Loading

🛑Disclaimer: 18+ content. Please avoid those who are not interested.🛑

அத்தியாயம் 13:

ஆரவ் அமர்ந்திருந்த நிலை கண்டு திகைத்த வான்மதி, “ஆ… ஆரவ்?” எனத் திணறலுடன் அழைத்தாள்.

அதில் தன்னிலை பெற்றவனின் இறுக்க மேனி சற்று இலகுவாக, எச்சிலை கடினப்பட்டு விழுங்கியவன், “எந்திரிச்சுட்டியா மதி? போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வா. சாப்பிட்டு ஹாஸ்பிடல் போகலாம். ம்ம்…” என மிருதுவாக கூறி விட்டு,

“சாப்பாடு ஆறி இருக்கும். நான் சூடு பண்ணி கொண்டு வரேன்.” என்றவன், முன் போலவே சாதாரணமாக இருந்தான்.

அவள் அவனிடம் இருந்து சிறு முக சுளிப்பை எதிர்பார்த்தாள் தான். தாயிடம் கூட கூறாத அந்தரங்கங்களை அல்லவா, தயக்கமேதும் இன்றி கூறி இருக்கிறாள்.

‘இதையெல்லாம் என்னிடமா கூறுவாய்?’ என்ற பார்வை கூட இல்லாமல் சென்றவனை ஒரு கணம் பார்த்து விட்டு, தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு வெளியில் வந்தாள்.

ஆரவும் இயல்பாக, “இப்போ பெயின் பரவாயில்லயா மதி?” எனக் கேட்க, “ம்ம்.” என தலையை உருட்டினாள்.

ஆனாலும், வயிற்றைப் பற்றியபடி சற்றே உடலை குறுக்கி தான் அவள் நடக்க,

“நேரா நடடி. வயிறை ரொம்ப பிரெஸ் பண்ணா இன்னும் வலிக்கும். நீ சோஃபாலேயே உட்காரு. நான் எடுத்துட்டு வரேன்.” என உத்தரவிட்டவன், தட்டில் சாப்பாடை போட்டு, அவளருகில் அமர்ந்து, அவனே ஊட்ட ஆயத்தமாகியதில்,

“நானே சாப்ட்டுக்குவேன்” என்றாள் அவள்.

“உனக்கு சாப்பிட தெரியாதுன்னு நான் சொல்லவே இல்லையே.” நக்கலாக கூறியவன், தட்டை அவளிடம் கொடுக்காது ஊட்ட, அவளுக்குத் தான் மேற்கொண்டு வாதம் செய்ய இயலவில்லை.

அவனைப் பாராமல் தலை தாழ்த்தியபடியே அவள் சாப்பிட, ஆனால், அவன் அவளை மட்டுமே பார்வை அகலாமல் பார்த்துக்கொண்டே ஊட்டினான்.

“போதும் ஆரவ். சாப்பிட முடியல.” பாதி உணவையும் உண்ண இயலாமல் அவள் முகம் சுருக்க,

“இன்னும் கொஞ்சம் சாப்டு.” என்றவன், முழுதையும் ஊட்டி விட்டு தான் எழுந்தான். அதில் வான்மதி அவனை நிமிர்ந்து முறைக்க, அவள் பார்வையில் மெல்ல புன்னகைத்தவன், “வா போலாம்.” என அவளை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றான்.

அங்கோ, சில சோதனைக்குப் பிறகு, இருவரும் மருத்துவரின் அறைக்கு செல்ல, வான்மதிக்கு தான் ஒரு மாதிரி பயமாக இருந்தது.

“எப்போ இருந்து இந்த மாதிரி இருக்கு.” என மருத்துவர் கேட்க, அவளும் கூறினாள்.

அதில் அவர், “ஆக்ச்சுவலி, இன்ஃபெக்ஷன்னால தான் உங்களுக்கு இப்படி பெயின் அதிகமா இருக்கு. இதை ‘பிஐடி’ன்னு சொல்லுவோம்.” என்றிட,

ஆரவ் உடனே, “ப்ராப்லம் எதுவும் இல்லைல டாக்டர்?” எனக் கேட்க,

“ஒன் இயரா இதை ட்ரீட் பண்ணாம வைச்சு இருக்கீங்க. டியூப்ஸ்ல எல்லாம் இன்பெக்ட் ஆகி இருக்கு. ஐ திங்க், பேபி அபார்ட் ஆகி இருக்கும் போதே இதை டாக்டர்ஸ் சொல்லி இருக்கணுமே. சொல்லலயா. அப்பவே ஆன்டி பயாடிக் எடுத்துருந்தா இவ்ளோ இன்ஃபெக்ஷன் ஆகி இருக்காதே” என்க,

வான்மதிக்கு அப்போது தான், ஏதோ ‘இன்ஃபெக்ஷன்’ என்று அப்போது மாத்திரை கொடுத்ததே  நினைவு வந்தது.

ஆனால், அவள் தான் எந்த மருந்தையும் சரியாக உட்கொள்ளவில்லையே. அதனால், இந்த வலியும் அப்படியே இருந்தது.

“நான் டேப்லட் சரியா எடுக்கல” என அவள் பாவமாக கூற, அதுக்கு மருத்துவர் பதில் கூறும் முன், “நோ இசியூஸ். இப்ப டேப் போட்டு சரி பண்ணிக்கலாம்” என்று தோளைக் குலுக்கிட, மருத்துவர் தான் அவனை ஒரு மாதிரியாக பார்த்தார்.

பின்னே, அவர் கூற வேண்டிய வசனத்தை அவன் கூறினால்?

“டியூப்ஸ்ல புண் இருக்கு மிஸஸ் வான்மதி. டேப்லட் எழுதி தரேன். 3 மந்த்ஸ் கன்டின்யூ பண்ணுங்க. இந்த ஆன்டி பயாட்டிக் – அ மறக்காம எடுத்துருங்க.” என்று அவர் மருந்தை எழுத, அதனை அவசரமாக வாங்கி கொண்டவன், வேகமாக எழுந்திருந்தான்.

ஆனால் வான்மதி, “எதுனால இந்த இன்ஃபெக்ஷன் ஆகி இருக்கு டாக்டர்?” என கேட்டு வைக்க, ஆரவ் தான் உதட்டைக் கடித்து, “மதி. பேபி அபார்ட் ஆனனால ஆகி இருக்கலாம். ரிலாக்ஸ். வா போலாம்” என அவளை கிளப்புவதில் குறியாக இருந்தான்.

‘இவரு என்ன டவுட்டு கூட கேட்க விட மாட்டுறாரு’ என்றே அவள் விழிக்க, மருத்துவருக்கோ சற்றே கோபம் வந்தது.

“இந்த இன்ஃபெக்ஷனுக்கு நிறைய ரீசன் இருக்கு வான்மதி. உங்க ஹஸ்பண்ட்க்கு இன்ஃபெக்ஷன் இருந்தா அது உங்களுக்கும் ஸ்ப்ரெட் ஆகும்.” என்றவர், ஆரவை நோக்கி, “உங்க செமன் டெஸ்ட் குடுத்துட்டு போங்க மிஸ்டர் ஆரவ். உங்களுக்கு டேப்லட் ப்ரிஸ்க்ரைப் பண்றேன்” என்றிட, அவன் “ஓகே” என்றான் வேறேதும் பேசாமல்.

வான்மதிக்கு தான் இப்போது நினைத்தாலும், குமட்டிக்கொண்டு வந்தது. ‘அந்த நாய் கண்ட இடத்துல திரிஞ்சுட்டு வந்ததுக்கு, வலி மட்டும் எனக்கா?’ என்றே ஆதங்கமும் இயலாமையும் முட்டிக்கொண்டு வர, இதில் ஆரவிடம் கேட்டதில் அவள் தான் அதிர்ந்தாள்.

“இல்ல டாக்டர்…” என அவள் மறுக்கும் போதே, “மதி கிளம்பலாம்.” என்று அவன் அதட்டலாக அழைக்க, அவள் தன்னை நொந்து வெளியில் சென்று,

“என்ன ஆரவ் நீங்க. நீங்க ஏன் டெஸ்ட் எல்லாம் குடுக்கணும்.” என்றவளுக்கு ஐயோ என்றிருந்தது.

