தெம்மாங்கு 17
உலகம் சுற்றுவதை நிறுத்தி இருந்தால் எம்மாதிரியான நிலைமை இருந்திருக்குமோ, அதே நிலையில் ஸ்தம்பித்து நின்றது மலைக்குச்சி கிராமம். காற்று சிறை பிடிக்கப்பட்டு மாயமாக, வெடித்துக் கொண்டிருந்த வெளிச்சம் இருளானது. அங்கு நின்றிருந்த மனித உயிர்களின் உடலில் இருந்த மூச்சு மொத்தமும் மறைந்தது.
குமரவேலன் சொல்லிய வார்த்தையில் அப்படியே உறைந்து போனார்கள் அங்கிருந்தவர்கள். மகள் கையைப் பிடித்திருந்த பொன்ராசு, அதை விட்டுவிட்டு அதிர்ச்சியில் நிற்க, உடலை விட்டு உயிர் பிரிந்து பிணமாக நின்றாள் தேனிசை. வயதானவருக்குப் புரிய சற்று நொடிகள் தேவைப்பட, தெய்வானை அதிர்வு தாங்காது நெஞ்சில் கை வைத்தாள்.
இந்திரா பெற்ற மகனைத் திகைப்போடு பார்க்க, முத்துமாரி தள்ளாடி அமர்ந்து விட்டார். மண்ணை வாரி இறைத்துக் கொண்டிருந்த பவானி, உச்சபட்ச அதிர்ச்சியில் தலையில் கை வைத்து நிற்க, கருப்பன் உடல் அசையாது நின்றது. பெற்ற மகனை, இதுவரை பார்க்காத ஒரு மனநிலையில் பார்த்துக் கொண்டிருந்தார் பேச்சியப்பன். சிறியதாக உதட்டின் கீழ் கசிந்த ரத்தத்தைத் துடைத்த சந்தானம், குமரவேலனை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தார்.
அங்கிருந்த மொத்தக் கூட்டமும் கண்ணை அவன் மீது தான் வைத்தது. கண்கள் அகண்டு, உடல் விரைத்து, நண்பன் மனைவியின் கையைப் பிடித்திருந்தவன், “இது செத்தவன் பிள்ளையா இருக்குறது தான உங்களுக்குப் பிரச்சனை? இது என்னோட குழந்தை! இப்போ உங்க எல்லாருக்கும் சம்மதமா?” என்ற கர்ஜனையில் அனைத்தும் அடங்கி விட்டது.
கருவாகி, பூமியைத் தொடுவதற்கு முன்னரே அப்பன் பெயரைக் கூவிக் கொண்டிருக்கும் பிள்ளையின் தாய், அவன் வார்த்தையில் புத்தி தெளிந்து, “ச்சீ!” என அவன் கையை உதறினாள்.
“என்னடா பேசுற? இப்படி ஒரு வார்த்தையைச் சொல்ல அசிங்கமா இல்ல உனக்கு. இது என் புருஷனுக்கும், எனக்கும் பிறக்கப் போற குழந்தை. என் பிள்ளையோட பிறப்பை, இன்னொரு தடவை அசிங்கப்படுத்தின… வெட்டிப் போட்டுடுவேன்.”
அவள் வார்த்தைக்குப் பின் நிறுத்தி வைத்திருந்த உலகம் சுழல ஆரம்பித்தது. அவரவர் சுயநினைவு திரும்பி இயல்பு நிலைக்கு வந்தனர். நிலைமை வேறு பக்கம் செல்வதற்குள், அவள் கைபிடிக்க குமரன் முயல, “என்னைத் தொடாத!” என்றவள் குரலில் பயந்து போனான்.
“உன் நண்பனுக்கு இதுவரைக்கும் நீ செஞ்ச துரோகத்தை விட இது தான் பெரிய துரோகம். அவன் பிள்ளைக்கு நீ எப்படிடா அப்பா ஆவ? இவனுங்க எவ்ளோ சித்திரவதை பண்ணாலும், என் குழந்தையைப் பெத்தெடுத்து ஜெயிச்சுக் காட்டுவேன். உன் அசிங்கமான புத்திய உன்னோட வச்சுக்க. உன்கிட்ட உதவி கேட்டது தான் நான் பண்ண தப்பு…”
“அப்புறம் பேசிக்கலாம்மா, கொஞ்சம் சும்மா இரு.”
