அத்தியாயம் 8
அடுத்தநாள் விடியலே அதீத பரபரப்புடன் ஆரம்பமாகியது.
தேவித் முன் தினம் தான் வந்திருக்க, அவனுக்கான நலங்கு வைபம் அன்றைய தினம் காலை தான் நடந்தது.
“முகத்துல மஞ்சள் பூசி அம்சமா இருக்க மாமா” என்று நைருதி குறுந்தகவல் அனுப்பியிருக்க, “மறைஞ்சிருந்து சைட் அடிக்கிறியா நதி” எனக் கேட்டு பதில் அனுப்பினான்.
“உரிமை இருக்கு மகிழ்” என்று கண்ணடிக்கும் பொம்மையுடன் அனுப்பி வைத்தாள்.
“அப்பு” என்று மகனிருந்த அறைக்குள் மாமன்னன் வர, அவனது தகவல் பேச்சு நிறுத்தப்பட்டது.
“வாங்கப்பா” என்றவன் அப்போது தான் நலங்கு முடித்து குளித்து வந்திருந்தான். வந்ததும் அலைபேசியில் சத்தம் கேட்டு நைருதிக்கு பதில் அனுப்பியிருக்க, தற்போதுதான் தந்தையை கண்டுவிட்டு ஈர கேசத்தை தூவாலையால் துவட்டினான்.
“இப்போ தான் குளிச்சிங்களா தம்பி” என்ற மாமன்னன், தானே தூவாலாயை வாங்கி துவட்டிவிட்டு, மகனின் முன் நெற்றியில் தோரணமாய் சிலிப்பியிருந்த முடிக் கற்றைகள் ஒதுக்கி நெற்றியில் முத்தம் வைத்தார்.
“இராஜாவாட்டம் சந்தோஷமா இருக்கணும் தங்கம்” என்றார்.
“லவ் யூப்பா” என்று அவரை கட்டிக்கொண்டான்.
“தேடுனீங்களா அப்பு? அம்மா சொன்னா” என்றார்.
“ம்ம் ப்பா…”
“நலங்கு முடிஞ்சதும் பந்தி பார்க்க போயிட்டேன்… கவினும் மச்சானும் எவ்ளோ வேலைதான் பார்ப்பாங்க” என்றார்.
அவர் சொல்லியதை கேட்டுக் கொண்டவனாக தலையசைத்து,
“தாலி நாம தானப்பா எடுக்கணும். இல்லை மாமா வீட்டுல தான் செய்யணுமா?” எனக் கேட்டான்.
“நாம தான் கண்ணா” என்றார்.
தலையை அசைத்த தேவித் தான் கொண்டு வந்திருந்த பெட்டியிலிருந்து, சிறு பை ஒன்றை எடுத்து மாமன்னன் கையில் கொடுத்தான்.
“என்னதுப்பா?” என்றவாராக, அதனை திறந்து பார்க்க, அதில் நகை பெட்டி ஒன்று இருந்தது.
“தங்கங்களா? பாப்பாவுக்கு வாங்குனீங்களா?” எனக் கேட்டுகொண்டே திறந்து பார்த்தவர், “நல்லாயிருக்குங்க. நீங்களே கொடுத்திடுங்க அப்பு. ருதி சந்தோஷப்படும்” என்றார்.
“இது செயின் இல்லப்பா. தாலியும் கொடியும்” என்றான்.
“அப்பு” என்ற மாமன்னன் திருப்பி திருப்பி பார்த்தார். எந்த கோணத்திலும் அவருக்கு அது தாலி போன்று தெரியவில்லை.
சங்கிலி மட்டும் முறுக்கு பின்னலாக கொடி போன்று தெரிந்தது. அதில் தங்கத்தால் கோர்க்கப்பட்டிருக்கும் வடிவம் தாலி போன்றில்லை.
“இது தாலி மாதிரி தெரியலையே தம்பி” என்றார்.
“இது தாலி தாம்ப்பா” என்ற தேவித், “பழங்கால ராஜா காலத்து டிசைன்… ஆன்டிக் மாடல்” என்றான்.
“ம்ம்…” என்று அவர் அதனை பார்த்திருக்க…
“இந்த தாலியை கல்யாணத்துக்கு வச்சிக்கலாம் ப்பா” என்று தேவித் கூறினான்.
“இது…” என்று மாமன்னன் யோசிக்க…
“மகன் கூடவே நின்னா வேலையெல்லாம் யார் பாக்குறது. சொந்தபந்தமெல்லாம் வர ஆரம்பிச்சாச்சு” என்று மாமன்னனிடம் வினவியவாறு அருணா அறைக்குள் வர, கணவரின் கையிலிருந்த சங்கிலியை பார்த்து,
“அழகா இருக்கு. யாருக்கு?” எனக் கேட்டார்.
