Loading

“மைதா… விஸ்வூ எங்க?” தனதறையில் அமர்ந்து மடிக்கணினியில் வேலையாக இருந்தவனின் கவனத்தைக் கலைத்தாள் ஷைலேந்தரி.

அதில் நிமிர்ந்தவன், “எங்கன்னு என்கிட்ட கேட்குற. நீங்க சேர்ந்துதான வந்துருப்பீங்க?” என்று புருவம் சுருக்க மைத்ரேயன் வினவ, “இல்லையே. நீ வந்து பிக்கப் பண்ணுவன்னு சொன்னாளே. நானும் சரி கல்யாணம் ஆகப்போற சின்னஞ்சிறுசுங்கன்னு அவளை விட்டுட்டு வந்தேன்…” என்று கலாய்த்தாள்.

அவனிடம் அதற்கான எதிர்வினை எதுவும் இல்லாததோடு, “என்கிட்ட அவள் எதுவுமே சொல்லலையே. நான் நேரா இங்க தான் வரேன். எங்க போய் தொலைஞ்சா” என்ற பதற்றத்துடன் போனை கையில் எடுக்க, அதே பதற்றம் ஷைலேந்தரிக்கும் தொற்றிக்கொண்டது.

இங்கோ, “நீ ம்ம்ன்னு சொல்லு டெஸ்ட் பண்ண இப்பவே நான் ரெடி!” எனக் கண்ணில் மோகம் மின்ன ரசித்தான் யுக்தா சாகித்யன்.

‘இவனை அடிச்சும் பார்த்தாச்சு முறைச்சும் பார்த்தாச்சு ஆனாலும் அடங்க மாட்டேங்குறானே’ என விஸ்வயுகா எரிச்சலுறும் போதே, மைத்ரேயன் அழைக்க, அழைப்பை உடனே ஏற்றவளிடம் “எங்க இருக்க விஸ்வூ?” என்றான் வேகமாக.

“இங்க… மால்க்கு வந்தேன். ஹாஃப் அவர்ல வந்துடுறேன்” என போனை வைத்து விட்டவள், இன்னும் யுக்தா அவளையே ஊடுருவிக்கொண்டிருப்பதைக் கண்டு, “இப்படி என் மூஞ்சியை பார்த்துட்டு இருக்காம, எவன் என்னைக் கொல்ல வந்தான்னு போய் பார்க்கலாம் வா” என்று பொரிந்து விட்டு முன்னே சென்றாள்.

அதிகாரிகள் பிடித்து வைத்திருந்த மனிதனோ அவர்களைத் தாக்கி விட்டுத் தப்பித்து இருந்தான். அவனைப் பிடிப்பதற்காக ஒரு அதிகாரி அவனது தலையில் சுட்டு விட, தப்பித்து ஒரு பாலத்தின் மீது ஓடிக்கொண்டிருந்தவன், அப்படியே தடுமாறி பாலத்தில் இருந்து விழுந்து நீருக்குள் குதித்து விட்டான்.

தலையில் சுட்ட நொடியில் அவன் இறந்தும் விட, அவனது சடலத்தை மேலிருந்தே தேடிய அதிகாரிகள் அவனைப் பிடிக்க இயலாத கோபத்தை பாலத்தின் திண்டின் மீது காட்டினர்.

விஷயம் அறிந்து யுக்தா சீறினான்.

“அறிவில்ல உங்களுக்கு. கைல கிடைச்சவனை மிஸ் பண்ணிட்டேன்னு சொல்றீங்க? இதுல அவனைப் பிடிச்சு விசாரிக்கிறதுக்கு முன்னாடியே சுட்டுருக்கீங்க. ஏதாவது சென்ஸ் இருக்கா? இப்ப போய் அவன் பாடியைத் தேடுங்க. போங்க” என்று அதிகபட்ச கோபத்தில் காட்டுக் கத்தாக கத்தினான்.

குழுவில் இருந்த ஒரு சிபிஐ அதிகாரியான அருண், “சார் அவன் ரொம்ப போர்ஸா அட்டாக் பண்ணிட்டு ஓடிட்டான் சார். அவனைப் பிடிக்கப்போய் கிரி சார் அவனை சுட்டுட்டாரு.” என்று விளக்கம் கொடுக்க, யுக்தாவின் நெருப்புப் பார்வை கிரியைச் சுட்டது.

எச்சிலை விழுங்கிய கிரி, “சாரி சார்” என்று மென்குரலில் கூற, “சாரி… புல்ஷிட்… உன் சாரியை தூக்கி குப்பைல போடு மேன். அவனைப் பிடிச்சு இருந்தா இந்த கேஸே முடிஞ்சு இருக்கும். இடியட்ஸ்…” என்று கர்ஜித்தவனை யாராலும் அடக்க இயலவில்லை.

அவனோ நேரம் செல்ல செல்ல கெட்ட வார்த்தைகளை எல்லாம் உபயோகிக்க, விஸ்வயுகா தான் “விடு யுக்தா. எப்படியோ இனி கொலை நடக்காதுல. அவன் பாடியைத் தேட சொல்லலாம்” என்று அவன் கையைப் பிடித்து அமைதியாக்கியதில், மெல்ல நிதானத்திற்கு வந்தவன், “அட்லீஸ்ட் அவன் முகத்தையாவது பார்த்தீங்களா?” எனக் கேட்டான் குழுவினரிடம்.

“அவன் மாஸ்க்கை கழட்டவே விடல சார்” அருண் உள்ளே சென்ற குரலில் கூறியதில் யுக்தாவின் இரத்த அழுத்தம் உயர்ந்தது.

“சிபிஐன்னு நேம் போர்ட் போட்டு ஒட்டுங்க நெத்தில” என நெற்றியைச் சுட்டிக்காட்டி உறுமியவன், “மால் சிசிடிவி கேமரா எல்லாத்தையும் செக் பண்ணுங்க. எதுலயாவது அவன் கண்டிப்பா முகத்தைக் காட்டி இருப்பான். அவனைப் பத்தின டீடெய்ல்ஸ் நைட்டுக்குள்ள எனக்கு வந்துருக்கணும். இல்ல, எல்லாருமே அட் அ டைம்ல வேலையை விட்டுட்டு வீட்ல உட்கார வேண்டியது தான்” என்றான் பல்லைக்கடித்து.

‘அவன் யாருன்னே தெரியாம எப்படிடா நைட்டுக்குள்ள விவரம் கிடைக்கும்’ என நொந்த விஸ்வயுகா, ‘எந்தப் பக்கம் போனாலும் கேட்டு போடுறாங்களே’ என்ற எரிச்சலுடன் கிளம்பி விட்டாள்.

அலுவலகத்தினுள் நுழைந்ததுமே அவளைச் சூழ்ந்தனர் மூவரும்.

“என்னடி ஆச்சு? உன்னை யாரு தனியா மால்க்குப் போக சொன்னது” என்று ஷைலேந்தரி கடிந்தாள்.

விவரத்தைப் பகிர்ந்த விஸ்வயுகா, “ப்ச், அந்த எக்ஸை மிஸ் பண்ணிட்டானுங்கன்னு நானே கடுப்புல இருக்கேன். நீ வேற. கரெக்ட் டைம்க்கு யுக்தா வந்துட்டான். அவன் கூட இருந்துருந்தா அந்த எக்ஸ் தப்பிச்சுருக்க முடியாது. என்னைப் பார்க்க அவன் மறுபடியும் மாலுக்குள்ள வந்ததுல தான் எல்லாமே கொலாப்ஸ் ஆகிடுச்சு” என நெற்றியைப் பிடித்தவளை விசித்திரமாகப் பார்த்தான் மைத்ரேயன்.

“நீ ஏன் எங்களுக்கு போன் பண்ணாம அவனுக்கு பண்ணுன?” ஒரு மாதிரியாகக் கேட்க,

“என் கால் ஹிஸ்டரில அவன் பேர் தான் பர்ஸ்ட் இருந்துச்சுடா” என்றதும், நந்தேஷும் மைத்ரேயனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

நந்தேஷ், “அவன் சீரியல் கில்லரா இருந்தா, இனிமே இந்த கொலை எல்லாம் தொடர்ந்து நடக்காது தான?” எனக் கேட்க,

“அதுக்கு தான் இன்வெஸ்டிகேஷன் போயிட்டு இருக்கு. அவன் தான் சீரியல் கில்லர்ன்னு இன்னும் கன்பார்ம் பண்ணலைடா. ஆனா என்னை ஏன் கொல்ல வந்தான்னே புரியல எனக்கு. அவனோட பாடி லேங்குவேஜ் எல்லாம் நான் எங்கயோ பார்த்த மாதிரி வேற இருக்கு” என சிந்தித்திட,

“அப்போ நமக்கு தெரிஞ்ச யாரோவா தான் இருக்குமோ?” என ஷைலேந்தரி குழப்பமாகக் கேட்டாள்.

