Loading

 

அத்தியாயம் 6

மண்டபத்திலிருந்து அத்தனை வேகமாக… கோபமாக வீடு வந்து சேர்ந்திருந்தான் தேவித்.

அவனால் தன் மனதை, முயற்சியை பலவீனப்படுத்தும் எந்தவொரு வார்த்தைகளையும் அத்தனை எளிதாக ஏற்க முடியவில்லை.

முடியாத என்ற ஒன்றை கூட, முடியும் என்ற நம்பிக்கை நிறைந்த வார்த்தைகள் வெற்றி அடையச் செய்திடுமாம். தற்போது தேவித்துக்கு வேண்டுமாக இருப்பதும் அந்த முடியும் என்கிற உந்துதல் தான்.

இரண்டு வருடங்களாக போராடிக் கொண்டிருக்கிறான். போராட்டம் என்பதைவிட யுத்தம் என்று சொல்லலாம்.

காலத்தை வென்றிட, காலத்தோடு தேவித் புரியும் மாபெரும் யுத்தம்.

சறுக்கிக் கொண்டே இருக்கும் களத்தில் முயன்று பாதை அமைத்துக் கொண்டு இருக்கின்றான். முற்று போடும் ஒற்றைப் புள்ளி அவனின் கண்களுக்கு சிக்குவதில் அத்தனை தூரம் கடந்திருந்தான். ஒவ்வொரு அடிக்கும் அந்தப் புள்ளி எட்டு வைத்து, அகப்பட்டுவிடக் கூடாதென்று அவனுக்கு முன்னால் ஓடிக் கொண்டிருக்கிறது. பிடித்து நிறுத்தி வைக்கும் முனைப்பில் தேவித்.

அவனது பெயரிலிருக்கும் மகிழ்வை அந்த புள்ளி மட்டும் உச்சமாய் நிரப்பிடும் காலமும் வெகு தூரமில்லை. அயராத உழைப்பிற்கும் முயற்சிக்கும் பலன் என்ற ஒன்று காலத்தின் கைகளில் இருக்கத்தானே வேண்டும். அதுதானே நிதர்சனம்.

இங்கு அந்த நிதர்சனத்தில் காலத்தின் சுவடை தன் கைக்குள் அடக்கவிருக்கிறான் தேவித் மகிழோன்.

சற்று முன்னர் காதலில் கனிந்து கொண்டிருந்த முகமா அது என நினைக்கும் வகையில், அத்தனை இறுகியிருந்தான்.

காற்றை மட்டுமே உணவாய் உண்டு ஜீவித்து நொடியையும் வீண் செய்யாது, அதற்காகவே ஒவ்வொரு நாளையும் அர்ப்பணித்து வருபவனுக்கு கவினின் சாதாரணப் பேச்சையும் பொறுக்க முடியவில்லை.

அங்கிருந்து பட்டென்று அப்படி வந்தது தவறென்று அவனுக்கே தெரிகிறது. ஆனாலும் இயல்பாய் ஏற்க முடியவில்லை.

உணவு உண்ண அமர்ந்த தேவித் சடுதியில் வெளியேறியதும் மாமன்னனும் மகனின் பின்னாலே வீடு வந்து சேர, மண்டபத்தில் அனைத்தும் முடிந்திருக்க மற்றவர்களும் வந்து சேர்ந்தனர்.

மண்டபம் அவர்களுடையது என்பதால் மற்ற வேலைகள் யாவும் பணியாட்கள் பார்த்துக்கொள்வர்.

“மகிழு” என்று மகனின் அறைக்குள் நுழைந்த மாமன்னன், “என்னாச்சு தங்கம்?” என்று அறைக்குள் இங்குமங்கும் வேகமாக நடந்து கொண்டிருந்தவனை பிடித்து நிறுத்தினார்.

தேவித் சென்றதும் ஆவுடை மகனை அதிருப்தியாகப் பார்க்க, கவின் அங்கேயே என்ன நடந்ததென்று சொல்லியிருந்தான். இருப்பினும் மாமன்னனுக்கு மகனின் கோபத்துக்கான அவன் பக்க காரணம் தெரிய வேண்டுமே. கேட்டுவிட்டு அவனின் முகம் பார்த்து நின்றார்.

“ஒண்ணுமில்லைப்பா. சாதாரணப் பேச்சு நான் தான் பெர்சனலா எடுத்துக்கிட்டேன்.” தேவித் தன் தந்தையிடம் தயங்கியவனாக நெற்றியை தேய்த்துக் கொண்டான்.

அப்போது உள்ளே வந்த கவின்,

“சாரிடா… நான் சொன்னது எதுவோ உன்னை ஹர்ட் பண்ணிடுச்சு புரியுது. ஆனா நான் தெரிஞ்சு எதுவும் சொல்லல மச்சான்” என்றான்.

“ம்ப்ச்… என்னடா” என்ற தேவித், கவினை அணைத்து, “நான் தான் சட்டுன்னு ஓவர் ரியாக்ட் பண்ணிட்டேன்” என்று அவனின் முதுகில் தட்டி விடுத்தான்.

“நிஜமா உனக்கு வருத்தம் எதுவுமில்லையே?”

“இல்லைடா” என்ற தேவித் அப்போது தான் தன்னுடைய குடும்ப உறுப்பினர் அனைவரும் வருத்தமாக தன்னை பார்த்து நிற்பதை கண்டான்.

“அடடா… நான் எதோ” என்ற தேவித், “சாரி” என்று பொதுவாகக் கூறினான்.

“எதுவும் வருத்தமில்லையே மாப்பிள்ளை?” ஆவுடை கலக்கமாகக் கேட்டார்.

“அச்சோ மாமா அதெல்லாம் இல்லை. சட்டுன்னு ஒரு டென்ஷன். ரியாக்ட் பண்ணிட்டேன். அவ்ளோதான். பெருசா எதுவுமில்லை” என்று அனைவரையும் ஆற்றுப்படுத்துவதற்குள் தேவித் தளர்ந்து விட்டான்.

பெரும் லட்சியம். அதனை நிழலென நினைத்து ஏனோ அவனால் ஒதுக்க முடியவில்லை. அனைவரும் சென்றிட இருக்கையில் தொய்ந்து அமர்ந்தான்.

இரவு உணவின் போது குடும்பத்தினருக்கான நேரமாக சிரித்து பேசி நேரத்தை கழித்தவன், உறங்குவதற்காக அறைக்குள் நுழைந்த அடுத்த கணம், தன்னுடைய அலைபேசியை எடுத்து, அதனோடு இணைக்கப்பட்டிருந்த, டெல்லி வீட்டில் தனக்கு மட்டுமே தெரிந்த அறையை சில நொடிகள் கண்காணித்துவிட்டு படுக்கையில் விழுந்தான்.

உறக்கத்திலும் தேவித்தின் மனமும், மூளையும் இயற்பியல் வாய்ப்படுகள், மூலக்கூறு கோட்பாடுகள் என்று அவற்றின் சிந்தனையிலேயே உழன்றது.

அவனுடைய ஆராய்ச்சிக்கு வேண்டுமான அனைத்துவித பட்டங்களிலும் பட்டம் பெற்றிருந்தான். அதனால் புவியியல் கோட்பாடுகளும் அவனுக்கு அத்துப்படி.

எப்போதும், எந்நிலையிலும், எதற்காகவும் தன்னுடைய கனவை, ஆசையை அவனால் ஒதுக்கி வைத்திட முடியாது. ஆதலால் வேண்டுமான அனைத்திலும் கைத்தேர்ந்திருந்தான்.

தீரா வெறி. வெற்றியின் எல்லையில் மட்டுமே அடக்கம் கொள்ளும்.

பல மாதங்களுக்குப் பின்னர் ஆழ்ந்த உறக்கம் தேவித்திடம். கண்களுக்கு மட்டுமே அந்த உறக்கம். மனதிற்கும், மூளைக்கும் இல்லை. அவை இரண்டும் காலச் சக்கரத்தின் வேகத்திற்கு, காலத்தையே எட்டிப்பிடிக்க ஓடிக் கொண்டிருக்கிறது.

ஓட்டத்தின் வேகம் உடலில் மாற்றம் கொண்டதோ? சட்டென்று உடல் வியர்வையில் நனைய… தேவித்தின் கைகள் படுக்கைவிரிப்பை இறுகப்பற்றியது.

கண்கள் சுருக்கம் கொள்ள, இமைகள் திறவாத காட்சிகள் அவனது அகத்தோடு பின்னோக்கி நகர்ந்தன.

அடர்ந்த அடவிக்குள் புரவியின் குளம்பு சத்தம், இருள் நேரப் பட்சிகளை அரண்டு சிதறச் செய்திட, காற்றின் வேகத்திற்கு புரவியை உந்தி ஓட வைத்தான், அதன் மேல் அமர்ந்திருந்தவன்.

வீரன் என்ற சொல்லுக்கேற்ப திண்ணிய சதைக் கோளங்கள், உருண்டு திரண்ட புஜங்களின் வலிமையை புரவியின் கயிற்றை அவன் உதறி இழுத்த வேகத்தில் மேல் கச்சை இன்றிய வெற்றுத் தேகம் காட்டிக்கொடுத்தது.

இடுப்பில் அணிந்திருந்த உறையில் தொங்கிக் கொண்டிருந்த நீண்ட வாள்… குருதி சொட்டியது. தரை நனைத்திடாத ஓரறிவு உயிரியின் பசுமை இதழில். செல்லும் இடமெங்கும் பச்சை வண்ணம் சிவப்பு நிறம் பூண்டு, வீரனின் சீற்றத்தின் உச்சத்திற்கு சான்றாகியது.

அவனது இடையின் ஆடை பட்டியில் மெல்லிய தங்க சங்கிலி தொங்கிட, அதன் அடி முனையில் காலம் காட்டும் கருவி, அக்காலத்தின் நேரத்தையும் நாளையும் நொடியில் காட்டி மறைந்தது. வைரம் போல அடர் ஊதா நிறத்தில் மின்னிய கருவி இதய வடிவில் மாற்றம் கொண்டு மீண்டும் ஒளிர்ந்து அடங்கியது.

வளியின் வேகத்தை மிஞ்சி ஓடிக் கொண்டிருந்த புரவி வீரனைத் தொடர்ந்து, அவனை எட்டிப் பிடிக்க பின் வந்த வீரர்களின் வேகம் மின்னலுக்கு இணையாக இருப்பின், வெண்புரவி வீரனின் வேகம் மின்னல் வேகத்தையும் விஞ்சியது.

“அச்சமாக உள்ளது.” பரபரப்பு நிறைந்த ஆபத்தான சூழலில் சங்கீத ஸ்வரமாய் செவி உரசிய பெண்ணின் குரல் இதயத்தின் மையத்தில் சில்லிப்பைக் கொடுத்தது.

கனவில் குரலுக்கு சொந்தக்காரியைத் தேடி நிஜத்தில் இமைகள் திறக்க திணறினான் தேவித்.

“யாருடைய குரல்… நதி?” நிஜத்தில் இதழ் பிரித்தவன், வீரனின் பின் அமர்ந்திருக்கும் பெண்ணை கண்டுவிட அவசரம் காண்பித்தான்.

வீரனின் முறுக்கேறிய புஜம் இரண்டிலும் மென் கரம் அழுந்த பதிந்திருக்க, அவனின் பின் தேகம் ஒட்டிய மங்கையின் கார்குழல் சிறகாய் விரிந்து நீண்ட மயில் பீலியாய் பறந்தது.

இருளிலும், நிலவு ஒளியில் நட்சத்திரமாய் ஒளிர்ந்த மங்கையின் முகம் காணக்கிடைக்காத போதும், நூலிழையாக மார்புக் கச்சை வழிந்த மெல்லிய ஆடை விலகிய பேதையின் மேனி, பிறந்த குழந்தையின் பாதத்தின் நிறத்தை ஒத்திருக்க, காட்சிகளை தெளிவாக உள்வாங்க முயன்ற தேவித்தின் கண்கள் உறக்கம் தொலைக்க, பட்டென்று எழுந்தமர்ந்தான். மீண்டுவிட முடியா பேரதிர்ச்சி.

தங்களை நெருங்கிவிட்ட வீரர்களின் அரட்டல் ஒலியில், பயத்தில் வீரனின் முதுகோடு ஒண்டியிருந்த முகத்தை திருப்பி பின்னால் பார்த்த வஞ்சியின் பாதி முகம் முன் நெற்றி வழிந்த கார்கேசம் காற்றில் அலைந்திருக்க, மேகம் விலகிய முழுமதியாக குழல் விலகிக் கிடைத்த இடைவெளியில் தெரிந்த நங்கையின் முகம் அவனவள்.

தேவித்தின் நதி.

அதிர்ச்சி இருக்கத்தானே செய்யும்.

உச்சக்கட்ட அதிர்வில் கனவை ஒதுக்கி எழுந்தமர்ந்தவனின் கண்கள் இன்னும் நிழலாய் தான் கண்ட காட்சியை நம்ப மறுத்தது.

தேவித் கடந்த சில வருடங்களாகவே காலம் கடந்து முன்னும் பின்னும் சென்று வருவதற்கான ஆய்வுகள் மேற்கொண்டிருப்பதால், அதன் சம்பந்தப்பட்ட பல விஷயங்கள் நூல்களாகவோ, இணைய வழி செய்திகளாகவோ, பண்டைய ஆராய்ச்சியின் வழி கிடைத்த படிமங்களின் எழுத்துருக்கள் மூலமாகவோ படித்துக் கொண்டிருப்பதால், அது சம்மந்தப்பட்டப் காட்சிகள் இதுபோன்று கனவாக வருவது வாடிக்கையாகி இருந்தது.

மனமும் மூளையும் நொடி விடாது ஒரே விஷயத்தைப்பற்றியே எண்ணம் கொண்டிருக்க… அது குறித்தான காட்சிகள் இல்லுஷனாக தோன்றுவது மனோதத்துவ ஆராய்ச்சியின்படி இயல்பானது. அதனை நன்கறிந்த தேவித் இதுபோன்ற கனவுகளை புறம் தள்ளிடுவான்.

எண்ணம்போல் வாழ்க்கை என்பதைப் போலத்தான்… எண்ணம் போல் தான் யாவும்! மனதின் கற்பனையும். பார்வைக்கு படும் பிம்பங்களும்.

சர்வமும் ஆராய்ச்சி என்றிருப்பவனுக்கு, அது குறித்தானவை வலம் வரத்தான் செய்யும். அதையெல்லாம் தலையில் ஏற்றிக்கொள்ளாது ஒதுக்கி விடுபவனுக்கு இதனை ஏனோ தள்ளி வைக்க முடியவில்லை.

காலச்சக்கரம் சுழன்று… கண்கள் கூசும் வெளிச்சம் முன் தோன்றி பட்டென்று மறைய, தேவித் ஆயிரம் வருடங்கள் முன் சென்று, தான் படித்தது, கேட்டதென கற்பனையில் காட்சிகளாகக் கண்ட இடங்களை எல்லாம் நேரில் பார்ப்பது போன்று பலமுறை மனக்கண் வழியாக பிரம்மையாகத் தோற்றம் கொண்டு கண்டிருக்கிறான்.

அப்போதெல்லாம் தான் கனவாக உருவகப்படுத்தி காணும் காட்சி நிகழ்வாக உருவகம் கொள்ள வேண்டுமென்று பெரும் ஆசை கொண்டிருக்கிறான்.

ஆனால் தற்போது கண்ட காட்சி…

அவனது நதி முகம் தெரியா யாரோ ஒரு ஆடவனை அத்தனை இறுக்கமாக அணைத்து பிடித்தபடி.

கனவே அவனுக்கு அசூயையாக இருந்தது.

தன்னுடைய மனதில் காதலாக ஆழ வேரூன்றி இருப்பவளை மற்றொரு ஆடவன் ஒருவனுடன் கற்பனையிலும் அவனால் காண முடியவில்லை.

அதிலும் செஞ்சாந்தாய் குருதி கொட்டும் வாள். அவர்களை பின் துரத்திய வீரர்கள்.

‘நதி… நதிக்கு எதும் ஆபத்தா? அதைத்தான் தன் மனம் இப்படி உணர்த்துகிறதோ?’ என நினைத்த தேவித், ‘பயமா இருக்கு சொன்னாளே!’ என்று கனவில் கேட்ட ஒலியை கிரகிக்க முயன்றான்.

‘அது அவனது நதியின் குரலே தான்.’ மனம் அரிதிட்டுக் கூறியது.

அதே சமயம், ‘கனவிற்கெல்லாம் உருவம் கொடுப்பது பைத்தியக்காரத்தனம்’ என்று அவனது மனமே அவனைக் கொட்டியது.

கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பின்பு இன்று தான் நைருதியை நேரில் பார்த்திருக்கிறான். காதலை சொல்லியிருக்கிறான். அத்தனை நெருக்கமாக அவளின் வாசம் உணர்ந்திருக்கிறான். அதனால் அவளே கனவில் வந்திருக்கிறாள்.

இப்படி எண்ணி கடந்துவிட, வந்த கனவு சாதாரணமானதாக இல்லையே.

அதிலும் அவ்வீரனின் இடுப்பில் சங்கிலியில் தொங்கிக் கொண்டிருந்த காலத்தைக் காட்டும் இதய வடிவ கருவி… அதில் மின்னி மறைந்த எண்களை நினைவுக்கூர முயன்றான்.

தன்னுடைய ஆராய்ச்சிக்காக பண்டைய எழுத்துருக்களை கற்று தேர்ந்திருக்கிறான். ஆதலால், அக்கருவியில் மின்னியது பழங்கால எண் மற்றும் நேரத்தை குறிக்கும் வடிவமென்று தேவித்தால் எளிதாக அறிய முடிந்தது.

என்ன முயன்றும் நினைவில் வராது ஆட்டம் காட்டியது.

இதழ் குவித்து காற்றினை வெளியேற்றியவனாக, மெத்தையிலிருந்து இறங்கி அறைக்குள்ளே நடை பயின்றான்.

கனவை நொடி நொடியாய் அகத்தில் ஓட்டிப் பார்த்தான்.

ஏனோ அவனால் இதனை எளிதாக விடமுடியவில்லை. அவனுடைய ஆராய்ச்சியின் மூலமாக இருப்பதாலோ என்னவோ?

மீண்டும் நதியின் பயம் கலந்த குரல் செவி நுழைய, அலைபேசியை எடுத்து நைருதிக்கு அழைப்பு விடுத்திட்டான்.

(*அடவி – காடு
புரவி – குதிரை
பீலி – தோகை
கச்சை – மார்பு மறைக்க உடுத்தும் ஆடை.
குளம்பு – குதிரையின் பாதம்
ஆடை பட்டி – துணியாலான பெல்ட் போன்ற அமைப்பு.)

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
32
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்