சட்டென்று நினைவு வந்தவராக,
“இது வானு கல்யாணத்தப்போ, இந்த டிசைனில் தாலி செய்யலாம்னு ருதி காட்டியது தானே?” என்றார்.
“உங்களுக்கு மெமரி பவர் அதிகம்மா” என்ற தேவித், “இதையே வச்சிக்கலாம்மா” என்றான்.
“அப்போவே உன் அத்தை இதென்ன விளையாட்டு வேலைன்னு வேணாம் சொன்னாள். இப்போ அவ பொண்ணுக்கு மட்டும் எப்படிப்பா ஒத்துப்பா?” என்றார் அருணா.
“ம்மா பிளீஸ்… நதி ஆசைப்பட்டதும்மா” என்றான். சிறுவனாக முகம் சுருக்கி.
மகனின் முகம் கெஞ்சலை காண்பிக்க மாமன்னன் விட்டுவிடுவாரா என்ன?
“சரிங்கப்பு. இதையே முகூர்த்தத்துக்கு வச்சிக்கலாம்” என்றார். உடனடியாக.
“நம்ம வழக்கத்தில் இந்த தாலி இல்லைங்களே! அதுவும் இந்த மாதிரி தாலி எதோ கல்வெட்டுல பார்த்தது, ஆராய்ச்சியில கிடைச்சதுன்னு ருதி சொன்னாளே! இப்போ இதை நம்ம ஆளுங்க ஏத்துப்பாங்களா?” எனக் கேட்டார் அருணா. அவருக்குமே மகன் கேட்டதை மறுக்க முடியவில்லை.
இதுவரை தேவித் கேட்ட எந்த ஒன்றிற்கும் மறுத்து சொல்லியதில்லையே. இதற்கு மட்டும் எப்படி சொல்லிவிடுவார்கள். இருந்தும் ஒரு தயக்கம்.
“அதெல்லாம் பார்த்துக்கலாம் விடு அருணா. அப்பு ஆசைப்பட்டது நடக்கணும்” என்று தன்னுடைய முழு சம்மதத்தை மாமன்னன் வழங்கிட, அருணாவாலும் அதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாது போனது.
“தேங்க்ஸ்ப்பா” என்ற தேவித்தின் மகிழ்வுக்கு இணையாக, மற்றொரு ஜீவனும் அதீத மகிழ்வில் கண்ணாடியில் தன் முகம் பார்த்து மீசையை முறுக்கிவிட்டு மூரல்கள் காட்டியது.
பரந்த பெரும் பரப்பின் கூரை உச்சி வான் தொடும் உயரம் நிமிர்ந்து நிற்க, சுவர் யாவும் தங்கம் இழைக்கப்பட்ட பளபளப்பு.
அந்த அறையின் ஒரு பகுதியில் அல்லி மற்றும் ஆம்பல்கள் மொட்டுக்களாக நிறைந்திருக்கும் குளமும், மற்றொரு பகுதியில் அதற்கு இணையான பஞ்சனை மஞ்சமும், இரண்டிற்கும் நடுவில் அவன் தன்னை ரசித்திருக்கும் அவ்வறையின் விமானத்திற்கு இணையான உயரம் கொண்ட கண்ணாடி. இரு பக்கமும் தோகை நீண்ட மயிலின் அமைப்பு.
கண்ணாடி ரசத்தில் அவனது பிம்பம் தெரியவில்லை… மாறாக… கிரகங்கள் முன்னோக்கி சுழலும் நேரம் நாமும் அறிவோம்.
அவனின் கண்களில் மின்னல் வெட்டு. வெற்றியை தொட்டுவிடும் களிப்பு. மனதின் தாகம் தணிக்க காத்திருக்கும் வேட்கை.
“காலம் கனிந்து கொண்டிருக்கிறது அரசே!”
தனக்கு பின்னால் கேட்ட குரலில் திரும்பாதவனின் வஸ்திரம் மட்டும் அவனின் இசைவுக்கு அசைந்து கொடுத்தது.
“காத்திருப்பின் பலனை அடைவதும் எளிதல்லவே! மறுஜென்மமின்றிய உருவத்தோடு மனதால் உணர்வுகள் கொள்ளவது சாத்தியமற்றது. அதனை வல்லமைப் படுத்துவதில் நம் நிதானமே பிரதானம்” என்றான் அவன். இயல்பானப் பேச்சும் சிம்ம ஒலிக்கு நிகராக இருந்தது.