“ஏய்! இனி என் எதிர்ல கூட நீ நிக்காத…” என அவ்விருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது இடைப் புகுந்த பொன்ராசு,
“என்னங்கடா நாடகம் இது? இதை நம்பி விட்டுட்டுப் போக நான் என்ன கேனக் கிறுக்கனா? டேய் கருப்பா… இதுக்கு மேலயும் பேசிட்டு இருக்கக் கூடாது. இந்த அசிங்கம் பிடிச்சவளை இழுத்துட்டுப் போடா…” எனத் தேனிசை தேவியைத் தள்ளப் பார்த்தார்.
அதை முறியடித்துத் தன் பக்கம் வைத்துக் கொண்டவனிடம் இருந்து, கையை விடுவிக்கப் போராடிக் கொண்டிருந்தாள் தேனிசை தேவி. சிறிதும் விட்டுக் கொடுக்காமல், கன்னிப் போகும் அளவிற்குப் பிடித்தான். வலி உண்டான போதிலும் போராட, திரும்பி ஒரு பார்வை பார்த்தான்.
அந்தப் பார்வையில் இருக்கும் வீரியம் குலை நடுங்க வைத்தது அவளை. தன் செயலிலிருந்து பின் வாங்கியவள், விழி சிமிட்டாது பார்த்துக் கொண்டிருக்க, அவள் மீது வைத்திருந்த பார்வையை அவளின் தந்தை மீது மாற்றி,
“இது என் பிள்ளைன்னு சொல்லிட்டேன். இதுக்கு மேலயும் இவகிட்ட வந்தீங்க… என் நண்பனுக்குப் பக்கத்துல உங்க பிணத்தையும் புதைக்க வேண்டியது இருக்கும்.” அதிகாரத் தோரணையில் அலற விட்டான் அவரை.
“இது உன் குழந்தைன்னு நீ சொன்னால் போதுமா? சம்பந்தப்பட்ட என் பொண்ணு சொல்லணும்.”
“உனக்குத் தேவை இந்தக் குழந்தைக்கு அப்பன் யாரு, அவ்ளோதான்… அதைத் தாண்டி ஒரு வார்த்தை பேசக்கூடாது.” என்றவன் அங்கிருக்கும் அனைவரையும் பார்த்து,
“இது என் குழந்தை. இந்தக் குழந்தைக்கு அப்பா நான் தான். என் ரத்தத்துல இருந்து பிறக்கப் போற குழந்தை இது…” என்றான்.
“அது எப்படிடா? தாலிய நண்பனைக் கட்ட விட்டுட்டு பிள்ளைய நீ கொடுத்தியா?”
கருப்பன் கேள்வியில் காதைப் பொத்திய தேனிசை கதறி அழ, “ஆமாடா…” என அவளை ஊர் பார்க்க அசிங்கப்படுத்தினான் குமரவேலன்.
“எல்லாரும் நல்லாக் கேட்டுக்கோங்க. இந்தத் திருட்டு…. ஒருத்தனுக்குக் கழுத்தை நீட்டிட்டு, இன்னொருத்தன் கூடப் படுத்து இருக்கா.”
“இதைப் பத்திப் பேச எந்தத் தகுதியும் இல்லை உனக்கு. உன் அப்பனைக் கூட்டிகிட்டு போயிட்டே இரு.”
“ஏன் நான் பேசக் கூடாது? நண்பனுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு அவன் பொண்டாட்டி கூட குடும்பம் நடத்தி இருக்கியே… த்தூ!”
“என்னடா பேசுற குமரா?” என்ற அன்னையைப் பார்க்காதவன், தேனிசையை அழைத்துக் கொண்டு புறப்பட, வழி மறித்து நின்றார் பொன்ராசு.
“என்னைப் பார்த்தா எப்படித் தெரியுது? ஏற்கனவே ஓடிப் போன பொண்ணால மானம் போச்சு. இப்போ தாலி ஒருத்தன், பிள்ளை ஒருத்தன்னு நிக்கிற இவளால என் வம்சத்துக்கே அசிங்கம். இதுக்கு ஒரு முடிவு தெரியாம இங்க இருந்து போகக்கூடாது.”
