அத்தியாயம் 15
அன்று நைருதி வீட்டில் தனியாகத்தான் இருந்தாள். எவ்வளவு நேரம் தான் ஒன்றும் செய்யாது அமர்ந்திருக்க முடியும்?
எதாவது செய்யலாம் என்றாலும், செய்வதற்கு எதுவுமில்லை. உணவும் தேவித்தே செய்து வைத்து சென்றிருக்க, வெட்டியாக வீட்டை வலம் வந்தாள்.
தேவித் சிறிது நேரத்தில் வந்துவிடுவேன் என்று சொல்லிய போதே அவளுக்கு, தான் இங்கு வந்த அன்று அவன் காணாமல் போனது தான் நினைவு வந்தது.
‘எப்படியும் மறந்துட்டு வேலைன்னு மூழ்கியிருக்கப் போறாங்க.’ மனதில் நினைத்தாலும் அவனிடம் சொல்லாது சிரித்தபடி நின்றாள்.
“உன் மைண்ட் வாய்ஸ் கேட்ச் பண்ணிட்டேன் நதி. சீக்கிரம் வர ட்ரை பண்றேன். ரிசர்ச் சென்ட்ரலில் லீவ் முடியும் வரை எனக்கு வேலையில்லை. பட் இங்க வந்ததும் வெட்டிங் ட்ரீட் கொடுக்கிறேன் சொல்லியிருந்தேன். அம்மா, அப்பா வராங்களே. அவங்க இருக்கும் போதே இதை முடிச்சிடலாம்” என்றவன், “ஜஸ்ட் எல்லாரையும் இன்வைட் பண்ணிட்டு வந்துடுவேன்” என்று அவளின் கன்னம் தட்டி…
“போர் அடிச்சா புக்ஸ் படி நதி. அதுதான் ரீடிங் ரூம்” என கைக்காட்டி, “சீக்கிரம் வந்துடுவேன்” என்று மீண்டும் அடர்த்தியாகச் சொல்லிச் சென்றவன், நேரம் கடந்தும் இன்னும் வரவில்லை.
புத்தகம் படிப்பதற்கு என்றே ஒரு அறை வைத்திருந்தான். தொலைக்காட்சியின் அலைவரிசையை மாற்றி மாற்றி வைத்தவள், அதுவும் ஒரு கட்டத்தில் சலிப்பைக் கொடுக்க, புத்தக அறைக்குள் நுழைந்தாள்.
உள்ளே வந்தவள் மலைத்து நின்றுவிட்டாள்.
தேவித்… “ரீடிங் ரூம்” என்று குறிப்பிட்டிருக்க… அவன் படிப்பதற்காக சில புத்தகங்கள் வைத்திருப்பான் என்று நினைத்திருந்தாள்.
ஆனால் இங்கோ அவ்வறை ஒரு நூலகம் போன்று காட்சியளித்தது.
அறையின் நான்கு பக்கச் சுவர் முழுவதும் விட்டத்தை தொட்டுக்கொண்டு புத்தகங்களால் நிரம்பியிருந்தன.
புத்தகங்கள் மட்டுமே குடி கொண்டிருந்த அவ்வறையில் நடுவில் வட்ட மேசையும், இரு இருக்கைகள், சிறு ஏணியும் மட்டுமே இருந்தன. வேறு பொருட்கள் யாவும் அங்கில்லை என்பதே அவன் புத்தகம் படிப்பதற்கு மட்டுமே இவ்வறையை பயன்படுத்துகிறான் என்பது புரிந்தது.
அறைக்குள் வந்தவளுக்கு புத்தக வாசனை ஒருவித மயக்கத்தைத் கொடுத்தது. ஆழ்ந்து உள்ளிழுத்து நுரையீரல் சேர்பித்தவளின் விரல்கள் புத்தகங்களை ஆசையாய் ஸ்பரிசித்தன.
எதை எடுத்து படிப்பதென்று தோன்றாமல், விரல்கள் தீண்டும் புத்தகங்களை எல்லாம் எடுத்து பார்த்து வைத்தாள்.
அனைத்து வகை நூல்களும் அங்கிருந்தன.
இதுவரை அவள் கேள்விப்பட்டிடாத பழங்கால புத்தகங்களும், அவை பலமுறை எடுக்கப்பட்டு வாசிக்கப்பட்டிருக்கின்றன என்பது காகிதங்களின் கசங்கிய தடத்தில் தெரிந்துகொள்ள முடிந்தது.
