அத்தியாயம் 3
விமானம் தரையிறங்க இருக்கும் சில நிமிடங்களுக்கு முன்னரே திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் வாகனங்கள் தருப்பிக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்திருந்தாள் நைருதி.
உள்ளே செல்லாது மகிழுந்தின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்தாள். குனிந்து தன்னை ஒருமுறை பார்த்துக் கொண்டாள். இப்படியே உள்ளே சென்றால், அனைவரும் பார்வையும் அவள் மீதுதான் படியும். பேசும் பொருளாகிடுவாள். அடுத்த நிமிடமே செய்திகளில் வலம் வரத் தொடங்கிடுவாள். சொல்வதற்கு ஆச்சரியமில்லை.
விமான நிலைய விதி முறைகள் முடித்த தேவித், காத்திருப்போர் பகுதியில் நைருதி இல்லையென்றும் அவளுக்கு அழைத்தான்.
“மகிழ்…”
“எங்க இருக்க நதி? நான் வந்துட்டேன்” என்றான். கையில் கட்டியிருந்த கைக்கடிகாரத்தில் நேரத்தை பார்த்துக்கொண்டே.
“பார்க்கிங்ல இருக்கேன் மாமா” என்றாள்.
“ஏன் உள்ள வரல?” எனக் கேட்டவன், பெட்டியை பிடித்து இழுத்துக்கொண்டு வெளியில் வந்தான்.
ஒரு கையில் பெட்டியை பிடித்தபடி, மற்றொரு கையை அலைபேசியோடு காதில் வைத்துக்கொண்டு நீண்ட எட்டுக்களுடன் வந்து நின்ற தேவித்தை ரசனையாக உள்வாங்கிகினாள் நைருதி.
பால் நிறத்தில் ரவுண்ட் நெக் வெஸ்ட் அணிந்து, சாம்பல் வர்ண ஹால்ஃப் கோர்ட் மற்றும் அதே நிறத்தில் பேண்ட் உடுத்தி பார்வையை அலசியவனின் முன்னுச்சி கேசம் அலையாய் அலைந்தாட, அவனில் தன்னை தொலைத்திருந்த நைருதியின் மனம் அசைந்தாடியது.
“ஆர் யூ ஹியர் நதி?”
அவனில் உறைந்தவளின் மனம், அவனது குரலில் மென் அதிர்வோடு கருவிழிகள் பந்தாட,
“உங்க ரைட் சைட்” என்றாள்.
வண்டியை கண்டுகொண்ட தேவித்…
“யாப்…” என்று வண்டியை நோக்கி வர, நைருதியின் இதயம் வேகமாகத் துடித்தது.
கவின், வான்மதியின் திருமணத்தில் ஒரு வருடத்திற்கு முன்பு அவனை கடைசியாக பார்த்தது. மூன்று நாள் விடுப்பில் வந்திருந்தான். உடனிருந்திருந்தாலும், அவளிடம் ஆறேழு வார்த்தைகள் பேசியிருப்பான்.
அதன் பின்னர் அவனது பிறந்தநாளுக்கு இவள் வாழ்த்து சொல்லி தகவல் அளித்திருக்க, ஒரு வாரம் சென்று அதற்கு பதில் அனுப்பியிருந்தான்.
அதற்கடுத்து தற்போதுதான் நேரில் பேசிக்கொள்ளப் போகிறார்கள். ஒரு வருடம் கடந்த நிலையில்.
தேவித் வண்டியின் அருகில் வந்ததும், முன்பக்க கதவை உள்ளிருந்தபடியே எட்டி திறந்தாள்.
அவளுக்கு அருகில் முன்னிருக்கையில் அமர்ந்த தேவித், பின்னிருக்கையில் தன்னுடைய பெட்டியை வைத்துவிட்டு, அவள் பக்கம் பார்வையை பதித்தான்.
“ஹாய்” என்று சொன்னவனின் ஒற்றை புருவம் அவளின் தோற்றத்தில் மெலுயர்ந்தது.
“குட்நெஸ்… நீ உள்ள வரல” என்ற தேவித், “இப்படியே உள்ள வந்திருந்த, திருமணம் பிடிக்காது மணக் கோலத்தில் விமான நிலையம் ஓடிவந்த மணப்பெண் அப்படின்னு ஹேஷ்டேக் வைரல் ஆகியிருக்கும்” எனக்கூறி மெலிதாக புன்னகைத்தான்.
இவர்கள் சென்று சேரும் நேரம் நிச்சயத்திற்கு சரியாக இருக்கும். அதன் பின்னர் அலங்காரம் செய்து மெடையேற நேரமிருக்காதென்று வான்மதி தான், முழுதாக தயாராகி நிலையிலேயே சென்று தேவித்தை அழைத்து வருமாறு சொல்லி அனுப்பி வைத்தாள்.
வந்ததும் நேராக மேடையில் அமர்ந்துவிடலாம். இல்லையென்றால் கடைசி நேர பதட்டம், நேரவிரயம் என்று அனைவருக்கும் சங்கடம் என்று சொல்லியிருக்க, நைருதியும் நிச்சயத்திற்கு உண்டான அலங்காரத்தோடு தேவித்தை அழைக்க வந்திருந்தாள்.
“எப்படியிருக்கீங்க?”
“யா… ஃபைன்” என்ற தேவித்,
“எங்கேஜ்மெண்ட் எங்கே?” எனக் கேட்டான்.
“நம்ம ஹாலில் தான்” என்றாள்.
மாமன்னன் ‘மகிழ் மஹால்’ எனும் பெயரில் திருச்சி நகரை சுற்றி மூன்று திருமண மண்டபங்கள் வைத்திருக்கிறார். அதெல்லாம் தற்போது கவின் தான் பார்த்துக்கொள்கிறான்.
“நேரா அங்கதான் போறோமா?”
“ம்ம்… டைம் இல்லை.”
“ஓகே… ஓகே…” என்ற தேவித் இருக்கையில் பின் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டான்.
நைருதி அவனின் விழிகள் மூடிய முகத்தை ரசித்தபடி அசைவற்று இருக்க…
“எவ்ளோ நேரம் பார்த்திட்டு இருக்கப்போற?” என்று கண்கள் திறக்காது அவன் கேட்டிட, சிறு பதட்டத்தோடு வண்டியை இயக்கினாள்.
“பிரைட் லுக்கில் அழகா இருக்க?”
மெலிதாகக் கேட்ட தேவித்தின் குரலில் நொடிப்பொழுதில் அவனை பக்கவாட்டில் பார்த்துவிட்டு நேராக பார்த்தவளுக்கு, உண்மையில் அவன் தான் கூறினானா என்று சந்தேகமாக இருந்தது.
சில நொடி அமைதிக்குப் பின்னர்,
“காம்ப்லிமெண்ட் பண்ணா தேங்க் பண்ணனும் நதி.”
“ஹான்…” என்று அவனை ஏறிட்ட நைருதி, “மாமா” என்று திணற,
“அழகா இருக்க” என்றான். தற்போது அவள் முகம் பார்த்து.
இதயத்தில் மத்தாப்பூக்கள் வாசம் வீச, அவளின் கைகள் ஸ்டியரிங்கை அழுந்தப் பற்றியது.
“தேங்க்ஸ் மாமா.” தடுமாறி மொழிந்தாள்.
“எதுக்கு இப்போ கண்ணை இப்படி உருட்டுற?” என்ற தேவித்,
“இன்விடேஷன் இருக்கா?” எனக் கேட்டான்.
அவள் அவனுக்கு முன்பிருந்த டேஷ்போர்டை கை கட்டினாள்.
அதில் நாலைந்து இன்விடேஷன் இருக்க, “என்ன இத்தனை இருக்கு?” என்று ஒன்றை எடுத்துப் பார்த்தான்.
“நேத்து தான் என் ஃபிரண்ட்ஸ்க்கு கொடுக்க, ஆபிஸ் கொண்டு போனேன். இது மீதி” என்றாள்.
“ஹோ…” என்ற தேவித் உரை திறந்து அழைப்பிதழை வெளியில் எடுக்க…
“மாமா உங்களுக்கு அனுப்பினாங்களே… நீங்க பார்க்கலையா?” என திக்கி வினவினாள்.
“டைம் கிடைக்கல” என சொல்லியவனை அதிர்ந்து நோக்கினாள். சட்டென்று வண்டியை நிறுத்தியிருந்தாள்.
குறைந்தபட்சம் ஒரு நிமிடம் போதும். அதற்கே அவன் நேரமில்லை என்று சொல்லிட, அவள் என்ன மாதிரி உணர்ந்தாள் என்று அவளுக்குத் தெரியவில்லை.
“பொண்ணு… ம்… ம்ம்க்கும்… பொண்…பொண்ணு நாந்தான்னு தெரியுமா?” என்று தொண்டை அடிக்க ஒருவித வலியோடு அவள் கேட்க, இப்போது அவனின் பார்வை அவள் மீது கூர்மையாய் படிந்தது.
தேவித் எதோ சொல்ல வாய் திறக்க… அவனை முந்திக்கொண்டு நைருதி பேசினாள்.
“எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். ரொம்ப ரொம்ப… அப்படி பிடிக்கும். உங்க மேல லவ்…”
இந்த இடத்தில் தேவித்தின் புருவம் மேலுயர, அவனின் கண்கள் சுவாரஸ்யம் காட்டியது.
“நிறைய முறை உங்ககிட்ட சொல்ல ட்ரை பண்ணியிருக்கேன். தைரியம் வந்ததில்லை. தைரியம் வந்து கால் பண்ணா நீங்க அட்டெண்ட் பண்ணத்தில்லை. என் லவ் சொல்ல முடியாமலே போயிடும் போலன்னு நினைச்சுட்டு இருக்கப்போ தான் அம்மாவே உங்களை கட்டிக்க சம்மதம் கேட்டாங்க. சரின்னு சொல்லிட்டாலும், இப்போ இந்த நிமிஷம் எனக்கு உங்க விருப்பமும் அவசியம் தோணுது. நீங்க,” என்று நிறுத்தி அவனை தவிப்போடு பார்த்தவள், “மாமா சொன்னாங்கன்னு ஓகே சொன்னீங்களா?” எனக் கேட்டாள்.
மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்ட தேவித், அவள் பக்கம் நன்கு திரும்பி அமர்ந்து, இரு விரல்களால் மீசையோடு சேர்த்து தாடையையும் நீவிவிட்டான்.
நைருதியின் கருவிழிகள் அலை மோதிட, மோதும் அசைவுக்கு ஏற்ப தன் விழிகளை நகர்த்தினான் தேவித்.
“எப்போலேர்ந்து?”
“எது?” என அவள் மென் ஓசையில் கேட்க, “லவ்?” என்றான் தேவித்.
“சின்ன வயசுலேர்ந்தே உங்களை பிடிக்கும். அண்ணா எப்பவும் என்னோட சண்டை போடும்போது நீங்க எனக்கு சப்போர்ட் பண்ணுவீங்க” என்று அவன் முகம் பாராது இமை தாழ்த்தியவள், “நீங்க பிஜி பண்ணும்போது, ஒரு பொண்ணு லவ் சொன்னாங்கன்னு மாமகிட்ட வந்து சொன்னீங்களே” என்று அவன் முகம் பார்த்து தாழ்ந்தாள்.
அந்த நினைவு அவனுக்கே இல்லை. நினைவில்லை எனும் விதமாக தோள்களை சாதரணமாக உயர்த்தி இறக்கினான்.
“அப்போ என் மாமாக்கு யாரது புரோப்போஸ் பண்ணதுன்னு யாருன்னே தெரியாத அந்தப் பொண்ணு மேல கோபம். அந்த கோவம் காட்டிகொடுத்துச்சு உங்க மேல எனக்கு விருப்பம்ன்னு” என்றாள்.
“ஹோ…” என்று தேவித் இழுக்க…
“நான் பிஜி அப்படின்னா… நீ ஸ்கூலிங். அப்போ… கிட்டா(kid) இருக்கும் போதே என்னை லவ் பண்ணியிருக்க… திஸ் இஸ் நாட் குட் நதி” என்றான் அழுத்தமாக.
தேவித் சொல்லிய பாவனையில் இவனிடம் உண்மையை உளறிவிட்டோமே என்று அரண்டு பார்த்தாள் நைருதி.
எதுவென்றென்றாலும் முகத்திற்கு நேரே சொல்லிவிடுவான். அந்த பயம் அவளுக்கு.
“இப்போ… இப்போ என்ன? பிடிக்கல சொல்லப் போறீங்களா?” அவள் கேட்டு முடிக்கும் முன்பு ஒற்றை கண்ணிலிருந்து நீர் இறங்கியிருந்தது. வேகமாக துடைத்துக் கொண்டாள்.
தேவித் அவளின் காதலின் கனத்தை கண்ணீரின் சூட்டில் உணர்ந்தான்.
அந்நேரம் இருவரின் அலைபேசியும் ஒன்றாக இசைத்தது.
“அண்ணா” என்று அவளும்,
“அப்பா” என்று அவனும் செவி மடுக்க…
இருவருமே ஒன்றுபோல…
“வந்துட்டு இருக்கோம்” என்று சொல்லி வைத்தனர்.
“கிளம்பலாமா?”
நைருதி தன்னையே பார்த்திருக்க தேவித் கேட்டிருந்தான்.
“உங்களுக்கு சம்மதம் தானே?” என்ற நைருதி, அவன் பார்த்த பார்வையில்…
“நான்… உங்களுக்கு நான் ஓகேவா?” எனக் கேட்டிருந்தாள்.
“இனி ஒன்னும் பண்ண முடியாது உனக்கே தெரியும். அப்புறம் எதுக்கு இந்த கேள்வி?” என்ற தேவித்தின் பதில் கேள்வியில், மெல்லிய வலி நெஞ்சத்தில் எழ, அமைதியாக வண்டியை இயக்கினாள்.
தேவித் அவளையே தான் பார்த்திருந்தான்.
‘எதுக்கு இப்படி பார்க்கணும். அதான் பிடிக்காதுன்னு மறைமுகமா சொல்லியாச்சே!’ மனதில் முணுக்கென்ற வலி. அவன் இப்படி நேரடியாக பார்த்து வைப்பதில் அவஸ்தையும்.
“அரேஞ் மேரேஜில் எல்லாம்… ஆஃப்டர் மேரேஜ் தானே லவ் வரும். எனக்கும் அப்படி வருமோ என்னமோ?” என்றான்.
சொல்லிய தேவித்தை திரும்பி பார்த்த நைருதியின் கவனச் சிதறலால் வண்டி தடுமாறி சீரானது.
“ஹேய் பார்த்து” என்று ஸ்டியரிங்கில் அவளது கை மீது தன் கை வைத்து வண்டியை நேராக்கிய தேவித், மெதுவாக தன் கைகள் அகற்றினான்.
“பார்த்தும்மா… வயசு முப்பதுக்கு மேலாகியும்… அக்மார்க் சிங்கிள். இப்போதான் மிங்கில் ஆகப்போறேன். கதையை ஆரம்பிக்கும் முன்ன முடிச்சு வச்சிடாதம்மா” என்றான். சிரிப்போடு.
“உங்களுக்கு என்னை பிடிக்குமா?”
“பிடிக்கும்… அந்த பிடித்தம்” என்று தொடங்கியவனை கை காட்டி தடுத்தவள்,
“இந்த பிடிக்கும் மட்டும் போதும் எனக்கு. உங்களுக்கும் என்னை பிடிக்கும் அப்படிங்கிற எண்ணத்தோட நான் ஹேப்பியா இருந்துக்கிறேன்” என்றாள்.
“யூர் விஷ்” என்று தான் சொல்ல வந்ததை சொல்லாதுவிட்டான் தேவித்.
நைருதிக்கு அக்கணம், தேவித் பிடிக்கும் என்று சொன்னதே போதுமானதாக இருந்தது. அந்த பிடித்தம் எந்த வகையிலும் இருக்கட்டும் அவனளவில். ஆனால் அவளுக்கு அவன் சொல்லிய பிடிக்கும் என்பதே அவளை மகிழ்வுக்குள்ளாகியது. மனதிலிருந்து சிறு நெருடலை விலக்கி வைத்தது. அவன் சொல்லியது போல, திருமணத்திற்கு முன்பு அவன் சொல்லிய பிடித்தம் போதும்… திருமணத்திற்கு பின்பு நான் சொல்லும் காதல் தானாக வந்துவிடும் என்று மனதை அமைதியாக்கிக்கொண்டு அவனுடனான தன் திருமணத்திற்கு, தங்களின் வாழ்வுக்கு தன் காதல் ஒன்றே போதுமென்று நினைத்தாள்.
தேவித் அவளின் மனவோட்டத்தை அறிந்தவனாக, உள்ளுக்குள் முறுவலித்தான்.
ஐந்து நிமிடங்களில் மண்டபத்தை அடைந்திருந்தனர்.
அவர்களுக்காக கவின் மண்டப வாயிலிலே காத்திருந்தான்.
அத்தியாயம் 4
வண்டியிலிருந்து இறங்கியதும், மண்டப வாயிலிலே நின்றிருந்த கவினை பார்த்து தேவித்,
“ஹாய் மச்சான்” என்று கையசைத்தான்.
நண்பனை கண்டுகொள்ளாத கவின், அங்கு நின்றிருந்த பணியாள் ஒருவரை அழைத்து,
“காரை பார்க் பண்ணிடுங்க” என்று தங்கையின் அருகில் சென்றான்.
“எல்லாம் ஓகேவாடா?”
“ஓகேண்ணா” என்ற நைருதியிடம், “டச்சப் பண்ணிட்டு ரெடியா இருடா. பத்து நிமிஷத்துல கூப்பிட்டுடுவாங்க” என்ற கவின், தேவித்தை பார்த்து உதடு சுளித்து முறைத்து வைத்தான்.
“என்னடா இப்போ உனக்கு?” என்று தேவித் அருகில் வர, தங்கையை உள்ளே அனுப்பினான் கவின்.
“இன்னும் ரெண்டு நாளுக்கு அப்புறம், இப்படி உள்ள அனுப்பிடுவியா பார்க்கிறேன்” என்றான் தேவித்.
“அதேதான் சயின்டிஸ்ட்… இன்னும் ரெண்டு நாளைக்கு அவள் என் தங்கச்சி தான். ரெண்டு நாளுக்கு அப்புறம் தான் உங்க உரிமை கொண்டாடல் எல்லாம்” என்றான் கவின். மிதப்பாக.
“ரொம்பத்தான்” என்ற தேவித், “இப்போ என்னடா உனக்கு?” எனக் கேட்டு, கவினின் தோளில் கை போட்டிட… நைருதி உள்ளே சென்றதில் தேவித்தின் வருகை அறிந்து, அவனது இரத்த உறவுகள் அவனை வரவேற்க வெளியில் வந்தனர்.
“தங்கம்” என்று உற்சாகமாக அழைத்தபடி மாமன்னன் முன்வர,
“வந்தாச்சுடா… உன் பாச அருவி, ஆறு, வாய்க்கால்… கொஞ்சி முடிச்சிட்டு உள்ள வந்து சேரு” என்று கவின் உள்ளே சென்றுவிட்டான்.
வாயிலிலே அருணா நின்றுவிட…
உள்ளே செல்ல, அவரை கடந்திடும் முன்பு, “நீங்க அன்பு மழை பொழியலையா?” எனக் கேட்டான் கவின்.
“இப்போ போனா அவன் கண்ணுக்கு நான் தெரியவே மாட்டேன். அவருக்கு இடைஞ்சலா தெரிவேன்” என்று அருணா சொல்ல, “நல்ல புரிதல்” என்றான் கவின்.
மாமன்னன் மகனின் கன்னத்தில் கை வைத்து, “நல்லாயிருக்கிங்களா கண்ணு?” எனக் கேட்க, தேவித் அவரை ஆரத் தழுவினான்.
“ரொம்ப நல்லாயிருக்கேன்ப்பா” என்று பிரிந்த தேவித், “சாப்பாடு முன்ன மாதிரி சாப்பிடறது இல்லையோ. உடம்பு இறங்கின மாதிரி தெரியுது” என்று தந்தையை ஆராய்ந்தான்.
“அதெல்லாம் இல்லப்பு. உன் அம்மாவுக்கு வயசாவுதுல. முன்ன மாதிரி ருசியா சமைக்க மாட்டேங்கிறா” என்று மாமன்னன் மனைவியின் மீது பழிபோட்டார்.
“அண்ணா உங்களை வச்சு செஞ்சிட்டார் அண்ணி” என்று ரமா அருணாவிடம் சிரித்துட,
“அவர் முகத்துல மகனை கண்டுட்ட சந்தோசத்தை பார்த்தியா ரமா?” என்றார் அருணா.
“புருஷனை சைட் அடிக்கிறிங்களாக்கும்?”
“என் புருஷன்டி…”
“இருக்கட்டும்… இருக்கட்டும்…” என்று ரமா சிரிக்க,
“என்னத்த சிரிச்சிட்டு நின்னுட்டு இருக்கீங்க. மாப்பிள்ளையை உள்ள கூட்டிட்டுப் போங்க. அப்புறம் பேசிக்கலாம். நேரம் போவுது” என்று பெண்கள் இருவரையும் அதட்டினார் ஆவுடையப்பன்.
நைருதியின் தந்தை ஆவுடையப்பன். அன்னை ரமா. ரமா, மாமன்னனின் உடன்பிறந்த தங்கை. ஆவுடையப்பன் மன்னனின் நெருங்கிய நண்பன். சிறுவயது முதல். இரு குடும்பத்திற்கான பண்ணையை பொதுவாகத்தான் இன்றளவிலும் செய்து வருகின்றனர். உறவு என்பதைவிட இருவருக்குமான நட்பு தான் அவர்களை வேற்றுமை படுத்தாது ஒன்றாக வைத்திருக்கிறது.
“அருணா வா” என்று மன்னன் மனைவியை அழைக்க, ரமா தேவித்திற்கு ஆலம் சுற்றி உள்ளே அழைக்க… அவனோ அன்னையை கழுத்தோடு கட்டிக்கொண்டு செல்லம் கொஞ்சினான்.
“என்ன அருணா அப்பாவுக்கு சாப்பாடு சரியா போடுறதில்லையாம்?”
கேட்டவனின் கன்னம் கிள்ளிய அருணா, தன் உதட்டில் ஒற்றி எடுத்தவராக, “அப்புறம் பேசிக்கலாம். நேரமாச்சு. மொத துணி மாத்திக்கிட்டு வந்து சபையில் உட்காரு” என்று மகனை விரட்டினார்.
ஆவுடையப்பன் கூட அவனை வரவேற்கும் விதமாக தோளில் தட்டிச் செல்ல… யாரும் அவன் திருமணத்தையே மறந்தது பற்றி ஒரு வார்த்தையும் கேட்காதது அவனுக்கு நிம்மதியாக இருந்தது.
சமாளிக்க என்று மட்டுமல்ல, நிஜத்தில் அவனுக்கு பொய் சொல்ல முடியது. அவனின் நேர்மையே எதுவொன்றையும் பட்டென்று முகத்திற்கு நேரே சொல்ல வைத்திடும்.
வேலையை காரணம் காட்டிக்கூட தான் மறந்ததை நியாயப்படுத்தி சொல்லிட அவனுக்கு மனம் இடமளிக்கவில்லை. அதனாலே இந்த நிம்மதி அவனிடம்.
ஆவுடை, தான் அழைத்துச்சென்று மணமகன் அறையை காண்பித்தார்.
“கவின் உள்ள தான் இருக்கான் மாப்பிள்ளை. அஞ்சு நிமிஷத்துல ஐயர் கூப்பிடுவார்” என்று சொல்லிச் சென்றார்.
தேவித் அறைக்குள் வந்ததும், அவனின் முகம் காணாது, “ஹாட் வாட்டர் ரெடியா இருக்கு. சீக்கிரம் குளிச்சிட்டு வந்து இந்த ட்ரெஸ் போட்டுக்கோ” என்று கட்டிலில் தேவித் அணிய வேண்டிய ஆடையை எடுத்து வைத்தான் கவின்.
“என்ன மச்சான் செம கோவத்துல இருக்கப்போல” என்ற தேவித், கவினின் தோள் தொட்டு தன் பக்கம் திருப்பி முகம் காணச் செய்தான்.
“ம்ப்ச்… விடுடா” என்ற கவின், “நானும் உன் பேபி ஷவர் அப்போ வரமாட்டேன்” என்றான். சிறுபிள்ளையாய் முகத்தை சுருக்கி வைத்தபடி.
சத்தமாக சிரித்த தேவித், “இன்னும் எங்கேஜ்மெண்டே ஆகலடா… அதுக்குள்ள எங்கவரை யோசிச்சிருக்க நீ?” என்றான்.
“நிஜமா உன்மேல பயங்கர கோவத்துல இருந்தேன். ஆனால் உன் முகத்தை பார்த்ததும் கோவப்படக்கூட முடியல” என்ற கவின், “உனக்கெப்படித் தெரியல. ஆனால் ருதி உன்னை விரும்பிதான் மேரேஜ் பண்ணிக்கிறா. மேரேஜ் அப்புறமும் இப்படியே இருக்காத. உன்னோட வேலை, இடம் ரொம்ப உயரம். அவ்ளோ ஈஸி இல்லை நீ அந்த இடத்தில் இருக்கிறது. ஆனால் இனி நீ மட்டுமில்லை. நீ அப்படின்னா இதுக்கு அப்புறம் அதில் ருதியும் அடக்கம். உன் வேலை அவளுக்கு கஷ்டமாகிடக்கூடாது” என்றான்.
“அண்ணனா பேசுறீங்க?” என்ற தேவித், “தங்கச்சி லவ் மட்டும் தெரிஞ்சு வச்சிருக்க. உன் மச்சான் லவ் உனக்கு தெரியுமா?” என்று புருவம் உயர்த்தினான்.
“எதே உன் லவ்வா?” கவின் ஆச்சரியமாக விழிகள் விரித்தான்.
புத்தகம் தவிர வேறெதனுடனும் தேவித்தை பார்த்திட முடியாது. அதுவும் கல்லூரி காலங்களில்… இங்கு தான் வேலை செய்ய வேண்டுமென்ற கனவோடு இருந்ததால், எப்போதும் படிப்பு மட்டுமே அவனது மண்டைக்குள் ஓடும். அதனாலேயே அவனுக்கு படிக்கும் காலங்களில் கவின் தவிர்த்து வேறு நண்பர்கள் யாருமில்லை.
“டேய் சரியா சொல்லு?” கவின் கேட்க,
“என்ன சொல்லணும். அவகிட்டவே இன்னும் சொல்லல. உன்கிட்ட என்ன சொல்ல சொல்ற?” என்ற தேவித் குளியலறைக்குள் புகுந்திருந்தான்.
தேவித் வெளியில் வரும் வரையிலும் கூட, கவின் தன்னிலை மாறாது அப்படியே நின்றிருந்தான். நேரமில்லை என்பதால், சபையில் சீர் வைத்து தரும் மாற்று உடையை கூட, ஆவுடையப்பன் அறைக்கே கொண்டு வந்து வைத்துவிட்டுச் சென்றார். அப்போதும் கவின் அப்படியே நின்றிருந்தான்.
“போலாமா?” நொடியில் தயாராகி தேவித் கவினின் கரம் பற்றினான்.
“ஹான்…” என்ற கவின், “நீ சொன்னது நிஜமா?” எனக் கேட்டான். தேவித்தின் இருபக்க தோள்களிலும் கை வைத்து அரணாய் உலுக்கி.
தேவித் பார்த்த பார்வையில்,
“நீ பொய் சொல்லமாட்டத் தெரியும்… இருந்தாலும் ஒருமுறை எனக்காக சொல்லேன்” என்றான்.
“போடா… எனக்கு வெட்கம் கம்மிங்” என்று கண்ணடித்த தேவித், “எனக்காக என் நதி வெயிட்டிங். கைப்பிடிச்சு கூட்டிட்டுப்போ” என்றான்.
நண்பனை இறுக அணைத்து விடுத்த கவின், “சந்தோஷம்டா” என்க, தேவித் இதழில் தோன்றிய புன்னகையை கதுப்பில் ஒளித்தவனாக, இமை சிமிட்டினான். கண்களும் நாணத்தில் மின்னி ஒளிர்ந்தது.
“டேய்… டேய்… என்னடா இப்படி சிவக்குற. விரைப்பா சுத்துற சயின்டிஸ்ட் நீதானா? நான் பாக்குறது கனவில்லையே” என்ற கவினின் மனக்கிலேசங்கள் யாவும் நொடியில் மாயமாகியது.
தேவித் சிறுவயது முதலே படிப்பு என்ற ஒன்றைத் தவிர எதன் மீதும் பற்று வைத்ததில்லை. அவனுடனான தங்கையின் திருமண வாழ்வு குறித்து அத்தனை பயமிருந்தது கவினுக்கு. உடன் தேவித்தின் மனம் விரும்பும் அமைதியான வாழ்வும் வருத்தங்களில் சிக்கிக்கொள்ளக் கூடாதெனும் எண்ணம். இவை யாவும் தேவித்திற்கும் நைருதியின் மீது விருப்பமென்று தெரிந்ததில் பெரும் ஆசுவாசம்.
“உன்னை தெளிய வச்ச மாதிரி அவளை தெளிவாக்க வேண்டாமா? கூட்டிட்டுப் போடா” என்ற தேவித் தான் கவினின் கையை பிடித்து இழுத்துச் சென்றான்.
“நில்லுடா. என்னா வேகம். முறையை மாத்தாதடா” என்று சிரிப்போடு கூறிய கவின் தேவித்துக்கு முன்சென்று, “இப்போ வா… மெதுவா” என்று கரம் பற்றி மேடைக்கு அழைத்துச் சென்றான்.
தேவித் மேடையில் வந்தமர்ந்ததும், அடுத்தடுத்து நடக்க வேண்டிய சம்பிரதாயங்கள் நடைபெற, வான்மதி நைருதியை அழைத்து வந்தாள்.
தேவித் அருகில் வந்தமர்ந்த பின்னரும் நைருதியின் பார்வை பக்கவாட்டில் ஓரவிழியாக தேவித்தை உள்வாங்கிக் கொண்டிருந்தது.
“நேரா பாருடி.” சட்டென்று தேவித் கூறிட, அவனில் லயித்திருந்தவளுக்கு மென் குரலாக கேட்டிருந்தாலும் அதட்டலாகத்தான் தெரிந்தது.
“பார்த்தா கரைஞ்சிடுவீங்களா?” அவளால் இதுநாள் வரை பொத்தி வைத்த காதலை அவனுக்கே உரியவளாக மாறும் தருணத்தில் அடக்கி வைக்க முடியவில்லை.
அவனிடம் தன்னுடைய மனதை தெரிவித்தாயிற்று. இனியும் மறைக்க வேண்டிய அவசியமில்லை. அதனால் வெளிப்படையாக மனதை அவனுக்கு உணர்த்தினாள். அப்படியாவது அவனுக்கும் தன்மீது காதல் துளிர்த்திடாதா எனும் ஆசை தான்.
“ஆமா… கரைஞ்சிதான் போறாங்க” என்று பட்டென்று சொல்லியிருந்தான்.
அவளுக்குத்தான் அவன் சொல்லியதன் அர்த்தம் புரிந்தும் புரியா நிலை.
“புரியல…” நைருதி விழிகள் உருட்டி கேட்க,
“நல்லது” என்ற தேவித், “எப்படி கரையிறதுன்னு தாலி கட்டிட்டு டெமோ காட்டுறேன்” என்றான்.
“பேசிண்டே இருக்கேளே! மாலையை போடுங்கோ” என்ற ஐயரின் புறம் தேவித் திரும்பிட…
“தாலி கட்டுன அப்புறம் என்ன டெமோன்னு எனக்கும் தெரியும்” என்று முணுமுணுத்தாள்.
“ஓ… தெரியுமா? அப்போ எனக்கு ஈஸி” என்ற தேவித், “நீ வளர்ந்துட்டங்கிறதையே அப்பப்போ மறந்திடுறேன். கூடவே உனக்கு இவ்வளவு பேச வருமான்னும்” என்றான். ஒற்றை கண்ணடித்து.
“நீங்க எதைத்தான் மறக்கல?” என்ற நைருதி, “நாளைக்கு பொண்டாட்டின்னு என்னை மறக்காம இருந்தா சரி” என்றாள்.
“அதெல்லாம் மறக்கமாட்டேன்” என்றவாறே மாமன்னன் கொடுத்த மாலையை வாங்கி நைருதியின் கழுத்தில் போட்டவாறு, “உன்கிட்ட என்னை மறக்காம இருந்தா சரிதான்” என்றான்.
அடுத்து கவின் தேவித்திற்கு மாலை அணிவித்து சந்தனம் வைக்க, நிச்சய ஓலை வாசிக்கப்பட்டது.
தேவித்திடம் அருணா மோதிரத்தை நீட்டிட, தேவித் நைருதியிடம் அவளின் கரம் வேண்டி தன் கரம் நீட்டினான்.
என்னதான் விருப்பம் கொண்ட நிகழ்வாக இருந்தாலும், அவனுக்கு தன்னைப்போல் காதல் இல்லையே என்கிற வருத்தத்தை எத்தனை நினைத்தாலும் நைருதியால் ஒதுக்க முடியவில்லை.
இதில் தேவித்தின் பேச்சுக்கள், பார்வைகள் எல்லாம் அவளை குழப்பியடித்தன.
தேவித் சொல்லிய பிடிக்கும் என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் நெஞ்சில் நிறுத்தி, மெல்ல தன் கரத்தை அவன் முன் உயர்த்தி நீட்டியவளிடம் மென் நடுக்கம்.
விழிவழி அவளின் மனம் அறிந்த தேவித், அவளின் மருதாணி பூசிய சிவந்த விரல்களை தன் உள்ளங்கைக்குள் அடக்கி…
“அப்பா கேட்டதால் சரின்னு சொல்லல… பொண்ணு நீங்கிறதால தான் கல்யாணத்துக்கு சரி சொன்னேன்” என்று அவளின் விரலில் மோதிரம் அணிவித்தான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
43
+1
2
+1