Loading

அவள்

அமுதா….

அழகின் இலக்கணம். நடை உடையில் நளினம். அமுதாவின் 6 வயது பெண் குழந்தை இனியா. இனியா முதலாம் வகுப்பில் படித்து வந்தாள். விளையாட்டு, படிப்பு என அனைத்திலும் கெட்டிக்காரி.

அமுதாவின் வீடு அதிகமாக வாகன நெரிசல் இல்லாத தெருவில் அமைந்திருந்தது. அமுதாவுக்கு பிடித்த நிறத்தில் சிகப்பு கார் ஒன்று வீட்டின் எதிர்ப்புறம் உள்ள மரத்தின் நிழலில் நிறுத்துவது வழக்கம். அமுதாவுக்கு இனியா தான் உலகம்.

வழக்கம்போல் அன்றும் இனியாவை பள்ளி வாகனத்தில் டாடா காட்டி அனுப்பிவிட்டு வீட்டிற்குள் நுழைந்து தனது கைப்பேசியில் யாரோ ஒருவருடன் பேசி முடிக்கிறாள் அமுதா. சற்று நேரத்தில் வெள்ளை நிற பென்ஸ் கார் அமுதாவின் வீட்டு வாசலில் வந்து நிற்கிறது. காரில் இருந்த நபரை அமுதா புன்னகையுடன் வீட்டினுள் அழைத்து செல்கிறாள்.

சில மணி நேரத்திற்குப்பின்னர் இருவரும் சிரித்து பேசியபடி கதவை திறக்க அந்த நபர் அமுதாவை அணைத்து பிரியாவிடை கொடுத்துவிட்டு தனது பென்ஸ் காரில் சென்று விடுகிறார்.

அவரது கார், கண்ணை விட்டு மறைந்தபிறகு வீட்டின் ஹாலில் சோபாவில் அமர்ந்து சாய்ந்து பெருமூச்சு விடுகிறாள். தன் கையில் இருந்த பணத்தை எண்ணிவிட்டு கையில் வைத்தவாறே சோபாவில் சற்று ஓய்வெடுக்க கண்கள் மூடி சாய்கிறாள்.

ஒரு 10 நிமிடம் கடந்திருக்கும். அமுதாவின் கைப்பேசி அவளிடம் ஏதோ சொல்ல எண்ணி சிணுங்கியது. கண் விழித்து, கைப்பேசியை எடுத்து பார்த்தாள். அழைப்பவர் விவரத்தை CUSTOMER 8 என அவளது கைப்பேசி அவளுக்கு காட்டியது.

அந்த அழைப்பை எடுத்து பேசி முடித்தாள். பின்னர் மெதுவாக எழுந்து வீட்டின் உள்புறமாக படிகளில் ஏறி மாடியில் இருந்த அவள் அறைக்கு சென்றால். கட்டில்மேல் கலைந்திருந்த போர்வை உள்ளிட்டவற்றை சரி செய்து புதிய மெத்தை விரிப்பை மாற்றிவிட்டாள்.

பின்னர் தனது அலமாரியில் மாற்றுவதற்கான உடைகளை தேர்வு செய்து குளிக்கச் சென்றாள். குளித்து முடித்து உடை மாற்று தலையை துவட்டியவாறே குளியல் அறையிலிருந்து வெளியே வந்து ட்ரெஸ்ஸிங் டேபிள் முன் அமர்ந்து தனது ஈர கூந்தலை உலர்த்த துவங்கியபோது அவளின் கைப்பேசி மீண்டும் செல்லமாய் அழைத்தது.

கைப்பேசி எடுத்து பேசிவிட்டு அதை ஓரமாய் வைத்து விட்டு ஒப்பனை முடித்து தயாரானாள். பின்னர் தன் அறையிலிருந்து இறங்கி வந்தாள் வருவதற்குள் வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. கதவை திறந்து வந்தவரை புன்னகையுடன் வரவேற்று உள்ளே அழைத்து கதவை தாழிட்டாள்.

சில மணி நேரத்திற்குப்பின்னர் கதவு திறந்து இருவரும் கதவருகே நின்றிருந்தனர். தன்னிடம் இருந்த பணத்திலிருந்து அவளுக்குரியதை அவளிடம் கொடுத்து வந்தவர் கிளம்பினார். அமுதா அவரை வழியனுப்பி கதவை தாழிட்டு கையில் இருந்த பணத்தை எண்ணியவாறு உள்ளே செல்ல நடந்தாள்.

மீண்டும் வீட்டின் அழைப்பு மணி ஒலிக்க யாராக இருக்கும் என எண்ணி திரும்பி சென்று கதவை திறந்தாள். எதிரில் இனியா பள்ளி முடித்து வீடு திரும்பியிருந்தாள். இனியாவை கண்டதும் அனைத்து அவளை உள்ளே அழைத்தாள் அமுதா.

உள்ளே அழைத்த தாயின் கையை பற்றிய இனிய கேட்டாள் “ஏம்மா இன்னிக்கும் அப்பா என்ன பாக்காமலேயே கெளம்பி போய்ட்டாரு” என. அவளின் கேள்விக்கு தன்னிடம் பதில் இல்லை என மகளை கட்டியணைத்து உடைந்து அழுதாள் அமுதா.

பிஞ்சு குழந்தைக்கு தனது வாழ்க்கையை எப்படி விவரிப்பாள் அவள்….

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. deiyamma

    மற்ற கதைகளை விட உங்கள் கதையில் வார்த்தை எண்ணிக்கை அதிகம் இருப்பது போல தோன்றியது. சொல்ல வந்த விஷயம் புரிந்தது.

    வித்தியாசமான கதை. ஒரு பெண்ணின் இரண்டு பக்கங்களை காட்டி உள்ளது உங்கள் கதை. வாழ்த்துக்கள்.

  2. இனியாவின் கேள்விக்கு என்ன பதில் சொல்வாள் அமுதா😔😔😔..மனதை அசைத்து பார்த்த படைப்பு.. வாழ்த்துக்கள் சிஸ் 💐💐💐