ஜீவன் 13
தன் வாழ்க்கையை எண்ணி இரவெல்லாம் தூங்காமல் கலங்கிக் கொண்டிருந்தாள் அகல்யா. வேண்டாத எண்ணங்களும் அவனின் முன்னாள் திருமண வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்ற குழப்பமும் அவளுக்குள் விஸ்வரூபம் எடுக்க, தன்னை தணித்துக் கொள்ள அறையை விட்டு ஓடினாள்.
நிம்மதியை தேடிய மனது நேற்று மாமியார் காட்டிய இடத்தில் நின்றது. இயற்கை சூழல் தன் மனதை மாற்றும் என்ற நம்பிக்கையோடு அங்கு அமர சென்றவள் இன்னும் பரிதவித்துப் போனாள் தயாளன் அமர்ந்திருப்பதை பார்த்து. அப்படியே திரும்பிச் செல்லலாம் என்று நினைத்தவள் மாமனாரின் கசந்த முகத்தால் அருகில் நகர்ந்தாள்.
மருமகளை பார்த்ததும் கண்களை துடைத்துக்கொண்டவர் எதுவும் நடக்காதது போல் பேச்சு கொடுக்க, “கேட்கிறேன்னு தப்பா நினைக்காதீங்க. இப்படி மூணு பேரும் தனித்தனியா உட்கார்ந்து அழுற அளவுக்கு அப்படி என்ன நடந்துச்சுன்னு நான் தெரிஞ்சுக்கலாமா.” என்றாள்.
‘இதைக் கேட்டு நீ என்ன செய்யப் போற?’ என்று மனம் கேள்வி கேட்க, அதற்கான பதில் இல்லை அவளிடம்.
என்றாக இருந்தாலும் இவை அவளுக்கு தெரிந்தாக வேண்டிய ஒன்று என்பதால் பக்கத்தில் அமரும்படி சைகை செய்தார் மாமனார். கடந்த காலத்தை விவரிக்கப் போகிறார் என்பதை அறிந்து கொண்டவள் மனம் பதை பதைத்தது. கணவனின் குழந்தை பருவத்தையும் வளர்பருவத்தையும் கேட்டு ஒரு மனைவி ஆனந்தம் கொள்வாள். இங்கு அதற்கு மாறாக அவனின் கல்யாண வாழ்க்கையை கேட்க வேண்டிய சூழ்நிலை அகல்யாவிற்கு.
எதற்கு இந்த நிலைமை என்று வேதனை கொண்டவள் கேட்க ஆரம்பிக்க, “தரணி அப்பதான் முதல் தடவையா அவனோட காதல் விஷயத்தை எங்க கிட்ட சொன்னான். உண்மையாவே நாங்க ரெண்டு பேரும் ரொம்ப சந்தோஷப்பட்டோம். ஆனா, அதெல்லாம் அஞ்சு நிமிஷம் கூட நிலைக்கல அவன் யாரை லவ் பண்றான்னு தெரிஞ்சதுக்கு அப்புறம். முடிவா அந்த பொண்ண வேணாம்னு சொல்லிட்டோம். அப்போதைக்கு என் மகன் எதுவும் பேசல. எங்களுக்காக எல்லாத்தையும் விட்டுக் கொடுப்பான்னு நம்பி நாங்களும் அத்தோட அந்த பேச்சை எடுக்கல.” என்றவர் பேச்சை நிறுத்தி நினைவுகளை தொடர்ந்தார்.
பெற்றோர்களிடம் விஷயத்தை சொன்னவன் அவர்கள் மறுத்த விஷயத்தை காதலியிடம் சொன்னான். ஊருக்கு திரும்பியவள் உடனே சென்னை வந்து நின்றாள். நின்ற கையோடு உடனே திருமணம் செய்ய வேண்டும் என்று நிர்பந்தித்தாள் அவனை. பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும் வரை பொறுமை காக்க அறிவுரை கூறியும் சிவானி அமைதியாக இல்லை.
அவளைத் தங்க வைக்க ஹாஸ்டல் பார்த்தான். அவளோ எங்கும் செல்ல மாட்டேன் என்று தரணீஸ்வரனின் கையைப் பிடித்துக் கொண்டாள். வேறு வழியில்லாமல் நண்பனை தொடர்பு கொண்டவன் அவன் வீட்டில் காதலியை தங்க வைத்தான்.
