Loading

ஆராதனா அங்கிருந்து அறைக்குள் சென்று விட “இவங்க ஏன் திடீர்‌னு கிளம்பி வந்து இருக்காங்க னு தெரியலையே?” என்று பத்மினி யோசித்தார்.

“கேட்கலாம் னா எங்க அதயே பிடிச்சுக்குவாங்களோ னு வாய மூடிக்கிட்டேன்” என்றார் அர்ச்சனா.

“எதுவா இருந்தாலும் தெரிஞ்சுடும். அத விட்டுட்டு நீங்க உங்க வேலைய பாருங்க” என்று கூறி விட்டு ரகுநாதன் சென்று விட்டார்.

“ஆமா… அவர இன்னும் காணோம் போய் என்ன னு பார்க்குறேன்” என்று கூறி விட்டு அர்ச்சனா வெளியே வந்தார். யுவன் வாசலில் தான் நின்று இருந்தான்.

“அப்பா வந்துட்டாரா ?” – அர்ச்சனா

“இப்ப தான் வந்தார்” என்று கூறி விட்டு யுவனும் வீட்டிற்குள் சென்று விட்டான்.

*.*.*.*.*.*.

இரவு மெத்தையில் படுத்து இருந்த ஆராதனா யுவனை பற்றி தான் நினைத்துக் கொண்டு இருந்தாள். யாரையும் எந்த சூழ்நிலையிலும் பைக்கில் அமர அனுமதிக்க மாட்டான். அர்ச்சனா கூட அமர்ந்தது இல்லை.

இது வரை மூன்று பைக் மாற்றியிருக்கிறான். எதிலுமே அர்ச்சனாவை அமர விட்டது இல்லை. எப்போதுமே கார் தான். இன்று எதற்காக பைக்கை எடுத்து வந்தான்? கேள்வி ஆராதனாவின் மூளையை குடைந்தது.

போனை எடுத்தவள் வெறும் கேள்வி குறியை மட்டும் குறுஞ்செய்தியாக யுவனுக்கு அனுப்பினாள்.

உடனே “என்ன?” என்று பதில் வந்தது.

“எனக்கு ஒரு டவுட்டு”

“?”

“நீ இன்னைக்கு எதுக்கு பைக்ல என்ன உட்கார விட்ட னு தெரியனும்”

“அத தான் டி நானும் யோசிச்சுட்டு இருக்கேன்” என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டே “உன் அத்த அவங்க மகனையும் கூட கூட்டிட்டு போக சொன்னாங்க. அவன அவாய்ட் பண்ண பைக் எடுத்துட்டு வந்தேன்” என்று செய்தி அனுப்பினான்.

“அதுக்கா… சரி சரி.. பை”

ஆராதனா போனை தூக்கி போட்டு விட்டு படுத்து விட யுவன் போனை அருகில் வைத்தான். இரண்டு கையையும் தலைக்கு பின்னால் வைத்துக் கொண்டவன் விட்டத்தை பார்த்தான்.

ஆராதனா கேட்ட கேள்வியை பற்றி தீவிரமாக யோசித்து பார்த்தான். பதில் தான் கிடைக்கவில்லை. யோசித்துக் கொண்டே தூங்கி விட்டான்.

*.*.*.*.*.

நாட்கள் மெல்ல கடந்து போக அன்று அர்ச்சனாவும் பத்மினியும் அவர்களது தோழி ஒருவரின் வீட்டு விழாவிற்கு கிளம்பி சென்றனர். விழாவில் சிலர் யுவனின் திருமணத்தை பற்றி கேட்டு வைத்தனர்.

அது அர்ச்சனாவின் மனதில் பதிந்து போக நேராக வீட்டிற்கு வந்தவர் யுவனை பிடித்துக் கொண்டார்.

“டேய் ஒரு பதில் சொல்லுடா” – அர்ச்சனா

“எதுக்கு?” – யுவன்

“கல்யாணத்துக்கு”

“ஏம்மா? எனக்கு வேற வேலை இல்லையா?”

“அப்போ நாங்க எல்லாம் பொழப்பு இல்ல னு தான் கல்யாணம் பண்ணோமா?” என்று கேட்டுக் கொண்டே பத்மினி காபியை கொண்டு வந்து கொடுத்தார்.