“விவாஹ வைபவம் சிறப்புற நடைபெறட்டும். இன்னும் நமக்கான அமைப்பு வரவில்லை” என்றான்.
“தாங்கள் காலச்சக்கரத்தை ஒருமுறை சுழற்றினால் போதும் அரசே. கிரகங்கள் பாதைவிட்டு அகன்றிடும்.”
“தானாக வரவேண்டும் என்பது நியதி. மறந்துவிட்டீர்களா?” என்றவன், “சொப்பனமாக உணர்த்திட முடியுமே அன்றி… மனம் விரும்பாது அழைத்துவர முடியாது” என்றான்.
“அரசே…”
“அவசரம் வேண்டாம். சில திங்கள் பொறுத்தாக வேண்டும்” என்றவன் பார்வை அங்கே குளத்திற்கு நடுவில் வீற்றிருந்த சிலையின் கழுத்திலிருந்த தாலியில் பதிந்தது.
உயிரற்ற சிலையின் மோட்சம் அவசியமாகிட… ஆழ் காதலின் தடத்தால் அக்குளம் நிரம்ப வேண்டும். மொட்டுக்கள் யாவும் சூல் கொண்டு வெடித்திட, நீர் முழுக்க மலரின் இதழ்கள் மலர்ந்திருக்க வேண்டும்.
மின்னும் வெள்ளியாய் தங்கம்.
சிலையின் மார்பில் மட்டுமல்ல தேவித்தின் கைகளிலும்.
தாலி கட்டும் நேரம் ரமா எதும் தடங்கலாக பேசிவிடக் கூடாதென்று அருணா தாலியைப்பற்றி ரமாவை உறவுகளின்றி தனியாக அழைத்து வந்து கூறிட… மறுக்கவே செய்தார்.
“நம்ம முறையில் இல்லாதது ஏத்துக்க முடியாது அண்ணி.”
“இப்போலாம் தாலின்னு சின்ன செயின் கூட போட்டுக்கிறாங்க ரமா. பிள்ளைங்க சந்தோஷத்தைப் பாரு” என்று அருணா எவ்வளவோ எடுத்து சொல்லியும் ரமா ஒப்புக்கொள்ளவில்லை.
“நீங்க கொஞ்சம் மாப்பிள்ளை வீட்டு முறுக்கை காட்டலாம்மா. தப்பில்லை” என்று வந்த தேவித், “நான் இந்த தாலி தான் கட்டுவேன் சொன்னா என்ன பண்ணுவீங்க அத்தை?” எனக் கேட்டான்.
“இது விளையாட்டு விஷயமில்லை தேவா. சம்பிரதாயத்தை மாத்திறது தோஷத்தில் கொண்டு போய் நிறுத்தும்” என்றார்.
“சடங்கு, சம்பிரதாயம் எல்லாம் மனுஷங்க உருவாக்கினது தானே?”
“இதென்ன விதாண்டாவாதப் பேச்சு தேவா?” என்ற ரமா, “சில விஷயங்கள் எப்பவும் மாத்திக்க முடியாது” என்றார்.
“சில திருமணத்தில் தாலியே இருப்பதில்லையே அத்தை. அவங்க எல்லாம் நல்லா வாழலையா?” என்றவன், “கட்டுனா இந்த தாலி தான். இல்லையா தாலியே வேண்டாம். அதான் நேத்தே மோதிரம் போட்டாச்சே. அப்போவே நதி என் பொண்டாட்டி ஆகிட்டா. நாளைக்கு தாலிக்கட்டினா தான் என் பொண்டாட்டின்னு இல்லை” என்றான்.
“என்னடா அதிசயமா இவ்ளோ சவுண்டா பேசுற நீ?” என்று வந்தான் கவின்.
அருணா நடப்பதை சொல்ல…
‘இது தன் தங்கை ஆசைப்பட்டதற்காக’ என்று கவினுக்கு புரிந்தது.
அவனது திருமணத்தின் போது சிறு விருப்பமாக நைருதி சொல்லியது. அதனை தேவித் கவனித்திருக்கிறான் எனத் தெரிந்தது.
“கல்யாணத்துக்கு தாலி தான் முக்கியம். அது எப்படியிருந்தா என்னம்மா?” என்றான் கவின். ரமாவிடம்.
“அம்மான்னு பொம்பிளையைத்தான் கூப்பிட முடியும். அதுக்குன்னு” என்று சொல்ல வந்தவரை,
“நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்” என்று தடுத்திருந்தான் கவின்.
“இவங்களை மாத்துறது கஷ்டம் தேவா!” கவின் நெற்றியைத் தேய்த்தான்.