ஒரு வாரம் அமைதியாக இருந்தவள் மீண்டும் திருமண பேச்சை எடுத்து விட்டாள். போதாக்குறைக்கு அவளின் பெற்றோர்களும் விடாமல் துரத்தி வர,
“எனக்கு பயமா இருக்கு. எங்க நீ உன்னோட அம்மா அப்பா பேச்சை கேட்டு என்னை கழட்டி விட்டுடுவியோன்னு. அப்படி ஒரு முடிவ நீ எடுத்தா சாகுற முடிவ நான் எடுத்துடுவேன்.” என அழுது ஆர்ப்பாட்டம் செய்தாள்.
“கொஞ்சம் டைம் கொடு சிவா. வேணும்னா உன் அம்மா அப்பா கிட்ட நான் வந்து பேசுறேன்.”
“அவங்க எனக்கு அப்பவே கல்யாணம் பண்ற ஐடியால இருந்தாங்க. உன்னை காதலிச்சதால ரெண்டு வருஷம் அதை எப்படியோ தள்ளி போட்டுட்டேன். இனிமேலும் அவங்க கிட்ட டைம் கேட்க முடியாது தரணி.
உங்க வீட்ல ஓகே சொல்லிட்டா ரெண்டு பேரும் உரிமையா அவங்க முன்னாடி போய் நிக்கலாம். தினமும் போன் பண்ணி எங்க இருக்கன்னு கேட்டு அழுறாங்க. வாய்க்கு வந்த பொய்ய சொல்லி தப்பிச்சிட்டு இருக்கேன்.”
“எனக்கு ஒரு வாரம் மட்டும் டைம் கொடு எப்படியாது எங்க அம்மா அப்பா சம்மதத்தை வாங்குறேன்.” என்றவன் பெற்றோர்களிடம் மீண்டும் பேசினான்.
தயாளன் ஒரு கட்டத்திற்கு மேல் இறங்கி வந்து விட்டார் மகனுக்காக. ஆனால், ஆதிலட்சுமி முடிவாக மறுத்துவிட்டார். அன்னையிடம் முதல் முறையாக சண்டையிட்டான் மகன். இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு ஒரு வார காலங்கள் பேசாமல் இருந்தார்கள்.
அந்த ஒரு வார காலத்தில் சிவானி நன்றாக திருமண ஆசைகளை விதைத்து விட்டாள். நிச்சயம் அவனின் பெற்றோர்கள் சம்மதிக்க மாட்டார்கள் என்பதால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டாள். அந்த ஒரு வாரத்தில் இரண்டு நாட்கள் அவளோடு தங்கினான்.
“தரணி நீ என்னோட இருக்கும்போது எப்படி இருக்கு தெரியுமா. இதே மாதிரி நம்ம ரெண்டு பேரும் ஒன்னா இருந்தா எவ்ளோ சந்தோஷமா இருக்கும். அந்த சந்தோஷத்தை அனுபவிக்க தான் கல்யாணம் பண்ணிக்கோன்னு கெஞ்சுறேன்.” அவனை கட்டிப்பிடித்துப் பேசினாள்.
காதலியின் பேச்சு இனித்தது. தனக்காக ஒரு பெண் இவ்வளவு தூரம் போராடுகிறாள் என்பதை எண்ணி மனதுக்குள் பறந்தான். போதாக்குறைக்கு அவளின் செவ்விதழ் விடாமல் அவன் கன்னத்தை உரசி கொண்டிருக்க,
“எனக்கு மட்டும் ஆசை இல்லையா சிவா. அம்மா அப்பா ஓகே சொல்லிட்டா அடுத்த நாள் கூட கல்யாணத்தை வச்சுக்கலாம். உன்னை இந்த மாதிரி பக்கத்துல வச்சிட்டு நல்ல பையனா நடிக்கிறது எவ்ளோ கஷ்டமா தெரியுமா” என்றவன் பத்து விரல்களும் அவள் மேனியில் விளையாடியது.