“இந்தாடா அறிவு கெட்டவனே! என்ன வார்த்தை பேசுறோம்னு தெரிஞ்சு தான் பேசுறியா? எவனோ ஒருத்தன் பிள்ளைக்கு, உன் இனிஷியலப் போடுவியா. அவளை விட்டுட்டு வீடு வந்து சேரு.”
“அப்பன் சொல்றதைக் கேளு ராசா. ஊருக்கு மத்தியில இப்படி ஒரு வார்த்தையைச் சொல்லிட்டியே இனி நாங்க எப்படி தலை நிமிர்ந்து நடப்போம்?”
“என் பொண்ண இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில நிறுத்திட்டியே. இப்ப அவனவன் நாக்கு மேல பல்லப் போட்டுப் பேசுவானே.”
“அவனவன் என்ன பேசுறது? நானே பேசுவேன்…” என்ற கருப்பன் குமரவேலனைப் பார்த்து,
“நிஜமாவே இந்தக் குழந்தைக்கு நீ தான் அப்பனா?” கேட்டான்.
“ஆமா…”
“இதை எப்படி நாங்க நம்புறது?”
அங்கிருந்த இந்திராவை நெருங்கியவன் அவர் தலை மீது கை வைத்து, “என் அம்மா மேல சத்தியமா, இந்தக் குழந்தைக்கு அப்பா நான் தான்…” என்றிட, மீண்டும் அங்கு ஓர் பேரமைதி.
சத்தியம் செய்த மகனைக் கண்ணீர் மல்கப் பார்த்தார் இந்திரா. பக்கத்தில் நின்றிருந்தவள் அதைவிட மோசமான நிலையில் மாமனைப் பார்த்துக் கொண்டிருக்க, முத்துமாரி தலையில் அடித்துக் கொண்டு அழுதார். கொலை செய்யும் அளவிற்கு வெறி உண்டானது பேச்சியப்பனுக்கு.
மகன் சட்டையைத் தாவிப் பிடித்தவர், “எழவு எடுத்தவனே! செத்தவன் பிள்ளையை என் வீட்டு வாரிசா ஆக்கப் பார்த்த, கொள்ளி வைக்க மகன் இல்லனாலும் பரவாயில்லைன்னு கொன்னுடுவேன்.” என்றார்.
“அம்மா தலை மேல சத்தியம் பண்றான்னா, இது அவன் குழந்தை தான் போலயே.” என்ற கருப்பன் தன் தந்தையை அழைத்து,
“இந்த விஷயம் தெரிஞ்சதால தான் அன்புக்கரசனைப் போட்டுத் தள்ளி இருப்பானோ? அவன் சாவும் போது இவன் மட்டும் தான் கூட இருந்திருக்கான். கூட்டிக் கழிச்சிப் பார்த்தா, கணக்கு சரியா வருதுல்லப்பா…” என நாக்கில் நரம்பில்லாமல் பேசினான்.
“என் நண்பனைக் கொல்றதுக்கு முன்னாடி என் கழுத்தை நானே அறுத்துட்டு தான் கொன்னு இருப்பேன்.”
“ஆஹான்! இப்படிப் பேசித்தான் அவன் பொண்டாட்டிய உஷார் பண்ணி இருக்க. ஊர் உலகத்துல எங்கயாது இப்படி ஒரு அநியாயம் நடக்குமா? பாவம் அந்த அப்பாவி! இவனையும் இவளையும் நம்பி இந்தக் கிழவனை விட்டுட்டுப் போயிட்டான்.”
“இவன் சொல்றது உண்மை இல்லை. இது அன்பு குழந்தை. சத்தியமா இது அன்புவோட குழந்தை.”
“நீதான் கத்திட்டு இருக்க. இத்தனை பேர் பார்க்க உரிமையா உன் கையப் பிடிச்சு நான்தான் இவ கூடப் படுத்தேன்னு சட்டமா சொல்றானே… அதுக்கு என்ன பதில்?”
