Loading

ஜீவன் 1

பெருமாள் கோவிலில் திருமணம் நடக்க இருக்கிறது அவளுக்கு. திருமணம் என்ற ஒரு வார்த்தையில் பல கனவுகளை உள்ளடக்கியவள் எதற்கு இந்த நாள் பிறந்தது என்ற சோகத்தில் அமர்ந்திருந்தாள். அவளை சுற்றி இருந்த உறவினர்கள் சிரிக்குமாறு கட்டாயப்படுத்த,

 

“சிரிக்கிற மாதிரியா நீங்க எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க போறீங்க. ரெண்டாம் தரமா வாக்கப்படுற அளவுக்கு என் நிலைமை கீழ்த்தரமா போயிடுச்சுல. ச்சீ! இன்னொருத்திக்கு சொந்தமானவனை யூஸ் பண்ண வேண்டிய நிலைமை வந்துடுச்சே.”  

 

“அகல்யா… வாய மூடு! என்ன பேச்சு இதெல்லாம்? யூஸ் பண்றேன் அது இதுன்னு. பெத்தவ நான் உன்ன ஒன்னும் அப்படியே பொதக்குழியில தள்ளிட மாட்டேன். அந்தப் பையன் ரொம்ப நல்லவன். அவன் மட்டும் இல்ல அந்த குடும்பமே நல்லவங்க. சந்தர்ப்ப சூழ்நிலையில விவாகரத்து ஆயிடுச்சு. இந்த நாட்டுல யாருக்கும் ரெண்டாவது திருமணம் ஆகுறது இல்லையா” என்ற அம்மாவின் பேச்சில் சகித்துக் கொள்ள முடியாமல் எழுந்து நின்றாள்.

 

“நல்லவனுக்கு எதுக்கு டிவோர்ஸ் ஆகப்போகுது. எந்த பொண்ணும் வேண்டா வெறுப்பா விவாகரத்து பண்ணிட்டு போக மாட்டா.” என்ற அகல்யா அன்னையை நெருங்கி,

 

“என்ன கேட்ட? இந்த உலகத்துல யாருக்குமே ரெண்டாவது திருமணம் ஆகுறது இல்லையான்னு தான… அதெல்லாம் அவங்க விருப்பத்தோட நடக்குது. நீங்க எனக்கு அப்படியா பண்ணி வைக்கிறீங்க? என் கல்யாணத்தை நினைச்சு நான் எவ்ளோ கனவு கண்டிருப்பேன்னு தெரியுமா உங்களுக்கு. இன்னொருத்தி வேணாம்னு தூக்கி போட்ட ஒருத்தன இந்தா வச்சுக்கோன்னு என் கையில கொடுக்குறீங்க. அருவருப்பா இருக்கு நினைக்கவே.” என்றவள் விழிகள் கண்ணீரில் கரைந்தது.

அகல்யாவின் தாய் சுகன்யாவுக்கு அவள் நிலை புரிந்தாலும் அவள் விருப்பத்திற்கு செவி சாய்க்க மனமில்லை. அவருக்கும் வர இருக்கும்  மருமகன் பற்றி முழுதாக தெரியாது. இருந்தும் நம்பிக்கையோடு மகளை கொடுக்க சம்மதிக்கிறார். 

இதே பிடிவாதத்தோடு மணமேடையில் அமர்ந்தால் பிரச்சனையாகிவிடும் என்பதால் அவர் சமாதானம் செய்ய வர, 

 

“அகல்!” அழைத்துக் கொண்டு அவள் முன்பு நின்றார் ஆதிலட்சுமி.

நேற்று வரை அவள் வேலை பார்த்த  முதலாளியை பார்த்ததும் புன்னகைப்பவள் வேண்டா வெறுப்பாக திரும்பிக் கொள்ள, “உன்னோட கோபம் புரியுது. ஆனா, நீ நினைக்கிற மாதிரி என் மகன் தப்பானவன் இல்லை. பல தடவை அவன் விவாகரத்தை பத்தி உன்கிட்ட பேச முயற்சி பண்ணிட்டேன். நீ தான் காது கொடுத்து கேட்க மாட்றேங்குற.” என்றவரின் பேச்சில் விருப்பமில்லாதவள்,

“என்ன காரணமா வேணா இருக்கட்டும். எனக்கு ரெண்டாம் தாரமா கல்யாணம் பண்ணிட்டு போறதுல விருப்பமில்லை. உங்க ஆபீஸ்ல நான் ஒருத்தி மட்டும் தான் பொண்ணா? யாருக்கு விருப்பம் இருக்கோ அவளுக்கு உங்க பையன கட்டி வைக்க வேண்டியது தான. உங்க மேல எவ்ளோ மரியாதை வைச்சிருந்தேன். ஒரு பொண்ணோட வாழ்க்கைய பாழாக்குறோம்னு கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லையா.” என்று வெடித்தாள்.

