Loading

அத்தியாயம் 10

“நல்லவேளை சொந்தபந்தமெல்லாம் உள்ளூர் அப்படிங்கிறதால விசேஷம் முடிஞ்சதும் ரா தங்காமா கிளம்பிட்டாங்க. இல்லைன்னா கூடத்திலே குத்த வச்சு, ருதியை ரூமுக்கு அனுப்பும் நேரம் கிண்டல் பேச்சு பேசியே பிள்ளையை ஒரு பாடுபடுத்தி அவஸ்தையை கூட்டியிருப்பாங்க… அதுவும் உன் ஒன்னுவிட்ட பெரியத்தை கிளம்பினதும் தான் நிம்மதியாச்சு” என்று அனைவரையும் அனுப்பி வைத்துவிட்டு சமையலறைக்குள் வந்த அருணா நைருதியிடம்,

“பால் காய்ஞ்சிடுச்சா?” எனக் கேட்டார்.

“ஆச்சு அத்த” என்ற நைருதி, “மாமாக்கு பால் பிடிக்காதே! மசாலா டீ தானே?” என்றாள்.

“அதுக்கு, இப்போ… இன்னைக்கு டீ கொண்டுபோக முடியுமா?” என்றார் அருணா.

“குடிக்கப்போறது அவர்தானே அத்த. பிடிக்காததை குடிச்சி… உடம்புக்கு சேரலனா?” என்று அருணாவை கண்கள் சுருக்கி பார்த்தாள்.

“நீ எப்படி பார்த்தாலும் பால் தான் கொண்டுபோகணும். ஏற்கனவே உன் அம்மா தாலி, புடவைன்னு எதுவும் முறையா இல்லைன்னு வெசனத்தில் இருக்கா. இப்போ இதுவும் தெரிஞ்சா அவ்ளோதான்” என்றவர், “என்ன பார்த்திட்டு நிக்குற” என்று வான்மதியின் தோளில் தட்டி, “நான் பால் சர்க்கரை கலந்து வைக்கிறேன். நீ அவளை உன் ரூமுக்கு கூட்டிட்டு போய் ரெடி பண்ணு” என்றார்.

“புடவைம்மா.”

“எல்லாம் கட்டிலில் எடுத்து வச்சிருக்கேன்” என்றவர், கை நிறைய உலர் பழங்களை அள்ளி எடுத்து நெய் விட்டு வறுக்க ஆரம்பிக்க… வான்மதி பக்கென்று சிரித்துவிட்டாள்.

“என்னாச்சு அண்ணி?” நைருதி, வான்மதி சிரித்ததற்கான அர்த்தம் விளங்காது என்னவென்று கேட்க,

“இதெல்லாம் சொல்லி புரியர்தில்லை பேபிம்மா” என்று மேலும் சிரித்தாள்.

அருணா மகளை முறைக்க…

அந்த முறைப்பிற்கெல்லாம் அசராத வான்மதி, “பாதாம் கொஞ்சம் எக்ஸ்ட்ரா போடும்மா” என்றாள்.

“அடிங்க…” என்று அருணா கரண்டியை தூக்கி காண்பித்து முன்வர, “அச்சோ ஓடி வந்திடு” என்று நைருதியின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு அறைக்குள் சென்று மறைந்தாள் வான்மதி.

“எதுக்கு அண்ணி இப்படி ஓடி வந்தீங்க” என்று மூச்சு வாங்கிய நைருதி, அங்கு எடுத்து வைக்கப்பட்டிருந்த பூக்களை மலைத்துப் பார்த்தாள்.

“அண்ணி இவ்வளவு பூவும் தலையில் வைக்கவா?”

“ஆமா” என்று சாதாரணமாக சொல்லிய வான்மதி, “அண்ணாக்கு குண்டு மல்லி இஷ்டம். அம்மா தலையில் வச்சிக்கிட்டா, அன்னைக்கு முழுக்க அண்ணா, அழகா இருக்கீங்கம்மா சொல்லிட்டே இருப்பாங்க. அதை நினைவு வச்சு அம்மாவோட ஏற்பாடு இது” எனக்கூறி குறும்பாய் கண் சிமிட்டினாள்.

“மாமாக்கு பிடிக்கும் அப்படின்னா நான் ஏன் அண்ணி வச்சிக்கணும்?” என்று கேட்ட நைருதி, தன்னுடைய வாக்கியத்தை முடிக்கும் முன்பே, மதியின் விஷமப் பார்வையில் புரிந்துகொண்டவளாக, “அய்யோ அண்ணி எதுவும் சொல்லிடாதீங்க” என்று முகத்தை மூடிக் கொண்டவளாக குளியலறைக்குள் புகுந்து கதவடைத்தாள். மதியின் சிரிப்பு சத்தம் அவளை வெட்கத்தில் மூழ்க வைத்தது.