கன்னத்தில் இதழ் பதித்தவள், “உன்னை யாரு குட் பாயா இருக்க சொல்றது தரணி. நான் உனக்கானவ…” என்று இன்னும் ஒரு இதழ் ஒத்தடம் கொடுக்க, பதில் முத்தங்களை இடம் மாற்றினான்.
அவன் கட்டுப்பாடோடு நின்றுக்கொள்ள சிவானி காதலனின் உணர்வுகளை வெளிப்படுத்த வைத்தாள் இதழோடு இதழ் சேர்த்து. மறுநாள் காலை தான் வீட்டிற்கு சென்றான். இரவெல்லாம் மகன் வராததால் தொடர்ந்து அழைத்துக் கொண்டிருந்தார் ஆதிலட்சுமி. காதலியோடு பொழுதை கழித்தவன் தொடர்பு எல்லைக்கு வெளியில் வைத்திருந்தான் கைபேசியை.
“ராத்திரி எல்லாம் எங்க இருந்த தரணி?” என்ற அன்னையின் முகம் பார்க்க தடுமாறினான்.
பதில் சொல்லாமல் தலை குனிந்து நிற்கும் மகனிடம் தயாளனும் கேட்க, “ஃப்ரெண்ட் பர்த்டே பார்ட்டிக்கு போய்ட்டேன் அப்பா.” வாய்க்கூச பொய் சொன்னான்.
“எந்த ப்ரெண்ட்?”
உடனே பெயர் வாயில் வராததால் ஏதோ ஒரு பெயரை சொல்லி மாட்டிக் கொண்டான் அன்னையிடம். “அப்படி ஒரு ப்ரெண்ட் உனக்கு இருக்குறதா நியாபகம் இல்லையே.” என்ற அன்னைக்கு,
“அவன் புது ப்ரெண்ட் ம்மா.” என்றான்.
“சரி, போனது தான் போன எங்க கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு போகலாம்ல.”
“திடீர்னு கூப்பிட்டதால சொல்ல மறந்துட்டேன் அப்பா.” என்ற மகனின் பேச்சில் தம்பதிகளுக்கு பொய் என்பது புலப்பட்டது.
“பார்த்து தரணி… வருங்காலத்துல எங்களை மறந்துட போற.” என்ற ஆதிலட்சுமி திட்ட வரும் கணவனை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றார் விட்டார்.
பொய் சொல்லிய வருத்தத்தில் அன்று அலுவலகம் கூட செல்லாமல் அறையிலேயே இருந்தான். மகன் மீது கோபம் இருந்தாலும் அதையெல்லாம் காட்டிக் கொள்ளாத ஆதிலட்சுமி மூன்று வேளையும் சாப்பாடு ஊட்டி விட்டார். அன்னையின் அன்பில் மனம் நிறைந்தவன் காதலியை ஓரம் வைத்தான்.
அவளுக்கு அது தெரிந்து விட்டதோ என்னவோ அலைபேசியில் அழைப்பு விடுத்து, “தரணி இன்னைக்கு ராத்திரியும் என்கூட இருக்கியா.” என கொஞ்சலாக கேட்டாள்.
பெற்றோர்களை மனதில் வைத்து, “இல்ல சிவா என்னால இருக்க முடியாது. என்னோட அம்மா கிட்ட இதுவரைக்கும் பொய் சொன்னதே இல்லை. காலைல வாய்க்கு வந்த பொய்ய சொல்லி ரொம்ப சங்கடமா போயிடுச்சு.” என்று மறுத்தான்.
காதலன் வார்த்தை கோபத்தை கொடுத்தாலும் காட்டிக் கொள்ளாமல், “உனக்காக தான என் வீட்டை விட்டுட்டு இங்க வந்து இருக்கேன். கல்யாணமும் பண்ண மாட்ற பார்க்கவும் வர மாட்ற. உண்மையா என்னை காதலிச்சு இருந்தா இப்படி எல்லாம் பேசுவியா.” என்றாள் அழுகையோடு.
முடிந்தவரை அழுகையை நிறுத்தினான் சமாதானப்படுத்தி. நேரங்கள் சில கடக்க, அவர்களுக்குள் பேச்சு இனிக்க ஆரம்பித்தது. கொஞ்சி பேச துவங்கினார்கள். காதலித்த இனிமையான தருணங்களை மீண்டும் அலசினார்கள்.
