Loading

அத்தியாயம் 29

 

சில மாதங்களுக்குப் பிறகு,

பூவில் உறங்கும் சிறுபனி துளி போல மன்னவனின் மார்பை மென்மையான பூவென தலையனையாக்கி சிறுபனியாய் உறங்கிக் கொண்டிருந்தாள் மதி. இப்போதெல்லாம் இது பழக்கமான ஒன்று தான். மங்கையவளின் துயில் களையாமல் இருக்க மன்னவனும் கண் விழித்த பிறகும் அவளைப் பார்த்து(ரசித்து)க் கொண்டே முழித்துக் கொண்டிருக்கிறான்.

“அடியே எழுந்திரிடி. விடிஞ்சு எவ்வளவு நேரமாச்சு?. அப்பத்தா கீழ போனா வேலையைக் கூட மறந்துட்டு பொண்டாட்டி பின்னாடி சுத்துறனு கேவலமா பாக்குது” என்றான்.

“ப்ச் ஏன்டா காட்டான் காதுல வந்து கத்துற. இன்னும் கொஞ்சம் நேரம் டா” என்று கண்ணை மூடிக் கொண்டே சிணுங்கினாள்.

“இன்னும் கொஞ்சம் நேரம் னு சொல்லி சொல்லியே ரெண்டு மணி நேரமாச்சுடி. தின்னு தின்னு குந்தானி மாதிரி இருக்க. இன்னும் கொஞ்ச நேரம் இருந்தேன் என் இடுப்பு உடைஞ்சிரும்”

“அதுனால என்னடா?. இன்னைக்கு உன் பிறந்த நாள் தான அப்பத்தா ஒன்னும் சொல்லாது”

“அதுனால என்னவா!. உடையப்போறது என் இடுப்பு டி. ஆமா என் பிறந்த நாள் கிஃப்ட் எங்கடி?”

“உன்னைக் கொண்ணுடுவேன் நேத்தே எடுத்துட்டு வந்து தர்றதுக்குள்ள அது வேண்டாம் வேற வேனும்னு சொல்லி…” அதுக்கு மேல் சொல்ல முடியாமல் வெட்கத்தில் அவன் மார்பிலே முகத்தை புதைத்துக் கொண்டாள்.

“வேற என்னடி?” என்று யோசிப்பது போல் பாவனை செய்து மேலும் அவளை சீண்டினான்.

“போடா… இரு நான் போய் எடுத்துட்டு வர்றேன்” என்று எழுந்து வாடாமல்லிக் கலரில் பேக் செய்யப்பட்டிருந்த சிறு பெட்டியை எடுத்து வந்து அவன் கைகளில் கொடுத்தாள்.

“என்னடி இது?. ரிங் ஆ”

“நீயே பிரிச்சுப் பாரு”

பிரித்துப் பார்த்தவனுக்கு சொல்ல முடியாத உணர்வு. உலகத்தையே வென்று விட்ட உணர்வு. முழு ஆணாக அவனை உணரச் செய்யும் வாழ்வில் மறக்க முடியாத பொக்கிஷம். அவன் உயிர் அவள் மணி வயிற்றில் வளர்வதை உறுதி செய்யும் விதமாக இரண்டு சிவப்பு நிறக் கோடுகள் பிரக்னன்ஸி கிட்டில் காண்பித்தது.

“எப்படி இருக்கு கிஃப்ட்?” என்று புருவம் உயர்த்திக் கேட்டவளை வாரியணைத்துக் கொண்டான். “என் வாழ்க்கையில் இது வரைக்கும் கிடைச்ச கிஃப்ட்லே இது தான் உயர்ந்தது. மறக்க முடியாததும். என் தங்கச்சியே எனக்கு வந்து மகளா பிறக்கப் போறா” என்று கண் கலங்கினான். “எப்ப டி கன்பார்ம் பண்ண?. சொல்லவே இல்லை”.

“ரெண்டு நாளாச்சு. உன் பிறந்தாநாளுக்கு சர்பிரைஸ் குடுக்கலாம்னு சொல்லல” என்றாள். அதன்பிறகு என்ன இரண்டு சந்தோஷத்தோடு இருவரும் கிளம்பி வீட்டில் சொல்லலாம் என்று வந்தனர்.

அப்போது தமிழும் குழலியும் உள்ளே வந்தனர்.

“மாமா பிறந்த நாள் வாழ்த்துக்கள். நான் குடுக்குற சட்டையைத் தான போடுவ. பொண்டாட்டி வரவும் எங்களலாம் மறந்தாச்சு” என்று முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாள்.

வெற்றி தமிழை எட்டி ஒரு பார்வை பார்த்து விட்டு “இல்லை உன் புருஷன் பக்கத்துல இருக்கும் போது என்னலாம் ஞாபகம் இருக்குமோனு நினைச்சேன்” என்றான் நக்கலாக.

“என்னக் கொழுந்தனாரே சௌக்கியமா?” என்றாள் மதி. “ம் அண்ணி” என்று பம்மினான்.