“அத்த யூ டூ?”

“நான் தான்… கல்யாணம் பண்ணிக்கிறேன் னு சொன்னா தான் என்ன?”

“எனக்கு அதுல எல்லாம் இன்ட்ரஸ்ட் இல்ல அத்த”

“ஓஹோ… காலம் முழுக்க சும்மா இருக்க போறியா?”

“இருந்துட்டு போறேன்”

“நினைப்பு தான்… எத்தனை நாள் தான் உனக்கு நாங்களே வேலை பார்க்குறது? உனக்கு னு ஒருத்திய கூட்டிட்டு வந்துட்டா நாங்களும் நிம்மதியா இருப்போம்ல?”

“பெத்த பிள்ளைக்கும் வளர்த்த பிள்ளைக்கும் வேலை செய்யுறத சொல்லி காட்டுறீங்களே… நியாயமா?”

“ரொம்ப பண்ணாத டா… பொண்ணு பார்க்குறோம். பிடிச்சா கட்டிக்க…”

“இல்லனா?”

“உனக்கு பிடிக்குற வர தேடுவோம்”

“ஆமா” என்று அர்ச்சனா ஒத்து ஊத “உங்க மனசுல இப்படி ஒரு விசத்த யாரு தூவுனது?” என்று கேட்டு விட்டு எழுந்தான்.

“பெத்த பிள்ளைக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறது விசமாம்… இரு டா உங்கப்பா வரட்டும் பேசிக்கிறேன்”

“என்னமோ பண்ணுங்க. என்ன கல்யாணம் பண்ணு னு போர்ஸ் பண்ணாத வர நோ ப்ராப்ளம்” என்று கூறி விட்டு கிளம்பி விட்டான்.

“பாரு கொழுப்ப?”

“விடு அர்ச்சனா.. எங்க போயிட போறான்? நாம பொண்ணு பார்க்க ஆரம்பிப்போம்”

பத்மினியும் அர்ச்சனாவும் சொன்னதை சாதாரணமாக எடுத்துக் கொண்டு யுவன் சென்று விட்டான். ஆனால் அடுத்த வாரம் ஐந்து பெண்களின் படமும் அவர்களை பற்றிய விவரமும் அவன் முன்னால் இருந்தது.

“இதுல இருக்க பொண்ணுங்க எல்லாமே பெஸ்ட். அத விட உனக்கு பொறுத்தமா இருப்பாங்க. உனக்கு யாரு ஓகே னு சொல்லு” என்று அர்ச்சனா கூற யுவன் அதிர்ச்சியடைந்தான்.

“ம்மா… சீரியஸா தான் பேசுறீங்களா?”

“பின்ன ? பார்த்து சொல்லு டா”

“ம்மா… இன்னும் ரெண்டு வருசம் போகட்டுமே”

“சரி.. போகட்டும். இப்போ பிடிச்சு இருக்கா னு மட்டும் சொல்லு”

யுவன் தலையில் கை வைத்துக் கொள்ள ஆராதனா உள்ளே ஓடி வந்தாள்.

“அத்த… வடை சுட்டு வச்சுருக்கீங்களாமே.. அம்மா சொன்னாங்க.. எங்க எங்க?” என்று ஆராதனா வர “இருக்கு ஆரா.. சூடா உனக்கு வச்சுருக்கேன். வந்து சாப்டு .. இரு எடுத்துட்டு வரேன்” என்று கூறி விட்டு எழுந்தார்.

“இது என்ன போட்டோஸ்?”

“யுவனுக்கு கல்யாணம் பண்ண பொண்ணு பார்த்துட்டு இருக்கோம். அது தான்” என்று கூறிக் கொண்டே சமையலறைக்குள் சென்று விட்டார்.

“கல்யாணமா?” என்று முணுமுணுத்தவள் யுவனை நிமிர்ந்து பார்த்தாள். அவனும் அவளை பார்க்க ஒரு நொடி அவன் பார்வை சந்தித்தவள் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

‘இந்த வீட்டுல வேற ஒரு பொண்ணு உரிமையா வருவாளா?’ என்று நினைத்ததுமே ஆராதனாவிற்கு சுருக்கென தைத்தது. அது அவளது முகத்தை வாட வைத்தது. யுவன் அவள் முகத்தை தான் ஆராய்ந்து கொண்டிருந்தான்.

