Loading

 

Disclaimer: 18+ content. Please avoid those who are not interested.

“நோ. என் பெர்மிஷன் இல்லாம அவங்களை எப்போவுமே உள்ள அலோ பண்ண கூடாது. புடிச்சு வெளிய தள்ளு.” என ஆரவ் செக்கியூரிட்டியிடம் கர்ஜிக்க, வான்மதிக்கு ஒன்றும் புரியவில்லை. அவளும் ஜன்னல் வழியே எட்டிப் பார்க்க, அங்கு ஒரு வயதான தம்பதி தான் செக்கியூரிட்டியிடம் கெஞ்சிக் கொண்டிருந்தனர்.

அவர்களின் பார்வை, ஆரவின் ஃப்ளாட் இருக்கும் திசையிலேயே கண்ணீர் மல்க நிலைக்க, “புல் ஷிட்.” என திரையை கோபத்துடன் மூடியவன், சட்டென திரும்பினான். அவனுக்கு பின்னால் நின்றிருந்த வான்மதியை கவனியாமல் இடித்து விட்டான்.

அதில் அவள் கால் தடுமாறி விழப் போக, ஆரவ் அவளை இடையோடு சேர்த்து இறுக்கிக் கொண்டான். அவன் கொடுத்த அழுத்தத்தில் வலி எழ, “ஆஆ…” என கத்தியவளை, விட்டு சரட்டென விலகினான்.

மற்றவை மறந்து, “என்னாச்சு கண்ணம்மா. ஏன் கத்துன. எங்கயும் வலிக்குதா?” எனக் கேட்டவனின் குரலில் அத்தனை தவிப்பு.

வயிற்றைப் பிடித்தபடி சோஃபாவில் அமர்ந்தவள், “ஒண்ணும் இல்ல.” எனத் தலையாட்ட,

“அப்பறம் ஏன் கண்ணெல்லாம் கலங்கி இருக்கு. ரொம்ப பெயின் ஆ இருக்கா?” என்று மீண்டும் கேட்க, பல்லைக்கடித்து வலியை அடக்கியவள், “கொஞ்ச நேரத்துல சரி ஆகிடும்” என்றாள் கரகரப்புடன்.

அவனும் செய்வதறியாமல், “சரி நீ ரெஸ்ட் எடு. ஃபுட் எல்லாம் உன் ரூம்லையே வைச்சுட்டு போறேன். கவனமா சாப்ட்ரு. இஷுவை நான் தூக்கிட்டு போறேன் ஓகே வா?” எனக் கேட்க, இம்முறை சரி என்று தலையசைத்தாள்.

‘ரொம்ப முடியலையோ?’ என பரிதவித்தவன், “நான் கூட இருக்கவா கண்ணம்மா…?” என்றான் அவள் துடிப்பதை காண இயலாமல்.

அவளோ, அத்தனை வலியிலும் “தயவு செஞ்சு என்னை அப்படி கூப்பிடாதீங்க ஆரவ்.” என உதட்டைக் கடித்து கண்ணீரை அடக்க, வேதனையுடன் எச்சிலை விழுங்கியவன், “சாரி” என்றபடி அவளை அறையில் படுக்க செய்து, சொன்னது போல உணவையும் வைத்து விட்டு கிளம்பினான்.

ஆனால், அலுவலகம் சென்று வேலை ஓடவில்லை. ‘பீரியட்ஸ் பெயின்’ ஆக இருக்கும் என்று அவனுக்கும் தெரியும் தான். ஆனா, ஏன் இப்டி துடிக்கிறா… எனக் குழம்பியவன், சிறிது நேரத்திலேயே இருப்பு கொள்ளாமல், நண்பர்களிடம் இஷாந்தை ஒப்படைத்து விட்டு, வீட்டிற்கு சென்று அதிர்ந்து விட்டான்.

கட்டிலில் சுருண்டு படுத்து சிறு குழந்தை போல தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தாள் வான்மதி.

“மதி… ஏன் இப்படி அழுதுட்டு இருக்க? வயித்தை குறுக்காம படு. என்னாச்சுடி.” என சற்று தள்ளி நின்றே கேட்க, “ரொம்ப வலிக்குது…” என்றாள் உதட்டை பிதுக்கி.

“எப்பவும் இப்படி தான் இருக்குமா?” அவன் வருத்தத்துடன் வினவ, “இல்ல. ஒன் இயரா தான் இப்படி இருக்கு. ரெண்டு நாள்ல சரி ஆகிடும்.” என்றிட, அவனால் அதனை ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

“ஹாஸ்பிடல்ல காட்டுனியா?” எனக் கேட்க, “இல்ல” என்று அவள் தலையசைத்ததில்,

“ப்ச். என்ன கண்ணம்மா…” என ஆரம்பித்து விட்டு, சட்டென “லூசா மதி நீ. இதெல்லாம் கவனிக்கிறது இல்லையா? வா முதல்ல ஹாஸ்பிடல் போகலாம்.” என அவளை எழுப்ப, “ம்ம்ஹும் முடியாது. ரொம்ப வலிக்குது.” என்றாள் மறுப்பாக.

“அதுக்கு தான ஹாஸ்பிடல் போகலாம்ன்னு கூப்புடுறேன்.” என அவளை வருத்தத்துடன் ஏறிட்டவன், அவனுக்குத் தெரிந்த மருத்துவருக்கு போன் செய்து விவரம் சொல்ல, அவரும் இப்போதைக்கு வலிக்கு மாத்திரை பெயரை சொல்லி விட்டு, மாலை அழைத்து வர கூறினார்.

“முதல்ல இந்த ஜுஸ குடி. நான் டேப்லட் வாங்கிட்டு வந்துடுறேன்.” என்றவன் அவளை குடிக்க வைத்து விட்டு, அவசரமாக மாத்திரையையும் வாங்கி வந்து கொடுத்தான்.

சற்று நேரத்தில் சிறிதளவு வலி குறைய, ஆனாலும் அதுவே அவளை சுருளத் தான் வைத்தது.

அதன் பிறகே, “இஷு எங்க ஆரவ்?” எனக் கேட்க,

“பசங்ககிட்ட இருக்கான். நீ தூங்கு. நான் பக்கத்துல இருக்கேன்.” என பதிலுரைத்தவன், அவளுக்கு போர்வையை போர்த்தி விட, அவள் சில நொடிகள் அவனையே பார்த்திருந்தாள்.

அவனும் அவள் விழிகளையே ஊடுருவயபடி, “அப்போ லாஸ்ட் ஒன் இயரா இப்படி தான் துடிச்சுட்டு இருக்கியா?” எனக் கேட்டான் ஆதங்கத்துடன்.

“ம்ம். ரூம்க்குள்ளயே இருந்துடுவேன். வலி போற வரை.” என்றவளை பெருமூச்சுடன் பார்த்தவன்,

“எப்போ இருந்து இப்படி இருக்கு மதி? கல்யாணத்துக்கு அப்பறம்ல இருந்தா…” என தயக்கமாக கேட்க, ‘ம்ம்” என்றாள்.

சில நொடிகள் கழித்து, “5 மந்த்ஸ்ல பேபி அபார்ட் ஆச்சு. அப்போ இருந்து.” என்று போர்வையை அழுத்தி பற்றியபடி கூற, அவனோ உறைந்து விட்டான்.

