Loading

கயல் ஜீவாவை பார்த்து அதிர்ந்து நிற்க, ஜீவா படுத்துக்கொண்டே “தூக்கம் வருது கயல் வா தூங்கலாம். .” என்று அழைத்தான்.

‘இவரு இப்போ நார்மலா இருக்காரா இல்ல கோபமா இருக்காரா…’ என்று புரியாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளிடம், அழுத்தமாக “உன்னை தான் சொல்றேன்” என்றதும் தன்னிச்சையாக படுக்கைக்கு வந்தவள் அவனுக்கு மறு புறம் திரும்பி படுக்க,

ஜீவா, ‘ஹ்ம்ம் நீ எவ்ளோ தூரம் தள்ளி படுத்தாலும் நைட் என்னை கட்டி பிடிச்சு தான் படுத்துருப்ப…’ என்று மனதில் கொஞ்சி விட்டு அவளையே பார்க்க, கயல் சிறிது நேரத்தில், அவன் புறம் திரும்பி ஏதோ கேட்க வருவதும் அவன் பார்த்ததும் கண்ணை மூடிக் கொள்வதுமாக இருக்க, ஜீவாவும் அவள் புறம் திரும்பி படுத்து “உனக்கு இப்போ என்ன கேட்கணும்?” என்று கேட்டான்.

அதில் முழித்தவள் ‘ஒன்னும் இல்ல’ என்று தலையாட்டி கண்ணை மூடிக் கொள்ள அவள் செயலில் குறுநகை புரிந்தவன், “ஸ்வீட் ஹார்ட்… என்கிட்ட உண்மைய மறைச்சா எனக்கு கெட்ட கோபம் வரும்” என்று ‘கெட்ட’ என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்தவன்,

“அப்பறம்… பொய் சொன்ன இந்த லிட்டில் லிப்ஸ்க்கும், இந்த சின்ன சைஸ் மூளைக்கும், இந்த குட்டி ஹார்ட்டுக்கும்” என்று இவ்வளவு நேரம் உதட்டையும் நெற்றியையும் தொட்டவன், இப்போது இதயத்தில் கை வைக்கப் போக, சட்டென்று அவன் கையை பிடித்தவள்,

“இல்ல இல்ல மழை எப்படி வந்துச்சுன்னு தான் கேட்கணும்ன்னு நினைச்சேன்” என்றாள் அவசரமாக.

ஜீவா, “தட்ஸ் அ குட் கேர்ள்…” என்று அவள் பிடித்த கையைப் பார்க்க, கயலும் அப்போது தான் அவன் கையைப் பிடித்திருப்பது உணர்ந்து உடனே கையை விட்டாள்.

ஜீவா சிறு சிரிப்புடன், “மழை எப்படி வந்துச்சுன்னு அவங்களே சொன்னங்களே” என்று சொல்ல, கயல் புரியாமல் “யாரு சொன்னாங்க” என்றாள் கேள்வியாக.

“அதான் காளியாத்தா கருணைன்னு சொன்னங்களே நீ கேட்கல” என்று குறும்பாய் சொன்னதும், அதில் அவனை லேசாக முறைத்தவள் “இல்ல நீங்க தான் ஏதோ பண்ணிருகீங்க” என்று சின்னக் குரலில் அழுத்தமாக கூறினாள்.

அவன் நக்கலாக ‘ஆமா நான் தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வருண பகவானுக்கு போன் பண்ணி மழை பொழிய சொன்னேன்…’ என்று குறும்பாய் சொல்ல அதில் கடுப்பானவள், “எனக்கு தூக்கம் வருது” என்று அவனுக்கு முதுகு காட்டி படுத்து கொண்டு,

‘பெருசா கேளு கேளுன்னு சொல்றது… கேட்கமாட்டேன்னு சொன்னா வில்லன் மாதிரி வசனம் வேற பேச வேண்டியது. சரின்னு கேள்வி கேட்டா எதுக்கும் பதில் சொல்றது இல்ல’ என்று வாய்க்குள் முணுமுணுத்தாள் சிறிது சத்தமாகவே.

அதில் பொங்கி வந்த சிரிப்பை அடக்கியவன், அவளை இழுத்து தன் நெஞ்சில் போட்டுக் கொள்ள,  அவன் இழுப்பிலும் அணைப்பிலும் தடுமாறியவள் திருதிருவென முழிக்க,

“என்ன ஸ்வீட் ஹார்ட் கேள்வி கேட்டுட்டு அந்த பக்கம் திரும்பி படுத்தா நான் என்ன சுவத்துக்கா பதில் சொல்ல முடியும் ஹ்ம்ம்??” என்றான் ரசனையாக.

அவள் அவன் பிடியில் இருந்து விடுபட முயற்சி செய்ததைக் கண்டதும் முதலில் கோபமாக அவளை இறுக்கிப் பிடித்தவன், அவள் கண் கலங்குவது தெரிந்ததும் சட்டென பிடியைத் தளர்த்தி தள்ளி படுக்க வைத்தான்.

கயல் கோபமா இருக்காரோ என்று நினைத்து அவன் முகத்தை ஆராய, அவன் இயல்பாக இருப்பதைக் கண்டதும் சற்று அமைதியாகி அவனை பார்க்க,

ஜீவா, “மழை எப்படி வந்துச்சுன்னு தெரியனுமா ஸ்வீட் ஹார்ட்?” என்று மென்மையான குரலில் கேட்டதில் அவள், “ம்ம்” என்று தலையாட்டியதும் அவன் எழுந்து “வா என்கூட” என்று வெளியில் அழைத்தான்.

அவள் புரியாமல் “எங்க?” என்று கேட்க, அவன் பதில் சொல்லாமல் அவளை அழைத்து கொண்டு போக, அந்த நடு இருட்டில், அனைவரும் உறங்கிக் கொண்டிருப்பதை உறுதி செய்து கொண்டு, மெல்ல நடந்து போக, கயல் மெதுவாக “எங்க போறோம்” என்று ஹஸ்கி வாய்ஸில் கேட்க, ஷ்ஷ் என்று அவளை அமைதிப்படுத்தியவன், அந்த கோவிலின் அருகில் அழைத்துச் சென்று, டார்ச்சை எடுத்து, அந்த புல்களுக்கு நடுவில் காட்ட, அங்கு, சினிமாக்களில் மழை வருவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு பைப் ஒன்று இருந்தது.

கயல், “இதுல இருந்து எப்படி மழை வந்துச்சு” என்று கேட்டவள் “சரி பைப் இங்க இருக்கு. அப்போ அங்க எப்படி மழை பேஞ்சுச்சு யாராவது ஆன் பண்ணிருக்கணும்ல” என்று வரிசையாக கேள்விகளை அடுக்க,

ஜீவா, “ஏண்டி இத்தனை கேள்வி கேட்குற… வா” என்று கோவிலின் அருகில் அழைத்துச் சென்று “நான் இங்க தான நின்னேன். நீ இங்க வந்து நின்னு, கால்கிட்ட ஒரு பைப் இருக்கும் அதை பிரெஸ் பண்ணு” என்று சொல்ல, கயலுக்கு தான் ஒன்றுமே புரியவில்லை.

இருந்தும் அவன் சொன்னது போல் அவன் நின்ற இடத்தில நின்று அங்கு ஏதோ காலில் தட்டுப் பட, அதனை அழுத்தினாள்.

அடுத்த நிமிடமே சடசடவென மழை பொழிவது போல் தண்ணீர் கொட்ட, அதனை விழி விரித்து பார்த்தவள், கையை நீட்டி, அந்த மழையை அனுபவித்து பின், “எப்படி ஜீவா… இவங்களுக்கு தெரியாம இதை ஃபிக்ஸ் பண்ணுனீங்க. இந்த பைப்லாம் எப்படி கிடைச்சுச்சு…” என்று அடுத்தடுத்து கேள்விகளை அடுக்க, ஜீவா அவளையே ரசித்து விட்டு,

“இவங்களோட எல்லைக்கு வெளிய நம்ம ஆளுங்களை நிறுத்திருக்கேன். காலைல நீ தீ மிதிக்க போறேன்னு சொல்லும்போதே, அவங்க மூலமா இதெல்லாம் வாங்கிட்டு வர சொல்லி, இங்க இருக்குறவங்களுக்கு தெரியாம செட் பண்ணிட்டேன்” என்று சொன்னதும், கயல் ‘எவ்ளோ வில்லத்தனம் பண்றாரு” என்று மனதில் செல்லமாக திட்ட, ஜீவா அவளை அங்குல அங்குலமாக பார்வையாலேயே வருடிக் கொண்டிருந்தான்.

அவன் பார்வையில் உள்ளுக்குள் குளிர் எடுக்க, அவன் நெருங்கி வருவது கண்டதும் மேலும் நடுங்க ஆரம்பித்தாள்.

அவள் குளிரில் நடுங்குவதை கண்டதும், ஜீவா அந்த தண்ணீரை நிறுத்தி ” இந்த பைப்பை எடுத்து நான் போய் இதை வெளியில நிக்கிற ஆளுங்ககிட்ட குடுத்துட்டு வரேன்… நீ போ” என்று அவள் கண்ணை பார்த்து பேச,

அவள் முகத்தை சுருக்கி, “இதெல்லாம் தப்பு இல்லையா… இங்க இருக்குறவங்களோட நம்பிக்கையை கெடுக்குற மாதிரி இப்படி சடங்கை கெடுத்து விட்டுட்டோம்” என்றாள் குற்ற உணர்ச்சியுடன்.

ஜீவா, “தெரியுதுல தப்புன்னு… நீ போறேன்னு அடம்பிடிக்காம இருந்திருந்தா நானும் இவ்ளோ வேலை பார்த்திருக்க மாட்டேன். நான் சொன்னதை நீ கேட்கலைன்னா, உன்னை கேட்க வைக்க தப்பு சரி எல்லாம் பார்க்க மாட்டேன்…” என்று தீவிரமாய் சொல்ல, அதில் அதிர்ந்தவள், அவனை பே வென பார்க்க, அவள் பார்வையில் புன்னகைத்த ஜீவா “நீ போ” என்று அனுப்பி வைத்தான்.

அந்த பைப்பை அப்புறப்படுத்தி விட்டு, குடிலுக்கு வந்தவன், இன்னும் கயல் ஈர உடையிலேயே நடுங்கிக் கொண்டிருப்பதை கண்டு, “நீ இன்னும் ட்ரெஸ் சேன்ஜ் பண்ணலையா” என்று கேட்க,

அவள், “ட்ரெஸ் இல்லை… இன்னொரு ட்ரஸும்  ஈரமா தான் இருக்கு” என்று சொல்ல, அப்பொழுது தான் ஞாபகம் வந்தவனாய், அவனின் பேகில் இருந்து ஒரு உடையை எடுத்துக் கொடுத்தான்.

“சாரி கயல் குடுக்க மறந்துட்டேன்… நான் காலைலயே உனக்கு டிரஸ் வாங்கிட்டு வர சொல்லிருந்தேன் இதை மாத்திக்கோ சீக்கிரம்…” என்று சொல்ல, அவனின் அக்கறையில் மனதில் சாரல் அடிக்க, இருந்தும், அவன் பேசும் வில்லத்தனமான பேச்சுக்கள் தான் அவளுக்கு ஏதோ ஒரு பயத்தை மனதில் ஆட்டிபடைத்தது.

ஜீவா அவள் உடை மாற்றுவதற்காக வெளியில் வந்து நின்றான். சிறிது நேரத்தில், உள்ளே சென்றவன் உடை மாற்றியும் அவள் நடுங்கி கொண்டிருப்பதைக் கண்டு,

‘சே! தேவையில்லாமல் அவளை நனைய விட்டுட்டோமே’ என்று தன்னைத் தானே கடிந்து கொண்டு, போர்வையை எடுத்து அவளுக்கு போர்த்தி விட்டவன், “ரொம்ப குளிருதா கயல்…” என்று விட்டு அவனுக்கு வைத்திருந்த போர்வையையும் அவள் மேல் போர்த்த, கயல் தான் இன்று அவனின் சிறு சிறு மென்மையான கவனிப்பில் அவனிடம் தன்னை தொலைத்துக் கொண்டிருந்தாள்.

அதற்கு முன்னும் அக்கறையை கோபமாக காட்டியதில் அவள் அதனை உணரவில்லை. ஆனால், இப்போது அவனின் இந்த இனிமையில் அவன் புறமே சரணடையும் மனதை அடக்க வழி தெரியாமல் தவித்தாள்.

ஒரு உடையை எடுத்துக்கொண்டு ஜீவா பாட்டிற்கு சட்டையை கழற்ற அவள் திருதிருவென விழித்து, “நான் நான் வெளிய இருக்கேன்” என்று செல்லப் போக, அவளை பிடித்து தடுத்து நிறுத்தியவன்,

“எங்க போற வெளிய பனியா இருக்கு… இங்கயே இரு…” என்றான்.

அவள் “இல்லை நீங்க… நீங்க ட்ரெஸ்…” என்று திக்கி திணறி பேச, அவன் அதனை எல்லாம் கண்டு கொள்ளாமல் “நீ வேணா கண்ணை மூடிக்கோ…” என்றவன், அவளை நெருங்கி காதருகில் “பட் நீ கண்ணை திறந்திருந்தாலும் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை” என ஹஸ்கி குரலில் சொல்ல, அதில் அவள் செந்தூரமாய் சிவந்து சுவற்றின் புறம் முகம் காட்டி கண்ணை மூடி நின்று கொண்டாள்.