கண்ணாடியில் முகம் பார்த்தவள், முகத்தில் விஞ்சிய நாணப் பூக்களில் இரு கைகளாலும் முகத்தை மூடிக் கொண்டாள்.

“வெட்கப்பட்டுட்டே நிக்காத ருதி. அப்புறம் அண்ணா நிலை கவலைக்கிடமாகிடும்” என்று மதி வெளியிலிருந்து குரல் கொடுக்க, ஒருவித சஞ்சரிப்பிலே விரைந்து குளித்து வெளியில் வந்தாள் நைருதி.

வந்ததும், கட்டிலில் அமர்ந்து அலைபேசியை பார்வையிட்டு கொண்டிருந்த மதியின் அருகில் சென்ற நைருதி,

“என்னலாம் பேசுறீங்க நீங்க. கவின் அண்ணா எப்படி சமாளிக்கிறாங்க உங்களை?” என்று கேட்டாள்.

“யாராவது ஒருத்தர் சமாளிச்சா போதாதா பேபிம்மா” என்று மதி கண்ணடித்து அவள் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் வைத்தாள்.

“அண்ணி என்ன இப்படிலாம் பேசுறீங்க?” இதழ் குவித்து ஆச்சரியமாக வினவினாள்.

“எப்படி பேசுறாங்க?” என்ற மதி, “இப்படியெல்லாம் இப்போ தான் பேச முடியும்… வேறெப்போ?” என்றாள்.

புடவையை எடுத்து நைருதியின் இடையில் சுற்றியவளாக, அவளையும் சுழற்றி நிறுத்தினாள்.

“அண்ணி மெதுவா!”

“அங்க உன் மாமா பொறுமை மெதுவா கரைஞ்சிட்டு இருக்கும்.”

“அதுக்குன்னு இப்படியா?” என்ற நைருதி, “நானே கட்டிக்கிறேன் அண்ணி” என்று தயங்கினாள்.

“இதிலென்ன இருக்கு… இன்னைக்கு ஒருநாள் உன் வெட்கத்தை மொத்தமா ஒதுக்கி வை பேபி” என்று நைருதியின் கன்னம் தட்டி, மடமடவென புடவை மடிப்பெடுத்து கட்டி முடித்தாள்.

“அவ்ளோதான்” என்று தலை பின்னலிட, சீப்பினை கையிலெடுக்க… நைருதி தன்னை சுற்றி சுற்றி ஆராய்ந்தாள்.

“என்னாச்சு?” என்ற மதி, “எங்கயும் இழுத்து சொருகிட்டனா?” எனக் கேட்டாள்.

“அண்ணி நீங்க எங்கயுமே பின் பண்ணலையே! அவிழ்ந்துடாதா?” என்றாள் நைருதி.

“அதெதுக்கு டிஸ்டப்பென்ஸா?”

“என்ன அண்ணி… புரியல?”

“இப்போ புரியாது தான்” என்ற மதி, அவளின் காதில் கிசுகிசுக்க, “அண்ணி போதும்” என்று பட்டென்று மதியின் வாயினை தன் கைக்கொண்டு அடைத்திருந்தாள் நைருதி.

“நான் உங்களை ஒன்னும் கேட்கல” என்ற நைருதி உண்மையில் அதன் பின்னர் ஒரு வார்த்தை பேசவில்லை.

அவளின் அமைதியில் மதி தான் பொங்கி வந்த சிரிப்பை அடக்கியவளாக அவளை தயார் செய்தாள்.

“நகை எதும் போட்டுக்கிறியா ருதி?”

“வேண்டாம் அண்ணி.”

“ஆமா… அதுவும் பின் மாதிரி தானே” என்று மதி சிரிப்போடு சொல்ல,

“இப்படியே பேசினீங்க… உங்களை நான் கொன்னுடுவேன்” என்று சிறு பிள்ளையாய் மிரட்டினாள்.

“அடடா… பேசினது போதும். உங்க சிரிப்பு சத்தம் வெளிய கேட்குது” என்று உள்ளே வந்த அருணா, “சாமி அறையில பால் வச்சிருக்கேன். எடுத்துக்குடு மதி. அறை வாசல் வரை போய் விட்டுட்டு வா” என்றதோடு, “எங்க சொத்தே தேவா தான். அதுவும் உன் மாமாவுக்கு அவன் உசுருக்கும் மேல. இனி அவன் உன் பொறுப்பு. ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும் ருதி” என அவளின் நெற்றியில் ஆதுரமாக முத்தம் வைத்துச் சென்றார்.

