இசையை தவிர்த்து ஆதி அனைவரிடமும் கூறி விட்டுச் சென்றவுடன் கடுப்பான இசைப்பிரியா “திமிரு திமிரு.எப்படி போறான் பாரு மனசாட்சி இல்லாத மனித குரங்கு” என ஆதியை வசை பாடிக் கொண்டிருந்தாள். அபி அவள் அருகில் வந்து “ஹே இசை என்னாச்சு? ஏன் இப்படி தனியா பேசிட்டு நிற்கிற?..” என அவன் கேள்விகளை அடுக்கிக்கொண்டே போக இசை அதை எல்லாம் எங்கே கவனித்தாள். அவள் கவனமெல்லாம் அவளிடம் சொல்லாமல் கொள்ளாமல் சென்ற ஆதியின் மேலே இருந்தது.
ஆதியின் வீட்டில் தருண், ராகுல், சாரா மூவரும் ஆதிக்காக காத்திருந்தனர். ஆதி தான் நால்வரும் சேர்ந்து மாலுக்கு போகலாம் என திட்டம் தீட்டி அவர்களை அழைத்திருந்தான். மற்ற மூவரும் வந்து விட திட்டம் தீட்டியவனோ இன்னும் வந்தபாடில்லை.
சாரா தருண் அருகில் நின்று கொண்டு, “டேய் என் புது டிரஸ் எப்படி இருக்கு? நீங்களே சொல்லுங்க. தன்டங்களா ஏதாச்சு சொல்றீங்களாடா?” என கோபமாக தன் இரு கைகளையும் தன் இடுப்பில் வைத்துக்கொண்டு கேட்டுக் கொண்டிருந்தாள்.
தருண் “நல்லா..” என ஏதோ கூற வரும் முன்னே ராகுல் இடையில் புகுந்து, “ஹா நல்லா மைதா மாவுல உருண்டை பிடிச்சி, அதுக்கு டிரஸ் போட்டு விட்ட மாதிரி இருக்கு” என நக்கலாக சிரித்துக் கொண்டே கூற, சாரா “கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.அதுவும் இது கண்ணு தெரியாத கழுதை வேற. டேய் தருண் ஒரு நல்ல வெட்னரி டாக்டரா சஜஸ்ட் பண்ணு.என்ன தான் இருந்தாலும் ராகுல் நம்ம கழுதைல்ல” என அவளும் அவனைப் போலவே விடாமல் நக்கல் அடித்தாள்.
“எப்படி, எப்படி மேடம்.நான் கழுதை. அதுவும் கண்ணு தெரியாத கழுதைல? உண்மைய சொன்னா நக்கல் அடிக்கிற. நீயே பதில் யோசிச்சு வச்சுட்டு ஏன் எங்க கிட்ட கேள்வி கேக்குற?” என ராகுல் கேட்டான்.
“கண்ணா ராகுல் நான் கேட்ட கேள்விக்கு ரெண்டே ஆப்ஷன் தான். ஒன்னு நல்லா இருக்கு இன்னொன்னு ரொம்ப நல்லா இருக்கு. நீ சொன்னாதே அவுட் ஆப் ஆன்சர்” என்றாள்.
ராகுல் மற்றும் சாராவின் வாக்குவாதத்தை கேட்டுக் கொண்டிருந்த தருணிற்கு திடீரென சந்தேகம் முளைத்து, “அவுட் ஆஃப் சிலபஸ்னு கேள்வி பட்டு இருக்கேன்.அது என்ன சாரா அவுட் ஆஃப் ஆன்சர்” என கேட்டான்.
ராகுல் தருணை தட்டிக் கொடுத்து “என்ன ஒரு புத்திசாலித்தனம்” எனக் கூறிவிட்டு தலையில் அடித்துக் கொண்டே “ஏன்டா அவ கொடுத்த ரெண்டு ஆப்ஷனே ஓவரு. இதுல துரைக்கு சந்தேகம் வேற” என்றான்.
சாரா “நீங்க ஏதாச்சும் உளறிட்டு இருங்க. நான் போயிட்டு ஆதிக்கு கால் பண்ணிட்டு வரேன்” எனக் கூறிவிட்டு கைப்பேசி எடுத்துக் கொண்டு சென்றாள். அவள் சென்றதுமே ராகுலும் அவசர அவசரமாக உள்ளே சென்றான்.