“போதும் குமரா. நான் இல்லன்னு உண்மையைச் சொல்லிடு. இந்த அம்மாக்காக இந்த ஒன்னையாது பண்ணு. எனக்குன்னு இருக்குறது நீ மட்டும் தான்டா. என் பிள்ளை மேல இப்படி ஒரு களங்கம் விழுறதைப் பார்க்க முடியல.”
“என் பொண்ணு ஓடிப் போனவ தான், ஆனா அசிங்கமானவ இல்ல. ஒருத்தனுக்கு தான் அவ முந்தானை விரிச்சி இருப்பான்னு பெத்தவ நான் நம்புறேன். என் பொண்ணத் தப்பானவளா ஆக்கி என் வளர்ப்ப அசிங்கப்படுத்திடாத. எந்த ஊருக்கு முன்னாடி நான்தான் அப்பான்னு சொன்னியோ, அதே ஊருக்கு முன்னாடி இல்லன்னு சொல்லிடு.”
இருவரின் பெற்றோர்களும், அங்குக் கூடியிருந்தவர்களும் எவ்வளவு கெஞ்சிக் கேட்டும் சிறிதும் மனம் இறங்கவில்லை குமரவேலனுக்கு. சம்பந்தப்பட்டவள் கூடக் கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டுப் பார்த்து விட்டாள். பாறையான மனது யாருக்கு இறங்கும்? நான்தான் தகப்பன் என்ற சொல்லில் விடாப்பிடியாக நின்றான்.
“அப்போ இந்தப் பிள்ளை உன்னோடது?”
“ஆமா!”
தந்தையோடு நின்றிருந்தவன் தேனிசை தேவிக்கு முன்னால் நின்று ஏளனமாகச் சிரித்தான். அவன் பார்வையில், கூனிக்குறுகிப் போனவள் அழுகையைக் கண்டு பேரானந்தம் கொண்டவன்,
“உனக்கு இதைவிடச் சரியான தண்டனை வேற எதுவும் இருக்க முடியாது. பிள்ளைக்கு அப்பனத் தேடிக்கிட்ட சரி… புருஷன் யாரு? அப்படியே இவனப் புருஷன்னு சொல்லிக்கிட்டாலும், தாலி கட்டி அறுத்துப் போட்டியே… அவனை என்ன சொல்லுவ? வாழற ஒவ்வொரு நாளும் அசிங்கம்.
இந்த அசிங்கம் உன்ன மட்டும் இல்ல, பெத்துக் காட்டுவேன்னு சொன்னியே அதுக்கும் தான். உனக்கு ரெண்டு புருஷன், அதுக்கு ரெண்டு அப்பா… எங்க மானத்தை வாங்குன நீ, கலங்கப்பட்டவளா வாழப் போறதைப் பார்க்குறதுதான் எங்களுக்கான பரிகாரம்…” என்றதோடு நிறுத்தாமல் காரி மண்ணில் துப்பி,
“****” என்றான்.
இந்தத் தருணம் போல் வேறு எந்தத் தருணமும் சாட்டையடியாக அமைந்திடாது அவளுக்கு. சொன்ன வார்த்தையை நான்கு ஐந்து முறை சொல்லி, தன் தகப்பனையும் சொல்ல வைத்தவன் குமரனை வென்று விட்டதாகப் பார்த்தான். நின்ற இடத்தில் அப்படியே அமர்ந்தவள், தலையில் அடித்துக் கொண்டு ஊர் பார்க்கக் கதறினாள்.
“ராசா…” என அதுவரை அமைதியாக நின்றிருந்த மாணிக்கம், பேரன் முன்னால் நின்றார்.
“இது உன் பிள்ளையா இருக்குறது சத்தியம்னா, இந்தப் பொண்ணு கழுத்துல தாலியக் கட்டு.” என மஞ்சள் கயிற்றை குமரனுக்கு முன்னால் நீட்ட, மீண்டு எழ முடியாத துயரத்திற்குத் தள்ளப்பட்டார்கள் சூழ்நிலைக் கைதிகள்.
