Loading

அத்தியாயம் 13

வீட்டிற்குள் வந்ததும் அதி வேகத்தில் அறைக்குள் நுழைந்த தேவித் இரண்டு மணி நேரம் கடந்தும் வெளியில் வராதிருக்க, கதவினை தட்டி…

“மாமா” என்றழைத்துப் பார்த்தாள் நருதி.

இருட்டத் தொடங்கியிருந்ததில் மெல்லிய பதற்றம் தோன்றியது.

அந்தப் பக்கமிருந்து எவ்வித சத்தமில்லாமல் போக, சில நிமிடங்கள் அங்கேயே கைகளை பிசைந்து கொண்டு நின்றிருந்த நைருதி, அதற்கு மேல் பொறுமையின்றி கதவினை திறந்திட… ஆளின்றி வெற்று அறையாக இருப்பதைக் கண்டு மேலும் பயந்து போனாள்.

உடை மாற்றும் அறையென பார்த்ததும் தெரிந்துகொள்ளும் விதமாக, ஒரு பக்கம் வார்ட்ரோப்பும், அலங்கார கண்ணாடி மேசையும் மற்றைய பக்கம் துவைப்பதற்கு உண்டான ஆடைகள் போடும் கூடையும், பக்கவாட்டில் பாதி திறந்திருந்த கண்ணாடி கதவு குளியலறை என்பதையும் காட்டிக்கொடுத்தது. தேவித் குளியலறையில் இல்லை என்பதை திறந்திருந்த கதவு பறைசாற்ற, அறைக்குள் தனது கண்முன் நுழைந்தவன் எங்கனம் மாயமாகிப் போனான்… வேறு வழி உள்ளதா என்று அவ்வறையின் இண்டு இடுக்கெல்லாம் தேடிப் பார்த்தவளுக்கு தானாக கை விரல்களில் நடுக்கம் ஏற்பட்டது.

நைருதியின் பயத்துக்கு காரணமானவனோ, அவனது ஆய்வுக் கூடத்தில் தன்னுடைய ஆராய்ச்சியின் மீது பார்வையை பதித்து நின்றிருந்தான்.

இயற்பியல் ஆய்வுக்கூடத்திற்கான அத்தனை சிறப்பு மிக்க உபகரணங்களும் அங்கு இருந்தன. ஆங்காங்கே காலத்தை குறிக்கும் குறிப்புகள் பழங்காலம் தொட்டு இன்றைய நாட்கள் வரையில், பல்வேறு வடிவங்களில், புத்தகங்களில், உபகரணங்களில் அவ்விடத்தில் நிரம்பியிருந்தன.

ஒரு பக்கத்தில் அறிவியலின் உச்சத்தின் நிலைக்கும் மொத்த பாலவழி அண்டத்தின் அமைப்பும்… இந்துக்களின் புராண கூற்றின் படி அறியப்படும் தெய்வ நம்பிக்கையின் வழியின் அமையப்பெற்ற கோள்களின் சுழற்சி வரையறைகளும் மினியேச்சர் வடிவில் அமைக்கப்பட்டிருந்தன.

அதில் தான் தேவித்தின் கண்கள் நிலைகுத்தி நின்றிருந்தன.

தேவித் வடிவமைத்து உருவாக்கிக் கொண்டிருக்கும் ஒன்றின் செயல்பாடுகள் அவன் மினியேச்சராக உருவாக்கி வைத்திருக்கும் அண்டசராசரத்தில் வெளிப்படும்.

அதனை வெறித்து பார்த்துக் கொண்டிருந்த தேவித்தின் கண்களில் மெல்ல மெல்ல ஒளி கூடியது.

“யூ டிட் இட் மேன்… தேவ்… யூ மேட் இட்… மேட் இட்…” என்று புன்னகைத்தவனுக்கு கண்கள் கலங்கும் போலானது. தன்னைத் தானே உற்சாகப்படுத்திக் கொள்ளும் விதமாக, தன் புஜத்தில் தானே தட்டிக் கொடுத்தான்.

முடியாது என்ற ஒன்றின் எல்லையை முடியுமென்று தொட்டு நிற்பதற்கு காரணம் அவன்மீது, அவனது ஆராய்ச்சியின் மீது அவன் கொண்ட நம்பிக்கை. தன்னம்பிக்கை. அவனுக்கு அவனே கொடுத்துக்கொண்டே ஊக்கம், உந்துதல் தான் பெரும் காரணம்.

“யாஹூ…” என்று உற்சாகமாகக் கூவினான். அவ்வறை எங்கும் அவனின் சந்தோஷ கூவல்.

இறுதி நிலையை எட்டிய நிறைவு.

“இன்னும் ஒரு ஸ்டெப்…” என்று கைகளை இடைக்குற்றி நிமிர்ந்து நின்றவன்… மேல்நோக்கி தலையை உயர்த்தி… கண்ணின் ஓரம் கசிய காத்திருந்த கண்ணீரை கட்டுபடுத்தி இமை தேக்கினான்.

அவனது பெரும் கனவு கைகூடப் போகும் பெரும் மகிழ்வுக்கு சான்று அவனது கண்ணீர்.

அவனது ஆராய்ச்சியில் இறுதி நிலைக்கான செயல்பாட்டில், ஊருக்கு செல்லும் முன் செய்து வைத்துச் சென்றதில் தானாக மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. அவனது கோட்பாடுகள் கிரகங்களின் நகர்வுகளில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதனை கவனித்தே அத்தனை அவசரமாக ஊரிலிருந்து இங்கு வந்து சேர்ந்திருந்தான்.

இறுதி அடியில் பலமுறை சறுக்கி இருக்கின்றான். அந்த சறுக்கல் இம்முறையும் ஏற்பட்டுவிடக் கூடாதெனும் பயம் மெல்லத் துளிர்விட்ட போதும் இம்முறை எப்படியும் வெற்றி நிச்சயம் எனும் கூக்குரல் அவனுள்.

கடைசி படிநிலையை முடிக்காது சோதித்து பார்க்க முடியாது. ஆதலால் இறுதியாக தான் செய்து வைத்த கோட்பாட்டின் குறிப்புகளை கையேடாக எழுதி வைத்ததோடு, டிஜிட்டல் குறிப்பாகவும் சேமித்து வைத்து நிமிர, இரண்டு மணி நேரம் கடந்திருந்தது.

அதன் பின்னரே மனைவியின் நினைவு வந்து வேகமாக அங்கிருந்து வந்தவனின் கண்ணின் பயமும் பதற்றமுமாக அறைக்குள் தன்னை தேடிக் கொண்டிருந்தவளை காதலாய் பின்னிருந்து அணைத்திருந்தான்.

அறைக்குள் அவனில்லையென்ற அலசலுக்கு பின், “மாமா” என்று உசரித்தவளுக்கு கண்ணீர் வரும் போலிருக்க மூச்சினை ஆழ்ந்து சுவாசித்தாள். கண்களை அழுந்த மூடி தன் பயம் கலைய முயன்றாள்.

சட்டென்று பின்னால் தீண்டிய தேகம், இடை உரசிய கரம், இறுகிய அணைப்பு யாவும் கணவன் என்பதை உணர்த்திட, வேகமா அவன் அணைவுக்குள் இருந்த விதமாக அவன் புறம் திரும்பி…

“எங்க போனீங்க? கொஞ்ச நேரத்தில் பதற வச்சிட்டீங்க” என்று அவனின் மார்பிலே இரு கைகளையும் ஒன்றாகக் குத்தினாள்.

“அண்டர் கிரவுண்ட்ல என்னோட லேப் இருக்கு” என்ற தேவித், “இப்போ என்னால் உனக்கு அதை காட்ட முடியாது” என்று அவளின் தோளில் கரமிட்டு, பிரதான அறைக்கு அழைத்து வந்தவன், “பின்னால் கார்டன் நல்லாயிருக்கும்” என அறையின் பின்பக்க கதவை திறந்து சிட்டவுட் பகுதிக்கு அழைத்து வந்தான்.

பூமிக்கு அடியில் அவனது ஆராய்ச்சிக்கூடம் இருப்பதாகக் கூறினான். ஆனால் அதற்கான வழி எப்படி, அவ்வறையில் எங்கனம் உள்ளது என்பதை சொல்லவில்லை. அவன் எப்படி எவ்வித அரவமும், சிறு சத்தமுமின்றி தனக்கு பின்னால் வந்தானென்றும் தெரியவில்லை. அதனை நினைத்தாலும் அவனிடம் கேட்கவில்லை. சொல்ல வேண்டுமென்றால் அவனே சொல்லியிருப்பானென்று கேட்காமல் விடுத்து, அவனது. இசைவுக்கு அவனுடன் சேர்ந்து நடந்தாள்.

இரவிலும் அத்தனை பசுமையாய் காட்சியளித்தது அவ்விடம். பலவகை பூச்செடிகள், குரோட்டான்ஸ் வகை மரங்கள் என்று அழகாக இருந்தது.

