10 – காற்றிலாடும் காதல்கள்
எதிரே வந்த இந்திரனை அப்படியே காலையில் பார்த்தவனை அடைத்து வைத்திருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
“உடனே அப்படி என்ன அவசரம்? இந்த நொங்கு சாப்ட்டு அப்பறம் அவன பாக்கலாம்ல.. பதனி கூட எடுத்துட்டு வந்தேன்.” என இந்திரன் கூற மிருணாளினி அவனைப் பார்த்துவிட்டு அமைதியாக முன்னே செல் என்பது போல கையைக் காண்பித்தாள்.
அதைக் கண்டவன், “என்னடா? வாய் பேசாம வருது?” என கீதன் காதில் கிசுகிசுத்தான்.
“அவ அவன பாத்தே ஆகணும்ன்னு சொல்றா. வா என்னன்னு பாப்போம். இவக்கூட பொறந்த அக்காவ அவன் கொன்னுட்டான்னு சொல்றா. ஒண்ணும் புரியல. நம்ம தாத்தாவும் இதப்பத்தி ஒண்ணுமே சொல்லல.” என மெல்லப் பேசியபடி இருவரும் முன்னே நடக்க, மிருணாளினி அவர்களைப் பார்த்தபடி யோசனையுடனே பின்தொடர்ந்தாள்.
வெள்ளைச்சாமி தாத்தா தோப்பின் முடிவில் ஒரு குடோன் இருக்க, அதில் தான் அவனைக் கட்டிப்போட்டு வைத்திருந்தனர்.
“நீங்க இங்கயே இருங்க.” என மிருணாளினி அவர்களை வெளியவே நிற்கக்கூறினாள்.
“எதுவா இருந்தாலும் நாங்களும் வரோம். உன்னமட்டும் தனியா விடமுடியாது மிரு” கீதன் கூறியபடி உள்ளே முதலில் நுழைந்துக் கொண்டான். அவனைத் தொடர்ந்து இந்திரனும் உள்ளே செல்லக் கடைசியாகக் கதவையடைத்துவிட்டு மிருணாளினி உள்ளே சென்றாள்.
“அவன எழுப்பு. அவன் ஃபோன் எங்க?” என இந்திரனிடம் கேட்டாள்.
தனது டிராயர் பாக்கெட்டில் இருந்து எடுத்துக் கொடுத்துவிட்டு, அவன் முகத்தில் தண்ணீரை அடித்தான்.
அவன் எழும்முன், மிருணாளினி ஆதர்ஷ் எண்ணிற்கு அழைத்தாள்.
“என்னடா பேச பேச கட் பண்ற?” ஆதர்ஷ் இதற்கு முன் அவன் பேசும்போது நடந்ததைக் கேட்டான்.
“நான் மிருணாளினி பேசறேன். சொன்னா கேக்கவே மாட்டியா ஆதர்ஷ் நீ? என் கிருபா சாக நீயும், உன் தம்பியும் தான் முக்கியக்காரணம். நான் ஆர்வத்தோட நீங்க சொன்னதெல்லாம் நிஜம்னு நம்பி, உனக்கு அந்த ப்ராஜக்ட் செஞ்சேன். நீ என்னை மறுபடியும் உன் வலைல சிக்கவைக்க நெனைக்காத.” கோபமாகக் கூறினாள்.
“இங்க பாரு மிரு பேபி..”
“பேபி சொன்ன கொன்னுடுவேன்.“
“சரி சரி சொல்லல.. எனக்கு உன் திறமை வேணும். நீ எனக்கு வேலை செய்யணும். நீ எது கேட்டாலும், எவ்ளோ கேட்டாலும் குடுக்க என் பாஸ் ரெடியாயிருக்காரு.“
“எனக்கு என் கிருபா வேணும். அவ அநியாயமா செத்ததுக்கு பதிலடி குடுக்கணும். நீ சாகரியா?”