அதுவரை தன் நண்பன் குழந்தையைக் காப்பாற்ற வேண்டும் என்று மட்டும் சிந்தித்துப் பேசியவன், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்தான். இப்படியான கண்ணோட்டத்தில் சிறிதும் சிந்திக்கவில்லை குமரவேலன். சற்று முன்னர் கருப்பன் பேசும் வரை இதில் இருக்கும் ஆழத்தன்மை விளங்கவில்லை அவனுக்கு. நண்பனுக்காக, அவனுடைய பிள்ளைக்காக, ஒரு பெண்ணின் மானத்தை ஊர் பார்க்க விவாதித்து இருக்கிறோம் என்பதைத் தாமதமாக உணர்ந்தான்.
அந்த உண்மை, அவன் மனதைச் சுட்டுக் காயம் செய்வதற்கு முன்னர், மொத்தமாக உடலை எரிக்கும் அளவிற்கு ஒன்றைச் செய்யச் சொல்லி நிற்கிறார் மாணிக்கம். இப்படியான இடத்தில் வந்து நிற்போம் என்று தெரிந்திருந்தால், “தன் பிள்ளை…” என்ற வார்த்தையை விடாமல் இருந்திருப்பான்.
நண்பனின் மனைவியை, அவனுடைய மனைவியாக எப்படி எண்ணுவான்? அனைத்திற்கும் மேல், தான் நேசித்த அத்தை மகள் கண் எதிரில் நிற்கும் பொழுது அப்படி ஒரு வேலையைச் செய்ய எப்படித் துணிவான்? தேனிசை தேவியின் மீதான மரியாதை, அன்னையான பின்பு தான் அதிகரித்தது அவனுக்கு. அதனால்தான், அவள் பெயரை உச்சரிக்காமல் தாயின் ஸ்தானத்தை வைத்து அழைத்தான்.
அப்படி ஒரு இடத்தில் இருப்பவளுக்குக் கணவனாகும் எண்ணம் துளிக்கூட எழுந்ததில்லை. சபைக்கு முன்னால் தன் பிள்ளை என்று உரைத்தது கூட நண்பனின் பிள்ளை வேறு, தன் பிள்ளை வேறு இல்லை என்ற எண்ணத்தில் தான். அன்புக்கரசன் உயிரோடு இருந்திருந்தால் எப்படித் தன்மகன் என்று இவன் கொண்டாடி இருப்பானோ, அந்த உரிமையோடு தான் பேசினான்.
அன்புவின் வாரிசு என்ற ஒரே காரணத்திற்காக, மண்ணுலகிற்கு வந்த உயிர் விண்ணுலகிற்கு எந்தச் சந்தர்ப்ப சூழ்நிலையிலும், சென்றுவிடக் கூடாது என்ற பயத்தில் உச்சரித்த வார்த்தை அது. அந்த வார்த்தையே தன்னைக் கைதியாக்கி, தேனிசை முன்பு குற்றவாளியாக நிற்க வைக்கும் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை.
தன் முன்னால் ஆடிக்கொண்டிருக்கும் மஞ்சள் கயிற்றை அதிர்ந்து பார்த்தவன், அதை நீட்டி நிற்கும் மாணிக்கத்தைச் சொல்ல முடியாத உணர்வுகளால் பார்த்தான். அவருக்கும், பேரன் வார்த்தைக்குப் பின் இருக்கும் அர்த்தம் தெரியும். நண்பன் மகனைக் காப்பாற்ற அந்த வார்த்தை மட்டுமே ஆயுதம் என்று நம்பி விட்டவனிடம், அந்தப் பிள்ளையின் தாயையும் விட்டால் கடைசி வரை பாதுகாப்பான் என்ற நம்பிக்கை அவருக்கு.
வாழ்க்கை அவரை இன்னும் எத்தனை நாளுக்கு வைத்திருக்குமோ? பேரனை நம்பி வந்தவள் நிர்க்கதியாக நிற்பதைக் கண்டு அனுதினமும் துடித்தவர், அவளைக் காப்பாற்றக் குமரவேலன் தான் சரியானவன் என்று முடிவெடுத்து விட்டார். இப்படியான நிலை அவனைக் குத்திக் கிழிக்கும் என்று அறிந்து தான் செய்யச் சொல்கிறார்.