காதல் வார்த்தைகள் மாற்றத்தை கொடுக்க கைபேசியில் முத்தங்கள் பரிமாறப்பட்டது. புதுவித உணர்வுகள் இருவரையும் ஆட்கொள்ள, “இன்னைக்கு என் கூட இரு தரணி. நேத்து மாதிரி நம்ம ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கலாம்.” என்றாள்.
ஒரு நாள் இரவெல்லாம் காதலியோடு இருந்த மயக்கம் மறுநாளும் இருக்க கேட்டது. இந்த முறை செல்லும்பொழுது ஒரு காரணத்தை சொல்லிவிட்டு சென்றிருந்தான். மகனின் நடவடிக்கையை கண்டு சந்தேகம் சூழ்ந்தது பெற்றோருக்கு. அடுத்த ஐந்து நாட்கள் எப்போதும் போல் அலுவலகம் சென்று கொண்டிருந்தவன் ஆறாம் நாள் மீண்டும் இரவு வீடு தங்க வில்லை.
விடிந்து வந்த மகனிடம் சண்டையிட்டார் ஆதிலட்சுமி. அனைத்திற்கும் துணை நிற்கும் அன்னை காதலுக்கு எதிராக நிற்பதாக மெல்ல உணர ஆரம்பித்தான். அதன் பலனாய் பேச்சுக்களும் அவரிடம் முரண்பாடாய் வந்தது.
அடிக்கடி இரவில் அவளோடு தங்க ஆரம்பித்தான். வாக்குவாதங்களும் வீட்டில் வளர்ந்து கொண்டே சென்றது. ஒரு பக்கம் காதலியின் பேச்சுக்கள் மதி மயக்கி கொண்டிருந்தது. மகன் எங்கு செல்கிறான் என்பதை அறிந்த ஆதிலட்சுமி,
“அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்க நான் என்னைக்கும் சம்மதிக்க மாட்டேன். ஒரு நல்ல பொண்ணு இந்த மாதிரி ஒரு வேலைய பார்க்க மாட்டா. அவளை மறந்துட்டு என் மகனா இங்க இருக்கிறதா இருந்தா இரு.” என்று விட்டார் முடிவாக.
பல வருடங்களாக காதலிக்கும் வருங்கால மனைவியை அன்னை முறை தவறி பேச, “அவ எவ்ளோ நல்ல பொண்ணுன்னு காதலிக்கிற எனக்கு தெரிஞ்சா போதும். அவளைத் தவிர வேற யாரையும் நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.” என முழுவதுமாக பெற்றோர்களுக்கு எதிராக நின்றான் தரணீஸ்வரன்.
மருமகளுக்கு மகனின் கதையை சொல்லிக் கொண்டிருந்தவர் இடைவெளி விட்டார். அவள் இடைவெளி கொடுக்க விரும்பாமல், “அப்புறம் என்ன ஆச்சு?” என பதைக்க கேட்டாள்.
“அடிக்கடி அந்த பொண்ண வைச்சு அம்மாவும் மகனும் நிறைய சண்டை போட்டாங்க. கோபத்துல எங்களை முழுசா வேணாம்னு சொல்லிட்டு கிளம்பிட்டான். மனசு கேட்காம அவனை தேடி போனோம். அப்போ தான் என் மகன் கல்யாணம் பண்ணிக்கிட்ட விஷயமே எங்களுக்கு தெரியும். அன்னைக்கு மனசு நொந்து அழுக ஆரம்பிச்சது தான் இன்ன வரைக்கும் நிறுத்த முடியல.” என்றவர் கண்களில் நீர் மெல்ல உருவெடுப்பதை உணர முடிந்தது அவளால்.
ஜீவன் 14
“மாமனாரும் மருமகளும் என்ன இவ்ளோ காலையில மீட்டிங் போட்டு இருக்கீங்க.”
குரல் வந்த திசையில் பேசிக் கொண்டிருந்த தயாளன் திரும்ப, ஆதிலட்சுமி நின்றிருந்தார்.
