Loading

மேகமே… மழை ஊஞ்சலிடு!

ஊஞ்சல் 1

ஆடி மாதம் அம்மனுக்கு மட்டுமல்ல, மழைக்கும் விசேஷம். ஒவ்வொரு வருடமும் அம்மனின் மனம் குளிர்ந்து சென்னை மாநகரம் அருவியில் நனைந்து கொண்டிருக்கும். இன்றும் மாலை ஐந்து மணியை நெருங்குவதற்கு முன் வீட்டிற்குச் சென்று விடலாம் எனப் பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தவளை ஆக்கிரமித்தது அனுமதி இல்லாமல்.

மழைத்துளி தன் மீது பட்டதும் இருசக்கர வாகனத்தை அப்படியே நிறுத்தியவள், தலை உயர்த்திப் பார்த்தாள். சினேகமாகச் சிரித்தது பார்த்திகாவைக் கண்டு. தானும் புன்னகைத்துத் தன்னை நோக்கி வந்த விருந்தாளியை மகிழ்வித்தவள் வாகனத்தை இயக்கப் போகும் நேரம் தந்தை அழைத்தார்.

எதற்கு அழைக்கிறார் என்று தெரிந்தும் எடுத்தவள், “சாரி அப்பா, நீங்க எத்தனை தடவை கேட்டாலும் என்னால முடியாது. வரவேண்டாம்னு சொல்லிடுங்க.” என்றாள்‌.

“அவங்க எல்லாரும் வந்துட்டாங்க, பாரு”

“வாட்?”

“நீ சீக்கிரமா வா…”

“எனக்குக் கல்யாணத்துல விருப்பம் இல்லன்னு ஆயிரம் தடவை சொல்லிட்டேன்.”

“அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம், முதல்ல வீட்டுக்கு வா.”

“அவங்க முன்னாடியே வந்து சொல்லுவேன், பரவால்லயா?”

மகளைச் சமாளிக்க வழி தெரியாது சந்திரசேகர் திணறிக் கொண்டிருக்க, “வந்தவங்க முன்னாடி அப்பாவை அசிங்கப்படுத்தாத பாரு. உன் போட்டோவைக் கூடப் பார்க்காம அப்பா மேல இருக்கிற மரியாதைல வந்திருக்காங்க. வந்தவங்களை நல்லபடியா அனுப்பி வச்சிட்டு அதுக்கப்புறம் என்ன வேணாலும் பேசு.” எனப் பார்த்திகாவின் அன்னை அமுதா பேசினார்.

“வர வேண்டாம்னு சொல்லியும் வர வச்சது உங்களோட தப்பு. அப்பாவுக்காக, அம்மாவுக்காகலாம் என்னாலக் கல்யாணம் பண்ணிக்க முடியாது. நான் வீடு வந்து சேர்றதுக்குள்ள அங்க இருக்கற எல்லாரையும் அனுப்பிடுங்க.”

பெற்றோர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே அழைப்பைத் துண்டித்தவள் வானத்தைப் பார்த்தாள். அதில் அழகாகத் தெரிந்தான் அவள் மனம் கவர்ந்தவன். ஏழு வருடங்களுக்கு முன் பார்த்த அந்த முகம், இன்னும் நெஞ்சை விட்டு மறையவில்லை. இது போன்ற ஒரு மழை நேரத்தில் அவனைப் பார்த்த நியாபகங்கள் மழைத் துளியாய் நெஞ்சில் தேங்கி விட்டது. எங்கிருக்கிறானோ? அவனுக்காகக் காத்திருக்கிறாள்!

பிடிவாதக்கார மகளை ஒன்றும் செய்ய முடியாத நிலையில் நின்ற பார்த்திகாவின் பெற்றோர்கள், தீர்வு கிடைக்காமல் கையைப் பிசைந்து கொண்டிருந்தார்கள். அந்நேரம் சந்திரசேகரின் அன்னை ஒரு திட்டத்தைக் கூற, அனைத்தும் அழகாக நடந்தது.

வாழ்வில் நடந்த திருப்பு முனையை அறியாது சாவகாசமாக வாசலில் நின்றவள் முன்பு நின்றான் அவன். மழை நீரில் நனைந்து உடலில் ஒட்டிக் கொண்டிருந்த நீர் அனைத்தும் வெப்பத்தில் ஆவியானது. அதல பாதாளத்திற்கு அந்தச் சூடு அவளை இழுத்துச் சென்றது. கண் முன்னால் நிற்பவனின் தோற்றம் விழியில் பதிந்தாலும் நினைவில் பதியவில்லை.