“அத்தை…” என்ற தேவித் என்ன சொல்வதென்று தடுமாற, அவனின் முகத்தில் ரமா என்ன கண்டாரோ?
“என்னவும் செய்ங்க. தாலின்னு ஒன்னு கட்டுனா போதாதா. எல்லாரும் ஒரு பக்கம் நிக்கும்போது நான் மட்டும் என்ன சொல்ல” என்று நகர்ந்துவிட்டார்.
மாமன்னன் ஆவுடையிடம் சொல்ல, அவருக்கும் தாலியென்ற ஒன்று தான் அவசியமாகத் தெரிந்தது. அதன் வடிவமோ அமைப்போ முக்கியமாகத் தெரியவில்லை.
ரமாவின் மறுப்பு ஆழமாக இருந்திருந்தால் இயற்கைக்கு முரணான பல விஷயங்களை தவிர்த்திருக்க முடியுமோ? முரண்பட்ட ஒன்று பல முரண்களுக்கு வழி வகுத்திட்டது.
இவை யாவும் அவன் ஒருவனின் மன எண்ணத்திற்கான காட்சியே! அவன் அங்கு நினைத்திட, இங்கு அரங்கேறுகிறது.
“இந்த தாலி விஷயம் நதிக்கு இப்போ தெரிய வேண்டாம்” என்று தேவித் கூறிட, மற்றவர்கள் சரியென்றனர்.
அடுத்தடுத்து வேகம் விரைவாகக் கரைந்திட…
மாலை பெண்ணழைப்பிற்கு முன்பு வீரட் வந்து சேர்ந்தான்.
“லேப்பில் எல்லாம் ஓகே தானே? வொர்க்லாம் எப்படிடா இருக்கு?”
வீரட்டை பார்த்ததும் தேவித் கேட்க, அவனை வெட்டவா குத்தவா என்று தான் பார்த்து வைத்தான் வீரட்.
“என்னாச்சு?” கவின் வினவ,
“இப்போ வழக்கமா கேட்க வேண்டிய கேள்வி என்ன? நீ நல்லாயிருக்கியா கேட்கணும். அதைவிட்டுட்டு, நேத்து தான் இங்க வந்தான். இன்னைக்கு அதுக்குள்ள வேலையை பத்தி கேட்கிறான். இவனுக்கு அவசியம் உங்க தங்கச்சியை கட்டிக் கொடுக்கணுமா? நல்லா யோசிங்க” என்றான் வீரட்.
அதில் கவின் அட்டகாசமாக சிரிக்க…
“நான் காமெடி பண்ணல. சீரியஸா சொல்றேன். லேபுக்குள்ள போனா அவனையே மறந்திடுவான். இதுல உங்க தங்கச்சி, அவனுக்கு நடந்த கல்யாணம் எல்லாம் சுத்தமா நினைவிருக்காது” என்ற வீரட்டிடம்,
“எங்களுக்கு பழகிப்போச்சு” என்று நெற்றியில் விதியென பெருவிரலால் கோடிழுத்து சைகை காண்பித்தான் கவின்.
“என்னை ஓட்டினது போதும். போய் வேலையை பாருங்கடா” என்ற தேவித், ஒலித்த மேளச் சத்தத்தில் தன்னுடைய அறைக்குள் சென்றான்.
உறவுகள் சூழ நைருதி தேவித்தின் வீட்டிற்குள் அழைத்துவரப்பட்டாள்.
அடுத்தடுத்து நடக்க வேண்டிய சடங்குகள் முடித்து, தேவித்தை அழைத்து நைருதியுடன் இணைந்து இறைவனை வணங்கச் செய்து, அனைவரும் மண்டபம் கிளம்பினர்.
தன் மனம் நிறைந்தவளின் சிறு விரல் பிடித்து முதல் பயணம். வாழ்க்கை முழுமைக்குமான தொடக்கத்தின் முதல் அடி. பிணைந்த விரல்களின் இணைவு வாழும் காலம் இறுதிவரை வேண்டுமென்று தேவித்தின் மனம் நினைக்க… அப்பயணம் அத்தனை எளிதல்ல என்ற எண்ணம் சிந்தையின் ஓர் புள்ளியில் உதயமாவதை அவனால் தடுக்க இயலவில்லை.
காலத்தின் கட்டளை எதுவோ… அதற்கேற்ப அடி வைத்து முன்னேறுகிறது இக்காதல் ஜோடி.