“என்னடி இது…பெரியவங்கன்னு இல்லாம இப்படி பேசுற.” 

 

“கொஞ்ச நேரம் சும்மா இரு ம்மா. என் மனசுல இருக்குறதை இப்பவாது கேட்டுக்குறேன். நல்லா வசதியா தான இருக்காங்க. உங்க வசதிக்கேத்த மாதிரி யாரையாது பார்த்து கட்டி வைக்க வேண்டியது தான. அது என்ன தன்னை விட கீழ இருக்க பொண்ணா பார்க்குறது.” என்றவள் கோபம் புரிந்தது ஆதிலட்சுமிக்கு.

 

அவர் ஒன்றும் தனக்கு கீழ் வேலை பார்க்கும் பெண்ணை உபயோகிக்கும் நோக்கில் இத்திருமணத்தை நடத்தவில்லை. அகல்யாவை நான்கு ஆண்டுகளாக தெரியும் அவருக்கு. வேலையைத் தவிர வேறு எதைப் பற்றியும் பேசாதவள். மகன் ஆசைப்பட்ட ஒரே காரணத்திற்காக யார் என்று தெரியாத பெண்ணையே  ஏற்றுக் கொண்டவர் நன்கு தெரிந்த நல்ல பெண்ணை விட மனம் வருமா! மகனுக்காக நின்றார் அகல்யாவின் தாய் முன்பு.

முதலில் அவர் மறுத்தாலும் நம்பிக்கை கொடுத்து திருமணம் வரைக்கும் கொண்டு வந்து விட்டார். இவ்வளவு தூரம் முயன்றவருக்கு மருமகளின் மனதை மாற்ற மட்டும் முயலவில்லை.

கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் மௌனமாக நிற்கும் ஆதிலட்சுமியை முறைத்தவள், “என்ன பதில் சொல்றதுன்னு தெரியலையா இல்ல உண்மைய எப்படி சொல்றதுன்னு தயக்கமா” என்றவளை அடக்க பெரும்பாடுப்பட்டார் சுகன்யா.

 

அன்னையின் கையை உதறியவள், “ஏன்னா ரெண்டாவது திருமணத்துக்கு உங்க ஸ்டேட்டஸ்ல இருக்க எவளும் ஒத்துக்க மாட்டா. எங்களை மாதிரி நடுத்தர வர்கத்தை தான் தேடி வந்தாகணும். அப்பா இல்லாத குடும்பம்னு தெரிஞ்சு எங்களை அடிமையாக்க நினைச்சுட்டீங்க. 

 

கேள்விப்பட்டேன், என் தம்பிய இனிமே நீங்களே படிக்க வைக்கிறீங்கன்னு சொன்னதை. உங்க மகன் கூட வாழ போற வாழ்க்கைக்கு சன்மானமா! ஒன்னு மட்டும் மனசுல வச்சுக்கோங்க. நீங்க நினைக்கிற மாதிரி ஒரு நாளும் உங்க மகன் கூட நான் வாழ மாட்டேன். இன்னொருத்தி கூட குடும்பம் நடத்துனவன் கையால தாலி வாங்கப் போறதை நினைச்சா எனக்கே என்னை பிடிக்கல. 

இவங்களுக்கு என்ன சொக்குப்பொடி போட்டீங்களோ… ஒரு வாரமா எமோஷனல் பிளாக் மெயில் பண்ணிட்டு இருந்தாங்க. எங்க அம்மா கட்டாயப்படுத்துனதால தான் உங்க வீட்டுக்கு வரேன். மத்தபடி என்னை அடக்கி உங்க காரியத்தை சாதிக்கலாம்னு நினைக்காதீங்க. இதுவரைக்கும் நீங்க பார்த்த அகல்யா வேற. இனிமே நீங்க பார்க்க போற அகல்யா வேற. பண திமிர்ல என்னை அடக்கி பணிய வைக்கணும்னு நினைச்ச உங்களுக்கு தண்டனையே இனி தான் இருக்கு.” என்ற சவாலோடு அவரை விட்டு நகர்ந்தாள்.