“இருக்கலாம். அனாவசியமா நம்மகிட்ட மோதிட்டான்” என்றவளின் கருவிழிகள் ஆத்திரத்தில் ஜொலித்தது.

“பாடி எங்க தேடியும் கிடைக்கல சார்… இன்னும் ஆழமா இறங்கி தேடிட்டு இருக்காங்க” என்ற தகவலில் யுக்தா சாகித்யன் கொதிநிலைக்குச் சென்றான்.

அந்த மாஸ்க் அணிந்த மனிதன், மணமக்கள் கொலை செய்யப்பட்ட மண்டபத்தில் தென்படுகிறானா என ஆராய்ந்து கொண்டிருந்தனர்.

அவனது கண் மட்டும் யுக்தாவின் மனதில் நன்றாக பதிந்து விட்டது. ஸ்கெட்ச் ஆர்ட்டிஸ்ட் வைத்து அந்தக் கண்ணை வரைந்தும் விட்டான்.

மண்டபத்திலிருந்து ஒவ்வொரு ஆள்களின் புகைப்படத்தையும் அக்கண்களையும் ஒப்பீடு செய்தும் கண்டறிய முயன்றான்.

திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்கள், வேலையாட்கள் என அனைவரையும் அலசி ஆராய்ந்ததோடு மாலின் கேமராவையும் துளைத்து விட்டனர். அப்படி ஒருவன் எதிலுமே அகப்படவில்லை.

ரோலிங் சேரில் அமர்ந்து, ஒற்றை விரலை நெற்றியில் தட்டி, கண்ணை மூடி யோசனையில் ஆழ்ந்த யுக்தா சில நொடிகளில் உயிர் பெற்று,
“மால்ல ஒர்க்கர்ஸோட யூனிபார்ம் தான் அவன் போட்டு இருந்தான். சோ, மண்டபத்துலயும் அவன் அதே மாதிரி ஒர்க்கஸ் யூனிபார்ம் போட்டு இருக்கலாம். கேட்டரிங்கு வந்த பசங்களை க்ளோசா வாட்ச் பண்ணுங்க. கிட்சன், டைனிங்ல இருக்குற புட் ஏஜ் எடுங்க. பாஸ்ட்!” என்றதும் சிபிஐ அலுவலகம் மீண்டும் பரபரத்தது.

யுக்தா எண்ணியது போன்றே ஒரு புட்டேஜ் அவனது புருவங்களைச் சுருங்க வைத்தது.

சரியாக சமையலறையில் இருந்து டைனிங் ஹாலுக்கு இரு முறை அதே மாஸ்க் அணிந்த மனிதன் நடந்து சென்றான்.

அதன்பிறகு அவனைக் காணவில்லை. மாலிலும் அவன் போலியான ஐடிகார்டு அணிந்து கொண்டு, விஸ்வயுகாவையே வெகு நேரம் தொடர்ந்து கொண்டிருக்கிறான்.

அடுத்து அடுத்து நடந்த இரு கொலைகளிலும் அவன் சம்பந்தப்பட்டு இருக்கிறானா என்ற ஆய்வும் நடந்து கொண்டிருக்க, இறந்து போன எக்ஸ் மனிதனின் உடல் மட்டும் கிடைக்கவே இல்லை.

பட்டப்பகலில் நிகழ்ந்த இந்த நிகழ்வு சென்னையையே உலுக்கிட, அனைத்து ஊடகங்களிலும் பிளாஷ் நியூஸாக யுக்தாவே தெரிந்தான்.

“மக்கள் நடமாடும் இடத்தில் சிபிஐயின் வெறிச்செயல்!”

“மர்ம மனிதனை சுட்டுக்கொன்றாரா யுக்தா சாகித்யன்?”