“ரிலாக்ஸ் கண்ணம்மா. இப்ப ஏன் இவ்ளோ நெர்வஸ் ஆகுற. இட்ஸ் நார்மல்” என ஆசுவாசப்படுத்த, அவள் கண்கள் கலங்கி நின்றிருந்தாள்.

அந்நேரம், அங்கு வந்த சீஃப் டாக்டர் பரிமளா அவனை பார்த்து விட்டு, “ஹெலோ ஆரவ் எப்படி இருக்கீங்க. பையன் எப்படி இருக்கான்”  எனக் கேட்க, “ஃபைன் டாக்டர்” என்றவனிடம், “சாரி. ஒரு எமெர்ஜென்சி கேஸ் அதான் போய்ட்டேன். இவங்க…?” என வான்மதியை பார்த்தார்.

“இட்ஸ் ஓகே டாக்டர். ஷீ இஸ் மை வைஃப்.” என்றான் அவள் தோளில் கை போட்டு.

அவள் தான் லேசாக நெளிய, “குட். கங்கிரேட்ஸ்” என்றவரிடம், அவன் விஷயத்தை கூற, அவர் நொடியில் நிலையில் உள்வாங்கிக்கொண்டு,

“டோன்ட் வொரி வான்மதி. மெடிசின் கரெக்ட் – ஆ எடுங்க. சரி ஆகிடும்.” என்று விட்டு, “நீங்க கிளம்புங்க ஆரவ். டெஸ்ட் எதுவும் தேவை இல்லை” என்றார்.

அதில் இருவரும் கிளம்பி விட, காரில் செல்லும் போது, “அந்த டாக்டருக்கு உங்களை ஏற்கனவே தெரியுமா?” எனக் கேட்டாள் வான்மதி.

“ம்ம். நான் அவங்களை பார்க்க தான் கூட்டிட்டு வந்தேன். இடைல ஒரு லூசு டியூட்டி டாக்டர் வந்து தேவை இல்லாத விளக்கம் எல்லாம் குடுத்திட்டு…” என்றான் எரிச்சலாக.

பின் அவனே, “இஷு இந்த ஹாஸ்பிடல்ல தான் பிறந்தான். சோ சீஃப் டாக்டருக்கு என்னை தெரியும். இப்ப வரை அவன் அழுதா அர்த்த ராத்திரியில கூட அவங்களுக்கு கால் பண்ணி டவுட் கேட்டு இம்ச பண்ணுவேன். இந்த ஜென்மத்துல என்ன மறக்க முடியாது” என்று குறும்பு போல கூறிட அதற்கு சிறிதாக புன்னகைக்க முயன்றவள், ஜன்னல் புறம் பார்வையை திருப்பிக் கொண்டாள்.

பொங்கி எழுந்த வேதனையை மறைத்தபடி, “மதி…” என அவளை அழைத்தவன், “சரியாகிடும் மதி.” என்றான் தவிப்பாக.

அவளோ சில நொடிகளை அமைதியில் கழித்து விட்டு, கண்ணில் நீர் தேங்க “எனக்கு எய்ட்ஸ் வந்துடுமா” என மிரட்சியுடன் கேட்டதில், அவன் சரட்டென காரை நிறுத்தினான்.

கலங்கிய கண்களை அடக்கிக்கொண்டு,

“என்ன பேசுற கண்ணம்மா. நீ இவ்ளோ டீப்பா யோசிக்க இதுல ஒண்ணும் இல்ல. ஹெல்தியான ரிலேஷன்ஷிப் வச்சுக்குற கபிள்ஸ்க்கு கூட இந்த இன்பெக்ஷன் வரும் கண்ணம்மா. இட்ஸ் வெரி காமன்.” என்றதில், அவளின் ஒரு விழியில் இருந்து ஒரு துளி நீர் உருண்டோட,

“உன்ன சமாதானம் பண்ண சொல்லல. நிஜமாவே இதான் உண்மை. வேணும்ன்னா நெட்ல சர்ச் பண்ணி பாரு. இல்ல வா. அகைன் டாக்டர்ட்ட கேளு.” என அவளுக்கு புரிய வைக்க முயன்றவன், போனை எடுத்து, “இதுல பாரு.” என நீட்ட, வேணாம் என தலையசைத்தவள், கண்ணைத் துடைத்துக்கொண்டாள்.

அவனுக்குத் தான், நெஞ்சினுள் பல நெருஞ்சி முட்கள் ஒன்றாக குத்துவது போல விண்ணென்று வலி எடுக்க, ஒரு கரத்தால் அவளின் உள்ளங்கையை பற்றிக் கொண்டான்.

அவள் வெடுக்கென கையை எடுக்க வர, அவன் விடவில்லை. இறுக்கிப் பற்றிக்கொண்டான்.

“விடுங்க ஆரவ்.” என அவள் அவனைப் பாராமல் கூற,

“கொஞ்ச நேரம் என் கையை டைட்டா  பிடிச்சுட்டு, கண்ணை மூடி உட்காரு. யூ வில் பீ பெட்டர் மதி. ஜஸ்ட் ட்ரை பண்ணேன்.” கண்ணை சுருக்கி அவன் மொழிந்ததில், பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்டவள், கண்ணை மூடி அமர்ந்தாள்.

நேரம் ஆக, ஆக, அவன் பிடியின் அழுத்தம் அதிகமாக, அதற்கேற்ப அவளும் அவனின் கரத்தை இன்னும் இறுக்கினாள். மொத்த கோபத்தையும், மொத்த அழுத்தத்தையும் அந்த ஒரு கையணைப்பில் வெளிக்கொணர முயன்றாள்.

அதன் விளைவாக, இன்னும் இன்னும் அவன் கரத்தை அழுத்த, அவளின் அழுத்தம் வலி எடுக்க வைத்தாலும், அவன் கையை விலக்கவில்லை.

பெருவிரல் கொண்டு மெல்ல புறங்கையை நீவி விட்டான். ஆயிரம் வார்த்தைகள் கூறிடவில்லை தான். ஆனால், தன் ஒவ்வொரு சிறு செயலிலும் உரைத்தான், ‘விட்டுத்தள்ளு கண்ணம்மா. நெருப்பு சுட்டதா நினைச்சு, கடந்து வா. உன்னை சுட்ட நெருப்பு, உன்னை சுட்டவங்களையும் சுடும், சுட வைப்பேன்.’ என்று…

வார்த்தைகளற்ற, ஆறுதலும் தைரியமும் தான் கூற முடியுமா? இதோ இவன் கூறுகிறானே. எப்படி இந்த கதகதப்பு உயிர்வரை சென்று ஊடுருவி, உணர்வுகளை மீட்டெடுக்கிறது என்ற விந்தை புரியாதவளாய், மெல்ல மெல்ல பிடியின் அழுத்தத்தைக் குறைத்து, அங்கும் இங்கும் உருண்ட கருவிழிகளையும் மெதுவாய் திறந்தாள்.

மனதின் பாரம் இறங்கியதா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால், இப்போது இந்த நொடி, எல்லாத்தையும் கடந்து வந்தாச்சு. என்றதொரு நிம்மதி தோன்றியது. இருவரும் எதுவும் பேசவில்லை.

வீட்டை வந்தடைந்ததும், “ஏதாச்சு குடிக்கிறியா மதி?” எனக் கேட்டவனிடம் வேணாம் என தலையசைத்தவள், அவள் அறைக்கு தான் செல்லப் போனாள்.

அந்நேரம், மீண்டும் இன்டெர்காம் ஒலித்தது. செக்கியூரிட்டி தான்.

“சார். காலைல வந்தவங்க திரும்பி வந்துருக்காங்க. உங்ககிட்ட ஒரு தடவை பேசணும்ன்னு கெஞ்சுறாங்க. சமாளிக்க முடியல” என சங்கடத்துடன் கூற, அவனோ “சமாளிக்க முடியலைன்னா. வேலைய விட்டு போய்டு.” என்றான் கடுமையான குரலில்.