அவளையே சிறு சிரிப்புடன் பார்த்துக் கொண்டு, உடையை மாற்றியவன் “இப்போ திரும்பலாம்” என்றதும், அப்பொழுதும் அவனைப் பாராமல் சென்று உடலை சுருக்கி படுத்துக் கொண்டாள்.

அவள் அருகில் வந்தவன், “இன்னும் குளுருதாடா” என்று கேட்க,  அவள் இல்லை என்று தலையாட்டி கண்ணை மூடி உறங்க முயற்சிக்க, ஜீவாவும் அவளைப் பார்த்த படி உறங்க போக, கயலின் நடுக்கம் மட்டும் குறையவே இல்லை.

அவளிடம் முனகல்களை கண்ட ஜீவா வேகமாக அவள் நெற்றியில் தொட்டு பார்க்க, காய்ச்சல் அனலாக கொதித்துக் கொண்டிருப்பதை கண்டு, பரபரவென தைலத்தை எடுத்து உள்ளங்கை, கால் எல்லாம் தேய்த்து விட்டவன்,

“ரொம்ப முடியலையா ஸ்வீட் ஹார்ட். சாரி டா நான் உன்னை அந்த தண்ணில நிற்க வச்சிருக்க கூடாது..” என்று வருந்திய குரலில் சொல்லி விட்டு, வேகமாக கார்த்தியின் குடிலுக்கு சென்று அவனுக்கு வைத்திருந்த மாத்திரை பாக்ஸில் காய்ச்சல் மாத்திரையை எடுக்க,

இன்று நடந்ததையே நினைத்து உறங்காமல் இருந்த கார்த்தி ஜீவாவின் பதட்டத்தை கண்டதும், “என்ன ஆச்சு அண்ணா” என்று கேட்க,

“கயல்க்கு காய்ச்சல் அடிக்குது” என்று கை எல்லாம் நடுங்கியபடி, மாத்திரியை தேடி எடுத்து கார்த்தி கேட்ட கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லாமல் கயலிடம் மாத்திரையை கொடுத்து போட சொன்னவன், மேலும் நெற்றியில் தைலம் தேய்த்து போர்வையை நன்கு போர்த்தி விட,

கயலுக்கு தான் அவன் கோபமாக இருந்தால் கூட அதை தாங்கி விடலாம் போல. ஆனால், இந்த பதட்டமான அன்பு அவளுக்கு அழுகையை தான் கொடுத்தது.

அவன் கோபத்தில் கூட மற்றதை மறந்து அதில் பயந்து அவன் சொன்னதை செய்பவளுக்கு அவனின் இந்த அன்பு பழையதையே ஞாபகப்படுத்தியது.

அவன் ஏமாற்றியதே நினைவு வர மனதால் இந்த அன்பினை ஏற்க முடியாமல் ஏதோ தடுக்க அது கண்ணீராய் வெளிப்பட்டது.

அவள் கண்ணீரைக் கண்டதும் மேலும் பதறியவன் “ரொம்ப முடியலையா கயல்… என்னடா பண்ணுது. குளுருதா” என்று விட்டு மீண்டும் கை கால்கள் எல்லாம் அழுந்த தைலத்தை தேய்த்து விட்டு, “கொஞ்ச நேரத்துல சரி ஆகிடும் ஸ்வீட் ஹார்ட்… இதுக்குலாமா அழுவாங்க” என்று கண்ணீரை துடைத்து விட்டவன் அவள் உடம்பு முடியாததால் அழுகிறாள் என்றே நினைத்து கொண்டான்.

சிறிது நேரம் ஆகியும் அவள் நடுக்கம் நிற்காததால், அப்படியே அவளை அவன் நெஞ்சில் சாய்த்து கட்டி கொண்டு, தலையை தடவி கொடுத்து, “தூங்கு கயல் சரி ஆகிடும்” என்று தட்டி கொடுக்க, அவள் அவனிடம் இருந்து தள்ளிப் போகவே முயற்சித்தாள்.