“காட்! எப்படி மதி?” எனக் கேட்டவனுக்கு, இன்னொருவனின் குழந்தையை சுமந்ததெல்லாம் பெரியதாக தெரியவில்லை. அவ்வேதனையை அவள் எப்படி தாங்கினாள் என்றே நெஞ்சம் தவித்தது.

அத்தவிப்பு அவளுக்குள் புதைந்திருந்த குப்பைகளை கிளற, “ப்ச். விடுங்க” என்றாள்.

அவனும் தன்னை அடக்கியபடி, “உனக்கு சொல்ல விருப்பம் இருந்தா சொல்லு மதி. கஷ்டமா இருந்தா வேணாம்” என்றான் மென்மையாக.

“கஷ்டம்ன்றதை விட, சொன்னா நீங்க எப்படி எடுத்துப்பீங்கன்னு தெரியல. எல்லார் மாதிரியும் நீங்களும் சொல்லிட்டா… எனக்கு இன்னும் டௌன் – ஆ ஃபீல் ஆகும்.” என்றாள் குரல் கமற.

அவளை அழுத்தத்துடன் பார்த்தவன், “என் மதியை நான் புருஞ்சுப்பேன். நீ சொல்லு” என்றிட, ஒரு கணம் அவள் விழி விரிந்து சுருங்கியது.

“அப்போ நான் எல்லாமே சொல்லுவேன். ஓகே வா?”

“எல்லாமே சொல்லு மதி. உன் மனசுல இருக்குற எல்லாமே…” என மிருதுவாக கூறியவனிடம், தயக்கமின்றி “அவனுக்கும் எனக்கும் இருந்த ஃபிஸிக்கல் ரிலேஷன்ஷிப்பையும் சேர்த்து…?” என்றாள் கேள்வியாக.

சிறிதும் அதிராமல், “கண்டிப்பா… அதுனால தான் உனக்கு மனக்காயம்ன்னு எனக்கு புரியுது. சோ, சொன்னா தான் உனக்கும் ஃபிரீ ஆகும்” என்றவனை, எப்போதும் போல வியப்பாகவே பார்த்தாள்.

‘இவனென்ன மனிதன்?’ என்ற எண்ணம் வராமல் இருக்கவில்லை.

நினைவுகளும், திருமணம் என்ற கோர விபத்தில் பயணித்தது.

“ரோகினி. கல்யாணத்துக்கு தேவையானது எல்லாம் வாங்கியாச்சு தான. அப்பறம் நெருக்குவட்டுல அது வேணும் இது வேணும்ன்னு சொல்ல கூடாது.” என கேட்டபடி அப்பெரிய பங்களாவினுள் நுழைந்தார் வான்மதியின் தந்தை பரணி.

வேட்டியை மடித்து கட்டி விட்டு, ஈஸி சேரில் ஆசுவாசமாக அமர, அவர் வந்ததை அறிந்ததும் வேகமாக நீர் கொணர்ந்து கொடுத்தார் அவரின் மனைவி ரோகினி.

“எல்லாம் வாங்கியாச்சுங்க. உங்க பொண்ணுட்டயும் ஒரு வார்த்தை கேட்டுடுங்க.” என்றபோதே, வான்மதி அங்கு வர, அவர் “என்னம்மா. கல்யாணம் பக்கத்துல வந்துடுச்சு. புடவை கட்டிக்கிறதை விட்டுட்டு இந்த சுடிதாரையே போட்டுட்டு இருக்க.” என்க, “இன்னும் ஒரு வாரம் இருக்குல்லப்பா.” என்றாள் சிறு இதழ் விரிப்புடன்.

பின், அவளே பின்னந்தலையை நீவியபடி, “அப்பறம் ப்பா. பத்து பத்திரிக்கை குறையுது. என் ப்ரெண்ட்ஸ்க்கு குடுக்க…” என்று அவளின் தாயிடம் “சொல்லும்மா” என கண்ணை காட்ட, பரணி “ப்ச், என்னம்மா நீ. கடைசி நேரத்துல வந்து கேட்டுட்டு இருக்க. இதுக்கு தான் நான் முதல்லயே லிஸ்ட் கேட்டேன்.” என அதற்கே பரபரப்பானார்.

அதில் அவள் தான், “ப்பா. இல்லன்னா பரவாயில்ல. நான் போன்லேயே இன்வைட் பண்ணிக்கிறேன்.” என பின் வாங்கியவளுக்கு எப்போதும் தந்தையிடம் பேச ஒரு தயக்கமும் மரியாதையும் இருக்கும்.

அந்நேரம் கஜேந்திரன் போன் பேசியபடி அங்கு வந்தவர், வான்மதியிடம் “சுதாகர் உங்கிட்ட பேசணுமாம்” எனக் கொடுத்தார்.

பரணியின் அண்ணன் தான் கஜேந்திரன். அனைவரும் கூட்டுக்குடும்பமாக தான் வசிக்கின்றனர். அவருக்கு இரு மகன்கள். மூத்த மகனுக்கு திருமணமாகி குழந்தை இருக்க, இளைய மகன் தான் சுதாகர்.

போன் பேசியபடி அறை நோக்கி சென்ற வான்மதி, “அடேய். சுத்தி. எங்கடா போய் தொலைஞ்ச. வருவியா மாட்டியா? இதுல சார் என் நம்பருக்கு கூப்பிட மாட்டீங்களோ” என்று கடுகடுத்தாள்.

எதிர்முனையில் சுதாகர் தான், “அட நீ வேற வண்டு. நம்ம வீட்டு பெருசுங்க என்னை வேலை வாங்கியே கொல்லுதுங்க. பேசாம நானும் பொண்ணா பிறந்து இருந்தா இந்நேரம் கல்யாணம் ஆவது ஆகி இருக்கும். இப்படி தங்கச்சி கல்யாணத்துக்கு கூட வர முடியாத மாதிரி மலேசியால மாட்டிக்கிட்டேன்.” என்றான் அழுகாத குறையாக.

“இருடா உன் கல்யாணத்து அப்போ நானும் இந்த மாதிரி கதை சொல்றேன்.” என போனிலேயே தமையனிடம் சண்டை இட்டவள், பின் சிறிது நேரத்தில் சமாதானம் ஆகி கொண்டாள். அவளுக்கு தான், வீட்டினர் பற்றி தெரியுமே. பரணிக்கு மூன்றுமே பெண் பிள்ளைகளாக போய் விட, தன் சாம்ராஜ்யத்தை கட்டிக் காக்க ஆண் வாரிசு இல்லையே என வருத்தம் கொண்டார்.

அதற்காக, தங்கள் பெண்கள் மீது பாசம் இல்லை என்றெல்லாம் இல்லை.

நன்றாக படிக்க வைத்து, இரு பெண்களையும் நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்தார். அதே போல தான் வான்மதிக்கும் நல்ல இடத்தில் மாப்பிள்ளை பார்த்த பெருமை அவருக்கு.

முதல் இரு பெண்களான, ஸ்ரீதேவி, இலக்கியாவிற்கு பிறகு பத்து வருடங்கள் கழித்து பிறந்தவள் தான் வான்மதி. அவள் பிறந்த பிறகே, ஜவுளி கடையை பல ஊர்களில் பெருக்கி, செல்வம் வழிந்தோடியது.