“சீரியல் கில்லர் எனப் பழி சுமத்தி அப்பாவியைக் கொலை செய்து பாலத்தில் வீசிய கொடூரச் செயல்!”

இன்னும் அவர்களது ஊகங்களை ஊடகம் வெளிப்படுத்திக்கொண்டிருக்க, அதனைக் கண்டு விஸ்வயுகாவே எரிச்சலானாள்.

“என்னடா இவனுங்க பட்டப்பகல்ல ஒரு பொண்ணை கொலை பண்ண ஒருத்தன் கத்தியோட பின்னாடி துரத்தினான் அதை எல்லாம் போடாம, அவங்களுக்கு என்ன தேவையோ அதை மட்டும் போட்டு டி. ஆர். பியை எகிற விட்டுட்டு இருக்காங்க”

“விடு… அவன் தலை தான உருளுது. நல்லா வாங்கட்டும்” என மைத்ரேயன் முணுமுணுத்தான்.

ஷைலேந்தரி தான் அமைதியாக இராமல், “என்னடா உன் பியான்சி இன்னொருத்தனைப் புகழறது உனக்கு பிடிக்கலையா? ஜெலஸ் ஆகிட்டியா?” எனக் கண்சிமிட்டி கிண்டல் செய்ய, அவன் முகம் இறுகியது.

ஆனாலும் அதனை வெளிக்காட்டாமல் “ஜெலஸ் இருக்காதா பின்ன? நான் கல்யாணம் பண்ணிக்கப் போறவளாச்சே” என அழுத்தம் திருத்தமாகக் கூற, “ம்ம் பாருடா… நீ நடத்து மேன்” என்றவளின் குரலில் சிறிதளவு பிசிறும் இல்லை.

நந்தேஷோ, “விஷயம் ரொம்ப பெருசா போயிட்டு இருக்கு விஸ்வூ” எனக் கூறும்போதே யுக்தா விஸ்வயுகாவிற்கு அழைத்தான்.

அவளை சிபிஐ அலுவலகத்திற்கு வரக்கூற, அவளோ யோசியாமல் கிளம்பி விட்டதில் மைத்ரேயன் “நாங்களும் வர்றோம்” என்றான் முறைப்பாக.

அதில் நால்வருமே அங்குச் செல்ல, யுக்தா ஒரு ஸ்கெட்ச் புகைப்படத்தைக் காட்டி அவனைத் தெரியுமாவெனக் கேட்க, நால்வருமே மெல்ல அதிர்ந்தனர்.

“இவன் தான் அபர்ணாவோட எக்ஸ் லவர் நரேஷ்” என நந்தேஷ் திகைப்புடன் கூறியதில், “ம்ம் என் கெஸ் கரெக்ட் தான்…” என்றான் கூர்மையடன்.

“நீங்க அவனை என்கொயரி பண்றேன்னு சொன்னீங்களே சார்?” ஷைலேந்தரி கேட்டதில், “அவன் மிஸ்ஸிங். அவனைத் தேட ஆள் செட் பண்ணிருந்தேன். அதுக்குள்ள வேலையைக் காட்டிட்டான்” என நெட்டி முறித்தான்.

“ஆனா நரேஷ் எதுக்கு இதெல்லாம் செய்யணும்? விஸ்வூவை ஏன் கொல்ல வரணும்” குழப்பம் பொங்க மைத்ரேயன் வினவ, “அதுக்கு செத்துப் போனவன் தான் விளக்கம் சொல்லணும். இல்லன்னா அவனுக்கும் உங்களுக்கும் என்ன க்ளாஷ்னு நீங்க தான் தெளிவா சொல்லணும்” என்று எகத்தாளமாகக் கேட்க, நால்வரும் இன்னுமாகக் குழம்பினர்.

விஸ்வயுகா,” எங்களுக்கும் நரேஷுக்கும் பெர்சனலா எந்த க்ளாஷும் இல்ல. அபர்ணாவும் அவனும் மியூச்சுவலா தான் பிரிஞ்சாங்க. இதுல பழி வாங்குறதுக்கு என்ன இருக்கு. ஐ டோன்ட் அண்டர்ஸ்டாண்ட்” எனப் பெருமூச்சு விட்டாள்.

“ம்ம்… ஓகே. இன்னும் சிக்ஸ் டேஸ்ல உங்க மேட்ரிமோனி மூலமா நடக்க இருக்குற கல்யாணத்துல தெரிஞ்சுடும் இவன் சீரியல் கில்லரா இல்லையான்னு” என யோசனையுடன் யுக்தா கூற, மைத்ரேயன் “அப்போ இவன் சீரியல் கில்லர் இல்லையா?” எனக் கேட்டான்.

“கிடைச்ச தகவல்படி எய்ட்டி பெர்சன்ட் அவன் கொலைகாரனாவே இருக்கலாம். பிகாஸ் கொலை நடந்த இடத்துல அவனோட பிங்கர் ப்ரிண்ட்ஸ், அவனோட புட்டேஜ், எல்லாமே கிடைச்சு இருக்கு. அது மட்டுமில்ல, அடுத்து நடந்த ரெண்டு கொலை அதாவது நடக்க இருந்த கல்யாணத்துல பொண்ணும் மாப்பிள்ளையும் செத்துப்போன விதத்துலயும் இவனுக்கு சம்பந்தம் இருக்கு. இவன் ஜஸ்ட் கேட்டரிங் மட்டும் வச்சு நடத்தல. சோமேடோ, ஸ்விக்கி மாதிரி இவனும் புட் ஆர்டர் எடுத்து டெலிவெரி பண்ணுவான், சென்னைக்குள்ள மட்டும். அந்தப் பொண்ணும் மாப்பிள்ளையும் இறந்து போன அன்னைக்கு ரெண்டு வீட்டுக்கும் இவன் புட் டெலிவெரி பண்ணிருக்கான். அதோட புட்டேஜ், டீடெய்ல்ஸ்சும் ஆதாரமா இருக்கு. மீதி ட்வென்டி பெர்சண்டேஜ்… க்ளியர் மோட்டிவ் இன்னும் எனக்குத் தெரியல. சோ, இன்னுமே எனக்கு டவுட்டா இருக்கு. மே பி இந்த கெஸ் தப்பாவும் இருக்கலாம். வில் ஸீ!” என்றான் தாடையைத் தடவியபடி.

“அப்போ அதுவரை வெய்ட் பண்ணனுமா? சஸ்பென்ஸ் வேற தாங்க முடியாதே” என ஷைலேந்தரி முணுமுணுக்க, “வேணும்னா செத்துப்போனவனை திரும்ப எழுப்பட்டுமா” என்றான் நந்தேஷ்.

அதில் அசடு வழிந்தவள் காருக்கு வரும்போதே சிவகாமி விஸ்வயுகாவை அழைத்தார். ‘இவங்க வேற’ என்ற எரிச்சலுடன் போனை எடுத்தவளிடம், “விஸ்வா நாளைக்கே வீட்டளவுல ஒரு சின்ன என்கேஜ்மெண்ட் வச்சுக்கலாம். என்ன வேலையா இருந்தாலும் நீயும் மைத்ராவும் நாளைக்கு வீட்ல இருக்கீங்க” என்று உத்தரவு பிறப்பித்து விட்டு போனை வைக்க, அவள் மைத்ரேயனைப் பார்த்தாள். அவனோ ஷைலேந்தரியைப் பார்க்க, அவளோ அதிர்ந்தாள்.

“என்ன இது? என்கேஜ்மெண்ட்ன்னு இவ்ளோ ஈஸியா சொல்றாங்க. ட்ரெஸ் எடுக்கணும், ஜுவல்ஸ் ரெடி பண்ணனும், மேக் அப்க்கு அரேஞ்ச் பண்ணனும்… எவ்ளோ வேலை இருக்கு” என்று பரபரக்க, விஸ்வயுகா “சம்பந்தப்பட்ட நானே சும்மா தான இருக்கேன். நீ ஏண்டி இவ்ளோ பறக்குற” என்றாள் முறைத்து.

“இதெல்லாம் உனக்கு யாரு பண்ணப்போறா. உன் பக்கத்துல நின்னு போஸ் குடுக்கப் போற எனக்கு பண்ணனும்டி. இந்தக் கொலையெல்லாம் நடக்காத மாதிரி மூஞ்சியை சிரிச்சமாதிரி வச்சுருக்கணும் வேற…” என்றதில் மைத்ரேயன் அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு மறுபுறம் திரும்பிக்கொண்டான்.