பேரனை யோசித்தவர், மண்டியிட்டு அழுது கொண்டிருக்கும் அவளைச் சிறிதும் யோசிக்கவில்லை. கைதியாக நிற்பவனும் யோசிக்கவில்லை. நண்பனுக்காக உயிரை விட்டவனும் சிந்திக்கவில்லை. தன்னுடன் பிறந்தவள் எனக் கருப்பன் எண்ணவில்லை. பெற்ற பிள்ளை என்று கருதவில்லை பொன்ராசு. இத்தனை ஆண்களுக்கு மத்தியில் பெண்ணாகப் பிறந்ததே பெரிய சாபக்கேடு தேனிசை தேவிக்கு.
யாரிடம் சென்று நியாயம் கேட்பாள்? அவளுக்கான நியாயத்தைக் கொடுக்க வேண்டிய அனைவரும், அநியாயம் தானே செய்து கொண்டிருக்கிறார்கள். மனதில் கொண்ட ஆசைதான், இப்படியான நிலைக்கு அமர வைத்திருக்கிறது அவளை. காதல், மனிதனை உயர்த்தியும் வைக்கும். தாழ்த்தியும் வைக்கும். உயர்த்தும் என்ற நம்பிக்கையில் வெளியே வந்தவள், தாழ்த்தப்பட்ட பெண்ணாக மாறிவிட்டாள்.
“இதுக்கு மேலயும் இந்த ஊரு இந்தப் பொண்ண சும்மா விட்டு வைக்காது. உன் நண்பன் இல்லாத நேரத்துல நீ வீட்டுக்கு வந்துட்டுப் போறதயே, தப்பாப் பேசுற இவங்க, இப்படி ஒரு வார்த்தையைச் சொன்னதுக்கு அப்புறம் பேசாம இருப்பாங்களா? இந்தப் பொண்ணு கழுத்துல தாலி கட்டி உன்னால ஏற்பட்ட அசிங்கத்தை நீயே துடைச்சிடு ராசா.”
“என்னால முடியாது தாத்தா…”
“அப்ப இந்தப் பொண்ணோட கதி? இந்த ஊர் அவளுக்குக் கொடுக்கப் போற பட்டத்துக்கு நீயும் சம்மதிக்கப் போறியா? உன் நண்பனோட பிள்ளை வளர்ந்ததுக்கு அப்புறம், உன் அப்பா யாருடா… நல்லாத் தெரியுமானு கேட்பானுங்க. அந்தப் பிஞ்சுக் குழந்தைக்கு அப்படி ஒரு அவமானம் தேவையா? நீ போடப் போற மூனு முடிச்சுலதான் ரெண்டு உசுரோட வாழ்க்கை இருக்கு.”
மாணிக்கத்தைக் கையெடுத்துக் கும்பிட்டவன், “எந்தச் சூழ்நிலை வந்தாலும், இவங்க ரெண்டு பேரையும் கைவிட மாட்டேன். இதை மட்டும் என்னைப் பண்ணச் சொல்லாதீங்க தாத்தா. என் நண்பனுக்கு, நண்பனா இருக்கத்தான் ஆசைப்படுறனே தவிர துரோகியா இல்ல. இந்தப் பொண்ணைச் சாமிக்குச் சமமா வச்சுப் பார்க்கிறேன். என் பொண்டாட்டியா ஒரு நாளும் நினைக்கக் கூட முடியாது.” என்றான் கண் கலங்க.
“உன் நண்பன் உன் முடிவைத் தப்பா எடுத்துப்பான்னு நினைக்கிறியா? அவனைத் தவிர யாரால உன்னைப் புரிஞ்சுக்க முடியும் ராசா… நீ விட்ட வார்த்தை, பிள்ளையச் சுமக்கிற இவளுக்கு கூடத் தப்பாத் தெரியும். என் நண்பன் இருக்கான், அவன் பார்த்துப்பான்னு நிம்மதியா மண்ணுல படுத்திருக்கானே… அவனுக்குத் தப்பாத் தெரியுமா என்ன? நீ இந்தப் பொண்ணுக்குப் பாதுகாப்பா நின்னா தான் இவங்ககிட்ட இருந்து காப்பாத்த முடியும்.” என்றவர் குமரவேலன் காலில் விழப் போக, பத்து அடி தள்ளிப் போய் நின்றான்.