ஆனால், அவளுக்கு திருமண வயது வரும் போது தான் தங்களுக்கும் வயதாகிறது என்பதை உணர்ந்த தம்பதியர், அவளை நன்றாக பார்த்துக் கொள்ளும் குடும்பத்தில் திருமணம் செய்து தர வேண்டும் என்று தீர்மானம் கொண்டனர்.

அதற்காகவே, பரணியின் வசதிக்கு ஈடாக இருந்த விக்ராந்தை மணமகனாக்கினார். பிரபல தொழிலதிபரான விக்ராந்தின் தந்தை சரவணன், வாகனங்களின் இயந்திரங்களை தயாரிக்கும் தொழிலில் ரெக்கை கட்டி பறப்பவர். அன்னை சௌமியா, கணவன் மற்றும் மகனின் தொழிலில் கணக்கு வழக்குகளை பார்வையிட்டு, இருவருக்கும் அரணாய் இருப்பவர்.

அவர்களுக்கும், பிரபல ஜவுளிக்கடை உரிமையாளரின் வீட்டில் சம்பந்தம் செய்வதில் ஏக பெருமை.

நிச்சயத்தின் போது, ஒரு முறை விக்ராந்தை பார்த்திருக்கிறாள் வான்மதி. அப்போதே, டைமண்ட் நெக்லஸும், மோதிரமும் பரிசளித்து வீட்டினரை திக்குமுக்காட வைத்தான்.

ஆனால், ஏனோ வான்மதிக்கு ஒன்றும் அவன் மீது அத்தனை ஈர்ப்பு இல்லை தான். ஒருவேளை, அவன் சிறிதாவது திருமணம் செய்யப் போகிற பெண் என்ற ரீதியில் சில வார்த்தைகள் நன்றாக பேசி இருந்தால், அவளுக்கும் மனம் ஒன்றி இருக்குமோ என்னவோ.

பேசக்கூடிய சந்தர்ப்பமும் கிடைக்கவில்லை தான். விக்ராந்தும் வேலை விஷயமாக வெளிநாட்டிற்கு சென்று விட்டு, திருமணத்திற்கு முந்தைய நாள் தான் வந்தான்.

இருவரின் திருமணமும் ஆடம்பரத்துடன், கோலாகலமாக நடந்து முடிந்தது. திருமணம் முடிந்த கையோடு விக்ராந்த் வீடு அமைந்திருக்கும் சென்னைக்கும் வந்து விட்டாள். செல்வ செழிப்புடன் கூடிய, பெரிய பங்களா அவனின் வீடு. அவளும் அப்படிப்பட்ட இடத்தில் இருந்து வந்ததால், பெரியதாக ஒன்றும் தெரியவில்லை.

இரவு நேரம் நெருங்க நெருங்க தான், அவளுக்கு ஏனென்று அறியாத ஒரு பயப்பந்து உருண்டு ஓடியது. சௌமியாவின் கண்டிப்பின் பேரில், கழுத்து முழுக்க நகை அணிந்து இருந்ததில் உடலெல்லாம் வலித்தது. ‘எப்போதடா உறங்க விடுவார்கள்’ என்று நொந்து போனாள்.

மணப்பெண்ணின் சோர்வை எல்லாம் கணக்கில் எடுக்காமல், சௌமியா அழகு நிலைய பெண்களிடம், அவளை தயார் செய்ய கூறி விட்டு, அவளுக்கென உடையும், நகையும் எடுத்து வைத்து விட்டு செல்ல, அவளோ ‘என்ன இவங்க… இவங்களா ஒரு ட்ரெஸ குடுத்துட்டு போறாங்க…’ என்று தலையை சொரிந்தாள்.

‘சரி… பெரியவங்க தான.’ எனத் தோளைக் குலுக்கி விட்டு, பின்னிய கால்களுடனே விக்ராந்தின் அறைக்கு சென்றாள்.

அங்கு அவன் யாரிடமோ போனில் உரையாடிக் கொண்டிருக்க, அவளைக் கண்டதும், மேலிருந்து கீழ் வரை அளந்து வைத்தவன், “கால் யூ பேக்” எனக் கூறி போனை வைத்து விட்டு, அவளருகில் வந்தாள்.

அவளும் ‘இதான் உன் லைஃப். இந்த லைஃபோட ஒத்துப் போய்டு.’ என தனக்கு தானே சொல்லிக்கொண்டு அவனைப் பார்த்து, மெலிதாய் புன்னகைத்தாள்.

“வாவ்! யூ லுக் சோ காட்ஜியஸ். மேரேஜ்க்கு முன்னாடி உன்ன பார்க்க சான்ஸே கிடைக்கல. என்கேஜ்மென்ட்லையும் நீ தலையை நிமிர்த்தவே இல்ல. தேங்க் காட் அப்போ பார்க்கல. இல்லன்னா இன்னைக்கு நடக்க வேண்டிய ஃபர்ஸ்ட் நைட் அன்னைக்கே நடந்து இன்னைக்கு நீ ஓல்ட் பீஸ் ஆகிருப்ப…” என்றவன், ஏதோ பெரிய நகைச்சுவை கூறியது போல நகைக்க, அவள் தான் அதிர்ந்தாள்.

முதன் முதலில் ஒரு பெண்ணிடம் இப்படி தான் பேசுவானா… என்றே முகம் சுளித்தவள், இதற்கு என்ன பதில் கூறுவது எனத் தெரியாமல் உதட்டைக் கடித்தபடி நின்றாள்.

அவனோ அதனை சட்டை செய்யாமல், இன்னும் அவளை நெருங்கி சுற்றி வளைக்க, அவளுக்கோ நடுங்க ஆரம்பித்து விட்டது.

“வி… விக்ராந்த்… ப்ளீஸ்…” என அவனிடம் இருந்து விடுபட எத்தனிக்க, “வாட்? ஐ காண்ட் வெய்ட் வான்மதி… லெட்ஸ் செலெப்ரெட்!” என்றபடி முத்தமிட வர, அவள் அவனை தள்ளி விட்டாள்.

அதில் அவனுக்கு தான் சற்றே சினம் எழ, “வாட்?” என்றான் மீண்டும்.

“இல்ல. நம்ம முதல்ல ஒருத்தர்க்கு ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டு அப்பறம் இதெல்லாம்…” எனக் கூறி முடிக்கும் முன், “வாட் தி ஹெல் ஆர் யூ டாக்கிங். இதுக்குலாம் எனக்கு டைம் இல்ல. என் மூட ஸ்பாயில் பண்ணாத. கம்.” என்றபடி அவளை இழுத்தவன் அதன் பிறகு அவள் பேச அனுமதி தரவில்லை.

அவளுக்கும் அவனைத் தடுக்க பலம் போதவில்லை. மென்மையான பெண்ணின் மேனியதை வன்மையை மட்டுமே பொழிந்து ஆட்கொள்ள, அவளுக்கோ அவனின் ஒவ்வொரு தொடுதலும் அருவருப்பை மட்டுமே கொடுத்தது.

தாம்பத்யத்தின் இன்பத்தை கொடுக்க வேண்டியவனோ, வலியையும் காயங்களையும் மட்டுமே கொடுத்து அவளின் கண்ணீரையும், ‘வலிக்குது விக்ராந்த் ப்ளீஸ்.’ என அவள் கத்தியதையும் பொருட்படுத்தாமல் அவளை மொத்தமாக தனக்குள் அடக்கினான்.