நகர்ந்தவள் திரும்பி நின்று, “அப்புறம் உங்க மகன் கிட்டயும் சொல்லி வச்சிடுங்க. ஒருத்தி போதாதுன்னு இன்னொருத்திக்கு ஆசைப்பட்ட அவனுக்கு இனிமே தான் கெட்ட காலம்னு.” என்றாள்.

அகல்யா பேசியதற்காக சுகன்யா வருங்கால சம்மந்தியிடம் மன்னிப்பு வேண்ட, “அவ கோபம் ரொம்ப நியாயமானது. எந்த பொண்ணும் இதை ஏத்துக்குறது கொஞ்சம் கஷ்டம் தான். அவ சொன்ன மாதிரி நீங்க ஒன்னும் கஷ்டப்படுற குடும்பம் இல்லை. என் மகனுக்கு நல்ல வாழ்க்கை அமையனும்னு ஆசைப்பட்டனே தவிர ஸ்டேட்டஸ் பார்க்கல இன்னைக்கும், என்னைக்கும். நான் எடுத்திருக்க முடிவு நிச்சயம் சரியாகும்.” என்றார் பல வருடங்களாக தனக்குள் அடங்கி இருக்கும் துயரத்தை வெளிக்காட்டாமல்.

***

பல கனவுகளை அழித்து மணமேடை ஏறினாள் அகல்யா. கண்கள் சிவந்து இருந்தது ஆனந்தத்தில் அல்ல வருத்தத்தில். பக்கத்தில் இருப்பவன் வாசத்தைக் கூட தன்னருகில் சேர்க்கக்கூடாது என்பதற்காக விலகியே அமர்ந்திருந்தாள். அவளின் நிலை புரியாமல் ஐயர் சடங்கை நிறைவேற்ற குறியாக இருக்க,

 

‘எதுக்குமா எனக்கு இப்படி ஒரு வாழ்க்கைய கொடுத்த.’ அன்னையைப் பார்த்து வெதும்பினாள்.

 

மகள் கண்ணீரில் இப்பொழுது அவர் மனம் பரிதவிக்க, செய்யக்கூடாத தவறை செய்து விட்டதாக உணர்ந்தார். அவர் எண்ணத்தை அறிந்த ஆதிலட்சுமி தட்டிக் கொடுத்து சமாதானம் செய்ய,

“இது சரியா வருமா ஆதி” என்றார் அவரின் கணவர் தயாளன்.

 

“வரும்’ங்க, அந்த நம்பிக்கையில தான் பிடிவாதமா இருந்தவனை செத்துடுவேன்னு மிரட்டி அங்க உட்கார வைச்சிருக்கேன். இத்தனை வருஷம் கேட்காதவன் இப்ப கேட்டிருக்கானா இது எல்லாமே அதோ… அந்த கடவுளோட செயல்.” என்றவர் கைகாட்டினார் அவர்களுக்கு பின்னால் இருக்கும் தெய்வத்தை.

 

ஒரு முறை அதை பார்த்துவிட்டு, “இந்த வாழ்க்கையாது என் மகனுக்கு நல்லபடியா அமையனும்.” மனதார வேண்டிக் கொண்டார் தயாளன்.

கணவன் வேண்டுதல் எதுவாக இருக்கும் என்பதை நன்கு அறிந்தவர் கையெடுத்து கும்பிடாமலே கடவுளை வணங்க, “இந்த பொண்ண நினைச்சா தான் கவலையா இருக்கு ஆதி. விருப்பமில்லாத பொண்ணுக்கு இப்படி ஒரு துரோகத்தை செய்றோம்னு குற்ற உணர்ச்சியா இருக்கு.” என்றவர் திகைத்தார் ஆதிலட்சுமியின் கண்ணீரில்.

கணவனின் அதிர்வில் சோகத்தை மறந்து புன்னகைத்தவர், “உங்களை விட எனக்கு தான் அதிக குற்ற உணர்ச்சி. ஆனா, இப்ப எனக்கு நியாயத்தை விட ஒரு அம்மாவா என் மகன் வாழ்க்கை தான் ரொம்ப முக்கியம். இப்படியே விட்டா நமக்கு அப்புறம் அவனுக்கு ஒரு வாழ்க்கை இல்லாம போய்டும். 