“இதெல்லாம் நான்ஸென்ஸ் டாக்ஸ் மிருணா. என் தம்பியும் தான் அந்த ப்ராஜக்ட்ல செத்துட்டான். ஆனா எனக்கு கெடைச்ச அமெளண்ட் இதுவரை நான் நெனைக்காத அளவுக்கு வந்துச்சி. நீ என்கூட வேலை செஞ்சா இன்னும் பலமடங்கு இதவிட அதிகமா பாக்கலாம். உனக்கு பர்சென்டேஜ் போட்டு தரேன். வேலை ரிஸ்க், ஆளுங்க எல்லாமே என்னுது. இடத்த கண்டுபிடிச்சி அத காட்ட வேண்டிய வேலை மட்டும் தான் உன்னது.“ எனப் பேரம் பேசினான்.
“நான் முடியாதுன்னு சொன்னா என்ன பண்ணுவ?”
“உன் அப்பா அம்மா அப்பறம் இப்ப நீ இருக்கற ஊர் அங்கிருக்க ஆளுங்க எல்லாருமே உன்னால கஷ்டத்த மட்டும் தான் இனிமே அனுபவிப்பாங்க. சாய்ஸ் இஸ் யுவர்ஸ்..”
“ஏன் இப்டி என்னை இம்சை பண்ற ஆதர்ஷ்? உமேஷ்க்கு தெரியாததா எனக்கு தெரியுது?” தன் தலையைப் பிடித்துக் கொண்டுக் கேட்டாள்.
“அவன் ரொம்ப ஸ்லோ மிருணா. நீ ஸ்பீட் அஹ் லிங்க் பண்ணி குடுக்கற. இவ்ளோ திறமைய வச்சிட்டு வெறும் ப்ரோபசர் அஹ் போய் எவ்ளோ சம்பாதிக்க போற? அதிகபட்சம் 1 லட்சம் மாசம் கெடைக்கும். என்கூட இருந்தா உனக்கு மாசம் ஒரு கோடி தரேன். கைவசம் நெறைய சுவடி கெடச்சிருக்கு.” என பேசியவன் குரலில் பணத்தின் மீது வெறியாகயிருப்பது நன்றாகப் புரிந்தது.
“இருக்கற பொதையல் எல்லாம் எடுத்து வெளிய வித்துட்டு அவங்கிட்ட நாளைக்கு பிச்சை எடுக்கணுமா?”
“இங்க பாரு மிருணா. இந்த தேசபற்று கதை எல்லாம் இங்க பேசாத. இது வியாபாரம். கோடிகோடியா இதுல கெடைக்குது. நம்ம திறமைக்கு ஏத்த வருமானம் இது தரப்ப என்ன யோசனை? உனக்கு இருக்க தமிழ் அறிவுக்கும், நுணுக்கத்துக்கும் நீ எல்லாம் வேற எங்கயோ இருக்க வேண்டிய ஆளு. வெறும் பத்து இருவதுக்கு டியூசன் எடுத்து ஏன் கஷ்டபடற? இவ்ளோ நேரம் நீ பேசறது என் வாய புடுங்கவா கூட இருக்கும். அதபத்தி எனக்கு கவலயில்ல. என்னை நீ மாட்டிவிட்டா நான் மட்டும் தான் உள்ள போவேன். ஆனா நீ நாங்க சொல்றத கேக்கலன்னா உன் அக்காவுக்கு நடந்தது தான் உன்னச்சுத்தியிருக்க எல்லாருக்கும் நடக்கும். நாளைக்கு உங்க ஊருக்கு வரேன். அங்க ஒரு மலைக்கோவில் இருக்காமே .. குகைல பல லட்சம் கோடி மதிப்பு இருக்க சிலை நகை எல்லாம் இருக்காம். இப்பதான் எனக்கு ப்ராஜக்ட் பைல் கைக்கு வந்துச்சி.. அத தொறக்க பல வருஷமா எல்லாரும் கஷ்டபடறாங்க. உனக்கு ஈசி தானே. நாளைக்கு மீட் பண்ணலாம் பாய்.” எனக் கூறி வைத்துவிட்டான்.