அவளைப் பிரிந்த மறுநொடி உறங்கியும் விட்டான். அவளுக்கு தான், முன் பின் தெரியாத ஒருவனிடம் கற்பை இழந்த உணர்வு. அதிலும், நகரக் கூட இயலாமல் கால்கள் கடும் வலி கொடுக்க, ‘இது என்ன மாதிரியான வாழ்க்கை’ என்று புரியாமலேயே உறங்கிப் போனாள்.

மறுநாள், அவள் எழும் போதே அவன் வெளியில் சென்றிருக்க, அப்போதும் எழுந்திரிக்க உடல் வலியும் மன வலியும் அனுமதி தரவில்லை தான். ‘ஒருவேளை, எல்லாரும் இப்படி தான் இருப்பாங்களோ? நம்ம தான் தேவை இல்லாம ஏதேதோ எதிர்பார்க்குறோமோ…?’ என ஏதேதோ எண்ணிக்கொண்டவள், குளித்து கீழிறங்கி வந்து, உணவு உண்டு விட்டு அறை நோக்கி செல்ல போக சௌமியா அழைத்தார்.

“சொல்லுங்க அத்தை…”

“நாளைல இருந்து பிசினெஸ்ல நான் பாக்குற கணக்கு வழக்குக்கு எல்லாம் எனக்கு கீழ அசிஸ்ட் பண்ணு. முதல்ல நம்ம என்ன பிசினெஸ் பண்றோம்ன்னு தெரிஞ்சு வைச்சுக்க. டெய்லி நான் என்ன என்ன பண்ணனும்னு சொல்றேன். அதை கரெக்ட் ஆ பண்ணிடு” என அவர் போக்கில் உத்தரவு பிறப்பிக்க, அவளுக்கு தான் ஒன்றும் புரியவில்லை.

அவர்கள் தொழிலை வீட்டு மருமகள் தெரிந்து கொள்ள வேண்டும் எண்ணுவது நல்ல விஷயம் தான். ஆனால், சௌமியா பேசுவது ஒன்றும் பாசத்தினால் கூறுவது போல தெரியவில்லை. ‘எனக்கு ஒரு அடிமை சிக்கிடுச்சு. நான் சொல்ற வேலை எல்லாம் பாரு’ என்று கூறுவது போன்றே அவளுக்கு தோன்ற,

“சாரி அத்தை. எனக்கு இந்த பிசினெஸ்ல எல்லாம் இன்டரஸ்ட் இல்ல.” என்றாள் மெதுவாக.

“சோ வாட்…? இதெல்லாம் நீ கத்துக்கிட்டு தான் ஆகணும். வேற என்ன செய்றதா ஐடியா?” என நக்கலாகவே வந்தது அவர் குரல்.

“எனக்கு ஐடில ஒர்க் பண்ணனும்ன்னு தான் ஆச அத்தை…” என்றவளோ, தன் விருப்பத்தை தான் கேட்கிறாரோ என்றெண்ணி வேகமாக கூற, அவரோ, “உன் ஆச எல்லாம் மூட்ட கட்டி வைச்சுட்டு நான் சொல்றதை மட்டும் பண்ணு வான்மதி.” என்றார் வெடுக்கென.

அவளுக்கு தான் ஏதோ போல் ஆகி விட்டது. ஒரு வருடமாவது வேலை செய்கிறேன் என்று தாயிடம் மன்றாடினாள் தான். ஆனால், பரணி நம்ம குடும்பத்து பொண்ணு வெளியே வேலைக்கு போறதா என்று மறுத்து விட்டார். அதோடு தந்தையிடம் கேட்கும் தைரியம் அவளுக்கு இல்லாது போனது.

இப்போதோ, தன் முன் கால் மேல் கால் போட்டு திமிராக அமர்ந்திருக்கும் மாமியாரைக் கண்டு எரிச்சலே வந்தது. அதில், “இப்போதைக்கு ஐடியா இல்ல அத்த.” என்று விட்டு அறைக்கு சென்று விட்டாள்.

அன்று இரவு ஆகியும் விக்ராந்த் வீடு திரும்பாமல் இருக்க, ‘இன்று என்ன நடக்க போகிறதோ’ என்ற பயம் எழுந்தாலும், ‘ஏன் இன்னும் வரல?’ என்ற உறுத்தல் தொடர, சௌமியா முன் நின்றாள்.

“அத்தை அவரு இன்னும் வீட்டுக்கு வரல. கால் பண்ணாலும் எடுக்கல.” என்று கேட்க,

அவரோ “அவன் என்ன சும்மாவா சுத்திட்டு இருப்பான். வேலை இருந்துருக்கும் வான்மதி. நம்ம குடும்பத்தோட தொழில்முறை பத்தி உனக்கு தெரியும் தான. தூங்க கூட நேரம் இல்லாமல் உழைக்கணும். நீயும் இதெல்லாம் கத்து வைச்சுக்க.” என்று அறிவுரை கூற, அவளுக்கு தலை வலித்தது.

அந்நேரம் விக்ராந்தும் வீட்டிற்கு வந்து விட, அன்னையிடம் இரு வார்த்தை பேசினான். அதுவும் தொழில் ரீதியாக தான்.

“எங்க அப்பாவும் தான் பெரிய பிசினெஸ் மேன். அவரு என்ன எப்ப பார்த்தாலும் பந்தாவாவா இருக்காரு. பெரிய இவனுங்க மாதிரி பண்றானுங்க. பைத்தியம் பிடிச்சதுங்க.” என நாரசமாக அவர்களை திட்டியபடி அறைக்கு சென்றவளின் பின்னாலேயே வந்த விக்ராந்த், அவள் என்ன ஏதென்று உணரும் முன், அவளின் புடவையை விலக்க, அவளுக்குத் தான் குமட்டிக் கொண்டு வந்தது.

அன்றும் கண்ணீரும் காயங்களும் மட்டுமே உரித்தாகிப் போக, மறுநாள் கண் விழிக்கையில் விக்ராந்த் அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தான். அவள் எழுந்ததை கண்டதும், “இந்த டேப்லட் அ டெய்லி எடுத்துக்கோ.” என டையை கட்டியபடி கூறி விட்டு, “இன்னைக்கு நைட்டு சேரி கட்டாத. இட்ஸ் போரிங். ட்ரை டூ இம்ப்ரெஸ் மீ வித் ஹாட் ட்ரெஸ்.” என்றபடி வெளியில் சென்று விட்டான்.

முதலில், தன் உடல்வலிக்காக தான் மாத்திரை எடுத்துக்கொள்ள அக்கறையாக சொல்கிறானோ என ஒரு நொடி அவள் முகம் மின்னிட, மறுநொடியே அவன் கூறிய வார்த்தைகள் அவளை சோர்வுற வைத்தது.

“நான் பொண்ணா. இல்ல பொம்மையா?” என்ற மன அழுத்தத்தை ஷவரின் அடியில் நின்று கரைக்க முயன்றாள்.

அதன் பிறகு வந்த நாட்கள் முழுதும், அவன் கரங்களுக்கு கைப்பொம்மையாக தான் இருந்தாலே தவிர, அங்கு அவள் அவனின் மனைவி என்ற எண்ணமே அவனுக்கு இல்லையோ என்று தான் உடைந்து போனாள்.