‘இவன் என்ன நினைக்கிறான்?’ என்று யோசனையுடன் அவனை திரும்பி பார்க்க அவன் அவளை பார்த்து புருவம் உயர்த்தினான். அவசரமாக தோளை குலுக்கி விட்டு அவனுக்கு எதிரில் அமர்ந்து கொண்டாள்.

முன்னால் கிடந்த புகைப்படங்களை ஒரு வெறுப்போடு பார்த்து விட்டு திரும்பிக் கொண்டாள். அர்ச்சனா வடைகளை எடுத்து வந்தார்.

“நான் வீட்டுல போய் சாப்டுறேன் அத்த” என்று கையில் வாங்கிக் கொண்டாள்.

“ஏன்? இங்கயே சாப்டு”

“இல்ல… வேலை இருக்கு. அத பார்த்துட்டே இதையும் சாப்ட்டுருவேன். டாடா” என்று கூறி விட்டு கிளம்பி விட்டாள்.

யுவனை திரும்பியும் பார்க்காமல் வெளியேறி விட யுவன் மட்டும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான். வரும் போது இருந்த துள்ளல் போகும் போது ஆராதனாவிடம் இல்லை. யோசனையுடன் முன்னால் இருந்த படங்களை எடுத்து அடுக்கினான்.

வாசலுக்கு சென்ற ஆராதனா திரும்பி பார்க்க யோசனையுடன் படத்தை பார்த்துக் கொண்டு இருந்த யுவன் தான் கண்ணில் பட்டான். எதற்கென்றே தெரியாமல் கோபம் வர விறுவிறுவென வீட்டுக்கு சென்று விட்டாள்.

“யாரடா பிடிச்சு இருக்கு?” என்று அர்ச்சனா கேட்க படங்களை அவரிடம் கொடுத்தான்.

“நீங்க சும்மா எதோ பேசுறீங்க னு நினைச்சு தான் அன்னைக்கு சும்மா இருந்தேன். இவ்வளவு சீரியஸா னா அப்பவே சொல்லி இருப்பேன். இன்னும் ரெண்டு.. வேணாம் ஒரு வருசம் வெயிட் பண்ணுங்க. அதுக்கப்புறம் நீங்க இந்த வேலைய பார்க்கலாம்”

“நிஜம்மா தான சொல்லுற?”

“ஆமா”

“அப்படினா சரி…” என்று அர்ச்சனா எழுந்து சென்று விட்டார்.

யுவன் யோசனையுடன் அறைக்குள் சென்றான். அடுத்து செய்ய வேண்டிய வேலை எல்லாம் மறந்து போக ஆராதனாவின் முகம் தான் மனதில் நின்றது. அதை பற்றியே யோசித்துக் கொண்டிருக்க போன் இசைத்து அவன் கவனத்தை கலைத்தது.

எடுத்து பார்த்தான். சத்தியன் அழைத்து இருந்தார். உடனே அழைப்பை ஏற்றான். அவர் எதோ முக்கியமான வேலை என்று அழைக்க மற்ற எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு கிளம்பி விட்டான்.

அறைக்குள் வந்து அமர்ந்த ஆராதனாவிற்கு ஒன்றுமே ஓடவில்லை. அர்ச்சனாவிடம் அந்த சங்கவி உரிமையாக பேசியதையே அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இனி நிரந்தரமாக ஒருத்தி வருவாள் என்றால்?

ஆராதனாவிற்கு காரணமே இல்லாமல் யுவன் மீது தான் கோபம் வந்தது.

“எல்லாம் அவனால வந்தது” என்று வாய்விட்டு திட்டியவள் தட்டில் இருந்த வடையை பார்த்தாள்.

யுவனை நினைத்து அதை தூக்கி எறிய வேண்டும் போல் இருந்தாலும் அர்ச்சனாவின் உழைப்பு வீணாக கூடாது என்று சாப்பிட்டாள். ஒன்றுக்கு மேல் சாப்பிட முடியாமல் போக அப்படியே கொண்டு வந்து பத்மினியிடம் கொடுத்து விட்டு சென்று விட்டாள்.