மேகோனின் மேன்மை நேசம் 9
மேளதாளத்தின் மங்கள இசை மண்டபம் முழுக்க எதிரொலிக்க, சுற்றம் சூழ் உறவினர்களின் ஆசீர்வாதத்தோடு, பெரியவர்களின் கரங்கள் தீண்டிய நல்லாசியுடன் தன் கைகள் ஏந்திய தாலியை நைருதியின் முகத்திற்கு நேரே உயர்த்தி பிடித்தான் தேவித்.
மணமேடை ஏறியது முதல் சிரம் தாழ்ந்து அமர்ந்திருந்தவள் மெல்ல விழிகள் உயர்த்தி பார்வையை தன் முன் ஊசலாடிய தாலியில் பதித்தவளின் மான் விழிகள் இரண்டும் கரு வண்டு தெறிக்க தேவித்தின் முகம் நோக்கின. அதிர்வாய். ஆச்சரியமாய். உள்ளுக்குள் பூத்திட்ட மலர் சோலையின் நிறைவை அவனுக்குள் புகுத்தியவளாக பெரும் ஆர்ப்பரிப்பை தேக்கியிருந்தது அவளது கண்கள்.
கட்டவிழும் காதல் பார்வை போதுமானதாக இருக்க, அவளின் விழியோடு தன்னுடைய அகமும் கலந்து கரைய, தாலிச் சங்கிலியை அவளின் நெற்றியோடு தன் நெற்றி முட்டிட சிறு அணைப்பை அரவணைப்பாய்க் காட்டி அணிவித்தான்.
வானில் சட்டென்று முளைத்த வெள்ளியின் கண்ணசைவுக்கு கிரகங்கள் சுற்றி சுழன்றிட… மேகக் கூட்டங்களுக்கு நடுவே வளிமண்டல யுத்தம் நிகழ்ந்து முடிந்தது. சுழன்ற கோள்கள் யாவும், இதுவரை தான் பயணித்த பாதை மாறி, வேறு பாதையில் பின்னோக்கி சுழலத் துவங்கியது.
அங்கே வேந்தன் அவனின் வதனம் இளமுறுவலை தேக்கி சுளிந்தது.
நைருதியின் கரு விழிகள் பக்கவாட்டில் நாணத்தோடு கணவனை ஸ்பரிசிக்க…
“ஆர் யூ ஹேப்பி?” எனக் கேட்டான்.
“ரொம்ப…” என்றவளின் விரல்கள் மார்பு உரசும் தாலியை தொட்டு தடவியது.
இருவருக்கும் இடையே ஆழம் தொட்டு நிற்கும் காதல், நாணத்தையும் தடுமாற்றத்தையும் ஒதுக்கி வைத்து, அனைத்தையும் இயல்பாய் ஏற்க வைத்தது.
இலை வடிவ தாலியின் நடுவில் பதிக்கப்பட்ட பொடி வைர கற்களுக்கு நடுவே மகாலட்சுமியின் உருவம். சங்கிலியோடு தங்க இழையாலே கோர்க்கப்பட்டிருந்தது.
நைருதியின் விரல் தீண்டலில் அங்கே கற்சிலையின் சங்கிலி ஒளிர்ந்து அடங்கியதுவோ!
“லவ் யூ மாமா!”
உள்ளங்கையில் வெம்மையாய் இறங்கிய தாலியின் சூட்டை உணர்ந்து கொண்டே, தன் காதல் வார்த்தைகளால் தேவித்தின் மனதை குளிர வைத்தாள் நைருதி.
தேவித் மென் முறுவல் பூத்து, கண்கள் சிமிட்டி இரு விரலால் இதயம் காட்டினான். (கொரியன் ஹார்ட் – பெருவிரல் சுட்டுவிரல் சேர்த்து.)
“லவ்வெல்லாம் இனி உங்க ரூமுக்குள்ள வச்சுக்கோங்க. இப்போ மத்த சடங்கு செய்ங்க.” அவர்களுக்கு பின்னால் நின்றிருந்த கவின் கூற,
“எங்களை விலக்கி விடுறதுலே இருக்க நீ” என்று அவனின் காலிலே கிள்ளியிருந்தான் தேவித்.
“அடடா… ஆரம்பிச்சிடாதீங்க. சீக்கிரம் முடிங்கடா. ரொம்ப பசிக்குது. சவுத் இண்டியன் கல்யாண சாப்பாட்டை சாப்பிடத்தான் உன் கல்யாணத்துக்கே வந்தேன் நான்” என்றான் வீரட்.
“சாப்பாட்டு ராமா” என்று முணுமுணுத்த தேவித், “அவனை கூட்டிட்டு போய் டைனிங் ஹாலில் விட்டுட்டு வாடா” என்றான் கவினிடம்.