‘நிச்சயமாக இது நிஜமில்லை!’ என்ற எண்ணம் அவளுக்குள். கனவில் தினம் தோறும் வருபவன், அவளுக்கு முன்பு… அவளோடு கதை அளந்து, அவளை ரசித்து, கைகோர்த்துக் காதல் வளர்த்தவனின் வரவைச் சற்றும் எதிர்பார்க்காதவள் அசையாது அப்படியே நின்றிருந்தாள்.

“எக்ஸ்கியூஸ் மீ…” என்ற தினேஷின் குரல் கூடச் செவியில் விழவில்லை.

பார்த்திகாவின் பாட்டி அவளை இழுத்து ஓரமாய் நிற்க வைக்க, நின்றிருந்தவன் அவளைப் பார்க்காது வீட்டை விட்டு வெளியேறினான். செல்பவனைப் பிடிக்கச் சென்றவளை இழுத்து உள்ளே விட்ட அவளின் பாட்டி,

“என் மகன் உன்னைப் பாசமா வளர்த்ததுக்கு ரொம்பப் பெரிய மரியாதையா குடுத்துட்ட. யாருன்னே தெரியாதவங்க உங்க அப்பாவைப் பத்திக் கேள்விப்பட்டு, புரோக்கர் சொன்ன ஒரே காரணத்துக்காக உன் போட்டோவைக் கூடப் பார்க்காம வந்தாங்க. அவங்க முன்னாடி இப்படித் தலை குனிய வச்சுட்டியே. அப்படி என்ன உனக்கு இந்த வயசுல இவ்ளோ இறுமாப்பு.” எனத் திட்டிக் கொண்டிருந்தார்.

அவர் கையைத் தட்டி விட்டவள் அவசரமாக வாசலில் சென்று நிற்க, காரில் ஏறி அமர்ந்தவன் அப்போதுதான் அவள் முகம் பார்த்தான். உடனே பற்கள் சலசலத்தது இதழ்கள் விரிந்ததில். உள்ளத்தில் இருந்த காதலைச் சிரிப்பில் காட்டி கேட்டின் அருகே ஓடி வருவதற்குள் அவன் ஓடி விட்டான்.

‘இவரு…’ என உள்ளுக்குள் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தவள், ‘என்னைப் பொண்ணு பார்க்க வந்தது இவரா?’ எனப் பேரானந்தத்தில் மிதக்க அதைக் கலைத்தார்,

“எதுக்குடி, அவங்களைத் துரத்த வர? அவங்க உன்னை ஒன்னும் பார்த்துட்டுப் போல. உன் தங்கச்சியைப் பார்த்துட்டுப் போயிருக்காங்க.” என்றார் பாட்டி.

“பாட்டி!”

“இனி உனக்கும் இந்தக் கல்யாணத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. கல்யாணம் நடக்கிற வரைக்கும் அவங்க முன்னாடி நிக்காத. ரொம்ப நல்ல குடும்பம் போல. உன் அப்பாவோட சூழ்நிலையைப் புரிஞ்சுகிட்டு உன் தங்கச்சியை மருமகளா ஏத்துக்கிட்டாங்க.”

“ஆனந்தியா?”

“ஆமான்டி, அவதான் உன் அப்பா மானத்தை இன்னைக்குக் காப்பாத்துனா. சொன்னது நியாபகம் இருக்கட்டும், அவங்க முன்னாடி நிக்காத.”

பௌர்ணமி அன்று கடலில் உண்டான பெரும் அலைகள் போல் உள்ளம் வீசி அடித்தது. அவனைப் பார்த்ததிலிருந்து காதில் விழுந்தது வரை எல்லாம் அவளுக்கு எதிராக இருக்க, ஓடினாள் தங்கையிடம். அவள் அறையில் இருந்த பெற்றோர்கள் இவளைப் பார்த்ததும் கோபத்தில் அங்கிருந்து சென்றுவிட,

“ஆனந்தி… அவரு…” எனப் பேசச் சென்றவள் அப்படியே திடுக்கிட்டு நின்றாள்.

அவள் முகத்தில் அப்படி ஒரு வெட்கம். அந்த வெட்கம் நடந்ததைக் கூறிவிட, உதடுகள் ஊமையானது. பரிதவிக்கும் உள்ளத்திற்கு வழி கிடைக்காது அப்படியே தங்கையின் காலடியில் அமர்ந்தவள்,

“அவரும் உன்னைப் பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டாரா?” மெல்ல மனம் வதங்கிக் கேட்க, ஆனந்தியின் வெட்கம் இரண்டு மடங்கானது.