ஓடி வந்த சந்தானம் அந்த முதியவரை விழ விடாமல் தாங்கிப் பிடிக்க, “நானும் செத்துப் போயிட்டா இந்தப் பொண்ணுக்கு யாரும் இருக்க மாட்டாங்க. நாளைக்கு உனக்குன்னு ஒரு குடும்பம் குட்டி ஆகிட்டா, உன் பொண்டாட்டியே இந்தப் பொண்ணைக் கிட்ட சேர்க்காது. என் பேரன் உயிரை விட்டதுக்கு அர்த்தமில்லாம ஆக்கிடாத. அவன் வாரிசும், பொண்டாட்டியும் நிர்க்கதியா நிக்கிறதைப் பார்த்தா, அந்த ஆன்மா துடிதுடிச்சுப் போயிடும். இவங்களைக் காப்பாத்தத் தாலியக் கட்டு ராசா…” என்றார்.
மாணிக்கம் தாலியை எங்கிருந்து எடுத்தாரோ, குமரன் முன்பு நீட்டிய போதே தேனிசை தேவியின் உயிர் பிரிந்து விட்டது. உயிர் இல்லாத கூடாக அங்கு நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் மட்டும் அல்ல, அங்கிருந்த அனைவரும் அதே நிலையில் தான் இருந்தார்கள். குமரவேலனை வென்று விட்டதாக நின்ற கருப்பன் கூட இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
எல்லாம் தங்கள் கை மீறிப் போய் விட்டதாக உணர்ந்த கௌரவ நண்பர்கள், அடுத்து என்ன செய்வது? என்று தெரியாமல் பொம்மையாக நிற்க, ஊமையாக ஒதுங்கி நிற்கிறாள் தெய்வானை.
ஒரு புத்தகத்தில் பல பக்கங்கள் பேசப்பட்டாலும், கடைசி அட்டைப் பக்கம் பெரும்பாலும் பேசப்படாது. முன்பக்கத்தை வைத்துக் கவர்பவர்கள், உள்ளே இருக்கும் ஒவ்வொரு வார்த்தையிலும் தங்களை மறப்பார்கள். முற்றும் என்ற பக்கம் வரும் வரை ஓயாமல் காதலிப்பவர்கள், அந்த வார்த்தை வந்ததுமே மூடி வைத்து விடுவார்கள். கடைசிப் பக்கம் சாதாரணமான பக்கமாகத்தான் பெரும்பாலும் இருக்கும்.
அப்படியான மறைக்கப்பட்ட பக்கம் தான் தெய்வானையின் காதல். அன்புக்கரசன், தேனிசை தேவியின் காதல் விவகாரம் கலவரத்திற்கு நடுவில் நடந்ததால் பெரிதாகத் தெரிந்தது. மாமன் மகன் தானே என்றும், தனக்கு உரிமையாகப் போகிறவன் தானே என்ற நினைப்பிலும், அதிகம் உரிமை எடுத்துக் கொள்ளாமல், நினைவு தெரிந்த நாளிலிருந்து காதலித்துக் கொண்டிருக்கும் தெய்வானை இரண்டாம் பட்சமாகத் தெரிகிறாள்.
தேனிசை தேவியின் காதல் இரண்டு வருடம் என்றால், தெய்வானையின் காதலைப் பக்கத்தில் கூட வைக்க முடியாது. மாமனுக்காக ஊர் தாண்டி, பொய் காரணத்தோடு வருபவள், பல நாள்கள் பார்க்காமலேயே வீடு திரும்பி இருக்கிறாள். நண்பன் பின்னால் சுற்றித் திரியும் மாமனைத் தவறு என்று கூடச் சொன்னதில்லை. அவனுக்காக, அவனை மட்டுமே நேசித்த அந்தத் தூய உள்ளம், ஒட்டுமொத்தமாக உடைந்து உரு தெரியாமல் நின்று கொண்டிருக்கிறது.
“உன் நண்பன் வாரிசு உயிரோட இருக்கணும்னா, இந்தத் தாலியக் கட்டு.” என்ற கடைசி ஆயுதத்தைக் குமரவேலன் முன் வீசினார் மாணிக்கம்.