“ரிசர்ச் ரிலேட்டட்.” பெயர் பலகை வைக்கப்பட்டிருந்த பிரிவில் அவள் பார்வை நிலைக்க, கால்கள் தானாக அதன் பக்கம் நகர்ந்தது.
“இதெல்லாம் அவங்க ரிசர்ச் சம்மந்தப்பட்டது போல” எனக்கூறிக் கொண்டவள், அதிலிருந்து எடுக்கலாமா? வேண்டாமா? என்று தயங்கிய போதும் ஒரு புத்தகத்தை உருவி எடுத்திருந்தாள்.
“Wheel of Time.” ஆங்கிலப் புத்தகம். ஆசிரியர் யாரென்று பார்த்தாள். தேவித் மகிழோன் என்றிருந்தது.
“இது அவங்க எழுதின புத்தகமா?” என்று திறந்து பார்த்தவளின் விழிகள் விரிந்தன.
கிட்டத்தட்ட அறுநூறு பக்கங்கள் கொண்ட அப்புத்தகத்தை தன் கைப்பட எழுதியிருந்தான் தேவித்.
அவளுக்கு ஆச்சரியம்.
காலப் பயணக் குறித்து பலதரப்பட்ட குறிப்புகள், எழுத்துக்களாகவும் வரை படங்களாகவும் அதிலிருந்தன.
முதல் பக்கம் படித்ததற்கே தலை சுற்றி நின்றாள்.
எத்தனை தூரம் அவன் ஆய்வு நடத்தியிருக்கிறான்… அந்த குறிப்புகள் ஒரே தொகுப்பாக எழுதிட எத்தனை மெனக்கெடல் கொண்டிருக்கிறான் என்பது சில வரிகளிலேயே தெரிந்தது.
இரண்டு வருடங்களுக்கு முன்பு காலப்பயணம் குறித்து தேவித் ஆய்வுக்கட்டுரை எழுதுகிறான் என்பது தெரியும். அது அவனது பணிக்காக மட்டுமல்ல என்பது இக்கணம் புரிந்தது.
தேவித்தின் பெரும் உழைப்பு இதிலிருக்கிறது என்பதில் மெய் சிலிர்த்தாள்.
புத்தகத்தை எடுத்த இடத்தில் வைக்க…
“The steps of my mistakes.” அலமாரியின் ஓர் அடுக்கின் மேல் எழுதியிருந்த வார்த்தைகள் ஈர்த்திட, அதிலிருந்து புத்தகம் ஒன்றை எடுத்து திறந்தாள்.
“First step.” முதல் பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. திறந்து சில பக்கங்கள் படித்தாள். ஒன்றும் விளங்கவில்லை. ஆனால் அவனது ஆராய்ச்சியில் தான் செய்த தவறுகளை எழுதி வைத்திருக்கின்றான் என்பது புரிந்தது.
*உடன் தேவித் காலம் கடக்கும் கருவியை வடிவமைத்திட முயல்கிறான் என்பதும்.
அந்த அடுக்கில் மட்டும் கிட்டத்தட்ட இருபதுக்கும் மேற்பட்ட குறிப்பேடுகள் இருந்தன.
ஒவ்வொன்றும் “Another step” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இத்தனை தவறுகள் ஏற்பட்டும் தேவித் இன்னும் முயன்று கொண்டிருக்கிறான் என்பது, அவ்வடுக்கில் இறுதியாக இருந்த புத்தகம் உணர்த்தியது.
அதில் தற்போது செய்து கொண்டிருக்கும் ஆராய்ச்சியின் படி நிலைகளை, தன் செயல்முறைகளை ஒவ்வொரு அடியையும் பதிவு செய்து வருகின்றான் என்பது படிக்கும் போது அறிய முடிந்தது.
அவளுக்கு விழிகள் மேலும் மேலும் விரிந்து கொண்டே சென்றது.
“சயின்டிஸ்ட்டு ரகசியமா யாருக்கும் தெரியாம டைம் டிராவல் பண்ண வேலை பார்த்துக்கிட்டு இருக்காரா?” என்றவள், கையில் வைத்திருக்கும் குறிப்பேட்டில் இறுதியாக அவன் எழுதியிருப்பது, இரு நாட்களுக்கு முன்னர்.
“இதுக்குத்தான் அந்த அவசரமா?” எனக் கேட்டுக்கொண்டவளுக்கு அதிலிருக்கும் ஆபத்துகளும் புரிந்தது.
குறிப்பேட்டினை எடுத்த இடத்தில் வைத்து விட்டு, ஏணி வைத்து ஏறி பல புத்தகங்களை எடுத்துப் பார்த்தாள்.