“பேசிட்டே இருந்தா யாரு செய்றது?” என்ற ஐயர், பால் நிறைந்த குடத்தில் மோதிரத்தை போட்டு எடுக்க சொல்ல, குடத்திற்குள் மோதிரம் சிக்குண்டதெல்லாம் தேவித்தின் கையில், வெளியில் மோதிரம் தோற்றம் கொண்டதோ நைருதியின் கரத்தில்.
தேவித்தின் விட்டுக்கொடுத்தல் யாவும் அவளுக்காக மட்டுமே அன்றி அவளே அல்ல.
அடுத்தடுத்து சிறு சிறு விளையாட்டுக்கள் முடித்து, உறவினர்களுடன் புகைப்படம் எடுத்து என்று நேரம் விரைந்தோட, மணமக்கள் உணவு உண்ண அழைத்துச் செல்லப்பட்டனர்.
இருவரும் சிரித்து பேசி உண்ண…
“எல்லார் கண்ணும் ஒரே மாதிரி இருக்காது. எல்லாம் வீட்டில் போய் பேசிக்கலாம்” என்றார் ரமா.
நைருதி அமைதியாகிவிட,
“விடுங்கத்தை. அவங்களுக்கான நாள் இது. அவங்க இஷ்டம் போல இருக்கட்டும்” என்றாள் வான்மதி.
“ஆமா ரமா. பிள்ளைங்க சந்தோஷம் தான் நமக்கு வேணும். ரெண்டு பேரும் முகத்திலிருக்கும் சந்தோஷம் அவங்க ரூமுக்குள்ள போயா நாம பார்க்க முடியும். இப்படியான நேரத்தில் தானே நமக்கும் நிறைவு” என்றார் அருணா.
“நீங்க சொல்றதும் சரிதான் அண்ணி” என்ற ரமா, “எனக்கு நம்ம வழக்கத்தில் இல்லாம தாலி மாத்தி கட்டினதிலே சுணக்கமா இருக்கு அண்ணி. இதுல முகூர்த்த புடவையும் கூரப்புடவை இல்லாம, தேவா வாங்கி வந்துட்டான்னு அதையே கட்டிக்கிட்டா. என்னன்னு சொல்லத் தெரியல. சஞ்சலமாவே இருக்கு” என்ற ரமாவின் கையை அழுத்தி விடுத்த அருணா, “நாளைக்கு குல தெய்வம் கோவிலுக்கு போயிட்டு வந்தா எல்லாம் சரியாகிடும் ரமா. எல்லாரும் கிளம்புறாங்க பாரு. வழியனுப்பி வை” என்று அனுப்பி வைத்தார்.
“புடவையில் என்னம்மா இருக்கு? அத்தை ஏன் இப்படியெல்லாம் யோசிக்கிறாங்க. மயில் நீலம், பர்பில் மிக்ஸ்ட் கலர்ல, முழுக்க தங்க இழை… ருதிக்கு இந்த புடவை எவ்வளவு அழகா இருக்கு” என்றாள் வான்மதி.
“ரமா அப்படித்தான் எதையும் முறையா செய்யணும் நினைப்பா. விடு. ஆனதை பேசி என்னாகப்போகுது. இந்த புடவை, தாலி எல்லாம் தேவாவே வாங்கிட்டு வந்ததில் அவன் ருதி மேல வச்சிருக்க அன்பா தான் என்னால பார்க்க முடியுது” என்றார்.
ரமா சொல்லியதும் அருணாவுக்கும் இன்னதென்று புரியா உணர்வு எழ, மகன், மருமகளை கண்டு அவர்களின் சின்ன செயலில் அனைத்தையும் ஒதுக்கி வைத்து புன்னகையோடு அவ்விடம் விட்டு நகர்ந்தார்.
தேவித்திற்கு ரசகுல்லா பிடிக்குமென்று தனக்கு வைத்ததை அவனுக்கு எடுத்து வைத்தாள்.
“உனக்கு வேணாமா?” தேவித், அவள் வைத்த இனிப்பை எடுத்து கடித்தவனாக அவளிடம் கேட்க, “உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்ல” என்றாள் அவள்.
“அப்போ உனக்கு” என்றவன், தான் பாதி உண்டதை அவளிடம் வைத்தான்.
அவள் விழி விரித்து அவனை பார்க்க,
“வேண்டாமா?” என்று அவன் தான் வைத்ததை எடுக்க முயல…
“இல்ல… வேணும்” என்றாள். அவசரமாக.
தேவித்திடம் பற்கள் தெரிய சத்தமின்றி அட்டகாசமான சிரிப்பு.
