்கலாமா?”, என அவளின் கைப்பிடித்துக் கேட்டான்.
“…………..”
“வாய தொறந்து சொல்லுங்க மேடம்…. எடுத்துக்கவா?”, எனக் கண்ணடித்து அவன் கேட்கவும் வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்க அவன் கையை உதறிவிட்டு அங்கிருந்து ஓடினாள்.
“ஹேய் ரதி….. “
“சீக்கிரம் ரெடியாகி வா ராக்கி….”, புதிதான ஒரு குரலில் அவள் கூறிவிட்டுப் போனாள்.
அவன் விசிலடித்தப்படி குளித்துத் தயாராகி, அவளுக்கென முன்பு ஒரு நாள் கடையில் இருந்து எடுத்து வந்த உடையை எடுத்துக் கட்டிலில் வைத்து சின்னதாக குறிப்பும் எழுதி வைத்துவிட்டு கீழே வந்தான்.
“குட் மார்னிங் சிஸ்டர்….”, ஸ்வேதாவைப் பார்த்துக் கூறினான்.
“மார்னிங்…… “, என அவள் முறைக்கவும், “நீங்க தான் சிஸ்டர் நாங்க செட் ஆகணும்ன்னு ஆசைப்பட்டீங்க… அதுபோலவே இப்போ நானும் வருணும் ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம்.. அடுத்து மிஸ்டர்.முகுந்தன் கூடவும் ஃப்ரெண்ட் ஆகிடறோம்.. நீங்க ஜாலியா கேர்ள்ஸ் ட்ரிப் போங்க, நாங்க பாய்ஸ் ட்ரிப் போறோம்.. என்ன வருண் கரெக்ட் தானே?”, என அறை விட்டு வந்தவனைக் கேட்டான்.
“ஆமா மாப்ள….. சாப்டு நானும் உன்கூட கடைக்கு வரேன்….”, எனக் கடைசி வரிகளை அவன் காதருகில் முணுமுணுத்துவிட்டுச் சாப்பிட அமர்ந்தான்.
ரதிக்கு அவன் முகம் பார்க்கவே கூச்சம் தடுத்தது, பதின்பருவ மங்கையைப் போல அவள் கூச்சம் கொள்வதும், அவனைக் காணாத நேரத்தில் கண்டு ரசிப்பதும் என தனி உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள்.
“ஹேய் ரதி.. தோச கருகுது பாரு…”, என ஸ்வே அவளைத் தட்டவும் தான் அடுப்பைக் குறைத்து மீண்டும் தோசை வார்த்துக் கொடுத்தாள்.
“என்ன மேடம் கனவா? முகம் எல்லாம் செவந்து இருக்கு…. “, என அவள் கண்ணடித்துக் கேட்கவும் ஒன்றுமில்லை எனச் சமாளித்து வேலையைக் கவனித்தாள். ஸ்வேதா சிரித்தபடி அவளை இடித்துவிட்டு, ”ம்ம்.. ஜமாய் ஜமாய்…”, எனக் கூறிச் சென்றாள்.
நால்வரும் சாப்பிட்டு முடித்து எழுந்தனர். அவர்கள் இருவரும் கடைக்கு கிளம்பியதும், “ஸ்வே நீ போய் ரெடி ஆகி வா.. நீ வந்ததும் நா போய் ரெடி ஆகறேன்…”
ஸ்வேதா தயாராகி வந்ததும் அவள் தன்னறைக்கு சென்றுப் பார்க்க, கட்டிலில் அவளுக்குத் துணித் தயாராக இருந்தது. அவனின் செயல் என்று புரிந்ததும் மென்னகை வந்து இதமாக ஒட்டிக்கொண்டது.
அந்த குறிப்பில், “என் காதல் இளவரசிக்கு…..”, என எழுதியிருந்தது… கடைசியில் சிறிதாக, “செம்ம போதை டி உன் முத்தம்…. இந்த போதைய தினம் எடுத்தா ஹார்ட்க்கு நல்லதாம்… நாம் சேர்ந்தே எடுத்துக்கலாம் கிஸ்ஸி…”, எனவும் எழுதியிருந்தான்.
காலையில் அவன் கூறிய வார்த்தை இப்போதும் அவளுக்குக் குதூகலத்தை ஏற்படுத்தியது….
“என் போதையே நீ தான் டி….”, இப்போதும் அவன் அங்கே இருந்து கூறுவது போல தோன்ற, தன்னைத் தானே கண்ணாடியில் பார்த்துச் சிரித்துக் கொண்டாள்.
“சரியான கேடி…. பேசியே ஆள மயக்குவான் போல…… “, எனத் தனக்குத் தானே பேசியபடி அவன் எடுத்து வைத்திருந்த உடையை அணிந்துத் தயாராகி கீழே வந்தாள்.
“ஹேய் ரதி.. இந்த டிரஸ் உனக்கு நல்லா இருக்கு… எங்க எடுத்த?”, என ஸ்வேதா கேட்டாள்.