“இவ்வளவு நேரம் சொற்போர் நடத்திட்டு, இப்போ ரெண்டும் அமைதியா போகுது” என தருண் மனதில் நினைத்துக் கொண்டு தனியாக சிரித்துக் கொண்டிருந்தான்.
ஒரு வாளி நிறைய தண்ணீரோடு முதல் தளத்தில் நின்று கொண்டு அடித்தளத்தில் நின்று கொண்டிருந்த சாராவின் மேல் ஊற்றினான் ராகுல்.
தன் மேல் தண்ணீர் விழுந்ததும் சாரா கோபத்துடனே மேலே நோக்கி அனல் வீசும் பார்வையுடன் “ஏன்டா ராகுல் என் மேல இப்ப தண்ணிய ஊத்துன?” என வினவினாள்.
“அச்சோ உன் மேல தண்ணி கொட்டிடிச்சா? சாரி சாரா கண்ணு தெரியல. நீ வேணா என்ன நல்ல வெட்னரி டாக்டர் கிட்ட கூட்டிட்டு போய் காமி” என நக்கலாக ராகுல் கூறினான்.
சாரா கோபமாக அருகில் இருந்த அறையினுள் நுழைய தருண் ராகுலிடத்தில் “ஏன் மச்சான் இப்படி பண்ற? நீ அவள அவ்ளோ ரசிச்சு பார்த்திட்டு இருந்த. அப்புறம் அவ கேட்டதுக்கு மைதா மாவுனு கலாய்ச்சி, இப்ப தண்ணிய வேற ஊத்துற. என்னடா நெனச்சிட்டு இருக்க உன் மனசுல?” என நொந்துவாறே கேட்க, “சும்மா தான் மச்சான்.என் ஆளு கோபப்படும் போது கூட அழகா இருக்கால்ல” என சாரா சென்ற திசையைப் பார்த்தவாறு பேசிக் கொண்டிருந்தான் ராகுல்.
இசையின் தோளை குலுக்கி அபி “என்ன இசை ஆச்சு? ஏன் இப்படி பைத்தியம் மாதிரி தனியா பேசிட்டு இருக்க?” எனக் கேட்ட போது தான் நிகழ் உலகத்திற்கு வந்தாள் இசை.
“ஆமா நான் பைத்தியக்காரி தான். இங்க ஒருத்தனுக்காக அவன் என்ன மதிக்காத போதும் வேலை செய்றேன்ல. நான் பைத்தியம் தான்” என இசை ஆதியின் மீது இருந்த கோபத்தை அபியின் புறம் திருப்பி சினத்துடன் கத்த ஆரம்பித்தாள்.
அவள் எதற்கு கோபப்படுகிறாள், எதற்கு கத்துகிறாள் என ஒன்றுமே தெரியாமல் முழித்துக் கொண்டே “சரி இசை கூல். பொறுமையா அமைதியா இரு. முதல இந்த தண்ணிய குடி” என தன்னிடம் இருந்த தண்ணீர் பாட்டிலை அவளிடம் நீட்டினான்.
தண்ணீர் அருந்திய பின், சிறிது நிதனமாக உணர்ந்தவள், தன் கோபத்தை எல்லாம் தள்ளிவைத்துவிட்டு “சாரி அபி யார் மேலயோ இருக்கிற கோபத்தை உன் மேல காட்டிட்டேன்” என மனதார இசையவள் மன்னிப்பு வேண்ட, அபி முறைத்த முறைப்பில் வாயை மூடிக் கொண்டாள்.
அபி அவளிடம் ஏதும் பேசாமல் அமைதியாக அமர்ந்துகொள்ள இசை “அபி அபி அபி..” என அவனை அழைத்துக் கொண்டே ஆதியைப் பற்றி மறந்தாள். சிறிது நேரம் இசையிடம் பேசாமல் விளையாடியவன் பின் அவனுக்கும் சிரிப்பு வந்துவிட சிரிப்பை அடக்க முயன்று தோற்று, இறுதியில் நகைத்தே விட்டான். இசையும் அபியும் சிரித்துப் பேசிக்கொண்டே அவரவர் வீட்டிற்கு செல்லும் போது கோபமாக வந்த ஆதி அவர்களைக் கண்டு இன்னும் கோபமாகினான்.