ஜீவா “கயல் உனக்கு குளுருதுல, சோ என்னை கட்டிப் பிடிச்சு படுத்துக்கோ குளிர் கொஞ்சம் குறையும்…” என்று கெஞ்சும் குரலில்  சொல்ல,

அவள் “வேண்டாம்” என்று மறுப்பாய் தலையாட்டி விலக போக, அதில் கோபமானவன் “உன்னை தானே சொல்றேன். சொல்றது காதுல விழுகலையா. உன்னை கட்டி தான பிடிச்சேன் ஏதோ ரேப் பண்ணுன மாதிரி துள்ளுற… பேசாம படுத்து தூங்குற. கண்ணை மூடுடி” என்று குரலை உயர்த்தி சத்தம் போட, அதில் மிரண்டு கண்ணை மூடியவள் அடுத்த நிமிடமே உறங்கி விட்டாள்.

ஜீவா தான் பெருமூச்சு விட்டு, ‘ஏண்டி… நான் கோபப்படக்கூடாதுன்னு ரொம்ப பொறுமையா போனா. நீ என் பொறுமைய இவ்ளோ சோதிக்கிற. உன்னை ஈர ட்ரெஸ்ல பார்த்ததும் என்னாலேயே என்னை கண்ட்ரோல் பண்ண முடியலைடி. அப்படியே இங்க வந்தா உன்னை எதாவது பண்ணிடுவேனோன்னு பயந்து தான் நானே அந்த பைப்பை குடுக்குற சாக்குல வெளிய போயிட்டு வந்தேன். அப்பவும் ட்ரெஸ் மாத்தாம நீ குளிர்ல நடுங்குற தை பார்த்ததும் அப்படியே அப்படியே எப்படி இருந்துச்சு தெரியுமா… உன்னை உன்னை ப்ச்… உன்னை ஹக் பண்ணி, கிஸ் பண்ணி… என்னென்னமோ பண்ணனும்னு தோணுச்சு டி. ஆனால் எங்க நான் பக்கத்துல வந்தாலே, நீ தான் ஏதோ மிருகத்தை பார்க்குற மாதிரி பார்க்குறியே…

என்மேல உனக்கு அவ்ளோ நம்பிக்கையாடி… உன்னை என்னை விட்டு நான் போக விடமாட்டேன் ஸ்வீட் ஹார்ட்.

ஆனால் உன் விருப்பம் இல்லாம கண்டிப்பா நான் உன்னை எடுத்துக்க மாட்டேன். அது எத்தனை வருஷம் ஆனாலும் சரி…

ஏன்னா நான் பண்ணதும் தப்பு தான. ஐ டிசர்வ் இட். நீ என்னை லவ் பண்றன்னு எனக்கு தெரியும். இப்போவும் உன் மனசுல என்மேல அவ்ளோ காதல் இருக்குன்னு எனக்கு தெரியும் ஸ்வீட் ஹார்ட். ஆனால் நான் மன்னிப்பும் கேட்டுட்டேன். நீதான் என் பொண்டாட்டின்னும் சொல்லிட்டேன். அப்பறமும் உனக்கு என்ன பிரச்சனைன்னு எனக்கு புரியவே இல்லைடி. உன்னால என்னை மன்னிக்க முடியலையா கயல். என்மேல உனக்கு அவ்ளோ கோபமா…’ என்று தன் போக்கில் பேசியவன்,

பின், ‘ஆனால் என்ன கோபமா இருந்தாலும், உனக்கு பிடிச்சாலும் பிடிக்கலைன்னாலும் நீ என்கூடதான் இருக்கணும். உன்னை நான் விட்டு குடுக்க போறது இல்லை…’ என்று அழுத்தமாய் உறுதியாய் சொன்னவன்,

‘தினமும் அர்த்த ராத்திரியில என்னை இப்படி புலம்ப வச்சுட்டு நீ நிம்மதியா தூங்குற ஸ்வீட் ஹார்ட்’ என்று அவள் உதட்டை பிடித்து கொஞ்சிக்கொண்டு சொல்ல, நல்லவேளையாக கயல் உறங்கி விட்டாள்.

இல்லை என்றால் அவன் இப்படி மாற்றி மாற்றி பேசியதைக் கேட்டு, அவளுக்கு பைத்தியமே பிடித்திருக்கும்.

பின், அவள் நன்கு உறங்கியதை அறிந்து கொண்டு, எப்போதும் போல் அவள் இதழ்களை சுவைத்து ருசித்து விட்டு, அவளை இறுக்கமாக கட்டி அணைத்து உறங்கி விட்டான்.

இங்கு கார்த்தி தான் இரவு முழுதும் உறங்காமல் தவித்துக் கொண்டிருந்தான்.

கயலுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் எழுந்து சென்று பார்க்கவும் முடியாமல் திண்டாடியவன் சரியாக விடியும் பொழுது, பூவரசி அவன் இடத்திற்கு வந்ததை கண்டு நிம்மதியாகி,

“பூவரசி… சீக்கிரம் வா கயலை பார்க்க போகணும்” என்று அவசரப்படுத்த,

அவள் “என்ன ஆச்சுயா ஏன் இப்படி பதறுற…” என்று கேட்க, அவன் நடந்ததை சொன்னதும், அவனை வீல் சேரில் அமர வைத்து, தள்ளிக் கொண்டு ஜீவாவின் குடிலுக்கு செல்ல, அங்கு அவர்கள் இன்னும் வெளியில் வரவில்லை என்று அறிந்ததும்,

கார்த்தி, “உள்ள கூட்டிட்டு போ” என்றான்.

அதில் பூவரசி, “யோவ் உனக்கு மலைல இருந்து விழுந்ததுல மூளை எதுவும் கலங்கி போச்சா… உள்ள எப்படிய்யா போவ முடியும்” என்று கடுப்படிக்க,

அவன், “ஏன் இந்த வழியா தான் போகணும்…” என்றான் அறிவாளித்தனமாக.

பூவரசி தான், தலையில் அடித்துக் கொண்டு, “புருசன் பொஞ்சாதி தூங்குற இடத்துக்கு எப்படிய்யா போறது விவஸ்தை கெட்டத்தனமா பேசாத…” என்று சொல்ல,

அப்பொழுது தான் அவனுக்கும் புரிந்து, பின், “ப்ச் அவளுக்கே காய்ச்சல்ன்னு தான் அண்ணா சொன்னாங்க சோ” என்று நிறுத்த,

அவள் “சோ” என்று புருவத்தை உயர்த்திக் கேட்க, ‘பார்றா காட்டுவாசி இங்கிலிஷ் பேசுது’ என்று மனதில் நினைத்து கொண்டு, இருவரும் வாக்குவாதம் செய்து கொண்டு வெளியவே நிற்க, உள்ளிருந்து தூக்கம் கலைந்து வந்த கயல் இருவரும் வாசலில் நிற்பதை பார்த்து என்ன என்று கேட்டாள்.

பூவரசி, “அக்கா, உங்களுக்கு காச்சல் அடிச்சுச்சுன்னு சொன்னாக இப்ப பரவாயில்லையா” என்று கேட்க,

கயல் “ம்ம் இப்போ பரவாயில்லை..” என்றவள், “எனக்கு காய்ச்சல்ன்னு உங்களுக்கு எப்படி தெரியும்” என்று கேட்க, அப்பொழுதும் பூவரசி தான் கார்த்தி சொன்னதை அவளுக்கு சொன்னாள்.

கயல், “ஏன் அதை சார் சொல்லமாட்டாரோ” என்று நக்கலாக கேட்க,

கார்த்தி, “பூவரசி மூணாவது மனுஷங்க எதாவது கேட்கப்போய் அவங்க என்னை பார்த்துக்க எனக்கு தெரியும்னு சொல்லிட்டா… எதுக்கு தேவையில்லாம மத்தவங்க விஷயத்துல தலையிட்டுகிட்டு” என்று எங்கோ பார்த்து கொண்டு கூறினான்.

கயல் சிறு சிரிப்புடன், அவன் முன்னே சென்று முட்டி போட்டு அமர்ந்து, “சாரி பட்டி… நான் ஏதோ கோபத்துல அப்படி சொல்லிட்டேன். உன் அண்ணனை விட நீ தான் எனக்கு முக்கியம்.

நீ என் பெஸ்டி டா… உனக்கு என்கிட்டே பேச எல்லா உரிமையும் இருக்கு. நீ எதுவா இருந்தாலும் என்கிட்டே பேசி இருக்கலாம்ல அவரை அப்படி சொன்னதும் தான் எனக்கு கோபம் வந்துருச்சு. இனிமே உன் அண்ணாகிட்ட எதுவும் கேட்காத ஓகே வா…” என்று சொல்ல,

கார்த்தி தான், அவள் பேச்சில் உருகி, பின், “என் அண்ணனை பத்தி பேசுனா உனக்கு அவ்ளோ கோபம் வருதா கயல்… யாரோ என் அண்ணனை மட்டும் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சொன்னாங்க” என்று தலையை சாய்த்து குறும்பாக கேட்க, அதில் திணறியவள்

“அது அதுலாம் ஒன்னும் இல்ல…” என்று சிவந்த முகத்தை மறைத்து கொண்டு திரும்ப, அங்கு ஜீவா அவளை முறைத்துக் கொண்டிருப்பதை பார்த்தாள். ஆனால் அதில் எப்போதும் இருக்கும் கடுமை எல்லாம் இல்லை.