ஒருமுறை, தொழில் முறை பார்ட்டி ஒன்றிற்கு அவளை அழைத்து சென்றவன், பார்ட்டிக்கு வந்தவர்களிடம் “ஷீ இஸ் மை வைஃப்.” எனப் பெருமையாக அறிமுகப்படுத்த, அவளுக்கோ சிறு திருப்தி.

‘அவன் கேரக்டரே இதான் போல. அவ்ளோவா பேச மாட்டானோ.’ என்று அப்போதும் அவனை நியாயப்படுத்த தான் பெண்மனம் சிந்தித்தது. பின்னே, அவனுடன் வாழ்ந்தாக சிறு திருப்தியான காரணமாவது வேண்டுமே. எத்தனை நாட்கள் தான், அவன் தொடுதலை அருவருப்புடன் ஏற்பது.

ஆனால், “ரெயின்போ ட்ரெஸ் ஷாப் ஓனர் தெரியுமா. அவரோட டாட்டர்.” என ஒவ்வொருவரிடம் அந்த விளக்கத்தையும் கூறி அவர்கள் வியப்பதில் பெருமை கொண்டவனை கண்டு கோபம் எழுந்தது அவளுக்கு.

‘இங்க நான் அவன் பொண்டாட்டின்ற ஒரு அடையாளம் போதாதா…?’ என்றே காய்ந்தவளை, பின்னிருந்து இடையுடன் அணைத்தவன், “கம் லெட்ஸ் டேன்ஸ்” என கையில் மதுபானத்துடன் அழைத்தான்.

“நான் வரல. எனக்கு இதெல்லாம் பிடிக்காது விக்ராந்த்.” என்றவளிடம், “பட் எனக்கு பிடிக்கும்” என்றபடி இழுத்துச் சென்று ஆட வைத்தவன், அத்தனை பேர் முன்பும், அவளை தீண்டிட, அவளுக்கோ அவமானமாக இருந்தது.

“விக்ராந்த் எல்லாரும் பாக்குறாங்க. பிஹேவ்!” எனப் பல்லைக்கடிக்க, அவன் போதையின் தாக்கத்தில் அதனை கேட்கக்கூட இல்லை.

இன்னும் அவனின் கரங்கள் மேலேறி சென்றதில், பிடித்து தள்ளி விட்டாள். போதையில் நிற்க வலுவில்லாமல் கீழேயே அவன் விழுந்து விட, அனைவரின் முன்பும் தள்ளி விட்டதில் அவள் மீது கொலைவெறியே வந்தது அவனுக்கு.

அக்கோபத்தையும், வீட்டிற்கு அழைத்து சென்று அவள் மேனி மீதே காட்ட, அவள் தான் தொய்ந்து விட்டாள். “நான் வேணும்னு தள்ளி விடல விக்ராந்த்” என அழுகுரலில் வெளிவந்த வார்த்தைகளை எல்லாம் அவன் காதில் வாங்கவே இல்லை.

நாட்கள் அவளுக்கு விரக்தியுடனே நகர, அந்நிலையில் தான் கருவுற்றாள்.

அதனை இறுக்கத்துடன் அவனிடம் கூற, அவனோ பலமாக அதிர்ந்தான். “வாட்? ஹொவ் இஸ் இட் பாசிபிள்?” எனக் கேட்டதில் அவளுக்கோ ஒன்றும் புரியவில்லை.

“நான் குடுத்த மாத்திரையை கரெக்ட் ஆ போட்டியா இல்லையா?” என அவன் எரிச்சலாக கேட்க, அவளுக்கோ அப்போது தான் அந்த மாத்திரையின் நினைவே வந்தது.

“என்ன மாத்திரை… எதுக்கு அது?” எனக் கேட்டவளிடம், “உனக்கு சென்ஸ் இல்ல. நீ ப்ரெக்னன்ட் ஆக கூடாதுன்னு தான டேப்லட் குடுத்தேன். அதை போடாம விட்டுட்டு… இடியட். என்னை கேட்காம நீ எப்படி இதுக்கு பிளான் பண்ணலாம்…” எனப் பல்லைக்கடித்தான்.

அவளுக்கு தான் கண்ணெல்லாம் இருட்டியது. இதற்கு எப்படி பிளான் செய்வது என்று கூட அவளுக்கு தெரியாது தான். அவளோ கண்ணில் நீர் வழிய அவனைக் காண, அவனோ,

“உன்ன எல்லாம் பெரிய இடத்து பொண்ணுன்னு யாராவது சொல்லுவாங்களா. என் தலைல கட்டி வைச்சு எரிச்சலை கிளப்புறாங்க. கொஞ்ச கூட பார்ட்டி சென்ஸ் இல்ல. ட்ரெஸ் சென்ஸ் இல்ல. அட்லீஸ்ட் செக்ஸ்லயாச்சு என்னை சாட்டிஸ்ஃபை பண்றியா அதுவும் இல்ல. ச்சை. வர வர உன் கூட செக்ஸ் வைச்சுக்க கூட சுத்தமா பிடிக்கல. வேற எதுக்கு தான் நீ யூஸ் ஆவ…?” என வார்த்தைகளை உமிழ்ந்தவன்,

இறுதியாக “ஒழுங்கா போய் அபார்ட் பண்ணிட்டு என் முன்னாடி வா. இனிமேலாச்சு, என்னை சாட்டிஸ்ஃபை பண்ணு. இல்ல…” என்று விரல் நீட்டி எச்சரிக்கை, அவளுக்கு அவமானத்தில் முகம் கருத்தது.

“நான் உங்க பொண்டாட்டி விக்ராந்த். ஆனா, நீங்க என்னை ஏதோ விபச்சாரி மாதிரி ட்ரீட் பண்றீங்க” என அழுத்தம் தாளாமல் கேட்டே விட, அவன் அசட்டையாக, “அவளுங்க கூட ஒழுங்கா நடந்துப்பாளுங்க. நீ அதுக்கும் லாயக்கு இல்ல.” என்றே விஷத்தை கொட்டி விட்டு சென்றான்.

அதில் அதிர்ந்து வெகு நேரம் அழுது தீர்த்தவள், ஒரு முடிவுடன் திருப்பூருக்கு செல்ல முடிவெடுத்தாள்.

இடையில் இரு நாட்கள் மறுவீடு சென்று வந்ததோடு சரி. அதன்பிறகு அவர்களை பார்க்கவே இல்லை அவள்.

அதனால், சௌமியாவிடம் தான் கருவுற்றிருப்பதை கூறி விட்டு, அம்மா வீட்டிற்கு செல்வதாக கூற, அவரோ “இப்போ பிளான் இல்லைன்னு விக்ராந்த் சொன்னான்.” என புருவம் சுருக்கினார்.

‘மாமியார்ன்னா என்ன வேணாலும் கேட்பியா நீ’ என்ற கடுப்பை மறைத்துக் கொண்டு அவள் அழுத்தமாக நிற்க, அவர் பதில் கூறாமல் நகர்ந்து விட்டார்.