 

நாலு வருஷமா இந்த பொண்ண பார்த்துட்டு இருக்கேன். எல்லா விதத்துலையும் நம்ம பையனுக்கு பொருத்தமா இருப்பா. ரெண்டு பேரோட வாழ்க்கை நல்லபடியா அமையும். பேரன் பேத்தி’னு மடி நிறையுற அளவுக்கு நம்ம சந்தோஷமா இருக்க போறோம்.” என்று நம்பிக்கை கொடுத்தார்.

இவர்கள் கொண்டிருந்த நம்பிக்கை சிறு துளி கூட இல்லை அகல்யா மனதில். மனம் முழுவதும் கொதித்துக் கொண்டிருந்தது அவளுக்கு எதிரில் இருக்கும் அக்னி குண்டத்தை போல். பெரியவர்களும் திருமணத்தை நடத்தி வைக்கும் ஐயரும் சொல்லிய அனைத்தையும் வேண்டா வெறுப்பாக செய்து முடித்தவள் நொடிக்கு நொடி அதிர்ந்து கொண்டிருந்தாள் கழுத்தில் தாலி ஏறும் நேரத்தை எதிர்பார்த்து.

எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் ஐயர் தட்டை அனைவரிடமும் ஆசீர்வாதம் செய்ய கொடுக்க, தலை தெறிக்க ஓட முடிவெடுத்தது அகல்யாவின் மனம். ஒரு வார காலமாக எவ்வளவோ சமாதானம் செய்து விட்டாள் சுகன்யாவை. அவரோ பிடிவாதமாக ஆதிலட்சுமியை போல் தற்கொலை பயத்தை காட்டி மிரட்டாமல் பாசத்தைக் காட்டி மிரட்டினார்.

இருபத்தி ஆறு வயதாகிறது இவளுக்கு. பலமுறை திருமணத்திற்கு முயற்சி செய்து தோற்று விட்டார் சுகன்யா. சரியான வரன் அமையாமல் தள்ளிக் கொண்டு இருந்தது. அவளுடன் படித்த அனைவருக்கும் திருமணம் ஆகி கையில் குழந்தை இருக்க, மகளின் எதிர்காலத்தை நினைத்து அழுது புலம்புவார் .

 

ஆதிலட்சுமி பேச வந்ததும் முதலில் மறுத்தவர் யோசிக்க ஆரம்பித்தார். இதுதான் கடவுளின் முடிவாக இருக்குமோ என்று சிந்தித்தவர் திருமண தேதியை குறித்து, மகளையும் அழைத்து வந்து விட்டார்.

மாங்கல்யத்தை எடுத்த ஐயர் மாப்பிள்ளையிடம் கொடுக்க, அவன் கைகள் நடுங்கியது. அதை கவனித்த அகல்யா அவனை நிமிர்ந்து பார்க்காமல்,

 

“என்னமோ முதல் தடவை கட்ட போற மாதிரி சீன் போடுற. உனக்கு இதெல்லாம் பழசு தான.” என்றாள்.

 

கண்களை மூடிக்கொண்டு அவள் வார்த்தையை உள்வாங்கிக் கொண்டிருந்தான் அவன். இருவரும் பேசிக் கொள்வதை அறிந்த ஆதிலட்சுமி ஐயரிடம் சைகை செய்ய, மணமகன் கையில் தாலியை திணித்தார். மணமேடையில் அமர்ந்திருந்தாலும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் இருந்தார்கள் அந்த நொடி வரை. கண்ணில் நீர் கோர்க்க தலை குனிந்து அமர்ந்திருந்தாள் அகல்யா. 

 

திரும்பும் பொழுது அவளின் கண்ணீர் காட்சியளித்தது அவனுக்கு. நொடி தயங்கி தாலியை பின்னெடுக்க, ஆதிலட்சுமியின் அழுத்தத்தில் தாலி கட்டுவது போல் இல்லாமல் ஏதோ மூட்டைக்கு கயிறு கட்டுவது போல் இறுக்கமாக மூன்று முடிச்சு போட்டு முடித்தான் அவன். 

 

யாரவன்!