“கதை புக்கே படிக்கமாட்டாங்களா?” என்று சலிப்பாக எண்ணியவள், இறங்க முயல, அவளின் கைப்பட்டு தடிமனான புத்தகம் ஒன்று தரை விழுந்தது.
ஒன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட புத்தகம்.
மேல் அட்டை இதற்கு முன்பு அந்த புத்தகத்தை எங்கோ பார்த்திருக்கும் உணர்வை கொடுத்தது.
எங்கென்று சரியாக நினைவுக்கு வரவில்லை.
பிரித்து படித்தவள் அதில் மூழ்கிப் போனாள்.
எப்போது இருக்கையில் வந்தமர்ந்தாள் என்று தெரியவில்லை. ஆனால் புத்தகத்தில் ஒன்றிப்போனாள்.
ஒரேயொரு யுத்தம் பற்றி மட்டுமே கதையாக அப்புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தது.
படிக்க படிக்க காட்சிகள் கண் முன்னே வலம் வர, நைருதி நிஜத்தில் யுத்த களத்தில் ஊர்வலம் சென்று கொண்டிருந்தாள்.
மாலை கவிழ்ந்து இருட்டியதே தெரியாது, கற்பனையில் விரியும் போரில் தானே வாள் ஏந்தி சண்டையிடுவதைப் போன்று தீவிரமாக யுத்ததில் ஆழ்ந்துவிட்டாள்.
கதையாக காட்சியாக்கப்பட்டிருந்ததில் எங்கும் மன்னனின் பெயரோ, மற்றவர்களின் குறிப்போ எதுவுமில்லை.
ஆனால் இதற்கு முன்னர் இதனைப்பற்றி முன்பே படித்த நினைவு.
புத்தகத்தை மேசை மீது வைத்தவள் கண்களை மூடிக் கொண்டாள்.
வீட்டிற்கு வந்த தேவித், வீடே இருட்டிலிருக்க… நூலக அறை மட்டும் வெளிச்சத்தில் இருப்பதை கண்டு நேராக அங்கு சென்றான்.
அறைக்குள் வந்தவன் கண்களுக்கு புத்தகங்கள் கைப்பட்ட தடங்கள் யாவும் அதன் அசைவு மாற்றத்தில் புலப்பட… அவனது கண்கள் தானாக அவனது ஆராய்ச்சி குறிப்புகள் வைக்கப்பட்டிருந்த அலமாரிக்குச் சென்றது.
மனைவியிடம் எதுவும் மறைக்கும் எண்ணம் அவனுக்கில்லை. ஆதலால் தான் இங்கு வந்தால் ஓரளவுக்கு தன்னை கணித்துவிடுவாள் என்பது அறிந்தும், பொழுது போகவில்லை என்றால் புத்தகம் படிக்குமாறு கூறிச் சென்றிருந்தான்.
அவளை அவனாகவே அவன் பார்க்கும் போது இருவருக்குமிடையேயும் எவ்வித ரகசியங்களும் இருப்பதில் விருப்பமில்லை. ஆனால் தானாக சொல்ல வேண்டி, தகுந்த நேரத்தை எதிர்பார்த்திருந்தவனுக்கு அவளாக தெரிந்து கொண்டதில் சிறு வருத்தம் அவ்வளவே.
“படிச்சு களைச்சாச்சா?” எனக் கேட்டுக் கொண்டே அவளின் அருகில் சென்றான்.
கண்கள் திறவாது நின்று கொண்டிருந்தவனின் வயிற்றில் தலை சாய்த்துக் கொண்டாள்.
“டைம் டிராவல் பன்றதுலாம் சாத்தியமா மாமா?”
“முடியுமா முடியாதுன்னு தான் என்னோட ரிசர்ச்” என்றான்.
“ம்ம்…” அதன் பின் அவளிடம் ஆழ்ந்த அமைதி. அவளின் தலை வருடி நின்றிருந்தவன் பார்வை, மேசை மீதிருந்த புத்தகத்தில் படிந்தது.
“ஃபுல்லா படிச்சிட்டியா?” எனக் கேட்டான்.
“இப்போதான்” என்ற நைருதி, “என்னவோ நானே அந்த இடத்துக்கு போயிட்டு வந்த மாதிரி இருந்தது” என்றாள்.
“நார்மலாவே புக் படிக்கும் போது நம்ம கற்பனையில் படிப்பதை மூளை காட்சிப்படுத்தும் தானே… ஜஸ்ட் இல்யூஷன்” என்றான்.