வான்மதி அவளின் கையில் பால் அடங்கிய குவளையை கொடுக்க…

“அண்ணி நல்ல வாசனை. நீங்க சொன்ன மாதிரியே அத்தை பாதாம் நிறைய போட்டிருக்காங்க. சேஃப்ரான் ஸ்மெல் மைல்டா…” என்று மூச்சிழுத்து வாசம் பிடித்து, “இப்போவே குடிக்கணும் போலிருக்கு” என்றாள்.

“ம்க்கும்…” என்ற மதி, “இது நீ மட்டும் குடிக்க இல்லத்தா. உன் மாமாவும் நீயும் சேர்ந்து குடிக்க” என்றாள்.

“எப்படியும் மாமா பால் குடிக்கமாட்டாங்க. இது எனக்கு தான்” என்ற நைருதி, “நீங்க போங்க அண்ணி. நான் போய்க்கிறேன். குட் நைட்” என்று முன் நடந்தாள்.

“ஹேய் நில்லு” என்ற மதி, “குட் நைட் சொல்றது இருக்கட்டும். என்ன நீபாட்டுக்கு ஜங்குன்னு போற. இவ்வளவு நேரமிருந்த வெட்கம் எதையும் காணோம். கொஞ்சம் கூட படபடப்பு இல்லையா உனக்கு?” எனக் கேட்டாள்.

“எல்லாம் நீங்க பேசினதுலே ஓடிப்போச்சு அண்ணி” என்று கண்கள் சிமிட்டிய நைருதி, “என் மாமா அண்ணி. இதெல்லாம் நடக்கும் தெரியுற வயசு. அப்புறம் எதுக்கு பயப்படனும்?” என்றாள்.

“ரொம்ப தெளிவு தான். மறைமுகப் பேச்சுதான் உனக்கு விளங்கல” என்று உதடு சுளித்த மதி, அவளை அணைத்து விடுத்தாள்.

மதி தன்னுடைய அறைக்குள் செல்லும் வரை நின்றிருந்த நைருதி தேவித்தின் அறை நோக்கி அடி வைத்தாள்.

என்ன தான் மதியிடம் பயமென ஒன்றுமில்லையென சொல்லிவிட்டாலும், அந்நேரம் எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்பு இதயத்தை மெல்ல எகிற வைக்கும் உணர்வு.

“இதெல்லாம் நார்மல் ருதி” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவள், கதவினை தட்டிவிட்டு இயல்பாகவே அறைக்குள் சென்று தாழிட்டாள்.

முன்னறையில் தொலைக்காட்சியில் பாடல் ஓடிக் கொண்டிருக்க, ரிமோட்டினை எடுத்து அணைத்து வைத்தாள்.

தேவித் அங்கில்லை.

உள்ளறையை எட்டிப் பார்த்தாள். வெண்ணிற படுக்கையில் மெல்லிய அலங்காரமாக மல்லிகை மலர்களும் ரோஜா இதழ்களும் தூவப்பட்டிருக்க, ஆங்காங்கே வாசனை மெழுகு வர்த்திகள் ஒளிர்ந்து கொண்டிருந்தன.

நாசி நுழைந்த மென் வாசம் இதம் சேர்க்க, மெல்ல அவ்வறைக்குள் நுழைந்து தேவித் எங்கென்று பார்வையால் அலசினாள்.

அவனிருப்பதாகத் தெரியவில்லை.

கையோடு கொண்டு வந்திருந்த தன்னுடைய அலைபேசியிலிருந்து தேவித்தின் எண்ணிற்கு அழைப்பு விடுத்தாள்.

தேவித் வேறொருவருடன் பேசிக்கொண்டிருக்கிறார் என்று வர, பால்கனி பக்கமிருந்து எட்டிப் பார்த்தான் தேவித்.

“டூ மினிட்ஸ்” என்று விரல் காட்டி விழிகளால் மொழி பெயர்த்தான்.

சரியென தலையசைத்து அழைப்பைத் துண்டித்து, பால் குவளையை பழங்கள் வைக்கப்பட்டிருந்த மேசை மீது வைத்திட்டு மெத்தையில் அமர்ந்தாள்.

இரண்டு நிமிடங்கள் என்பது வேகமாக கரைந்து பத்து நிமிடங்களை தொட்டிருக்க, மெல்ல அவனை எட்டிப் பார்த்தாள்.