“என்ன புள்ள இது?”, இந்திரன் அதிர்ச்சியுடன் கேட்டான்.
“அவனுக்கு கள்ள ஊத்திவிடு… வெளிய போய் பேசிக்கலாம்.” எனக் கீதன் கூறிவிட்டுத் தரையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவள் கையை இழுத்துக்கொண்டு வெளியே வந்தான்.
அவள் நேராக சமையல் கூடம் வந்து தண்ணீர் எடுத்து அருந்திவிட்டு, அங்கிருந்தப் பலகையில் தலைக்கவிழ்ந்துப் படுத்துக் கொண்டாள்.
“எப்ப பாரு தலைய கவுதிட்டு படுத்துக்கறது” இந்திரன் அவள் படுத்திருப்பதைப் பார்த்துக் கூறினான்.
“எத்தன நாளு பாத்துட்ட நீ?” கீதன் இந்திரனிடம் வம்பு வளர்க்க ஆரம்பித்தான்.
“நேத்து இருந்து பாக்கறேனே.“ விட்டேத்தியாக அவளைப் பார்த்தபடிக் கூறினான்.
“இப்ப ரெண்டு பேரும் என்ன சொல்ல வரீங்க? நான் எப்படிப்பட்ட பொண்ணுன்னு யோசிக்கறீங்களா? இவ கூட ஏண்டா பழகிணோம்ன்னு நெனைக்கறீங்களா?” படுத்தபடியே கேட்டாள்.
“மொத நீ என்ன நடந்துச்சின்னு முழுசா சொல்லு. உன் கூட பொறந்த பொண்ணு எப்புடி செத்துச்சி? நீ என்ன வேலை அவங்களுக்கு செஞ்சி குடுத்த?”கீதன் அவள் எதிரே அமர்ந்துப் பொறுமையாகக் கேட்டான்.
“தமிழ படிச்சா வேலையே இல்லைன்னு பொலம்புறவங்கள தான் இப்பவரைக்கும் பாத்திருக்கேன் புள்ள. உனக்கு மாசம் ஒரு கோடி தாரேன்னு சொல்லி கூப்பிடறாங்க. நிச்சயமா தப்பான வேலை தான். ஆனா அந்த கூட்டத்துல நீ எப்புடி போய் சிக்குன?” என இந்திரன் கேட்டதும் எழுந்து அவனைக் கட்டிக்கொண்டாள்.
இத்தனை நாட்களாக அவளைக் குற்றவாளியாக்கி பேசிய மனிதர்களைத் தான் பார்த்து வந்திருக்கிறாள். இன்று பார்த்து இரண்டே நாட்களான ஒருவன் நீ எப்படி அங்கே சிக்கினாய் என்று கேட்டது அவளுக்கு அவளின் மீதான நன்மதிப்பை உயிர் பெறவைத்தது.
“நீ என்னை தப்பா நெனைக்கலியா இந்திரண்ணா?” கண்களில் துளிர்க்கக் காத்திருக்கும் நீருடன் கேட்டாள்.
“உன்ன எப்புடி தப்பா நெனைப்பேன். உன் கண்ண பாத்தா நீ தப்பான வேலை பாக்கற புள்ளையாட்டம் இல்ல. ஏதோ சந்தர்ப்பவசமா தான் போயிருக்கணும்.” என இந்திரன் அவளைப் பார்த்துக் கூறினான்.
“ரொம்ப ரொம்ப நன்றி இந்திரண்ணா.. நீயாவது என் நிலமைய அனுமானம் செஞ்சிருக்க. கீதனுக்கு எம்மேல சந்தேகம் இருக்கு ஆனா அவன் எதுவும் கேக்காம என்னை கவனிச்சிட்டு உக்காந்திருக்கான். நீ ஒருத்தனாவது என்னைய நம்புற. எனக்கு அது போதும். அவனுங்கள முடிச்சி கட்டிடறேன்.” கண்களில் வெறி மின்னக் கூறினாள்.
“இப்ப உன்னைய யாரு நம்பல? ஏன் இப்புடி பேசிட்டு இருக்க?”இந்திரன் அவளைக் குழப்பமாகப் பார்த்தான்.
