அத்தியாயம் 12
அடுத்த இரண்டாம் நாள் காலை பத்து மணிபோல் அனைவரும் டெல்லி செல்வதாக ஏற்பாடாகியிருந்தது.
இதுவரை யாரும் தேவித்தின் டெல்லி வீட்டிற்கு சென்றதில்லை. இதுதான் முதல் முறை செல்லவிருக்கின்றனர். அதனால் அனைவருமே அங்கு செல்ல ஆர்வமாக இருந்தனர்.
விமானப் பயணம் என்பதால் வான்மதியும் அவர்களுடன் பயணிக்கவிருக்கிறாள்.
“இன்னைக்கும் வேலை தானா? உனக்கு கல்யாணமாகி ரெண்டு நாள் தான்டா ஆகுது” என்று தேவித்தின் அறைக்குள் வந்தான் கவின்.
தேவித் தன்னுடைய மடிக்கணினியில் கண்ணாக இருக்க, நைருதி தனக்கு வேண்டியவற்றை பார்த்து பார்த்து பெட்டிக்குள் அடைத்துக் கொண்டிருந்தாள்.
கவினின் கேள்வியில் சிரித்த நைருதி…
“இப்போதைக்கு நீங்க என்ன பேசினாலும் அவங்களுக்கு கேட்காதுண்ணா” என்றாள்.
“ம்ம்… தெரிஞ்ச கதைதான்” என்ற கவின், “டிக்கெட் போட்டுட்டேன் ருதி. அதை சொல்லத்தான் வந்தேன்” என்றான்.
“ஓகேண்ணா” என்ற நைருதி, “டாக்டர் என்ன சொன்னாங்க?” எனக் கேட்டாள்.
“டிராவல் பண்ணலாம் சொல்லிட்டாங்க. ட்யூ டேட்க்கு நாளிருக்கே” என்றவன், “நீ என்ன இப்போவே அடுக்க ஆரம்பிச்சிட்ட?” என்றான்.
“எதையும் மிஸ் பண்ணக்கூடாதே. நினைச்சா வந்து எடுத்துக்கிற தூரமா இருக்கு” என்ற நைருதி, “எதையும் மறந்திடக் கூடாதுன்னு நினைவு வரதை எடுத்து வச்சிட்டு இருக்கேன்” என்றாள்.
“ம்ம்… ஓகேடா. வேறெதுவும் வேணும் அப்படின்னாலும் சொல்லு. வாங்கிடலாம்” என்றான்.
தங்களின் பேச்சே காதில் விழாதவனாக இருந்த தேவித்தை பார்க்கையில், அதுவரை எப்படியும் சமாளித்துவிடுவாள் என்கிற திடம் தொலைந்து தங்கையின் வாழ்க்கை குறித்த பயம் மெல்லிய கோடாக கவினுள் எழுந்தது.
“இவ்ளோ பேசுறோமே எதையாவது கண்டுக்கிறானா பாரு” என்ற கவின், “அதிகம் எதிர்பார்ப்பு வச்சிக்காதடா. அவன் இப்படித்தான்… அப்படியே ஏத்துக்கிறேன் சொல்றது காதலுக்கு மட்டும் தான் பொருந்தும். கல்யாணம் வேற கோணம். உன்னோட சுணக்கம் அவன் வாழ்க்கையையும் கஷ்டப்படுத்திடும்” என்றான்.
“எல்லாமே அவங்க தான் அண்ணா. சண்டை, கோபம், வருத்தமில்லாம வாழ்க்கை இல்லையே! இதெல்லாம் வரும். சேர்ந்து கடக்க பழகிக்கிறேன்” என்றவளின் உச்சியில் ஆதுரமாக கை வைத்து அழுத்தம் கொடுத்த கவின், “நான் வரேன்” என்று அடி வைத்திட…
“நீயெப்போட வந்த?” என்று கேட்டு இருக்கையிலிருந்து எழுந்து தேவித், தன்னுடைய கேள்விக்கு பதிலையெல்லாம் எதிர்பார்க்கவில்லை.