‘வாங்குன ஒரு அடிக்கே இப்டியா?’ என்று குழலி அவன் அன்று அடி வாங்கியதை நினைத்து சிரிக்கவும் அவளை முறைத்தான் தமிழ்.

அதன்பிறகு வெற்றியும் மதியும் ‘நீ சொல்லு’ என்று மாறி மாறி கண்களாலே பேசிக் கொண்டனர்.

“என்ன வெற்றி?. ஏதோ கண்ணாலே பொண்டாட்டிக்கு சாடை காட்டுற” என்றார் அப்பத்தா.

“அது வந்து.. அது.‌.” என்று மதி வெட்கப்பட்டாள்.

“அது வந்து… அம்மா நீ பாட்டியாகப் போற. அப்பத்தா நீ கொல்லுப் பாட்டி ஆகப் போற” என்றான் வெற்றி வெட்கப்பட்டுக் கொண்டே.

“ஐய்ய் குட்டி பாப்பா வரப்போதா சூப்பர்” என்று குழலி குதித்தாள். கனிமொழி மதிக்கு நெட்டி முறித்து மகிழ்ந்தார்.

“அடியே குழலி நீ எப்படி நல்ல சேதி சொல்லப் போற?. என்னை தெக்கால அனுப்புறதுக்குள்ள நல்ல சேதி சொல்லுடி” என்றார் அப்பத்தா.

“ஏய் கிழவி மொத மாமா இப்போ நானா?. இப்படி சொல்லி சொல்லியே நல்லா குத்துக் கல்லாட்டம் உட்கார்ந்துட்டு தான இருக்க. நாங்க பேரன் பேத்தி எடுக்குற வரைக்கும் நீ நல்லா தான் இருப்ப” என்றாள் குழலி. அவள் பேச்சில் அனைவரும் சந்தோஷமாக இருந்தனர். விஷயம் கேள்விப்பட்ட ரவியும் லதாவும் உடனே மகளைப் பார்க்கக் கிளம்பி வந்து விட்டனர். என்ன தான் கனிமொழி தாயைப் போல் பார்த்துக் கொண்டாளும் பிரசவ நேரத்தில் மதிக்கும் தாயின் அரவணைப்பு தேவைப்பட்டது.

குமாருக்கும் வைஷாலிக்கும் இன்னும் ஒரு வருடம் கழித்து திருமணம் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தனர்.

வெற்றிக்கு முன்னை விட இப்போது ஏற்றுமதி தொழில் அதிக கிளையண்ட் கிடைத்ததால் தொழிலை இன்னும் விரிவு படுத்தினான். வெற்றி அவன் செலவழித்தது சம்பளம் போக மீதமிருப்பதை விவசாயிகளுக்கு பகிர்ந்து விலையாகக் கொடுப்பதால் அந்த அமைப்பைப் பற்றித் தெரிந்த அக்கம் பக்கத்து கிராமங்களில் இருந்தும் விவசாயிகள் வந்து அவனிடம் காய்களைப் போட்டனர். இதனால் தொழில் விரிவு படவும் அக்கம் பக்கத்தில் படித்து முடித்து வேலையில்லாதவர்களுக்கும் வேலை போட்டுக் கொடுத்தான். வெற்றியைப் போலவே தமிழும் அவன் நிலத்தின் வளத்தை உயர்த்துவதற்கு முயன்றான். வெற்றி அவனுக்கு உதவி செய்தான். தமிழையும் தொழிலில் பங்குதாரராக சேர்த்துக் கொண்டான்.

வெற்றியின் தொழில் விரிவடையவும் ரத்தினசாமிக்கு வன்மம் வளர்ந்து எப்போதடா அவனை அழிப்போம் என்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் இப்போது ஒருவனுக்கு இருவராக கூடவே விவசாயிகளின் சப்போர்ட்டும் இருப்பதால் எதற்கும் தயாராக இருந்தனர். மற்ற தொழிலில் ஒற்றுமையாக இருப்பது போல் விவசாயிகளும் ஒற்றுமையாக இருந்தால் விவசாயத்தை அழிக்க முடியாது என்று நிரூபித்துக் கொண்டிருந்தனர். விவசாயிகளுக்கு நல்ல லாபமும் படித்தவர்களுக்கு வேலையும் உருவானது.

சில மாதங்களுக்குப் பிறகு, குமார் வைஷாலி திருமணத்திற்கு தன் ஒரு மாதக் குழந்தையை கிளப்ப முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள் மதி.

“ஏய் ஏன்டி பாப்பாவை அழ வச்சுக்கிட்டு இருக்க” என்று சத்தம் கேட்டு வெற்றி வந்தான்.