“தேங்க்யூ சோ மச் அக்கா! எல்லாம் உன்னால தான். சத்தியமா அப்பா சொல்லும்போது துளிக் கூட எனக்கு விருப்பம் இல்லை. உன்னை மாதிரி நானும் வேணாம்னு சொல்லிடலாம்னு தான் இருந்தேன். ஆனா, அவரைப் பார்த்ததும் எல்லாம் மாறிடுச்சு. அதுவும் பேசுனதுக்கு அப்புறம்…” என மீதி வார்த்தையை வெட்கத்தில் முடித்தாள்.

ரத்தத்தில் இருந்து பிரிந்த கண்ணீர் கொட்ட உத்தரவு கேட்க, கட்டுப்படுத்தி அணை போட்டவள் நடந்ததை விசாரித்தாள். இந்த வரனைப் பார்த்துக் கொடுத்த தரகர், சந்திரசேகருக்குப் பல வருடப் பழக்கம். ஒரு நாள் எதார்த்தமாக மகளுக்கு விரைவில் திருமணம் முடிக்க வேண்டும் எனப் பேசி வைக்க, இன்று வந்தவன் தந்தையும் மகனுக்கு வரன் பார்க்கத் தரகரை அணுகியிருந்தார்.

நல்ல இடமாக இருப்பதால் சந்திரசேகரைப் பற்றிக் கூறினார். பல வருடமாகத் திருமணத்திற்குப் போக்குக் காட்டும் மகனை எப்படியாவது அழைத்துச் சென்று திருமணத்தில் தள்ளிவிட வேண்டும் என அவர் புகைப்படத்தைக் கூடப் பார்க்கவில்லை.

இந்நிலையில் தன் உயிரில் கலந்து, உயிராக வாழ்பவன் தான் தன்னைப் பார்க்க வந்திருக்கிறான் என அறியாது பார்த்திகா மறுத்து விட, சந்திரசேகரின் இரண்டாவது மகள் ஆனந்தி மணப்பெண்ணாக நிற்க வைக்கப்பட்டாள்.

அக்காவிற்காக வந்த வரனைத் தனதாக்கிக் கொள்ள ஆனந்திக்கு உடன்பாடு இல்லை. இருந்தும் பெற்றோர்களுக்காகச் சம்மதித்தாள். கையில் தேநீரைக் கொடுத்து வந்தவனுக்குக் கொடுக்கச் சொல்ல, “ஃபார்மாலிட்டி எதுவும் வேண்டாம் அங்கிள், நான் உங்கப் பொண்ணுகிட்டக் கொஞ்சம் பேசணும்.” என்றான் அதிகாரமாக.

எங்கோ பார்த்தபடி நின்றிருந்த ஆனந்தி விழி உயர்த்தினாள். அவளுக்கு நேராக அவளைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான். விழிகள் உன்னிப்பானது அவன் தோற்றத்தில். கை இரண்டையும் கால் முட்டியில் வைத்துக் கொண்டு விரல்களைக் கோர்த்திருந்தவன் விழிகளில் அப்படி ஒரு கூர்மை. தன்னை எடை போடுகிறான் என்பதைக் கண்டு கொண்டவள் அப்பொழுதுதான் தன் அலங்கார நிலையை உணரத் துவங்கினாள்.

அவசரத்திற்குத் தயாராகி வந்தவள் எல்லாம் சரியாக இருக்கிறதா எனச் சரி பார்த்துக் கொள்ள, அதைக் கவனித்தவன் புருவங்களில் ஒரு புருவம் உயர்ந்தது. அவன் தோற்றம் காவல் துறையில் இருக்கிறான் என்றாலும், இந்தச் சின்னச் செய்கை ‘அழகன்’ எனச் சொல்ல வைத்தது. தன்னுடைய உணர்வுகளை விழி வழியே புரிந்து கொள்ளும் ஆனந்தியின் செயலில் சின்னப் புன்னகையை இதழோரம் மறைத்து வைத்தான்.

“மச்சான்!”

“என்னடா?”

“பேசல்லாம் வேணாம் டா, இந்த இடம் உனக்குச் செட்டாகாது.”

“என்னடா உளறிட்டு இருக்க? சும்மா இருந்தவனை உசுப்பேத்திக் கூட்டிட்டு வந்துட்டு வேணாம்னு சொல்ற?”