“இந்த சம்பவத்த பத்தி முழுசா சொன்னா தான் உங்களுக்கு புரியும். என் கிருபா இறந்த அப்பறம் என்கிட்ட பேசக்கூட யாருமே இல்ல. எல்லாருக்கும் கிருபா ஒரு ஆக்சிடென்ட்ல இறந்துட்டான்னு தான் தெரியும். ஆனா அவ சாக காரணம் அந்த ஆதர்ஷ்ஷும், மணீஷும் தான். ஆனா கிருபா என்கூட அந்த மலைக்கு வந்தப்ப தான் இறந்துட்டாங்கறதால நான் தான் காரணம்ன்னு என் அப்பாவும் அம்மாவும் நெனைக்கறாங்க. அவங்களும் அதனால என்கிட்ட பேசறதே இல்ல. எனக்கு டென்ஷன் அதிகமாகி மயக்கம் போட்டு விழுகவும், அத தாத்தா பாத்துட்டு என்னை இங்க வர சொல்லிட்டு எனக்கு முன்ன கிளம்பி வந்தாரு. என்னோட தேடல் அவள கொன்னுடிச்சின்னு என் ஃபிரண்ட்ஸ் கூட யாருமே என்கிட்ட பேசறது இல்ல.”
“நீ என்ன தேடின? அவங்கிட்ட எப்படி போன? என்னன்னு முழுசா சொல்லு புள்ள.“ இந்திரன்
“நான் தமிழ்ல பி.எச்.டி பண்ணிட்டு இருந்தேன். என் தீஸிஸ் கூடவே சுவடி தமிழ் மூலமா பல அறிய விஷயங்கள இந்த நாட்டுக்கு பலம் சேர்க்க உதவும்படியாவும் பண்ணலாம்ன்னு ஆசை. அதான் நான் சுவடித்தமிழ் படிக்க கத்துக்க ஏற்பாடு செஞ்சிட்டு இருந்தேன். அப்போ எங்க சார் மூலமா இவங்க கூட்டம் என்னை வந்து பாத்துச்சி. அவங்க குடுத்த ஹிண்ட் வச்சி சுவடிய தேடியெடுத்து படிச்சி அந்த இடத்த கண்டுபிடிச்சி போன இடத்துல தான் கிருபா மலைல இருந்து விழுந்து இறந்துட்டா. அப்பறம் தான் இவனுங்க திட்டம்போட்டு என்னை இப்படி ஒரு திருட்டுவேலை பாக்க வச்சிருக்காங்கன்னு தெரிஞ்சது.”
“அந்த சுவடிய எப்படி எடுத்த மிரு?” கீதன் கேட்டான்.
“இவனுங்க தான் குடுக்கற மாதிரி குடுத்து முழுசா பாக்கறத்துக்கு முன்ன திருப்பியனுப்பிட்டாங்க. ஆனா அத கண்டுபிடிச்சே ஆகணும்ன்னு நெருக்கினதால அத நானே எடுத்து படிக்கறமாதிரி சூழ்நிலை வந்துரிச்சி..”
“அப்படி அது எங்க இருந்தது?”
“பொதுவா பழைய சுவடிகள், பொக்கிஷங்கள் இருக்க குறிப்பு சுவடிகள் எல்லாமே சீக்ரெட் அஹ் வச்சிருப்பாங்க.“
“அப்பறம் எப்படி அது உனக்கு கெடச்சது?”
“மணீஷ் தான் எடுத்து குடுத்தான்.”உள்ளே இறங்கிய குரலில் கூறினாள்.
“எப்புடி?”
“திருடி குடுத்தான்.” எனக் கூறிவிட்டு தலையைக் கவிழ்ந்துக் கொண்டாள்.
“அவன எப்புடி உனக்கு தெரியும்?”
“அவனும் என் அக்காவும் லவ் பண்ணிட்டு இருந்தாங்க”
“அடப்பாவிகளா”, இந்திரன் முறைத்தான்.