மாமனாரோ, “நம்ம குடும்பத்துக்கு ஏத்த மாதிரி நடந்துக்க” என்று சொல்லி விட்டு செல்ல, அவளுக்கு தான் ஒன்றும் புரியவில்லை. எப்படித்தான் நடக்க வேண்டும் என்று…

பின், திருப்பூருக்கு சென்றவளுக்கோ ராஜ மரியாதை தான். பின்னே வயிற்றில் வாரிசை சுமக்கிறாளே.

அவள் அதனை சட்டை செய்யாமல், அவள் தாயை தனியே அழைத்து, “அம்மா… இனிமே நான் அங்க திரும்பி போக மாட்டேன்” என அவர் தலையில் குண்டை போட, அவள் பேசுவதைக் கேட்டுக்கொண்டே வந்த அவளின் தமக்கை ஸ்ரீ தேவி, “என்னடி உளறுற?” என்றாள்.

“அங்க… அங்க இருக்கவே எனக்கு பிடிக்கல கா. நான் அங்க போகல.” என்றாள் பிடிவாதமாக.

ரோகிணி, “ஏண்டி… அங்க உன்ன ஏதாவது கொடுமை படுத்துறாங்களா?” என பதற, அவள் “ஆமா” என தலையசைத்தாள்.

“வீட்டு வேலை எல்லாம் பார்க்க சொல்றாங்களா?” என்று வினவ, “இல்லை” என தலையசைத்தாள்.

“பின்ன, துணிமணி நகை எதுவும் வாங்கி தராம உன் மாமியார் உன்ன ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்காங்களா”

அதற்கும் “இல்லை’ என்றாள்.

“மாப்பிள்ளை எதுவும் உன்னை அடிச்சுட்டாரா?”

“இல்லம்மா.”

“எதுவுமே இல்லன்னா என்னடி உன்னை கொடும படுத்துறாங்க?” இப்போது அவருக்கு கோபம் வந்தது.

தன் தாயை வெறித்த வான்மதி, “இதெல்லாம் செஞ்சா தான் கொடுமையா? ம்மா. அவன்… அவன் என்னை தினமும் டார்ச்சர் பண்றான். என்னால முடியல…” என கண்ணில் நீர் திரள கூற,

அவரோ, “ஏண்டி இதை போய் என்கிட்டயா சொல்லுவ. விவஸ்தை இல்ல.” என்று தலையில் அடித்து விட்டு நகர்ந்தார்.

ஸ்ரீ தேவி, “மதி என்ன ஆச்சு உனக்கு?” என பொறுமையாக கேட்க,

“அக்கா… அவன் என்னை என்னை தினமும் டார்ச்சர் பண்றான் கா. இப்போ கூட பேபியை அபார்ட் தான் பண்ண சொன்னான். ரொம்ப கஷ்டமா இருக்கு கா. இப்போ கூட, அவன் கூட இருந்தா பேபிக்கு சேஃப் இல்லன்னு தான் கிளம்பி வந்தேன்…” என்றாள் தேம்பலாக.

“இங்க பாருடி. ஆம்பளைங்கன்னா அப்படி இப்படி தான் இருப்பாங்க. அதுவும் உன் வீட்டுக்காரருக்கு வெளிய என்ன வேலையோ, நீ தான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போகணும். இப்ப தான கல்யாணம் ஆகி இருக்கு, இப்பவே எதுக்கு குழந்தைன்னு நினைச்சு சொல்லி இருப்பாரு.

உன் மாமாலாம் நான் மாசமா இருக்கும் போது, நைட்டு என்னை விடாம இம்சை பண்ணுவாரு. நம்ம தான், வளைஞ்சு நெளிஞ்சு அவங்களை தள்ளி நிறுத்தணும். அதெல்லாம் நீ தான் தெரிஞ்சுக்கணும்.” என்று அவளுக்கு அறிவுரை வழங்கி விட்டு போக, அவளோ கேட்பாரற்று அமர்ந்திருந்தாள்.

ஒரு மனமோ, ‘எல்லாருக்கும் கல்யாணம் ஆனா இப்படி தான் லைஃப் இருக்குமோ. நம்ம தான் தேவை இல்லாம, இப்படிலாம் யோசிக்கிறோமோ’ என்றெல்லாம் எண்ணி வதங்கி போனாள்.

முதல் மூன்று மாதம் வரை தாய் வீட்டிலேயே பொழுதை கழித்தவள், குறைந்த பட்சம் இந்த பிரிவிலாவது கணவனுக்கு தன் அருமை தெரியும் என்று தப்பு கணக்கு போட்டாள்.

அவனோ, இவள் இல்லை என்றால் இன்னொருவள் என்று உல்லாசமாக நாட்களை தள்ள, நான்காம் மாதத்தில் அவள் வீட்டினரே அவளை இருக்க விடவில்லை.

போக மாட்டேன் என கெஞ்சியும் அவளை சென்னையில் விட்டு விட்டு சென்றனர்.

அன்று, சரவணனும், சௌமியாவும் வெளியில் சென்றிருக்க, தயங்கியபடியே தன்னறைக்கு சென்ற வான்மதியின் விழிகள் தெறித்து விடும் அளவு விரிந்தது.

அங்கு அவளைக் கட்டியவன் தான் இன்னொரு பெண்ணுடன் படுக்கையில் இருந்தான்.

அதனைக் கண்டவளுக்கு மயக்கமே வர, விக்ராந்த்திடம் சிறு அதிர்வும் இல்லை. அப்பெண்ணை வழியனுப்பி விட்டு, “என்ன வந்துட்ட?” என அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்து விட்டு, “இன்னும் நீ அபார்ட் பண்ணலையா” என்றான் கோபமாக.

அவளோ அவனை விட கோபமாக, “யாரு அந்த பொண்ணு?” என கேட்க,

“என் ஃபிஸிக்கல் பார்ட்னர்” என்று விளக்கம் வேறு கொடுத்தவன், “நீ இருந்திருந்தா, நான் அவள் கூட வெளிலயே டேட் பண்ணிருப்பேன். நீ இல்லாததுனால அவளை வீட்டுக்கே வர வைச்சுட்டேன்” என்றிட, அவள் அழுகையை அடக்க இயலாமல் குளியலறைக்குள் புகுந்தாள்.

“ஆஆஆ…” வென கத்தியவளுக்கு, ஆறுதல் சொல்லக் கூட யாருமில்லை.

ஆனால், அதன் பிறகு மீண்டும் அவன் அவளை உடல் ரீதியாக காயப்படுத்த அதன் விளைவாக, ஐந்தாம் மாத தொடக்கத்திலேயே, அவள் குழந்தையையும் இழந்து விட்டாள்.

சிறு வயதில் இருந்தே குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும் அவளுக்கு. இப்போதோ, தன்னுயிரை இழந்த வலி அவள் மனதை குத்திக் கிழித்தது. அதனை விட, சௌமியா வந்து, “நீ கொஞ்சம் கேர்ஃபுல் ஆ இருந்துருக்கலாம். ப்ச்” என்று தோளை குலுக்க, அவள் இன்னும் இறுகினாள்.

இதெற்கெல்லாம் காரணம் ஆனவனோ, அலுவலகம் சென்று விட, சில மணி நேரங்கள் ஏதேதோ சிந்தித்தவள், அவளின் தோழி வக்கீலாக இருந்ததில், அவளுக்கு அழைத்தாள்.