“அவங்க போகாம அடம்பிடிச்சா, அடிச்சு துரத்து. பின்னாடி என்ன பிரச்சனை வந்தாலும் நான் பார்த்துக்கிறேன்” என்றவனின் முகத்தில் ரௌத்திரம் மினுக்க, அதில் நின்று விட்ட வான்மதி அவனை புருவ மத்தியில் ஏற்பட்ட முடிச்சுடன் ஏறிட்டாள்.

போனை வைத்தவன், “நீ போய் ரெஸ்ட் எடு. நான் ஆபிஸ் போயிட்டு வரேன்” என அவளைப் பாராமல் கூற,

“பாவம் ஆரவ். பெரியவங்களா இருக்காங்க” என தயங்கினாள் அவள்.

” பெரிய மனுஷத்தன்மை வயசுல இல்ல வான்மதி” அவனும் கண்டிப்புடன் கூறினான்.

அதில் கையை பிசைந்தவள், “யாரு அவங்க?” எனக் கேட்க, சில நொடிகள் அமைதி காத்தவன், “மிருணாவோட பேரண்ட்ஸ்.” என்றான்.

“ஓ! ஏன் உங்களை பாக்கணும்னு சொல்றாங்க?”

அதற்கு அவன் பதில் கூறாமல் நிற்க, “ஒரு தடவை என்னன்னு கேட்கலாமே ஆரவ்.” என்றாள் அவர்களுக்கு பாவம் பார்த்து.

அவனோ அவளை கூர்மையாக ஏறிட்டு, “ஒரு தடவை அவங்களுக்கு பாவம் பார்த்தா, இஷுவை நம்மகிட்ட இருந்து பிரிச்சுடுவாங்க பரவாயில்லையா? அவன் இல்லாம என்னால இருக்க முடியாது. நீ இருந்துடுவியா?” என அழுத்தமாகக் கேட்க பெண்ணவள் அதிர்ந்து விட்டாள்.

பின் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு, “நான் ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே?” என தொடங்க, “ம்ம்” என்றான்.

“இல்ல… அது… பொதுவா பேபிக்கு 5 வயசு ஆகுற வரை அம்மாகிட்ட தான் இருக்கணும்ன்னு ரூல்ஸ் இருக்கும்ல. அப்பறம் எப்படி இஷு உங்ககிட்ட இருக்கான். உங்க வைஃப்… அது… மிருணாவும் அவனை தேடி வரவே இல்ல” எனத் திக்கி திணறி கேட்டு விட்டு, “ஆனா, இஷுவை என்னால விட்டுக்கொடுக்க முடியாது ஆரவ்.” என்றாள் கூடவே.

அவன் அமைதியுடன் ஜன்னலை வெறிக்க, அவளுக்குத் தான் ஏதோ போல் இருந்தது.

“சொல்ல கஷ்டமா இருந்தா வேணாம்…!” என்றாள் வேகமாக.

“கஷ்டம்ன்னு இல்ல. சொன்னா, உனக்கு புரியுமான்னு எனக்கு தெரியல” என இதழ்களை மடித்துக்கொண்டான்.

மறுநொடி, “நான் புருஞ்சுப்பேன் ஆரவ்.” எனத் தீர்மானமாக உரைத்தவளைக் கண்டு பெருமூச்சு விட்டவன், “அப்போ எல்லாத்தையும் சொல்லுவேன்…!” என்றான்.

“ம்ம். சொல்லுங்க” அவள் தலையசைக்க, அவளை ஆழ்ந்து பார்த்தவன், “எனக்கும் அவளுக்கும் இருந்த ஃபிஸிக்கல் ரிலேஷன்ஷிப்பையும் சேர்த்து?” எனக் கேட்டான் தலையை சாய்த்து.

“பரவாயில்ல. சொன்னா, அழுத்தம் குறையும்ன்னா சொல்லிடுங்க” என்று உடனடியாய் பதில் அளித்தவளை சற்று நிறுத்தி ஒரு நொடி வியப்பாகப் பார்த்து விட்டு, மீண்டும் எங்கோ வெறித்தான்.

நினைவுகள் சில மாதங்களுக்கு முன் நிகழ்ந்ததை வெறுப்புடன் மீட்டியது.

அவனின் அலுவலகமே பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது. ஆரவும் தான். முக்கிய ப்ராஜக்டின் இறுதி கட்ட வேலையில் அவன் மூழ்கி இருக்க, “நான் உள்ள வரலாமா?” என்ற ஒரு பெண்மணியின் குரல் கேட்டது.

அவன் மடிக்கணினியில் இருந்து பார்வையை அகற்றாமலேயே, “அதான் வந்துட்டீங்களே. அப்பறம் என்ன அத்தை கேள்வி.” என்றான் கிண்டலாக.

“நிமிர்ந்து கூட பார்க்க முடியாத மாதிரி வேலையோ?” அவனின் தந்தையின் தங்கையான வனிதா கேலியுடன் கேட்க,

அதில் விழி நிமிர்த்தி பார்த்தவன், “இன்னைக்கு என்ன காத்து இந்த பக்கம் அடிக்குது. அதுவும் சனிக்கிழமை மாமா வீட்ல இருப்பாரு. இந்த நேரத்துல உங்களை எப்படி விட்டாரு?” என யோசனையுடன் கேட்டான்.

“நீ வேற அந்த மனுஷனை ஏன் ஞாபகப்படுத்துற. அவரு இந்த சனி, ஞாயிறு வேலை விஷயமா வெளியூர் போய்ட்டாரு. ரெண்டு நாள் நிம்மதியா இருப்பேன்.” என்று ஆசுவாசமாக,

“ஓ! அதுக்கு தான் என் நிம்மதியை கெடுக்க வந்துட்டீங்களா” என்றான் குறும்பாக.

அதில் இடுப்பில் கை வைத்து முறைத்த வனிதா, “எங்க உன் நிம்மதிய கெடுக்க உனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணலாம்ன்னா நீ பிடி குடுக்க மாட்டுற.” என்று சலித்து கொண்டார்.

“சப்பா. இந்த டாபிக்க விடுங்க” என்றவன், அவர் முகம் வாடுவதைக் கண்டு, “தற்போது தாங்கள் வந்த காரணம் என்னவோ?” எனக் கன்னத்தில் கை வைத்து கேட்டான்.

அண்ணன் மகனை வெகுவாய் ரசித்தவர், “அது… எனக்கு நீ ஒரு ஹெல்ப் பண்ணனும்” என்று நெளிந்தார் வனிதா.

“அதான, சோழியன் குடுமி சும்மா ஆடுமா?” என்றவன், “என்னவாம்?” எனக் கேட்டான்.

அவரோ, “ரொம்ப கிண்டல் பண்ணாத. நான் வேற யார்கிட்ட கேட்பேன்” என்று முகத்தை தொங்க போட, “அச்சோ. ஜஸ்ட் கிட்டிங் அத்தை. என்னன்னு சொல்லுங்க.” என அவர் கன்னத்தை கிள்ளினான்.

சில காரணங்களால் படிப்பு முடியும் தருவாயில் வீட்டை விட்டு வெளியேறி விட்டவனை, அவ்வப்பொழுது வந்து பார்ப்பது வனிதா தான். ஆனால், அவனைப் பார்க்க வருவது, அவரின் கணவருக்கு சுத்தமாக பிடிக்காது.

தன் குடும்பத்தைப் பற்றி மட்டுமே மனைவி சிந்திக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். அவன் அவர்களின் வீட்டிற்கு சென்றாலும், அவனை ஏதாவது கூறி குட்டிட, அத்தோடு இருக்கும் ஒரு உறவின் வீட்டிற்கும் செல்வதை முற்றிலும் தவிர்த்து விட்டான்.

பள்ளி படிக்கும் அத்தை குழந்தைகளுக்கு மட்டும் அவ்வப்பொழுது ஏதாவது வாங்கி கொடுப்பான். ஆனால், அதற்கும் அவர் ஏதாவது கூற, அதனையும் குறைத்து விட்டான். ஆனால் வனிதாவிற்கு தான், தன் அண்ணன் மகனுக்கு நல்வாழ்வு கிடைக்க வேண்டும் என்று மனம் அடித்துக் கொள்ளும். அவனின் வாழ்வில் தானே குழி தோண்டப் போவதை அப்போது அறியவில்லை அவர்.