லாப்டாப்பை திறந்து வைத்தால் வேலை எதுவும் ஓடவில்லை. புரியாத எரிச்சல் அவளை சூழ்ந்து கொள்ள யாரையாவது திட்ட வேண்டும் போல் இருந்தது. இங்கும் அங்கும் நடந்து விட்டு கடைசியில் மெத்தையில் விழுந்து தூங்கி விட்டாள்.

அடுத்து வந்த நாட்கள் யுவனை முற்றும் முழுவதுமாக தவிர்த்தாள். முதலிலேயே அவனை அலுவலகத்தில் பார்க்க முடியாது. இப்போது ஆராதனா அவன் இருக்கும் திசைக்கே கும்பிடு போட்டு விட்டாள்.

முதலில் இருந்த அதே விலகல் இப்போது மீண்டும் வந்து விட்டது.  ஆராதனா தவிர்ப்பதை யுவன் முதல் நாளே கண்டு கொண்டான். எத்தனை நாள் போகிறது என்று பார்க்க அமைதியாக இருந்தான். அவன் நினைத்ததை தாண்டியும் நாட்கள் கடந்தது. அவள் செய்ய வேண்டிய வேலை எல்லாம் யாமினி செய்தாள். யுவன் ஆராதனாவை பார்ப்பதே அரிதாகிப்போனது.

வீட்டிலும் எப்போதாவது பத்மினியுடன் சண்டை போடும் போது பார்ப்பான். அப்போதும் யுவன் நடுவில் வந்தால் அவனை திரும்பியும் பார்க்காமல் கிளம்பி விடுவாள்.

பழைய ஆராதனாவை விட இது மோசமாக இருந்தது. பழையவள் சண்டையாவது போடுவாள். இது முகத்தை கூட பார்க்காமல் கொடுமையாக இருந்தது. ஒன்றரை மாதமாக அவளிடம் ஒரு வார்த்தையும் பேசாமல் கடந்து விட இனி ஒரு வழி கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டான்.

அடுத்த நாள் காலை யாமினி சில ஃபைல்களை எடுத்துக் கொண்டு வந்தாள்.

“யுவா.. இத பாரு.. இந்த மன்த் ரிப்போர்ட்”

அதை வாங்கி பார்த்தவன் “இத ஏன் நீ கொண்டு வந்த?” என்று கேட்டான்.

“இது என் கைக்கு வந்துச்சு. அதான் கொண்டு வந்தேன். உன் கிட்ட தான கொடுக்கனும். சேர்த்து கொண்டு வர்ரது எல்லாம் ஒரு வேலையா என்ன?”

“உனக்கு கொடுத்த வேலைய மட்டும் பாரு யாமினி. இத யாரு கொண்டு வரனுமோ அவங்கள கொண்டு வர சொல்லு” என்று முன்னால் தூக்கி போட்டான்.

“இல்ல யுவா…”

“நீ போகலாம்”

யாமினிக்கு அடுத்து என்ன பேசுவது என்று புரியவில்லை. கோபத்தோடு வெளியே வந்தாள். யுவனை திருமணம் செய்ய தான் யாமினி அடம்பிடித்து இங்கு வந்து இருக்கிறாள். சிறு வயதிலிருந்தே யுவனின் ஹீரோ இமேஜ் அவளுக்கு அவ்வளவு பிடிக்கும். அவனை வாழ்வில் தக்க வைத்துக் கொள்ள எதையும் செய்ய தயாராக இருந்தாள்.

ஆராதனாவை அவள் போட்டியாக என்றும் நினைத்தது இல்லை. ஆனால் இங்கு வேலைக்கு வந்த பிறகு ஆராதனா அவளுக்கு போட்டியாக வந்துவிடுவாளோ என்று பயம் வந்திருந்தது. அந்த பயம் வீண் என்பது போல் ஆராதனா யுவனை விட்டு விலகி நின்றாள்.

அவளது வேலையில் பாதி யாமினியிடமிருந்து தான் வரும். அதனால் மொத்தமாக தானே யுவனிடம் கொடுத்து விடுவதாக வாங்கிக் கொண்டு வந்தாள். யுவன் என்னவென்றால் அவமான படுத்தி அனுப்பி விட்டான்.

நேராக ஆராதனாவின் கேபினுக்குள் நுழைந்தவள் “இத நீயே கொண்டு போய் கொடு.” என்று கூறி விட்டு வேகமாக வெளியேறி விட்டாள்.