 

ஜீவன் துடிக்கும்…

 

ஜீவன் 2

 

தாரைதாரையாக கண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது அகல்யாவிடம். அதில் ஒன்று தாலியில் குங்குமம் வைக்கும் போது அவன் கையில் விழ, அப்பொழுது தான் முகத்தை முழுவதாக பார்த்தான். 

 

‘இந்த பொண்ணா!’ என்ற அதிர்வோடு அவன் அன்னையை ஏறிட, அவரோ புருவம் உயர்த்தினார். உடனே அவன் முகம் சிவந்து விட்டது. மணமேடையை விட்டு எழுந்தவன் யார் பேச்சையும் கேட்காமல் சென்று விட்டான். அகல்யா போனால் போகட்டும் என்ற தோரணையில் அமர்ந்திருக்க, சுகன்யா தான் மகளின் வாழ்வை நினைத்து கலங்கினார்.

 

“நல்லா அழும்மா. பொண்ணு வாழ்க்கைய நாசமாக்கினதுக்காக இனி நீ தினமும் அழ வேண்டியதா  இருக்கும்.” என்று அவரை நோகடித்தாள்.

மருமகளின் வார்த்தையை கேட்டாலும் அமைதியாகவே நின்றிருந்தார் தயாளன். எப்படியும் சென்றவன் திரும்பி வரமாட்டான் என்பதால் அவர் அழைக்க செல்லவில்லை. பின்னால் கத்திக் கொண்டு ஆதிலட்சுமி வர,

 

“போதும் மாம்! என் பின்னாடி வராதீங்க. யாரைக் கேட்டு இவளோட எனக்கு கல்யாணம் பண்ணிங்க. ஐ ஹேட் வெரி மச் மாம். அவளைப் பார்த்தாலே எனக்கு பிடிக்காது. எனக்கு சொந்தமான ஆபீஸ்ல உட்கார்ந்து சட்டம் பேசுவா. என்னால அவளோட வாழ போறதை பத்தி யோசிக்க கூட முடியாது. அவளை இங்கயே விட்டுட்டு வீட்டுக்கு வாங்க.” என்றவன் கத்திக் கொண்டிருக்கும் போதே…

 

“பரவாயில்லையே தரணி” என்று புன்னகைத்தார் ஆதிலட்சுமி.

 

அன்னையின் சிரிப்பில் பற்களை கடித்தவன் எதற்கு என்று பார்க்க, “நேத்து வரைக்கும் கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டு இருந்தவன் இன்னைக்கு அவளோட வாழ மாட்டேன்னு வாழ்க்கைய சேர்த்து வைச்சு பேசுறான். என் மகன் சீக்கிரம் மாறிடுவான் போலையே.” என்று மீண்டும் புன்னகைத்தார்.

 

“அம்ம்மா!” என்று கத்தினான் அவர் பேச்சை கேட்க விரும்பாத தரணீஸ்வரன். 

 

“அவளோட வாழ போறன்னு நான் எப்ப சொன்னேன். என் வீட்ல அவ இருக்க போறது எனக்கு பிடிக்கல. அவளைப் பார்த்தாலே அப்படி ஒரு எரிச்சல் வருது. இவதான்னு முதல்லே சொல்லி இருந்தா இங்க வந்து இருக்கவே மாட்டேன். அவளும் அவ மூஞ்சியும்.” என்றவன் கடுப்பில் தரையில் இருக்கும் கல்லை ஓங்கி அடித்தான்.

“அவ உன்னோட பொண்டாட்டி இந்த மாதிரி பேசுறதை இத்தோட நிறுத்திக்கோ. ஒரு தடவை நீ முடிவெடுத்த, நான் சம்மதிச்சேன். இப்ப நான் முடிவெடுத்து இருக்கேன் நீ சம்மதிச்சு தான் ஆகணும். உனக்கு பிடிக்குதோ இல்லையோ அவ தான் இனிமே உனக்கு பொண்டாட்டி. உள்ள போ தரணி.” கராராக மகனிடம் உரைத்து விட்டார்.

“நீங்க சொல்ற எல்லாத்தையும் என்னால கேட்க முடியாது. அவளை இங்கயே விட்டுட்டு வீடு வந்து சேருங்க.” என்றவன் அவர் வார்த்தையையும் மீறி கிளம்பி விட்டான் அங்கிருந்து.