அவரின் கணவர் ஊரில் இல்லாத சமயம், அவர் கண்ணில் மண்ணை தூவி விட்டு மருமகனை பார்க்க வந்து விடுவார். அவனும், அவரை அழைத்துக் கொண்டு அவருக்கு பிடித்த இடமான கோவிலுக்கு அழைத்து செல்வான்.

அங்கு வெகு நேரம், கணவரை பற்றிய குறைகளை அடுக்கி விட்டு, பின் “ரொம்ப நேரம் ஆச்சு. போய் அவருக்கு சமைக்கணும். அப்பறம் பசின்னு சுருண்டுருவாரு.” எனப் பாவப்பட்டுக் கொண்டு கிளம்பி விடுவார். அவனுக்குத்தான் சிரிப்பாக இருக்கும்.

தன்னை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், அத்தையை நன்றாக பார்த்துக்கொள்கிறாரே அதுவே போதும் என்று தான் நினைப்பான்.

வனிதா, “அது வந்து… உனக்கு என் பெஸ்ட் ப்ரெண்ட் சுந்தரி தெரியும்ல?” எனக் கேட்க,

“ம்ம். ரெண்டு மூணு டைம் கோவிலுக்கு போயிருந்தப்ப பார்த்தோமே.” என்றான்.

“ம்ம் ஆமா. நாளைக்கு அவளோட பொண்ணுக்கு கல்யாணம். மண்டபம் வேற இங்க இருந்து ரொம்ப தூரம். நீ அழைச்சுட்டு போறியா?” எனக் கேட்டார் கெஞ்சலாக.

அவனோ, “அவங்களுக்கு அவ்ளோ பெரிய பொண்ணா இருக்கு. நான் பார்த்ததே இல்ல” எ யோசிக்கும் பாவனையுடன் கேட்க,

“ஆமா, அவளுக்கு சீக்கிரமே கல்யாணம் ஆகிடுச்சு. அவ பொண்ணும் ஹாஸ்டல்ல தங்கி தான் படிச்சா. இப்போ படிப்பு முடியவும் கல்யாணம் பண்றாங்க. என்னை கண்டிப்பா வர சொல்லி அடம்பிடிக்கிறா. ப்ளீஸ் ஆரவ்.” என்றிட,

“ப்ராஜக்ட் டெட்லைன் போயிட்டு இருக்கு அத்தை.” என்றான் பாவமாக.

“சரி விடு. நான் பஸ்ல போய்க்கிறேன்.” என்று அவர் முகம் சுருக்கியதைத் தாங்க இயலாதவனாய்,

“சரி வரேன். கல்யாணம் முடிஞ்சதோட கிளம்பிடணும். ஒன் அவர் தான்” என்ற நிபந்தனையோடு அழைத்து செல்ல, வனிதாவின் முகம் மலர்ந்தது.

ஞாயிறு அன்றும் வேலை இருந்ததால், நண்பர்களை தொடர சொல்லி விட்டு, அவன் மட்டும் வனிதாவை அழைத்துச் சென்றான்.

மண்டபத்திற்குள் நுழைந்து, அரை மணி நேரம் ஆகியும் திருமணம் ஏதும் நடக்காமல் போக, “அத்தை. கல்யாணம் நடக்குமா இல்லையா? எனக்கு லேட் ஆகுது” என்று அவரிடம் கிசுகிசுக்க, “என்ன ஆச்சுன்னு தெரியல ஆரவ். இரு நான் போய் சுந்தரியை பார்த்திட்டு வரேன்.” என்று உள்ளே சென்றார்.

பெண்ணின் வீடு மாப்பிள்ளை வீடு மட்டும் தான் போலும். பெரிய கூட்டம் ஒன்றும் இல்லை. அதிலும் சிலர் கிளம்பி விட, சிறிது நேரத்தில் “ஆரவ்…” என வனிதா கத்தும் சத்தம் கேட்டது.

அதில் அவன் பதறி அவர் குரல் கேட்ட திசையில் செல்ல, அங்கு சுந்தரி தான் தூக்கு மாட்டிக் கொண்டிருந்தார்.  ஆரவ் உடனே அவரைப் பிடித்து கீழே இறக்க, “விடுங்க நான் சாகுறேன்.” என்று அரற்றினார்.

அவரின் கணவர் ரங்கனும் வாயைப் பொத்தி அழுக, வனிதா தான் “உனக்கு என்ன பைத்தியமா? ஏன் இப்படி ஒரு முடிவுக்கு வந்த?” எனக் கடிந்து கொள்ள, “வேற என்ன செய்ய, ஆசை ஆசையா நடக்க இருந்த என் பொண்ணு கல்யாணம் நின்னுடுச்சு.” என்று கேவிட, அவரோ அதிர்ந்தார்.

ஆரவிற்கு, ‘ஐயோ, ப்ராஜக்ட் வேற எப்படி போகுதுன்னு தெரியல’ என்ற கவலை தான் குடைந்தது. அதான் கல்யாணம் நின்னுடுச்சுல போலாம் என அவனின் அத்தைக்கு கண் காட்ட முயல, அவர் தான் தோழியின் கண்ணீரில் கரைந்து கொண்டிருந்தாரே.

அதில் அவன் வெளியில் வந்து விட, சிறிது நேரத்தில் வனிதாவும் வெளியில் வந்தவர், “ஆரவ் நான் ஒன்னு சொன்னா கேட்பியா?” என ஆரம்பிக்க, அவன் போனை உபயோகித்தபடி என்னவென பார்த்தான்.

“நீ அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கணும்.” என குண்டை தூக்கி போட, அவனோ கடுமையாக முறைத்து,

“உங்களுக்கு என்ன பைத்தியமா அத்தை? முன்ன பின்ன தெரியாத பொண்ண எப்படி திடீர்னு கல்யாணம் பண்ண…?” என்றான்.

“எனக்கு அந்த பொண்ண நல்லா தெரியும். ரொம்ப நல்ல பொண்ணு ஆரவ். பாவம் இப்படி கல்யாணம் நின்னுடுச்சு. எப்படியும் நீ கல்யாணம் பண்ணுவ தான. அது ஏன் மிருணாவா இருக்க கூடாது. ரொம்ப அக்கறையான பொண்ணு ஆரவ்.” என அவளுக்காக பரிந்து பேச,

அவனோ, “அதுக்காக…? முதல்ல நான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு யாரு சொன்னது. முட்டாள்தனம் உளறாதீங்க அத்த.” என எரிச்சலானவனை, கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக பேசி, கெஞ்சி, மிரட்டிக் கரைத்தார்.

பொதுவாக, அவர் முகம் வாடி ஒன்றை கூறினால் மறுக்க மாட்டான். ஏனோ, சொந்த தாய் கூட, தன்னைப் பற்றி கவலைப்படாத போது, கணவரிடம் திட்டு வாங்கினால் கூட அவ்வப்பொழுது தன்னை காண வந்து அன்பை பொழியும் அத்தை மீது அவனால் என்றுமே கடுமையை காட்ட இயலாது.

அதே தான் இன்றும் நடந்தது. “என்னமோ பண்ணித்தொலைங்க. ஆனா எனக்கு சுத்தமா பிடிக்கல.” என்று காய்ந்தவன், கவினுக்கு “டேய் என்னை காப்பாத்துங்கடா.” என குறுஞ்செய்தி அனுப்பி கதறினான்.

அத்தியாயம் 14:

அதனை உள்வாங்கி, அவர்கள் வரும் முன்னே, வனிதாவின் பிடிவாதத்தால், திருமணம் அரங்கேறியது. அவனுக்கு தான் கோபமும் ஆற்றாமையும் பொங்கி வழிந்தது. ஆனால், அதனை காட்ட தான் இயலவில்லை.