“எல்லாம் உங்க அம்மா, அப்பா பண்ண வேலை. எல்லாத்தையும் பண்ணிட்டு ஒன்னுமே தெரியாதவங்க மாதிரி உட்கார்ந்துட்டு இருக்காங்க பாரு. முன்னாடியே அந்தப் பொண்ணு தான் இந்தப் பொண்ணுன்னு தெரிஞ்சிருந்தா உன்னைக் கூட்டிட்டு வந்திருக்கவே மாட்டேன்.”

“எந்தப் பொண்ணுடா?”

“அங்கப் பாருடா மச்சான்.”

நண்பன் தினேஷ் கை காட்டிய இடத்திற்குப் பார்வையைச் சுழற்றினான். அங்கிருந்த சுவரில் ஆனந்தியை அணைத்தபடி நின்றிருந்தாள் பார்த்திகா‌. பெரிதாகத் தன் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தாதவள் என்றாலும் சட்டென்று நினைவு வரும் முகம் அது. தூரமாக நின்று தன்னை நோட்டம் விடும் அவள் பார்வை இன்றும் நினைவிருக்கிறது.

“எப்பவோ பார்த்துட்டேன்.”

“அடப்பாவி!”

“போலீஸ்காரன்டா…”

“என்னவோ இருக்கட்டும், வேணாம் எந்திரி.”

“எனக்குப் பொண்ணைப் பிடிச்சிருக்கு‌!”

“வாட்?”

“நிஜமாடா!”

“நீ பார்க்க வந்த பொண்ணு அந்தப் பொண்ணு. உன்னை வேணாம்னு சொல்லிடுச்சாம். அப்பாட்ட மெதுவா விஷயத்தைச் சொல்லி இந்தப் பொண்ணை நிக்க வச்சிருக்காங்க.”

சில நொடி மௌனம் காத்து, “முடிஞ்சது முடிஞ்சதாவே இருக்கட்டும்னு தான் அந்தப் பொண்ணு வேணாம்னு சொல்லி இருக்கு. நீ எதுக்குக் கிளறிகிட்டு இருக்க? எனக்கு இந்தப் பொண்ணைப் பிடிச்சிருக்கு, பேசிட்டு வரேன்.” என்றவன் ஆனந்தியோடு மொட்டை மாடிக்குச் சென்றான்.

“நான் போலீஸ்காரன்னு பார்த்ததும் தெரிஞ்சிருக்கும். என்னால குடும்ப வாழ்க்கைக்கு அதிக நேரம் ஒதுக்க முடியாது. அந்த மாதிரிச் சூழ்நிலைல, என் பார்வையைப் புரிஞ்சு நடந்துக்குற பொண்ணு வாழ்க்கைத் துணையா வந்தால் நல்லா இருக்கும்னு நினைச்சேன். அந்த மாதிரியே நீங்க இருந்ததால எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு. உங்களுக்கும் என்னைப் பிடிச்சிருந்தா சொல்லுங்க, மேற்கொண்டு பேசச் சொல்றேன்.” எனப் பட்டென்று போட்டு உடைத்தவன் பதிலுக்காக வெகு நேரம் காத்திருந்தான்.

அவன் துணிச்சல் சட்டென்று பேச வைத்து விட, ஆனந்திக்குப் பேச்சு வரவில்லை. அவனைப் பார்ப்பதும் தலை குனிந்து கொள்வதுமாக இருக்க, “ரெண்டு நாள் டைம் எடுத்துக்கறீங்களா?” எனக் கேட்டான்.

“ம்ம்…”

“கூல்!”

இதழ் பிரிக்காமல் மீசையில் சிரிப்பை மறைத்து அங்கிருந்து நகர, “உங்கப் பேரு…” இழுத்தாள்.

திரும்பியவன் இந்த முறை தாராளமாகச் சிரிப்பைக் கொடுத்து, “திருமேனி ஆவுடையப்பன்.” என்றிட,

“ம்ம்” தலை அசைத்தாள்.

“பிடிச்சிருக்கா?”

“பிடிச்சிருக்கு…”

“நான் பேரைக் கேட்டேன்?”

“நான் பேரைச் சொல்லல!” என்றதும் வானம் வாய் பிளந்தது அவன் சிரிப்புச் சத்தத்தில்.

உடலை விட்டுப் பிரிந்த உயிரைத் தங்கையிடம் காட்டாமல் தன் அறைக்கு வந்தவள்,

“திரு” என வாய் பொத்திக் கதறினாள்.

ஊஞ்சல் ஆடும்…

அம்மு இளையாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
11
+1
27
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்