“நதி… கெட் ரெடி ஃபார்ஸ்ட். உடனே டெல்லி கிளம்பனும். இம்பார்ட்டன்ட் வொர்க்” என்றான்.
“என்னடா இப்போவேவா? அப்புறம் நாங்க எப்படி வரது?” கேட்ட கவினுக்கு பதில் சொல்லும் பொறுமை நிலையில் தேவித் இல்லை.
வேகமாக அறையை விட்டு வெளியில் சென்றான்.
எதிர்ப்பட்ட அருணாவிடம்,
“அப்பா எங்கம்மா?” என்று வினவியவன், அவர் பதில் சொல்லும் முன்பே வீட்டிற்கு வெளியில் மாமன்னனை தேடிச் சென்றான்.
மன்னன் வெளியில் தான் பண்ணை ஆட்களுக்கு கூலி கொடுத்துக் கொண்டிருந்தார்.
“அப்பா” என்று அவருக்கு பின் சென்று நின்ற தேவித், அவர் திரும்பிடவும், “டெல்லி கிளம்புறேன். நீங்க பிளான் பண்ண மாதிரி வந்திடுங்க” என்று அதே வேகத்தில் வீட்டிற்குள் சென்றான்.
“டேய் தேவா… என்ன அவசரம். இன்னும் ஒருநாள் தானே! இருக்க முடியாதா?”
தேவித்தை பிடித்து நிறுத்தி வைத்துக் கேட்டான் கவின்.
அதற்குள் மாமன்னனும் உள்ளே வந்திருந்தார்.
“அவசரமா போகணும் கவின். விளக்கம் சொல்ல நேரமில்லை. இப்போ தான் செக் பண்ணேன். இன்னும் அரை மணியில் ஒரு ஃப்ளைட் இருக்கு. எமர்ஜென்சி டிக்கெட் புக் பண்ணிட்டேன்” என்று அறைக்குள் அவன் நுழைந்த வேகம் கண்டு, மாமன்னன் எதுவும் சொல்லாது மனைவியை பார்த்தார்.
அருணா அவர்களின் வீட்டிலிருக்கும் நிலவறை நோக்கி நகர,
“இப்போ வந்துடுறேன் கவின். நீங்க ரெண்டு பேரும் கிளம்புறாங்கன்னு மச்சானையும்,ரமாவையும் கூட்டிட்டு வாங்க” என்று சொல்லி மனைவியின் பின்னால் சென்றார் மாமன்னன்.
அறைக்குள் வந்த தேவித்,
“ஹெவி லக்கேஜ் வேண்டாம் நதி. அவங்க வரும்போது மொத்தமா கொண்டு வருவாங்க. கவின் கிட்ட எதெதுன்னு சொல்லிடு. இப்போ இம்பார்ட்டன்ட் நீட்ஸ் மட்டும் எடுத்துக்கோ” என்று தன்னுடைய தோள் பையில் மடிக்கணினி, அலைபேசி, என எல்லாம் எடுத்து வைத்தவன், தோளில் மாட்டிக்கொண்டு, நிமிடத்தில்… “கிளம்பலாம்” என்றான்.
தேவித்தின் முகமே பதட்டத்தில் இருந்தது. பார்க்கும்போதே அவனது படபடப்பு நன்கு தெரிந்தது. ஆதலால் எதுவும் கேட்காது அவனுடன் வெளியில் வந்தாள் நைருதி.
“நேரங்காலம் ஒன்னும் பார்க்காம இப்படியா அவதியா அனுப்பி வைக்கிறது. அப்படியென்ன வேலை” என்று முனகிய ரமா தேவித்தை கண்டதும் நேரடியாகக் கேட்கவும் செய்தார்.
தேவித் பதில் சொல்லாது கவினை பார்த்தபடி நெற்றியை தேய்த்துவிட, அவனோ முறைத்து வைத்தான்.
“அவர் வேலை பத்தி தெரியுமே! அப்புறமும் இதென்ன பேச்சு” என்ற ஆவுடை, “பார்த்து பத்திரமா போயிட்டு வாங்க மாப்பிள்ளை. நாளை மறுநாள் நாங்க வரப்படி வரோம்” என்றார்.
“தேங்க்ஸ் மாமா” என்ற தேவித், “அப்பா” என்று குரல் கொடுக்க…
“தோ வந்துட்டேன் அப்பு” என்று மனைவியுடன் வந்தார் மாமன்னன்.
மாமன்னன் கையில் அடர் காக்கி நிறத்தில், தடிமனான தோலினால் ஆன பை ஒன்று இருந்தது. பார்த்ததும் பழமையானதென்று தெரிந்தது.
“இது என் கொள்ளு தாத்தா வச்சிருந்ததாம். உன்கிட்ட சேரணும்ன்னு உன் தாத்தா என்கிட்ட கொடுத்தது. இதுல என்னயிருக்கு தெரியாது. எனக்கு மட்டுமில்லை இதை வச்சிருந்த கொள்ளு தாத்தாவுக்கும் தெரியாதாம். இது தோல் பை தானேன்னு திறக்க நினைச்சும் யாராலும் திறக்க முடியல. ஆனா உன்னால முடியும்ன்னு உன் தாத்தா சொன்னார். உனக்கு கல்யாணம் முடிஞ்சதும் கொடுக்க சொன்னார்” என்று பையை தேவித் என்ன என்று கேட்கும் முன்பே தனக்கு தெரிந்ததை சொல்லி மகனிடம் கொடுத்தார்.
இருக்கும் அவசரத்திற்கு அது என்ன என்று ஆராயும் மனநிலை தேவித்துக்கு இல்லை. பையை வாங்கி தன்னுடைய தோளில் தொங்கிக் கொண்டிருந்த பைக்குள் வைத்தவன்,
“வந்திடுங்கப்பா. கவின் பார்த்துக்கோ” என்று சொல்லி மனைவியுடன் புறப்பட்டிருந்தான்.
விமான நிலையம் வந்ததும்…
“ரொம்ப பன்ற தேவா நீ! கல்யாணம் மூணு மாசத்துக்கு முன்னவே முடிவு பண்ணது… ஒரு வன் வீக் உன்னால லீவ் போட முடியாதா?” என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளிக்காட்டியிருந்தான்.
“இப்போ இதுக்கெல்லாம் எனக்கு நேரமில்லை மச்சான். நீ அங்க வரும்போது உன் பஞ்சாயத்தை வச்சுக்கோ” என்றவனாக மனைவியின் கரம் பிடித்து உள்ளே சென்றுவிட்டான்.
கவினுக்கு தேவித்தின் பணியின் உயரம் நன்கு தெரியும். இத்தனை நாளும் அவனது உயரத்தில் பெருமை கொண்டவன் தான். இப்போது ஏனோ… தங்கையின் கணவன் எனும் நிலையில், அவர்களின் வாழ்வு குறித்த பயம் தானாக எழுகிறது.
“பாசத்தில் தங்களை விஞ்சிவிடுவான் போலும்.”
சொல்லிய ராஜகுருவை மென் புன்னகையோடு பார்த்தான் அவன்.
“அந்த அன்பு தானே அவர்கள் இங்கே வருவதற்கான பாதை.” அவனது முகத்தை வைத்து என்ன நினைக்கின்றான் என்பதை அவராலும் கணிக்க முடியவில்லை.
“சுவடி அவன் கை சேர்ந்துவிட்டதே அரசே! அதனை அவன் வாசித்துப் பார்த்தாலே… தானாக இங்கு வந்துவிடுவான். பின்னர் எதற்கு அப்பெண்ணின் வருகை?” என்று தன்னுடைய சந்தேகத்தை முன் வைத்தார் அவர்.