அவர்களை கண்டும் காணாது கவின் நகர்ந்திட்டாலும், நைருதியின் அருகில் வந்த வான்மதி,
“அண்ணி எனக்கும் ரசகுல்லா ரொம்ப பிடிக்கும்” என்று கண்சிமிட்டி சொல்லியதில், நைருதியின் முகம் குங்குமமாய் சிவந்தது.
“இதுக்கேவா” என்று நைருதியின் கன்னம் கிள்ளிய வான்மதி, “நைட்டுக்கும் கொஞ்சம் மிச்சம் வைங்க அண்ணி” என்றாள். அத்தனை மெலிதாக காதில் கிசுகிசுத்த போதும், தேவித்திற்கு தங்கையின் பேச்சு கேட்டிட, நமட்டுச் சிரிப்பை உதிர்த்தான்.
“என்ன மச்சான் முகத்தில் ஒளி வட்டம்.” வீரட் கேட்க,
“ஒண்ணுமில்லை” என்று அவனின் வாயிலே உணவை அள்ளித் திணித்து நகர்த்தினான் தேவித்.
வான்மதி மேலும் எதையோ சொல்லி நைருதியை சீண்டிட,
“அண்ணி” என்று சிணுங்களாக தனக்கு பக்கவாட்டில் நின்றிருந்த அவளின் வயிற்றிலே முகத்தை புதைத்துக் கொண்டாள் நைருதி.
“இவ்ளோ ஷை ஆனா எப்படிம்மா?” என்ற வான்மதி, “அண்ணா பாவம்” என்று குறும்பாக கண்ணடித்தாள்.
“மதி போதும் விடு” என்று தேவித் கூறிட,
“பாருடா… இப்போவே துணைக்கு வரத” என்ற வான்மதி மேலும் தன் பேச்சால் இருவரையும் சிவக்க வைத்துவிட்டே அங்கிருந்து சென்றாள்.
தேவித் உண்டு முடித்து அவளுக்காகக் காத்திருக்க…
“நீங்க போங்க மாமா. ஹேன்ட் வாஷ் பண்ணுங்க” என்றாள் நைருதி.
“இருக்கட்டும் நதி. எங்கேஜ்மெண்ட் அப்போ தான் மிஸ் பண்ணிட்டேன். வெட்டிங்கில் இந்த மாதிரி சின்ன சின்ன மொமெண்ட் ரொம்பவே பிரிஷியஸ் இல்லையா?” என்றான்.
இதழ் பிரியா புன்னகையை அவனுக்கு பதிலாகக் கொடுத்தாள்.
“அன்னைக்கு நான் டக்குன்னு எழுந்து போனது… உனக்கு ஹர்ட் ஆச்சா?” எனக் கேட்டான்.
அவள் இல்லையென்று தலையசைத்து, “அண்ணா எதோ சொல்ல உங்களை அது ஹர்ட் பண்ணிடுச்சுன்னு புரிஞ்சுது” என்றாள்.
“ம்ம்… பட் நான் அப்படி ரியாக்ட் பண்ணியிருக்கக் கூடாதுல” என்று முகம் சுருக்கினான்.
நைருதி எதுவும் சொல்லாது பார்க்க…
“சாரி கேட்கணும் தோணல…” என்று நிறுத்தி, “எனக்கு நானே எப்படிடி சாரி சொல்றது” என்றான்.
அவர்களின் பேச்சை கேட்டும் கேட்காததைப்போல் பார்த்திருந்த வீரட்…
“உருட்டுடா உருட்டு” என்றதோடு, “இது எஸ்கேபிசம். ஏமாந்துடாதம்மா” என்றான். நைருதியிடம்.
அவள் சத்தமாக சிரித்திட,
“டூ டேசில் டெல்லி வந்துடுவேன்” என்றான் நைருதி.
“இதோ நான் போயிட்டேன் மச்சான். நீ என்ன வேணாலும் பேசு மச்சான். உன் பொண்டாட்டி உன் வாய்… நடுவுல நான் எதுக்கு” என்று வீரட் சென்றிட,
“இவ்ளோ ஜாலியான அண்ணா எப்படி உங்களுக்கு ஃபிரண்ட் ஆனாங்க” என்று தேவித்தை வம்பு இழுத்திருந்தாள் அவனின் மனைவி.
“அப்போ நான் சிடுமூஞ்சி சொல்றியா நீ?”
“நீங்க ரொம்ப அமைதி. உங்களை அப்படிப்பர்த்துதான் பழக்கம்.”
“ஹம்… போகஸ் முழுக்க கரியர்லே இருந்ததால… மத்ததுக்கு இடம் கொடுக்கல. அவ்ளோதான்” என்ற தேவித், “போகப்போக என்னைத் தெரிஞ்சிக்கலாம். இப்போ வா வீட்டுக்கு கிளம்பலாம்” என்றான்.
ஆவுடையும், “நல்ல நேரம் முடியும் முன்ன வீட்டுக்கு போகணும். வண்டி ரெடியா இருக்கு” என்று வந்து இருவரையும் அழைத்துச் சென்றார்.
இவர்களுக்கு முன்பாகவே மற்றவர்கள் வீட்டிற்கு சென்றிருந்தனர். ஆவுடை, கவின், வான்மதி, வீரட் மட்டுமே இவர்களுடன் வந்தது. வரும் வழியிலே உச்சி மலை ஏறி பிள்ளையாரை வணங்கி மாலை கழிந்த நேரம் தான் வீடு வந்து சேர்ந்தனர்.
வீட்டிற்கு வந்ததும் பூஜையறையில் நைருதி விளக்கேற்றிட, இருவரும் ஒன்றாக இறைவனை வணங்கி பெரியவர்களிடம் ஆசி பெற்றனர்.
“வானு கூட்டிட்டுப் போய் பால் காய்ச்ச வைம்மா” என்று அருணா சொல்ல, வான்மதியும் நைருதியும் சமையலறை சென்றனர்.
“நீ இப்படி உட்காரு தேவா. இப்போ ரூமுக்கு போக வேண்டாம்” என்று கூடத்து இருக்கையை காட்டிட, அறைக்குள் செல்ல முயன்ற தேவித் அங்கேயே தந்தையின் அருகில் அமர்ந்தான்.
சிறிது நேரத்தில் கவினும், வீரட்டும் தன்னுடைய அறையிலிருந்து வெளியில் வருவதை பார்த்த தேவித் கண்டுகொண்டான்.
‘என்னத்த செய்து வச்சிருக்கானுங்க தெரியலையே.’ தனதருகில் வந்தமர்ந்த இருவரையும் ஆராய்வாகப் பார்த்தான்.
“உனக்காக ஸ்பெஷல் டெக்ரேஷன் மச்சான். என்ஜாய்” என்று அருகிலிருந்த மாமன்னனுக்கு கேட்காது, மெல்லக்கூறி கண்ணடித்தான் வீரட்.
“பத்து கிலோ ரசகுல்லா வேற வச்சிருக்கான் உன் மச்சான்” என்று கூற, தேவித் கவினை நோக்கினான்.
“அடேய்… ஏன்டா?” என்ற கவின், “அதெல்லாம் எதுவும் இல்லடா. அத்தை கொடுத்த ஃப்ரூட்ஸ் மட்டும் தான் வச்சிருக்கேன். அது கூட ஏதோ சம்பிரதாயம் சொன்னதால” என்றான்.
“எதுக்கு இப்போ டென்ஷன் ஆகுறீங்க. அதெல்லாம் அவனுக்குத் தெரியும்” என்ற வீரட், “ஆமால மச்சான்” என்றான். தேவித்தின் தோளில் கைப்போட்டு.
“இதுதான்டா எனக்கு முதல் கல்யாணம்” என்ற தேவித், “உன்னை கூப்பிட்டிருக்கவேக் கூடாதுடா” என்று வீரட்டின் முதுகிலே அடி ஒன்றை வைத்தான் தேவித்.
சமையலறையிலிருந்து வான்மதி கவினுக்கு ஜாடை செய்ய, அவன் புரிந்தது எனும் விதமாக…
“ஹெவி டயர்ட் மச்சான். தூங்கணும். உட்கார்ந்திருக்க முடியல. நாளைக்கு பார்க்கலாம்” என்று தன்னுடைய வீட்டிற்கு செல்ல, அவனுடன் ஆவுடை, ரமாவும் கிளம்பிவிட்டனர்.
“நீங்க வாங்க தம்பி” என்று வீரட்டை அழைத்துச் சென்று ஒரு அறைக்குள் உறங்க வசதி செய்து கொடுத்த வந்த மாமன்னன், மகனின் அருகில் வந்து, அவனது உச்சியில் அழுத்தமாக தன் கை வைத்து…
“சந்தோஷமா இருக்கணும் தங்கம்” என்று கூறிச் சென்றார்.
“நீ ரூமுக்கு போ தேவா.” அருணா சொல்லிட, எழுந்து நின்று சட்டையை இழுத்து விட்டவனாக, சமயலறை நோக்கி பார்வை ஒன்றை வீசிச் சென்றான் தேவித்.
எதிர்பார்த்த தருணங்கள் இயல்பாய் அரங்கேற, எதிர்பாராத பல விந்தைகள் நிகழ்பெற அன்றைய இரவு ஆரம்பமாய்.