அவளும் உடனே இவளை தேடி வந்து விட, “எனக்கு இமீடியட் – ஆ டைவர்ஸ் வேணும். பேப்பர்ஸ் ரெடி பண்ணு.” என்று எங்கோ வெறித்தபடி கூற, அப்பெண் மோனிஷாவிற்கு எதுவும் புரியவில்லை. ஆனாலும், உடனே அவள் சொன்ன வேலையை செய்ய, உடல்நிலை தேறி மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு சென்றவள், விக்ராந்திடம், “எனக்கு டைவர்ஸ் வேணும்” என்றாள்.

“வாங்கிக்க. ஆனா, ஜீவனம்சம்ன்னு ஒத்த பைசா தர மாட்டேன்” என்றான் அவன்.

“தேவை இல்ல” என்றவள், விவாகரத்து காகிதத்தை நீட்ட,

“நீயே ஃபுல் ப்ரிபெரேஷனோட தான் வந்து இருக்க போல…” என அதில் கையெழுத்திட்டவன், “நானாச்சு உன்னை வச்சு மேனேஜ் பண்ணேன். வேற எவன் கிட்டயாவது போய் இப்படி நைட்டு இரிடேட் பண்ணீனா, உன்னை அடிச்சே கொன்னுருப்பான். என்ன கடைசி வரை என்னை நீ சாட்டிஸ்ஃபை பண்ணவே இல்லைலா” என குறையாக கூறி விட்டு செல்ல அவள் இறுகிய நிலையிலேயே இருந்தாள்.

அதற்குள் விவாகரத்து செய்தி இரு வீட்டிற்கும் தெரிய, சௌமியா வானத்திற்கும் பூமிக்கும் குதித்தார். ரோகிணியோ “சின்ன பொண்ண ஏதோ தெரியாம பண்ணுறா நீங்க எதுவும் மனசுல வச்சுக்காதீங்க சம்பந்தி…” என்று அவளை முறைக்க, அவள் அப்போதும் எந்த எதிர்வினையும் காட்டவில்லை.

அந்நேரம் காவலர்கள் அங்கு வந்து, விக்ராந்தை கைது செய்வதாக கூற, அனைவரும் இன்னும் அதிர்ந்தனர்.

தன்னை உடல்ரீதியாக காயப்படுத்தியதாலேயே, குழந்தை இறந்து விட்டது என்று அவன் மீது புகார் கொடுத்திருந்தாள் வான்மதி. மேலும், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவன் மீது குற்றச்சாட்டு வைக்க, பரணியோ நெஞ்சை பிடித்தார்.

இப்படி கணவன் மனைவிக்குள் நடக்கும் விஷயத்தை ஊரறிய கூறி அவமானப்படுத்துகிறாளே என்ற வேதனையில் வந்த வலி அது.

விக்ராந்த் தான், எரிமலையாக நின்றிருந்தான். இதுவரை யாரும் அவனை கை நீட்டி ஒரு வார்த்தை கூறியதில்லை. அதற்கு அவன் அனுமதி அளித்ததும் இல்லை. இன்று ஒரு பெண் தன்னை சிறையில் அடைத்து விட்டாளே என்று உள்ளுக்குள் கனன்றான்.

இரு நாட்களில் அவன் பண பலம், அதிகார பலத்தை வைத்து வெளியில் வந்து விட்டாலும், இரு நாட்கள் உள்ளே இருந்ததை எண்ணி அவனுள் பெரும் வஞ்சமே சூழ்ந்தது.

அவன் மீது புகார் கொடுத்து விட்டு, அவள் திருப்பூருக்கு சென்று விட, அங்கோ அவளின் வீட்டினர் அவளை தகாத வார்த்தையில் திட்டி தீர்த்தனர்.

கடும் ரௌத்திரத்துடன் அவளை தேடி அங்கு வந்த விக்ராந்த், ஓங்கி அவளை அறைந்தான்.

“யூ பிட்ச். என் மேலயே கம்பளைண்ட் குடுக்குறியா? உன்னை சாவடிக்காம விட மாட்டேன்…” என அவள் கழுத்தை பிடிக்க, அவளோ ‘இவன் எப்படி வெளியில் வந்தான்’ என்று திகைத்து, “இதையும் நான் கம்பளைண்ட் – ஆ குடுப்பேன் மிஸ்டர் விக்ராந்த்.” என்றாள் காட்டமாக.

அவனோ விழி சிவந்து நிற்க, சௌமியா வந்து தான் அவனை தடுத்தார். அவனுடன் அவரும் தான் வந்திருந்தார். “விக்ராந்த் இப்போதைக்கு இந்த பிரச்சனைய இப்படியே விட்டுடு. இது கொஞ்சம் சீரியஸ் இஸ்ஸியூவா போயிட்டு இருக்கு. அவ கேஸை வாபஸ் வாங்கலைன்னா கஷ்டமா போய்டும்” என அவனிடம் கிசுகிசுக்க,

“இவள் கேஸை வாபஸ் வாங்கமாட்டேன்னு வேற சொல்லுவாளா?” என அவளை கோபத்துடன் நெருங்க, “நீ என்னை கொன்னாலும் நான் வாபஸ் வாங்க மாட்டேன். உன்னால என்ன புடுங்க முடியுமோ போய் புடுங்கு போ!” என்றவளைக் கண்டு இன்னும் இன்னும் ஆத்திரம் சூழ்ந்தது.

சௌமியாவோ, “ஹே. ஹோல்டு யுவர் டங்க்!” என்று விரல் நீட்டி எச்சரிக்க, “ஏய் ச்சி மூடிட்டு போடி.” என்று அவரையும் மரியாதை இல்லாமல் பேச, பரணிக்கும் ரோகிணிக்கும் தான் அவமானமாக இருந்தது.

பரணி, “மாப்பிள்ளை நீங்க போங்க. இந்த கேஸை நான் ஒன்னும் இல்லாம பண்றேன்…” என்று விக்ராந்திடம் கிட்ட தட்ட கெஞ்ச, அவனோ அவளை நோக்கி ஒரு வஞ்சப் பார்வையை வீசி, “என்னைக்கா இருந்தாலும் இதுக்கு நீ எனக்கு பதில் சொல்லியே ஆகணும்டி. உன்னை என் கால்ல விழ வைக்கிறேன்.” என நெருப்பை கொட்டியவன், சினத்துடன் அங்கிருந்து சென்றான்.

சௌமியா தான், “நீ எல்லாம் என்ன பொண்ணு. கட்டுன புருஷன் மேல இப்படி தான் கேஸ் குடுப்பியா?” என கத்தினார்.

“உன் பையன் என் முன்னாடியே இன்னொருத்தி கூட கூத்தடிக்கிறான். அதை போய் அவன்கிட்ட கேளு போ!” என அவளும் கத்த, “நீ ஒழுங்கா இருந்திருந்தா அவன் ஏன் அப்படி பண்ணிருக்க போறான். நீ தான் அவனை உன் பக்கம் இழுத்து இருக்கணும். தப்பு பண்ணா திருத்தி இருக்கணும்” என வஞ்சகமே இல்லாமல் பேச,

அவளோ விழி இடுங்க, “நான் ஒன்னும் அன்னை தெரசா இல்ல. ரோட்டுல போற சொறி நாயை எல்லாம் திருத்த நான் சமூக சீர் திருத்தவாதியும் இல்ல.” என்றாள் கடும் கோபத்துடன்.