“ஏன் இப்படி முறைக்கிறாரு” என்று புரியாமல், பூவரசியை அழைத்துக்கொண்டு அங்கிருந்து தப்பித்து சென்று விட, ஜீவா கார்த்தியிடம் எதுவும் பேசாமல் அவனுக்கு தேவையானதை செய்தான்.

கார்த்தி “சாரி அண்ணா…” என்று தலையை குனிந்து கொண்டு கூற,

ஜீவா சிறிதாய் சிரித்து, அவன் கன்னத்தை தட்டி விட்டு “நைட்லாம் தூங்கிருக்க மாட்ட. இப்போ தூங்கு” என்று படுக்க வைத்து அவன் உறங்கும் வரை அருகிலேயே இருந்தான்.

கயலும் பூவரசியும் ஆற்றிற்கு சென்று நீராடி, வெளியில் வருகையில், சிக்கன்னன் பூவரசியை பிடித்து கொண்டான்.

“ஏ பூவு, இந்நேரம் நமக்கு கலுயாணம் ஆகிருந்தா நம்ம சேர்ந்து எல்லா சடங்கும் பண்ணிருக்கலாம் இப்போ கூட ஒன்னும் பிரச்சனை இல்ல வா கலியாணம் பண்ணிக்கலாம்” என்று வீம்பு செய்ய,

அவள், “ப்ச், இங்கரு ஒழுங்கா போய்டு. நான் உன்னைய கலியாணம் பண்ணிக்க மாட்டேன்னு ஏற்கனவே சொல்லிப்புட்டேன். திரும்ப திரும்ப இப்புடி வந்து உளறிக்கிட்டு இருக்காத தள்ளுய்யா…” என்று அவனை தள்ளிவிட்டு முன்னேற போக,

அதில் கோபமான சிக்கண்ணன் “என்னாலே போனா போவுதுன்னு விட்டா ரொம்பதான் பேசுற… உன்னை தொட்டுட்டா நீ என்னை தான கலியாணம் கட்டிக்கிடனும் உன்னை என்ன பண்றேன்னு பாரு” என்று அவள் தாவணியை உருவ போக, அதில் பூவரசி கடும் கோபத்தில் அவனை அடிக்க சென்றாள்.

இதனை எதிர்பார்த்தவன் அவள் கையைப் பிடித்து வளைக்க, கயலோ நடந்ததை கண்டு அதிர்ந்து சிக்கண்ணனிடம் “டேய் விடுடா அவளை… யாராவது வாங்க” என்று கத்தி அவனை பிடித்து இழுத்தாள்.

அவனோ, பூவரசியின் இரு கையையும் பலம் கொண்ட மட்டும் பிடித்து வளைத்து, கயலை அப்படியே தள்ளிவிட்டதில் அவள் அங்கிருந்த கல்லில் சென்று முட்டிக்கொண்டாள்.

அதில் அவள் நெற்றியில் இருந்து ரத்தம் வழிய, பூவரசி அவனிடம் இருந்து விடுபட போராடி, “அக்கா” என்று கத்தியவள், முட்டியை வைத்து அவன் அடிவயிற்றில் டொம்மென்று அடிக்க, அதில் சித்தம் கலங்கியவனுக்கு மேலும் அவளை பிடிக்க முடியவில்லை.

ஆனால் அவள் அசந்த நேரத்தில், அவளின் தாவணியை பிடித்து இழுத்து, அவள் சட்டையின் கை பகுதியையும் கிழித்து விட்டவன்,

” இப்படியே நீ வா… நான் உன்னை தொட்டுட்டேன்னு எல்லார்கிட்டயும் சொல்ல போறேன். உன்னோட இந்த கோலத்தை பார்த்து இப்போவே இன்னைக்கே உன்னை கலியாணம் பண்ணிவச்சுடுவாக” என்று  சொல்ல அதில் பெண்கள் இருவரும் அதிர்ந்து விட்டனர்.