“நான் எங்க எடுத்தேன்? அவரு எடுத்தாரு போல கட்டில்ல வச்சிருந்தாரு….. லாங் கௌன் சில்கி டச் இருக்கு….. நானும் ஃபர்ஸ்ட் டைம் இப்படி போடறேன்….. “, உடையில் இருந்த கடல் நீல வண்ணமும், பன்னீர் ரோஜா சிவப்பு வண்ணமும் அவளுக்கு நன்றாகவே பொருந்திப்போனது.
“ஜடைய பின்னாத…. ஃப்ரீ ஹேர் விடு…”, எனக் கூறி ஸ்வேதா அவளுக்கு உதவினாள்.
“சரி வா நாம செல்ஃபி எடுப்போம்…”, என இருவரும் வீட்டின் உள்ளே வெளியே, என எல்லா இடத்திலும் நின்று அதே நான்கு போஸ் கொடுத்து எடுத்தனர்.
பத்தரை மணி வாக்கில் சுந்தரி தன் கணவனுடன் அங்கே வந்து சேர்ந்தாள். அவள் வந்ததும் மூவரும் கட்டிக்கொண்டு நான்கு சுற்றுச் சுற்றி அணைத்துக் கொண்டனர்.
முகுந்தன் அவர்களின் செய்கைகளைச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டு நின்றார்.
“சாரி அண்ணா.. இவள பாத்த சந்தோசத்தில் உங்களை பாக்க மறந்துட்டேன்… வாங்க அண்ணா… உக்காருங்க….. எப்படி இருக்கீங்க?”, என ரதி அவரை வரவேற்றாள்.
“நல்லா இருக்கேன்…. நீங்க கேங் ஓட ஐக்கியம் ஆகிட்டீங்க அதான் நானும் வேடிக்கை பாத்தேன்…. சுந்தரி உங்க ரெண்டு பேர் பத்தியும் நெறைய சொல்லி இருக்கா…. நீங்க நல்லா இருக்கீங்களா? உங்க கல்யாணத்துக்கு வர முடியல…. உங்க ஹப்பி எங்க வெளிய போய் இருக்காறா?”, என முகுந்தன் மிகவும் இயல்பாகப் பேசினார்.
“கடைக்கு போய் இருக்காரு இப்போ வந்துடுவாரு அண்ணா…. என்ன சாப்பிடறீங்க? டீ காபி?”
“டீ குடு டி….. “, சுந்தரி முந்திக்கொண்டு பதில் கொடுத்தாள்.
“நான் உன்ன கேக்கல… அவர தான் கேட்டேன்… நீங்க சொல்லுங்க அண்ணா….”
“ஏன் மா ஏன்? டீ குடுங்க போதும்….”
“முகுந்த்.. இவ ஸ்வேதா….. லண்டன்ல இருக்கா…. இவ ஹப்பி பேரு வருண்….. அண்ணா எங்க டி?”
“ரெண்டு பேரும் தான் வெளிய போய் இருக்காங்க…. வந்துடுவாங்க…. எப்படி அண்ணா இவ உங்கள பாத்துக்கறா?”, ஸ்வேதா சிரிப்புடன் கேட்டாள்.
“எங்கள போல தானே இனி அவரும்… தனியா என்ன கேக்கறீங்க சிஸ்டர்?”, எனக் கூறியபடி ரகு உள்ளே வந்தான்.
ஆண்கள் மூவரும் பரஸ்பரம் அறிமுகமாகிக் கொண்டனர்.
“ரதி.. கேட்டியா?”, சுந்தரி கூறினாள்.
“ரெண்டு பேருமே கூட்டு களவானிங்க தானே… அப்பறம் என்னடி?”, ரதி முறைப்புடன் கூறினாள்.
“சரி சரி… சமாதானம்….. அண்ணா.. எப்படி இருக்கீங்க? இவள எப்படி சமாளிக்கணும்ன்னு தெரிஞ்சிக்கிட்டீங்களா?”, சுந்தரி வம்பிலுத்தாள்.
“இல்லம்மா… இன்னும் மானுவல் தேவை படுது…. “
“அப்போ உனக்கும் மானுவல் இருக்கா சுந்தரி எங்க கெடைக்கும்?”, முகுந்தன் பேச்சில் புகுந்தார்.
“நான் சொல்றேன் அண்ணா…”, என ரதி அவனிடம் சென்று அமர்ந்தாள்.
வருண் அங்கு நடப்பதைச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டு தன் மனைவியிடம் உனக்கும் இருக்கா? எனக் கேட்டு முறைப்பைப் பெற்றான். மூன்று ஜோடிகளும் கலகலப்பாக பேசிக்கொண்டு ஒருவரை ஒருவர் வாரிக்கொண்டும் இருந்தனர்.
“சரி இப்படியே நாம பேசிட்டு இருந்தா நேரம் போயிடும்.. வாங்க நாம போற இடத்தில கலவரம் பண்ணிக்கலாம்….”, என வருண் கிளம்ப மற்றவர்களும் தேவையானவற்றை எடுத்துக்கொண்டு வீட்டைப் பூட்டியபடிக் கிளம்பினர்.