நண்பர்களும் விஷயம் கேள்வி பட்டு அதிர, தன்விக் தான், “ஏன்டா நம்மளும் தான நிறைய கல்யாணத்துக்கு போறோம். நமக்குலாம் இப்படி ஆஃபர் கிடைக்க மாட்டேங்குது.” என கவினிடம் குறைபட்டு, ஆரவின் தீப்பார்வையை வாங்கிக்கொண்டான்.

பின்னே, அழகின் மறுவுருமாக இருந்த பெண்ணை, யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள்.

ஆனால், அவனால் தான் இதனை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அவளின் மீது ஈர்ப்பும் ஏற்படவில்லை. இருந்தும் என்ன செய்வது, திருமணம் செய்து விட்டானே! அவளை உதாசீனப்படுத்தவா இயலும். திருமணம் முடிந்ததும், வனிதாவை நன்றாக திட்டி விட்டு, அவளை அழைத்துக் கொண்டு தன் வீட்டிற்கு வந்தடைந்தான்.

குனிந்த தலை நிமிராமல் அவனுடன் வந்தவள், “பூஜை ரூம் எங்க இருக்கு?” என மெல்லிய குரலில் கேட்க,  “அப்படி எந்த ரூமும் இங்க இல்லையே.” என்றான் விழித்து.

அவன் எங்கே வீட்டில் இருக்கிறான். 24 மணி நேரமும் அலுவலகம் மட்டும் தான் அவனுக்கு எல்லாம். ஏதோ அவ்வப்பொழுது உறங்க மட்டுமே வீட்டிற்கு வருவான். அது கூட வேலை அதிகமாக இருக்கும் போது, அலுவலகத்தில் இருக்கும் அறையிலேயே உறங்கி விடுவான்.

பின், அவளே ஒரு சாமி படத்தை வைத்து கும்பிட்டு விட்டு, “உங்களுக்கு சாப்பிட என்ன சமைக்க?” என்று முழு மனைவியாகவே மாறி விட்டாள்.

“உனக்கு எதுக்கு ஸ்ட்ரெய்ன். நான் கடைல வாங்கிட்டு வரேன்.” என்றவனை தடுத்தவள், அவளே சமைத்து அவனுக்கு பரிமாற, “நல்ல பொண்ணு தான் போல. ரொம்ப சாப்ட் – ஆ வேற இருக்கா.” என்றெண்ணியவனுக்கு, வீட்டு சாப்பாடு எல்லாம் புதிது.

அதிலும் வந்த ஒரே நாளில், அவ்வீட்டையே அவள் வசம் ஆக்கினாள்.

‘என்னடா இவ. கொஞ்சம் கூட புது இடம்ன்னு ஆகுவார்டா ஃபீல் பண்ணாம, அவ பாட்டுக்கு இருக்கா.’ என்றெண்ணியவனுக்குமே சங்கடமாக தான் இருந்தது.

இருந்தும், அவள் செய்யும் எதையும் தடுக்கவில்லை. மாலை போல அலுவலகம் கிளம்பி விட்டவனுக்கு ஒரே நாளில் வாழ்வே தலைகீழானது போன்றதொரு உணர்வு. அவள் செய்யும் அனைத்தும் பிடித்தது தான்.

ஆனால், மனைவியாக பிடித்ததா என்றால் இல்லை என்றே கூறுவான். எதுவோ ஒன்று அவனை அவளிடம் இருந்து தள்ளி நிறுத்த, இரவில் வீட்டிற்கு சென்றவனுக்கு தலை சுற்றியது.

அவள் தான், அறை எல்லாம் அலங்காரம் செய்து முதலிரவிற்கு ஏற்பாடு செய்திருந்தாளே.

“என்ன இதெல்லாம்” என்று கேட்டதற்கு, “இன்னைக்கு நல்ல நாளாம். அம்மா தான் இதெல்லாம் பண்ண சொன்னாங்க.” என்று அடக்கமாகக் கூற, ‘நாள் நல்லா இருந்தா, ஃபீலிங்ஸ் வருமா என்ன?’ என வாய் வரை வந்த கேள்வியை விழுங்கியவன்,

“இங்க பாரு மிருணா. திடீர்னு நடந்த கல்யாணத்தை ஏத்துக்கவே எனக்கு நிறைய டைம் தேவைப்படும். உனக்கும் தேவைப்படும். முதல்ல, நம்ம இந்த லைஃபை அக்செப்ட் பண்ணிக்கலாம். தென், மத்தது எல்லாம் ஆட்டோமேட்டிக் – ஆ நடக்கும். உன்னை பத்தி எதுவுமே தெரியாம, என்னை பத்தி உனக்கு புரியவைக்காம, இதில எனக்கு இன்டெரெஸ்ட் இல்ல. ஃபீல் ஃப்ரீ ஹியர். போய் தூங்கு.” என அவளுக்காகவும் சிந்தித்து சென்றவனுக்கு, தலை வலித்தது.

மறுநாள், இங்கு நடந்ததை நண்பர்களிடம் கூற, அவர்களோ அவனை தான் திட்டினர்.

கவின், “என்னடா நீ. பாவம் அந்த பொண்ணு. இவ்ளோ ஷாக்லையும் உனக்காக எல்லாம் அரேஞ்ச் பண்ணிருக்கா. என்ஜாய் பண்றத விட்டுட்டு, லெக்ச்சர் எடுத்துட்டு வந்துருக்க” எனக் கடிந்தான்.

“எப்படிடா. எனக்கு அவ மேல எந்த ஃபீலிங்ஸ்ஸும் வரல.” எனப் பாவமாக கூறியவனைக் கண்டு தன்விக்,

“ஆனாலும் உனக்கே இதெல்லாம் ஓவரா இல்ல. என்னை பச்சையா பேச வைக்காதடா.” என்று முறைக்க, கவினும், “சரி கொஞ்சம் டைம் எடுத்துக்கோ” என்று முடித்து விட்டான்.

நாட்கள் தான் சென்றதே தவிர, அவனால் அவளுடன் ஒன்ற இயலவில்லை. எங்கே ஒன்றுவது… காலையில் எழுந்து சமைப்பாள், அவன் அலுவலகம் செல்லும் வரை, கேட்ட கேள்விக்கு பதில் கூறுவாள்.

அவளைப் பற்றி பேச்சுக் கொடுத்தாலோ, அல்லது மனம் விட்டு அவளிடம் அவனைப் பற்றி கூற எத்தனித்தாலோ, முகத்தை ‘போர் அடிக்குது’ என்பது போல வைத்துக் கொள்வாள்.

அதிலேயே அவனுக்கு வார்த்தைகள் தொண்டையில் நின்று விடும். மனைவிக்கென்று பெரிய எதிர்பார்ப்பெல்லாம் அவனுக்கு இருந்தது இல்லை தான். ஆனாலும், மனம் விட்டு உணர்வுகளைக் கொட்ட, ஒரு தோழியை அவளுள் தேடினான்.

என்னதான் ஹேமாவும், லயாவும் உற்ற தோழிகள் என்றாலும், அவர்களிடம் அவனின் உள்ளுணர்வுகளை கொட்டிட இயலாதே. அதனாலேயே மனைவியின் வடிவத்தில் ஒரு தோழியை எதிர்பார்த்தது அவன் மனம். அதனை கவினிடமும் தன்விக்கிடம் கூறினால், இவனைப் பார்த்து தலையில் தான் அடித்து கொண்டனர்.

“உனக்கு இருக்குற மாதிரி அந்த பொண்ணுக்கும் இருக்கணும்ல டா. நான் ஒரு புக்ல படிச்சேன். ஃபிஸிக்கல் ரிலேஷன்ஷிப்ல ஸ்டார்ட் ஆகுற லைஃப் கூட ரொம்ப இன்டரஸ்டிங் – ஆ இருக்குமாம்.” என்று கூறும் போதே ஹேமா அங்கு வர, அவன் வாயை மூடிக்கொண்டான்.

“என்னடா என்னை விட்டுட்டு அடிக்கடி ரகசியம் பேசுறீங்க?” என அவள் இடுப்பில் கை வைக்க, ஆரவ் தான், “ம்ம். அடுத்து என்ன ப்ராஜக்ட் எடுக்குறதுன்னு டிஸ்கஸ் பண்றோம். வெளிய போறியா” என அவளை துரத்தி விடுவான்.