அலைபேசியுடன் நின்று கொண்டிருந்தவன், தனக்கு முன்னிருந்த ஊஞ்சலில் மடிக்கணினியை வைத்து விரலால் திரை நகர்த்தியபடி தீவிரமாக உரையாடிக் கொண்டிருந்தான்.

அவன் முகத் தோற்றமே முக்கியமான வேலையில் இருக்கின்றான் என்பதை தெரிவிக்க, புத்தகம் ஒன்றை எடுத்துக் கொண்டு, முதுகுக்கு தலையணை வைத்து, நன்றாக சாய்ந்து கால் நீட்டி அமர்ந்து படிக்கத் தொடங்கியவள் சிறிது நேரத்தில் அன்றைய நாளின் அலாதி சோர்வில் தன்னைப்போல் உறங்கியிருந்தாள்.

வேலையென்றால் உலகத்தையே மறந்து விடுபவனுக்கு, அந்நேரம் எதிர்பாராது வந்திட்ட அழைப்பில் உண்மையிலேயே கடுகடுப்பு வந்தது.

தலைமை ஆராய்ச்சியாளர் கதிரேசனே அழைத்திருக்க, அவனால் காரணம் சொல்லி தவிர்த்திட முடியவில்லை.

திரும்பி மனைவியை பார்த்தான்.

‘தூங்கிட்டாள்.’ தோன்றும் எரிச்சலை குரலில் காட்டாது, அவர் கேட்பதற்கெல்லாம் பதில் கூறினான்.

ஒரு மணி நேரத்திற்கு பின் உரையாடல் முடிவுக்கு வர,

“சாரி மை பாய். டிஸ்டப் பண்ண வேண்டியதாகிருச்சு. எனக்கும் வேற ஆப்ஷன் இல்லை. ஹைலி கான்பிடன்ஷியல். என்ஜாய் யூர் மொமெண்ட்” என்று அவர் வைத்த நொடி, இதழ் குவித்து ஊதி தன்னை நிலைப்படுத்தினான்.

அறைக்குள் வந்தவன் மடிக்கணினி மற்றும் அலைபேசியை அதற்குரிய இடத்தில் வைத்துவிட்டு, நைருதியின் அருகில் வந்து நின்றான்.

ஒற்றை கையை மார்பில் கட்டிக்கொண்டு, ஒரு கை விரல்களால் தாடை நீவியவன், மனைவியையே சில நொடிகள் ரசித்திருந்தான்.

“இந்த சீஃப் இன்னைக்கு மொத்தமா ஆப்படிச்சிட்டார்” என்று தலையை இருபக்கமும் அசைத்து சிரித்தவன், ஏசியை அணைத்து மின்விசிறியை சுழலவிட்டு மெழுகுவர்த்தி யாவும் அணைந்ததும், இரவு விளக்கை ஒளிரச்செய்து, மீண்டும் ஏசியை உயிர்ப்பித்து, புத்தகத்தை நகர்த்தி அவளை சரித்து நேராக படுக்க வைத்து, தானும் கட்டிலின் மற்றைய பக்கம் வந்து படுத்தான்.

நைருதியின் மீது காதல் வந்த பின்னர், அவள் தான் மனைவி எனும் எண்ணம் அவனுள். ஆனாலும் தன்னுடைய ஆராய்ச்சியில் மூழ்கியே இருந்தவனுக்கு அவளை காதலாக நினைத்துப் பார்க்கவெல்லாம் நேரமிருந்தது இல்லை.

மனதோடு அவனே காட்டிக்கொள்ளாது, அவனுக்கு அவனே பொத்தி வைத்துக்கொண்ட காதல். அவள் மீது அதீத காதலென்றாலும், அந்த அதீதத்தின் அளவை அவனே இந்த மூன்று நாட்களாகத்தான் அறிகிறான். தானாக மனதில் அவளுடன் இப்படியெல்லாம் இருந்திட வேண்டுமென்ற ஓராயிரம் ஆசைகள் ஊற்றாய் சுரந்தது. அதில் அவளுடன் வாழப்போகும் இத்தருணங்களும் அடக்கம்.

அனைத்தும் இன்றே நடக்க வேண்டுமென்றில்லை… இன்றைய இரவில் சிறு பேச்சுக்கும் வழியின்றி போனதே என்று அவனின் காதல் மனம் சுணங்கியது.

மனைவியை உரசாது நெருங்கியவன், அவளின் முகம் பார்த்தவாறே இருக்க, மெல்ல இமைகள் மூடின.

ஒன்றுக்குள் ஒன்றாக இணைந்திருக்கும் நெஞ்சங்கள் காதலில் தொலைந்திட தாழ்திறவா நொடிகள் அவை.