மகனின் கடந்த காலங்களை சொல்ல ஆரம்பித்தவர் நன்றாக விடிந்து விட்டது என்பதை கூட கவனிக்கவில்லை. மருமகளும் ஆர்வத்தில் இருந்ததால் கவனிக்க தவற, இருவரின் பேச்சுக்களையும் நிறுத்தினார் அவர்.
மகனை நினைத்து நேற்று இரவெல்லாம் அழுது கொண்டிருந்த மனைவியை இன்னும் துயரப்படுத்த விரும்பாதவர், “சீரியஸா ஒன்னும் இல்ல ஆதி. உன் மருமகளோட குழந்தை பருவத்தை பத்தி பேசிட்டு இருந்தோம்.” என்றார்.
“அப்படியா!” என்றவர் மருமகள் பக்கத்தில் அமர்ந்துக் கொண்டு, “அது என்ன மாமனாருக்கு மட்டும் ஸ்பெஷலா சொல்லிட்டு இருக்க. என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியுது. எங்க இருந்து ஆரம்பிச்சீங்களோ அதை திரும்பவும் ஆரம்பிங்க நானும் கேட்கிறேன்.” என்றார் ஆதிலட்சுமி.
அகல்யாவிற்கு தயாளன் பேச்சு புரியவில்லை. அதனால் அத்தைக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் மாமனாரின் முகத்தை பார்க்க, ஏதோ சைகை செய்தார் மனைவி அறியாமல். ஓரளவிற்கு புரிந்து கொண்டவள்,
“கதை பேசி நாங்க ரெண்டு பேரும் ரொம்ப டயர்ட் ஆகிட்டோம். நாளைக்கு இதே நேரத்துக்கு கரெக்ட்டா வந்துடுங்க பேசலாம்.” என்றிட, கோபம் இல்லாவிட்டாலும் கோபத்தோடு பார்ப்பது போல் முறைத்தார் மருமகளை.
மூவரும் காலை சூரியனை புன்னகை முகமாக வரவேற்றார்கள். பெரியவர்களோடு சற்று இயல்பாக பேச ஆரம்பித்து விட்டாள் அகல்யா. பேச்சுக்கள் பழையது புதியது என்று தரணீஸ்வரன் பக்கம் வந்தது. மகன் பெயர் அடிபட்டதும் வருத்தத்தை காட்ட ஆரம்பித்தார் ஆதிலட்சுமி. தயாளன் தோள்களை தட்டி சமாதானப்படுத்தினார்.
“என்னடா இது கல்யாணம் பண்ணிட்டு வந்த மூணு நாள்ல இந்த வீட்ல இவ்ளோ நடக்குதுன்னு உனக்கு குழப்பமா இருக்கலாம். ஆனா, இந்த குழப்பம் எல்லாத்தையும் நீ மட்டும் தான் சரி பண்ண முடியும். புருஷனா பார்க்க வேணாம். உன் பக்கத்துல இந்த மாதிரி யாராது ஒரு அம்மா பையன் கஷ்டத்துல இருந்தா நீ என்ன பண்ணுவியோ அதை பண்ணு. எனக்கு நம்பிக்கை இருக்கு என் மகன் நிச்சயம் மாறுவான். அந்த மாற்றம் உன்னால தான் நடக்கும்.” என்றவர் மருமகளின் கைப்பிடித்து,
“என் மகனை காப்பாத்தி என்கிட்ட கொடும்மா. என் உயிர் இருக்கிற வரைக்கும் உனக்கு நன்றியுள்ள ஜீவனா இருப்பேன்.” பிடித்த கைகளை முகத்தோடு ஒட்டி வைத்து கும்பிட்டார்.
பெரும் சங்கடத்தோடு அவற்றை நிராகரித்து எழுந்து நின்றவள், “இந்த மாதிரி எல்லாம் பண்ணாதீங்க. உங்க மேல எனக்கு நிறைய கோபம் இருக்கு. அதேநேரம் வயசுல பெரியவங்க இந்த மாதிரி பண்றதை ஏத்துக்க முடியல என்னால. பெத்தவங்க நீங்களே உங்க பிள்ளைய திருத்த முடியாம அழுகும் போது புதுசா வந்த நான் என்ன பண்ண முடியும்.” என்றாள்.
“பொண்டாட்டியால முடியாதது எதுவுமே இல்லமா.”