அங்கிருந்த மர இருக்கையில் அமர்ந்த தேவித், மனைவியை தன் மடியில் அமர்த்தி, வாகாக பிடித்துக் கொண்டான்.

தோட்டத்திற்கு நடுவிலிருந்து செயற்கை நீரூற்று, மின் விளக்கின் வெளிச்சத்தில் வண்ணமயமாக, பார்ப்பதற்கு சிறு அருவி அமைப்பில் கண்களை கவர ரசிக்க ஆரம்பித்துவிட்டாள்.

மனைவியின் ரசிப்பை ரசனையாய் உள்வாங்கிக் கொண்டிருந்த தேவித், அவளின் பின்னங்கழுத்தில் முத்தம் வைத்து,

“உனக்கு என்கிட்ட எதுவும் கேட்கணுமா நதி?” எனக் கேட்டான்.

“கேட்டாலும் சொல்லமாட்டிங்க தானே?” என்றவளின் புரிதலான கேள்வியில் அவளின் நெற்றி முட்டி தேவித் சிரிக்க, “ரொம்ப அவசரமா வந்த வேலை முடிஞ்சுதா?” என்றாள்.

“ம்ம்…” என்றவன், “வீட்டை சுற்றி பார்த்தியா? பிடிச்சிருக்கா?” என்றான்.

“இவ்வளவு பெரிய வீட்டில் நீங்க மட்டும் தனியா எப்படி? ஒரு மாதிரி லோன்லி ஃபீல் ஆகலையா?” எனக் கேட்டவளின் கன்னம் பிடித்து ஆட்டிய தேவித், “அதான் இப்போ மேடம் இருக்காங்களே” என்றான்.

“ம்ம்… வன் மன்த்ஸ் இருப்பேன். அப்புறம் சென்னை போகணும்” என்றாள்.

தேவித்தின் முகம் சுருங்கிப்போனது.

அவனது முகவாட்டம் பார்த்து, “பாருடா… பொண்டாட்டியை பிரிஞ்சு இருக்கிறதை நெனச்சிலாம் சயின்ட்டிஸ்டு ஃபீல் பண்றீங்க…” என்றவள், “அவ்ளோ லவ்வா?” என்றாள்.

“எவ்ளோ லவ்வுன்னு காட்டுறேன் வா” என்று தூக்கிக்கொண்டு தேவித் உள்ளே நுழைய, அவன் படுக்கைக்குத்தான் செல்வானென்று நினைத்து அவள் அவனது மார்பில் தன் முகம் மறைத்திட, அவனோ அவளை சமையலறைக்குத் தூக்கி வந்திருந்தான்.

அடுப்பு மேடையில் நைருதியை உட்கார வைத்தான். அவளின் முகம் காட்டிய முழிப்பில்…

வாய்விட்டு சிரித்த தேவித்,

“வேறென்னவோ எதிர்பார்த்த மாதிரி தெரியுது” என்று அவளின் கன்னத்தில் முத்தம் வைத்தான்.

“அப்படிலால் இல்லையே” என்று அவனது பார்வையில் தவித்து, தேவித்தின் நாடி பிடித்து முகத்தை திருப்பினாள்.

“இருக்கட்டும்… அப்புறம் இருக்கு” என்ற தேவித், “பசிக்கலையா உனக்கு?” எனக் கேட்டுக்கொண்டே குளிர்சாதனப் பெட்டியை திறந்து பார்வையிட்டான்.

நைருதியும் கிச்சன் சன்னல் வழி வெளியே பார்த்தவளாக, குறிப்பாக தேவித்தின் முகம் பாராதவளாக…

“இதுதான் லவ் காட்டுற விதமா?” எனக் கேட்டாள்.

பிரெட், முட்டை, பால் நிறைந்த கண்ணாடி பாட்டிலுடன் திரும்பிய தேவித்,

“ஃபுட்லேர்ந்து காட்டலாம் நினைச்சேன்” என்று கையிலிருந்ததை மேடையில் வைத்துவிட்டு அவளின் கால்கள் உரச நெருங்கி நின்றான்.

“இப்போ எதுக்கு இவ்ளோ பக்கம் வரீங்க?”

“நதி ஏமாந்துட்ட மாதிரி தெரியுதே!”

“அதெல்லாம் ஒண்ணுமில்லை” என்றவள் மீண்டும் சன்னல் வழி முகத்தை திருப்பிட,

அவனும், அவளிடமிருந்து விலகினான்.