“இவ வேற…” என கவின் அவளை திட்டி விட்டு, “மச்சான்… நீ ரொம்ப யோசிக்கிற. ஃபிரீயா விடுடா. ஃபீலிங்ஸ் தானா வரும்.” என்றிட, மூன்று மாத காலமும் இப்படியே சென்றது.

அவனும் அவளிடம் பேச வரும் போதெல்லாம், “எங்க அம்மா இன்னைக்கு நல்ல நாள்ன்னு சொன்னாங்க. நான் தான் உங்களை தள்ளி வைக்கிறேன்னு என்னை திட்டுறாங்க” என்று ஆரம்பிப்பாள்.

“லூசா நீ. நமக்குள்ள அவங்க எதுக்கு வர்றாங்க.” என அவன் முறைக்க,

“நீங்க வந்தா அவங்க ஏன் வரப்போறாங்க” என்று அவள் வெடுக்கென கூற, இப்போது நன்றாகவே முறைத்து வைத்தான்.

அவள் வெளிப்படையாகவே கேட்ட பிறகு, விலகிப் போனால் அவளை ஏமாற்றுவது போல் ஆகிவிடுமோ என முயன்று தன்னை நிலைப்படுத்திக் கொண்டவனும், அவளுடன் உடல்ரீதியாக ஒன்ற, அவனைப் பெரியதாக கஷ்டப்படுத்தாமல் மிருணாவே உரிமையை எடுத்துக்கொண்டாள்.

ஒரு சிலிர்ப்பு, கூடலின் போது தோன்றும் பெண்ணின் வெட்கம், ஆசையாக சிறு சிறு முத்தம், வாஞ்சையான அணைப்பு, மனம் முழுதும் பொங்கும் நேசம் இப்படி எதுவுமே இல்லாது நடந்து முடிந்தது ஒரு செயற்கை கூடல்.

அவனொன்றும் அவளை அடக்கி ஆளவேண்டும் என்று எண்ணவில்லை. ஆணிற்கு ஈடாய், பெண்ணிற்கும் இவ்விஷயத்தில் செயல்பட சுதந்திரம் இருக்க வேண்டும் என என்னும் சிந்தனைவாதி தான். ஆனால், ஏனோ அவள் அதிகமாக அவனை ‘டாமினேட்’ செய்வது போல ஒரு பிரம்மை.

‘இவளுக்கு வெட்கமே இருக்காதா…’ என்ற எண்ணமும் ஒரு ஓரத்தில் தோன்ற, நடந்து முடிந்த அவசரக்கூடல், எழுந்து பேயாட்டம் ஆடிய அவனின் உணர்வுகளை அடக்காமல் சதி செய்தது.

அதில், அவனே முதுகு காட்டி படுத்திருந்த அவளை நாட விழைய, அவளும் மறுக்காமல் செயல்பட, அவனளிக்க வரும் முத்தங்களையும் தடுத்தவள், முழு மூச்சாக ஈடுபட, அவனுக்கு உணர்வுகள் காரணமின்றி வடிந்த நிலை தான்.

ஏதோ ஒன்று மனதை அரிக்க, மறுநாள் அலுவலகம் சென்று, நண்பர்களிடம் யோசனையுடன் வாழ்க்கையை தொடங்கி விட்டதாய் கூறினான்.

அவர்களோ “வாவ்! ஹேப்பி மேரீட் லைஃப்  மச்சி.” என சந்தோஷப்பட்டார்களே தவிர, அவன் கூற வருவதை புரிந்து கொள்ளவில்லை.

அவனாலும் எதையும் கூற இயலவில்லை. என்ன இருந்தாலும் அவர்களின் அந்தரங்கத்தை நண்பர்களிடம் எப்படி கூறுவது… என தவிர்த்தவன், தன்னை புரிய வைக்க முயன்றும் அவர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை பாவம்.

கூடல் என்றாலே, மகிழ்ச்சியாக அனுபவிக்க வேண்டிய விஷயம் தானே. இதற்கு ஏன் இவன் இவ்வளவு தயங்குகிறான் என்றதே அவர்களின் எண்ணமாகவும் இருந்தது.

சரி தான். அது முழுக்க முழுக்க ஒருவரின் மீது ஒருவர் காதல் கொள்ளும் போது, அக்கூடல் ரசிக்கும் தன்மையாக தான் இருக்கும். ஆனால், இங்கு வெறும் காமம் மட்டும் அல்லவா நிறைந்தோடுகிறது.

அதன் பிறகு வந்த நாட்களும் இரவில் இதே கதை தான். பகலிலோ பெரியதாக அவனை கண்டுகொள்ளமாட்டாள். அவள் என்ன படித்திருக்கிறாள் என்று கூட அவனுக்கு தெரியாது தான். அந்த அளவே அவர்களின் பேச்சு வார்த்தை இருந்தது.

இருந்தும், பேசத் தயங்குகிறாளோ என்றெண்ணி அவனும் என்னன்னவோ செய்து பார்த்தும், அவளை மனரீதியாக ஒன்ற வைக்க இயலாது போக, ஒரே வாரத்தில் கூடலும் கசந்து தான் போனது அவனுக்கு.

சில நேரம், ஒரு முத்தம் பெற ஏக்கம் கொல்லும். மனைவி தானே என கேட்க கூட அவனை ஏதோ தடுக்கும்.  உணர்வுகளின் பெருக்கில், அவளை ஆசையாக முத்தமிட்டாலும் தட்டி விட்டு தான் செல்வாள்.

“மீசை குத்துது ஆரவ். கிஸ் பண்ணாதீங்க.” என முகத்தை சுளித்து அவள் கூற,

அவனோ அதனை கவனியாமல் மோகத்துடன், “அப்போ ஷேவ் பண்ணிடவா” என்றான்.

“ப்ச், வேணாம். எப்ப பாரு கிஸ் மட்டுமே பண்ணிக்கிட்டு…” என முணுமுணுத்து விட்டுப் போக, அத்துடன் அவன் முத்தம் கொடுப்பதையும் நிறுத்தி இருந்தான்.

ஒரு கட்டத்தில், இந்த ஃபிஸிக்கல் வாழ்க்கைக்கு அவன் பழகி இருக்க, உடல் தேவை தீர்ந்தாலும் மனதின் தேவை தீர மறுத்தது அவனுக்கு.

இந்நிலையில் தான் அவள் கருவுற்ற விஷயம் அறிந்து, அவனுக்கு அத்தனை மகிழ்ச்சி. மற்றவை மறந்து, அவளை உள்ளங்கையில் தாங்கினான்.

ஐந்து மாதம் கடந்திருக்க, அலுவலகம் சென்றவன், ஒரு முக்கிய கோப்பையை வீட்டிலேயே வைத்து விட்டதில், பாதியிலேயே வீட்டிற்கு கிளம்பினான்.

வீட்டினுள் சென்றவன், குளியலறையில் சத்தம் கேட்டதில், ‘குளிக்கிறா போல’ என எண்ணி விட்டு, அவனுக்குத் தேவையானதை எடுத்து விட்டு, மெத்தையில் அமர்ந்து அதனை சரி பார்த்துக் கொண்டிருக்க, அவனுக்கு அருகில் இருந்த அவளின் மனையாளின் போனில் விளக்கு எரிந்தது.

அதனை எதேச்சையாக பார்த்தவன், மீண்டும் கோப்பையில் கண்ணை பதித்து விட்டு, சட்டென போனை எடுத்து பார்க்க, அது லாக் ஆகி இருந்தது.

ஆனால், வாட்சப் – இல், வரும் குறுஞ்செய்தியின் அறிவிப்பு மட்டும் மேலோட்டமாக தெரிய, அதில் திவாகர் என்ற பெயரில் இருந்து, முத்த ஸ்மைலிகள் வந்திருந்ததை கண்டு ஒரு கணம் திடுக்கிட்டான்.

ஆனாலும், அவளை சந்தேகப்பட மனம் வராமல், அண்ணனா தம்பியா கூட இருக்கலாம் என மனதை தேற்றியவனுக்கோ, ‘அண்ணா, தம்பி எல்லாம் கிஸ் ஸ்மைலியா அனுப்புவாங்க.’ என்றே மனம் குடைந்தது.