 

 

அத்தியாயம் 11

காலத்தின் தருணத்தில் இவை நடக்க வேண்டுமென்ற சிந்தையிருக்க, அரங்கேற வேண்டிய நிகழ்வுகள் தாமதமின்றி நடந்தேறுதல் என்பதே நியதி.

நள்ளிரவில் மின்சாரம் தடைபட, ஏசியின் குளுமை மெல்ல வெம்மைக்கு மாற்றமெற இருவரின் உறக்கமும் தடைபட்டது.

புழுக்கத்தில் புரண்டு படுத்த நைருதி எழுந்து சன்னல் கண்ணாடி வழி அறைக்குள் ஊடுருவிய நிலவு வெளிச்சத்தில் அடி வைத்து பால்கனி கதவுகளை திறந்துவிட, தேவித் எழுந்தமார்ந்தான்.

“தினமும் இந்நேரம் ஃபைவ் மினிட்ஸ் ஹோல்ட் பண்ணுவாங்க. இப்போ வந்திடும் மாமா” என்றபடி அவனருகில் வந்தமர்ந்தாள்.

“ஹம்” என்ற தேவித், அவளின் கை விரல்களோடு தன் விரல்கள் கோர்த்து அவள் தோள் உரச நெருங்கி அமர்ந்தான்.

“எழுப்பியிருக்கலாமே!”

அவனது சிறு செயல், அவனின் எதிர்பார்ப்பை அவளுள் விளங்க வைத்தது.

“எழுப்பியிருக்கணுமா?”

அவளின் இமைகள் படபடத்தது. என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவளும் எதிர்பார்த்து இயல்பாய் வந்திருந்தாளே. அவனருகில், அவனது பார்வையில், கோர்த்திருந்த விரல்களின் அழுத்தத்தில் மனம் வேண்டுமாக அதிகம் எதிர்பார்த்தது.

அவளின் விழியில், முக உணர்வில் அவனது கவனித்தல் அவளது அகம் தொட்டு சிலிர்க்கச் செய்தது.

“மாமா” என்று ஓசையின்றி விளித்தவள், அவனின் மார்பு சாய்ந்திட, மின்சாரம் வந்ததை சட்டென்று குளிராக மாறிய அறையும், மின்னிய இரவு விளக்கும் உணர்த்தின.

பட்டென அவள் காட்டிய விலகளின் படபடப்பில் அவனிடம் மீசை துடிக்கும் மென் புன்னகை.

தேவித்தின் குறுநகைக்கே சிவந்து தவித்தாள் நைருதி.

“டோர்ஸ் க்ளோஸ் பண்ணிட்டு வரேன்” என்று எழுந்து சென்று திறந்துவிட்ட சன்னல் மற்றும் பால்கனி கதவுகளையெல்லாம் அடைத்து திரும்பியவள், கட்டில் அருகே செல்ல தயக்கம் கொண்டு அங்கேயே நின்று கணவனை ஏறிட்டாள்.

அவனோ கால்கள் நீட்டி, மடியில் கைகள் கோர்த்து வைத்தவனாக, வாகாக பின்னால் சாய்ந்து அமர்ந்து அவளையே பார்த்திருந்தான். அவனது கருவிழிகளில் தேடலாய் சிறு பருகல்.

‘பார்வையே என்னவோ பண்ணுது. கரண்ட் நிக்காம இருந்திருக்கலாம்.’ மனதில் அவஸ்தையாக புலம்பினாள்.

நைருதியின் பாதம் மெல்ல அசைவதும், முன் வைப்பதும் பின் தயங்குவதுமாக இருக்க… தேவித் கைகள் விரித்து இமைகள் மூடி திறந்தான். வாவெனும் பாவனையில்.

அடுத்த கணம் பறவையின் அலகு தீண்டி சூல் வெடிக்கும் மலராய் அவனது மார்பில் புகுந்திருந்தாள் நைருதி.

“என்னவாம்… நதிக்கு தயக்கம்!” அவனது வார்த்தைகள் அவளின் காது மடல் உரசிட, அவனது அதரங்கள் தீண்டிடா உரசல் அவளை பித்தம் கொள்ளச் செய்தது.

குண்டு மல்லியின் வாசம் அவனை இன்ப வதைக்குள் ஆட்படுத்த, அவளின் பின் கழுத்தில் தன் நாடி பதித்து ஆழ்ந்து சுவாசித்தவனின் மூச்சு தணலாய் அவளை கொதித்தெழச் செய்தது.

“அச்சோ மாமா…” என்றவள், “இது ஆகறதுக்கில்லை” என்று அவனின் மடியில் முகம் புதைத்தவளாக சுருண்டு கொண்டாள். அவனோ அள்ளி அணைத்து காற்றுக்கும் இடமின்றி இடைவெளியை தூர விரட்டியிருந்தான்.

