Loading

 

அத்தியாயம் 5

தேவித் சொல்லியதை நைருதியால் நம்ப முடியவில்லை. அவன் விரலில் மோதிரம் அணிவித்த குளுமையோடு, தேகத்தில் சாரல் தூவும் உணர்வை இதமாய் அகம் நிறைத்த போதும் அவளின் விழிகள் அகண்டு இமைகள் விரிந்திருந்தன.

ஒரு பார்வை, சிறு பேச்சு என்பது எதுவும் தேவித்திடம் அதிகப்படியாக, ஆர்வமாக அவளிடம் இருந்ததில்லை. ஆனால் இன்றோ பிடிக்கும் என்கிறான். அந்த பிடித்தம் காதல் என்கிறான். அவளுக்கு நெஞ்சம் தடதடப்போடு, கண்கள் இருளத் துவங்கியது.

ஆனந்தத்தின் அளவு அதீதமாக நெஞ்சம் பரவ, சூடான இரத்தம் சீறிப்பாய்ந்திட உடல் தள்ளாடும் போலானது.

“மாமா” என்று காற்றாய் விளித்தவள் கண்கள் மூடி துவண்டு சரிய, தன் கை தாங்கி தோள் சாய்த்திருந்தான் தேவித் மகிழோன்.

எல்லாரும் பதறி சூழ்ந்திட…

“நத்திங்… ஒண்ணுமில்லை…” என்றவன், “நதி… நதி” என அவளின் கன்னம் தட்டினான்.

“ங்ம்…” என்று புருவச் சுளிப்போடு இமை திறந்தவள், “நிஜமாவா?” எனக் கேட்டாள். தன்னை நோக்கி தாழ்ந்திருந்த தேவித்தின் கூர் விழிகளை தன்னுடைய படபடக்கும் விழிகளில் தவிப்புகளைத் தேக்கி.

“பிராமிஸ் பண்ணனுமா?”

பெற்றவர்கள் இருவரையும் சூழ்ந்திருக்க, கீழே இருந்த உறவினர்கள் யாவரும் என்னவோ என்று எழுந்து நின்று பார்த்திருக்க, இருவரின் பேச்சின் தடம் புரிந்த கவின்,

‘லவ் பன்ற நேரமாடா இது?’ என மனதில் சிரித்தவனாக,

“அதான் ரிங் போட்டாச்சே! எல்லாரையும் சாப்பிட கூட்டிட்டுப் போங்க” என்று மாமன்னன் மற்றும் ஆவுடையிடம் கூறினான்.

அவர்களும் புரிந்ததுபோல உறவினர்களை அழைத்தபடி உணவுக்கூடம் நோக்கி நகர்ந்தனர்.

“காலையிலிருந்து எதுவும் சாப்பிடலையா ருதி?” வான்மதி கேட்க,

“அடியேய்… நீ வாடி” என்று கவின் மனைவியை இழுத்துக் கொண்டு கீழிறங்கினான்.

ஐயர் இருவரையும் பார்த்தபடியே அமர்ந்திருக்க…

“ஐயரே… தட்சணை வாங்கியாச்சான்னோ! வாங்க சாப்பிட்டு வருவோம்” என்று அவரையும் கூட்டிச் சென்றுவிட்டான் கவின்.

செல்லும் முன்பு புகைப்படக்காரரிடம் கண்காட்டியிருந்தான்.

“எப்போலேர்ந்து?” நைருதி சுத்தமாக தாங்கள் இருக்கும் சூழலை மறந்திருந்தாள்.

“இப்போவே, இப்படியே சொல்லணுமா?” தேவித் கேட்ட பின்பு தான் அவன் கரம் தன்னுடைய வெற்றிடையில் பதிந்திருப்பதையே உணர்ந்தாள்.

அவள் விழிகள் மேல் விரிய, அவனின் கையில் அழுத்தம் கூடியதோடு, இதழில் மையலான குளிர் புன்னகை. அதற்கே உள்ளம் பித்தம் கொண்ட உணர்வு அவளுக்கு.

“சார் கொஞ்சம் லெப்ட் மூவ்” என்ற புகைப்படக்காரரின் குரலில்,

“அச்சோ” என்று அவள் வேகமாக விலக முயல, தேவித் மிக மெதுவாக நிதானமாக, அதே சமயம் அழுத்தமாக அவளின் இடையில் தன் விரல்களை பதித்தே விடுத்திருந்தான்.

சற்று நேரத்திற்கு முன்பு, அவளின் கன்னத்தில் பூசுவதற்காக அவன் விரல்கள் சேர்ந்த சந்தனம், இடையில் அவள் அணிந்திருந்த மெல்லிய சங்கிலிக்கு போட்டியாக தடம் பதிந்திருந்தது.

“நைஸ்…” என்றவனின் பார்வை தொட்டு மீண்ட இடத்தில் பார்த்தவள், வெம்மையிலும் குளுமையிலும் ஒருங்கே சிலிர்த்தாள்.

இருவரும் இடைவெளியின்றி ஒருவரையொருவர் பார்த்தவாறு நின்றிருக்க, கண்கள் கவி பேசின.

அவன் சொல்லிடாத காதல், கண்கள் வழி அவளின் இதயத்தை ஊடுருவியது. வாய் திறந்து சொல்லியிருந்தாலும் இந்த இதம் இருந்திருக்குமா தெரியவில்லை. ஆனால் அவனது மௌனம் மொழி உரையாடும் காதல் அதீத சில்லிப்பை கொடுத்தது.

வார்த்தைகளற்று பாஷையின் ஓசையின்றி நேச விதையை மென் புன்னகையில் அவளின் நெஞ்சத்தில் அவன் விதைத்திட, நொடியில் விருட்சமாய் விரிந்து பூக்களாய் மலர்ந்து காதலின் வாசம் அவளின் அகமெங்கும் பரவியது.

அவளது வண்டு விழிகள் சிறகடித்து அலைமோத, தன்னிரு உள்ளங்கையால் அவளின் கன்னங்கள் பற்றி முகம் ஏந்தினான் தேவித்.

மென் தொடுகையில் அழுத்தமான உரிமை சாயல்.

“மாமா…” நைருதியின் பூவிதழ்கள் பிரிந்து ஒலியின்றி தேவித்தின் செவிகள் நிறைய, அவனின் பார்வை அவளின் கண்களில் நிலைக்குத்தின.

“ஐ லவ் யூ சொன்னா தான் காதல் தெரியுமா நதி? காதல் உணரணும்… உணர வைக்கணும். இப்போ நான்… என்னோட நிலை… எனக்குள்ள நீ… நம்ம மனம்… உனக்கு புரியுது தானே? உனக்குள்ள என் காதல் பதியறது உன் கண்ணுக்குத் தெரியுது தானே?”

சொல்ல வேண்டுமாயெனக் கேட்டு மொத்தமாக சொல்லியிருந்தான். அவன் மனதின் காதலை அவன்வழி உணர்த்தியிருந்தான்.

கேள்வியாய்? பதலற்ற வினாவாய் தேவித்தின் அகம் மொழிந்த காதலுக்கு, நைருதியின் சிரம் அசைந்து பதில் வழங்கியது.

“ஹம்ம்ம்… அவ்ளோதான். இதுதான் லவ். இதுல சொல்ல என்னயிருக்கு? இனி வாழுற வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும், இந்த கண்ணுக்குள்ள அலைபாயுற என் பிம்பம், உன் இதயத்தில் வேர் மாதிரி ஆழமா பதிஞ்சிட்டே இருக்கணும். அதுல தான் உன்னோட காதல் கட்டுண்டு இருக்கு. இதோ இப்போ என் கைக்குள்ள அடங்கியிருக்க உன் முகம் என் நெஞ்சில நிழல் மாதிரி தேங்கி நிக்கிறதுல என்னோட காதல் அடங்கியிருக்கு. சொல்லணும் அவசியமில்லை. புரிதல் நிறைந்த நம்பிக்கையில் வாழ்வோட பாதை எவ்வளவு தூரம் நீளுதோ… அந்த நீளுதலின் எல்லை கடந்த புள்ளிகளின் நீட்சியில் தினம் தினம் நம் காதல் காதலாய் யுத்தம் செய்யும்.”

“எனக்குள் நீளும் யுத்த நேசம் நீ! இந்த யுத்ததில் ஆளுதல் நம் காதல் அப்படின்னா வாழ்வு வரம் தான்.”

காதலை சொல்ல வார்த்தைகள் தேவையில்லை என்றவன், உணர்வுகள் கோர்த்த புது அர்த்தங்களாய் தன் காதலை வெளிப்படுத்தியிருந்தான்.

தேவித்தின் மொழிதலில் கட்டுண்டிருந்த நைருதி, அவனது காதல் சுரக்கும் கண்களின் வீச்சில் மொத்தமாய் அவனுள் உறைந்து நின்றாள்.

“செம கேண்டிட் சார்!”

புகைப்படக்காரரின் குரலில் தான் மீண்டும் நிகழுக்கு வந்தாள் நைருதி.

தன் மனம் தேடும் காதல் அவனுள்ளும் ஆழம் கொண்டுள்ளது என்பதே அவளுள் பேருவகை அளித்திட, நொடியில் தன்னை மீட்டுக்கொண்டாள்.

சிறுபொழுதில் காதலை பகிர்தலால் கொண்டாடிவிட்டானே. அவளுக்கு வேறென்ன வேண்டுமாம்.

“ஹக் பண்ணிக்கவா மாமா?” என தன்னைப்போல் கேட்டிருந்தாள்.

உண்மையில் அக்கணம் அவனது கைகளுக்குள் மட்டுமல்ல, அவனது நெஞ்சத்துக்குள் அடங்கிட ஆவலாதி கொண்டாள். காதலில் மனம் கொள்ளும் எண்ணங்களுக்கு நிஜத்தில் வண்ணம் சேர்த்திட வேண்டும். அப்போது தான் தினம் தினம் புது புது மலராய் காதல் மலர்ந்து கொண்டேயிருக்கும்.

மொழிகள் கடந்த காதலுக்கும் காதல் மொழி அவசியம். ஒவ்வொருவருக்கு ஒவ்வொருவித காதல்மொழி.

தேவித்திற்கு உணர்தல் காதல்மொழி என்றால், அவளுக்கோ பகிர்தல் காதல்மொழி. மனதின் ஆசையை வெளிப்படையாய் பகிர்ந்தும் கொண்டாள்.

“கேட்கணுமா?” தேவித் கேட்டிட…

அவனின் இடையோடு கையிட்டு பின் கோர்த்தவளாக, அவனது மார்பு சாய்ந்தாள்.

அவளின் கன்னங்கள் தீண்டியிருந்த அவனது கைகள், அவளை தனக்குள் அரணாய் பிடித்து வைத்தது.

“இன்னும் முடியலையா?” என்று வந்த கவின், அவர்கள் நிற்கும் நிலை கண்டு, “அடேய் என்னடா பன்ற?” என்றான். சத்தமிட்டு.

“லவ் மேரேஜ்ஜா சார்?” புகைப்படக்காரர் கவினிடம் கேட்க, “உன்னை ஃபோட்டோ எடுக்க சொன்னா எல்லாத்தையும் எடுப்பியா மேன் நீ?” என்ற கவின், “முதலில் சாப்பிட்டு கிளம்புங்க நீங்க” என்று அவரை விரட்டினான்.

உணவு உண்டு முடித்த உறவுகள் ஹால் நோக்கிவர, மேடையை கடந்து தான் அவர்கள் வெளிவாயிலுக்கு செல்ல முடியுமென்று வேகமாக மேடையேறினான் கவின்.

“அடேய் சயின்டிஸ்ட்டு” என்றவன், “தள்ளுடா” என்று தேவித்தின் தோளில் கை வைத்து இழுத்தான்.

“ச்சூ… இப்போ என்னடா?” என்று விலகிய தேவித், “அவ என் பொண்டாட்டி தானே?” என்றான்.

“எதே பொண்டாட்டியா?” என்று அதிர்ந்த கவின், “அதுக்கு இன்னும் ரெண்டு நாளிருக்கு. உண்மையிலேயே நீ கல்யாணத்தை மறந்தவனான்னு இருக்கு எனக்கு” என்றான்.

“கல்யாணத்தை தான் மறந்தேன். லவ்வை இல்லை. அது எதோ வொர்க் பிசியில்” என்றான்.

“அப்படியென்ன வேலையோ” என்ற கவின், “ரெண்டு பேரும் சாப்பிட வாங்க. அத்தை கூட்டிட்டு வர சொன்னாங்க” என்று முன் நடந்தவன், “இல்லையில்லை” என்று நைருதியின் அருகில் வந்து, “நீ முன்ன போ” என அவளை அனுப்பி வைத்து, “நீ எனக்கு பின்ன வா” என தேவித்துக்கு முன் சென்றான்.

“நாளை மறுநாள் இதே நேரம் என்ன செய்வ மச்சான்?” கவினின் இடை கிள்ளியவனாக தேவித் கேட்க, நெளிந்து துள்ளிய கவின், “அது அப்போ பார்க்கலாம். அதுவரை அவ என் தங்கச்சி… நான் உன்கிட்டேர்ந்து சேவ் பன்றேன்” என்றான்.

“என்னது? சேவ் பன்றியா?” என்ற தேவித், “அநியாயம்ரா இது” என்று சிரித்தான்.

“எனக்கு எல்லாம் நியாயம் தான். கல்யாணத்தையே மறந்தவனுக்கு இதுதான் தண்டனை” என்றான் கவின்.

“இதையே சொல்லிக்காட்டுற நீ! உன்னை பார்த்துக்கிறேன் இரு” என்று தேவித் சொல்ல, கவின் அவன் பக்கம் நின்று திரும்பி, “என்னடா பண்ணுவ?” எனக் கேட்டான்.

உடனே தேவித்துக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஆனால் கவின் எகிறியதில் எதும் சொல்ல வேண்டுமே, இல்லையென்றால் அவனிடம் மொக்கை வாங்கியதாகிவிடும் என நினைத்த தேவித்,

“உன்னை ராஜா காலத்துக்கு கூட்டிட்டுப்போய், அங்க நடக்கும் போரில் சண்டை போட விட்டுடுவேன். அப்புறம் நீ எந்த அம்பு குத்தி என்னை காப்பத்துடா மச்சான்னு கத்துறியோ?” என்றான்.

உண்மைக்கும் அதுதான் நடக்கவிருக்கிறது என்பதை அந்நொடி அதனை சொல்லிய தேவித் அறிந்திருக்கவில்லை.

தேவ்வித்தின் ஆழ்மன ஆசை. ஏக்கம், கனவு, இமைக்கும் பொழுதுகள் கூட அதுவாகவே இருந்திட, விளையாட்டுப் பேச்சுக்கள் கூட அவனது சிந்தைவழி அதுவாகவேதான் இருந்தது. அதனை அவனும் உணரவில்லை.

“நீ செஞ்சாலும் செய்வ. உன்னை நம்ப முடியாது” என்ற கவின், “டைம் டிராவல் பற்றிதானே நீ லாஸ்ட்டா தீஸிஸ் பண்ணியிருந்த… உன் சீஃப் என்ன சொன்னார்?” எனக் கேட்டான்.

“நடைமுறைக்கு சாத்தியமில்லைன்னு சொன்னார்” என்ற தேவித், ‘தியரியா இருக்கிறதை நான் பிராக்டிகல் ஆக்குறேன்’ என மனதோடு சொல்லிக்கொண்டான்.

“அவர் சொல்றதும் நிஜம் தானடா” என்ற கவின், உறவுகள் எல்லாம் ஒவ்வொருவராக சொல்லிக்கொண்டு கிளம்பிட, அங்கு வான்மதி அருகில் அமர்ந்திருந்த தங்கையின் அருகில் தேவித்தை அமர வைத்தவனாக இருவருக்கும் தானே இலை வைத்து உணவு பரிமாறினான்.

தேவித்தின் முகம் யோசனையை காட்டியது. முடியாது என சொல்லும் நிஜம் அவனை உறுத்தியது.

“என்னடா… சாப்பிடு” என்றான் கவின்.

“முயற்சி பண்ணாதானே தெரியும் கவின்” என்றான் தேவித்.

“முயற்சி செய்து பார்க்கக்கூடிய விஷயமாடா இது? அப்படியே இது சாத்தியம்ன்னா, பின் விளைவுகள் அதிகமில்லையா? அதை சமாளிக்க முடியுமா? காலத்தை மாத்துறது அப்படிங்கிறது முயற்சி தாண்டிய முட்டாள்தனம் தேவா” என்று கவின் சொல்ல, தேவித் பட்டென்று இருக்கையை விட்டு எழுந்து விடுவிடுவென அங்கிருந்து வெளியேறியிருந்தான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
36
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்