அவள் வரும் அரவம் கேட்டதும், போனை மெத்தையில் கிடத்தியவன், அமைதியாக அமர, வெளியில் வந்து அவனைக் கண்டதும் அவள் முகத்தில் லேசான அதிர்ச்சி.

“என்ன இவ்ளோ சீக்கிரம் வந்துட்டீங்க?” என தடுமாறியவள், அவனுக்கு அருகில் இருந்த போனை பதற்றத்துடன் காண, அது அவன் கண்ணில் இருந்து தப்பவில்லை.

“ஃபைல் எடுக்க மறந்துட்டேன்.” என்றவன், அவளை ஆராய்ச்சிப் பார்வை பார்க்க, அவள் நகர்ந்து கொண்டே வந்து போனை கையில் எடுத்து, அவசரமாக லாக்கை எடுக்க, அதனையும் பார்த்து வைத்து கொண்டவன், யோசனையுடன் அலுவலகம் சென்றான்.

அன்று இரவு, அவள் உறங்கியதும், அவளின் போனை எடுத்து பார்த்தவனுக்கு வாந்தி தான் வரவில்லை.

திவாகர் என்றவனுடனான வாட்சப் உரையாடல் அவனைத் தீயாக கொதிக்க வைத்தது. இருப்பினும், வயிற்றில் குழந்தையுடன் இருப்பவளை அந்நேரத்தில் எழுப்பாமல், விடியும் வரை காத்திருந்தவன், விடிந்ததும் “என்னடி இது?” என போனை காட்டினான்.

அதில் மிருணா அதிர்ந்து விட, “அது… அது…” என திணறினாள்.

“சொல்லுடி. யாருடி இவன். இப்படி அசிங்கமா பேசி இருக்க. அவனும் வழிஞ்சு இருக்கான்.” என கர்ஜிக்க, அவளோ பேசாமல் நின்றாள்.

“இப்ப நீ சொல்லல. இங்கயே உன்னை கொன்னு போட்டுடுவேன். உனக்கு வெட்கமா இல்ல. கல்யாணம் ஆகி, குழந்தையை சுமக்குறன்ற அறிவு இல்ல. இப்படி எவன் கூடயோ…” என சொல்ல கூட முடியாமல் உள்ளம் கூசியது அவனுக்கு.

அதில் பொறுமை இழந்தவள், “நான் அவனை தான் லவ் பண்றேன்.” என்று சத்தமாக கூற,

“ஏய்… இதுக்கு பேரு லவ் இல்ல. அஃபேர்” என்றான் கோபத்தை அடக்கியபடி.

“கல்யாணத்துக்கு அப்பறம் பண்ணாத்தான் நீங்க சொல்ற பேரு. நான் கல்யாணத்துக்கு முன்னாடி இருந்தே இவனை தான் லவ் பண்றேன். இவன் கூட தான் போக போறேன்” என இடியை இறக்க, அவனுக்கோ ஒன்றுமே புரியவில்லை.

“லவ்வா? வாட் தி ஹெல்? நீ லவ் பண்ணுனா அவன் கூடயே போயிருக்க வேண்டியது தான. என்னை ஏன் கல்யாணம் பண்ணுன.” எனப் பல்லைக்கடிக்க,

“அவன் அப்போ தான் வெளிநாட்டுக்கு போனான். உடனே வர முடியல. வீட்ல சொன்னா ஒத்துக்கல. அதான் இப்போதைக்கு பண்ணிக்கிட்டேன்.” என்றவளின் மீது ஆத்திரம் பெருகியது.

“சரி கல்யாணம் பண்ணி தொலைச்சுட்ட. அப்பறம் ஏண்டி என்கூட படுத்த?” உட்சபட்ச சினத்தில் உறும,

“என்னை வேற என்ன பண்ண சொல்ற? என் லவ்வ என் அம்மாட்ட சொன்னா ஒத்துக்கவே இல்ல. என் தாத்தா வேற லூசுத்தனமா, நான் கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கிட்டா தான், சொத்தை எங்க பேர்ல தருவேன்னு உயில் எழுதி வைச்சு இருக்காரு. அதனால எங்க வீட்ல அவசர அவசரமா மாப்பிள்ளை பார்த்தாங்க.

திவாகர்னாளையும் உடனே வர முடியல.  அந்த நேரத்துல மாப்பிள்ளைக்காரனும் ஓடிப்போயிட்டான்.

அதான் எங்க அம்மா உங்க அத்தையை கரைச்சு, உன்னை கல்யாணம் பண்ணிக்க வைச்சாங்க. இதுல, உன் கூட வாழு வாழுன்னு ஒரே இம்ச. என் அம்மா, அப்பாக்கு சொத்து வேணும். எனக்கு சொத்தும் வேணும் அவனும் வேணும். அதான் உன் கூட படுத்தேன்.” என்றவளைக் கண்டு சிலையாகி நின்றான்.

“அதுக்கு ஏண்டி என் பீலிங்ஸ் ஓட விளையாண்ட. அவன் வரவரைக்கும் வெய்ட் பண்ணி, அவன் கூட போய் தொலைஞ்சுருக்கலாமே” எனக் கேட்கும் போதே அவன் குரலில் ஏமாற்றத்தினால் சுதி குறைந்திருந்தது.

“நான் தான் சொல்றேனே. எங்க அம்மா என்னை இம்ச பண்ணுச்சுன்னு. அதான் அவன் தொடுறதா நினைச்சு, உன் கூட வாழ்ந்தேன்.” என வஞ்சகம் இன்றி கூற, அவனுக்கு தான் மொத்தமாக இதயம் சுக்கு நூறாக உடைந்தது.

அதிலும் எவனையோ நினைத்து, தன்னிடம் இணைந்து இருக்கிறாள் என்ற நினைவே அவனுக்கு உடலெல்லாம் எரிய வைத்தது. கூடவே, அவளின் தாய், தந்தை மீது கடும் வெறுப்பே வந்தது.

அவளோ மேலும், “நீ ஒழுங்கா கல்யாணம் ஆன அப்பவே, என்ன தொட்டுருந்தா. அப்பவே மாசமாகி இருப்பேன். இந்நேரம், குழந்தையே பிறந்து சொத்தும் கைல வந்து இருக்கும். இப்ப உன்னால அதுவும் லேட் ஆகுது. நான் இங்க இருந்து போறதும் லேட் ஆகுது.

ஆம்பள தான நீ. ஒரு பொண்ணு நானே கூப்புடுறேன். உனக்கு என்ன வலிக்குது. இப்ப கூட உனக்கு எந்த லாஸும் இல்ல. நீ நல்லா ஜாலியா தான இருந்த. எனக்கு தான், தினமும் உன்கூட ஒரே ரோதனை. இதுல, நானே எல்லாமே பண்ணனும்” என தலையில் அடித்துக் கொண்டவள் பார பட்சமே பாராமல் அவனைக் குத்திக் கிழித்தாள்.

அவன் ஒன்றுமே பேசவில்லை. பார்வை மட்டும் எங்கோ வெறித்திருக்க, அவளை அடிக்கக் கூட தொட கூசியது. வெகு நேரம் பிரம்மை பிடித்தவன் போல, அவள் பேசிய வார்த்தைகளில் இருந்து வெளிவர இயலாமல் நொறுங்கி இருந்தான்.

“ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு. கல்யாணத்துக்கு முன்னாடியே அவன் கூட படுத்தியா?”

அவள் தயங்காமல், “ஆமா…” என பதிலளிக்க, இன்னுமாக உள்ளுக்குள் துடித்தான்.

முதன் முறை அவளுடன் கூடும் போதே தெரியும் அவள் கன்னிப்பெண் இல்லை என. அப்போதே, “நீ அதெலெட் – ஆ?” எனக் கேட்டிருந்தான்.