தட்டுத் தடுமாறி எழுந்த கயல் அவள் போட்டிருந்த துப்பட்டாவை எடுத்து, பூவரசியிடம் கொடுக்க, அவன் அதனை வைத்து தன்னை மறைத்து கொண்டு, “ஏலேய் நீ மட்டும் அப்படி போய் சொன்ன, என் கழுத்துல பாசிமணி கட்டுறதுக்குள்ள நான் உன்  மேல பாறாங்கல்லை தூக்கி போட்டு கொன்னுப்புடுவேன்…” என்று கத்த கத்த, அவளின் தாவணியுடன் உள்ளே ஓடி சென்றவன், மீண்டும் பறந்து வந்து இரு பெண்களின் காலடியில் வந்து விழுந்தான்.

அங்கு ஜீவா கண்ணில் ரௌத்திரம் தெறிக்க, அவனை நோக்கி நடந்து வந்தவன், கயல் நெற்றியில் இருந்து இரத்தம் வழிவதை கண்டதும் பதறி,

“ஸ்வீட் ஹார்ட் என்ன ஆச்சுடா எப்படி அடி பட்டுச்சு” என்று கேட்க, அவளோ ‘இவனால் தான் என்று தெரிந்தால், ஜீவா அவனை கொலையே செய்து விடுவான்’ என்று உணர்ந்து “அது அது நானா தான் கீழ விழுந்தேன்” என்று விட,

ஜீவா, “உண்மைய சொல்லு கயல்” என்று கடுமையாக கேட்க, பூவரசி “இவன் தான் சாரு அக்காவை தள்ளிவிட்டான்” என்று சொன்னதும் தான் தாமதம், சிக்கண்ணன் அவன் கையில் சின்னா பின்னமானான்.

ஆற்றங்கரை நோக்கி, சிக்கண்ணன் சென்றதை பார்த்த ஜீவா, கயலும் பூவரசியும் இங்க தான போயிருக்காங்க எதுக்கு இவன் போறான் என்று குழம்பி விட்டு, பின், ஏதோ சரி இல்லை என்று தோன்ற வேறு வழி இல்லாமல் அவர்கள் குளிக்கும் இடம் வந்தவன், சிக்கண்ணன் கையில் தாவணியுடன் ஓடியதை கண்டதும், ஏதோ தவறாக நடந்திருக்கிறது என்று புரிந்து தான் அவனை அடித்தான். அதன் பிறகே, கயலின் காயத்தை கண்டவன் அவனின் கட்டுப்பாட்டிலேயே இல்லை.

கயலோ அவனை கொன்று விடுவாரோ என்று மிரண்டு, ஜீவாவை தடுத்து “ஜீவா விடுங்க அவனை…” என்று பிடித்து இழுக்க,

“நீ போ கயல் இவனுக்கு எவ்ளோ தைரியம் இருந்தா உன்மேல கை வச்சுருப்பான்…” என்று ஆக்ரோஷமாக அவனை அடிக்க, கயல் என்ன செய்வதென்று புரியாமல் ஜீவாவை அடக்க வழி தெரியாமல் சட்டென்று அவனை பிடித்து இறுக்கி அணைத்துக் கொண்டு,

“பிளீஸ் ஜீவா… அடிக்காதீங்க. பிளீஸ்… ” என்று சிறு குரலில் கெஞ்ச, அவன் அடிப்பதை நிறுத்தி விட்டு அப்படியே உறைந்தான்.

விழி பட்ட இடம் இன்று உளி பட்ட சிலையாக இதுதானோ காதல் என்று அறிந்தேனடி

புது பாா்வை நீ பாா்த்து புது வாா்த்தை நீ பேசி இதயத்தை இடம்மாற செய்தாயடி

மெல்லிடை கொண்டு நடைகள் போடும் அழகான பெண்ணே முப்படை கொண்டு எனை சுற்றி வளைத்தாயடி

என் உறக்கத்தை திருடி சென்று உறவாடும் பூவே உன் சிாிப்புக்குள்
சிறை வைக்கிறாய்

அட கொஞ்சம் கொஞ்சமாய் என்னை வாட்டினாய்
கொஞ்சம் கொஞ்சமாய் என்னை மாற்றினாய்

இதயத்தின் மறுபக்கம் நீ காட்டினாய்
இனி என்ன சொல்லுவேன் இன்று
நான் அமுத நஞ்சையும் உண்டு இனி ரெக்கை இன்றியே நான் போவேன்
வான் மீதிலே…💘💘💘💘💘💘

ஜீவா அவள் அணைப்பில் அனைத்தும் மொத்தமாக மறந்து மெய்யுருகி நின்றான். அதே நேரத்தில் ஒரு துப்பாக்கி முனை அவனைக் குறி பார்த்து இருப்பதை அறியாமல்…

நேசம் தொடரும்..
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
26
+1
76
+1
5
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்