 

மகனின் செயலில் உள்ளம் நொறுங்கியவர் எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் அகல்யா முன்பு நின்றார். மகளின் வாழ்வை நினைத்து அழுது கொண்டிருந்த சுகன்யாவை பார்த்ததும் அவரின் குற்ற உணர்ச்சி அதிகமாக, 

 

“எங்க ஆதி அவன்?” விசாரித்தார் தயாளன்.

 

பதில் சொல்லாமல் தடுமாறியவரை, “அவங்க எப்படி பதில் சொல்லுவாங்க. பெத்த பிள்ளை அவங்க பேச்சைக் கேட்டா தான. இந்நேரம் எங்க குடிக்கப் போனானோ” நக்கலடித்தாள் அகல்யா.

“என் மகன் குடிகாரன் இல்லை.”

 

“மகா குடிகாரன்” என இன்னும் வெறுப்பேற்றினாள் அவரை.

 

மகளின் வார்த்தையில் திடுக்கிட்ட சுகன்யா, “என்னடி சொல்ற மாப்பிள்ளை குடிப்பாரா?” அழுகையோடு கேட்க,

 

“அது கூட தெரியாம தான் உன் பொண்ண கல்யாணம் பண்ணி கொடுத்திருக்கியா. எனக்கு தாலி கட்டுனானே ஒருத்தன் அவன் மட்டும் இல்லன்னா நம்ம ஊரு ஒயின்ஷாப் அத்தனையும் நஷ்டத்துல நாசமா போய்டும்.” என்று அவரை அதிரவிட்டாள்.

 

மகள் கொடுத்த அதிர்ச்சியில் கண்ணீர் நின்று விட்டது சுகன்யாவிற்கு. உடனே பார்வை சம்மந்தியை மொய்க்க, அவரோ வேறு பக்கம் திரும்பிக் கொண்டார். அவர் முன்பு நின்றவர், “என் பொண்ணு சொல்றது உண்மையா? உங்க பையன் குடிப்பாரா?” என்று கேள்வி எழுப்பினார்.

 

“உங்க பொண்ணு சொல்ற மாதிரி எல்லாம் இல்லை. கொஞ்சமா குடிப்பான்.” 

 

“அது என்ன கொஞ்சம்? குடிக்கிறதே தப்பு. இதுல உங்களுக்கு பெருமை வேற.” சிடுசிடுத்தாள் மருமகள் மாமியாரிடம்.

 

“என்னங்க இதெல்லாம்? பொண்ணு கேட்டு வரும்போது அவ்ளோ பேசினீங்க ஒரு வார்த்தை கூட என் மகன் குடிப்பான்னு சொல்லல. ஏமாத்தி என் பொண்ண உங்க பையனுக்கு கல்யாணம் பண்ணிட்டீங்களா. ஒரு குடிகாரனோட சேர்ந்து என் பொண்ணு எப்படி வாழ்வா. நீங்களும் ஒரு பொண்ணு தான எப்படி இந்த உண்மைய மறைக்க முடிஞ்சது.” அடிக்காத குறையாக கேட்டுவிட்டார் சுகன்யா.

 

மனைவியின் மனம் உணர்ந்து தயாளன் சமாதானப்படுத்த, அங்கிருந்த சுகன்யாவின் சொந்தங்கள் கேள்வி கேட்க ஆரம்பித்தனர். அத்தனைப் பேரையும் அடக்கிய ஆதிலட்சுமி ஒரு வழியாக சுகன்யாவையும் சமாதானப்படுத்த,

 

“இவ்ளோ பெரிய உண்மைய மறைச்ச உங்க வார்த்தைய நான் எப்படி நம்புறது. தாலி கட்டுன கையோட என் பொண்ணு எப்படி நிக்கிறான்னு பாருங்க. எந்த பொண்ணுக்காது இப்படி ஒரு நிலைமை வருமா. தப்பு பண்ணிட்டேன்னு இப்ப யோசிக்கிறேன்.” என்றார்.

 

“நீங்க வருத்தப்படுற மாதிரி என் மகன் மோசமானவன் இல்லை. இனிமே என் மகன் மாறிடுவான் அந்த நம்பிக்கையில தான் கல்யாணம் பண்ணி வச்சிருக்கேன்.”