மறுநாள் சிவகாமியின் ஆசைப்படியே மைத்ரேயனுக்கும் விஸ்வயுகாவிற்கும் நிச்சயதார்த்தம் நன்முறையில் நடந்தேறியது.

எளிமையான முறையில் அடுத்த இரு நாட்களிலேயே திருமண தேதியையும் குறித்து வைக்க, இருவரிடமும் சிறு அதிர்வு. ஆனாலும் எதையும் மறுக்கவில்லை. நந்தேஷ் தான், “எதுக்கு இவ்ளோ சீக்கிரமா எல்லாம் பண்றீங்க…” என குமுறினான். அலுவலகப் பிரச்சனை சரியாக வேண்டுமே என்ற கவலை அவனுக்கு. அது தங்கையின் வாழ்வைப் பாதிக்கக் கூடாதென்ற வருத்தம் வேறு.

நிச்சயம் முடிந்த நிமிடமே புடவையைக் களைந்து விட்டு, சல்வாரில் வெளியில் செல்லப் போன விஸ்வயுகாவைத் தடுத்தார் சிவகாமி.

“இன்னைக்கு எந்த கமிட்மெண்ட்டும் வச்சுக்காதன்னு சொன்னேன்ல” என்று அதட்டியதில், அவரைத் திரும்பி காட்டத்துடன் பார்த்தவள், “மோதிரம் மாத்தியாச்சுல்ல. தட்ஸ் இட்!” என பல்லைக்கடித்து ஆத்திரத்தைக் காட்டி விட்டே காரை எடுத்தாள்.

நேராக யுக்தாவின் அலுவலகத்தில் தான் காரை நிறுத்தினாள். உடனே அவனுக்கு அழைப்பும் விடுக்க, அழைப்பை ஏற்றவன் கேட்ட முதல் கேள்வியே “ஆர் யூ ஓகே ஏஞ்சல்?” தான்.

“ம்ம்… உன் ஆபிஸ் வாசல்ல தான் நிக்கிறேன். கம்!” என்றதில் அவன் ஒற்றைப்புருவம் வியப்பில் விரிந்தது.

சொன்னது போன்றே அவளது காருக்குள் ஏறி அமர்ந்தவன், அவளை மேலிருந்து கீழ் வரை அளந்து விட்டு, “எங்கேஜ்மெண்ட் எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது போலயே” என்றான் எகத்தாளமாக.

“ஓ! சூப்பரா முடிஞ்சுது.”

லேசாய் முகம் கருக்க, அவள் கையைப் பார்த்தவன் அதில் மைத்ரேயன் அணிவித்த மோதிரம் இருப்பதைக் கண்டு, “அதைக் கழட்டு !” என்றான் அதிகாரமாக.

“முடியாது!” அவள் தோளைக்குழுக்க,

“என்னைத் தவிர எவனோட சுண்டு விரலும் உன் மேல படக்கூடாதுடி. ஜஸ்ட் ரிமூவ் இட். இல்லன்னா, உன்னைத் தொட்டு மோதிரம் போட்டு விட்ட அவன் விரல் இருக்காது” என்றவனின் குரலில் தீவிரம் அளவுக்கு அதிகமாக இருந்தது.

“மறுபடியும் சொல்றேன் நீ ரொம்ப பேராசை படுற…” கண்ணைச் சுருக்கி அவள் கண்டித்தாள்.

அவனோ அவளை விழுங்கும் பார்வை பார்க்க, அதில் கண்ணை மூடி நிதானித்தவள் “இன்னும் ரெண்டு நாள்ல எனக்கும் மைதாவுக்கும் மேரேஜ் பிக்ஸ் பண்ணிருக்காங்க. என்ன பண்ண முடியும் உன்னால?” அவள் தூண்டில் போட்டாள்.

“மேரேஜ் பிக்ஸ் பண்ண மட்டும் தான் முடியும். தாலி கட்டுறது நானா தான் இருப்பேன்.”

“அவ்ளோ பெரிய வேலை எல்லாம் நீ பார்க்கத் தேவை இல்லை. கல்யாணம் நடக்குறதுக்கு 5 நிமிஷத்துக்கு முன்னாடி என்னைக் கடத்திடு” என்றாள் இயல்பாக.