“நம்ம கம்யூனிட்டியிலே பிக் மார்ட் இருக்கு. எல்லாம் இருக்கும். மார்னிங் போகலாம். கிச்சன் நீட்ஸ் வீட்டில் அவ்ளோ இல்லை. வாங்கணும். இது மட்டும் வீரட்டை வாங்கி வைக்க சொல்லியிருந்தேன்” என்று அவளிடம் சொல்லியவாறு, பாலை பாத்திரத்தில் ஊற்றி அடுப்பிலேற்றினான்.

தேவித் அவளை சிட்டவுட்டிலிருந்து தூக்கிக்கொண்டு வரும்போதே, அவளின் எண்ணம் புது மனைவியாய் உணர்வுகளின் எதிர்பார்ப்பில் மலர்ந்திருக்க, அவனது நெருக்கம் காதலின் எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது. சட்டென்று விலகிவிடுவான் என்று எதிர்பாராதவளுக்கு உடனடியாக இயல்பாக முடியாது போனது.

அவனால் மட்டுமே தூண்டப்படும் உணர்வுகளின் ஆர்ப்பரிப்பு அவனால் மட்டுமே அடங்கிடும் நிலை அவளிடம்.

அவளாக நெருங்கிட தயக்கம். இருக்கும் இடமும் ஒரு காரணம்.

“உனக்கு பால், பிரெட் ஆம்லெட் போதுமா? இல்லை வெளியில் போய் சாப்பிட்டு வருவோமா?” என்றான் பிரெட்டை டோஸ்ட் செய்து பிளேட்டில் வைத்தவாறு.

நைருதி பதில் சொல்லாது, அவன் முகத்தில் உறைந்த நொடி அது.

அன்பை உணவிலிருந்து ஆரம்பிப்போம் என்று அவன் சொல்லியதன் பொருள்… அவளுக்காக அவன் செய்கின்றான். அவளின் பசி அறிந்து, அவளுக்காக உணவினை செய்ய அவன் எடுத்துக் கொள்ளும் மெனக்கெடலில் கொட்டிகிடக்கிறது… அவன் மனம் பரவியிருக்கும் அவளின் மீதான காதல்.

“பார்வை பலமா இருக்கே!” கேட்ட தேவித்தின் மூரல்கள் வெளிக்கொணராத நீண்ட முறுவல். அவளின் தயக்கத்தை துடைத்தெறிந்திட… அவனின் கன்னத்தை தன் விரல்கள் குவித்து கொத்தாக பற்றி எடுத்து, தன் உதட்டில் வைத்தவளாக…

“முத்தா மாமா!” என்றிருந்தாள்.

சட்டென்று ஒற்றை கையால் அவளின் இடை சுற்றி தன்னருகே இழுத்து அவளின் நெற்றி முட்டி நின்றான்.

மிக நெருக்கத்தில் இருவரின் இமை இழைகளிடையே அணைப்பாய் பற்றுக்கொள்ளல்.

“மேடம் கிட்ட ஒரு முத்தம் வாங்க என்னெல்லாம் பண்ண வேண்டியிருக்கு” என்ற தேவித், உருண்டோடும் அவளின் கருவிழி அசைவுக்கு ஏற்ப தன் விழிகளால் அவளிடம் சரணடைய அலைப்பாய்ந்தான்.

நைருதி மேடையில் அமர்ந்திருக்க, அதீத நெருக்கத்தில் தேவித் நின்றிருந்தான். இருவருக்குமே அந்நெருக்கம் மனதினுள் சில்லிப்பாய் ஊடுருவியது.

தானாக நைருதியின் கரங்கள் மேலெழும்பி தேவித்தின் கழுத்தில் மாலையாகின.

“என்னவாம்… கண்ணுல என்னவோ…?” இப்போது அவளிடம் விஷமம் தெறித்தது.

“என்ன தெரியுது” என்று கிசுகிசுப்பாய் கேட்ட தேவித், அவளின் கன்னத்தில் வழிந்திருந்த முன்னுச்சி கேசத்தை தன் சுட்டு விரலில் சுற்றி விடுத்தவனாக, அவளின் கன்னத்தில் தன் கன்னம் வைத்து உரசினான்.

“சயின்டிஸ்டுக்கு இப்போ வேலை இல்லையா?” தானாக கண்கள் மூடிட, அவள் கேட்டிருந்தாள்.

பதில் சொல்ல வேண்டிய அவனது அதரங்கள் விரல் செய்த வேலையை தற்போது செய்திட… இருவரும் சூழல் மறந்து தங்களின் நெருக்கத்தை அதீதமாக ரசித்து, லயித்திருக்க… திடீரென நாசி தீண்டிய வித்தியாசமான வாசத்தில் பதறி விலகினர்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
26
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்