“ஓஹோ! உங்க பையன திருத்துறதுக்காக டீச்சர் வேலைக்கு எடுத்து இருக்கீங்களா என்னை.” இடைப் புகுந்தாள் அகல்யா.

பேச்சுக்கள் நான்கு பக்கமும் சூழ்ந்து கொண்டது ஆதிலட்சுமி தயாளனை. எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் தவித்துப் போனார்கள். தயாளன் மகனுக்கு அழைப்பு விடுக்க, அவன் எடுக்கவில்லை. 

 

“தயவு செஞ்சு நான் சொல்றதை புரிஞ்சுக்கோங்க. இப்ப எந்த பிரச்சினையும் பண்ணாம வீட்டுக்கு வாங்க அவன் வீட்ல தான் இருப்பான். இன்னைக்கு ஒரு நாள் மட்டும் டைம் கொடுங்க. நாளைல இருந்து எல்லாத்தையும் சரி பண்ணிடுறேன்.” என்றவர் வார்த்தைக்கு சுகன்யா பதில் கொடுக்கும் முன்,

 

“என்னது வரணுமா! தாலி கட்டிட்டு தனியா வர சொல்றீங்க. என் பக்கத்துல உக்காந்துட்டு இருந்தானே அவனை வர சொல்லுங்க. அவனோட சேர்ந்துதான் நான் உங்க வீட்டுக்கு வருவேன். இல்லன்னா எங்க வீட்டுக்கு போறேன்.” என்று மிரட்டினாள்.

 

“அகல், அவன் பிடிவாதத்தை பத்தி உனக்கே நல்லா தெரியும். நீ கொஞ்சம் ஒத்துழைச்சா தான் அவன சமாதானப்படுத்த முடியும். இந்த ஒரு தடவை மட்டும் என் பேச்சைக் கேளு.”

“யார் நீங்க, உங்க பேச்சை கேட்க? எனக்கு இப்போ தாலி கட்டுனவன் இங்க வந்தே ஆகணும். இல்லன்னா தாலி கட்டி ஏமாத்திட்டீங்கன்னு போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுத்துடுவேன். இங்க இருந்த அத்தனை பேரும் அதுக்கு சாட்சி. குடும்பத்தோட ஜெயில்ல தான் உட்காரனும் அப்புறம். உடனே அவன வர சொல்லுங்க.” இவ்வளவு நேரம் குரலில் இருந்த கடுமையோ எதிர்ப்போ இல்லாமல் திமிர் தெரிந்தது அவள் பேச்சில்.

கையறு நிலையில் பெற்றோர்கள் இருவரும் மகனுக்கு அழைப்பு விடுக்க, அவனோ அழைப்பை நிறுத்தி வைத்திருந்தான். தாலி கட்டி இரண்டு மணி நேரங்கள் ஆகிவிட்டது முழுமையாக. தரணீஸ்வரனும் வரவில்லை அகல்யாவும் அங்கிருந்து நகரவில்லை. 

 

என்ன செய்வதென்று தெரியாமல் தயாளன் வீட்டிற்கு கிளம்ப எண்ண, காவல் உடையில் நான்கு பேர் கோவிலுக்குள் வந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் தயாளன் மருமகளை பார்க்க, அவள் பார்வையோ மாமியாரை அலட்சியம் செய்து சிரித்தது.

 

“என்னம்மா இங்க பிரச்சனை, யாரு கம்ப்ளைன்ட் கொடுத்தது?” என்றவருக்கு பதில் சொன்னாள்,

 

“நான் தான் சார் உங்களுக்கு கால் பண்ணி இருந்தேன். இதோ இங்க நிக்கிறாங்களே இவங்க கட்டாயப்படுத்தி அவங்க மகனுக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க. எனக்கு தாலி கட்டுனவன் தாலி கட்டுன கையோட இங்க இருந்து கிளம்பிட்டான். இவங்களும் சரியான பதில் சொல்லாம என்னை இங்கயே ரெண்டு மணி நேரம் நிக்க வச்சுட்டாங்க. நீங்க தான் என்ன ஏதுன்னு விசாரிக்கணும்.” என்று.

 

“அகல்யா இதெல்லாம் எதுக்கு பண்ண?” என ரகசியமாக சுகன்யா அவளிடம் கேட்க,

 

“கல்யாணம் பண்ணதோட உங்க கடமை முடிஞ்சுது. இனி என் வாழ்க்கை என் விருப்பம். தலையிடாதீங்க” என மொத்தமாக அவர் பேச்சை அடக்கி விட்டாள்.