காதல் மனதால் பகிரப்பட்டிருக்க… அடுத்த நிலைக்கு இட்டுச்செல்லும் உணர்வுகளின் ஆதிக்கமும் நெஞ்சமெங்கும் நிறைந்திருக்க, முதல் அடி எடுத்து வைக்கும் தத்தல் மட்டுமே அவர்களுக்கு தடையாய்.

அவளின் தடுமாற்றமின்றிய அணைப்பு அவனுக்கு வேண்டுமாக இருந்திட, அவளை இயல்பாக்கும் பொருட்டு பேச்சுக் கொடுத்தான்.

“மதி சிரிப்பு சத்தம் இங்க வரை கேட்டுச்சு. என்ன பேசிட்டு இருந்தீங்க?” என்றான் தேவித்.

“அண்ணி இப்படின்னு தெரியவே தெரியாது” என்று அவனிலிருந்து பிரிந்து மதியின் பேச்சுக்களை குவிந்த இதழ்களோடு சொல்லிக் கொண்டிருக்க, அவனின் பார்வையில் ரசனையும், இதழில் புன்னகையும் விரிந்திருந்தது.

அவளின் பேச்சில், அசைவில், அவளின் கைகள் கோர்த்த வெம்மையில், பாத விரல்கள் தீண்டலில் தன்னுடைய சித்தம் முழுமையும் அவள் வேண்டுமாக நெஞ்சம் மஞ்சத்தில் ஆர்ப்பரித்திட, மேலுதட்டை மீசையோடு கவ்வி விடுத்து, பின்னந்தலையை அழுத்தமாக வருடினான்.

அவனது உணர்வலை வழியும் நிலை கண்டு அவளின் பேச்சு நின்றிட, அவளின் பார்வையில் ரசனை.

தேவித்தின் பற்களில் கடிப்பட்ட மீசை திருகிட உயர்ந்திட்ட கையை வேகமாக கீழிறக்கிக் கொண்டாள். கை அவளின் மடி சேருமுன் தன் உள்ளங்கை தாங்கினான்.

“என்னவாம்… நதி பார்வையில் வித்தியாசம்?” எனக் கேட்டு, பிடித்த கையில் மருதாணி வாசத்தை மூச்சிழுத்தவனாக, மீசை பதிய அழுத்தமாக முத்தம் வைத்தான்.

குறுகுறுப்பு தேகம் பரவ, தானாக கண்கள் மூடிட, “மகிழ்” என்றாள்.

“பதில் சொல்லணும் நதி” என்றவன் இடையோடு கையிட்டு தூக்கியவனாக தன் மடியில் அமர்த்தி நெருக்கம் கூட்டினான்.

“நான் கேட்கணும்.” அவனில் உருகிய குரல் காற்றாய் வெளிவந்தது.

“நதியில் கரையத் தோணுதே!”

“ஹான்…” விரிந்த விழியில் முத்தம் வைத்தவனின் இதழ்கள், மெல்ல ஊர்ந்து நாசி, கன்னம் தீண்டி மென் வதனத்தில் நிலைத்து இளைப்பாறல் கொண்டிட, துவண்டு சரியத் துவங்கியவள், அவன் தோள் பற்றி நிலைக்கொண்டாள்.

அவளின் விரல்கள் அவனில் ஆதிக்கம் செலுத்தத் துவங்க, இதழ் முத்தத்தில் மொத்தம் வேண்டுமென அவளின் கண்களில் தன் சம்மதம் வேண்டினான்.

தன் இணக்கநிலை கண்டும் அவனது அனுகளில் புன்னகைத்தவள், தன் நாணம் துறந்து, தயக்கம் தளர்த்தி அவனை தன்னுடைய கைகளில் அனுசரிக்கத் தொடங்கினாள்.

அவளது அனுசரிப்புகள் யாவும், அவனில் தொலைந்துப்போக, ஆராய்ச்சியாளன் அவனின் ஆராய்ச்சிகள் தீர்க்கமாகவும் அதீத கவனித்தலாலும் அவளால் அங்கீகரிக்கப்பட்டு, அவனிடம் ஒப்புதல் செய்யப்பட்டது.

காதல் முழுமைப்பெற்ற கணம் நேசத்தின் நிறைவு உச்சம் பெற்று, ஒருவருக்குள் ஒருவர் தீர்க்கம் அடைந்தனர்.