“ஆமா உன் பொண்ணை நான் அழ வைக்கிறேன். ஒரு ட்ரெஸ் போடுறதுக்கு அந்த அழுகை அழுறா. எல்லாம் நீ கொடுக்குறது. கையில தூக்கி வச்சே சுகம் காட்டிட்ட”

“ஆமா அப்டித்தான் போடி” என்று விட்டு ” நீ வாடாச் செல்லம் அப்பா உனக்கு ட்ரெஸ் போட்டு விடுறேன்” என்று மல்லிகை மலருக்கு ரோஜாப்பூவை சூட்டியது போல் அழகான குட்டி தேவதைக்கு ரோஜா நிற கவுனைப் போட்டு விட்டான். அதுவும் சமத்தாகப் போட்டுக் கொண்டது. “பாரேன் இதுக்கு. பசிக்கும் போது எங்கிட்ட தான வரனும் பார்த்துக்கிறேன்”. அவன் மகளைக் கொஞ்சுவதைப் பார்த்து விட்டு அப்பாவும் பொண்ணும் ஓவரா தான்டா பண்றேங்க” என்று சிறு பொறாமை இருந்தாலும் தாயுள்ளம் மகிழவேச் செய்தது.

குழந்தை தூங்கவும் வெற்றிக் கதவை வரைச் சென்றவன் மீண்டும் வந்து மதிக்கு முத்தம் கொடுத்து விட்டு “சீக்கிரம் வாடி கல்யாணமே முடிஞ்சிடும் போல” என்று விட்டு வெளியே சென்றான்.

கல்யாணத்தில் வெற்றி தன் ஒரு மாதக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு அலைய, தமிழ் வயிற்றில் தன் குழந்தையை சுமக்கும் குழலிக்கு ஜூஸைத் தூக்கிக் கொண்டு அலைந்தான்.

மூன்றாவது ஜோடியும் சேர்ந்தாச்சு. குமார் மூன்று முடிச்சிட்டு வைஷாலி பேசிய பேச்சுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தான். கிராமமே வேண்டாம் பட்டிக்காட்டானே வேண்டாம் என்றவர்கள் கிராமத்துக் காளையைக் கல்யாணம் செய்து கொண்டு சந்தோஷமாக மல்லுக்கட்டிக் கொண்டிருக்கின்றனர். கிராமம் நகரம் என்பதைத் தாண்டி படித்தவன் படிக்காதவன் என்பதைத் தாண்டி அன்பு காதல் மற்றும் பாசத்தால் மட்டுமே சந்தோஷமாக இருக்க முடியும் என்பதற்கு இவர்களேச் சான்று.

சில மாதங்களுக்குப் பிறகு,

“வெற்றி நீ ஏன் உன்னோட ஐடியா அப்புறம் இந்த ஏற்றுமதித் தொழில் பற்றி மீடியாவுல ஸ்பீச் கொடுக்கக் கூடாது”

“ஏய் சும்மா இருடி. நமக்கு அதெல்லாம் வராதுடி”.

“நீயே இப்படி இருந்தா எப்படி?. உன்னால நிறைய பேரை ஊக்கப்டுத்துற மாதிரி இருக்கும். நான் மீடியாவுல எல்லா ஏற்பாடும் பண்றேன்‌. நீ ஓகே னு மட்டும் சொல்லு”

“நீ அடி வாங்கப் போற. தேவையில்லாத வேலையெல்லாம் பார்க்காம அமைதியா இரு” என்று கத்தவும் “போடா” என்று திரும்பிப் படுத்துக் கொண்டாள்.

அவளிடையை வளைத்து தன்னை நெருக்கி நெஞ்சோடு சாய்த்துக் கொண்டவன் “என்ன கோவமாக்கும்?. இதெல்லாம் தேவையில்லாத வேலைன்னு நினைக்கிறேன். உனக்கு இஷ்டம்னா பண்ணு” என்றான் அவன் பேசும் மூச்சுக்காற்று அவள் காதோரம் படும்படி.

அதில் சிலிர்த்து அவன் புறம் திரும்பியவள் ” நீ செய்றதை விளம்பரப்படுத்த பண்ணச் சொல்லல. நீயே இதை பண்றதால உனக்கு மட்டும் தான் லாபம். உலகத்துல நிறைய இடத்துலே விவசாயிகளுக்கான பெரிய பிரச்சனையே அவங்க விளைவித்தற்கு விலை இல்லாதது தான். அதுனால தன் பிள்ளைகள் விவசாயம் பண்ணக் கூடாது. தன்னைப் போலக் கஷ்டப்படக் கூடாதுனு நினைக்குறாங்க. இந்த மாதிரி விஷயங்கள் இருக்கிறது தெரிஞ்சா கண்டிப்பா யாராவது ஒருத்தனாவது அதுனால பயணடைந்தால் நல்லது தானே” என்றாள்.

“நீ சொல்றதும் சரி தான். கண்டிப்பா அடுத்த தலைமுறையும் விவசாயத்தைப் பத்தித் தெரிந்து கொள்ளனும். விவசாயத்தைப் பண்ணனும். அதுக்காக நான் பண்றேன்” என்றான்.

அவன் சம்மதம் சொன்னதில் மகிழ்ச்சியாக அவனைக் கட்டிக் கொண்டாள்.

 

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
7
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment