Loading

 

ஆட்சியர் கனவு 53💕

செய்தியில் கண்ட செய்தி அனைவருக்கும் பெருத்த அதிர்ச்சி என்றால் மீனாவிற்கு அதீத அதிர்ச்சி என்று தான் சொல்ல வேண்டும். அதன் தாக்கம் ஒரு வாரம் ஆகியும் அவ்வீட்டில் யாரும் தன்னிலை அடையவில்லை. ஆரா, கவின், மொழியன் தான் அனைவரையும் ஏதோ உணவு உண்ணவாவது செய்தனர்.

மீனா, தன் வயிற்றில் சுமந்த குழந்தை யாரோடது என்று அறியாது, அது எப்படி வந்தது என்று அறியாது தவித்து கிடந்தவள், தற்போது அனைத்தும் அறிந்த நொடி தன்னையே வெறுத்தாள்.

இப்போது தான் அவளின் சந்தேகம் வலுத்தது. தான் இலண்டனில் இருக்கும் போதுதான் சூழ் உண்டானது. எந்த பெற்றோரும் இந்த மாதிரி சூழ்நிலையில் தன் மகளை நிச்சயம் ஒரு வினாவாவது கேட்பார்கள். ஆனால் அம்மா? ஏன் அன்வர் கூட ஒரு வார்த்தை கேட்கவில்லை. யதுவைப் போல் நானும் குழந்தையை ஈன்றெடுத்தவுடனேயே மரணித்து இருந்தால் இந்த அவல நிலை வந்திருக்குமா? என்று தனக்குள்ளேயே மருகி கிடந்தாள்.

 ◆

சக்தி “ஆதி, எப்படி டா இந்த சந்தனா இப்படி இருக்கா? கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம? ச்சே”

ஆதி “மனசாட்சி, மனிதாபிமானம் இதெல்லாம் இன்னும் இருக்கா? அப்படி ஒன்னும் கிடையாது சக்தி. அதெல்லாம் கன்சிடர் பண்ணா இங்க எவ்ளோ குற்றங்கள் நடக்கவே நடக்காது. இதுல ரொம்ப பாதிக்கப்பட்டது மீனாவும் கோகுலும் தான்டா. மீனாவுக்கு கூட ஆறுதல் சொல்ல நாமலாம் இருக்கோம். ஆனா கோகுலுக்கு?” என்று சக்தி முகத்தை கண்டான். அவனும் அதே வருத்தத்தில் தான் இருந்தான். ஆனால் வெளியே கூறத்தான் முடியவில்லை.

சக்தி “நா… நான் போய் அவன பாக்கவா டா?”

திவி “யார பாக்க போறீங்க?” என்று கேட்டுக் கொண்டே வந்தாள் திவி.

ஆதி “கோகுல்”

திவி “பாக்க போக வேண்டாம்” ஆதி அவளை கேள்வியாய் பார்க்க, சக்தி அவளை வருத்தத்துடன் பார்த்தான்.

திவி “பாக்க போக வேண்டாம். இங்கேயே கூட்டிட்டு வந்துடுங்க. வரலன்னு சொன்னா கூட்டிட்டு வரது உங்க பொறுப்பு” என்றபடி அங்கு அவர்கள் குடித்து வைத்திருந்த காலி குழம்பி தம்ளர்களை எடுத்துக் கொண்டு சென்றாள். செல்லும் அவளையே புன்னகை முகமாக பார்த்துக் கொண்டு இருந்தனர் இருவரும்.

 ◆

மீனாவின் அறை.

“இத கொஞ்சமாவது சாப்டு கவி. இல்லன்னா இன்னும் வீக் ஆகிடுவ.” என்று கெஞ்சிக் கொண்டிருந்தான் இசை.

“ப்ளீஸ் இசை. என்னை தனியா விடு. நான் தனியா இருக்கணும்” என்று அவன் முகத்தை கூட காணாமல் கூறினாள்.

“என் முகத்தை கூட பார்க்க உனக்கு பிடிக்கலல?”

“ப்ச் அப்படிலாம் இல்ல இசை. ப்ளீஸ் நீயாவது என்னை புரிஞ்சுக்கோ”

“உன்னை புரிஞ்சுக்கிட்டதால தான் கவி இப்போ உன்கூட இருக்கேன். ஏன்டி இப்டி இருக்க? எதுவா இருந்தாலும் சொல்லிடு. மனசுலயே வச்சிக்கிட்டு ஏன்டி உன்னை நீயே வருத்திக்குற?”

“எப்படி உன்னால இவ்வளவு சாதாரணமா இருக்க முடியுது இசை? நான் பண்ண காரியம் உனக்கு கோவத்த ஏற்படுத்தல? எனக்கே நான் இப்படி முட்டாளா இருக்கேன்னு நினச்சா அசிங்கமா இருக்குடா. எனக்கு தெரியாம கருவ சுமந்து…” வார்த்தைகள் வராமல் தடுமாறிட, அவளை ஆதுரமாக அணைத்தவன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.

“இதுல உன் தப்பு எதுவும் இல்ல கவிமா. எனக்கு என்ன கோபம்னா உங்க அம்மாவுக்கும் சரி அன்வருக்கும் சரி ரெண்டு பேருக்கும் நீ ப்ரக்னன்டா இருக்குறது தெரியும். இருந்தும் எதுவும் சொல்லாம அத அனுமதிச்சு இருக்காங்கன்னா அவங்களுக்கு இத யார் செய்து இருப்பாங்கன்னு தெரிஞ்சு தான் இருக்குது. அப்போ கூட தான் பொண்ணுன்னு பாக்காம அவங்க சுயநலத்துக்காக எதுவும் பேசாம இருந்து இருக்காங்க. ஆனா நீ இப்போ கூட அவங்களுக்காக தான் பாக்குற. அது தான் கவிமா கஷ்டமா இருக்கு” என்றான் அவளின் தலையை கோதியவாறே.

தன்னவன் நெஞ்சில் சாய்ந்து ஆறுதல் தேட, அப்படியே தான் கருவுற்ற நாளுக்கான நினைவுகளில் சென்றாள்.

இந்தியாவில் அவள் யதுவுடன் இருந்த நாட்களில் அவள் அனுபவித்த இன்பங்கள் அதிகம். பெற்றவர்கள் இருந்தும் அரவணைக்க ஆள் இல்லாது போக, தனக்கு வேண்டிய அன்பையும் அரவணைப்பையும் திவியிடமும் யதுவிடமும் தான் பெற்றாள்.

பள்ளிப்பருவம் முடிந்து அடுத்தக் கட்டமாக கல்லூரியில் காலடி எடுத்து வைக்கும் நேரம் தான் அவர்கள் வாழ்வில் இடியாய் அமைந்தது அந்த ஒரு நாள். விடுதி காப்பாளருக்கு தெரியாமல் மீனாவும் யதுவும் திரைப்படத்துக்கு சென்று வந்த தருணம் விடுதி காப்பாளர் ஒரு பெண்ணை பிடித்து திட்டிக் கொண்டிருந்தது இவர்களின் செவிகளில் விழுந்தது.

“என்ன நினச்சிட்டிருக்க நீ? ஒழுங்கா படிக்காம இப்டிதான் அர்த்த ராத்திரில ஒரு பையனோட சுத்திட்டு வருவியா? இது ஹாஸ்டல்னு நினச்சியா இல்ல வேற என்னன்னு நினச்ச?” என்று கடிந்து கொண்டு இருக்க,

“ஹலோ, உங்க லிமிட் எதுவோ அதோட நிறுத்திக்கோங்க. என்னைப் பாத்துக்க எனக்கு தெரியும். நான் அப்டிதான் இருப்பேன். என்ன இன்னும் ரெண்டு நாள்ல நான் வெக்கட் பண்ணிட்டு போகத்தான போறேன். நீ பேசாம இருந்தா நானும் பேசாம கிளம்பிடுவேன். இல்லன்னா, நீ தப்பா நடந்துக்குறன்னு கம்ப்ளைன்ட் பண்ணிட்டு போய்டுவேன். ஜாக்கிரத.” என்று மிரட்டி விட்டு சென்றாள். இக்கால பிள்ளைகளை எண்ணி மனம் நொந்து போனார் அவர்.

சரியாக அவர் கண்ணில் யதுவும், மீனாவும்பட என்னவென்று வினவினார்.

“ரெஸ்ட்ரூம் வந்தோம் மேடம்” என்றிட,

“ஜாக்கிரதயா இருங்க பிள்ளைங்களா. யாரும் இங்க சரியில்ல. இருக்கவரை உங்க மனசும் உடம்பும் உங்க பொறுப்புன்னு ஜாக்கிரதயா இருக்கணும். வீட்ல உங்க மேல இருக்குற நம்பிக்கைல தான் விட்டுட்டு அவங்க அங்க நெருப்பக் கட்டிட்டு கிடக்குறாங்க. இவள மாதிரி நீங்களும் இருக்காதிங்க. இந்த மாதிரி படிப்பு எத்தன பிள்ளைங்களுக்கு கிடைக்காம இருக்கு. இன்னும் ரெண்டு நாள்ல நீங்களும் வெக்கட் பண்ண தான் போறீங்க அதுவர ஒழுக்கமா இருங்க.” என்று எச்சரிக்கை செய்துவிட்டு சென்றார்.

அன்று இவர்கள் இந்த நேரத்தில் தன் அறைக்கு சென்றிருந்தாளோ அல்லது வாடர்னை சந்திக்காமல் இருந்து இருந்தாலோ இன்று பெரும் துயரை யாரும் அனுபவிக்கும்படி இருந்து இருக்காது.. தன்னை இவர்கள் தான் வார்டர்னிடம் சொல்லி இருக்கிறார்கள் என்று எண்ணி அவர்கள் மேல் துவேசம் வளர்த்துக் கொண்டாள் அப்பெண். அப்போதே தன் காதலனுக்கு அழைத்து நடந்ததைக் கூறி அவர்களை ஏதேனும் செய்ய வேண்டும் என புலம்ப, தான் எதிர்ப்பார்க்காமல் இன்னும் இரண்டு பெண்கள் தன் வலையில் விழப் போவதை எண்ணி அவனும் அந்த முடிவை ஏற்றான்.

அடுத்த நாள் யாரும் அறியாமல் விடுதிக்கு வந்தவன் யது மற்றும் மீனாவின் உணவில் ஒரு வித ரசாயனத்தைக் கலந்தான்.

அதன் பின் உடல் நிலை சரியில்லாமல் போக அன்றே மருத்துவமனையில் இருவரும் சேர்க்கப்பட அவர்களே அறியாமல் அவர்களின் கருவில் விந்தணு செலுத்தப்பட்டுவிட்டது. மாலையே விடுதி திரும்பியவர்கள் சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டனர்.

அப்போது என சென்னையில் கலவரம் நடக்க, அவர்கள் மேலும் இரண்டு வாரங்கள் விடுதியில் தங்கும்படி ஆகியது. இந்த இரண்டு வாரங்களில் யது ஆதியின் நினைப்பில் இருக்க, தன்னுள் ஏதோ மாற்றம் உருவாவதை உணர ஆரம்பித்தாள். இவர்களின் உடலில் சிப் எனும் கருவியும் அறையில் கண்காணிப்புக் கருவியும் ஏற்கனவே வந்தவனால் வைக்கப்பட்டு இருக்க, இருவரின் நடவடிக்கைகளும் கண்காணிக்கப்பட்டு இருந்தது. மீனாவிற்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. ஆனால் தான் ஏன் இன்னும் ஆகவில்லை என்ற சந்தேகத்தில் யது பரிசோதித்துப் பார்க்க, அவள் கர்ப்பம் தரித்து இருப்பது தெரிய வந்ததும் இடிந்துப் போனாள்.

‘எப்டி? எப்டி இந்த தப்பு நடந்துச்சு? நான்… நான்…. நான் எந்த தப்பும் பண்ணல… ஆனா எப்டி?’ என்று தன்னுள்ளே நொறுங்கியவள், அப்போது தான் அந்த முடிவை எடுத்தாள்.