வாய்விட்டு சிரித்தவன்…
“காரிகை தான் முதலில் இங்கு வருவாளென்று அறிகிறீரோ?” எனக் கேட்டான்.
“அதுதானே தங்களின் சித்தம்!”
“சித்தம் என்ன வேண்டுமாகவும் இருக்கட்டும்…” என்றவன், “புவிதனில் காலத்தையும் கட்டியிழுக்கும் ஆற்றல் தூய நேசத்திற்கு உள்ளது. அந்த நேசத்தின் யுத்ததில் தான் என்னவளின் சுவாசம் உயிர்த்தெழவிருக்கிறது” என்றான்.
“முன்ஜென்மமின்றிய உயிர்களின் ஒற்றுமை எப்படி? எங்கனம் சாத்தியமாயிற்று அரசே?”
வஸ்திரம் ஏந்திய கரத்தை இடையில் வைத்து, மற்றைய கரத்தை தான் அமர்ந்திருந்த அரியாசனத்தின் கை ஊன்றி, விரிந்த விஸ்திரமான அம்மண்டபம் அதிரும் வண்ணம் சிரித்தவன்…
“காலத்தின் விடையறிய விழைகின்றீரோ… முடியுமா உம்மால்? வித்தகன் விதைத்த விதையை ஒற்றை கேள்வியில் விடுவித்திட எண்ணுகிறீர்…” என்றான்.
“தங்களின் எண்ணம் ஈடேறும் வரை காலத்தின் கரங்களில் அரங்கேறும் சித்து விளையாட்டினை அக்காலமும் அறிந்திடாது என்கிறீர்கள்… சரியாக சொல்கின்றேனா அரசே?”
அவனிடம் இம்முறை இதழ் பிரியா குறுநகை.
“நல்லவன் வரும் மார்க்கம் வாய்க்கப்பெருமாயின்… கயவனின் வஞ்சம் துளிர்த்தெழுமே! வஞ்சகனின் பாதை எதுவோ?”
அதற்கும் அவனிடம் புன்னகையே பதிலாக.
“யாவும் புன்னகையில் ஒளித்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறீர்கள். நடக்குமாயின் விழிகளின் பார்வைக்கு காட்சிகள் உரித்தாகுமே. தடுத்திட இயலுமா?”
“தங்களுக்கு நான் சொல்ல வேண்டுமா? நடப்பவை, நடக்கயிருப்பவை, நடந்து கொண்டிருப்பவை யாவும் என் வழி அறிவீரே ராஜகுரு. இதற்கு மேலும் தனித்து கூறவேண்டுமென்று என்ன உள்ளது?” என்றான்.
“யாரெனும் கணிப்பு உள்ளதா அரசே?”
“தொடுக்கும் வினாக்கள் அதிகரித்தால்…” என்ற அவன் பேச்சினை தடை செய்வது போன்று ஈட்டி ஏந்திய காவலன் ஒருவன் அங்கே வந்தான்.
“தங்களை காண தங்களின் சோதரர் வந்திருக்கின்றார் மஹாராஜா?” என்று சிரம் தாழ்த்தி மொழிந்தான் காவலன்.
அரசன் அவன் பார்வை அர்த்தமாக ராஜகுருவின் மீது படிய, அங்கிருந்து பின் வாயில் வழியாக வெளியேறினார்.
விமானம் தரையிறங்கிட… தன் கயினை இறுகப்பிடித்து, தோளில் தலை சாய்த்து உறங்கிக் கொண்டிருந்த மனைவியின் கன்னம் தட்டி எழுப்பினான் தேவித்.
“நதி…”
கண்கள் திறந்தவள் நிகழ்வை உணரும் முன்பு…
“லேண்ட் ஆகியாச்சு நதி” என்று எழுந்து நின்றான்.