அவளும் அதற்கு மையமாக தலையாட்டி வைக்க, விளையாட்டில் ஈடுபடும் பெண்களுக்கு கன்னித்திரை கிழிசல் ஏற்படுவது சகஜம் என அறிந்தவன், அதனைப் பற்றி அதன் பிறகு பேசவில்லை. அந்த அளவு அவன் வக்கிரமானவனும் இல்லையே. அது தானே மிருணாவிற்கும் வசதியாகிப் போயிற்று.

அவளை காதலிக்கவில்லை தான். ஆனால் தன் மனைவி, தன்னுடன் கலந்தவள் என்ற பாசமும் உரிமையும் நிறைய வளர்ந்திருந்தது அவள் மீது.

இப்போதோ அவன் மனது வெறுமையுடன், இறுக்கத்துடன் சிதைந்திருக்க, “நீ எங்க வேணாலும் போ. ஆனா எனக்கு என் குழந்தை வேணும்” என்றான்.

“நானே பிறந்ததும் என் அம்மாகிட்ட தான் விட்டுட்டு போக போறேன்.” என்று அவள் அசட்டையாகக் கூற,

“இது என் குழந்தை. எனக்கு மட்டும் சொந்தமான குழந்தை. இதுல உனக்கும் உன் குடும்பத்துக்கும் துளி கூட சம்பந்தம் கிடையாது” என்றவனின் விழிகள் சிவந்து நிற்க, அவன் அவளை பார்த்த விதமே அவளுக்கு சற்று மிரட்சியை கொடுத்தது தான்.

ஏதோ அவளிடம் கோபத்தை காட்டாமல் இருப்பதால், அவளும் தைரியமாக பேசி விட்டாள். இப்போது கூட, அவள் குழந்தையுடன் இருப்பதால் மட்டுமே தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறான். இல்லையென்றால் இந்நேரம் அங்கேயே அவளை கொன்றிருப்பான்.

சொன்னதோடு நில்லாமல், விவாகரத்து பத்திரத்திலும், குழந்தைக்கும் அவளுக்கும் சம்பந்தம் இல்லை. அவள் அவனின் குழந்தைக்கு வாடகைத் தாய் மட்டுமே. என்பது போல அவன் தயாரித்த பத்திரத்திலும் கையெழுத்திட வைத்தான். 

கூடவே, “இங்க பாரு. குழந்தை பிறந்த அடுத்த நாள், நீ என் கண்ணு முன்னாடி இருக்க கூடாது. இருந்த, செத்துருவ.” என நெற்றி நரம்புகள் புடைக்க மிரட்டியவன், சொன்னது போன்று, இஷாந்தை தன் கையில் பெற்றுக்கொண்டு, அவளை விட்டு விட்டான்.

மிருணாவின் பெற்றோர் தான், அவளை எப்படி அனுப்பலாம் என சண்டையிட, அவனோ பத்திரத்தைக் காட்டி,

“உங்க பொண்ணு ஓடிப்போய்ட்டா. வேணும்னா போய் பிடிச்சு, வேற ஏதாவது இளிச்சவாயனுக்கு கல்யாணம் பண்ணி குடுங்க. உங்க வயசுக்கு மரியாத குடுத்து அமைதியா இருக்கேன். ஒழுங்கா போயிருங்க.” என்றான் மிரட்டலாக.

“நீ ஒழுங்கா அவளை வைச்சு வாழாம, இப்ப என் பொண்ண தப்பு சொல்றியா?” என சுந்தரி எகிற, ஓங்கி ஒரு அறை கொடுத்தான். அதில் சர்வமும் அடங்கி விட்டது அவருக்கு.

இன்றளவும், நண்பர்களிடம் கூட  இதனைப் பகிரவில்லை. சொன்னாலும், தன்னை எந்த அளவு புரிந்து கொள்வார்கள் என்று அவனுக்கு தெரியாது. அதே நேரம், தன் மனைவி இன்னொருவனுடன் ஓடி விட்டால் என்று சொல்ல அவமானமாக இருந்தது.

கண்ணில் நீர் இறுகி நிற்க, இன்னும் அவன் பார்வை ஜன்னலைத் தான் வெறித்திருந்தது.

“அசிங்கமா இருக்கு மதி. அவளை தொட்ட கையை எரிக்கிற அளவு அருவருப்பா இருக்கு. அட்லீஸ்ட் என்கூட இருந்த நேரமாச்சு, எனக்கு உண்மையா இருந்து இருக்கலாம்ல. ஆனா, அவள் எவனையோ நினைச்சு என் கூட… ரொம்ப வலிக்குது கண்ணம்மா.

இதை வெளில சொன்னா கூட, அவள் எப்படி போனா என்ன இருந்த வரை அவளை அனுபவிச்ச தானன்னு சாதாரணமா சொல்லிட்டு போய்டுவாங்க.

ஆனா… ஆனா… என்னால முடியல. அனுபவிக்கணும்ன்னா, நான் கல்யாணம் பண்ணி தான் அனுபவிக்கணும்ன்னு இல்லையே. வெறும் உடம்பு சுகம் தான் வேணும்னா, நான் எவள்கிட்ட வேணாலும் போய் இருக்கலாமே. ஆனா உடம்பு எரியுது கண்ணம்மா. ஃபீல் லைக் ஐ வாஸ் ரேப்ட்!” என தலையில் கை வைத்து, முடியை இறுக்கமாக பற்றிகொண்டவனின் குரல் உடைந்திருக்க, வான்மதி சிலையாகி அமர்ந்திருந்தாள்.

ஆணுக்குள்ளும் பெண்ணின் மென்னுணர்வுகள் இருக்கும் என்று அறிந்தவள் தான். ஆனால், இவனோ மென்னுணர்வுகளின் மொத்த உருவாக அல்லவா இருக்கிறான்…

நெஞ்சம் வலித்தது அவளுக்கு. கண்ணிமைக்காமல் அவனையே பார்த்ததில், கண்கள் சிவந்து நின்றது. அவனின் கரங்களை பிடித்து ஆறுதல் கூற எண்ண, ஆனால், கரங்கள் என்ன, உடலில் உள்ள சிறு அணு கூட அசைய மறுத்தது அவளுக்கு. அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் தன்னை பார்ப்பதை உணர்ந்து கொண்டவன், அவளை நிமிர்ந்து பாராமல்,” என்னை பார்த்தா உனக்கும் பைத்தியக்காரன் மாதிரி தான் இருக்கா கண்ணம்மா?” எனக் கேட்டான். கேட்கும் போதே, அவனின் விழியில் இருந்து வழிந்த கண்ணீர் துளி ஒன்று தரையில் விழுந்தது.

மறுநொடி, வான்மதி கையை நீட்டினாள்.

“என் கையை பிடிச்சுக்கோங்க. யூ வில் பீ பெட்டர்.” என அவனைப் போலவே கமறலுடன் கூற,

சட்டென அவளின் ஒரு கரத்தை, இரு உள்ளங்கைக்குள் புதைத்து, நெற்றியில் வைத்து அழுத்திக் கொண்டான் ஆரவ் முகிலன்.

தேன் தூவும்!
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
55
+1
217
+1
7
+1
15

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments

    1. நந்தினி கணேஷ்

      No words to say sagi❤️❤️❤️❤️❤️ aangalukum Ipadi feelings irukkum nu soldra vanga romba kammi.eppovum ponnungala pathi mattumey inga pesa rom but aangalum ipadi thaan nu solla maranthu tom la😢😢😢😢😢
      I love u sagi ❤️❤️❤️❤️❤️❤️ love u . Aarav avan life la ipadi oru kastatha anubavichu irupaan nu yosika mudiyala😢
      Friends matrum illa vera yaaralayum ipadi patta feelings ah kandippa purinju la mudiyathu thaan nammala unmaiya nesikara vanga la thavara
      Mathi and aarav ku avanga patta kastathuku kandippa oruthar ku oruthar kandippa aaruthal ah iruppanga illa ya
      Intha epi padikum pothu seriously enaku lam alugai thaan varuthu 😥😥😥😥😥😥

    2. priyakutty.sw6

      Che…ponnaa adhu…😡😡

      Pavam Aarav…☹️☹️🥺🥺

      Rendu peeum life la evlo kashtapatrukanga… Ineyaachum neenga happy ah irunga…🥰