 

“உங்க பையன் எங்க?” என காவல்துறையினர் விசாரிக்க, பொறுமையாக நடந்ததை விவரித்தார் தயாளன். காவல் துறையினர் தரணீஸ்வரனின் நம்பரை வாங்கி அழைப்பு விடுக்க, அதுவோ சுட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

 

தயாளனை அழைத்துக் கொண்டு புறப்பட்டார்கள். வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தையும் தூக்கிப்போட்டு உடைத்து அலங்கோலம் செய்திருந்தான் தரணீஸ்வரன். தந்தையோடு வந்து நிற்கும் காவல்துறையை பார்த்தவன் கேள்வி எழுப்ப, அவர்களோ வந்த காரணத்தை உரைத்தார்கள். 

 

கோபம் கொண்டு கத்த ஆரம்பித்தான் தரணீஷ்வரன். அவர்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காதவன் அங்கிருந்து கிளம்ப பார்க்க,

 

“தாலி கட்டிட்டு அந்த பொண்ண ஏமாத்த பார்க்குறீங்களா? ஒழுங்கா அந்த பொண்ணு கூட குடும்பம் நடத்துற வழிய பாருங்க. இல்லன்னா உங்க மேல கேஸ் பைல் பண்ண வேண்டியது வரும்.” என்று விட்டனர் முடிவாக.

 

வேறு வழியில்லாமல் மீண்டும் கோவிலுக்கு சென்றான். முதலில் அவன் பார்வையில் விழுந்தது ஆதிலட்சுமி தான். தலை குனிந்து நின்றிருந்தார் குற்ற உணர்வோடு. அன்னையைப் பார்த்தவன் மனம் கதி கலங்கி போனது. மீண்டும் மீண்டும் தன்னால் இப்படி ஒரு நிலைக்கு தள்ளப்படும் அவரை நினைத்து கலங்கினான்.

“வாங்க தாலி கட்டுனவரே! வருவிங்க, தாலி கட்டுவீங்க, போவீங்க. இந்த மாதிரி தாலி கட்டிட்டு ஓடுறதுக்கு பதிலா முன்னாடியே  ஓடி இருந்தன்னா ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பேன். உன்னோட அறிவு இவ்ளோ லேட்டா வேலை செய்ய வேணாம்.” என்றவளை கடுமையாக முறைத்தான் உஷ்ண பார்வையில்.

 

அதையெல்லாம் கண்டு கொள்ளாதவள் தன் வேலை முடிந்து விட்டதாக திரும்பிக் கொண்டாள். காவல்துறையினர் போதுமான அறிவுரையை கூறிவிட்டு நகர, மனைவியை அழைத்துக் கொண்டு புறப்பட்டான் தன் வீட்டிற்கு.

 

நடந்ததை எல்லாம் ஓரம் தள்ளி வைத்த ஆதிலட்சுமி இந்த நிலைமையை மாற்றுவேன்! என்ற சபதத்தோடு வாசலில் நிற்க வைத்து ஆரத்தி சுற்றினார் இருவருக்கும். இருக்கக் கூடாத மனநிலையில் காலடி எடுத்து வைத்தாள் புகுந்த வீட்டில் அகல்யா.

அவள் உள்ளே வந்ததும் மீண்டும் அங்கிருந்து வெளியேற பார்த்தான் தரணீஸ்வரன். மகனை தடுத்து நிறுத்திய தயாளன்,

 

“கொஞ்சம் உங்க அம்மாவ பாரு. இன்னும் எத்தனை நாளைக்கு தான் நாங்க இந்த மாதிரி அசிங்கப்பட்டு நிற்கணும். அந்த பொண்ணு திரும்பவும் ஏதாச்சும் பண்றதுக்குள்ள உன்னை நீயே மாத்திக்க பாரு. இல்லன்னா உங்க அம்மா சொன்ன மாதிரி நாங்க ரெண்டு பேரும் மொத்தமா போயிடுவோம்.” என்றார்.

 

நடையை திருப்பியவன் எதிரில் நிற்பவளை வெறிக்கொண்டு முறைத்தான்.

 

ஜீவன் துடிக்கும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
10
+1
26
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment