அத்தியாயம் 2
“அப்பா.”
தேவித்தின் குரலில் அப்படியொரு அன்பு மீதுறல்.
தேவித்துக்கு தந்தை தான் அனைத்தும். பொதுவாக ஆண் பிள்ளைகள் அன்னையிடம் தானே அதீத ஒட்டுதலாக இருப்பர். ஆனால் தேவித்துக்கு எதுவென்றென்றாலும் தந்தை தான்.
“போனு எடுக்கவே இல்லையே தம்பி.” மாமன்னனின் குரலில் மகனை குற்றச்சாட்டும் பாவமில்லை. அதிருப்தியான விடயத்தையும் தன்மையாகக் கேட்டார்.
“மன்னிச்சிடுங்கப்பா. வேலையில எடுக்க முடியில. கிளம்பிட்டேன். ஃப்ளைட்ல தான் இருக்கேன். நிச்சய நேரத்துக்கு முன்ன வந்திடுவேங்க. ஏர்போர்ட்டுக்கு நதியை அனுப்புங்கப்பா. உங்களுக்கு அங்க வேலை இருக்குமே” என்று வேகமாக பேசியவன், விமானத்தில் இருப்பதால் பொறுமையாக நிறுத்தி பேச இயலாது, மாமன்னன் சொல்ல வருவதை கேட்காதவனாக, “மூவிங்ல இருக்கேன். கண்டிப்பா வந்துடுவேன். தைரியமா இருங்கப்பா. ரொம்ப நேரம் பேச முடியாதுப்பா” என்று வைத்துவிட்டான்.
அழைப்பைத் துண்டித்ததும், விமானம் தரையிறங்கும் நேரத்தை குறிப்பிட்டு,”கம் அண்ட் பிக்கப் மீ நதி” என்று தன்னுடைய அத்தை மகளுக்கு தகவல் அனுப்பிவிட்டு, பிலைண்ட் ஃபோல்ட் எடுத்து கண்களுக்கு அணிந்தவனாக உறக்கத்திற்குச் சென்றான்.
பல மாதங்களுக்குப் பின்னர் அவனாக கொண்ட உறக்கம் அது.
அப்போது தான் மாலை நடக்கவிருக்கும் நிச்சயத்திற்காக, இரண்டு கைகளிலும், கால்களிலும் வீட்டிலேயே பறித்து அரைத்த மருதாணி வைத்து, அவை காய்வதற்காக காற்றாடிக்கு கீழே அமர்ந்திருந்தாள் நைருதி. அவளுக்கு அருகில் அமர்ந்திருந்த தேவித்தின் தங்கை வான்மதி, நைருதியின் அலைப்பேசியை எடுத்து அவளிடம் காட்டினாள்.
“கல்யாணம் முடிவானப் பின்னரும் அண்ணா உன்கிட்ட பேசவேயில்லைன்னு குறைபட்டுக்கிட்டியே… இப்போபாரு, உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கவே அண்ணா உன்னை பிக்கப் பண்ண வர சொல்லியிருக்க” என்றாள் வான்மதி.
ஆனால் நைருதிக்கு அப்படியிருக்காது என்ற எண்ணம். பின்னே அவனைவிட அவனைப்பற்றி அவளுக்கு நன்றாகத் தெரியுமே!
‘உங்க அண்ணாக்கு பொண்ணு நான்தான்னு தெரியுமா?’ எனக் கேட்க உதடு வரை வந்துவிட்ட கேள்வியை கப்பென்று உள்ளுக்குள்ளே விழுங்கிக் கொண்டாள்.
அந்நேரம் கதவினை தட்டிவிட்டு நைருதியின் அண்ணன் கவின் உள்ளே வந்தான்.
“தேவா கிளம்பிட்டான். இப்போதான் மாமா சொன்னாங்க” என்று சொல்லிய கவின், “உயிர் வந்த மாதிரி இருக்கு” என்றான்.
“அண்ணா வரவே வராதுன்னு நினைச்சீங்களோ?” வான்மதி கணவனை முறைத்தவளாகக் கேட்டாள்.
“பின்ன இன்னைக்கு காலையில் வர கூப்பிடுறேன். ஃபோன் எடுக்க முடியாம அப்படி என்ன வேலை. வரட்டும் அவன்” என்று கவின் மீசையை முறுக்கிவிட்டு வேட்டியை மடித்துக்கட்ட…
நைருதி பக்கென்று சிரித்துவிட்டாள்.
“என்ன சிரிப்பு?” என்ற கவின், “தனக்கு கல்யாணம் அப்படிங்கிறதையே நினைவில்லாம வேலை தான் முக்கியம்ன்னு இருக்கான்” என்றவன், மனைவியை ஒரு பார்வை பார்த்துவிட்டு, தங்கையின் அருகில் அமர்ந்து அவளின் தலை கோதியவனாக, “அவன் தான் வேணுமாடா? இப்போக்கூட ஒண்ணுமில்லை. யோசி. வேண்டாம் அப்படின்னா நிறுத்திடலாம்” என்றான்.
கவின் அவ்வாறு சொல்லியதில் வான்மதிக்கு வருத்தமென்பது கொஞ்சமும் இல்லை.
என்ன தான் மாமன் மகள், அத்தை மகன் உறவாக இருந்தாலும், வான்மதிக்கும் கவினுக்கும் திருமணத்திற்கு முன்பு விருப்பமென்று எதுவும் இருக்கவில்லை. பெரியவர்களால் திருமணத்தில் சேர்த்து வைக்கப்பட்ட ஜோடி அவர்கள்.
உடன் பிறந்து வளர்ந்ததால் நெருக்கமான உறவு எனும் அடிப்படையில் புரிதல் இருந்திட, திருமணத்திற்கு பின் அன்பும் காதலும் துளிர்விட்டு, அதற்கு சான்றாய் வான்மதியின் சிப்பியில் நித்திலம் வளர்ந்து கொண்டிருக்கிறது.
கவினுடனான மகிழ்வான மண வாழ்க்கை… திருமணம் என்பது தாலி கட்டுவதுடன் நின்றுவிடுவதில்லை என்பதை வான்மதிக்கு அனுபவத்தில் உணர்த்தியிருக்க, கவின் தன் அண்ணனை வேண்டாமென்று மறுக்கிறான் என்ற நிலையிலும் அமைதியாகவே இருந்தாள்.
தேவித் குடும்பத்தாரிடம் அதிக ஒட்டுதல் தான். அனைவரின் மீதும் ஆழமான அன்பு வைத்திருப்பவன் தான். ஆனால் இவை யாவும் அவனது வேலை என்று வந்துவிட்டால் பின்னால் சென்றிடும். அப்படித்தானே மூன்று மாதங்களுக்கு முன்பு முடிவான தன்னுடைய திருமணத்தையே வேலையால் மறந்துவிட்டிருந்தான்.
கவின் அவ்வாறு சொல்லியதும் நைருதி வேகமாக வான்மதியைதான் ஏறிட்டாள்.
“சாரி அண்ணி. அண்ணா எனக்காக பேசிட்டாங்க” என்றாள்.
“எனக்கும் புரியுது ருதி. உங்க அண்ணா நான் பன்ற காலை அட்டெண்ட் பண்ணலன்னாவே எனக்கு கோபம் வரும். அண்ணா வேலைன்னு இருக்கும்போது, நாம அவங்க கண்ணுக்கு முன்ன நின்னாக்கூட அவருக்குத் தெரியமாட்டோம். கல்யாணம் ஒரு நாளோட நின்னுப்போயிடுறது இல்லை. அதில் நிறைய எதிர்பார்ப்புகள் அடக்கம். நீ உன் அண்ணா சொல்ற மாதிரி இப்போக்கூட யோசிச்சு முடிவெடு” என்றாள்.
அண்ணனுக்காக என்று நைருதியின் வாழ்வை பார்க்கத் தவறிவிடக் கூடாதே என்ற எண்ணம் தான் வான்மதிக்கு.
“எனக்கு மாமாவை ரொம்ப பிடிக்கும். எனக்கு பிடிச்சதால் தான். இந்த கல்யாணம். அம்மா மாமாவை எனக்கு கேட்காம வெளியில் வேற யாரையும் பார்த்திருந்தால், நானே மாமாவைதான் கட்டிப்பேன்னு சொல்லியிருப்பேன்” என்றாள். இருவரையும் அழுத்தமாகப் பார்த்து.
இந்த நொடி வரை வீட்டில் ஏற்பாடு செய்ததால், நைருதி திருமணத்திற்கு சம்மத்திதிருக்கிறாள் என்று நினைத்தால், அவளோ தேவித் மீது நேசமென்றல்லவா சொல்கிறாள்.
கணவன் மனைவி இருவரும் அர்த்தமாக பார்த்துக் கொண்டனர்.
“எங்களுக்காக சொல்லக் கூடாது” என்றான் கவின்.
“நிஜமாவே உங்க ஃப்ரெண்டை நான் விரும்புறேன்” என்றாள் நைருதி. முகத்தில் விரிந்த புன்னகையோடு.
“ஆமா ஃப்ரெண்ட்… அவன் வரட்டும்” என்று பற்களைக் கடித்தான் கவின்.
“இன்னும் உங்களுக்கு கோபம் போகலையா?” நைருதி கேட்க…
“எப்படி போகும். தங்கச்சி வளைக்காப்புக்கு வர முடியாதளவுக்கு அப்படியென்ன பிஸி அவன். அந்த கோபம் இப்போ அதிகம் தான் ஆகியிருக்கு. கல்யாணம் முடிவு ஆனதிலேர்ந்து அவனுக்கு கூப்பிடுறேன். ஒரு கால் அட்டெண்ட் பண்ணானா? வரட்டும்… ராஸ்கல். தொலைச்சிக் கட்டிடுறேன் அவனை” என்றான் கவின்.
“அதான் அண்ணா பிக்கப் பண்ண உங்களை வர சொல்லாம, ருதியையே வர சொல்லி மெசேஜ் பண்ணியிருக்காங்க” என்றாள் வான்மதி.
“என்ன உன்னை ஏர்போர்ட் வர சொன்னானா?” என்ற கவின், “அவன் என்ன நினைப்புல இருக்கான்?” என்றான்.
“அண்ணா வரவும் நிச்சயம் நடக்கும்… அடுத்து நேரம் நிக்காம போயிடும். ரெண்டு பேரும் பேசிக்க சூழல் அமையாதே! அதான் இப்போ பேசிக்கலாம் நினைச்சு கூப்பிட்டிருப்பாங்க” என்ற வான்மதியை நம்பாது ஏறிட்டான் கவின்.
“அச்சோ அண்ணா விடுங்க. மாமா இப்படிதான்னு தெரியும்ல. அப்புறம் என்ன? நானே போய் கூட்டிட்டு வரேன்” என்றாள் நைருதி.
“உன்னை எப்படி விடுவாங்க. அதுவும் சரியா நிச்சயம் நடக்க குறிச்சி வச்சிருக்க… நேரத்துக்கு அரை மணி முன்ன தான் வரான். நீயும் இல்லாம எப்படி?” என்றான் கவின்.
அப்போது மாமன்னன் அங்குவர, அவர்கள் பேச்சை நிறுத்திக் கொண்டனர்.
“தேவ் பாப்பாவையே விமான நிலையத்துக்கு வர சொல்றாங்க மாப்பிள்ளை” என்றார்.
கவினுக்கு தன் மாமாவைப் பற்றி நன்கு தெரியுமே! மகன் பாகற்காய் இனிக்குது என்று சொன்னால், அப்படியா எனக்கேட்டு உடனே சாப்பிட்டு ஆமென்று சொல்வாரே! இப்போது மட்டும் எப்படி மறுப்பார். மகன் சொல்லியதை வந்து கூறுகிறார்.
“ருதியும் இப்போ தான் சொன்னா மாமா. இன்னும் நேரமிருக்கே. நானே கூட்டிட்டுப்போய் வரேன்” என்றான் கவின்.
“சரிப்பா” என்ற மாமன்னன் அங்கிருந்து வெளியேற,
“ஊரே இவருக்கு அவ்ளோ மரியாதை கொடுக்குது. இவரென்னனா அந்த பனமரத்துக்கு அம்புட்டு மரியாதை கொடுக்கிறார். வேலைக்குன்னு டெல்லி போனவன், ஒரு நல்ல நாளுக்கு கூட வராம இருந்தப்போவே கன்னத்தில் நாலு போட்டு, மாசத்துக்கு ஒரு தரமாவது வரணும் சொல்லியிருந்தா, அவனும் நமக்கு வீடுன்னு ஒன்னு இருக்குன்னு வரப்போக இருந்திருப்பான். அது மட்டுமா… அங்கவே வீடு வாங்கப்போறேன் சொன்னதும், வாங்கிக்க கண்ணுன்னு சொன்னதோட பணம் வேணுமா தங்கம்ன்னு கொஞ்சல் வேற. வீடு வாங்கினானே ஒரு தரமாவது நாம அங்க போயிருப்போமா? இல்லை அவன் தான் நம்மளை கூப்பிட்டானா?” தன் மாமன் மகன் மட்டுமில்லாது தன்னுடைய ஆருயிர் நண்பனான தேவித் மீதிருக்கும் பலவருட ஆதங்கம் யாவற்றையும் இன்று ஒரே நாளில் இரு பெண்களிடமும் இறக்கி வைத்தான் கவின்.
“அவங்க கூப்பிட்டு தான் நாம போகணுமா என்ன? நீங்க போய் வாசலில் நின்னா, ஏன் வந்தேன்னு கேட்டுடுவாரா?” என்றாள் நைருதி.
“அவனை நீ விட்டுக்கொடுத்துடாத ஆத்தா” என்ற கவின், “என்னாலே அவனை புரிஞ்சிக்க முடியல. நீ எப்படிடா?” என்றான். தங்கையின் கன்னத்தில் கை வைத்து.
“சமாளிச்சிடுவியா ருதிம்மா?” என்றான்.
இளமுறுவல் பூத்தது. நைருதியின் இதழ்கள்.
“எனக்கு வேலை நிறைய கிடக்கு. நான் போறேன். கிளம்பி இரு. ஏர்போர்ட் போக கூட்டிப்போக, நேரத்துக்கு வரேன்” என்ற கவினை மறுத்த நைருதி, “நான் மட்டும் போறேன்… பிளீஸ் அண்ணா” என்றாள்.
கவின் எதுவும் சொல்லாது அமைதியாக பார்க்க…
“எனக்கு பேசணும் அவங்ககிட்ட” என்றாள்.
“கல்யாணம் முடிவானதிலேர்ந்து நீ அவனுக்கு கூப்பிடவே இல்லையா?” எனக் கேட்டான் கவின்.
“மாமாவா கூப்பிடுவாங்க நினைச்சேன்” என்றாள் நைருதி.
“நல்லா நினைச்சப்போ. மாமா அவன்கிட்ட சம்மதம் கேட்டாச்சு சொன்னதும், நானும் அவன் வளைக்காப்புக்கு வரலையேன்னு கோபமா பேசவே இல்லை. அவனுக்கு நீதான் பொண்ணுன்னாவது தெரியுமா?” என்றான்.
“அச்சோ மாமா… என்ன நீங்க?” என்ற வான்மதி, “அதெல்லாம் அப்பா சொல்லாமலா அண்ணா ஓகே சொல்லியிருப்பாங்க” என்றாள்.
“என்னவோ… அவனை எனக்கு நல்லாத் தெரியுமே! அதான் என்னென்னவோ நினைக்கத் தோணுது” என்ற கவின், “நீ போயிட்டு வா. அம்மாகிட்ட நான் பேசிக்கிறேன்” என்று வெளியேறினான்.
கவின் சென்ற பின்னர் நைருதியிடம் ஆழ்ந்த அமைதி.
“என்ன யோசிக்கிற ருதி?” வான்மதி கேட்க,
“மாமாக்கு என்னை பிடிக்குமா அண்ணி?” என்றாள் நைருதி. அவளின் குரலே கலங்கியிருந்தது.
“ச்சூ… என்னடா?” என்று நைருதியை தன் தோளில் சாய்த்துக்கொண்ட வான்மதி, “அண்ணாக்கு உன்னை பிடிக்குமே! உனக்கு தெரியாதா?” என்றாள்.
“கல்யாணம் கட்டிக்கிற அளவுக்கு பிடிக்குமா?” என்றாள்.
இதற்கு வான்மதி என்ன பதில் சொல்லிடுவாள். அவளால் சொல்லக்கூடிய கேள்வியா இது?
“அண்ணாகிட்டவே கேட்டுடு” என்றாள் வான்மதி.
“பிடிக்கல சொல்லிட்டா?”
“டேய்… ஏன்டா… நீயேன் இப்படி யோசிக்கிற?” என்ற வான்மதி, “அண்ணா பிடிக்காம எதுவும் செய்யமாட்டாங்க தெரியும்ல. உன்னை பிடிக்கல அப்படின்னா, அப்பா கேட்ட அப்போவே வேணாம் சொல்லியிருப்பாங்க. இல்லையா வெட்டிங் கார்ட் அப்பா அனுப்பி வச்சாங்களே! அப்போவாவது சொல்லியிருப்பாங்க” என்று ஏதேதோ சொல்லி நைருதியை தேற்றினாள்.
வான்மதி முன்பு முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டாலும், நைருதியின் மனம் பெரும் அலைபுறுதலில் தான் அல்லாடிக் கொண்டிருந்தது.
கவினுக்கு இருக்கும் அதே கேள்வி தான் அவளிடத்திலும்.
‘நான் தான் பொண்ணுன்னு உங்களுக்குத் தெரியுமா மாமா?’ மனதோடு கேட்டுக்கொண்டாள் நைருதி.
*நைருதி – தேவதை.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
33
+1
2
+1