முகுந்தனும் அவர்களுடன் நன்றாகவே ஒன்றிக் கொண்டார். அனைவரும் சிரித்தபடிப் பேசி, தங்கள் இணைகளைக் கிண்டல் செய்துக்கொண்டு குணா குகை மற்றும் இன்னும் சில இடங்களுக்குச் சென்றுப் பார்த்தனர்.
வருண் அவன் பார்த்து வைத்த எஸ்டேட் காட்டி ரகுவிடம் கருத்துக் கேட்டுக் கொண்டான். ரகுவும் தனக்குத் தெரிந்த ஆட்களின் எஸ்டேட் காட்டி விவரங்கள் கூறி விலை அறிந்துச் சொன்னான்.
“இங்க செட்டில் ஆக போறீங்களா வருண்?”, முகுந்தன் கேட்டான்.
“இப்போ இல்ல… இன்னும் கொஞ்ச வருஷம் கழிச்சி வரலாமான்னு யோசனை இருக்கு… இப்போ வாங்கினா கொஞ்சம் கொஞ்சமா கத்துக்களாம்ன்னு ஒரு ஐடியா….. உங்க வீடு மதுரைல எங்க இருக்கு?”
“மானா மதுரை பக்கம் வருண்…. சொந்த ஊரு திருமங்கலம் தாண்டி ஒரு கிராமம் … இப்போ வேலை எல்லாம் மதுரை பக்கம் அதான் இந்த பக்கம் வந்தாச்சி….”
“நல்லது…. எங்க வீட்டுக்கு வாங்க ஒரு நாள்….”, எனத் தனது இல்ல முகவரியைப் பகிர்ந்துக் கொண்டான்.
ரகுவும் தனது மதுரை முகவரியை இருவருக்கும் பகிர்ந்துக் கொண்டு அவர்களதை பெற்றுக் கொண்டான். கிடா வெட்டும் நாள் கண்டிப்பாக வரவேண்டும் என்று அழைப்பும் விடுத்தான்.
மாலை வரையிலும் அனைவரும் ஆங்காங்கே விற்ற தின்பண்டங்களைச் சாப்பிட்டபடி சுற்றிவிட்டு இறுதியாக ஒரு ஹோட்டல் உள்ளே சென்றனர்.
“அப்பா.. கால் எல்லாம் நல்ல வலி… இன்னிக்கும் கொஞ்சம் சரக்கு அடிச்சா வலி போகும்….”, என வருண் கூறவும் ஸ்வேதா முறைத்தாள்.
ரகுவும் முகுந்தனும் சிரித்தபடி தங்கள் மனைவிகளைப் பார்க்க அவர்களும் முறைத்தபடி தான் இருந்தனர்.
“முகுந்த்.. உங்க பொண்டாட்டி முறைச்சா பயம் வருதே.. நீங்க எப்படி சமாளிக்கறீங்க?”
“அத ஏன் கேக்கறீங்க ரகு…. அவ முழிய உருட்டினாலே எனக்கு பக்குன்னு ஆகுது…. முடிஞ்சவரை நான் இடத்த விட்டு ஓடிட்டு இருக்கேன் இப்போ… இனிமே எப்படியோ தெரியல…. ஆனா உங்க ஒய்ஃப் சாப்ட் அஹ் இருக்காங்கள்ள….”
“ஏன் முகுந்த் ஏன்? காலைல நான் வாங்கின அடி எனக்கு தான் தெரியும்… உள் காயமா இருக்கு….. அவ மூஞ்ச பார்த்து தப்பா நினைக்காதீங்க…..”, என ரகு நெளிந்தபடிக் கூறவும் இருவரும் சிரித்தனர்.
“எப்படியோ மூணு பேரும் அடி வாங்கறோம்…. நாம செட் ஆகிட்டோம்ன்னு அவங்க சந்தோசத்துல இருக்காங்க…. மூனும் ஒண்ணுக்கு ஒன்னு சளைச்சது இல்லைன்னு நாம புரிஞ்சிக்கணும்…. “, வருண் கூறி சிரிக்க மற்றவர்களும் அதில் கலந்துக் கொண்டனர்.
அதன்பின் இரண்டு நாட்களில் ஸ்வேதா வருணுடன் கிளம்ப, இவர்களும் மதுரைக்கு கிளம்பினர் கருப்பண்ணசாமிக்கு கிடாவெட்டி பொங்கல் வைத்து கும்பிட….
“வா டி மருமகளே… எப்படி இருக்க? சினேகிதி புள்ளைங்க வரலியா?”, என அவர்கள் மட்டும் வந்திருப்பது பார்த்துக் கேட்டார்.
“கெடா வெட்டு அன்னிக்கு வருவாங்க அத்த… நீங்க எப்படி இருக்கீங்க?”, எனப் பேசியபடி வீட்டைச் சுற்றிப் பார்த்து அவருடன் அடுக்களைக்குள் புகுந்துக் கொண்டாள்.
ரகு இருவரின் பைகளை மாடி அறையில் வைத்துவிட்டு தந்தையைக் காண வயலுக்குச் சென்றான்.