விலகல் எல்லாம் விளக்கமே இன்றி விலக்கி வைக்கப்பட நெருக்கத்தில் நெருக்கமாய் இதயங்கள் பட்டுகொள்ளலாய் இறுகி கரையத் தொடங்கியவனின் காதல் தேன் நதியவளிடத்தில் பெரும் சமுத்திரமாய் உருவெடுத்தது.

மகிழ் என்ற அழைப்புக்கு நதியென குழைந்தவனின் அன்புக்கள் யாவும் மகிழும் நதியாய் அவளுள் தஞ்சம் கொண்டது.

நதியின் மகிழ்வெல்லாம் மகிழிடத்தில் மகிழ்வாய் கரை சேர்ந்தது.

தன் மார்பில் களைத்து அடங்கியிருப்பவளின் உச்சியில் நாடி பதித்து கைகளின் அணைப்பில் இறுக்கம் காட்டியவன்,

“லவ் யூ டி” என்றான். காதல் ஆர்ப்பரித்து அதிகரிப்பாய். ஆழ்கடல் கண்டிடா கரையின் முடிவிலியாய்.

“நானும்” என்றவளின் ஒற்றை வார்த்தை மீண்டுமாய் அவளுள் அவனது காதல் ஆலிங்கினத்தை தொடங்கி வைத்திட, நேரத்தின் நேரம் அறியாதவர்களாய் உறக்கம் கொண்டிருந்தனர்.

விடியலில் முன்னதாக எழுந்த தேவித், தன் கை வளைவில் புதைந்திருப்பவளை மேலும் அழுத்தமாக தனக்குள் புதைத்து நெற்றியில் முத்தம் வைத்து எழுந்தான்.

தேவித்தின் இறுகிய அணைப்பில் முகம் சுருக்கி, அரை கண் திறந்து பார்த்தவள்,

“விடிஞ்சிருச்சா?” எனக் கேட்டாள்.

“நேரமிருக்குடா! நீ தூங்கு” என்று அருகமர்ந்து தட்டிக் கொடுத்தான். அவள் தலையை அவன் மடிமீது வைத்து ஆழ்ந்த உறக்கம் சென்றாள்.

அலைபேசியை எட்டி எடுத்தவன்,

தன்னுடைய ஆராய்ச்சி கூடமிருக்கும் அறையை பார்வையிட்டு, மனைவியின் கன்னத்தில் மென் முத்தம் வைத்து, குளியலறைச் சென்றான்.

தேவித் தயாராகி வரும் பொழுது விடியல் புலரத் துவங்கியது.

வெளிச்சம் உள்ளே எட்டிப்பார்த்திடாது, அறையின் திரைச் சீலைகளை எல்லாம் இழுத்து மூடியவன், கட்டிலில் துயில் கொண்டிருந்த மனைவியை பார்த்தபடி, மடிக்கணினியோடு நீள்விருக்கையில் அமர்ந்து கொண்டான்.

ஒன்பது மணியை நெருங்கிய பின்னர் தான், செய்து கொண்டிருந்த வேலையிலிருந்து கண் அகற்றினான்.

இத்தனை காதலாய் வாழ்வின் தொடக்கம் அமையுமென்று எதிர்பார்த்ததில்லை. இரவு மனைவி காட்டிய அனுசரிப்பில் மொத்த வாழ்வும் வாழ்ந்து பார்த்த பேரின்பம் அவனிடம். கீற்றாய் விரிந்த புன்னகை நீண்டு நிலைத்தது அவனிதழில்.

‘லவ் யூ நதி! என்னோட ஹேப்பிநெஸ் நீதான்னு இங்க சொல்லுதே.’ வலது கையால் இதயப் பகுதியை நீவிக் கொண்டான்.

“டோட்டலி மெல்டட்.” வெட்கம் கொள்வது அவனுக்கே ஆச்சரியமாய்.

அந்நேரம் நைருதியின் அலைபேசி ஒலியெழுப்ப, அவளிடம் அசைவு.

மனைவியின் உறக்கம் கலைந்துவிடக் கூடாதென்று, அவள் எழுவதற்கு முன்பு அலைபேசியை எடுக்க விரைந்த தேவித், எடுத்து யாரென்று பார்ப்பதற்குள் நைருதி கண்கள் திறந்திருந்தாள்.

“யாரு மாமா?”

“மதி தான்” என்ற தேவித், அழைப்பை ஏற்க முனைய,

“அய்யோ அண்ணியா? நேரமாச்சா?” என்றவளாக, தேவித்தின் கையிலிருந்து அலைபேசியை வேகமாக இழுத்திருக்க, அழைப்பு ஏற்கப்பட்டதுடன் ஒலிபெருக்கியும் ஆன் ஆகியிருந்தது.