அதில், சௌமியாவும் விருட்டென அங்கிருந்து வெளியேற, இதுவரை எதிர்த்து ஒரு வார்த்தை பேசாத தன் மகள் இப்படி வார்த்தைகளில் வரம்பற்று பேசுவதைக் கண்டு திகைத்து கூனி குறுகினார் பரணி.

அவரின் வேதனை கோபமாக வெளிவந்து அவளை அறைய வைக்க, அவள் வாங்கிக்கொண்டு அசையாமல் நின்றாள்.

“இன்னும் ஒரு நிமிஷம் நீ இங்க இருக்க கூடாது. போ வெளிய.” என வாசலை நோக்கி கை நீட்ட, அவளோ நிமிர்வுடன், “கண்டிப்பா போறேன். என் சொத்தை எனக்கு பிரிச்சு குடுங்க.” என்றாள் எகத்தாளமாக.

அதில் அனைவரும் அதிர, “வெளிய போய் பிச்சை எடுக்கணும்ன்னு எனக்கு தலையெழுத்து இல்ல. எனக்கு சேர வேண்டியத குடுங்க நான் போறேன். இல்ல கோர்ட்ல கேஸ் போட்டு தான் வாங்கணும்ன்னா அதுக்கும் நான் ரெடி தான்” என்றவள் அழுத்தத்தில் உச்ச நிலையில் இருந்தாள்.

எதிரில் யார் இருக்கிறார்கள் என்றெல்லாம் அவளுக்கு தெரியவில்லை. உடலெல்லாம் தீயாக எரிந்தது. மனமெல்லாம் உலையாக கொதித்தது. அதில், அவள் வயது வித்தியாசம் பாராமல் அனைவரையும் உதாசீனப்படுத்தினாள். ‘என்னை புரிந்து கொள்ளாத சொந்தங்களை நான் ஏன் புரிந்து கொள்ள வேண்டும்’ என்ற கடும் சினம் அவளுக்கு.

இறுதியில், இதற்கும் தங்களை அவமானப்படுத்துவாள் என்றெண்ணி, அவளுக்கென்று சொத்தை கொடுக்க, அதில் ஒன்று தான், இப்போது சுதாகர் பார்த்துக்கொண்டிருப்பது.

இந்த பிரச்சனை நடக்கும் போது தான், அவன் பயணம் முடிந்து வந்திருந்தான். வந்தவனுக்கு, தங்கையின் இறுகிய முகம் கண்டு நெஞ்சம் வலித்தது. என்ன பிரச்சனை என்று கூட முழுதாக தெரியவில்லை.

வீட்டினரிடம் கேட்டால், பிரச்சனையை சொல்லாமல், அவள் விவாகரத்து செய்ததை கூறி அவளை திட்டி தீர்த்தனர். இதில், இப்பிரச்சனையை பற்றி பேசி பேசி, இறுதியில் ‘அவளை கட்டுன புருஷன் தொட கூட கூடாதாம்…’ என உறவினர்கள் முன்பு மருவி இருந்தது.

அதனைக் கேட்டவனுக்கு ஒன்றும் புரியவில்லை. இதனைப் பற்றி அவளிடம் என்ன கேட்பது என தெரியாமல் தவித்தவன், அவள் வீட்டை விட்டு செல்ல எத்தனிக்கையில் அவளை நகர விடவில்லை.

“ப்ளீஸ் மதி. எங்கயும் போகாத. எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்.” என்று கெஞ்சினான்.

அதனை காதில் வாங்காதவளாய், அவள் வெளியேறி இருக்க அப்போதும் அவளை அவன் விட்டானில்லை. மீண்டும் சென்னைக்கு சென்றவளின் உடனேயே சென்று, இன்று வரை எந்த கேள்வியும் கேளாமல் அவள் மனம் மாறி வீட்டிற்கு வருவாள் என்று அவளுடனே இருக்கிறான்.

ஏசி ஓடும் சப்தத்துடன், இருவரின் இதயத்துடிப்பு அதி வேகத்தில் துடிக்கும் சப்தம் மட்டுமே அறை முழுதும் கேட்டது.

அழுது சோர்ந்தவள், இப்போது அழவும் தெம்பில்லாமல் விசும்பிக் கொண்டிருக்க, போர்வைக்குள் மொத்தமாக தன்னை சுருட்டி இருந்தாள்.

“கடைசி வரை நான் என்ன சொல்ல வரேன்னு யாருக்கும் புரியவே இல்ல. புருஷன்னா, தொட வேண்டியது தான்… ஆனா, என்னை பீரியட்ஸ் அப்போ கூட, விடாமல் டார்ச்சர் பண்றான்னு நான் எப்படி என் அம்மாகிட்ட சொல்லி புரிய வைப்பேன். சொன்னா கூட, அவனை நான் தான் தள்ளி வைக்கணும்ன்னு சொல்றவங்க கிட்ட, நான் என்னன்னு சொல்றது… அவன் என்னை ஆசையா தொடல. தினமும் ரேப் பண்றான்னு.” என்று கூறி விட்டு, அவனைப் பாராமல் தலையணையில் முகத்தை புதைத்திருந்தாள்.

ஒன்றுமே பேசவில்லை அவன். கரங்கள் இரண்டும் இறுகி மூடி இருந்தது. கண்கள் ஒன்றும் கண்ணீரை தாங்க வில்லை. மாறாக சிவந்து கனன்று கொண்டிருந்தது.

நெஞ்சத்தில் வலி ஒன்றும் எழவில்லை. மாறாக, அங்கு ஒரு பெரும் பிரளயமே நடந்து கொண்டிருந்தது. அவளுக்கு ஆறுதல் கூற உதடுகள் துடித்திட இல்லை. மாறாக, பற்கள் உடையும் அளவு வேதனையை அடக்கி, இதழ்கள் இறுக்கமாக மூடப் பட்டிருந்தது.

முகம் ஒன்றும் பெரிய அதிர்ச்சி எதையும் வெளிப்படுத்தவில்லை. மாறாக, கழுத்து நரம்புகள் புடைத்து வலியை சற்று வெளியே காட்டேன் என்று கெஞ்சிக் கொண்டிருந்தது.

வெகு நேரம் அவன் அப்படியே தான் அமர்ந்திருந்தான். அழுது அழுது அவள் உறங்கியும் இருக்க, அவன் நிலையில் சிறிதும் மாற்றம் இல்லை.

அங்கிருந்து செல்ல வேண்டும் என்று கால்கள் துடித்தது அவனுக்கு. ஆனால் எழ முடியவில்லை. அப்படியே அமர்ந்திருந்தான். இரண்டு மணி நேரம் கழித்து அவள் எழுந்து அவனைக் கண்டு சற்று திகைக்கும் வரை, அதே தவ நிலையில் அப்படியே அமர்ந்திருந்தான்.

தேன் தூவும்…!
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
59
+1
215
+1
10
+1
6

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. பெண்களின் வாழ்க்கை முறையையும் அவர்கள் கண்ட பல்வேறு அனுபவங்களையும் அழகாக செதுக்கியுள்ளீர்கள். தெளிந்த எழுத்து நடை. மேலும் சிறக்க வாழ்த்துகள்.