“அந்த ஸ்தானத்தை நான் என்னைக்கும் உங்க மகனுக்கு கொடுக்க மாட்டேன்.”
“எனக்கு நம்பிக்கை இருக்கு. நீ ஒரு நாள் நிச்சயம் மனசு மாறுவ. இதே வாய் என்கிட்ட வந்து என் புருஷன் இல்லாம என்னால வாழ முடியாதுன்னு சொல்லும்.” என்றதும் அதுவரை இருந்த அமைதி காணாமல் போனது அவளை விட்டு.
முகத்தில் கடுமை கூட, “நான் செத்தாலும் அந்த மாதிரி ஒரு வார்த்தைய சொல்ல மாட்டேன். இன்னமும் பழைய பொண்டாட்டி போட்டோவ வச்சு உங்க பையன் உருக்கிட்டு இருக்காரு தெரியுமா? அந்த மாதிரி இருக்க ஒருத்தன் கூட வாழுற அளவுக்கு நான் அசிங்கமானவ இல்ல.”
“என் பையன் மனசுல அந்த பொண்ணு சத்தியமா இல்லை. அவ கொடுத்த வலிகள் மட்டும் தான் பாக்கி இருக்கும். அதைத்தான் உன்னை எடுக்க சொல்றேன்.”
“எவளோ என்னமோ பண்ணிட்டு போவா அதை எடுக்கிறது தான் என்னோட வேலையா?”
“இது வேலை இல்ல உன்னோட வாழ்க்கை.”
“இந்த மாதிரி ஒரு வாழ்க்கை எனக்கு வேணாம்.”
“அம்மாடி… எதுக்காக இப்ப இவ்ளோ கோபப்படுற. இவ்ளோ நேரம் நல்லா தான பேசிட்டு இருந்த.” என்ற மாமனாரின் புறம் திரும்பியவள்,
“உங்களை மாமனார் மாமியாரா மதிச்சு ஒன்னும் நான் பேசல. பேசுற சந்தர்ப்பம் வந்துச்சு அதனால பேச்சு கொடுத்துட்டு இருந்தேன். இதையே சாக்கா வச்சு உங்க மகன் கூட வாழ வைக்கலாம்னு பார்க்காதீங்க. என்னால இந்த அசிங்கமான வாழ்க்கைய வாழ முடியாது.” என்று விட்டாள் பட்டென்று.
தம்பதிகள் இருவரும் பார்த்துக் கொண்டனர். இருவர் முகத்திலும் பெரும் துயரம் இருந்தது. இதை எதிரில் இருப்பவள் உணர்ந்தாலும் கோபத்தை குறைத்துக் கொள்ள விரும்பவில்லை. விரும்பாத ஒரு வாழ்க்கையை தானே விரும்பி வாழப் போவதாக சொல்வதைக் கேட்க சகிப்பில்லை அவளிடம்.
விட்டுக் கொடுத்துப் போக முடிவெடுத்த ஆதிலட்சுமி, “முடிஞ்சது முடிஞ்சு போச்சு. இப்ப இருக்குறது உன்னோட வாழ்க்கை. அதை காப்பாத்திக்காம பாதில விட்டுட்டு போறன்னு சொல்றது நல்லா இல்ல. அவனை உன்னால மட்டும் தான் மாத்த முடியும். என் மகனை பழைய மாதிரி பார்க்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு அகல். தயவு செஞ்சு உன் மனச மாத்திட்டு கொஞ்சம் எங்களுக்காக வாழ பாரு.” என கையெடுத்து கும்பிட்டார்.
சங்கடம் இருந்தாலும் அவள் வீம்போடு நிற்க, “என்ன பண்ணா இந்த வாழ்க்கைய நீ விரும்பி வாழ ஆரம்பிப்ப. எதுவா இருந்தாலும் சொல்லுமா நாங்க செய்றோம்.” என்றார் தயாளன்.
“இந்த வாழ்க்கைய விட்டு என்னை அனுப்பிடுங்க. அது ஒன்னு தான் நீங்க எனக்கு செய்ற பெரிய உதவி.”
“என் வீட்டு மருமகளை என்னால எங்கயும் அனுப்ப முடியாது. கடைசி வரைக்கும் நீ இந்த வீட்ல தான் வாழ போற.” என்ற மாமியாரின் பேச்சு இன்னும் அவளின் கோபத்தை தூண்டி பார்த்தது.