அவனிடம் ஒருவித அவசரம்.
அந்த அவசரத்திலும் மனைவியின் கரம் பற்றி தன் அணைவுக்குள் வைத்தவனாக வெளியேறினான்.
அனைத்தும் முடித்து பயணப் பொதிகளுடன் வெளியில்வர, அங்கே காத்திருந்தான் வீரட்.
“என்னடா சடனா?” என்ற வீரட்டிடம்… பதிலேதும் சொல்லாது, நைருதி ஏறுவதற்காக வண்டியின் கதவை திறந்து பிடித்த தேவித்,
“நதி கெட் இன்” என்று அவள் அமர்ந்ததை கவனித்துவிட்டு மறுபக்கம் வந்து, ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்த வீரட்டை பின்னால் அமரச் செய்து, வண்டியை அதிவேகத்தில் கிளப்பியிருந்தான்.
“டேய் எதுக்கு இவ்ளோ ஸ்பீட். பேட்ரோல் ஆபிசர்ஸ் நோட் பண்ணப்போறாங்கடா” என்ற வீரட்டின் கத்தலை எல்லாம் தேவித் பொருட்படுத்தவே இல்லை.
தன்னுடைய வேகத்தில் மனைவி பயம் காட்டுகிறாளா என்பதை மட்டும் அவ்வவ்போது கவனித்தவனாக வீடு வந்து சேர்ந்தான்.
பெரும் சமுதாய குடியிருப்பு வாயிலின் வளைவிற்குள் வண்டி நுழைய… அவ்விடத்தில் அனைத்தையும் கவனித்தவாறு வந்தாள் நைருதி.
“டெல்லியிலே பெரிய கம்யூனிட்டி லிவ்விங் ஏரியா இதுதான். ஹைய்லி எக்ஸ்பென்சிவ். உன் புருஷன் இங்க தான் வீடு வாங்கியிருக்கான். அதுவும் இவ்வளவு பெரிய இடத்தில் ஒரு மூலையில் தனியா இருக்க வில்லா…” என்றான் வீரட்.
“தனியாவா?”
“தனியான்னா… பக்கத்துல வில்லாலாம் இருக்கு. பட் மத்த வில்லாஸ்க்கு இது டிஸ்டன்ஸ் அதிகம். அதிக நெருக்கம் கிடையாது” என்றான்.
வண்டி ஒரு அடுக்குமாடியின் முன் நிற்க, வீரட் இறங்கிக் கொண்டான்.
“இங்க தான் என் வீடு இருக்கு. ஒருநாள் கட்டாயம் வரணும்” என்று வீரட் சொல்ல, அவள் தலையசைக்கும் முன்பு வண்டியை விரட்டியிருந்தான் தேவித்.
“மாமா… என்னாச்சு?” அதற்கு மேலும் அவளால் கேட்காமல் இருக்க முடியவில்லை.
“வீடு வந்தாச்சு. இறங்கு நதி” என்ற தேவித் அவளின் கேள்விக்கு பதில் சொல்லவில்லை.
மனைவியின் கரம் பற்றி, இணைந்து வீட்டிற்குள் நுழைந்தான்.
“லக்கேஜ் அப்புறம் நான் வந்து எடுத்து வைக்கிறேன். இப்போ நீ ரெஸ்ட் எடு” என்று தங்களின் அறைக்குள் அழைத்துச் சென்றவன், “இப்போ வந்துடுறேன்” என அறைக்குள்ளிருந்த மற்றொரு கதவை திறந்து கொண்டு சென்றவன் இரண்டு மணி நேரமாகியும் வெளியில் வரவில்லை.
அதற்கு மேல் அவனில்லை எனும் தனிமை, இன்னதென்று விளங்கா அச்சத்தைக் கொடுக்க அவன் சென்ற கதவை திறந்தாள்.
பார்த்தவளுக்கு பயம் அதிகரித்தது.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
29
+1
1
+1