இருந்த பதட்டத்தில் நைருதி கவனிக்காது பேசினாள். அருகில் நின்றிருந்த கணவனையும் கருத்தில் கொண்டிருக்கவில்லை.

“என்ன அண்ணி?”

“நைட்டு சும்மா பேசுனதுக்கே அவ்ளோ வெட்கப்பட்ட பேபிம்மா இவ்ளோ நேரம் தூங்குறதை பார்த்தா… வெட்கமெல்லாம் என்கிட்ட மட்டுந்தான் போலவே” என்று சிரித்தபடி கேலி செய்தாள் வான்மதி.

“அச்சோ அண்ணி அப்படியெல்லாம் இல்லை…”

“என்ன இல்லை… இருக்கலாம். தப்பில்லை” என்ற வான்மதி, “என் முகம் பார்த்து சொல்ல சங்கடப்படுவ. அம்மாவும், அத்தையும் உன்கிட்ட எப்படி கேட்கிறதுன்னு முழிப்பாங்க… அதான் போன்ல கேட்கிறேன்… எல்லா ஓகேவா?” என்றாள். கடைசி வார்த்தையை கிசுகிசுப்பாய்.

“என்னது அண்ணி ஓகே?”

மதி பேசிய பேச்சுக்கு சிவந்து புன்னகைத்த தேவித், மனைவியின் அப்பாவித் தனமான கேள்வியில் பொங்கி வந்த சிரிப்பை சத்தமின்றி சிதறவிட்டான்.

அவனின் உடல் குலுங்கிய அசைவில், கணவன் இன்னும் தன் பக்கத்தில் நின்று கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்து, அசடு வழிய அவனிடமே தஞ்சம் கொண்டாள்.

“அடேய்…” என்று சிரித்த மதி, “இதுக்குமேல ஓபனா நான் கேட்டிடுவேன். ஆனா பாரு… நீதான் என் முகம் பார்க்காம சுத்துவ” என்றாள் மதி.

“அண்ணி…” நைருதி அவஸ்தையாய் குரலை இழுக்க…

“என்ன மதி?” என்று கேட்டிருந்தான் தேவித்.

“அண்ணா” என்று தடுமாறிய மதி, “கோவிலுக்கு போகணும். இன்னும் வரலன்னு அம்மா கூப்பிட சொன்னாங்க” எனக்கூறி பட்டென்று வைத்திட்டாள்.

“நேத்லேர்ந்து அண்ணி இப்படித்தான் பேசுறாங்க” என்ற நைருதி, அவனது சிரிப்பில்…

“உங்ககிட்ட சொல்றேன் பாருங்க” என எழுந்து அடி வைக்க, அவளின் கை பிடித்து இழுத்து நிறுத்திய தேவித், தன் கன்னத்தை அவள் புறம் காட்டினான்.

“இப்போவா?”

“இதுக்கெல்லாம் டைம் பார்ப்பியா நீ?”

“குளிச்சிட்டு வரேன் மாமா.”

“எழுந்ததும் கொடுக்கணும் நதி.”

…….

“நீயா கொடுக்கணும் அப்படின்னா நைட் ஆகணும் போல” என்று அவன் சீண்டிட, சடுதியில் முத்தம் வைத்து, மின்னலென ஓடியிருந்தாள்.

“இனி கேட்காமலே தினம் கொடுக்கணும்.” அவனது குரல் அவளை அடைந்தது.

சில நிமிடங்களில் இருவரும் இணைந்து வர, அவர்களின் முகம் காட்டிய ஒளியில் பெரியவர்களின் நெஞ்சம் நிறைந்தது.

இருவரும் தானாகவே தங்களை பெற்றவர்களிடம் ஆசீர்வாதம் பெற்றனர்.

வீரட் டெல்லி செல்ல ஆயத்தமாகியிருந்தான்.

“நீங்க எல்லாம் கோவில் போங்க. நான் வீரட்டை ஏர்போர்ட்டில் ட்ராப் பண்ணிட்டு நேரா வரேன்” என்றவனாக கவின் வீரட்டுடன் சென்றிட, மற்றவர்கள் குடும்பமாய் சிறு தொலைவில் அமைந்திருக்கும் குலதெய்வ கோவிலுக்குச் சென்று திரும்பினர்.

அடுத்த நாள் மதியம், வழமைபோல் தன்னுடைய அலைபேசியில் ஆராய்ச்சிக் கூடத்தை ஆராய்ந்த தேவித் அடுத்த அரை மணி நேரத்தில் மனைவியுடன் டெல்லி செல்ல புறப்பட்டிருந்தான்.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
28
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்