‘திவி… என்னை மன்னிச்சுடுடி. நான் நிஜமாவே தப்பு பண்ணல. நீயே ஆதி மாமாவ கல்யாணம் செஞ்சுக்கோ. எப்டி இது நடந்துச்சுன்னு தெரியல.. என்னை நம்பி, உன்னோட சான்ஸ எனக்கு விட்டுக் கொடுத்த. ஆனா அதுக்கு தகுதி இல்லாதவளா போய்ட்டேனே’ என்று கதறினாள். சரியாக அவள் தன்னை மாய்த்துக் கொள்ள செல்கையில் மீனாவின் அலைபேசி அடித்தது.

“என்ன யது? தூக்கு மாட்டிக்க போறியா? உன் வயித்துல இப்போ குழந்தை இருக்குறது தெரியும் தானே? அது உனக்கு அசிங்கமா இருக்கலாம். ஆனா இது என்னோட இம்பார்டென்ட் ப்ராஜக்ட். இப்போ நீ செத்தா, உன்னோட பிரெண்டு மீனா மட்டும் இல்ல, உன் ஊருல இருக்குற உன் அருமை சிஸ்டர் திவியும் சாவா. அதுவும் அசிங்கப்பட்டு.” என்றான் நக்கல் தோணியில்.

அவனின் கூற்றில் நொறுங்கித் தான் போனாள் பெண்ணவள். ‘இப்போ நான் என்ன செய்யணும்?”

“இப்போ கேட்டியே இது ரொம்ப நல்ல கேள்வி. நீ சாக முடிவெடுத்தது அப்டியே இருக்கட்டும். ஆனா நீ சாகக் கூடாது. எனக்கு உன் வயித்துல இருக்குற குழந்த வேணும். சோ நான் இப்போ ஒரு அட்ரஸ் சொல்றேன் அங்க வா” என்றதும் யது கிளம்பி சென்றாள். அதன் பிறகு என்னவானது என்று மீனாவிற்கு கூட தெரியாது.

இந்த விசயங்கள் கூட மீனா லண்டனில் கர்ப்பம் தரித்த நொடி அவளும் இதே முடிவினை எடுக்கையில் வந்த அழைப்பில் ஒருவன் கூறியதே. “உன் பிரண்டு புத்திசாலி. இப்போ ராணி மாதிரி இருக்கா. நீ ஆல்ரெடி உங்க வீட்டுக்கு இளவரசி தான். உன்னோட வயித்துல இருக்குற குழந்த தான் எனக்கு முக்கியம். நீ ஏதாவது எக்கு தப்பா செஞ்சா, இங்க என் கஸ்டடில இருக்குற யதுவும் சாவா. அவ குழந்தையும் சாகும். உன்னோட பெஸ்ட் பிரண்டு திவ்யாவும் சாவா. எது உன்னோட முடிவுன்னு நீயே முடிவு பண்ணிக்கோ.” என்றபடி தன் அழைப்பை துண்டித்தான்.
 
இதுவரை இந்த விடயம் வெளியே யாருக்கும் தெரியாது. காரணம், அவளுக்கு தன் பிள்ளை உயிர் மிகவும் முக்கியம். அவள் விரும்பாத கரு தான் என்றாலும் அவள் விரும்பும் மகன் தானே. கவினுக்காக உண்மை அனைத்தையும் தன்னுள்ளே பொதித்துக் கொண்டு இருக்கிறாள்.
 
பல விதமான மன நிலையிலேயே தன் உறக்கத்தை தொடர்ந்தனர் கவியும், இசையும்.

 ◆

ஆனால், தன் அறையில் தூக்கத்தை தொலைத்து தவித்துக் கொண்டு இருந்தாள் திவி.

ஆரெழிலை மடியில் போட்டு படுக்க வைத்து தட்டிக் கொடுத்துக் கொண்டு இருந்தவளின் சிந்தனைதான் தறிகெட்டு ஓடிக் கொண்டு இருந்தது. வெகு நேரமாக தன்னவனுக்காக தான் காத்துக் கொண்டிருக்கிறாள். இத்தனை நாள் பிரிந்த ஏக்கத்தை தீர்க்க கூட பொழுது இல்லாமல் ஒரு வார காலம் அவன் மாயமாய் மறைந்து விட, வெளியே தன் வலியை காட்டிக் கொள்ளவில்லையென்றாலும் தற்போது மனம் தவிக்கிறது தன்னவனின் அருகாமையைத் தேடி…

கனவு தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
6
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்