ஒரு பெரு மூச்சோடு அதை எடுத்துக் கொண்டு வந்து யுவனின் அறைக்கதவை தட்டினாள் ஆரா. உள்ளே இருந்து அனுமதி கிடைக்க உள்ளே சென்றாள்.

“இந்த மன்த் ரிப்போர்ட்.” என்று நீட்ட யுவன் நிமிராமலே நாற்காலியை காட்டினான்.

“இல்ல அவசரமா ஒரு வேலை இருக்கு. சைன் பண்ணிட்டா நல்லா இருக்கும்”

“உட்காரு னு சொன்னேன்”

ஆராதனா மதிக்காமல் வேறு எங்கோ பார்த்தாள். தன் நாற்காலியில் இருந்து எழுந்தவன் கண்ணாடியில் இருந்த திறையை மூடி விட்டான்.

ஆராதனாவின் தோளை பிடித்து நாற்காலியில் அமர வைத்தான். ஆராதனா அவன் கையை தட்டி விட்டாள்.

“என்னடி உன் பிரச்சனை?” என்று யுவன் அதட்ட “நீ இப்ப சைன் போடாம இருக்கது தான். போட்டு கொடு. கிளம்புறேன்” என்றாள் பட்டும் படாமல்.

அவளருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தவன் அவளது நாற்காலியை தன் அருகில் இழுத்துக் கொண்டான்.

“ஏய்.. என்னடா பண்ணுற?”

“எனக்கு பதில் வேணும். எதுக்கு மூஞ்சிய தூக்கிட்டு அலையுற?”

“என் மூஞ்சி என் இஷ்டம்”

“என்னடி உன் பிரச்சனை? எதுவும் சொல்லாம என் மூஞ்சிய கூட பார்க்காம ஓடுற?”

“உன்ன பார்க்க என்னைக்கு எனக்கு பிடிச்சு இருக்கு?”

“உத வாங்க போற”

“ப்ச்ச்.. இங்க பாரு உன் கிட்ட வெட்டிக் கதை பேச எனக்கு இஷ்டம் இல்ல. சைன் பண்ணா பண்ணு.. இல்லனா விடு நான் கிளம்புறேன்” என்று எழுந்து விட்டாள். அநே நேரம் யுவனும் எழ இருவரும் தடுமாறி விட்டனர். யுவன் மேசையை ஒரு கையில் பிடித்துக் கொண்டு மறு கையால் ஆராதனாவை அணைத்து பிடித்துக் கொண்டான்.

ஆராதனாவிற்கு விழப்போனதை விட இது தான் அதிக அதிர்ச்சியாக இருந்தது. அவசரமாக அவன் பிடியில் இருந்து விலகியவள் அவனை முறைத்து பார்த்தாள். மேசையில் சாய்ந்து கையை கட்டிக் கொண்டவன் “காப்பாத்துனதுக்கு முறைப்பா?” என்று கேட்டான்.

“விழப்போனதே உன்னால தான் டா. எதாவது சொல்லி திட்டிருவேன் பார்த்துக்க.” என்றவள் “இதுல நீ சைன் போட தேவை இல்ல. உன் சைன நானே போட்டு அனுப்பிக்கிறேன். பை” என்று நடந்தாள்.

அவசரமாக அவளது கையை பிடித்தவன் பைலை வாங்கி விரித்து படித்தான். பிறகு பேனாவை எடுத்து கொடுத்து “போடு பார்க்கலாம்” என்று கூறினான்.

பேனாவை வாங்கி அவன் கண் முன்பே அவனது கையெழுத்தை போட்டுக் கொண்டாள். யுவன் ஆச்சரியமாக பார்த்தான்.

“என் அளவுக்கு ஸ்பீடா போடுற… பரவாயில்லையே” என்று கூற “இன்னொரு தடவ எதாவது பண்ணா நானே உனக்கு பதில சைன போட்டு அனுப்பிடுவேன் ஜாக்கிரதை” என்று கூறி விட்டு பேனாவை அவன் சட்டை பையில் வைத்து விட்டாள்.

அதை சிரிப்போடு எடுத்தவன் அந்த காகிதத்தில் ஆராதனா கையெழுத்து போடும் இடத்தில் அவளது கையெழுத்தை போட்டான். பிறகு அதை எடுத்து அவளிடம் காட்ட “அடப்பாவி” என்று அதிர்ந்தாள்.

“நீ மட்டும் தான் என் சைன பழகிப்பியா? நான் போட மாட்டனா?” என்று கேட்டு பைலை அவள் பக்கம் நீட்ட முறைத்து பார்த்தாள்.

“இந்த அவாய்ட் பண்ணுற வேலைய மூட்ட கட்டிட்டு ஒழுங்கா வேலைய பாரு” என்று கூற ஆராதனா வேகமாக அங்கிருந்து வெளியேறி விட்டாள்.

அவள் சென்றதும் கண்ணாடியை திறந்து விட்டு வேலையை பார்க்க அமர்ந்து விட்டான்.

*.*.*.*.*.*.

மாலை வீட்டில் அமர்ந்து தொலைகாட்சியில் எதையோ ஆராதனா பார்த்துக் கொண்டிருக்க அர்ச்சனா வந்தார்.

“பத்மினி எங்க ஆரா?”

“பின்னாடி இருக்காங்க… ம்மா…” என்று அழைக்க பத்மினி வந்தார்.

“என்ன அர்ச்சனா?”

“யுவாவோட அப்பாவும் அண்ணனும் எதோ ஊருக்கு போறாங்களாம். பேக் பண்ணி வைக்க சொல்லுறாங்க”

“இவங்களுக்கு வேற வேலை இல்ல. யுவா தான எப்பவும் போவான்?”

“அவனுக்கு இங்க வேலை இருக்காம். கல்யாணம் வேணாம் னு சொல்லிட்டு வீட்டுல இருக்கதே இல்ல. இதுல ஊருக்கு வேற போகனுமா னு அவரு வேணாம் னு சொல்லிட்டார். அதுவும் இல்லாம இவங்க தான் போயாகனுமாம். பேக் பண்ணி வை.”

அர்ச்சனா அங்கிருந்து செல்ல ஆராதனா அறைக்குள் சென்று விட்டாள். “அப்போ அவனுக்கு கல்யாணம் இல்லயா” என்று தனக்கு தானே கூறியவள் முகத்தில் புன்னகை வந்தது.

“இவனுக்கு கல்யாணம் ஆகல னா நாம ஏன் சந்தோச படனும்?” என்று யோசித்தவள் “எதோ ஒன்னு… சந்தோசமா இருக்கோமா.. அதான் மேட்டர்” என்று தனக்கு தானே கூறிக் கொண்டாள்.

அடுத்த நாள் ஆராதனா மலர்ந்த முகத்துடன் அலுவலகத்தில் வேலை பார்க்க யுவன் அவளை பார்க்க வந்தான். அவன் வந்ததும் முகத்தை திருப்பாமல் “என்ன?” என்று கேட்டு வைத்தாள்.

“நல்ல மூட்ல இருக்க போல?”

“ஆமா ஆமா…”

“சரி என் கூட வரியா?”

“எங்க?”

“அந்த ஆபிஸ்க்கு போகலாம். அப்பாவும் மாமாவும் இல்ல. இங்க இம்ரான் பார்த்துப்பான்.”

“வேலை?”

“அத வந்து பார்த்துக்க.. வா” என்று அவள் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே வந்தான். இருவரும் லிஃப்டிற்காக காத்துக் கொண்டு இருந்தனர.

கதவு திறந்து ஒரு சிலர் வெளியே வர அதில் யாமினியும் ஒன்று . யுவனும் ஆராதனாவும் ஒன்றாக செல்வதை குழப்பத்தோடு பார்த்தாள்.

அவசரமாக தனது கேபினுக்குள் சென்று கீழே பார்த்தாள். அவள் எதிர் பார்த்தது போல் இருவரும் கீழே இறங்கி வந்தனர். யுவன் கார் கதவை திறந்து விட ஆராதனா ஏறி அமர்ந்து கொண்டாள். இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த யாமினிக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

“நேத்து வர மூஞ்சிய பார்க்காம பேசாம இருந்தா. இன்னைக்கு ஒன்னா கிளம்புறாளே… என்ன நடந்து இருக்கும்?” என்று யோசிக்க ஆரம்பித்து விட்டாள்.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
12
+1
11
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்