இருவரும் விடாமல் வாக்குவாதங்கள் செய்து கொண்டிருக்க, மனைவியை அடக்கினார் தயாளன். தன்னுடைய வாழ்க்கையை பணயம் வைத்து மகனின் வாழ்வை நலமாக்க நினைக்கும் ஆதிலட்சுமி மீது வெறுப்பு தோன்றியது. அதை மறைக்காமல் வார்த்தைகளால் கொட்டினாள்.
“இந்த வாழ்க்கை உனக்கு பிடிக்கல. இங்க இருந்து போய் ஆகணும் அவ்ளோ தான? சரி. உனக்கு ஒரு கண்டிஷன்… அதை செஞ்சு முடிச்சிட்டா நானே என் மகன் கிட்ட இருந்து உனக்கு விவாகரத்து வாங்கி தரேன்.” என்றதும் கோபத்தோடு பேசிக் கொண்டிருந்தவள் பேச்சை நிறுத்தினாள்.
“ஆதி என்ன பேசுற?” என்ற கணவருக்கு புன்னகையை பரிசாக கொடுத்தவர், “என் மருமக சவால்ல ஜெயிச்சுட்டா தோல்வியோட அவ ஆசைப்படுறதை செஞ்சு கொடுக்குறன்னு சொல்றங்க.” என்றதும் அகல்யாவின் பார்வை அவரிடம் நின்றது.
சந்தேகம் மாறாத கண்ணோடு, “என்ன கண்டிஷன்?” என கேட்டாள்.
“என் மகனை திரும்பி பழைய மாதிரி என் கையில கொடுத்துட்டா… அந்த நிமிஷம் நீ இந்த வீட்டை விட்டு போகலாம். அதுக்கப்புறம் நானும் என் மகனும் எந்த விதத்துலையும் உன்னை தொந்தரவு பண்ண மாட்டோம். நீ ஆசைப்பட்ட மாதிரி விவாகரத்து உன்னை தேடி வரும். அது மட்டும் இல்ல என்ன கேட்டாலும் செய்ய நான் தயார்.” என்றவர் பேச்சில் விவரிக்க முடியாத அளவிற்கு மிடுக்கான தோரணை.
பதில் சொல்லாமல் சந்தேகப் பார்வையை இன்னும் அதிகமாக்கினாள் அவர் மீது. மனைவியின் பேச்சில் தயாளன் தான் பதறினார். கணவனை கண்களால் பொறுமை காக்கும்படி கூறியவர்,
“எதுக்காக இவ்ளோ யோசிக்கிற அகல்? என் பையன் கூட வாழனும்னு ஆசைப்படுறியா?” என்றிட, சந்தேகம் மறைந்து முறைப்பு தொற்றிக் கொண்டது அவள் முகத்தில்.
“போட்டியில தோத்துட்டேன் அத்தை. உங்க மகன் கூட வாழ ஆசைப்படுறேன்னு சொன்னாலும் எனக்கு சந்தோசம் தான்.” என்று அவளை இன்னும் வெறுப்பேற்றினார்.
“உங்க வார்த்தை கனவுல கூட பலிக்காது. நீங்க சொல்றது உண்மையா பொய்யான்னு யோசிச்சிட்டு இருந்தேன்.”
அனுபவசாலியாக புன்னகைத்தவர், “என் மகன் மேல சத்தியமா நான் சொல்ற வார்த்தை உண்மை. என்னைக்கு என் மகனை என் மகனா மனசார பார்க்குறனோ அப்போ இந்த வீட்டை விட்டு நானே உன்னை அனுப்பி வைப்பேன்.”
“பேச்சு மாறக்கூடாது”
“நினைச்சதை அப்படியே செஞ்சு தான் எனக்கு பழக்கம். உனக்கு அது நல்லாவே தெரியுமே மாமியாராவும் கம்பெனி முதலாளியாவும்.”
“சரி, உங்க மகனை முன்ன மாதிரி மாத்தி காட்டுறேன். நீங்க கொடுத்த வார்த்தைய காப்பாத்த பாருங்க.” என்று அங்கிருந்து நகர்ந்தாள்.