தன்னையும் மீறி நடந்த சம்பவத்திற்குப் பின், தன் மீதே நம்பிக்கை இல்லை குமரவேலனுக்கு. ஆயிரம் பலம் பொருந்திய ஆம்பளையாக இருந்தாலும், நான்கு பேர் சுற்றி நின்றால் பலம் இழக்கத்தான் செய்வான். தன் மீதே நம்பிக்கை இல்லாதவன், எந்நேரமும் வயிற்றில் இருக்கும் சிசுவிற்கு எப்படிப் பாதுகாப்பாக இருப்பான்?
கண் முன்னால் நண்பனை விட்டது போல், அவன் பிள்ளையை விடக்கூடாது என்ற சூழ்நிலையில் நிற்கிறான். கௌரவ நண்பர்கள், பெரிதாக மதிக்கும் கௌரவத்தின் வம்சத்தில் பிறந்தவன் குமரவேலன். அந்தக் கௌரவம், பிறக்கப்போகும் குழந்தையைக் காப்பாற்றும் என்றுதான் அவனிடத்தில் இப்படி ஒரு கோரிக்கையை வைக்கிறார் மாணிக்கம்.
நான்கு பக்கம் இருந்தும், நீர் சூழ்வது போல் பயந்து நின்றவன் கையில் தாலியைக் கொடுத்தார். வாங்கச் சிறிதும் மனம் இல்லை என்றாலும், கைகள் நடுங்க வாங்கியவன் தன் எதிரில் இருக்கும் தெய்வானையைத் தான் முதலில் பார்த்தான்.
இந்திராவிற்குப் பின்னால் நின்று கொண்டிருந்தவள் இமைகள், மேலும் கீழும் அசையாது ஒட்டிக் கொண்டது. விழிகளுக்குள் இருக்கும் கருவிழி, மாமனை மட்டுமே முழுதாக நம்பிக் கொண்டு பார்க்க, சற்று நேரத்திற்கு முன்னால் சொன்ன தாலி கட்டுவேன் என்ற வார்த்தை, மற்றொரு பெண்ணுக்கு மாறும் என்று நொடியளவும் நினைக்கவில்லை குமரன்.
அவளைப் பார்த்தபடி, தேனிசை தேவியை நெருங்கியவன் விழிகள் பல நாள்களுக்குப் பிறகு கசிந்தது. அமர்ந்து கொண்டிருந்தவளை எழுந்து நிற்க வைத்தார் மாணிக்கம். உயிர் இல்லாத பிணம் எப்படி அடம் பிடிக்கும்? அவர் வசதிக்கு ஏற்ப நின்றாள்.
குமரவேலனைப் பார்த்தபடி நின்றிருந்த தெய்வானை, ‘வேணா…மாமா… என்னால தாங்கிக்க முடியாது.’ என விழியால் கெஞ்சினாள்.
‘மன்னிச்சிடு…’ என்ற அவன் பதிலைக் கேட்ட உள்ளம் சுக்கு நூறாக உடைந்தது.
கண்களை அழுத்தமாக மூடிக்கொண்டாள். அவள் மீதான பார்வையைச் சற்றும் அகற்றாதவன், தேனிசை தேவியின் கழுத்தில் மூன்று முடிச்சுப் போட்டான். அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் தெய்வானை ஓடிவிட, அனைவரின் கை மீறி எல்லாம் நடந்து முடிந்து விட்டது.
தாலி கட்டி முடித்ததும், அவளை விட்டு விலகி நின்றவன் “மன்னிச்சிடும்மா” என்றிட, உணர்வுகள் செயல் இழந்து போனது அன்புவின் ஆசைக் காதலிக்கு.
கௌரவ நண்பர்கள் நடத்திய நாடகத்தில், பலியானது மொத்தம் நான்கு உயிர்கள். கத்தி எடுத்துக் கிழித்தால் மட்டும் தான் கொலையா? வார்த்தை என்னும் கூர்மையான கத்தியை உபயோகித்தே இன்று இத்தனை உயிர்களைத் துடிதுடிக்கக் கொன்று இருக்கிறார்கள். மூக்கு உடைந்து போன கருப்பன், அங்கிருந்து சத்தம் இல்லாமல் நடையைக் கட்ட, பெற்ற மகனின் நிலையைக் கண்டு கண்ணீர் வடிக்க மட்டுமே முடிந்தது இந்திராவால்.
தெம்மாங்கு ஒலிக்கும்…