“இத்தனை முயற்சி பண்ணியிருக்கீங்க… ஒவ்வொரு முறையும் தோல்வியாகும் போது இதற்கு வாய்ப்பில்லைன்னு உங்களுக்கு எண்ணம் வரலையா மாமா?” எனக் கேட்டாள். இமைகள் திறந்து, தலை உயர்த்தி, நின்று கொண்டிருந்தவன் முகம் பார்த்து.
“கடைசி வரை போனா தானே தெரியும். வாய்ப்பு இருக்கா இல்லையான்னு. என்னைப் பொறுத்தவரை நான் இன்னும் பாதி படியில் தான் நிக்கிறேன்” என்றான்.
“அப்போ இது சாத்தியம் சொல்றீங்க… சரியா?”
“என் முயற்சி வெற்றி அடையும் சொல்றேன்” என்றான்.
அவனது பதில்களில் அவள் தான் அசந்து போனாள்.
“இது இயற்கைக்கு எதிரானது தானே?”
“அஃப்கோர்ஸ்.” தோள்களை உயர்த்தி இறக்கினான்.
“இயற்கைக்கு எதிரா நாம ஒன்னு பண்ணும்போது ஆபத்து அதிகமாகுமே. விளைவுகளுக்கு வாய்ப்பிருக்கே” என்றாள்.
“எதில் தான் ஆபத்தில்லை நதி? நல்லதுன்னு ஒன்னு இருந்தா அதன் மறுபக்கம் கெட்டதுன்னு ஒன்னு இருக்குமே” என்றான்.
“இது நம்பக்கூடிய விஷயமா மாமா?” அவளுக்கு இதனால் அவனுக்கு எதுவும் ஆகிவிடுமோ எனும் பயம். அதனால் மனதில் தோன்றியதை எல்லாம் கேட்டாள்.
“ஏன் நம்பக்கூடாது?” என்றவன், “என்னுடைய ரிசர்ச் இயற்கைக்கு எதிரானது சொல்ற… ரைட்? உன் வழிக்கே நானும் வரேன். சாவித்திரி எமனிடம் போராடி இறந்த தன் கணவனை உயிர் மீட்டு வந்தார் அப்படிங்கிறதை எல்லாரும் நம்புறீங்க தானே?” எனக் கேட்டான்.
அவளின் தலை தானாக ஆமென்று அசைந்தது.
“செத்தவனை உயிரோடு கொண்டு வரது மட்டும் சாத்தியமா என்ன? அது மட்டும் இயற்கைக்கு எதிரானது இல்லையா? என்றான்.
வாயடைத்துப்போனாள். எதிர் வாதம் வைத்து என்ன பதில் சொல்வதென்று திணறினாள்.
“நான் சும்மா இதில் இறங்கல. எத்தனை தூரத்துக்கு சாத்தியமாகும், செயல்படுத்த முடியும் அப்படின்னு இது சம்மந்தமா ஆராய்ச்சி பண்ணியிருக்கேன். அதெல்லாம் உனக்கே இந்நேரம் தெரிஞ்சிருக்கும்” என்று வலது பக்க சுவர் முன்பு சென்று நின்றான்.
இரு கைகளையும் சிறகாய் விரித்து,
“இது முழுக்க என்னோட ரிசர்ச் ரிலேட்டட் புக்ஸ் தான். எல்லாருமே ஒரு பாயின்ட்ல முடியாது சொன்னதை நான் முடியும்னு சாதித்துக்காட்ட இருக்கேன்” என்றான்.
“என்னால முடியும் நதி” என்று அவளின் பக்கம் வந்தவன்,
“இப்போ நீ படிச்சியே… இந்த புக்கில் இருக்கும் போர், ஒன்பதாம் நூற்றாண்டில் நடந்தது. இதில் சண்டை செய்யும் ராஜா, அப்போவே காலத்தை முன்கூட்டியே கணிக்கும் ஆற்றல் கொண்டவரா இருந்திருக்கிறார். காலம் கடந்து முன்னும் பின்னும் பயணிக்க முடியும் அப்படின்னு சொல்லியிருக்கார். இதைத்தவிர அவருடைய பெயர், மற்ற டீடெயில்ஸ் எதுவும் தெரியல. நான் தீசீஸ் ரெடி பண்ணும்போது சின்னதா கிடைத்த குறிப்பை வச்சு இவரைப்பற்றி தெரிஞ்சிக்க நிறைய முயற்சி பண்ணேன். ஆனால் இதைத்தவிர வேறெதுவும் கிடைக்கல. அவர் பெயர் கூடத் தெரியல” என்றவனின் கண்கள் ஆர்வமாய் ஒளிர்ந்தது அவள் மொழிந்த பெயரில்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
24
+1
+1