மருமகள் சென்றதும் தயாளன் மனைவியை திட்ட, “எனக்கு என் மருமகள் மேல முழு நம்பிக்கை இருக்கு. ரெண்டாவது திருமணத்தை தவிர என் மகனை அவ வெறுக்க எந்த ஒரு காரணமும் இருக்காது. அவனோட மனசு புரிஞ்ச அடுத்த நிமிஷம் அவளையும் அறியாம வாழ ஆரம்பிச்சிடுவா. இப்போதைக்கு இவ தரணி கிட்ட பேசுறது தான் ரொம்ப முக்கியம். அதுக்காக தான் சவால் விட்டு அனுப்பி இருக்கேன்.” என்று சமாதானப்படுத்தியவருக்கு தெரியாது பின்னாளில் தானே தன் மருமகளை வீட்டை விட்டு அனுப்பப் போகிறோம் என்று.
***
அறைக்கு வந்தவள் நினைவுகள் ஆதிலட்சுமி வார்த்தைகளை வட்டமிட்டது. அவரை நம்பலாமா வேண்டாமா என்ற நிலையில் இருந்தவள் சொன்னதை செய்துவிட்டு உரிமையாக கிளம்பலாம் என்று முடிவெடுத்தாள்.
அதற்கான வழியைத் தேடிக் கொள்ள தயாளனிடம் மீதி கதையைக் கேட்க முடிவெடுத்தாள். தரணீஸ்வரன் மெல்ல அசைவது போல் தெரிய, எழுந்து நின்றாள். தலைவலி பெருமளவு அச்சுறுத்தியது அவனை. நேற்று முதல் சாப்பிடாதது வேறு அவனை பலவீனமாக்க, எழுந்ததும் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான் தரையில்.
அவன் நடவடிக்கைகளை பார்த்துக் கொண்டிருந்தவள் இவனை திருத்த முடியுமா என்ற யோசனையில் இருக்க, தட்டு தடுமாறி குளியலறை சென்றான். கண்ணாடியில் முகம் பார்த்தவன் காயம் இருப்பதை அறிந்து கோபமாக வெளியில் வந்தான்.
“நேத்து ராத்திரியும் என் அடிச்சியா? இன்னொரு தடவை என் மேல கைய வச்ச பொண்ணுன்னு கூட பார்க்க மாட்டேன்.” என்று கத்திவிட்டு மீண்டும் குளியலறை கதவை அடைத்துக் கொண்டான்.
எதற்காக பேசிவிட்டு சென்றான் என்பதை தாமதமாக உணர்ந்தவள் அவன் வரும்வரை காத்துக் கொண்டிருந்தாள். முடிந்த அளவு தன்னை நிதானப்படுத்திக் கொண்டு வெளியில் வந்தவன் அவளை பார்த்த முறைக்க,
“உங்களை, நான் அடிக்கணும்னு அவசியம் இல்லை. அந்த வேலைய நீங்களே நல்லா பண்றீங்க. இன்னைக்கு ராத்திரியாது முடிஞ்சா கொஞ்சம் நிதானமா வர பாருங்க அப்போ தான் என்ன நடக்குதுன்னு புரியும்.” என்றவள் வெளியேற செல்ல, கிழித்துப் போட்ட புகைப்படம் கண்ணில் விழுந்தது.
“நேத்து ராத்திரி பேசுனது உங்களுக்கு நிச்சயம் நியாபகம் இருக்காதுன்னு தெரியும். அதனால தெளிவா இருக்கும் போதே சொல்றேன் கேட்டுக்கோங்க. இந்த வீட்ல இனிமே உங்க எக்ஸ் ஒய்ஃப் நியாபகங்கள் ஒன்னு கூட என் கண்ணுல படக்கூடாது. பட்டா உங்களை ஒன்னும் பண்ண மாட்டேன் எனக்கு கல்யாணம் பண்ணி வச்ச உங்க அம்மாவ போலீஸ் ஸ்டேஷன்ல உட்கார வைக்க வேண்டியதா இருக்கும்.” என்றவள் மீதான பார்வையை தொடர்ந்தான் உருவம் மறையும் வரை.
ஜீவன் துடிக்கும்…