“உன்னைக் கடத்துறது எனக்குப் பிடிச்ச வேலையாச்சே” அவன் கண்களில் ரசனை மின்ன,

“உன் வாட்டர் பால்ஸை க்ளோஸ் பண்ணு மேன். நடக்கப்போறது விவிஐபியோட கல்யாணம். அதுவும் மினிஸ்டர் வீட்டு பங்க்ஷன். செக்கியூரிட்டி எல்லாம் பலமா இருக்கும். நான் இருக்குற ரூம் வாசல்ல கூட கார்ட்ஸ் இருப்பாங்க. எந்தக் கொம்பனாலையும் அந்த நேரத்துல என்னை நெருங்க முடியாது.” என்றாள் ஏளனமாக.

“அப்படி உன்னை ரிஸ்க் எடுத்துக் கடத்திட்டா எனக்கு என்ன கிடைக்கும் ஏஞ்சல்?” அவளைப் பார்வையால் விழுங்கியபடி கேட்டான் யுக்தா சாகித்யன்.

“வாட்ஸ் யுவர் டிமேண்ட்?”

“என் டிமேண்ட் எப்பவும் நீ மட்டும் தான் ஏஞ்சல். உனக்குத் தெரியாதா?” இதழ் வளைத்து அவன் புன்னகைக்க, அவள் முறைத்தாள்.

“சரி எனக்கு உன் போன் ஆக்சஸ், உன் பெர்சனல் லேப்டாப், அண்ட் உன் வீட்டு சிஸ்டம் ஆக்சஸ் எல்லாமே வேணும்” யுக்தா அவளது தோளில் தவழ்ந்த கூந்தலை வருடியபடி கேட்க, அவன் கையைத் தட்டி விட்டவள், “நீ என்ன லூசா?” என்று கேட்டாள்.

“உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா அந்த ஆக்ஸஸ் கிடைக்கும்ல ஏஞ்சல்?” தீவிர யோசனையுடன் அவன் வினவ, “ம்ம்ஹும் உனக்கு பைத்தியம் முத்திடுச்சு. நீ கடத்தவே தேவை இல்ல. முதல்ல இறங்கு” என்றாள் அதிகாரமாக.

“டீல் இஸ் அ டீல்! நான் உன்னைக் கடத்துவேன். நீ எனக்கு உன்னோட புல் ஆக்ஸஸ் குடுக்கணும்” பூடகமாக அவன் பேசியதில் திகைத்தவள் வாட்? என்றாள்.

அதற்கு பதில் கூறாதவன் “ரெண்டு நாளைக்கு கேஸ் விஷயமா டெல்லி போறேன் ஏஞ்சல். உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன். சோ ரெண்டு நாள் மறக்காத மாதிரி ஒண்ணே ஒன்னு” என்று கூறிக்கொண்டே சென்றவன் அவள் உணரும் முன்னே அவளது கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டு இருந்தான். அவனைத் தள்ளிவிட்டு கன்னத்தில் அறைந்தவள், “உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதாடா சைக்கோ!” என்று சீறினாள்.

“அடிச்சதுக்கும் சேர்த்து இன்னொன்னு வச்சுக்கோ…” என்று மறுகன்னத்திலும் வம்படியாக முத்தமிட்டு விட்டே காரை விட்டு இறங்கினான்.

‘இவனை வச்சு கல்யாணத்தை நிறுத்தலாம்னு பார்த்தா, இந்த பைத்தியம் எல்லாத்தையும் குழப்பி விடுது. சிஸ்டம் ஆக்ஸஸ் எல்லாம் இவனுக்கு எதுக்கு?’ என்ற யோசனையும் மூளையில் ஒரு ஓரத்தில் குடைந்து எடுத்தது.

மோகம் வலுக்கும்
மேகா

ஹாய் டியர்ஸ், வீட்ல கெஸ்ட் வரிசையா வந்துட்டே இருக்காங்க. அடுத்த வாரமும் வருவாங்க. அடுத்த வாரத்துல இருந்து சீக்கிரமா யூடிஸ் போடுறேன். அதுவரை அட்ஜஸ்ட் கரோ!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
18
+1
106
+1
3
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. யுக்தா அவன் காரியத்தில் கரெக்ட் இருக்கிறான்